Wednesday, December 29, 2010

ஈரோடு - சங்கமம்-2010.

மாநகராட்சிப் பேருந்து நிலையத்தை அடைந்த போது மதியம் வந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கே உரிய கொஞ்சக் கூட்டம். மஞ்சள் மணக்கும் இலவசக் கழிப்பிடங்கள். தள்ளுவண்டி நீர்மோர்ப் பானைகள். தினத்தந்திஅலுவலகம் . டீசல் இன் பார். காணாமல் போன சைக்கிள் ஸ்டாண்ட். வர்ண மினி பஸ்கள். வரிசையான பழக்கடைகள். தொங்கும் பத்திரிக்கைகள். காரைத் தளங்கள். ஹாரன் சத்தங்கள். மூட்டைகள். மனிதர்கள். நான்கைந்து மரங்கள். மெல்லிய மேகங்கள். வெயில்.

பெருந்துறை செல்லும் பேருந்து ஒன்று சினை பஸாய் நகர யோசித்துக் கொண்டிருந்த இடைவெளியில் நாங்கள் ஏறிக் கொண்டோம். நானும் அவளும். சத்தியமூர்த்தி(?)க்காகப் பள்ளிச் சீருடைகளில் பையன்களும், பெண்களும். "பரிமளம் மஹால் ரெண்டு. ஸ்டாப்பிங் வந்தா சொல்லுங்க...!" "ம்.."

சவிதாவில் லெஃப்ட் கட் அடித்து பார்க் வரை சென்று தொட்டும் தொடாமல் U எடுத்து ஜி.ஹெச்.சில் நிற்கும் போது அன்னை சோனியா காந்தி பிறந்த நாள் விழா பேனர்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், வாசனும் 'நண்பேன்டா...' போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது ஜூ.வி. வரை ரிப்போர்ட்.

ஆட்சியர் கட்டிடம் தாண்டி ஓர மரங்களையும் பச்சை வயல்களையும் கடந்து ஸ்டாப்பிங்கில் நின்றது. இறங்கிச் சாலையைக் கடந்து ஆட்டோ நிறுத்தத்தில் "டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் அசோஷியேஷன் பில்டிங் எங்க இருக்குதுங்க..?" "ரொம்ப தூரமாச்சுங்களே..! ஒரு கிலோமீட்டர் வரும். (கைகாட்டி) இப்படியே போனீங்கனா லெஃப்ட்ல ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் வரும். ஒட்டி சந்துல உள்ள போயி மூணாவது கட்டுங்க.."

வெயில் தாரைகள் ஒழுகிக் கொண்டிருந்த வெளியில் நனைந்து கொண்டே அந்த மூன்றாவது கட்டிற்குள் செல்லும் முன்பே கட்டிடம் தெரிந்தது. முந்தைய ஜெயமோகன் நிக்ழவொன்றும் இங்கே தான் நடந்திருந்தது. அப்போது திறந்திருந்த கார் பார்க்கிங் சாத்தப்ப்ட்டிருக்க, சங்கக் கட்டிடத்தில் நுழையும்போது கைகளில் பழமைபேசியின் புத்தகத்தையும் ஒரு நோட்பேட் பேனாவையும் புன்னகையுடன் கொடுத்தனர் இரு சிறுமிகள். அழகாய்.

நாங்கள் அடைந்த போதே பதினொன்று தொட்டிருந்தது. முதல் பேச்சே என்னுடையது என்று தயாராய் வந்திருந்தால், காலி நாற்காலிகள் காற்றாடியின் கீழ் நான்கு கால்களாட்டிக் கொண்டிருந்தன. தாமோதர் சந்துரு வரவேற்றார். மதுரைக் கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீதர் கை கொடுத்தனர். அரூரன் வணக்கம் சொன்னார். கதிர் அங்குமிங்கும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டே இருக்க, ஒரு சலாம் கொடுத்து விட்டுக் காற்று வரும் வழியில் அமர்ந்து கொண்டோம்.

அவள் பழமைபேசி புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நானும் ஸ்ரீதரும் வெண்பாக்கள் பற்றிப் பேசினோம். கா.பாண்டியனும் க.கொண்டார். ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.

நிகழ்ச்சி நிரலின் படி துவங்கி, எழுத்தாளர் பெருமாள் முருகன் பற்றி சிறு அறிமுகம் கொடுத்து விட்டு அமர்ந்து கொண்டேன். 'சிறுகதைகளை உருவாக்குவோம்' பற்றி நிறைய சொன்னார்.



அம்மாவும் வந்து எங்களோடு சேர்ந்து கொண்டார்.

கோவை பாமரன் தான் எவ்வாறு எழுத்துக்கு வந்தேன் என்று இயம்பிக் கொண்டிருக்க, 'உலக மொக்கையர்களே ஒன்று சேருங்கள்' என்ற அவரது தலைப்பிற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று ஆய்ந்து கொண்டிருந்தேன்.

'தமிழ் ஸ்டுடியோ' அருண் இளைஞராக இருந்தார். மேடைத் தமிழை மேலேற்றாமல் இயல்பாகப் பேசினார். அவரது நிறுவனத்தில் குறும்படம் எடுக்க விரும்புபவர்களுக்காகச் செய்து தரும் வசதிகளைப் பற்றிச் சொல்லச் சொல்ல, நாமும் ஒரு குறு எடுத்தால் என்ன என்று கைகள் கொஞ்ச நேரம் பரபரத்தன.

நிரலில் கொஞ்சம் தடம் மாறி 'உலகத்திரைப்படங்கள்' பற்றி சிதம்பரம்.கி. பேசினார். அதற்குள் உணவு வேளை வந்து விட, கவனம் எல்லாம் கவளம் பக்கம் சென்று விட்டதால், இவர் என்ன சொன்னார் என்பதே மூளை ட்ராக்குகளில் சென்று சேரவில்லை. பசி வந்திட படமும் பறந்து போம்!

உணவுக்குப் பின் கொஞ்சம் கூட்டம் கரைந்து போய் விடக்கூடும் என்பதை உஷாராக உணர்ந்து கொண்டு எல்லோரையும் தற்போதே அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னார் கதிர். ஏதோ பரிசு வாங்கும் பள்ளியர்கள் போல் ஒவ்வொருவராக வந்து மைக்கைக் கைப்பற்றித் தம்மைப் பற்றி மூன்றே வரிகள் சொல்லி அகன்றனர். வழக்கம் போல் ஒரு கூட்டம் பின்புறம் அமர்ந்து கொண்டு சத்தமாகப் பேசி இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின் நவீனத்துவமாகப் பிரியாணியை இனிமாவில் கொடுத்திருக்க வேண்டும்.

மேலே முதல் மாடியில் தனித்தனியாகச் சைவம் மற்றும் அசைவம் டேபிள்கள் இருந்தன. அசைவத்தில் அமர்ந்து வகையாக உண்டபின் 'இனிது இனிது மானிடராய்ப் பிறத்தல் இனிது; அதனினும் இனிது ஈரோட்டுப் ப்ளாக்கராய்ப் பிறத்தல்' என்று கவி பாடிக் கொண்டே கைகழுவினேன். நானும் பரிமாறுகிறேன் பேர்வழி என்று சொல்லி ரசக் குண்டாவை எடுத்தேன்; வேறு கைகளில் தரவேயில்லையே..! இலை வழிய, சோற்றுக் குழியில் ஊற்றி, கைகளில் நனைத்து... ஒரே ரசமாய் இருந்தது.

(எஸ்.வி.சேகர் : சின்னம்மாவுக்கு ரசம் வைக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

பெரிய மாப்பிள்ளை : என்ன ரசம்?

எஸ்.வி.சேகர் : சிருங்கார ரசம்..!

- சின்ன மாப்ளே..பெரிய மாப்ளே... அல்லது ஹனிமூன் இன் ஹைதராபாத்)

களைப்பாகப் போயிற்று என்று எனக்குள் சொல்லிக்கொண்டு மற்றுமொரு பாயசம் டம்ளரை எடுத்துக் கொண்டு கீழே அரங்கத்திற்கு விரைய, கல்யாண கோஷ்டிகள் போல் ஆங்காங்கே குழுமியிருந்தனர். வெற்றிலை பாக்குத் தட்டும் மொய் நோட்டும் தான் குறை.

கொஞ்ச நேரம் கழித்து கிளம்பிய ஒரு குழு எல்லா வாசல்களையும் ஷட்டர் போட்டு அடைத்தது; ஜன்னல்களில் ஸ்க்ரீன் முடிச்சுகள் போட்டு வெளிச்ச மறைப்பு ஏற்பட்டதும் எனக்கு ஜனகராஜ் - ப்ரொஜக்டர் - நீலம் நினைவுக்கு வந்தது. நல்ல ( :( )வேளை அப்படியொன்றும் இல்லையாம். 'நிழற்படங்களில் நேர்த்தி' பற்றி ஓர் அமர்வு.

கருவாயன் என்ற சுரேஷ்பாபு தன் கன்னி மேடை நிகழ்வை நிகழ்த்தினார். தமிழ் வலைப்பதிவுகளில் உருப்படியான சிலவற்றுள் ஒன்றான பி.ஐ.டி. பற்றியும் கேமிராவில் அபெர்ச்சர், ஜூம், ஃபோகஸ், லைட்டிங் ஆகியவற்றின் பயன்பாடு பற்றி ஒரே காட்சியின் வேறுபட்ட நிழற்படங்களைக் காட்டி விளக்கினார். கறிச் சோற்றுத் தூக்கத்தை அண்டவே விடாத ஓர் அருமையான நிகழ்வாக அது இருந்தது.



(சப்ஜெக்டாக என்னை ஃபோகஸ் செய்து பேக் க்ரெண்டில் கதிர் மற்றும் பரிசல்காரனை ஜூம் அவுட் செய்து லைட்டிங்கை டீஃபால்ட்டில் வைத்து... Thanks Suresh, Now I can use some technical terms.)

சாரு நிகழ்ச்சியில் அவரது நட்பார்ந்த துரோகியான மிஷ்கினைப் போலவே கறுப்புக் கண்ணாடியைக் கழட்டவே செய்யாத ஓசை செல்லா தமிழ் இணையம் பற்றிச் சொன்னார். வயிற்றில் தர்மத்தின் தலைவன் தலைவர்(ரெளடி) போல் ஒரு பை இருந்தது. அவரது முகநூல் பக்கத்தில் சில படங்களையும், பி.ஐ.டி.யில் தனது முதல் பதிவையும் காட்டினார்.

அம்மாவும் அவளும் ஷாப்பிங்கிற்குக் கிளம்பிப் போனார்கள்.

கூழாங்கற்கள் தளத்தைச் சேர்ந்த லட்சுமணராஜா (ராம்கோவில் மென்பொருளர்) 'நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல்' நிகழ்வின் வழியாக எப்படித் தாமும் தன் நண்பரும் சேர்ந்து நிகழ்ச்சிகளை வேறுபட்ட கோணத்தில் பார்த்து நிழற்படத்தில் ஆவணப்படுத்துகிறோம் என்று விளக்கினார்கள். வேதாந்தாவை எதிர்க்கும் ஓர் ஒரிஸாப் பழங்குடிக் கிராமத்தை எடுத்திருந்த கறுப்பு வெள்ளைப் படங்கள் மூலமாக எவ்வாறு அவர்கள் தத்தம் கலாச்சாரக் கூறுகளை இழந்து வருகிறார்கள் என்று காட்டப்பட்டது. வேதாந்தாவின் ஒரு தொழிற்சாலையைத் தூரத்திலிருந்து ஒரு க்ளிக் செய்திருந்தார்கள். "ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் ஒரு ஜெர்மன் ஜர்னலிஸ்ட் போய் அதை போட்டோ எடுக்கப் பார்த்து அடி வாங்கி வந்தான்" புன்முறுவல்.

தேநீர் இடைவேளை விட்டால் இன்னும் நேரமாகி விடக்கூடும் என்பதால் இருக்கும் இடத்தைத் தேடிக் கோப்பை கொண்டு வந்தனர். ஓர் ஓட்டை கப்பில் டீ வந்து விட்டது என்று ஒருவர் நிகழ்ச்சியைக் கவனிக்காமல் மாற்றுக் கப்பில் டீ எப்போது வரும் என்று தேடிக் கொண்டிருந்தார். ஓட்டை அவர் கை கப்பில் மட்டும் இருந்திருக்கவில்லை.

ஆவண நிகழ்ச்சி முடிந்ததும் கதிர் வந்து நன்றி சொன்னார். குழும உறுப்பினர்களின் அயரா உழைப்பு தான் வெற்றி அடைந்ததன் காரணம் என்றார். நிழற்படம் எடுத்துக் கொள்வோம் என்று அனைவரையும் அழைத்தார். எனக்குக் கூச்சமாய் இருந்தது. ரசத்தை ஊற்றியதன்றி வேறொன்றும் யானறியேன் என்றிருந்தேன். இருப்பினும் ஈற்றாகச் சென்று தலையைக் காட்டி விட்டு வந்தேன்.

மேடை திருப்பூர் சேர்தளம் அமைப்பின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு கலந்துரையாடல் போல் அரை வட்ட வடிவாக உட்கார்ந்து கொண்டோம். எதிர்கால கோபிநாத் ஆகும் உத்தேசம் கொண்டவர் போல் தோன்றிய திருப்பூர் செல்வம் மைக்கர் ஆனார். வெயிலான், சீனா அவர்கள், பரிசல்காரன் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோர் மேடையில்.

நிறைய கேள்விகளை ஸ்லைடில் காட்டிக் கீழே ஒரு பொன்மொழியை வேறு எழுதி கவர்ச்சியாக நடத்த விரும்பியிருந்தனர். ஆயினும் நேரப் பற்றாக்குறையினாலும் பங்கேற்பாளர்கள் சரிவர கலந்துரையாடாததாலும் கடைசி ஸ்லைடுகளைத் தாவிச் சென்று நன்றி சொன்னர். ஜாக்கி சேகரும், வால்பையனும் மாறி மாறி மைக்கை எடுத்துக் கொண்டு பேசினர். ஒரு பத்திரிக்கையாளர் வந்து தரையைக் கோபாவேசத்தோடு பார்த்துக் கொண்டு 'பதிவர்கள் சமூகக் கொடுமைகளைப் பற்றி எழுத வேண்டும்; பல பிரச்னைகளைப் பற்றிப் பதிவிட வேண்டும்' என்று வேகமாய்க் கேட்டுக் கொள்வதை, சண்டே சாயங்கால மந்தமாய்ப் பார்த்தோம்.

எல்லோரும் மெல்ல மெல்லக் கலைய அரேஞ்ச் செய்யப்பட்டிருந்த ஆம்னி வேனில் ஓட்டுநருக்கு கீர் மாற்றுவதில் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டு நான் அமர்ந்து, நிலையத்தை வந்து சேர்ந்த போது அதே கலைந்த பேருந்துகள். தியேட்டர் சனங்கள். லாந்தர் ஒளியில் வறுகடலைகள். மஞ்சள் வானம். மஞ்சள் சோடியம் விளக்குகள். மஞ்சள் மாநகரம்.

Monday, December 20, 2010

நாஞ்சில் நாடருக்கு வாழ்த்துக்கள்.



வ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி - தமிழ் விருது பெறுகின்ற எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

***

Pic Courtesy :: http://farm3.static.flickr.com/2208/2201252799_b7f192a265.jpg?v=0

Tuesday, December 07, 2010

நானே



தேடிய பெருங்கவிதை ஒன்று நெடுங்காலமாய் ஒரு கல்லிடுக்கில் ஒளிந்து கொண்டிருந்தது. தடுக்கிக் கொண்டு கீழே விழுந்ததும் ஒரு சாரையைப் போல மெல்ல எட்டிப் பார்த்தது. அதன் நா நுனியில் வார்த்தைகளின் நஞ்சு தடவப்பட்டிருந்தது. மேனிமேல் ஒரு பளபளப்பான தோல் நிலவொளியில் மினுங்கியது. நாசி வழி வெங்காற்று வெளியே வந்து சுற்றுப்புறத்தைச் சூடாக்கியது. நீல விழிகள் பாரித்த ஒளி, உமிழ்ந்த வேகத்தில் சிறு கற்கள் பொசுங்கின. கைகள் அற்றுக் கால்களும் அற்று மெல்லத் தன்னை அசைத்து வெளியே வந்து நின்றது.

அள்ளி விழுங்கிக் கொள்ளும் யத்தனத்தில் மெல்ல அணுகினேன். செவ்வாய் மேல் காமம் பூசியிருக்க, முத்தமிட்டேன். தீ தீண்டும் சுகம். வழுவழு உடல் தரித்து ஈரம் பதித்த நல் வரிகளால் எழுதப்பட்டிருந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கினேன்.

நானே கவிதையானேன்.!!

Pic courtesy :: http://www.allarminda.com/wp-content/uploads/2010/10/poetry2.jpg

மணற்கேணி - 2010 - அழைப்பு.



மிழ் வலைப்பதிவுகளில் பலதரப்பான தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றியும் அவற்றின் மேலான தங்கள் எண்ணங்களையும் அப்பதிவுகளைப் பார்வையிடுவோர் தங்கள் பின்னூட்டங்களில் பதிலிடுகின்றனர். எளிதாகக் கண்ணுக்குப் படும்வகையில் அமைவன திரைப்படம், திரை நிகழ்வுகள் மற்றும் அவற்றை ஒட்டி வாழும் துணை உறுப்புக்களான விமர்சனங்கள், ஒப்புமை கண்டறிதல்கள் போன்றன. அவற்றைத் தவிர்த்துப் பார்க்கையில் அரிதாகவே வேறு பல துறைகளைப் பேசும் பதிவுகள் கிடைக்கின்றன.

அச்சிறுபான்மைப் பதிவுகளை இன்னும் கொஞ்சம் வலுப்பெறச் செய்ய எடுக்கப்படுகின்ற ஒரு முயற்சி 'மணற்கேணி'.

சிங்கப்பூர் வாழ்த் தமிழ்ப்பதிவர்கள் தமக்குள் அமைத்துள்ள ஒரு குழுமம், இத்தலைப்பில் நம்மைச் சிந்தையால் துழாவச் செய்யும் சில கருதுகோள்களைக் கொடுத்துக் கட்டுரைகளைக் கேட்கின்றது. எளிதில்லாத ஒரு பணி என்பதால் இவ்வாண்டு இறுதிநாள் வரை நேரம் கொடுத்துக் காத்திருக்கிறார்கள்.

நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்படும் கட்டுரையின் ஆசிரியர்களை சிங்கைக்கே அழைத்து ஒரு வாரம் முழுதும் உபசரித்துப் பற்பல நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்து, அவர்கள் தம் வாழ்நாளில் மறந்திட இயலாவண்ணம் அன்பால் தழுவி அனுப்பி வைக்கிறார்கள்.

மேலதிக விவரங்களுக்கு ::

மணற்கேணி- 2010

சென்ற ஆண்டில் கலந்து கொண்டு எழுதிய அறிவியல் கட்டுரை : ஒலிதச் சமிக்ஞைப் பகுப்பாய்தல்.

ஈரோடு தமிழ்ப்பதிவர்ச் சங்கமம் - 2010 - அழைப்பு.



சென்ற ஆண்டைப் போலவே இந்த வருடமும் 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' சங்கமம் நிகழ்வை நடத்த முடிவு செய்திருக்கின்றது.

தேவகுமாரனின் பிறந்தநாளுக்கு அடுத்து டிசம்பர் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் என நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்கள் விரைவில்.

விவரங்களுக்கு ::

கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கமேஸ் - 9842910707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426

ஈரோடு கதிர்

***

சங்கமம் - 2009 தொடர்பாக எழுதிய பதிவுகள் ::

தமிழ்ப்பதிவர்ச் சங்கமம் - 2009 - ஈரோடு - அழைப்பு.

ஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool!

ஈரோடு சங்கமத்தில் பேசிய உரை.

ஈரோடு சந்திப்பு - 2009 - கடைசியாய்க் கொஞ்சம்!

Monday, November 22, 2010

குஜிலி!



பெருநிலக்கிழார்களையும், குறுநில மன்னர்களையும், பிரபுக்களையும் பாடிக் கொண்டிருந்த தமிழ்ப்புலவர்களின் வரிசையில் கடைசிக் கண்ணியாய் வந்தமைந்த பாரதியார், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்க் கவிதைகளை பொது மக்களின் புறம் திருப்பினார். மரபார்ந்த வடிவங்களில் கவிதைகள் தத்தம் பாடுபொருட்களை அரசவைகளில் இருந்து அரச மரத்தடிக்கு மாற்றிக் கொண்டன. சுதந்திரம் கிடைத்த பின் பெருகிய கல்விப் பரப்பின் அடியில் துளிர்த்த சமூகத்தின் பசியைத் தணிக்க 'தினத்தந்தி' முனைந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்புச் சங்கிலி போல் அமைந்தவை தாம், படிக்கவும், எழுதவும் கற்றிராத ஆனால் மெல்ல மெல்லத் தம்மைப் பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொள்ளத் துவங்கிய தமிழ்ச் சமுதாயத்தின் சந்து முனைகளில் வழங்கப்பட்ட முச்சந்தி இலக்கியம், பெரிய எழுத்துப் புத்தகம், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், தெருப் பாடல்கள் என்றெல்லாம் வழங்கப்பட்ட 'குஜிலி இலக்கியம்'.

பேராசிரியர் டாக்டர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் வெகுசிரமம் மேற்கொண்டு பற்பல பழைய நூல்களையும், பத்திரிக்கைகளையும் தெருப் புத்தகங்களையும் படித்து அநேக மேற்கோள்கள் இட்டு இந்நூலை எழுதியிருக்கிறார் என்பது ஸ்பஷ்டம்.

பொதுவாக சிந்து என்ற வகையிலேயே எளிதாகப் பாடும் வகையில் தெரு முனையில் நின்று இச்சிறு நூல்களை விற்போர் பாடுவதால், பாரதியாரும் 'காவடிச் சிந்து' வகையில் பாடல்கள் பாடியிருக்கிறார். அதனாலேயே 'சந்திலே சிந்து' என்ற இன்றைக்கும் ஜனப்பிரயோக வார்த்தை வந்திருக்கும் என்பது ஊகம்.

குஜிலி என்ற பெயர் தோன்றிய முறையிலிருந்து இவ்வகைப் பாடல்கள் வளர்ந்த விதம், பாடுபொருட்கள், பாடியோர், விற்பனை முறைகள், வாசகர்கள், தேய்வும் வீழ்ச்சியும் என்று அனைத்தையும் குறைவின்றி ஆய்ந்து சுவாரஸ்யமாகவும் விளக்கமாகவும் சொல்லியிருக்கின்றார்.

அக்காலத்தில் நடந்த ஜனங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடிய அத்தனை விஷயங்களையும் இந்த தெருமுனைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். அம்ஸவல்லிகேஸு, மடராஸ் ரெயில் கலகம், கள்ளப்புருஷன் ஆசையால் பிள்ளையைக் கொன்ற கனகம்மாள் துயரம், கிண்டிரேஸ் பாட்டு, சிலோன் கலகச் சிந்து, விளக்கெண்ணைக்கும் கிருஸ்னாயிலென்ற மண்ணெண்ணைக்கும் சண்டையின் கும்மி நல்லெண்ணெய் சமாதானப்படுத்துதல் போன்று பல விஷயங்களிலும் பாட்டுக்கள் எழுதியிருக்கிறார்கள். கோர்ட்டில் ஏதேனும் பிரபலமான கேஸ் நடந்து கொண்டிருக்கும் போது அன்றைன்றைக்குச் சாயந்திரமே தெருக் கவிஞர்கள் அன்றைய விபரத்தைப் பாடலாக்கி விற்றிருக்கிறார்கள்.

வழக்கம் போல் மேல்தட்டு ஜீவிகளால் 'துர்பாட்டுகள்' என்று ஒதுக்கப்பட்ட இவ்விலக்கிய வகைப் பாடல்கள் தேசியம் நோக்கித் திரும்பியதும் தேசநலன் விரும்பிகளால் வியந்தோதப்பட்டன. காந்திச் சிந்து, பகத்சிங் சிந்து, மாப்ளாக் கலவரச் சிந்து என்று பாடுகிறார்கள். வந்தது வினை. ஆங்கில அரசின் கவனம் இவற்றின் மேல் திரும்ப, பல்லாயிரம் குஜிலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்டதில் கணிசமானவை அழிந்தன.

மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்து இப்போது மிக மிக அரிதாக மாறி விட்ட குஜிலி இலக்கியத்தைப் பற்றி ஒரு வரலாற்றுப் பார்வைக்கு இந்நூல் மிக உபயோகமான பதிவு.

உதாரணத்திற்கு ஒரு பாடல்.

ஸ்ரீ வேணுகோபாலன் திருவடிகளே சரணம்

30 - 7 - 22க்கு ஆடி மீ 15உ பாளையங்கோட்டை பெரிய ஜெயிலிலிருந்து செம்புலிங்க நாடார் ஓடிப்போன பாட்டு

இஃது பாளையங்கோட்டை மில்டெரி லயன் புஸ்தக வியாபாரம் S.A.அளகிரிசாமி பாகவதர் பாடியது
பாளையங்கோட்டை செளராஷ்ட சபையார் பொருளுதவி செய்தது
திருநெல்வேலிப்பாலம் ஸ்ரீ காந்திமதி விலாஸம் பிரஸில், அச்சிடப்பட்டது
காப்பி முதற்பதிப்பு 2000
இதன்விலை 1922 அணா1
விருத்தம்

செம்புலிங்க நாடார்மேல் ஜெகமதில் பாட்டுரைக்க அம்புவியோர் இதைக் கேட்டு ஆனந்தமாய் மகிழ நம்பி எனும் வேலனுக்குத் தமையனாம் கணபதியை தும்பிக்கயுடையோனைத் துரிதமுடன் நமஸ்கரித்தேன்.
ஆல்ரெடி சொவுசுக்காரி - என்ற மெட்டு

செம்புலிங்கம் ஓடினசங்கதி சொல்லவேண்டாமா
அதைப்பாட வேண்டாமா
ஊரில்கேள்க வேண்டாமா
மனங்கொள்ள வேண்டாமா

அணாக்கொடுத்து புஸ்தகம்வாங்கிப் பார்க்க வேண்டாமா
பார்த்துநல்ல குற்றங்குரை தெரிய வேண்டாமா

புஸ்தகத்தை வாங்கிப்பார்த்தால் புலன்வெளியாகும்
கவலைகள் தோணும்
யோஜனை உண்டாகும்
புத்தி தடுமாடும்

செம்புலிங்கம் செய்த விஷயம் செவ்வையாய்த் தோணும்
வம்புவந்த வகையதுவும் தென்புடன் காணும்

பாளையங்கோட்டை பட்டாளம் லயன் அளகிரிசாமி
பாடினேன் இதை
தேடியும் நீங்கள்
நாடியுங் கேட்டு

பாடிப்பாடி நாடுகளில் கூடிப்பேசிடுவீர்
ஆடி ஓடிய செம்புலிங்கத்தைத் தேடிக்கண்டிடுவீர்
நொண்டிச் சிந்து

கொள்ளை செய்த குற்றத்துக்காக- மெத்த சள்ளையில்லாமலிருக்க செம்புலிங்கத்தை- சரியான தென்டனை செய்து- சர்க்கார் அடிதண்டாவைக் காலில்மாட்டி- பக்குவமாய்ப் பாளையங்கோட்டை- புது ஜெயில் தன்னிலல்லோ அடைத்து வைத்து- பந்தோபஸ்துகள் செய்து- அவரைப் பகலும் இரவுமல்லோ பாறாவில் வைத்து- சிலகாலம் பார்த்து வந்து அண்ணே- இந்த விதம் நாள்களித்து வரும்போது- எவ்வித காரணத்தாலோ- அங்கு ஜூலை மீ முப்பதாந்தெய்தி யன்று- ஞாயிற்றுக் கிழமை இரவில்- இந்த செம்புலிங்க நாடாரும் காசிநாடாரும்- தேவமார் ரெண்டு பேரும்- அந்த ஜெயிலுக்குள்ளேயிருந்து வெளியேரி- தந்திரமாய் ஓட்டிவிட்டார்- இந்த நல்ல விவரத்தை முன்பக்கத்தில்-அனைவோர்களும் தெரிய யான் செப்பியிருக்கிறேன் அளகர்சாமி தந்திதை தந்தினனா.

***

புத்தகம் : முச்சந்தி இலக்கியம்

புத்தக வகை : கட்டுரைத் தொகுப்பு.

ஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி

கிடைக்குமிடம் : நூற்கடைகள்.

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்.

விலை : 140 ரூ.

***

Pic Courtesy :: http://upload.wikimedia.org/wikipedia/commons/3/36/Indra_deva.jpg

Wednesday, November 10, 2010

பின் தொடரும் நிழலின் குரல்.



சென்ற ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டுக்கு, கைக்குப் பொருந்தாத வளையல் மாற்ற ப.செ.பார்க்குக்குச் சென்றார். கூடப் போயிருந்தேன். மழை வரும் போல் காற்று சில்லிட்டது. தீவாளி மயக்கம் தீராத கட்டில் கடைகள் ஏறக்கட்டப்பட்டிருந்தன. நேரம் எட்டைத் தொட்டது. வேலா புத்தக நிலையம் சாத்தியிருந்தது. வளையல் கடைக்கு அவர் சென்று விட, வேலாவுக்கு எதிரில் இருந்த மற்றொரு சிறு நூற்கடையில் நான் ஒதுங்கி கண்ணாடிக் கூண்டுகளுக்குள் காகிதங்களை விசாரித்தேன்.

பெரும்பாலும் கிழக்கின் நூல்கள். கொஞ்சம் ப்ராடிகி. கோலம் கோர்ப்பதையும் ஜோசியம் பார்ப்பதையும் தோசை வார்ப்பதையும் சொல்லிக் கொடுக்கும் என்றும் பச்சை ஒல்லி நூல்களுக்கு இடையில் 'பின் தொடரும் நிழ்லின் குரல்' கேட்டது. வாங்கிக் கொண்டேன். 290 ரூ. தமிழினி பதிப்பகம். கூட அம்பானி வாழ்வுச் சுருக்கும்.

ஞாயிறு இரவில் துவங்கி நள்ளிரவு இரண்டரை வரை படித்துப் பின் திங்கள் முழுதும் படித்து நேற்று கடைசி கொஞ்சம் பக்கங்களையும் இரவில் படித்து விட்டு இன்று எழுதுகிறேன். இப்பதிவு நாவலைப் பற்றிய எவ்வித மதிப்புரையோ, விமர்சனமோ அல்ல. படித்து முடித்து யோசிக்கும் போது தோன்றிய எண்ணங்கள் மட்டுமே.

லைப்பின் பொருள் என்ன? நம்மைப் பின் தொடர்ந்து வருகின்ற நிழலின் குரல். அந்த நிழல் என்ன? ஓர் ஒளியின் முன் நாம் நிற்கையில் நம் பின்னே உற்பத்தியாகின்ற நம் வடிவ எல்லை. உண்மையில் ஆசிரியர் குறிப்பிடும் நிழல் அது தானா? நாவலுக்குள் செல்லச் செல்ல வேறு அர்த்தங்களுக்கும் நம்மைக் காட்டுகின்றது.

கம்யூனிசம் என்ற ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்காப்படுகின்ற சோவியத் யூனியன் வீழும் போது, (சிலர் ருஷ்யாவில் அமலாக்கப்பட்டது மார்க்ஸ் சொல்லிய கம்யூனிசமே இல்லை என்று சொல்கின்றார்கள்) அச்சித்தாந்த ஆட்சிக் காலத்தில் அதைச் சொல்லி நடத்தப்பட்ட பேரழிவுகளுக்கு என்ன பொருள்? அதில் வாழ்விழந்த மக்கள் பெருங்கூட்டங்களுக்கு என்ன பதில்? என்ற அடிப்படைக் கேள்விக்கு ஆசிரியர் இந்திய அளவில் பொதுவுடைமை இயக்கம் இயங்கும் விதம் மற்றும் காலப்போக்கில் அது ஜனநாயக வழிக்குத் திரும்ப முற்படும் காலகட்டத்தைக் கொண்டு எழுதியிருக்கும் நாவல் இது.

கம்யூனிசம் பற்றியும் ருஷ்யாவில் நிகழ்ந்தன பற்றியும் எதுவும் தெரியாது என்பதால், அவற்றுக்குள் செல்லாமல் ஒரு படைப்பு என்ற ரீதியில் மட்டும் இதை அணுகுகிறேன். ஆனால் நாவல் அரசியல் பேசுவதால் அதைப் பற்றியும் வரும்.

பொதுவான நாவல் என்ற கட்டமைப்புக்குள் இதைப் பார்க்க முடியவில்லை. ஒரு சீரான கட்டுக்கோப்புக்குள் பயணப்படும் கதை மாந்தர்கள், அவர்களது மனநிலைகள் என்று துவங்கி முடியும் நாவல்களுக்குள் இது ஒரு மாறுபட்ட வடிவம் கொண்டது. கதைப் போக்கின் ஊடாக நாடகங்கள் வருகின்றன; கவிதைகள் வருகின்றன; கடிதங்கள், உரையாடல்கள் என்று பல (உத்திகள் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை.) உருவுகளில் கதை நகர்கின்றது.

அருணாசலம் என்ற தொழிற்சங்கவாதியிடம் வீரபத்திரப் பிள்ளை என்ற இயக்கத்திலிருந்து துரத்தப்பட்ட, இயக்கப் பதிவுகளில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்ட குடிக்குத் தன்னை இழந்து சக்கடையில் மரிக்கும் ஒரு முன்னாள் தோழரின் கைப்பதிவுகள் கிடைக்கின்றன. அவையே மேற்சொன்ன புனைவுகளாக நாவலில் அமைகின்றன.

வீரபத்திரப் பிள்ளையைப் பற்றித் தேடிப் போகையில் அருணாசலம் சந்திக்கின்ற நிகழ்வுகள் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மனப்பிறழ்வுக்கு ஆளாக்குகின்றன.

ஸ்டாலின் புகழ் பாடிக் கொண்டிருந்த அக்காலத்தில் பிள்ளைக்கு சைபீரியப் படுகொலைகள் பற்றியும் புகாரின் என்ற ருஷ்யப் புரட்சியாளரைப் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. அதனைக் கொண்டு கேள்வி கேட்டதால் இயக்கம் அவர் மீது புழுதி வாரித் தூற்றி வெளியே எறிகின்றது. இது காலம் காலமாய் நடப்பது தான் என்பது போல் கெ.கெ.எம். பிள்ளைக்குச் செய்ய, கெ.கெ.எம்.மிற்கு நாராயணன் செய்கிறார்.

நாவலில் வரும் தர்க்க விவாதங்கள் தெளிவாக உள்ளன. ரப்பர் தொழிற்சங்கத்தை உருவாக்கிய கெ.கெ.எம். இறுதியில் கிருஷ்ண பக்தராவதும் (அவர் கடைசியில் வந்து சேரும் வயதான காதலி கிறித்துவராய் இருப்பினும்), அருணாச்சலம் பலிபூஜைக்கு வருவதும் ஆசிரியரின், மரபின் மேலான ஆர்வத்தைக் காட்டுகிறது.

வீரபத்திரப் பிள்ளை எழுதியதாக வரும் சிறுகதைகள் ருஷ்யப் பனிநிலத்திற்கே கூட்டிச் சென்று விடுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அருணாச்சலம் மனநலவிடுதியில் படித்து உள்ளேயே விழுந்து விடுகின்ற நாடகம், ஆசிரியருக்கு மிக எளிதாகக் கைவசப்பெறும் அங்கத வகையில் எழுதப்பட்டிருப்பது அபாரம். ஜெயமோகன் என்ற இளம் எழுத்தாளரும் அருணாசலத்திற்கு எரிச்சலைக் கொடுத்துக் கொண்டு நாவலில் வருகின்றார்.

இறுதியில் மனுஷகுமாரன் வருகின்ற சிறுகதையில் அவனது வாசகங்களாக வருபவை, நாவல் மண்ணில் ஊன்றி நிற்கின்ற ஆணிவேரைச் சொல்கின்றன.

நாவலை முடிக்கும் போது தலைப்பின் கலைடாஸ்கோப் பரிமாணங்கள் தெரிகின்றன.

வீரபத்திரப் பிள்ளையைப் பின் தொடர்ந்தது ஒரு நிழலின் குரல். அது, ட்ராட்ஸ்கியை ஒழித்த அதே ஆயுதத்தால் ஒழிக்கப்பட்ட, சைபீரிய ரயில் நிலையத்தில் கொத்துக் கொத்தாய்க் கும்பல் கும்பலாய்க் கொல்லப்பட்டுக் கிடத்தப்பட்ட எளிய மக்களின் பிணக் குவியல்களில் தேவகுமாரனைக் கண்ட புகாரினின் குரல். அருணாசலத்தைப் பின் தொடர்வது மற்றொரு நிழலின் குரல். அது, ஐம்பது வருடங்களாய் இரும்புத்திரையின் பின் நிகழ்ந்த உண்மைகளை மறைத்து மேடைகளிலும் எழுத்துக்களிலும் முழங்கி வந்த சொந்த இயக்கத்தவரை எதிர்த்து அறம் தேடிய வீரபத்திரப் பிள்ளையின் குரல். அருணாசலத்தின் மனப்பிறழ்வுக் காலத்தில் பின் தொடர்ந்தது ஒரு நிழலின் குரல். அது மனைவி நாகம்மையின் குரல். ருஷ்யக் கனவுகளிலும், பிள்ளையின் புனைவுகளிலும் கரைந்து தறிகெட்டுத் திக்கெட்டும் சிதறிப் போய்த் தன் மாய நினைவுகளில் தொலைந்திருந்த மனதை மீட்டுக் கொணர்ந்த காமத்தின் தீராக் குரல்.

அறம் என்பதன் பொருள் என்ன? மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்ற சித்தாந்தங்களுக்கு ஏற்படுகின்ற வெற்றி தோல்விகளைக் கொண்டு அறத்தை நிர்ணயிக்க முடியுமா? நீதிக்கான இன்றைய பொருள் நாளை செல்லுபடியாகுமா? என்றென்றைக்குமான அறம் என்று ஏதேனும் உள்ளதா? தியாகத்தின் மதிப்பு என்பது எதைச் சார்ந்தது? போன்ற கேள்விகளின் மேலே நின்று செதுக்கப்பட்ட ஒரு பெரும்புனைவு இந்நூல்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டுத் தாங்க முடியாமல் மக்கள் குமுறி அழும் கண்ணீரே அந்த ஆட்சியை அடியோடு அழிக்கும் ஆயுதமாகும்.

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்.

இக்குறட்பாக்களின் சாரத்தில் மிளிர்கின்றது ஜெயமோகர் காட்டுகின்ற தரிசனம்.

***

புத்தகம் : பின் தொடரும் நிழலின் குரல்

புத்தக வகை : நாவல்.

ஆசிரியர் : ஜெயமோகன்

கிடைக்குமிடம் : நூற்கடைகள்.

பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்.

விலை : 290 ரூ.

Friday, October 29, 2010

NaNoWriMo - 2010.



ன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் நானோ துவங்கப் போகின்றது. தயாராகிறீர்களா..?

முந்தைய பதிவுகள் ::

Nanoupdate.1

Nanoupdate.2

Nanoupdate.3

Nanoupdate.4

Nanoupdate.5

Nanoupdate.final

என் நானோ பக்கம் :: வசந்த்.

Wednesday, October 13, 2010

திருமண அழைப்பிதழ்.

நாள் :: 20-அக்டோபர்-2010, ஐப்பசி 3

நேரம் :: காலை 6 மணி முதல் 7 மணிக்குள்

இடம் :: ஸ்ரீ ராஜேஸ்வரி திருமண மண்டபம், கொமாரபாளையம்.

அனைவரையும் அழைக்கிறேன்.

Thursday, October 07, 2010

Jai Hoooo....

Then....




...and now...



Cricinfo

Any differences could be found...? Nope...!!!

Tuesday, October 05, 2010

வருங்காலத்திற்கு எந்திரன் பற்றி..!



ந்திரன் என்றொரு திரைப்படம் பற்றியும் அதனைச் சுற்றிலும் நிகழ்கின்ற கூத்துக்களையும் பார்க்கிறோம். அவற்றைப் பற்றிய இரு பதிவுகளை வருங்காலத்திற்காக இங்கே சேமித்து வைக்கிறேன்.

1. தினமணி கட்டுரை ::

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
----------------------------------------------

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.


தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

(நன்றி :: http://deepaneha.blogspot.com/2010/10/blog-post_05.html)

2.



(நன்றி :: http://mathavaraj.blogspot.com/2010/10/blog-post_05.html)

படம் நன்றி :: http://www.wpromote.com/blog/wp-content/uploads/2009/04/pity-the-fool.jpg

Monday, August 09, 2010

மொக்ஸ் - 10.Aug.2010

பாழாய்ப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி - அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
உன் மேனி ஒரு பூத்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி!

இந்த வரிகளை எழுதியவர் யாராய் இருக்கும்..?

ரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ... கட்டை வண்டி ஒன்று கிடைத்தது. கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இடமில்லை. ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான் ஒன்று; வண்டிக்குடையவன் இரண்டு; அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஓட்டும் சிறுவன் ஒருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக் கொண்டு போயிற்று.

மேற்கண்ட பத்தியைப் போல் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி சுமாருக்கு ஈரோடு நூல் அழகத்திற்குச் சென்றேன். வழக்கம் போல் பேருந்து நிலையத்தின் அருகே வ.உ.சி. பூங்காவிற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. வழியெங்கும் நோட்டீஸ் சிதறல்கள். ஐஸ் வண்டிகள். இளநீர் அரிவாளிகள். வரவேற்கும் பதாகை. அன்றைய தினம் 89,90 ஸ்டால்களில் வழியே நுழைவாயிலாக இருந்தது. நுழைந்தேன்.

ஒவ்வொரு பதிப்பகத்தின் உள்ளும் சென்று, கண்களைக் கட்டவிழ்த்து விட, அவை நூல் அட்டைகளையும், விலையையும், அகத்தே சில வரிகளையும் மேய்ந்து விட்டு வந்தன. கொஞ்சம் நீளமான 'ப' போல் ஸ்டால்கள் இருந்தன. நிறைய பள்ளிக் குழந்தைகளைப் பார்த்தேன்; மகிழ்ந்தேன்.

கொஞ்சம் ரூபாய்களுக்குப் புத்தகங்கள் வாங்கினேன். அவற்றில் படிப்பவற்றைப் பற்றிப் பின் சொல்கிறேன். ஒரு ஸ்டாலில் பதிவர்கள் ஜாஃபர் மற்றும் மதுரை கார்த்திகை பாண்டியன் அவர்களையும் பார்த்துப் பேசினேன்.

வெளியே வந்து ஜிகர்தண்டா எடுத்துக் கொண்டு, திடீரென ஒரு விசிட் செய்த கொஞ்சம் மழையில் நனைந்து கொண்டு வெளியேறினேன்.

இன்னும் கொஞ்சம் படங்கள் மற்றும் செய்தி.

மாடுப்பூனை பத்தி, 'என் ஈரோட்டுப் பயணம்' என்ற கட்டுரையில் 14.8.1921. சுதேசமித்திரன் இதழில் வந்திருக்கின்றது. எழுதியவர் மகாகவி பாரதியார். அ.கருப்பண்ண செட்டியார் என்ற 'உலகம் சுற்றிய தமிழர்' ஏ.கே. செட்டியார் அவர்கள் தொகுத்த 'தமிழ்நாடு - நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்' என்ற நூலில் இது போன்ற பல கட்டுரைகள் உள்ளன.

அழகத்தில் வாங்கிய நூல்களில் முதலில் படிக்கத் தொடங்கியிருக்கும் நூல் இது. சந்தியா பதிப்பகம் - ரூ.180.

காத்மா காந்தியடிகளின் கிராமசுயராஜ்ஜியம், தேவைகளை உள்ளூரிலேயே நிறைவேற்றிக் கொள்ளுதல் போன்றவற்றை அம்மா படித்ததில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களுக்குள் இந்த கருத்தாக்கம் எப்படியோ தோன்றியிருக்கின்றது. அவர்கள் மீஅடிப்படைக் கிராமத்திற்குச் சென்று வங்கிப் பணியாற்றிய காலகட்டத்தில் அங்கிருந்த கிராமப் பெண்கள் தத்தம் தேவைகளையும், குடும்பத்தின் தேவைகளையும் தாமே பூர்த்தி செய்து கொள்ளுதலையும், வங்கிக்கடன்கள், கூட்டுறவுப் பணிகள் ஆகியவற்றின் மூலமாகக் குடும்பம் சீராக நடைபெற முன் நிற்பதையும் கண்டிருக்கக் கூடும்.

'தாம் நுகர்வதற்கான பொருட்களுக்கான மூலப்பொருட்களைத் தாமே உற்பத்தி செய்து கொள்வதன் மூலம் வெளியுலகைச் சார்ந்திருக்கும் அளவைப் பெரும் அளவில் குறைப்பது' என்ற விருப்பத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். குப்பாண்டம்பாளையத்தில் வீடு வாங்கும் போது, அவர்களின் கொள்கையை நடைமுறைப் படுத்துவதில் ஆர்வமாய் இருந்தார்.

கிராமப்புறத்தில் ஒரு வீடு வாங்கிய போது, அதுவரை பயிர்களை உருவாக்கிப் பல்லாயிரம் நுண்ணுயிர்களும் பூச்சிகளும் வாழ்ந்த செழுமையான ஒரு வாழ்விடத்தின் மேல் அது கட்டப்பட்டிருக்கின்றது என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருந்தது. அதற்கான பரிகாரமாக என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு 'என்னால் முடிந்த அளவுக்கு அந்த வீட்டிற்குள்ளும் சுற்றியும் செடிகளை வளர்ப்போம்' என்பதே என் பதிலாக இருந்தது.

அம்மா மற்றும் என் எண்ணங்களுக்கு ஏற்ப வீட்டின் முன்புறம் சில செடிகளை வைத்திருக்கின்றோம். ரோஜா, மந்தாரை மரம், பாகற்காய், வாழை, பூசணிக் கொடி, சங்குப்பூ, கீரைகள், மாதுளஞ்செடி, பனை, வேம்பு, வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவை இப்போது விளைந்திருக்கின்றன.

தினசரி உபயோகக் காய்கறிகளுக்கான வெளிச் சந்தைச் சார்பை இப்போது குறைக்கும் முயற்சியில் இருக்கின்றார்கள். இது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின் அடுத்த படிக் காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிப்பது என்று நினைத்திருக்கின்றோம்.

மாடியிலிருந்து வடகிழக்குப் பார்வை ::

மாடியிலிருந்து தென்மேற்குப் பார்வை ::

மாடியிலிருந்து தெற்குப் பார்வை ::

மாடியிலிருந்து வடக்குப் பார்வை ::

மாடியில் ரோஜாச் செடிகள் ::

வாசல் கோலம் ::









ந்திரன் பாடல்களை டெக்னோ அதிரடி எனலாம். இப்போது பிடித்திருக்கும் பாடல் 'கிளிமாஞ்சாரோ...'. காரணம், அது பலமுறை கேட்ட வடிவிலும் இசைக் கோர்வைகள் எளிதில் பதிய வைத்துக் கொள்ளுவதாகவும் இருப்பதால் என்று நினைக்கிறேன். அடுத்தது 'அரிமா..' தான்.

ஜென்டில்மேன் வந்த போது 'சிக்குபுக்கு..'வும், காதலனில் 'முக்காலா...'வும் முதலில் பிடித்திருந்தன. சில மாதங்களில் வீட்டுத் தோட்டத்தில் பூக்களைக் கேட்டுப் பார்ப்பதும், என்னவளும் பிடித்திருந்தார்கள். எனவே எந்திரனிலும் இப்போது கேட்கவே கேட்காத 'காதல் அணுக்கள்...' சில காலம் கழித்து உள் ஊறலாம்.

முதல் பத்தியை எழுதியவர் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா..?

பாவேந்தர் பாரதிதாசன்.

Saturday, July 24, 2010

My Name ISKCON.



மிதந்து கொண்டிருந்த குளிர் மேகங்களை ஊடுறுவி வெண் பட்டுப் போன்ற கதிர்க் கோடுகள் பெங்களூர் வானில் ஒளியை பரவ விட்டுக் கொண்டிருந்தன. நகரம் சனிக்கிழமையும் ஓய்வுறாத சாலைகளில் இயங்கிக் கொண்டிருந்தது. இன்ஸெப்ஷனுக்கும் தில்லாலங்கிடிக்கும் உதிரிக் கூட்டங்கள் தியேட்டர்களுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க, கெம்பகெளடா பேருந்து நிலையத்தில் நண்பகல் பனிரெண்டு காலுக்கு இறங்கிக் கொண்டேன்.

80 இலக்கமிட்ட பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டு, "இஸ்கான்..!" என்று வாங்கிக் கொண்டேன்.

ண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் க்ருஷ்ணா கான்ஷியஸ் என்ற பெயரின் சுருக்கமே இஸ்கான். பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பு இது. பகவான் கிருஷ்ணனையே முழுமுதற்கடவுளாக கொண்டு இயங்குகின்றது. வெளியே பிரபலமாக 'ஹரே கிருஷ்ணா' இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. உலகெங்கும் பரவியுள்ள இந்த அமைப்பின் பெங்களூர்க் கிளை ராஜாஜி நகர் அருகே இஸ்கான் ஹில் என்றே பெயரிடப்படுள்ள சிறு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை ராதாகிருஷ்ண மந்திர் என்றும் சொல்கிறார்கள்.

மிகத் தெளிவான வரையறுக்கப்பட்ட பாதை இருக்கின்றது. எண்ட்ரியிலிருந்து எக்ஸிட் வரை ஆங்காங்கே அம்புக் குறிகள் நடப்பட்டிருக்கும் பாதை எவர்சில்வர் தண்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தொலைந்து போகும் வாய்ப்பேயில்லை.

கொஞ்சம் மலை ஏறியதும் பாதக் காலணிகள் வைக்கும் இடம் உள்ளது. வரிசையாக அடுக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெயர்கள் A, B, C என்று துவங்கி Z தாண்டிப் பின் AA, AB என்று நீள்கின்றது. நெற்றியில் நாமமும், சின்னக் குடுமியும் வெண்ணிற ஜிப்பாவும் அணிந்த இளம்பையன்கள் சிமெண்ட் சுமந்த பாலிதீன் மூட்டையை எடுத்துக் கொடுக்க நாம் நம் செருப்புகளை அதிலே போட்டுக் கொடுத்தால், அவர்கள் காலியாக இருக்கும் அடுக்கில் வைத்து விட்டு நமக்கு டோக்கன் கொடுக்கிறார்கள்.

கொஞ்சம் மேலே ஏறினால், கைகளை கழுவிக் கொள்வதற்குத் தண்ணீர் பைப்புகள். கால்களைக் கழுவிக் கொள்ள பாதையிலேயே ஒரு கிடைமட்ட பைப் வைத்து அதில் சில பொத்தல்கள் இருக்க, குளிர் நீர் கசிந்து படிக்கட்டை முழுக்க நனைத்துக் கொண்டிருக்க, நாம் அந்தச் சிறு நீர்ப்பரப்பில் நனைத்துக் கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் தூரம் வழியிலேயே சென்றால், கம்பித் தடுப்புகள் முடிந்து ஓர் அகன்ற வெளி வருகின்றது. அங்கே நின்று பார்த்தால், நமக்கு முன்னே கோயில் பெரிதாக நின்று கொண்டிருக்கின்றது. ஸ்பீக்கர்கள் 'ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே;' என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றன. பதிவு செய்யப்பட்டதா அல்லது ஒருவர் மைக் முன் அமர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.

முதலில் வருவது நரசிம்மர் கோயில். இரணியனைக் கொல்லும் அதே கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். வரிசையாகச் சென்று பார்த்து வணங்கினேன். மஞ்சள் வெளிச்சத்தின் நடுவில் அத்தனை நகைகளுடன் தெரிந்தார்.

வெளியே வந்து கொஞ்சம் படியேறினால் வெங்கடாசலபதி நிற்கிறார். சொல்ல வேண்டுமா? தகதகதகவென ஜொலிக்கிறார். உண்டியலும் இருந்தது.

சங்கர் தயாள் சர்மா அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது திறந்து வைத்த கோயிலாம். கல்வெட்டு சொல்கின்றது.

இன்னும் கொஞ்சம் படிக்கட்டுகள் வழியேறினால் ராதாக்ருஷ்ணர் கோயில்.

மிகப் பெரியதாக இருக்கின்றது. கூம்பு வடிவ உச்சி நம்மைச் சட்டென மிகச் சிறியவனாக உணரச் செய்யும் உயரம். அதன் உடலெங்கும் கண்ணன் ஓவியங்கள். மையத்தில் பிரம்மாண்டமான ஷாண்ட்லியர் மின் விளக்கு ஒன்று தொங்குகின்றது. உயரமான மாடங்களில் எண்ணெய் விளக்குகள். அவை ஏற்றப்படவில்லை. திருவிழாக்களில் திரிபடலாம். டைல்ஸ் தரை. முன்னே பார்த்தால் தங்கக் கோபுரங்களின் கீழே மூன்று பகுதிகள். வலப்புறம் கண்ணன், பலராமன். இடப்புறம் நித்ய கெளரங்கா. கெளரங்கா என்ற பெயர் ஸ்ரீ சைதன்ய மகாப்ரபுவையும், நித்ய என்ற பெயர் அவரது பிரதான சீடரான நித்யானந்த பிரபுவையும் குறிக்கின்றது. மையத்தில் ராதையுடன் கண்ணன். சிலைகளைப் பார்த்தால் வட இந்தியப் பாணி தெரிகின்றது. பூரியில் இருக்கும் பாண்டுரங்கனைப் போன்ற அடையாள உற்சவர்கள்.

இவை பஞ்ச லோகச் சிலைகள் (தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் இரும்பு). இவை கும்பகோணம் அருகில் உள்ள ஸ்வாமி மலையில் தேவஸ்தான ஸ்தபதி மற்றும் அவரது மகனான இராதாகிருஷ்ண ஸ்தபதிகளால் உருவாக்கப்பட்டதாக வலை சொல்கிறது.


நன்றி:: http://api.ning.com/files/7juhZFLXQaSOma8VHkiLhYw06RkJ3QvzFtIrog0bciiaSdWaGz24R6gKDpLiw**MR812kBvA6VcBAEju4kL4N9HM4g8W*x4h/DSCN2682.jpg

தங்கக் கோயில்களை நாம் நெருங்க முடியாது. தர்மதரிசனத்தில் கொஞ்சம் தொலைவிலிருந்து பார்க்கலாம். சிறப்பு தரிசனமும் இருக்கின்றது. வணங்கி விட்டு இடப்புறத்தில் புத்தகக் கடைகள் துவங்குகின்றன. ஆங்கிலம், இந்தி, வங்காளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா ஏன் சைனீஸிலும் புத்தகங்கள் உள்ளன. இரண்டு குறும் நூல்கள் வாங்கினேன். தமிழில் தான்.

சுற்றி வந்தால் தீர்த்தம் தருகிறார்கள். இதற்கென்றே டிசைன் செய்யப்படுகின்ற தீக்குச்சிக் கரண்டிகள். திரும்பினால் பிரபுபாதா அவர்களின் சிலை இருக்கின்றது. அவருக்கு முன்னே அமர்ந்து தியானம் செய்யத் தளம் இருக்கின்றது. இசைக்கருவிகள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகில் அமர்ந்து கண்ணனைப் பார்த்தேன்.


நன்றி::http://www.iskconbangalore.org/panihati-chida-dahi-festival-2010

'உனக்கு எதற்கு இத்தனை பிரம்மாண்டம்? பசுக்கள் மேய்த்துக் கொண்டிருந்த கரும்பயலே உனக்கு எதற்குத் தங்கக் கோபுரங்கள்? இந்தப் பொன் வர்ணப் பாவாடையும் ஜொலிக்கின்ற புல்லாங்குழலும், மின்னுகின்ற மகுடங்களும் உன்னைக் களைப்படையச் செய்யவில்லையா? இப்படி மஞ்சள் தூண்களுக்குள் உன்னை வைத்துக் கொண்டு என்னிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ள நீ என் கண்ணன் தானா? இருக்கவே முடியாது. இங்கே உன்னை மஹா செல்வந்தனாக நினைத்துக் கொண்டு அதையும் இதையும் கொடு என்று வேண்டிச் செல்கிறார்களே, இவர்கள் அறிவார்களா நீ ஒவ்வொருவரிடத்திலும் இருப்பதை? நீ வேண்டி இறைஞ்சி நிற்பதெல்லாம் உன் மேலான காதலையும், ஒவ்வோர் உயிரிடத்தும் அன்பையும் கருணையும் அல்லவா? உன்னிடம் எதை வேண்டிக் கொள்வது? நீயே சிறை பிறந்த கள்ளன் அல்லவா? உன்னைத் தெய்வமாக்கி அபிஷேகம் செய்து, குளிப்பாட்டி, அலங்கரித்து மாலை சூட்டிப் பூஜை செய்து எங்கள் மனதிலிருக்கும் ஒரு மாயக் குழந்தையை மறக்கச் செய்ய முடியுமா?'

இராதாக்ருஷ்ணர் கோயிலின் கதவுகளில் மேலிருந்து கீழாகத் தசாவதாரச் சிலைகள். அவற்றின் இரு புறமும் நாரதர், அழகுப் பெண்கள், யானைகள், பறவைகள். யாரும் கவனிப்பதாக இல்லை.

அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு தளமாக இறங்க இறங்க மனதிற்குள் கசப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. எங்கெங்கு காணினும் வணிகக் கடைகள். சிலைகளும், மாலைகளும், ப்ளாஸ்டிக் பூக்களும், போஸ்டர்களும், காலண்டர்களும், டைரிகளும், மின் அலங்காரங்களும். இல்லை இது என் கண்ணன் கோயில் இல்லை; ஒரு வணிக வளாகம் என்று சொல்லிக் கொண்டே வந்தேன்.

உணவும் விற்கிறார்கள். புளியோதரையும், சிறு மீல்ஸும், மசாலா இட்லி போலிருந்த மராட்டிய இட்லிகளையும் உண்டு விட்டுக் கீழே இறங்கினால் பருப்புச் சாதத்தை அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயும் இரண்டு குப்பிகள் தின்றேன்.

பச்சையாய்க் குளம் ஒன்று காற்றில் அசைந்தாடுகின்றது. வானில் நீர்ப் பொதிகள் உருண்டு கொண்டிருந்தன. எதிரே நகரின் அடுக்குமாடிக் கட்டிடங்களும், கண்ணாடி அலுவலகங்களும் தெரிகின்றன.

கீழே இறங்கி வந்து செருப்பு வாங்கிக் கொண்டு வெளியேறும் போது நான்கு மணி தரிசனத்திற்காகக் கூட்டம் காத்திருந்தது. வெளியேறும் போது தான் பார்த்தேன் எதிரே குருவாயூரப்பன் கோயில் ஒன்று சாத்தியிருந்தது. அங்கே தான் என் கண்ணன் நின்று கொண்டிருப்பான் என்று தோன்றியது. திரும்பிப் பார்த்தால், அலங்காரத் திருக்கோயிலின் கோபுர உச்சியில் நடுங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கொடி காற்றில் 'வாரல் என்பது போல் மறித்துக் கைகாட்டியது' என்று உணர்ந்தேன்.









Saturday, July 03, 2010

ஒரு சனிக்கிழமையில்...பெங்களூர்ச் சாலைகளில்..!

நீலவானத்தின் ஒரு சதுரத்துண்டு சீலிங்கில் செதுக்கியிருந்த கண்ணாடி வழியே கசடுகளோடு தெரிந்தது. விழித்தேன். நேரம் காலை எட்டு. சனிக்கிழமை. ஜே.கே. ஒரு போர்வைக்குள் மடங்கியிருந்தான். எங்கிருந்தோ சமஸ்கிருதம் கேட்டது. தொலைக்காட்சியின் சின்னச் சிவப்புக் கண் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முந்தைய இரவின் ப்ரேசில் கொடுத்த அதிர்ச்சி இன்னும் கலைந்திருக்கவில்லை. பாயைச் சுருட்டி விட்டு அடைத்திருந்த ஜன்னலைத் திறந்தால், ஜில் காற்று காத்திருந்தாற்போல் உள் பாய்ந்தது. பக்கத்து மாரியம்மன் கோயில் வாசலில் கோலம். கதவைத் திறந்து வெளிவந்து பால்கனியில் நின்று வீசிக் கொண்டிருந்த குளிரை நீண்டதாக உள் இழுத்துக் கொண்டேன்.

இந்திரா நகர் எய்ட்டி ஃபீட் சாலையில் கார்களும், பேருந்துகளும் கடந்து கொண்டிருந்தன. தெருவுக்குள் நாய் ஒன்று நடந்து வந்தது. முனையில் ஓர் அயர்ன் செய்பவர் சுறுசுறுப்பாய் இருந்தார். மூன்றாவது மொட்டை மாடியில் துணிகள் காய்ந்தன. கோயிலை ஒட்டிய கரையற்ற குளத்தில் ரோஸ் தாமரைகள் மொட்டாய் மலராய் நடுங்கின.

தமிழ்ப்பறவைக்கு கால் செய்தேன். கிளம்பிக் கொண்டிருந்தார். திப்பசந்த்ரா ஸ்வப்னா புத்தக நிலையத்திற்கு ஒரு விசிட் அடிப்பதாகத் திட்டம். அங்கே தமிழ் நூல்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டிருந்தார். பிறகு நண்பர்களிடம் விசாரித்துக் கொன்டு தமிழ்நூல்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து விட, வேறோர் பிரபலப் பிரதேசம் செல்வதாக முடிவு செய்தோம். "ஒன்பதரைக்கு வந்து விடுவேன்..!" என்றார். கிளம்பத் தொடங்கினேன்.

று வருடங்களுக்கு முன் லீலா பேலஸின் பின் மதிலுக்கு அருகே இரண்டாம் மாடி வீட்டில் தங்கியிருந்தேன். இரவெல்லாம் கேட்கும் ஆம்புலன்ஸ் ஒலிகளும், ஏஸி உறுமல்களும் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது அரண்மனையின் எதிரே நிறைய மரங்கள் நின்று கொண்டிருக்கும். ஃபவுண்டனில் அரை ஸைன் போல் செய்றகையாய் நீர் பொங்கி விழுந்துச் சிதறிக் காணாமல் போய் மீண்டும் உற்சாகமாய் எழும்பும். செல்வந்தக் கார்கள் நுழையும் தனி வழியில் சல்யூட் வைப்பவர் பெரிய மீசை வைத்திருப்பார். கண்ணாடி வாசல் 'வா..' என்று திறக்கும். மாடங்களில் பூச்செடிகள் மாறி மாறி பூத்துக் கொண்டிருப்பதும் உள்ளே திறந்தவெளியில் நாற்காலிக் குழுக்களில் திரவங்களை அருந்திக் கொண்டிருப்பதும் இப்போதும் பெரிதாக மாறியிருக்கவில்லை, ஒன்றைத் தவிர.

உள்ளே நுழையும் முன்பாக மெட்டல் டிடெக்டர் நம்மைக் கவ்வித் துப்புகின்றது. பளிச்சென சுத்தம் செய்யப்பட்ட பாதுகாவல் அதிகாரி மற்றொரு முறை கருவியால் நம்மைத் தடவி அனுமதிக்கிறார். நானும் பரணியும் வழவழ பளிங்கின் மேல் நடந்து தளக் குறிப்பைப் பார்த்தோம்.

பரணி சில வருடங்களுக்கு முன் பார்த்தது போலவே இருந்தார். முடி வெட்டியிருந்தார். தோளில் ஒரு பயணப் பை. அதில் சில சமாச்சாரங்கள். அதே புன்னகை. அதே பேச்சு. அதே எஸ்.ரா. ஆதர்சம்.

பேலஸின் கீழ்த்தளத்திற்குத் தானியங்கிப் படிக்கட்டுகளில் நின்று இறங்கினோம். ஏஸி செய்யப்பட்டிருந்தது. க்ராஃப்ட் ஷாப்பில் புத்தர் சிலை. சேலைகள் சுருள் சுருளாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. ட்ராவல் ஏஜென்ஸியில் சிலர் காத்திருந்தனர். இடது பக்கம் வெட்டினால் ஓர் செயற்கை நீர்வீழ்ச்சி படர்ந்து விழுந்து கொண்டிருந்தது. அதன் முன்புற டைல்ஸ் கரைக்குளத்தில் ரோஜாப்பூவிதழ்கள் தூவப்பட்டிருக்க, அங்கிருந்து நிர்வாண மங்கை ஒருத்தி எழுந்திருக்க விரும்பினேன். நடக்கவில்லை.



ஆக்ஸ்போர்ட் நூல் விறபனையகத்தைக் கண்டுபிடுத்து வாசலை அடைந்தோம். பரணி, "புத்தகத்தைப் பிரிப்பது போல் திறக்க வேண்டும்..!" என்று கைப்பிடிகளைப் பிடித்து திறக்க அத்தனை புத்தகங்கள் எங்களுக்காக ஆர்வமாய்க் காத்திருந்த சொர்க்கத்திற்குள் நுழைந்தோம். ஏஸி இருந்த மாதிரி தெரியவில்லை. பரணி கொண்டு வந்த பையை முன்னே கொடுத்து விட்டு டோக்கன் வாங்கிக் கொண்டார். ஹாட் விற்பனை புத்தகங்கள் சுழல் அடுக்கில் இருந்தன.

காமசூத்ராவும், பியானோ கற்றுக் கொள்ளலும், இண்டியன் பெய்ண்டிங்கும், கொட்டேஷன்ஸும் அருகருகே காத்திருக்க, ஸ்பீக்கர்களில் இந்துஸ்தானி ஃப்யூஷன் பாடல்கள் பெருகிக் கொண்டிருந்தன. குழந்தைகளுக்கான வரிசைகளில் அமர்சித்ரகதா இருந்தது. பிக்ஷன், நான் பிக்ஷன், லிட்ரேச்சர், சமையல், ஆர்ட், யோகா, ரிலீஜன் என்று புத்தகங்களும் பிரிந்திருந்தன. காஃபி ஷாப்பும் உள்ளேயே இருக்க, அங்கே அமர்ந்தவர்கள் பொன் பழுப்பாய்க் குடித்துக் கொண்டிருந்தது காஃபி தான் என்று நம்ப விரும்பினோம். பேனா, நோட்டுகள், கீசெய்ன் எல்லா இருந்தன. சந்தித்ததன் நினைவாக பரணி ஒரு புத்தகம் பரிசளித்தார்.Days of Raj - Life and Leisure in British India - Pramod K.Nayar - Penguin - Rs.350/-. வெளியேறினோம்.

கோடிஹள்ளியின் அருகில் இருந்த தலை-மேல்-சாலை-கடத்தியை நீங்கிப் பேருந்து நிறுத்தத்திற்குப் போனோம். விளிம்பில் அமைந்த எஸ்.டி.டி. பூத்தில் 'சிட்டி மார்க்கெட்' செல்லும் பேருந்தை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே வந்து விட்டது பஸ். மற்றுமொரு முறை ஓட்டுநரிடமும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு (மார்க்கெட் ஹோகுதல்லே..? மல்லு வாசம் இன்னும் போகவில்லை!) கடைசிச் சீட்டில் அமர்ந்து கொண்டோம்.

ஏறி இறங்கும் வளையும் நீளும் பெங்களூர்ச் சாலைகளெங்கும் வினைல் போர்டுகளும், ஃப்ளக்ஸ் ஷீட்டுகளும் பூத்திருந்தன. வெயில் குறைந்தபாடில்லை. முகத்திற்கு நேராக அடிக்கின்றது. பள்ளிப் பூக்கள் பல வர்ணச் சீருடைகளில் கலைந்து நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு சிக்னலிலும் மூவர்ண எல்.ஈ.டிச் சுழிகள் இயக்கத்தை ஒழுங்குபடுத்தின. தூரத்து வானில் மேகங்கள் கூட்டம் திரட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. கார்ப்பரேஷன் சர்க்கிளிலிருந்து விடுபட்டு எஞ்சின் சுமக்கும் எறும்புகள் போல் மிதந்து மார்க்கெட்டை அடைந்ததை சந்தை இரைச்சல்களும் ஜூம்மா மசூதிப் புறாக்களும் குழிந்த பாலச் சாலையும் அறிவித்தன.

கும்பலாய் ஊர்வலம் கிளம்பிய கருமேகங்கள் சிதறிப் பெருமழையாய்ப் பெய்து எங்களை ஓரம் கட்டின. மீண்டும் சூரியன் எட்டிப் பார்ப்பதற்குள் அரைமணி ஆகியிருந்தது.

ப்ரெளனியன் இயக்கத்திற்கே சவால் விடும் வகையில் அத்தனை திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள், கம்பிச் சரங்களை ஒட்டிச் சின்னச் சின்னக் கடைகள், குடையைக் கவிழ்த்துப் பூட்டு சாவி விற்பவர்கள், பானிபூரி ஊற்றுபவர்கள், நின்று கொண்டே உண்ணும் சாஹர் ஓட்டல்கள், பொம்மை விற்பவர்கள், பழக்கடைகள், நீலக் கோடணிந்த அரசுப் பேருந்து வரிசைகள், டிப்போ, சப்வே, பச்சைத் தூரிகை மரங்கள், பலபாஷை கூச்சலிடல்கள் இவர்களுக்கிடையே தேடினால் கிடைக்கின்றது பெங்களூர்க் கோட்டை.



விஜயநகரப் பேரரசில் இப்பகுதியின் குறுநில மன்னராக இருந்த கெம்ப கெளடா அவர்களால் மண் கோட்டையாக எழுப்பப்பட்டு கி.பி.1761-ல் ஹைதர் அலியால் கற்கோட்டையாக மாற்றப்பட்டது. கி.பி.1791-ல் மூன்றாம் மைசூர்ப் போரில் லார்ட் காரன்வாலிஸால் கைப்பற்றப்படும் வரை திப்பு சுல்தான் வசம் இருந்த கோட்டையை நாங்கள் அடைந்த போது மிஞ்சியிருக்கின்ற டெல்லி வாசலில் சட்டை திறந்த ஒருவர் பீடி பிடித்துக் கொண்டிருந்தார்.

தொல்பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நவீனக் கல்வெட்டு ஒன்று மழையில் சொட்டிக்கொண்டே தெரிவித்தது. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளின் முன்னே கிராதிக் கம்பிக் கதவு தாழிடப்பட்டிருக்க, பிரதான வாசலின் மரக்கதவு பிரம்மாண்டமாய் வரவேற்றது. எத்தனை பெரியது..! எதற்கு இத்தனை உயரம்..? யார் நுழைவிற்கு என்று தோன்றியது. அதன் கீழேயே கொஞ்சம் குனிந்தாலே சென்று விடும் அளவுக்கு இடைவெளி இருந்தது. சென்றோம்.

முதலில் ஒரு கோயில் எதிர்ப்பட்டது. முகப்பில் பிள்ளையார் சிலை. ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. கதவு தாழ் போடப்பட்டிருக்க, உள்ளே எட்டிப் பார்த்தால் கருகும். இடதுபுறம் திரும்பி நடந்தால் ஒரு வெற்று வெளி. கோட்டைச் சுவர் சற்று வெளிப்புறமாக்ச் சாய்ந்திருக்க, தமிழ்ப்பறவை " எதிரிகள் வரும் போது சறுக்கிக் கொள்ள வேண்டும் என்று செய்திருக்கிறார்கள் போலிருக்கின்றது..!" என்றார். வெளியெங்கும் பச்சை அடிவாரம். கற்சுவர்களில் கவனிப்பாரற்று சில சிற்பங்கள்.

முன்னூறு ஆண்டுகளாக வேல், அம்புகள், ராக்கெட்டுகள், பீரங்கிகளுக்கும் அஞ்சாமல் உறுதியாய் நின்று கொண்டிருக்கும் பெரும் பாறைகளுக்கு இடையிலே பசிய இளந்தளிர்கள் முளைத்திருக்கின்றன.

ஒரு சுற்று சுற்றி விட்டு, மீண்டும் வந்த வழியே வெளியேறுகையில் உயரமான ஒரு பாறையில் கலவிச் சிற்பம் ஒன்றைக் கண்டு உய்ந்தோம்.













கோட்டையிலிருந்து சினிமா போஸ்டர்களையும், சிறுநீர்க் கழிப்பிடங்களையும், விக்டோரியா ஆஸ்பத்திரியையும், சிக்னலையும் நீங்கினால் திப்புவின் பெங்களூர் தர்பார் வருகின்றது.

மரங்களாலும், காரைகளாலும், ஓவியம் வேய்ந்த கூரைகளாலும் அழகமைய கட்டப்பட்டுள்ள இம்மண்டபம் திப்பு ராஜாவின் மக்கள் குறைதீர் ஸ்தலமாய் இருந்திருக்க வேண்டும். தொல்பொருள் இலாகா உள்நாட்டவர்க்குத் தலைக்கு ஐந்து ரூபாயும், வெளியார்க்குத் தலைக்கு நூறு ரூபாயும் கட்டணமாய்ப் பெற்றுக் கொண்டு திவ்யமாய்ப் பராமரிக்கிறார்கள்.

சுல்தானின் அரண்மனைக்கு அருகே வெங்கடநாராயணர் கோயில். வாசலில் பொங்கல் வாழ்த்து பத்து ரூபாய்க்குக் கிடைக்கின்றது. பாதையின் இருமருங்கிலும் பச்சைப் பதியன்கள். உயரமான தூண்கள். சுற்றி வரப் பூங்கா. இடது ஓரத்தில் ரெஸ்ட் ரூம். அலுவலகர் அறை.













பிறகு மார்க்கெட் பேருந்து நிலையத்திற்கு வந்து அவரவர் வழியில் சென்றோம்.