Thursday, July 02, 2009

கதைகள் வந்த கதைகள்.



ரையாடல் போட்டிக்கு எழுதிய இரண்டு சிறுகதைகள் எங்கிருந்து உதித்தன என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

மனையியல்.

சென்ற ஆண்டு மத்திய மாதங்களில் ஏதோ ஒன்றில் அனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் சென்று கொண்டிருந்தேன். அது எழும்பூர் வரை செல்லும். நான் மதுரையில் இறங்கிக் கொண்டு, பின் பேருந்துப் பயணம் செய்வேன்.

அந்த பயணத்தில், நெல்லை தாண்டி, வள்ளியூர் அருகில் என்று நினைக்கிறேன். ஒரு குட்டி ஸ்டேஷனில் கதைப் பெரியவர் ஏறினார். அவர் எங்கள் கம்பார்ட்மெண்ட்டில் விற்கும் போது தான், அவரைக் கவனிக்க முடிந்தது. கதையில் சொல்லிய அதே வர்ணனை தான்.

இட்லி பாக்கெட்டும் நான் வாங்கியது தான்.

அப்போது எழுந்த கேள்வி தான் 'இவருக்கு ஏன் இந்த வயதில் இந்த நிலைமை?'

அந்த கேள்வி இத்தனை மாதங்களாக எங்கோ ஒரு மன மூலையில் உறுத்திக் கொண்டே இருந்திருக்கின்றது. எப்படியாவது இறக்கி வைக்க வேண்டிய தவிப்பு இருந்து கொண்டே வந்தது.

கதைக்கும் அந்த சூழலுக்கும் இருந்த ஒரே தொடர்பு, இந்த கேள்வி தான்.

'இவருக்கு ஏன் இந்த வயதில் இந்த நிலைமை?'

மற்றபடி அந்தக் கேள்வியைச் சுற்றி வரைந்த கதை வட்டம் முழுக்க முழுக்க தற்செயலானது. அதுவே படைப்பின் அந்தரங்க ரகசியம் எனலாம்.

கதை சொன்னாலும் லேசாக ஒரு மனித அருமையைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை அந்தக் கதையில் எட்டிப் பார்க்கின்றது. கிழவர் மனதிலிருந்து இறங்கிப் போய் இப்போது கதையில் உறைந்து போய் விட்டார்.


ஓர் உரையாடல்.

சிறுகதை எழுதத் துவங்கிய ஆரம்ப நாட்களில் வெறும் உரையாடலாகவே சில எழுதினேன். அது எனக்குப் பிடித்திருந்தது. காரணம் வர்ணிக்க வேண்டிய அவசியமில்லை; பாரா பாராவாக எழுதிக் கொண்டு கதை சொல்லும் உத்தி சவாலானது அல்ல என்பது என் அபி.

உரையாடல்கள் மூலமாகவே யார் பேசுகிறார்கள், என்ன சூழல் போன்றவற்றைப் படிப்பவர் மனதிலேயே அவரே உருவகித்துக் கொள்ள வைப்பது தான் உண்மையான சவால் என்று எனக்குப் பட்டது; படுகின்றது.

வெகு நாட்களுக்குப் பின் அந்த வகையில் எழுதிய ஒரு கதை இது.

கதை எழுதிய நாளுக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை ஊருக்குச் சென்றிருந்தேன். பாலாஜி காலையில் ஏழு மணிக்கு அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டான்.

அந்த ஞாயிறு அதிகாலையில் முகம் மட்டும் கழுவிக் கொண்டு போகையில், வழியில் அந்தக் காட்சி கண்பட்டது.

ஞாயிறின் பிஸியான கறிக்கடை. கறிக்கடைக்காரர் வெட்டிக் கொண்டிருக்கிறார். அவர் முன்னால், பத்திரமான தொலைவில் ஒரு நாய் வெட்டுவதையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. கொஞ்சம் தள்ளி ஓர் ஆடு கயிற்றால் ஒரு மரக் குச்சியில் கட்டப்பட்டு, தன் முறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

நடக்கும் போது, கடக்கும் போது, சடாரென இந்த மூன்று பேரும் மனதில் பதிந்து போனார்கள். அந்த காட்சி அப்படியே பதிவாகி விட்டது.

பிறகு நான் பாட்டுக்கு போய், உடல் களைத்து விழும் வரை விளையாடி, வீட்டுக்குத் திரும்பி, குளித்து, உண்டு, ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிப்படியில் உட்கார்ந்த போது, அந்தக் காட்சி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

உடனே ஒரு பரபரப்பு; இதை எழுத வேண்டும். எழுதியேயாக வேண்டும். அந்த குறுகுறுப்பு வந்து விட்டால், படைப்பாளியால் சும்மா இருக்க முடியாது. கர்ப்ப வலி போல. வெளியே தள்ளியாக வேண்டும். இல்லாவிட்டால் சும்மா உட்கார முடியாது.

எப்படி எழுதலாம் என்று யோசிக்கும் போது சில கருத்துக்கள் தோன்றின.

நாய் கறி வெட்டுபவரையே பார்க்கின்றது; ஆடும் கறி வெட்டுபவரையே பார்க்கின்றது. இரண்டுமே அவரது கருணையையே எதிர்பார்க்கின்றன. ஆனால் இரண்டின் கோரிக்கைகளும் Mutually Exclusive.

அதாவது நாய்க்கு கருணை காட்ட வேண்டுமெனில், அந்த ஆட்டை வெட்டியாக வேண்டும். அப்போது தான் சிந்தும் சிதறல்களை அந்த நாய் கவ்விக் கொண்டு பசியாறும். ஆட்டுக்கு கருணை காட்ட வேண்டுமெனில், அதை வெட்டக் கூடாது. அப்போது நாயைப் பட்டினி போட்டாக வேண்டும். கறி வெட்டுபவர் என்ன செய்ய வேண்டும்? அவர் அவர் தொழிலைப் பார்க்கிறார்.

இந்த நிலைமையில் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்ட சூழலில் சிக்கிக் கொண்ட ஆடும், நாயும் பேசினால் என்ன பேசும் என்ற கேள்விக்குப் பதிலே, இந்த உரையாடல்.

அந்த உரையாடலில் கொஞ்சம் தத்துவம் கலந்தது முற்றிலும் தற்செயல். 'ரொம்ப வலிக்குமா?' என்ற முதல் வரி தான் நான் யோசித்தது. அதைத் தொடர்ந்து வந்து விழுந்த அத்தனை வரிகளும், நடையும் முழுக்க முழுக்க அந்த நேரத்து மன வரிகள்.

ப்போது இந்த விளக்கங்கள் எதற்காகவாம்?

கதைகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. கொஞ்சம் கவனித்தால் போதும். சுவாரஸ்யமான கதைகள் சொல்லலாம் என்பதைச் சொல்வதற்கே!

படம் நன்றி :: http://www.suzannesutton.com/_borders/boy_desk_thinking.jpg

Wednesday, July 01, 2009

இன்னுமொரு இருநூறு - உரையாடல் போட்டி பற்றி!

ரியாக ஒன்றரை மாதங்களுக்கு முன் துவங்கி, பல வகைகளில், பல பதிவுகளில் விளம்பரப்படுத்தப்பட்டு, ஏறத்தாழ ஜூஜூ லோகோ திரட்டிகளின் 'இந்த வார ...' போட்டோக்களுக்கு இணையாக காட்சியளிக்க, கிட்டத்தட்ட தொடர்பதிவுகளுக்கு சிக்கிய சீமான்களை இழுத்துப் போட்டு சங்கிலியில் கோர்க்கும் வழிகளுடன், கிடைத்தவர்களெல்லாம் எழுதிக் குவித்த இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகளில் முதலில் அடிபட்டது சிறுகதை.

பல ஆரம்ப ஆர்வங்கள் தெரிகின்றன.

நல்ல வாசிப்பனுபவம் இதுவரையில் கிடைத்திராத பலரும் சிறுகதை முயற்சியில் இறங்கியதில், பல படைப்புகள் தினம் எழுதும் பொதுவான பதிவுகள் போன்றே இருப்பதில் எனக்கு வருத்தமில்லை. காரணம், இது ஒரு துவக்கம் மட்டுமே! இப்படித்தான் எதுவும் துவங்கும். மெல்ல மெல்ல எழுதி எழுதிப் பழக, சூட்சுமங்களும், நுட்பங்களும் புரியப் புரிய நல்ல கதைகள் இவர்களிடமிருந்து வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால், அதற்கு தொடர்ந்து எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது.

'சிறுகதைகளை விமர்சிப்பது எப்படி?' என்று இணையத்தில் தேடிப் பார்த்தால், மிக விளக்கமாகச் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அப்படி விமர்சனம் செய்ய ஆரம்பித்தால், 219 கதைகளுக்கும் இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகி விடும் என்பதால், அந்தளவிற்கு நேரமும் இப்போது இல்லாததால், சுருக்கமாக ஒரு பொதுவாக எழுத விரும்புகிறேன்.

இத்தனை படைப்புகள் வந்ததற்கு வெட்டிப்பயல் சொன்ன காரணத்தை விட எனக்குத் தோன்றுகின்றன வேறு சில!

2006-ல் தேன்கூடு போட்டிகள் நடத்தப்பட்ட போதை விட, இப்போது பதிவர்கள் எண்ணிக்கை மிகக் கணிசமாக அதிகமாகி இருப்பது ஒரு காரணம். அப்போட்டிகளில் மீண்டும் மீண்டும் எழுதியவர்களே எழுதினார்கள்; எழுதினோம். புதியவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

சென்ற வருடம் 'சிறில் அலெக்ஸ்' சிறுகதைப் போட்டி நடத்திய சமயத்தில், ஒப்பீட்டளவில் இன்னும் கொஞ்சம் பதிவர்கள் அதிகமாயிருந்தாலும், அங்கே ஒரு பெரிய தடைக்கல்லாய் இருந்தது ஒரு நிபந்தனை. 'கதைகள் அறிவியல் பின்புலத்தில் இருக்க வேண்டும்'. நிறைய பேரை ஜகா வாங்க வைத்தது.

உரையாடல் போட்டியில் அத்தகைய நிபந்தனைகள் இல்லை. இதற்கே இத்தனை படைப்புகள் வந்திருக்கின்றன என்றால், 'தளத்திற்கு ஒரு கதை' என்ற முக்கிய இடர்ப்பாடு இல்லாமல் இருந்திருந்தால், இன்னுமொரு இருநூறு நிச்சயமாக வந்திருக்கும் என்றே தோன்றுகின்றது. ஆனால் அவற்றில் எத்தனை சிறுகதைகளாக இருந்திருக்கும் என்பது ?-யே!

பதிவர்கள் அதிகமாகி, தமது இருப்பை அவசரமாகப் பதிவு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் எழுதியிருக்கிறார்கள் என்று தெரிகின்றது. பரவாயில்லை, மெருகேற்றிக் கொள்ளலாம்.

ரவி சொன்னது போல் போட்டி என்றதும், எல்லோரும் காவியம் படைக்கும் ஆசையில் சோகமும், விரக்தியும், மரணமும் சொல்ல முயலும் போது, ஒரு நகைச்சுவையோ, சரித்திரக் கதையோ, பேய்க் கதையோ வரவில்லை என்பது யோசிக்க வைக்கின்றது. ஒரு சம்பவத்தைச் சொல்வதா, ஒரு வாழ்க்கையையே சொல்வதா என்ற கேள்விகள் நிறைய பேருக்கு வந்திருக்கின்றன. பலர் கடைசி வரித் திருப்பத்தை முதலிலேயே வைத்துக் கொண்டு கதை கட்டியிருக்கிறார்கள் போல் உணர்கிறேன்.

மொத்தக் கதைகளில் பெரும்பாலும் தன்மை நிலையில் (First Person) எழுதப்பட்டிருப்பதன் மனக் காரணங்களைச் சிந்தித்துப் பார்க்க ஆசை.

கிட்டத்தட்ட பதினோரு கதைகளுக்கு, ஒன்றைத் தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடுவர் குழுவிற்கு என் வாழ்த்துக்கள் மற்றும் வருத்தங்கள்.

-- தொடரும்.

மேற்கூறிய அத்தனையும் போட்டியில் பங்கெடுத்தவன் (2) என்ற முறையில் எனக்கும் பொருந்தும்.