Saturday, April 14, 2007

பிரதாப முதலியார் சரித்திரம்.

மிழ்ப் புதினங்களின் ஆதி நூலாகிய 'பிரதாப முதலியார் சரித்திரம்' (மாயூரம் வேத நாயகம்பிள்ளை) பற்றிய பரிச்சயம், பள்ளியில் ஒரு மதிப்பெண் அளவோடு நின்று போனது.

இவ்வாண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில், இந்தப் புத்தகத்தைக் கண்டதும், வாங்கி வந்து, படிக்கத் தொடங்கியது தான் தாமதம். நாவல் போக்கு என்னை அள்ளிக் கொண்டது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், 'அற்புதம்'.

அக்காலத்துக் கதைகளைப் போலவே எதிர்பாராத திருப்பங்கள், நடக்கவே இயலாத 'தற்செயல்' நிகழ்வுகள், நாடகத்தனம் என்று இருந்தாலும், மலரைச் சுற்றி இருக்கும் கண்ணுக்குத் தெரியாத மணம் போல, பரவி இருக்கும் நகைச்சுவை, உயர் கருத்துக்கள், நீதி நெறிகள் நம்மை கதையோடு அணைத்துச் செல்கின்றன.

முதலில் நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்றே தெரியவில்லை, இது போன்ற விமர்சனங்களை எழுதுவதற்கு! அக்காலத்து தமிழர்களின் வாழ்வு முறை அவ்வாறு இருந்திருக்கிறது. நாம் வேறு ஒரு மாதிரியான காலகட்டத்தில் வசிக்கிறோம். இதில் எது சரி, எது தவறு, எது உயர்ந்தது என்று யார் கூற முடியும்? எல்லம் அவரவர் மனப்பாங்கைப் பொறுத்ததே..!

கதை நாயகர் படித்தவர், பண்பாளர், நகைச்சுவைக் கருத்துக்களோடு தம் வாழ்வின் பல நிகழ்வுகளைப் பற்றிப் பேசும் இப் புதினம் மேலும் பல அறத்துறைக் கருத்துக்களையும் போகிறபோக்கில் தெளித்து விட்டுச் செல்கின்றது.

அவர்தம் அன்னையும், மனைவியும் நன்னெறி கூறி அவர் வாழ்வை நடத்தும் பாங்கு, பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி ஆசிரியர் கொண்டிருந்த கனவை உணர்த்துகின்றது. கதையின் மொழி நடை நமக்குச் சென்ற நூற்றாண்டின் மொழி உபயோகிப்பைக் காட்டுகின்றது.

புதினத்தில் இருந்து ஒரு நகைச்சுவை வரி.

.....

அந்த உபாத்தியார், எங்களைப் பார்த்து "உயிரெழுத்து எத்தனை? மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்டார். அதற்கு உத்தரவு சொல்லத் தெரியாமல், நான் கனகசபை முகத்தைப் பார்த்தேன்; அவன் ஆகாசத்தைப் பார்த்தான். பிற்பாடு ஏதாவது சொல்லித் தொலைக்க வேண்டுமே என்று நினைத்து "உயிரெழுத்து 50; மெய்யெழுத்து 100" என்றேன்.

உடனே உபாத்தியார் அதிகாரஞ் செய்து " நீ சொல்வது சரியல்ல. ஞானாம்பாளை அழைத்து வா" என்று உத்தரவு கொடுத்தார். நான் ஞானாம்பாளிடத்தில் போய், "உயிரெழுத்து எத்தனை? மெய்யெழுத்து எத்தனை?" என்று கேட்க, அவள், "உயிரெழுத்துப் பன்னிரெண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு" என்று சொன்னாள். " நான் ' உயிரெழுத்து ஐம்பது, மெய்யெழுத்து நூறு' என்று அவ்வளவு அதிகமாய்ச் சொல்லியும் உபாத்தியார் ஒப்புக் கொள்ளவில்லையே? நீ குறைத்துச் சொல்லுகிறதை அவர் ஒப்புவாரா?" என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு போய் உபாத்தியார் முன்பாக விட்டேன்.

.......

தமிழ் படிக்கத் தெரிந்த, இரசிக்கத் தெரிந்த, உருசிக்கத் தெரிந்த தமிழ் மக்கள் அனைவரும் இப்புதினத்தை ஒருமுறையாவது படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். நல்ல நீதிக் கருத்துக்கள், அக்கால இயல்பான நடை, சிரிப்பூட்டும் பகுதிகள் என தமிழின் முதல் புதினமே அன்னைக்கு அணிகலனாய்த் திகழ்கிறது.

புத்தகம் : பிரதாப முதலியார் சரித்திரம்.

புத்தக வகை : சமூகப் புதினம்.

ஆசிரியர் : மாயூரம் வேத நாயகம்பிள்ளை.

கிடைக்குமிடம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( நான் வாங்கிய புத்தகத்தின் பதிப்பாளர். கல்கி அவர்கள் புதினங்கள் போல், இப் புதினம் பெருவாரியான புத்தகக் கடைகளில் ( இரயில் நிலையக் கடைகள், சாலையோரக் கடைகள் )காணக் கிடைப்பதில்லை.)

விலை : ரூ.60/- மட்டுமே.

Friday, April 13, 2007

நகராமை.

"ந்தினி..பிரேம் இன்னும் வரலையா..?" என்று கேட்டார் ராகவன்.

அவுட்லுக்கில் இருந்து பார்வையை அகற்றி அவரைப் பார்த்தேன். "இன்னும் வரலை போலிருக்கு மாஸ்டர்.." என்றாள். ஏனோ அவரை மாஸ்டர் என்று அழைத்தால்தான் அவருக்கு மிகப் பிடிக்கின்றது.

"என்ன மறுபடியும் உங்களுக்குள்ள சண்டை வந்திடுச்சா..?"
புன்னகைத்தவாறே கேட்டார்.

நான் வந்து நிற்பது மாஸ்டருக்குத் தெரியவில்லை போலும்.மெளனப் புன்னகைத்தேன். நேற்று நடந்த நிகழ்வு கண்ணில் நிழலாடியது.

ந்தினி என் கல்லூரி இரண்டு வருட இளையள். கல்லூரியில் அவ்வளவாகப் பார்த்த ஞாபகம் இல்லை. நான் பணிபுரியும் அலுவலகத்திற்கே வந்த பின்புதான், அறிமுகம் கிடைத்ததே. பின் மெல்ல, மெல்ல பழகி இருவரும் ஒரே பணிகையில் அமர்த்தப்பட்ட பின் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. இப்போது வயது வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து போய், இணைந்து ஊர் சுற்றுவது வரை வந்திருக்கிறது.இந்த கிளையில் தமிழகத்திலிருந்து பணிபுரிபவர் சொற்பமே என்பதால் கூட இன்னும் நெருக்கம் அதிகரித்திருக்க வேண்டும்.

இருந்தாலும் எங்களைப் போல் சண்டை போடுபவர்கள் இங்கு கிடையாது.

ருமுறை ' நடராஜ்'ல் சில்லென்று.. பார்க்கும் போது நடந்த விளையாட்டு , மறக்க முடியாத ஒன்று.

வழமை போல் இடைவேளையில் ஸ்னாக்ஸ் வங்கிவரச் சென்றேன். எனக்குப் பாப்கார்னும், அவளுக்கு ஐஸ்க்ரீமும் வாங்கிவிட்டு, பாப்கார்னைப் பொடி செய்து, ஐஸ்க்ரீம் மேல் தூவி விட்டேன். அவள் சாப்பிடும் போது முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே..!

"டேய் குரங்கு..! இது உன்னோட வேலை தான..?"

"எதுடி பிசாசு..?"

"பாப்கார்ன்ல ஐஸ்க்ரீம் போட்டது..?"

"இல்லயே! நான் ஐஸ்க்ரீம்ல தான கார்ன் போட்டேன்.."

"இதை மனுஷன் சாப்பிடுவானா..?"

"அதுதான் உனக்குக் குடுத்தேன்.."

"ஓல்டு ஜோக்!"

ஃபாரமில் காபிஷாப்பில் காஃபி குடித்து விட்டு, இருவரும் கிளம்புகையில் சண்டை வந்து விட்டது.யார் ஸ்ப்ளெண்டர் ஓட்டிச் செல்வது என்று.

"சொன்னாக் கேக்கணும் நந்தினி! இது ஸ்கூட்டி கெடயாது..! ஸ்ப்ளெண்டர்..!"

"அது தான் பார்த்தாலே தெரியுதே! நீ வேற தனியாச் சொல்லணுமா..?"

"இன்னிக்கு சன்டே..! ட்ராஃபிக் கொஞ்சம் அதிகமாவே இருக்கும்! உன்னால பேலன்ஸ் பண்ணமுடியாது! வேணா அடுத்த சண்டே கப்பன் பார்க் போலாம். அங்க நீ இத ட்ரைவ் பண்ணக் கத்துக்கோ.."

"தோடா! இவரு சொல்ல வந்திட்டாரு..! போன மாஷம் ஆட்டோக்கு கீழப் படுத்துக் கிடந்தியே, நீயா பேலன்ஸ் பத்திப் பேசற..!"

"சரி..! நீ மட்டும் என்ன! ஸ்கூட்டி வாங்கின புதுசுல, ஹெச்.ஏ.எல் பக்கத்துல சறுக்கிட்டு விழல..?"

" அப்ப நான் சின்னப் பொண்ணு..! இப்பக் குடுத்துப் பாரு! எப்படிப் பறக்கறேனு..!"

"அம்மா..! தாயே..! அந்த விளையாட்டெல்லாம் உன்னோட ஸ்கூட்டிலயே வெச்சுக்கோ..! இப்ப என்னை ஆளை விடு..!"

இன்னும் ரொம்ப நேரம் பேசி, அவளை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தேன். அந்தக் கோபத்தில் தான் இன்று காலை 'ஹேப்பி வீக் ஸ்டார்ட்' மெஸேஜ் வரவில்லை போலும். பார்த்துக் கொள்ளலாம்.

கூக்க்க்கூக்கு....கூக்க்க்கூக்கு.. கூவியது அவளது செல்.

"ஹலோ..!"

"..."

"ஏய்..! என்ன சுரேஷ் சொல்ற...!உண்மையாவா..! ஓ மை காட்..!"

ஏன் நந்தினி அழ ஆரம்பிக்கிறாள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் வீட்டீல் ஏதாவது..? ஒரு பாடி ரொம்ப நாளாக இழுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். அவர்தான் டிக்கெட் வாங்கி விட்டாரோ..?



" நந்தினி என்ன ஆச்சு..?" மாஸ்டர் பதறியபடி வந்து கேட்டார். நானும் ஆவலாக இருந்தேன், அவள் சொல்வதைக் கேட்பதற்கு.


"மாஸ்டர்..! பிரேம்... பிரேம்..."


"என்னம்மா ஆச்சு பிரேமுக்கு..?"


நான் நல்லாத்தான இருக்கேன். என்ன சொல்ல வருகிறாள் இவள்?


"காலையில ஆஃபிஸ்க்கு வரும் போது, அவுட்டர் ரிங் ரோட்டில லாரியில மோதி, ஸ்பாட் டெத்தாம் மாஸ்டர்.."


"என்ன..?" அதிர்ந்தார்.


அதிர்ந்தேன்.




Wednesday, April 11, 2007

MJ - பாப் பாயும் புலி...!




முதலில் MJ எங்கு அறிமுகமானார் என்று நினைத்துப் பார்க்கிறேன்.



தமிழ்ப் படங்களில் இருந்து கவனங்கள் விரியத் தொடங்கி, இந்திப் படங்கள் மேல் பார்வை பதியத் தொடங்கிய ஆதிப்பதின்ம வயது.

அந்தக் காலங்கள் தான் கவனங்கள் மெல்ல,மெல்ல மாறுகின்ற நாட்கள். காபியெல்லாம் குடிக்க மாட்டேன், அது விஷம் போன்றது என்று புத்தகங்களில் கூறியிருக்கிறார்கள் என்று அம்மாவிடம் சொல்லி, பால் மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிக்கின்ற வயது. (பால் குடித்தால் தான் உதடுகள் சிவப்பாக மாறும் என்று படித்த ஓர் உண்மையான காரணம் இருந்தது.)


முதன்முதலில் மேலுதட்டில் படிகின்ற பூனைமுடிகளை 'ஷேவ்' பண்ணுகிறேன் என்று கிளம்பி, வெளியே அப்பா முன் செய்ய வெட்கப்பட்டு, அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டு உள்ளே ஓடும் போது அப்பா சிரிக்கின்ற சத்தம் கேட்டு, கன்னமெல்லாம் கிழித்துக் கொண்ட கோலத்தில் வெளியே வந்து வெட்கச்சிரிப்பு சிரிக்கின்ற நாட்கள்.

தம்பி அடித்து விட்டான் என்று, பள்ளியில் சாதாரணமாக உபயோகப்படுத்தும் கெட்ட வார்த்தையொன்றை கூறி அவனைத் திட்டிவிட, கிடைத்த வெளுப்புகள் இன்றும் மறக்க முடியாது.


ஊரோர ஒதுக்குப்புற தியேட்டர்களின் பட போஸ்டர்களைப் பார்த்துக் கொண்டு செல்கையில், 'தியேட்டர் பெயரை ஒட்டுவதற்கு போஸ்டரில் வேறு இடமே கிடைக்கவில்லையா இவனுக்கு' என்று நினைத்துக் கொண்டே சென்ற வயது. (ஐயையோ.. இதையெல்லாம் சொல்கிறேனே... வீட்டில் போட்டுக் கொடுத்து விடுவார்களோ..)



சரி..கதைக்கு வருவோம்.


கேசட் கடைக்குப் போய் ஏதாவது புதிய கேசட் வந்திருக்கிறதா என்று நோட்டம் விட்டதில், கண்ணில் பட்டார், மைக் ஜாக். மிக , மிக வித்தியாசமான அட்டைப் படத்தில் அட்டகாசமாக இருந்தது கேசட். உடனே அள்ளிக் கொண்டு போய்க் கேட்டதில் தொடங்கியது, மற்றுமொரு கிறுக்கு!









Dangerous, Billie Jean, Beat It, Thriller, Smooth Criminal, Black or White, Remember the Time, என்று தறிகெட்டுப் பறந்தன அக்காலங்கள். ஒவ்வொன்றும் என்ன வகையான ஆட்டங்கள்...! இன்று கேட்கும் போதும் எழுந்து ஆட்டம் போடச் செய்கின்றன.



'வெற்றி நிச்சயம்' பாடலுக்குப் பிறகு ரத்த நாளங்களில் வெறியேற்றி, முன்னேற்றத்திற்குப் போராட வலிமையும், உற்சாகமும் கொடுத்த பாடல் என்றால், நான் ஒத்துக் கொள்ள வேண்டியது, BEAT IT. நீங்களும் அதன் வரிகளைப் பாருங்கள்.




கொஞ்சம் பக்குவம் வந்த பிறகு MJ-யின் சமூக அக்கறை பற்றிய பாடல்களைக் கேட்டுப் பார்த்து நெகிழ்ந்து போனேன்.


நீங்களும் பாருங்களேன்.


Earth.


You are not Alone.


MJ பற்றி என்னென்னவோ சர்ச்சைகள் வந்த போதிலும், அவருக்காக வருத்தப்பட்ட பல்லாயிரம் இதயங்களில் நானும் ஒருவன். ஆபாசமில்லாத, அற்புதமான பாடல்கள் மூலம் எங்கள் வாழ்வின் ஒரு பகுதியை நீர் நிரப்பினீர். அதற்காக எமது நன்றிகள்.


We Salute You MJ...!

Monday, April 09, 2007

அலை ஓசை - கல்கி.



பேராசிரியர் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்','சிவகாமியின் சபதம்','பார்த்திபன் கனவு' ஆகிய வரலாற்றுப் புதினங்களைப் பற்றி பல பேருக்கும் தெரிந்திருக்கும். ஆசிரியரின் சமூக நாவல்களில் மிகப் பிரபலமானதும், அவருக்கு சாகித்திய அகாதமி விருது வாங்கிக் கொடுத்ததுமான 'அலை ஓசை' நாவல், எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.




தலைப்பைக் கண்டதும், பலருக்கு புகையோடிய பிம்பம் போலவும், முற்பிறவி நினைவுகள் போலவும் சில காட்சிகள் கண் முன் தோன்றியிருக்க வேண்டுமே...? ஆம்..! நீங்கள் நினைப்பது சரிதான். முன்பொரு காலத்தில், முன்னிரவு அல்லது பின்மாலை நேரங்கள் என்று சொல்லக்கூடிய நேரங்களில் மட்டும் தமிழ் பேசிக் கொண்டிருந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய தொடர் தான். கல்கி அவர்களின் புதினத்தை நாடக வடிவில் ஒளிபரப்பினார்கள்.




முதலில் புத்தகத்தை எடுத்த உடனேயே சந்தேகம் வந்தது. ' நமக்குத் தெரிந்த வரை, தலைப்பு 'அலையோசை' என்று தானே இருக்க வேண்டும். இங்கே பிரிந்து உள்ளதே' என்று தோன்றியது. ஆசிரியர் ஏதேனும் காரணத்தோடு தான் எழுதியிருக்க வேண்டும் என்று தேற்றிக் கொண்டு, புதினத்தைத் தொடர்ந்து படிக்கலானேன். கல்கி அல்லவா! தலைப்பை நியாயப் படுத்தி விட்டார். நான் சொல்லப் போவதில்லை. நீங்களே படித்து அறியுங்கள்.


கதையைப் பற்றி நான் ஒன்றும் கூறப் போவதில்லை. வழக்கமான கல்கி அவர்களின் பரபரப்பான திருப்பங்கள், தேன் சிந்தும் காதல் வர்ணனைகள், போராட்ட வசனங்கள், இயற்கை வர்ணிப்புகள் நிறைந்ததுடன் அல்லாமல், புதினம் முழுதும் ஒரு பாலாடை போல் பரவியிருக்கிறது தேசிய உணர்வு.




இயக்குனர் மணிரத்னம் அவர்கள், எவ்வாறு சமூகப் பிரச்னைகள் பற்றிய படம் என்றாலும், போராட்டக் களத்தை மட்டும் காண்பிக்காமல், ஒரு குடும்பம் அல்லது ஒரு காதல் வழியாக கதை நகர்த்திச் செல்கிறாரோ, அந்த பாணி, கல்கி அவர்களின் புதினங்களில் இருந்து தான் உருவப்பட்டு இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான எண்ணம்.




சீதா, சொளந்தர ராகவன், தாரிணி, சூர்யா ஆகிய நான்கு பாத்திரங்கள், அவர்களைச் சுற்றியிருக்கும் உறவினர்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களைப் பாதிக்கின்ற நாட்டின் அடிமை நிலை என்று இராஜம்பேட்டை என்ற சிறு கிராமத்தில் இருந்து, சென்னை, பம்பாய், தில்லி, ஆக்ரா, ரஜனிபூர், லாகூர் என்று கதை பரந்து விரிகையில் ரோலர் கோஸ்டரில் ஏறிப் பறக்கின்ற அனுபவத்திற்கு நாம் ஆளாவது திண்ணம்.




'சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாதிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல், இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்துவிட்டது.'என்று தொடங்கிப் படிக்கத் துவங்குகையில், நாமும் அந்தச் சாலையிலேயே நம் பயணத்தைத் துவக்குகிறோம்.




இனி, தாஜ் மகாலைப் பற்றி ஆசிரியரின் ஒரு வர்ணனையைப் பார்ப்போம்.




பாகம் : புயல் அத்தியாயம் : 11


தாஜ்மகால்





புதுமணம் புரிந்த மங்கை தன்னுடைய காதலன் அருகில் நெருங்கி வரும்போது ஆசையும் நாணமும் கலந்த தோற்றத்துடன் நிற்பதுபோலத் தங்க நிலாவில் தாஜ்மகால் என்னும் மோகினி நின்றாள். தும்பைப்பூவையொத்த வெண்மையும் மென்மையும் பொருந்தியடாக்கா மஸ்லினைக் கொண்டு மேனியை மட்டுமின்றி முகத்தையும் முக்கால் பங்கு மறைத்துக் கொண்டு அந்தப் புவன மோகினி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவளை நாலு புறமும் காவல்கள் புரியும் தோழிப் பெண்களைப்போல் நெடிதுயர்ந்த ஸ்தம்பக் கோபுரங்கள் நாலு மூலையிலும் நிமிர்ந்து நின்றன.

உலகந் தோன்றிய நாள் தொட்டுக் காதலர்களுக்கு வேதனை தருவதையே தொழிலாகக் கொண்ட பூரண சந்திரன் தனது கர்ம பலனை இந்தத் தாஜ்மகால் மோகினியிடம் அனுபவித்தான். தன்னுடைய ஆயிரமாயிரம் தங்கக் கரங்களினால் அந்த இணையில்லா அழகியைத் தழுவ ஆசைகொண்டு எவ்வளவோ முயன்றான். எனினும் தூய்மையே உருவெடுத்த அந்த நங்கையின் மேனியை அவனுடைய கரங்கள் தொட முடியாமல் அப்பால் நழுவி விழுந்தன. ஒருவேளை நாணங் காரணமாகத் தன்னைப் புறக்கணிக்கிறாளோ என்று எண்ணி இருள் நிழலைத் தன் உதவிக்கு அழைத்தான். ஆனால் நிழல் அந்தக் கற்பரசியின் மேனிக்கு ஒரு கவசமாகிக் காமுகனுடைய கரங்களை அப்பால் நிற்கச் செய்தது.

சந்திரனுக்குக் காதல் வேதனை பொறுக்க முடியாமற் போயிற்று. "தாஜ்மகால் மோகினியினால் நிராகரிக்கப்பட்ட பிறகு இந்த ஜன்மம் என்னத்திற்கு?" என்று நிராசை அடைந்தான். அவள் கண்ணுக்கெதிரே தன் உயிரை விட்டுவிட எண்ணி அங்கிருந்த அழகிய நீர் ஓடையில் தலைக் குப்புற விழுந்தான். அப்போதுதான் அந்த வெண்மலர் மேனியினாளுக்கு மனதில் இரக்கம் உண்டாயிற்று. சந்திரனைக் கரையேற்றத் தானும் ஓடையில் குதித்தாள்! பளிங்குக்கல் ஓடையில் ஸ்படிகம் போலத் தெளிந்திருந்த நீரில் தங்கச் சந்திரனும் தாஜ்மகால் மோகினியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வதாகக் காதலர் உலகத்தில் மெய்மறந்து சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதாவின் கற்பனைக் கண்களுக்குத் தோன்றியது. ஆஹா! எத்தனை காலமாக இந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவள் ஆவல் கொண்டிருந்தாள்! எத்தனை முறை மானசீக யாத்திரை செய்து இங்கே இவள் வந்திருக்கிறாள்! - அந்தக் கனவெல்லாம் இன்றைய தினம் உண்மையாகிவிட்டது. சீதாவின் வாழ்க்கையில் இது ஒரு மகத்தான நன்னாள் என்பதில் சந்தேகம் என்ன?

***

1930களில் வெளிவந்த ஒரு அமைதியான கறுப்பு-வெள்ளைப் படம் பார்ப்பது போல் இருக்கும், இந்தப் புதினம் படிக்கும் போதெல்லாம்..!

புத்தகம் : அலை ஓசை.

புத்தக வகை : சமூகப் புதினம்.

ஆசிரியர் : பேராசிரியர் கல்கி.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

இணையம்: தமிழ் தேசம்