Thursday, March 19, 2009

இரு நூல்கள்.

ப்போது சமீபமாக இரண்டு ஈ-நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்... இல்லை, அப்படி சொல்வதை விட செம்மையாக ரசித்து ருசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம். நாற்கரச் சாலைகளில் செல்வதைப் போல் சும்மா ஜிவ்வென்று பறக்கின்றன. துவங்கினால் முடிக்கும் வரை மூச்சு விடவும், மூச்சா விடவும் மறந்து கதைக்குள்ளேயே கலந்து விடுகிறோம்...அதாவது நாம் கலந்து விடுகிறோம்.

அ. Brother and Sister.



1920-ல் வெளிவந்த நாவல் என்று சொன்னால் சத்தியமாக நம்பமாட்டீர்கள். எனென்றால் 1921-ல் தான் வெளிவந்தது.

ஜோஸஃபின் லாரன்ஸ் என்ற அம்மணி எழுதி இருக்கிறார். ஏழு குழந்தைகள் இருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கடைசி இரு குழந்தைகளான ரோட்ஸ் மற்றும் பெட்டியைச் சுற்றி நகரும் புனைவு இது. ரோட்ஸின் ஆறாவது பிறந்த நாளுக்கான கொண்டாட்ட ஏற்பாடுகளில் துவங்கி அவர்கள் இருவரும் பள்ளிக்குச் செல்லத் துவங்கும் வரையான கதை. ஓர் பெண்ணால் மட்டுமே எழுத முடிகின்ற குழந்தைகளைப் பற்றிய சரளமான எழுத்து இது. ஹாலிவுட் படங்களைப் போல் அவர்கள் பள்ளிக்குச் சென்றதைப் பற்றி மற்றொரு நாவல் எழுதி இருக்கிறார்.

இந்தப் புத்தகம் எழுபத்தாறு பக்கங்கள் கொண்டது என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனெனில் இது 76 பக்கங்கள் மட்டுமே கொண்டது!

இங்கே பெறலாம்...!!!


ஆ. Yellow on the Outside, Shame on the Inside



அன்சான் சி என்பவர் எழுதியிருந்தாலும் 'ச்சீ...' என்று சொல்லும் வகையில் இன்றி, 'ச்சோ.... ச்வீட்', என்று சொல்லும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் கி.பி.2008-ல் தான் வெளியிடப்பட்டது. தன்னுடைய தளத்திலேயே இலவசமாக இறக்கிக் கொள்ளச் சொல்லும் இவர் ஆர்வமாக நமது கமெண்ட்டுகளை அனுப்பக் கேட்டு, லைலா போல் 'இப்டி..இப்டி..' சிரிக்கிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் ஆசியக் குடும்பங்களின் போலி அலங்காரங்களை, ஆசியத்தன்மையை அறுத்தெறிந்து விட்டு, அமெரிக்கத்தன்மையை அணிந்து கொள்வதில் அரங்கேற்றும் அபத்தங்களை அழகாக அவிழ்க்கிறார்.

இன்னும் படித்து முடிக்கவில்லை. ஆனால் படித்துக் கொண்டிருக்கும் போதே, புன்னகைத்துப் புன்னகைத்து முகம் மேல் முக்கால் இஞ்சுக்கு சிரிப்பு செருகிக் கொள்கிறது. ஆசியர்கள் என்று பொதுவாகச் சொல்லி இருந்தாலும், 'மஞ்சள் மேனிப் பாவைகள்... தங்கம் மின்னும் அங்கங்கள்...' தேசத்தவரான தென் கிழக்காசிய வியட்நாம், லாவோ, ஜப்பான், தைவான், கொரியா நாட்டினரை வாரிக் கவிழ்த்து தூக்கி வீசுகிறார்.

படித்தவரையிலுமே 'சூப்பர்..!' என்பதால், முடிக்கும் முன்னமே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

இங்கே கிடைக்கும்!

ஆசிரியரின் தளம்.

ஃப்ளாப்பி என்றொரு கனவு!



+2 முடிந்து நுழைவுத்தேர்வும் எழுதி விட்டு, இதோ ரிசல்ட் இப்ப வரும், நாளைக்கு வந்திடும் என்று சொல்லிச் சொல்லியே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று மாதங்கள் ஓடி, ஆற்றுக் குளியல், கிரிக்கெட், ஊர் சுற்றல் என்றெல்லாம் சேர்ந்து சுற்றிய ஜமா மெல்ல மெல்ல கழண்டு அடுத்த வகுப்புகளுக்கு நகர்ந்து, மற்ற பிரிவினரும் ஆர்ட்ஸ் கல்லூரிகளில் செட்டிலாகி விட, என்ன செய்வதென்றே தெரியாமல், பொழுது போவதற்கு ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்று 'பாலாஜி கம்ப்யூட்டர் சென்டரில்' சேர்ந்த போது, பார்த்த கம்ப்யூட்டரில் முதலில் விளையாடிய கேம் 'டேவ்'.

டாஸ் ப்ராம்ப்ட்டில் 'எடிட்' சென்று, எப்படி கட், காப்பி, பேஸ்ட் செய்வது என்ற பால பாடத்தைச் சொல்லிக் கொடுத்து விட்டு ஹையர் க்ளாஸ்களுக்கு விசுவல் பேசிக் கற்பிக்க நகர்ந்து விட்டார் சென்டரின் உரிமையாளரும், ஆபரேட் செய்யத் தெரிந்த ஒரே ஒருவருமான பாலாஜி. பார்க்க 'ரோஜா' அ.சு. மாதிரியே இருப்பார். கம்ப்யூட்டர் ஆசாமிகள் எல்லாம் அப்படித் தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். சிறுத்தை ஒன்று பாய்வதற்குத் தயாராக ஒரு கல் மேல் நிற்கும் போஸிலான டெஸ்க்டாப் பிக்சர் இருந்தது.

வாங்கிய நோட்டில் முதலில் எழுதிப் பார்க்கும் பெயர் போல, ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி பெயரை முதலில் டைப் செய்தேன். டெலிட்டுக்கும், பேக் ஸ்பேசுக்கும் வித்தியாசம் தெரியாமல், மாறிய எழுத்தைத் திருத்த முயல்கையில், நியூமராலஜிஸ்ட்கள் கையில் சிக்கியது போல் பெயர் குதறப்பட்டது.

எப்படியோ அல்ட் கீகளைக் கற்றுக் கொஞ்சம் கொஞ்சம் தேறுவதற்குள், பக்கத்து டெர்மினலில் ஒருவன் 'டேவ்' விளையாடிக் கொண்டிருந்தான். That was enough. வெளியேற வழி தெரியாமல், ஆல்ட்களை அழுத்தி, அவனது நோட்ஸை எடுத்துப் பார்த்து, எக்ஸிட்க்கு கஷ்டப்பட்டு கண்ட்ரோலைக் கொண்டு வந்து, எண்டர் அடித்து, கெஞ்சிக் கேட்டு, மாஸ்டருக்குத் தெரியாமல் இருக்க சத்தியம் செய்து, நானும் டேவ்க்குள் நுழைந்தேன்.

'ஜிவ்...ஜிவ்..' என்ற சத்தங்களோடு, நெருப்புகளையும், பூச்சிகளையும் கொன்று, ராக்கெட்டை எடுத்துக் கொண்டு சக்தி தீர்வதற்குள் அடுத்த லெவல் கதவுக்குள் நுழைய முற்படுகையில், மாஸ்டர் வரும் அரவம் கேட்க, நல்லவன் நண்பன், ரீசெட் பட்டனை அழுத்தி விட்டு அப்பாவி போல் அமர்ந்து விட்டான். அப்போது தான் டி.வி. பெட்டியைத் தவிர, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பீரோவையும் கவனித்தேன்.

மாஸ்டர் எப்போதும் சில ப்ளாப்பிகளோடு வருவார். அதில் எம்ப்ட்டி ஒன்றைக் கொடுத்து, எதையோ காப்பி செய்யச் சொல்ல, எனக்கு அதனுடைய காது பிடித்திருந்தது. அதைப் பிடித்து இழுத்து இழுத்து விளையாடலாம். சமர்த்தாக அதனுடைய இடத்தில் சென்று அமர்ந்து கொள்ளும். பூட்டிய பூட்டு, பிளந்த பூட்டு என்ற இரு சிம்பல்களில் ப்ளாப்பியின் வெகு பத்திரமான துளை இருந்தது. என்ன ஒரு சேஃப்ட்டி..!

மாஸ்டர் கொடுத்த நோட்ஸ்களை எல்லாம் கசடறக் கற்று, ஒரு மாத முடிவில் டேவ் நிலைகளோடு, டாஸ் நிலைகளையும் கற்று, வைத்த எக்ஸாமில் 80% மதிப்பெண்கள் எடுத்தேன். கொஞ்சம் கெட்டியான அட்டையில், 'This is to certify Mr./Ms./Mrs R.Vasantha Kumar passed The Basic Compluter Application Course conducted in Sri Balaji Computer Center, Bhavani. என்று இருந்தது. அதில் பாலாஜி என்று கிறுக்கலாக கையெழுத்து போட்டிருந்தார். வாங்கி விட்டுச் செல்லும் போது, 'நல்ல மார்க் வாங்கியிருக்க. அடுத்த லெவலுக்கும் வா. இன்னும் நிறைய கத்துக்கலாம். ஆயிரம் ரூபா தான் பீஸ்' என்று அனுப்பி வைத்தார். 'அடுத்த லெவல் வீட்ல கேட்டிருக்கேன் சார். சொல்றேன்னு சொல்லி இருக்காங்க' என்று சொல்லிச் சொல்லியே, மேரியோ, ரோட்ரேஷ் எல்லாம் விளையாடிப் பார்த்து விட்டு, ரிசல்ட் வந்தவுடன், சென்னைக்கு வந்து விட்டேன்.

கல்லூரிக் கம்ப்யூட்டர் கதைகளைத் தனியாக எழுத உத்தேசம் என்பதால் அவை பிறகு!

முதல் இரண்டு ஆண்டுகளில் ப்ளாப்பி என்ற அந்த ஏறத்தாழச் சதுர வஸ்து தான் பிரபல்யம். டாக்குமெண்ட்கள் ப்ரிண்ட் எடுக்க, படங்கள் காப்பி செய்ய, ரகசியமாக வைத்திருக்க ப்ரொடெக்ஷன் பூட்டு மூடித் திறந்து, கீறல் விழாமலிருக்க காதை இழுக்காமல்... எத்தனை பத்திரமாக வைத்திருந்தாலும் வேண்டிக் கொண்டு வந்தது போல், நான்கு முறைக்குப் பின் பல்லைக் காட்டி, 'ஃபார்மட் செய்யவா..?' என்று விண்டோஸ் கேட்கும்.

கொஞ்ச நாட்களில் வைரஸ் பரவுதாம் என்று காலரா பரவுவது போல் பீதி பரப்பப்பட, லேப் கம்ப்யூட்டர்களில் ப்ளாப்பி தடை செய்யப்பட, ப்ரவ்ஸிங் சென்டர்களில் இருந்து படங்கள் கடத்தி வரப்பட்டு, ஹாஸ்டலில் எல்லோரும் பார்த்து இன்புறும் வகையில் ஒரே ஒருவன் வைத்திருக்கும் கம்ப்யூட்டரில் ஏற்றப்படும். சில ரூம்களில் புத்தகங்கள் திறந்ததை விட, சி.பி.யூ. பேனட்கள் திறக்கப்பட்டது அதிகம்; ஓ.எஸ். ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டது மிக அதிகம்.

சீனியர்களின் அறைகளில் கம்ப்யூட்டர்கள் இருக்கும். அறைக்குள் இருக்கும் குப்பைகளை விட, சி.பி.யூக்குள் அத்தனை குப்பைகள் இருக்கும். அவற்றை விடவும், ஹார்ட் டிஸ்க்குக்குள் அத்தனை குப்பை 'மேட்டர்'கள் இருக்கும்.ரூம் ஃபேனை விட, கம்ப்யூட்டர் ஃபேன் நன்றாகவே ஓடி, நல்ல காற்று வரும்.

இரண்டு வருடங்களாக அந்த 1.44 MB க்குள் உலகமே இருந்தது.

சடசடவென கொஞ்ச நாட்களில் டெக்னாலஜி மாறி, சுகமாய்த் தூங்கும் பாற்கடல் நாராயணன் கை சக்கரத்தாழ்வார் போல், ஆளாளுக்கு கையில் சிடி.க்கள் சுற்றிக் கொண்டு வர, ப்ளாப்பி மோனோபாலி ராஜாங்கம் ஓய ஆரம்பித்தது. பிக்சர்களில் இருந்து மூவி(ங்) படங்கள் என அறிவும் அடுத்த நிலைக்கு முன்னேறியது. சில சிடி.க்களில் கீறல் விழுந்து விழுந்து கேங் ரேப்பப்பட்ட பெண் போல் காட்சி தரும். சாகாவர வீடியோக்கள், படங்கள், ரெண்டு நிமிடம் மட்டுமே ஓடும் ஹாலிவுட் காட்சிகள் பொறுப்பாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கைமாறிக் கொண்டே இருக்கும்.

பின் சில நாட்களில் சி.டிக்களை வைத்துக் கொண்டு எத்தனை முறை தான் ஒரு ஹாஸ்டல் ப்ளாக்கில் இருந்து மற்றொன்றுக்கு நடந்து கொண்டே இருப்பது என்று ஹார்ட் டிஸ்க் டு ஹார்ட் டிஸ்க் என்று மொத்த சொத்தே பரிமாறப்பட்டது.

மழையில் நனைந்த கோழிக் குஞ்சுகள் போல் ப்ளாப்பிகள் நடுங்கிக் கொண்டே போய், கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கி இன்று பயன்பாடுகளில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போயிருக்கின்றன.

இப்போது யூ.எஸ்.பி, ப்ளூடூத், வை.ஃபை என்று பல இணைப்பு முறைகள் வந்து விட்டாலும், இன்றைக்கும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களில், 'சேமி', 'இப்படி சேமி' என்ற கட்டளை ஐகான்களாக பதிக்கப்பட்டு, 'மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவாக' (நன்றி : மதன்) மாறி ப்ளாப்பிகள் அமரத்துவம் பெற்று உறைந்து விட்டிருக்கின்றன.

எனக்கென்னவோ அதன் பெயரிலேயே பிரச்னை இருக்குமோ என்று தோன்றுகிறது. பின்னே, 'ப்ளாப்'பி என்று இருக்கிறதே! அதான் ஊற்றிக் கொண்டு விட்டது என்று நினைத்துக் கொள்வேன். நியூமராலஜிஸ்ட்களிடம் பெயர் சூட்டும் பொறுப்பைக் கொடுத்திருக்க வேண்டும்.

PS: இந்தப் பதிவுக்காக விக்கியில் ப்ளாப்பி பற்றி படித்துப் பார்த்தால், கடைசியாக அதிலும் Metaphor மேட்டர் எழுதப்பட்டிருக்கின்றது. ஒண்ணை சொந்தமா யோசிக்க விட மாட்டாங்க போலிருக்கு. அதுக்குள்ள எழுதிடறாங்க..!!

Tuesday, March 17, 2009

ஆகாயக் கொன்றை. 2.

ஆகாயக் கொன்றை. 1.


வெள்ளிக் காமாட்சி விளக்கின் திரியைக் கொஞ்சம் இழுத்து விட்டாள் காயத்ரி. 'துறுதுறு'வென்று துள்ளி அசைந்தாடிக் கொண்டிருந்த சுடர், குறைந்தது. படங்கள் அனைத்திலும் மாலையில் பூத்திருந்த புதுமலர்கள் மாலைகளாகி இருந்தன. மல்லிகை மாலைகளில் செம்பருத்திப்பூ செருகியிருந்தாள். ஊதுவர்த்தி ஸ்டாண்டில் இரண்டும், சமையலறை நிலையில் ஒன்றையும், வாசலின் நிலையில் ஒன்றையும் செருகி முடித்து, முக்கோண மாடங்களைப் பார்த்தாள். மண் விளக்குகள் சிமிட்டிக் கொண்டிருந்த ப்ரதேசம் சுற்றிலும் மஞ்சள் ஒளி மினுக்கியது.

"சார் இருக்காராம்மா..?"

நிமிர்ந்து பார்த்தாள். ஒரு வயதானவரும், ஓர் அம்மாவும் நின்றிருந்தார்கள். அவர் அவரது மனைவியாக இருக்க வேண்டும். கைகளில் பச்சை நிற பைண்டிங் போட்ட நோட். அனேகமாக ஜாதகங்கள்.

"வாங்க. உள்ள வாங்க. இங்கே உட்காருங்க. ட்யூஷன் விடற நேரம் தான். இப்ப வந்திடுவார்..."

வாசலின் இருபுறமும் தேங்கியிருந்த சைக்கிள்களைத் தாண்டி உள் வந்தனர். இருபுறமும் அழுத்த ரோஸ் பூக்கும் தொட்டிச் செடிகள் ஈரமாய் இருந்தன.

மூன்று நாற்காலிகளும், ஒரு பெஞ்சும் போடப்பட்டிருந்தன. அவர்கள் அமர்ந்து ஆசுவாசித்தனர். மாடிப்படிக்கட்டுகளில் பல செருப்புகள் கலந்திருந்தன. 'சைன் டீட்டா ஸ்கொயர் ப்ளஸ்' கேட்ட போது,

"இந்தாங்க... ஜலம் எடுத்துக்கோங்க..! இப்ப வந்திடுவார்..!" செம்பு நீரைக் கொடுத்தாள். இருவரும் கொஞ்சமாய் நனைத்துக் கொண்டு, அவளிடம் திருப்பித் தரும் போது அந்த அம்மா கேட்டார்.

"நீ என்னம்மா பண்றே..? படிக்கிறயா..?"

"ஆமாம்மா..! பி.எஸ்.ஸி. ஸெகண்ட் இயர். மீனாட்சில தான் பண்றேன். நீங்க உங்க பொண்ணு கல்யாணத்துக்கு ஜாதகம் வந்திருக்கீங்களா..?"

"அட.. ஆமாம்..! எப்படிம்மா கண்டுபிடிச்ச..?"

"பொண்ணு பெத்தவங்களுக்கும், பையன் பெத்தவங்களுக்கும் கவலைகளோட கலவைல வித்தியாசம் முகத்திலேயே தெரியுமே! இப்ப எல்லாம் எங்கப்பா முகத்திலயும் இதே ரேகைகளைப் பார்க்கிறேனே..! கவலைப்படாதீங்கம்மா..! எங்கப்பாங்கறதுக்காக சொல்லல. ராசியான கை. அவர் பார்த்துக் கொடுத்து சேர்ந்தவங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்காங்க..! உங்க பொண்ணுக்கும் மங்களகரமா வாழ்க்கை அமையும்...!" அவர்கள் முகத்தில் ஒரு சாந்த மகிழ்ச்சி பரவியது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மாடிப்படிக்கட்டுகள் வழியாக, 'படபட'வென பட்டாம்பூச்சிகளாக மாணவிகள் கலகலத்து இறங்கிச் சென்றனர். சிலர் உள்ளே எட்டிப் பார்த்து, 'அக்கா.. வரேங்க்கா..' சொலிப் பறந்தனர்.

கொஞ்ச நேரத்தில் மாடி விளக்குகள் அணைக்கப்பட்டன. ஈஸ்வர ஐயர் இறங்கி வந்தார். மாடிக்கதவைப் பூட்டி, வாசற்கதவைத் தாளிட்டு உள்ளே வந்தார். இருவரும் எழுந்து நின்றனர்.

"வாங்க.. வணக்கம்..! உட்காருங்க. ஏம்மா... குடிக்க ஜலம் குடுத்தியா..?"

"அதெல்லாம் ஆச்சுங்க..! பொண்ணு ஜாதகமும், ஒத்து வர்ற மாதிரி இருக்கற சில வரன்கள் ஜாதகங்களும் கொண்டு வந்திருக்கோம். நீங்க தான் பார்த்துச் சொல்லணும்.." உட்கார்ந்தார்கள்.

"அப்பா..! உங்களுக்கும் ஜலம் வெச்சிருக்கேன். ஏதாவது வேணும்னா Callங்க.." சிரித்தபடி சொல்லி காயத்ரி உள்ளே சென்றாள்.

இரண்டாம் அறை அவளுக்கானது. நுழைந்து சுவிட்ச்சைத் தட்டினாள். மூன்று முறை உடல் சிமிட்டி ட்யூப்லைட் உயிர்த்தது. டேபிள் மேல் அப்சர்வேஷன் நோட்டுகளும், தலையணை புத்தகங்களும், சில பேனாக்களும், பென்சில்களுமாய்க் கலைந்திருந்தன. நாற்காலியை இழுத்து, டேபிளோடு ஒட்டிப் போட்டு, எதிர் ஜன்னலைத் திறந்து அமர்ந்து, மடித்து வைத்திருந்த புத்தகத்தின் பக்கம் விரித்து, பார்வை பதித்தாள்.

வெளியே வேக வேகமாய்க் கருக்கிட்டுக் கொண்டு வந்தது. திடீரென வந்து எட்டிப் பார்த்து, கொட்டித் தீர்த்த ஒரு மாலை மழைக்குப் பின் வானம் கண் திறக்கவில்லை. வீட்டின் பின்புறம் தோட்டத்தில் சில்வண்டுகளின் 'கிர்ர்ர்...'ரீங்காரம் ஆரம்பித்து விட்டிருந்தது. நான்கு வீடுகள் தள்ளியிருந்த டீக்கடையின் ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் 'பாடும் போது நான் தென்றல் காற்று' பரப்பியது. சலசலவென்று மலை ஈரக் காற்று யாருக்கோ பதில் சொல்வது போல் பேசிக் கொன்டே வந்தது. ஒரு சுவர் தாண்டி சத்தமாய்ப் படிக்கும் அருள் குரல் கேட்டது. '...வாரல் என்பது போல் மறித்துக் கைகாட்ட...'

ஏதோ தோன்ற ட்யூப்லைட்டைப் பார்த்தாள். வழுக்காமல் நடந்து கொண்டிருந்த ஒரு கறுப்புப் பொட்டுப் பூச்சியை, எங்கிருந்தோ மெது மெதுவாய் நகர்ந்து வந்த மரப்பல்லி ஒன்று, சட்டென்று நா நீட்டி உறிஞ்சித் தின்றது. அவள் பார்த்துக் கொண்டேயிருந்தாள். மரப்பல்லி அவளை ஒரு வில்லப் பார்வை பார்த்தது. கொஞ்ச நேரம் அசையாமல் அசங்காமல் அவளையே பார்த்தது. அவள் ஏதாவது எதிர்வினை செய்கிறாளா என்று கணக்கிட்டது. அவளும் எதுவும் செய்யாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென எழுந்து 'உஸ்..' என்று தலையைக் கொஞ்சம் முன் நீட்டி கையை ஓங்கினாள். அதைக் கண்டு பயந்தோ என்னவோ, அல்லது அவள் கைகளின் கண்ணாடி வளையல் சிரிப்பாலோ சற்று அதிர்ச்சியுற்ற பல்லி, ஒரு வெறுப்புப் பார்வையை அவள் மேல் தூக்கிப் போட்டு ஓடோடியே போய் மறைந்தது.

"சரவணா... அந்த மாங்கா பறிச்சுக் கொடுடா..!"

"போடி...!"

"டேய்..டேய்..! ப்ளீஸ்டா..!"

"பறிச்சுக் குடுத்தா என்ன தருவ..?"

"ம்...! இங்க பாத்தியா ரப்பர்..! ஊர்ல இருந்து மாமா கொடுத்தாங்க..! இன்னும் பேப்பர் கூட பிரிக்கலை...! உனக்குத் தர்றேன்டா..!"

"சத்தியமா..?"

"சத்தியமா..!"

"படிப்பு மேல சத்தியமா..?"

"படிப்பு மேல சத்தியமா..!"

"என்ன ஏமாத்தாத..!"

"ஏமாத்த மாட்டேன். நீ முதல்ல மாங்கா பறிச்சுக் கொடு..!"

...

"ஆ...!"

"ஏன்டா கத்தற..?"

"இங்க ஒரு பல்லி இருக்கு..! என்னயே பாத்துட்டு இருக்கு..! பயமா இருக்கு...!"

"பல்லி ஒண்ணும் பண்ணாதுடா.."

"போடி...! நீயே பறிச்சுக்கோ, போ...!"

"டேய்...! ஓடாதடா..! நானும் வர்றேன்...!"


"காய்யூம்மா...! கொஞ்சம் இங்க வா..!"

...

"காயத்ரி...!"

படக்கென்று சுய நினைவுக்கு வந்தாள். வெட்கப் புன்னகையை தாவணியால் வழித்து கீழே சிந்தி விட்டு, எழுந்து முன்புறம் சென்று,

"என்னப்பா..!"

"ஒண்ணும் இல்ல..! ஸ்டோர் ரூம்ல ரெண்டாவது அடுக்குல பழைய பஞ்சாங்கம் எல்லாம் இருக்கு! கொஞ்சம் எடுத்திட்டு வாம்மா..!"

"சரிப்பா..!"

நாதாங்கியை இழுத்துப் போட்டுத் திறக்க, எப்போதோ வருவதால் ஸ்டோர் ரூம், மத்தியானத் தூக்கக் கலங்கலாய் இருந்தது. தூசு தும்பல்களைத் தட்ட, அவை ஜிவ்வென்று நீள் உறக்கத்திலிருந்து விழித்துக் குதித்து மேலே பறந்து, 'யார் என்னை எழுப்பியது?' என்று பார்த்து விட்டு, மீண்டும் ஏதோ ஒரு புள்ளியில் சென்று சுகமாய் அமர்ந்து கொண்டன. தேடிப் பஞ்சாங்கங்களை எடுக்கும் போது, கீழே பார்த்தாள். ரோஸ் ப்ளாஸ்டிக் சட்டத்திற்குள்ளே சிக்கிக் கொண்ட கறுப்பு ஸ்லேட், அதன் கீழ் ப்ரவுன் அட்டை போட்ட ஒரு குயர் கணக்கு நோட். அட்டையில் பூ போட்ட லேபிள் ஒட்டி இருக்க, 'E.காயத்ரி, VI - B ' என்று எழுதி முனைகளில் கிழிந்திருந்தது. சட்டென்று ஏதேதோ நிகழ்வுகள் பயாஸ்கோப் டேப் வரிசைகளாய்ச் சரசரவென்று ஓடின. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தன் அறையில் கொண்டு வந்து வைத்தாள். பஞ்சாங்கங்களை அப்பாவிடம் கொடுத்து விட்டுத் திரும்பினாள்.

ஸ்லேட்டை எடுத்துப் பார்த்தாள்.பளிச்சென்ற அழுக்கோடு இருந்தது. காற்றில் ஆடிக் கொண்டிருந்த ஒற்றை ஆணித் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த, துணி போர்டின் கீழே கசங்கலாய் விழுந்திருந்த துணியை எடுத்துத் துடைத்தாள். சாக் பீஸை எடுத்து, ஒரு பக்கமாய் எழுதினாள்.

சரவணன்
சரவணன்

"உஷ்..! எல்லாரும் வாய் மேல கை வைங்க..! ஜெயா மிஸ் குச்சியால் டேபிளைத் தட்டினாள். சரியாகத் தவறைப் புரிந்து கொள்ளாமல், எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்து, இடது கையை வயிற்றின் குறுக்கே கட்டி, வலது கை ஆட்காட்டி விரலால் உதடுகளை அழுத்திக் கொண்டனர்.

"பத்து நிமிஷம் நான் கணக்கெல்லாம் சரி பார்க்கற வரைக்கும் இப்படியே இருந்தா, திருத்தி முடிச்சவுடனே நாம ஒரு விளையாட்டு விளையாடலாம்.."

"எஸ் டீச்சர்..!" உற்சாகமாய்க் குரல் கொடுத்து, கிசுகிசுக்கத் தொடங்க..."உஷ்....!"

"ஒவ்வொருத்தரா வரிசையா வந்து அவங்கவங்க ஸ்லெட்டைக் காட்டி கணக்கை கரெக்டா போட்டிருக்கீங்களானு காட்டுங்க..! பர்ஸ்ட் அம்பிகா வா....! பன்னெண்டு ப்ளஸ் இருபத்து மூணு எவ்வளவு..?"

வரிசையாக வந்து காட்டி விட்டு, சிலர் காது திருகு வாங்கி, சிலர் குட்டு வாங்கி, சிலர் good வாங்கி...!

"ஒ.கே..! இப்ப ஒரு விளையாட்டு விளையாடலாமா..?"

"எஸ் டீச்சர்..!"

"எல்லாரும் அவங்கவங்க ஸ்லேட்டை எடுத்து, க்ளாஸ்ல அவங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க பேர எழுதுங்க. யாருக்கும் காட்டக் கூடாது..! நான் கேக்கும் போது சொல்லணும்..!"

வகுப்பு முழுவதும் ஒரு சலசலப்பு எழுந்தது. ஒவ்வொருவரும் எழுதினர்.

"எல்லாரும் எழுதியாச்சா...? எங்க ரம்யா நீ சொல்லு...!"

"அமுதா டீச்சர்..!"

"ஏன் அமுதாவைப் பிடிக்கும்..?"

"ஒரு நாள் எனக்கு கோணப் புளியங்கா குடுத்தா டீச்சர்..!"

"குட்..! இப்படி தன் எல்லார்க்கும் கொடுத்து சாப்பிடணும்..! சரி. ரஞ்சனி நீ யார் பேரை எழுதி இருக்க..?"

"காயத்ரி டீச்சர்..!"

"ஏன்..?"

"அவ கொண்டு வர்ற டிபன் எனக்குத் தருவா டீச்சர். ரொம்ப நல்லா இருக்கும். மத்யானம் ஸ்கூல்ல போடற சாப்பாட்ட விட நல்லா இருக்கும்..!"

"குட்..! அப்படி தான் இருக்கணும்! வடிவேல், நீ யார் பேரை எழுதியிருக்க..?"

"விக்டர் டீச்சர்..!"

"ஏன்..?"

"நீங்க கேட்ட பன்னெண்டு ப்ளஸ் இருபத்து மூணு இஸீக்கல்டு முப்பத்தஞ்சுனு அவன் தான் காட்டினான் டீச்சர்..!"

"உட்காரு..! காயத்ரி நீ யார் பேரை எழுதியிருக்க..?"

"சரவணன் டீச்சர்..!"

"என்ன..?" வகுப்பறை லேசாகச் சிரித்தது.

"சரவணா..! நீ என்ன எழுதியிருக்க..?"

"காயத்ரி டீச்சர்..!"

"ஏன் உனக்கு அவளையும் உனக்கு அவனையும் பிடிச்சிருக்கு...?'

"தெரியல டீச்சர்..!" இருவரும் கோரஸாய்ச் சொன்னார்கள்.


'இன்னமும் தெரியலயேடா..!' பெயரை முத்தமிட்டாள். செவ்வரி ஓடிய உதடுகள் மேலெல்லாம் சரவணன் ஒட்டிக் கொண்டான்.

ஸ்லேட்டை டேபிள் மேல் வைத்தாள். 'E.காயத்ரி, VI - B'யை காயத்ரி பி.எஸ்.ஸி. எடுத்தாள். கொஞ்சம் தட்டிவிட தூசு பறந்தது. பக்கங்களைப் பிரிக்க அழுத்தமான கையெழுத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், பின்னம், தசம் பின்னம் என எண்கள் அடிபட்டு, மதிப்பு கெட்டு கடன் வாங்கி, கூடி, பெருத்து, கழிந்து நிறைந்திருந்தன. இரண்டு பக்கங்களுக்கு ஒரு முறை சிவப்பு இங்கில் டிக் செய்து, Good, V.Good என்று சாய்வாகக் கிறுக்கியிருந்தது.

ஒரு பக்கத்திலிருந்து சரேலென ஒரு காகிதம் நழுவியது. ஆரஞ்சு மிட்டாயின் கலர் கவர்க் காகிதம் அது. ஜன்னல் வழி நுழைந்த காற்று அதனைக் கவ்விக் கொண்டு ஓடப் பார்க்க, சட்டென பிடித்தாள். முகர்ந்து பார்க்க இனிப்பின் மிச்ச வாசம் இன்னும் இருப்பதாக இவளுக்குத் தோன்றியது.

"எதுக்கு மிட்டாய்..?"

"இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்..!"

"ஓ..!"

"அதுக்கு தான் மிட்டாய்!"

"எல்லார்க்கும் குடுத்தியா..?"

"ம்..! எல்லார்க்கும் அஞ்சு பைசா மிட்டாய். உனக்கு மட்டும் தான் நாலணா மிட்டாய்..!"

"உனக்கு..?"

"எனக்கு வேணாம். நீயே சாப்பிடு..!!"

"வேணாம். அப்புறம் எனக்கு வயிறு வலிக்கும். இரு கடிச்சுத் தர்றேன்..!"

கர்ரக்...கர்..கர்ரக்...! "அய்ய.. எச்சி பட்டிடுச்சே.."

"பரவால்ல குடு..!"

"இரு, பேப்பர்ல சுத்தித் தர்றேன். அப்புறமா களுவிச் சாப்பிடு..! இனிப்பா இருக்கு..!"

"சரவணாஆஆ...! நீ வெள்ளாட வர்றயா இல்லியா...?"

"வந்துட்டேன்டா..! டாட்டா....!"


ந்தவர்கள் திருப்தியாய் எழுந்தார்கள்.

"ரொம்ப சந்தோஷங்க..! நீங்க சொன்ன வரனையே பக்கறோம். வேணும்னு சொல்லல. உள்ள வரும் போதே, உங்க பொண்ணு நல்லதா அமையும்னு சொல்லுச்சு. திருமகள் வாக்கு மாதிரி நாங்க மனசுல நெனச்சுக்கிட்டு வந்த வரனே தோதுபடும்னு நீங்களும் சொல்லிட்டீங்க! மனசுக்குத் திருப்தியா இருக்கு. கேக்கறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. பொண்ணு மஹாலட்சுமி மாதிரி சர்வ லட்சணமா இருக்கு. கல்யணத்துக்குப் பாக்கறீங்களா..?"

"பாக்கணும். பொண்ணு படிச்சு முடிக்கட்டும்னு இருக்கேன்..!"

"நம்ம ஊர்ப் பக்கமும் உங்க சனம் நெறய இருக்காங்க. படிப்புக்குப் படிப்பா, அழகுக்கு அழகா, அந்தஸ்துக்கு அந்தஸ்தா அய்யிரு பசங்க, நம்ம ஊருப் பசங்க தான், மெட்ராஸ்லயும், பம்பாய்லயும், லண்டன்லயும் இருக்காங்க..!"

"அதுக்கென்னங்க..! நம்ம கைல என்ன இருக்கு..! எல்லாம் அந்தப் பரமேஸ்வரன் முடிச்சுப் போடறது டானே! அவ தலையெழுத்துக்கு ஏத்தாப்ல நடக்கும்..!"

"என்னங்க இப்படி சொல்றீங்க..! பொண்ணு கிளி மாதிரி இருக்கு..! நான்.. நீ..ன்னு வந்து கொத்திட்டுப் போயிட மாட்டாங்க. பொண்ணு நல்ல குணத்துக்கும், உங்க நல்ல மனசுக்கும் எல்லாம் நல்லபடியா நடக்குங்க. அப்ப நாங்க வர்றோங்க..!"

"வாங்க..!"

அவர்கள் இறங்கிப் புறப்பட்டுச் சென்றனர். வாசல் கதவைப் பூட்டி விட்டு, வீட்டுக் கதவையும் தாழிட்டு, உள்ளே வந்தவர், காயத்ரியின் அறை கதவைத் தட்டினார். ஏதும் பதில் வரவில்லை. உள்ளே நுழைந்தவர்,

"என்னம்மா...! அது வாய் மேல அழுக்கா...!" கேட்க,

காலப் பாலாடையின் எத்தனையோ இனிப்பான ஏடுகளைப் புரட்டிச் சுவைத்து, மனமெனும் மந்திரக் குப்பியின் பல அடுக்குகளின் சுக நினைவுகளில் நடந்து, நனைந்து, களித்து, திளைத்துப் பறந்து கொண்டிருந்த காயத்ரி, சரேலென நிகழ்காலத்திற்குள் குதித்தாள்.

"அது வந்துப்பா...!"

"ஸ்டோர் ரூம் அழுக்கா இருக்கும்..! துடைச்சிட்டு வாம்மா..! சாப்பிடலாம்..!"

அவர் வெளியேற, அவசர அவசரமாக உதடுகளைத் துடைத்தவள், கணக்கு நோட்டின் கீழே மறைந்திருந்த ஸ்லேட்டை எடுத்து ஒருமுறை 'சரவணனை' பார்த்து விட்டு, கைகளால் அழித்தாள். வைக்கும் போது ஓரமாகச் செருகியிருந்த மிட்டாய்க் காகிதம் படபடக்க...

"காயத்ரீஈஈ......!!"

"வந்துட்டேம்பாஆஆ...!!!!"


- தொடரும்.