Saturday, April 18, 2009

எங்கு போனார்கள் சிலர்?

ட்டுக்குட்படா
காட்டாறு என
காவியம் பாட
எனை
அழைத்த
காவியத் தாயே
உனை
மெட்டற்ற பாட்டாய்
மேடற்ற பாதையாய்
எட்டப் போகாது
கிட்டப் போயுன்
முட்டிக் கீழ் விழுந்து
தட்டுகிறேன் பாதம்
உன்
அருள் தா!
- வசந்த்.

பழைய டைரிகளுக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்த போது, முதல் பக்கத்திலேயே எழுதியிருந்த கவிதை இது. ஆச்சரியப்பட்டு, டைரி ஆயுட்காலம் பார்த்தால், 1992 என்று போட்டிருக்கிறது.

தே பழையன தேடல்களுக்குள் இறங்கிய போது, 2002-ம் ஆண்டில் விகடன் நிறுவனத்தினர் கொண்டாடிய பவள விழா பரிசுத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட முத்திரைச் சிறுகதைகள், ஓவியங்கள், கவிதைகள் என்று மூன்று தொகுப்புகள் கிடைத்தன.

முதலில் கவிதைகள்.

படித்தவுடன் மனதில் இன்னும் நிலைத்திருக்கின்ற வரிகள் மீண்டு வந்தன.

Friday, April 17, 2009

ஆகாயக் கொன்றை.3.

மீனவன் விரித்த துளைகள் நிறைந்த வலை போல் பச்சையாய்ப் புல்வெளி விரிந்து பரந்திருந்தது. அடுக்கடுக்கான மேடுகள் மேல் முளைத்திருந்தன பெயர் தெரியாத புற்கள். தூரத்தில் ஒரு பொங்கல் வாழ்த்தின் சில்-அவுட்டில் மலைகள் படிந்திருந்தன. V வடிவப் பறவைச் சரம் நீல வானத்தின் புடவையின் ஜரிகை போல் மிதந்து கொண்டிருந்தன. மெல்லிய காற்று மேனியைத் தொட முயன்று வெகுவாகத் தோற்றன. காயத்ரி அவ்வளவு அழுத்தமாக நடந்து வந்தாள்.

ஒவ்வொரு மலராக பேர் விசாரித்தாள். எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டாள். மொழி தெரியாத மெளனப் பூக்கள் தலையாட்டித் தம்மை தெரிவித்துக் கொண்டன. மஞ்சள் நிற, ஆரஞ்சு நிற, வெண்மை நிற... இன்னும் ஏதேதோ வர்ணங்களில் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருந்த தாவரக் குட்டிகள் வீசுகின்ற தென்றலின் தழுவலுக்கு ஏற்றாற் போல் சிரித்துப் பூரித்தன. பச்சையாய்ப் பூக்கள் பூத்திருந்த பல கற்றைப் புதரில் இருந்து இயற்கை வெயில் தொட்டு வைத்த பொட்டுக்கள் போல், புள்ளிகள் இட்டிருந்த இளம் மான் ஒன்று அவளை நோக்கி ஓடி...

'கிடுகிடு'வென இடிகள் கிளைத்த சத்தம் கேட்டு வாரிச் சுருட்டி எழுந்து உட்கார்ந்தாள். நீல நிற சீரோ வாட்ஸ் கூம்பு பல்பு நடுங்கிக் கொண்டிருந்தது. இராஜ நாகம் முத்தமிட்ட உடல் போல் அறை நீலம் பாரித்திருந்தது. மூன்று கரங்களால் லேசான முனகலோடு தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த மின் காற்றாடி சுழன்று கொண்டிருந்தது. போர்த்தியிருந்த போர்வையை உதறிவிட்டு ஜன்னல் கன்னங்களைத் திறந்து வெளியே, தொலைவில் பார்த்தாள்.

காற்றில் எங்கும் குளிர்வாசம் உயிர்த்திருந்தது. மலைமுகடுகளின் மேலே சரசரவென்று இறங்கிக் கொண்டிருந்தன மழைத் தாரைகள். அவ்வப்போது கண் சிமிட்டும் மின்னல் ஒளிக் கீறல்கள் பெய்யும் மழைக்கு ஓர் வர்ணம் பூசின. கொஞ்சம் நேரம் கழித்து ஒலித்த இடித் துணுக்குகள் மழை வரும் போது தரும் மெல்லிசைப் பின்னணிக்குத் 'திடும்' என அதிர்வு கொடுத்தன. மரங்களின் இலைகளில் எல்லாம் வாராது வந்த விருந்தினர் போல் கொஞ்சம் தங்க முதல் துளி நினைத்து முடிப்பதற்குள், இரண்டாம் துளி குதித்து இறங்கி முதல் துளியை எட்டி உதைத்தது. மூன்றாம் துளி அதனைப் பின் தொடர்ந்தது. தரை நோக்கிப் பாய்ந்த முதல் துளி சாட்டென்று நிறம் மாறி, மண்ணோடு கலந்தது. அகப்பட்ட திசைகளில் எல்லாம் தன்னை நீட்டிக் கொண்டு படர்ந்திருந்த கொடிகளின் மேல் வரிசையாகத் துளிகள் நகர்ந்து கொண்டே சென்று முனையில் மோதி, ஒற்றைப் பெரும் துளியாகி 'நச்'சென்று கீழே விழுந்தன.

தேங்கி இருக்கும் சின்னஞ்சிறு குழிகளில் செம்மண் நீர் நிரம்பி சரிவுகளைப் பார்த்துப் பாய்ந்தன. வழியில் கண்ட கற்கள், பொடி இலைகள், சருகுகள், கரையும் மண் புற்றுகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு சேற்று நீர் சென்று கொண்டிருந்தது. நிலவெரியாத நள்ளிரவில் மேகக் கூட்டங்கள் மறைக்கும் பெருவானிலிருந்து கரைந்து கொண்டிருந்த காற்றை ஈரப்படுத்திக் கொண்டு, யாரும் கவனிக்காத இரவு மழை பெய்து கொண்டே இருந்தது.

காயத்ரி கொஞ்சம் எட்டி தோட்டத்தைப் பார்த்தாள். தலை சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்த குண்டு பல்பு ஒன்று, பூ வடிவ ப்ளாஸ்டிக் குடைக்குள் பத்திரமாய் மறைந்திருந்த தைரியத்தில் டங்ஸ்டன் கம்பியில் எலெக்ட்ரான்கள் பாய்ச்சி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளிக் கோடுகளை வெட்டிக் கொண்டு, அதன் எல்லையைக் கலைத்துப் போட்ட மழையால், அவளால் தோட்டத்தின் நிலையைக் காண முடியவில்லை.

ஜன்னலின் ஒரு முகத்தை மூடி விட்டு, மறு முகம் வழி குளிர் ஊடுறுவ வழி செய்து, மின் காற்றாடி ஐந்தில் ஓடுகின்றதா என்று பார்த்தாள். ரெகுலேட்டர் ஐந்தை அம்பில் காட்டியது. திருப்தியுடன், படுக்கையில் படுத்து, போர்வையால் முழுக்கப் போர்த்திக் கொண்டு, தூங்கிப் போனாள்.

திடீரென்று மழை பெய்தது. எங்கிருந்து வந்ததோ; இத்தனை நாள் எங்கிருந்ததோ; வந்து கொண்டே இருந்தது. ஓடி வந்த மானைத் தாவணித் தோகைக்குள் பொத்திக் கொண்டாள். புல்வெளியின் நடுவில் ஒரு மரம் முளைத்திருந்தது. காயத்ரியும், மானும் அதன் அடிக்குச் சென்று நின்றனர். அதற்குள் மான் நன்றாக நனைந்து விட்டிருந்தது. நடுங்கியது. ஆதுரமாய் அவள் கைகளை முட்டியது. குனிந்து அமர்ந்த அவள் ஆதுரமாய் மானின் நாணம் தவழும் முகத்தை இரு கைகளாலும் ஏந்தி முத்தமிட நெருங்க...

சட்டென மான் முகம் சரவணன் ஆனது. மான் மாறி சரவணன் ஆனான். திடுக்கிட்ட காயத்ரி, சடாரென விலகினாள். திரும்பி நின்று வெட்கம் தாளாமல் தாவணி முனை பற்றிக் கடித்தாள். சரவணன் நெருங்கி அவளது தோள்களைத் தொட்டான்.

"காயத்ரி... வெட்கமா..?"

"இருக்காதா..?"

"மானாய் இருந்தால் மட்டும் தான் முத்தமிடுவாயா..? நானாய் இருந்தால்..?"

"சரவணா..! நீ ஏன் மானாய் வேஷம் போட்டாய்..?"

"உன்னைப் பார்க்கத் தான். மனிதனாய் வந்தால் உன் வீட்டிற்குள் வந்திருக்க முடியுமா..?"

அவள் நிமிர்ந்து பார்க்கும் போது, புல்வெளியும், தொலை மலைகளும், செங்குத்து மரமும் கலைந்து, அவள் வீட்டிற்குள் நின்றாள். அருகில் சரவணன். கொஞ்சம் தள்ளி, அப்பா அமர்ந்து பஞ்சாங்கம் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் அருகில், இரண்டு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஜாதகம் பார்த்துக் கொண்டிருக்கிறார். சரவணன் சட்டென குனிந்து அவள் கழுத்தில் ஒரு முத்தமிட்டான். அவள் திரும்பிப் பார்ப்பதற்குள், அவன் மறைந்து, மான் நின்றது. அவளைப் பார்த்துக் கண் சிமிட்டி, துள்ளி ஓடி மறைந்தது. திடீரென மானின் கழுத்தில் ஒரு சின்ன மணி கிணுகிணுத்தது.

திடுக்கென போர்வையை விலக்கி எழுந்து பார்க்கும் போது, மழை நின்று, செவ்வரி ஓடிய கீழ்த்திசையில் இருந்து, பால்காரர் செலுத்தும் மணியோசை கேட்டது.

வீட்டின் பின்புறம் வளர்த்திருந்த வாழை சற்று சாய்ந்திருந்தது. கிணற்றின் முகத்தின் மேல் ஏதோ ஓர் வீட்டில் இருந்து வாரி எடுத்து வரப்பட்டிருந்த கூரை ஒன்று முக்காடிட்டிருந்தது. துவைக்கும் கல்லின் அருகில் வைக்கப்பட்டிருந்த குளியல் பக்கெட்டில் மஞ்சளாய்க் கொஞ்சம் மழை நீர் தேங்கி இருந்தது. சதுரமாய்க் கட்டம் கட்டி எல்லைக்குள் செழிப்பாய் வளர்ந்திருந்த தக்காளிச் செடிகள், கீரைகள், அவரைக் கொடி எல்லாம் நனைந்திருந்தன. அவற்றின் ஒற்றைக் கால்கள் எல்லாம் சேற்றுக் கலவைக்குள் நிழல் பதிய ஊன்றி இருந்தன.

கிணற்றின் மோட்டாரில் ஏதோ ரிப்பேர் என்று அருள் அப்பாவிடம் சொல்லி, அவர் ஆள் அனுப்புவதாகச் சொல்லி இருந்தார். ஈஸ்வர ஐயர் குளத்தில் சென்று குளித்து விட்டு வருவதாகச் சொல்லி அகன்றிருந்தார்.

அருள் அப்பா அனுப்புவதாகச் சொல்லியிருந்த 'ஆள்' வருவதற்காக காயத்ரி காத்திருந்தாள். ஊரிலேயே மோட்டர் ரிப்பேர், சைக்கிள் சரிசெய்தல், எலெக்ட்ரிக்கல் பிரச்னைகள் தீர்த்தல் போன்றவற்றில் அனுபவப் புலமை பெற்றிருந்தவன் ஒருவனே! அவனது சைக்கிள் கிணிகிணிக்காக தோட்டத்திலேயே உலவிக் கொண்டிருந்தாள்.

கிணிகிணி....!!!

தோட்டத்துக் கதவின் அந்தப்பக்கத்தில் இருந்து சத்தம் கேட்டது. காயத்ரி அவசரமாக ஆடைகளை சரிசெய்து கொண்டாள். சந்தேகம் வந்து முகத்தை அள்ளி பக்கெட் நீரில் கழுவினாள். தாவணியால் துடைத்துக் கொண்டு, கிணற்றின் திட்டில் ஒட்டியிருந்த சின்னச் சிகப்பு பொட்டை ஒட்டி ஒற்றிக் கொண்டாள். தலைமுடிகளை ஒரு புறமாய் ஒதுக்கிக் கொண்டாள்.

கிணிகிணி..!!!

தாழ்ப்பாளை விலக்கி, கதவைத் திறந்து பார்த்தாள்.

சரவணன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு...

"செல்லக் கிளி..! மாமா வீட்ல இல்லையா..?"

"ஹை..! கேக்கறதை பாரு. எதுக்கு வந்திருக்கயோ, அதை மட்டும் பாரு..! செல்லக் கிளியாமே!! "

"எதுக்கு வந்திருக்கனோ, அத மட்டும் பார்த்தா போதுமா..?" சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு, பூட்டினான். அவன் கண்களில் விஷமம் பூத்தது. அவன் உதடுகளிலும்!

"டேய்..! உதைக்கணும்டா உன்ன..!"

கதவை லேசாக சாத்தி விட்டு, அவன் உள்ளே புகுந்து விட்டான். அவள் கிணற்றின் அந்த முனையில் ஒண்டிக் கொண்டு நின்றாள். இவன் இந்த முனையில்! ஆமாம், வட்டக் கிணற்றுப் பெருவாய்க்கு முனைகள் என்று எவற்றைச் சொல்வது..?

"என்ன பிரச்னை..?"

"தெரியல! நேத்து மழை பேஞ்சு மோட்டார்ல ஏதோ காயில்ல தண்ணி உள்ள புகுந்திருக்கும் போல இருக்கு. நேத்து நல்ல மழையா..?"

"ஆமா! நல்ல மழை. நேத்து டவுனுக்கு போயிருந்தேனா, திரும்பி ஊருக்கு வரவே முடியல. நைட் புருஷோத்தமன் வீட்டுலயே தங்கிட்டு இப்ப தான் வர்றேன். வந்தவுடனே சொன்னாங்க. உங்க வீட்ல மோட்டார் பிரச்னைனு. அதான் வந்திட்டேன். ஆமா, நீ இது தான காலெஜுல படிக்கறே, உனக்கு தெரியாதா..?"

"இல்ல. இது பத்தி நாங்க படிக்கல. நேத்து நைட் நல்லா தூங்கினியா..?"

"எங்க தூங்கறது..? இப்ப எல்லாம் என்னால சரியா தூங்கவே முடியறதில்ல. நீ..?"

"ம்..! நல்லா தூங்கினேன். கனவு கூட வந்திச்சு. அதுல.." சட்டென வெட்கினாள்.

"கனவா...? சொல்லு சொல்லு. என்ன கனவு கண்ட..? நான் வந்தேனா..?" அதற்குள் மோட்டாரைப் பிரித்து வைத்திருந்தான்.

"வந்த.. வந்த..! ஆனா நீ என்ன செஞ்சேனு சொல்ல மாட்டேம்பா..!"

"அட..! அப்படி என்ன செஞ்சிருப்பேன். சொல்லுடி என் கிளி.."

"ம்ஹூம்..! மாட்டவே மாட்டேன். இரு உனக்கு காபி கொண்டு வரேன். நீ காபி குடுப்பியா, டீ குடிப்பியா..?"

"சினிமா டயலாக் மாதிரி இருக்கு. இருந்தாலும் சொல்றேன். நீ தொட்டு குடுத்தா, (சுற்றியும் பார்த்து) அதோ அந்த சேத்து தண்ணியையும் மடக் மடக்குனு குடிச்சிடுவேன்."

"சரவணா..! நான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா..?"

"ம்..! காயூ! உன் பேரைச் சொல்லும் போதே ஒரு சுகமா ஒடம்புல என்னவோ ஓடுது. அதுக்கு பேர் தான் காதலா..?"

"எனக்கும் தெரியல. ஆனா இப்ப எல்லாம் நான் எதைப் பார்த்தாலும் அதுல நீ தெரியற. எனக்கு வெட்கமாவும் இருக்கு. உனக்கு சொல்லணும் போலவும் இருக்கு. இந்த தவிப்புக்குப் பேரும் காதல் தானா..?"

"இந்தக் குழப்பம் தீரணும்னா ஒரே ஒரு வழி தான் இருக்கு..!"

"என்ன..?"

"இங்க கொஞ்சம் கிட்ட வாயேன். சொல்றேன்."

"என்ன சொல்லு..?" கொஞ்சம் சுற்றி வந்து அவன் அருகில் நின்றாள்.

சரவணன் சட்டென எழுந்து, க்ரீஸும் கருப்பும் பூசியிருந்த கைகளால் அவளது மிருதுவான கன்னத்தை பிடித்து, தேய்த்து விட்டு, தன் கைகளுக்கு முத்தமிட்டான்.

திடுக்கென பின்பக்கம் நகர்ந்த காயத்ரியின் முகம் வெட்கம் பூத்தது. எது அதிக நிறம் என்பதில் கன்ன வெட்கச் சிகப்பிற்கும், அவன் கை பூசிய கருப்பு மைக்கும் பெரும் போட்டி நிலவியது.

"போடா பொறுக்கி..! நீ ரொம்ப மோசம்..! இரு உன்னை எப்படி பழி வாங்கறேன்னு பாரு..! காஃபியோட வர்றேன்."

மெல்லச் சிரித்துக் கொண்டே, சமையலறைக்குள் சென்று பாலைக் கொதிக்க அடுப்பில் வைத்தாள். சின்னதாக சுவற்றில் ஆணிக் கொக்கியில் கொண்டை கொடுத்து தொங்கிக் கொண்டிருந்த கையகலக் கண்ணாடியில் கன்னம் பார்த்தாள்.

"பொறுக்கி.." சின்னதாகச் சொல்லிப் பார்த்தாள்.

மெல்ல இடது கன்னத்தைக் கண்ணாடியில் ஒற்றி எடுத்தாள். கொஞ்சம் போல் அந்த அச்சுக்கள் கண்ணாடியில் ஒட்டின. அழுத்தமாக அந்த கண்ணாடி அச்சுகளுக்கு ஒரு முத்தமிட்டாள்.

பால் பொங்கத் தயாராக அவசரமாக விரைந்தது.

கெரஸின் அடுப்பின் உயிர்க்குமிழியைத் திருகிக் கொன்றாள். காபி பொடி இல்லை. அப்பா வரும் சத்தம் கேட்டது. முகத்தைத் தேய்த்துக் கழுவிக் கொண்டாள். கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து இரண்டு தம்ளர்களில் நிரப்பினாள். தோட்டம் போய் நோட்டம் விட்டாள்.

அப்பா சரவணனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

"பண்ணிரலாங்க சார். இன்னும் கொஞ்ச நேரம் தான். மழைத் தண்ணீர் பட்டதில, சூடான காயில் ஒண்ணு புகைஞ்சு போயிருக்கு. ஸ்பேர் வெச்சிருக்கேன். நீங்க போய் சாப்பிட்டுட்டு வர்றதுக்குள்ள ஃபிக்ஸ் பண்ணிடறேன். நீங்க இந்த தண்ணிலயே கை கழுவிக்கலாம்.."

"சரிப்பா. சீக்கிரம் பண்ணு..! காயூம்மா, தம்பிக்கு காபி கொண்டு வந்து குடும்மா!"

என் அப்பாவி அப்பாவே..! காபி கொடுக்கச் சொல்லும் இந்த தம்பி, கொஞ்ச நேரம் முன் உன் அருமை மகள் கன்னங்களில் முத்தம் கொடுக்கப் பார்த்தான். என்ன நடிப்பு!

"பால் தாம்பா இருக்கு. அத ரெடி பண்ணிண்டேன்.." கொண்டு வந்து கொடுத்தாள்.

மோட்டார் முடித்து விட்டு, பால் டம்ளரை சொட்டு சொட்டாக காலி செய்து வைத்து விட்டு கண்ணடித்து வெளியேறினான் சரவணன். அந்த டம்ளரில் அவன் கை விரல்களின் தடங்கள் அழுக்காய் ஒட்டியிருந்தன.

Wednesday, April 15, 2009

படம் காட்டுகிறோம்.

னக்குரிய ஒரு கலைத்துறையை அடையாளம் கண்டு கொள்ளும் முன், பெரும்பாலான கலைஞர்கள் எடுத்துக் கொள்ளும் defaultஆன (தமிழில் என்ன?) ஒன்று ஓவியம். இந்த தப்பான ஆரம்பத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, பின் தத்தம் துறையை அறிந்து ஓவியத்தில் இருந்து வெளியேறி விடுகிறார்கள்.

மாருதி அவர்களின் ரியலிஸ்டிக் ஓவியங்களின் மேல், அந்த அழகான பெண்கள் மேல் கொண்ட ப்ரேமை என்னையும் ஓவியத்தில் தள்ளி, அவ்வப்போது சில வரைந்து பழகி, வாட்டர் கலர், ஸ்கெட்ச், பென்சில், லைன் ட்ராயிங்குகளில் இறங்கி, ஹெச், ஹெச்.பி, பி, அப்சரா, நட்ராஜ், கேமல் மாத்திரை கலர் பாக்ஸ், இண்டியன் இங்க், பாட்டில்கள், இண்டியன் வொய்ட் போன்ற டெக்னிக் வார்த்தைகளில் மிரள வைத்து, பிசிறடிக்கும் பிரெஷ் நுனிகளைச் சேர்த்து நூல் கட்டுதல் போன்ற நுணுக்கங்கள் புரிந்து, ஆயில் பெய்ண்டிங்கிற்கான ஆயத்தங்களில் இறங்கும் போது, தீவிரமாக எழுத்தின் மேல் கவனம் சென்று, இப்போது MS பெய்ண்ட் ப்ரெஷ் கூட தொடுவதில்லை.

சின்னஞ்சிறு காலே, சிற்சில பொழுதுகளில் வரைந்த சில படங்கள் கீழே :





படங்களைப் பார்த்து விட்டு, யாரு என்றெல்லாம் கேட்கப்படாது.

'அண்ணன் காட்டிய வழியம்மா' என்று பாடிக் கொண்டே என் தம்பியும் படங்கள் வரையத் துவங்கி என்னை விடவும்(?) நன்றாக வரைகிறான். அவனது படங்கள் :







தமிழ்ப்பறவை போன்றவர்கள் இன்னும் விடாப்பிடியாகத் தொடர்வது ஆச்சர்யம் அளிக்கின்றது.

Monday, April 13, 2009

கடிதமெழுதி!

ரு கடிதம் வரும் வரையிலும் இளங்கோவனின் வாழ்க்கை இயல்பாகத் தான் இருந்தது.

மேன்ஷனின் சிலந்தி வலை படிந்த மூலைகள். சிதறிக் கிடக்கும், உலகின் மஞ்சள் எகனாமிக் நேரங்கள். எம்ப்ளாய்ண்மெண்ட் நியூஸில் அடிக்கோடிட்ட பக்கங்கள். சுருண்ட பாய்கள். ரேண்டம் கோணங்களில் தலையணைகள். அதோ அந்த போர்வைக்குள் செருகிக் கொண்டு சொப்பன லோகத்தில் மகிழ்ந்து கிடக்கும் இளன், இளங்கோவன்.

கம்மங்குடியில் ஒரு தமிழாசிரியருக்கு மகனாகப் பிறந்த இளங்கோ, சென்னையின் திருவல்லிக்கேணி மாடியில் புரண்டு கிடப்பதன் பின்னே உள்ளது ஒரு தெய்வீகக் காதல் கதையின் சோக முடிவு. மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் திருவளர்ச் செல்வி காயத்ரியின் பாற்கொண்ட பேரன்பிற்கும், பெருங்காதலுக்கும் கிடைத்த பரிசு, ஒரு நாள் ரைஸ் மில் சந்துக்குள் கிடைத்த அட்வைஸ்.

"இளங்கோ...! இந்த ஜென்மத்துல நம்ம காதல் ஒண்ணு சேராது. எங்கப்பா துறையூர்ல இருக்கற சோமு மாமாவுக்கே என்ன கல்யாணம் பண்ணி வெக்க முடிவு பண்ணிட்டாங்க. என்ன மறந்துடு. என் வாழ்க்கையில நீ இனிமே குறுக்க வர மாட்டேன்னு நம்ம செல்லாண்டி அம்மன் மேல சத்தியம் பண்ணு..!"

சத்யசீலனான இளங்கோ, காதல் இன்புற்று விளையாடிய இடங்களான கவுண்டர் வீட்டுக் கரும்புத் தோட்டங்களையும், அய்யனார் கோயில் பம்பு செட்டையும் மீண்டும் கண் கொண்டு பார்க்க முடியாமல், ஒரு சுபயோக சுபதினத்தில் சென்னைக்கு பஸ் ஏறினான்.

சுப்பாக்கா மகன் குமாரசாமி அம்பத்தூர் தொழிற்பேட்டையின் மூலமாக இந்தியப் பொருளாதாரத்திற்காக உழைப்பது, இவனுக்கு ஒரு ஒட்டுப்புள்ளியாகி, இப்போது இவனும் ஒரு சென்னைவாசி!

ஒரு டிசம்பர் மாத முற்பகல் நாளில் பீச் முதல் தாம்பரம் வரை ஊரும் மின் வண்டியில் பயணம் செய்த போது, கம்மங்குடி காயத்ரியை மறக்கச் செய்ய ஒரு ஹேமாவைக் காட்டியது, நகரம். பின்னும் ஒரு ஆர்த்தி, ஒரு தேவி, ஒரு நேஹா...!

ந்த கடிதம் அவனது போர்வையின் மேல் எறியப்பட்டது. எல்லோரும் அகன்ற ஒரு பத்திரத் தனிமையில், இளங்கோ அந்த இன்லாண்ட் கடிதத்தை அசிங்கமாக கிழித்துப் பிரித்தான்.

முதல் அதிர்ச்சியாக அதில் இருந்தது அவன் கையெழுத்து. கொஞ்சம் வலப்புறம் சாய்ந்தாற்போல், நீல மையில், அவன் கையெழுத்தே தான். கொஞ்சம் குழப்பத்துடனேயே படித்துப் பார்த்தான்.

சென்னை.
1.
அன்புள்ள ,

இன்று அவளைப் பார்த்தேன். அதே கொலுசொலி. மூன்று முகம் பதித்த வெள்ளிக் கொலுசு எழுப்பும் அதே ஒலி. மையிடத் தேவை அற்ற கண்கள். அதே கண்கள். காயத்ரி. கம்மங்குடி காயத்ரி. என் காதலி.

கடற்கரையின் அலைகள் ஓடோடி வந்து தழுவிச் சென்ற அதே மஞ்சள் கால்கள். கரும் மச்சம் பதித்த வலது கெண்டைக் கால். காயத்ரி. கூடவே ஒரு கருப்பன். மஞ்சள் பாலியெஸ்டர் சட்டையில், மேலிரண்டு பட்டன்கள் திறந்து, காட்டு முடிகள் கலைந்திருந்த, இந்த மார்பையா என் காயத்ரி தினம் தழுவுகிறாள்...?

இளங்கோவன்.

அவனது கடிதமே தான். அதாவது அவன் எழுதியது போலவே இருந்தது. தேதியும், அன்புள்ளதன் அடுத்த வார்த்தையும் கலைந்து ஃப்ராக்டல் அலங்காரமாக காட்சியளித்தன.

யாரேனும் விளையாடுகிறார்களா..? அவனது புனிதமான காதலின் மேல் புளிக் கரைசலை ஊற்றுகிறார்களா..? ஆனால் அவனது இரகசியங்கள் செல்லாண்டி அம்மன் சத்தியத்தோடு சரிந்து போயினவே!

முதல் பக்கத்தில் 'கவிதைக் கொத்து' என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி, கீழே அம்பு துளைத்த இதயம் வரையப்பட்டிருந்த எண்பது பக்க அன்ரூல்டு நோட்டில், ஏதோ ஒரு பக்கம் எடுத்து பத்திரமாக வைத்தான். அங்கிருந்து ஒரு கவிதை எட்டிப் பார்த்தது.

அவள்
சிரித்தது போல்
நேற்று
மழை!
'கொரக்..கொரக்..'
சாக்கடைத்
தவளையாய்
நான்..!

பின்னொரு நாள் இவன் தங்கியிருந்த 'கணேஷ் மேன்ஷனின்' முப்பத்தியேழாவது அறையிலிருந்து, சுமார் நூற்றைம்பது மைல் தொலைவில் நிலை கொண்டிருந்த புயலுக்கு என்ன பெயர் சூட்டுவது என்று பண்பலைகள் கேட்டுக் கொண்டிருந்த முற்பகல் வேளையில் மற்றுமொரு கடிதம் வந்தது.

சென்னை.
13. ஜூ...

ப்ரியமுள்ள கா...

இப்படி ஆரம்பிக்கலாமா..? அவளுக்கு கடிதம் எழுதுவது சாத்தியமான ஒன்று தானா? தமிழ்ப் பண்பாட்டின் படி நான் செய்வது சரிதானா? மணமான பெண்ணை மனதில் நினைத்துப் பார்க்கலாமா..? நேற்று கூடுவாஞ்சேரியில் அவனது ஒன்று விட்ட மாமா வீட்டில் தங்கியிருக்கிறார்கள் என்று அறிந்தவுடன் என் இரத்த நாளங்களில் ஓடிய எழுபது லிட்டர் செங்குருதியும் செந்தேன் ஆனது என்று அவளிடம் சொல்லலாமா?

சொல்.

இளங்கோவன்.

யாரிடம் கேட்கிறான்..? யார் கேட்கிறார்கள்..? நானா..? இளங்கோவனுக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.

இந்த கடிதங்களை வைத்துப் பார்த்தால், என் காயத்ரியை நான் பார்த்து எழுதுவது போல் இருக்கின்றது. ஆனால், நான் அவளைச் சென்னையில் பார்க்கவேயில்லை. சத்தியச் சம்பவத்தில் தான் கடைசி.

அறையின் அறிவாளி என்று சகல விதங்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட காளியண்ணனிடம் கேட்பதாக முடிவு செய்து கொண்டான்.

"இளங்கோ..! நீ பொய் சொல்ற. இது ரெண்டும் நீ எழுதின லெட்டர்ஸ் தானே..? இதுல உனக்கு என்ன குழப்பம்..?"

"இல்லண்ணே..! நான் எழுதல. என் கையெழுத்து மாதிரி இருக்கு. எனக்குத் தெரிஞ்ச ரகசியம் இருக்கு. ஆனா சத்தியமா சொல்றேன் நான் எழுதல..!"

"ம்ம்ம்..! சனிக்கிழம தண்ணி அடிச்சியா? அப்போ தான் அடிமனசுல இருக்கற கோபங்கள், கவலைகள், ஆதங்கங்கள் எல்லாம் வெளிய வரும். அந்த நேரத்துல எழுதி இருக்க நீ...! இப்போ சுத்தமா மறந்திருக்க..! போ..! போ..!"

இந்த சுவாரஸ்யத்தை தானே சந்திப்பது, தீர்ப்பது என்று அப்போது தான் முடிவு செய்தான். இப்போது இளங்கோவனுக்கு, கடிதமெழுதி கூடுவாஞ்சேரியில் காயத்ரியை சந்தித்தானா இல்லையா என்ற ஆர்வம் அப்பிக் கொண்டது. அடுத்த கடிதத்திற்காகக் காத்திருக்கத் துவங்கினான்.

டுத்த கடிதம் வர கொஞ்ச நாட்கள் ஆனது. ரிலேட்டிவிடி தியரிப்படி ரொம்ப நாட்கள் ஆனது போல் உணர்ந்தான்.

சென்னை,
17. ஜூலை.07.

அன்புள்ள இளங்கோவன்...

இன்று அவள் தங்கியிருக்கும் வீட்டைக் கண்டுபிடித்து விட்டேன். ஒரு முதல் மாடியில், ஒரு குட்டிக் குழந்தையைக் கையில் ஏந்தி, தூரத்தில் மலைப்பாம்பாய் விரைந்த மின்வண்டியைக் காட்டிக் கொண்டிருந்தாள். உடனே ஒரு கவிதை தோன்றியது.

மலைப்பாம்பு
மின் இரயில்.
உன் கூந்தல்.

எப்படி இருக்கின்றது?

அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென என்னைப் பார்த்தது போல் இருந்தது. டீக்கடை இருளுக்குள் பதுங்கிக் கொண்டேன். சடாரென அவள் வீட்டுக்குள் சென்று மறைந்தாள். கண்டிப்பாகப் பார்த்திருக்கிறாள். உடனே அங்கிருந்து அகன்று வந்து விட்டேன். ஒன்றே ஒன்று அவளைக் கேட்க வேண்டும்.

'எப்படி இருக்கிறாய் காயத்ரி..?'

இளங்கோவன்.

அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அனுப்புநர் இளங்கோவன். பெறுநர் இளங்கோவன். தேதி ஒரு மாதம் கழித்து வரப் போகும் ஜூலை மாதம். இப்போது ஜூன்.

நானே எனக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். முந்தைய கடிதங்களில் சரியாகத் தெரியாமல் போயிருந்த நாட்களும், எழுதும் வார்த்தைகளும் இந்த கடிதத்தில் தெளிவாகத் தெரிகின்றன. எனில் அத்தனையும் நான் எழுதியன தான். ஆனால் எப்போது..? மற்றும் முக்கியமாக ஏன் எனக்கே..?

இளங்கோவன் ஓர் அழுத்தமான தீர்மானத்திற்கு வந்தான்.

இன்னும் ஒரு மாதம் இருக்கின்றது. அடுத்த மாதத்தில் எழுதப்படும் கடிதங்கள் எனக்கு இந்த மாதமே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. கடிதங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களில் காணக் கிடைக்கும் தொடர்ச்சி ஏதோ சொல்வது போல் இருக்கின்றது.

அவனுக்கு இன்னும் முற்றுப் பெறவில்லை என்று தோன்றியது. இன்னும் ஒன்று முக்கியமாக நடக்க வேண்டிய ஒன்று பாக்கி இருக்கின்றது. அது என்ன..? அடுத்த கடிதத்தில் தெளிவாகி விடும்.

மிக்க ஆர்வத்துடன் காத்திருக்கத் தொடங்கினான். இன்னும் ஜூலை 7-க்கு பத்து நாட்களே இருக்கின்றன. என்னவோ அவன் மனதின் ஏதோ ஓர் அடியாழத்தில் கொஞ்சம் பயம் சுரந்து கொண்டிருந்தது.

ந்தே விட்டது ஜூன் இருபத்தேழில்!

சென்னை
21.ஜூலை.07.

இளங்கோவன்,

நீ ஒரு செமத்தியான தோல்வியாளி. உனது திருமுகத்திற்கு இன்று கிடைத்த அலங்காரங்கள் போதுமா..? இன்னும் வேண்டுமா..? அவளது கணவன், கூடுவாஞ்சேரி மாமா, மாடி வீட்டு மனிதர்கள்... அத்தனை பேரின் கைரேகைகளையும் கிழிந்து தொங்கும் உன் முகத்தில் இருந்து கண்டு கொள்ளலாம். அத்தனை குத்து பட்டிருக்கிறாய்..!

எங்கே போனது உன் கள்ளங்கபடமில்லாத காதல்? மாற்றான் மனைவியை நினைக்கக் கூடாது என்றிருந்த உன் பேராண்மை எங்கே..? மார்க்கெட்டிற்கு வந்த மங்கை நல்லாளின் பொன் இடுப்பைப் பார்த்தவுடன், கூடுவாஞ்சேரி சூப்பர் மார்க்கெட்டை மறந்தாய்..! சென்னையை மறந்தாய்..! கால தேச வர்த்தமானங்கள் கடந்து, இரண்டு வருடங்களுக்கு முன் ஆண்டுத்திருவிழாவின் போது, ஊரே கோயிலில் இருக்க, முள் கம்பி வேலியை விலக்கி, கீற்று வேய்ந்த எட்டாம் வகுப்பு 'சி' பிரிவில் பெஞ்சுகளை ஒதுக்கி, விரித்த கதர்த் துண்டின் மேல் படுக்க வைத்து பிடித்துப் பார்த்த அதே அவளின் மஞ்சள் இடுப்பு ஞாபகம் வந்ததா?

இந்த முகத்தோடு, இந்த அவமானத்தோடு வாழ விரும்புகிறாயா..? வேண்டாம். மற..! உயிர் துற..! இற...!

இளங்கோவன்.

தெளிவாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

மூன்று நாட்கள் தூக்கம் வராமல், புரண்டு கொண்டே இருந்தான். எல்லோரும் கேட்டார்கள்.

"ஒடம்பு சரியில்லண்ணே..!"

"ஊருக்குத் தான் போய்ட்டு வாயேம்பா..!"

தீர்மானித்தான். எல்லாத் துணிகளையும் திணித்து, விடைபெற்று, சென்ட்ரல் செல்வதற்குள்... ஏதோ ஓர் உள்ளுணர்வு கூப்பிட்டது போல் உணர்ந்தான்.

கடற்கரைக்குச் சென்றான்.

அலையாடிய ஆயிரம் கால்களில், ஒரு கால் அவனது கவனத்தைச் சட்டென்று இழுத்துக் கொண்டது. அந்த வலது காலில் ஒரு கரு மச்சம். அந்தப் பெண்ணின் அருகில் நின்றிருந்தவன் அணிந்திருந்த மஞ்சள் பாலியெஸ்டர் சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் திறந்து, கொசகொசவென நெஞ்சு முடிகள் காற்றில் அலைந்து கொண்டிருந்தன.

***

(அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைவு போட்டிக்காக எழுதியது.)

குரல்...!

"தேசப் பிரஜைகளுக்கு ஓர் அறிவிப்பு.

அவசரநிலை இன்று இரவு முப்பத்தேழாவது நிலா நேரத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இயல்பான சுகங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இலகுவான சுதந்திரங்களுக்கு மட்டும் அனுமதி...நடத்தல், சிரித்தல், பேசுதல் போல! இக்காலத்தில் அதி உயர் எக்ஸ்.சி.எஃப். பிரிவு ஜீவர்களுக்கு மட்டும் மத்தியக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளலாம். ஒரே ஒரு முறை! நன்றி!"

மென் எடை ஹைட்ரஜன் குழறலான குமிழிகளைத் தொகுத்து, இரண்டாம் நிலை கோவலண்ட் பாண்ட் கொண்டு இணைக்கப்பட்ட வட்ட வடிவக் காட்சித் திரையில் செய்தி காட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. அத்தனை சேனல்களிலும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு...'தேசப் பிரஜைகளுக்கு...!'

கொஞ்சம் கொஞ்சம் நகரில் நிலவும் நிகழ்வுகளையும் காட்டினார்கள்.

வீதிகளின் முனைகளில் எல்லாம் நீல நிற லேசர்க் கற்றைகள் அதே செய்தியை மினுக்கின. முன்னதாகவே சிக்னல்கள் ஒடுக்கப்பட்டு விட்டதால் ஸ்ட்ரேடோஸ்பியரில் விரைந்து கொண்டிருந்த அதி வேக வாகனங்கள்
மீஸோஸ்பியருக்கு டைவர்ட் செய்யப்பட, அந்தரத்தில் மிதக்கும் லிக்விட் நைட்ரஜன் நிரப்பப்பட்ட 'க்ளவுட் ட்ராஃபிக்' பலூன் இயந்திரன்கள், திசைக் குழப்பங்கள் இன்றி, இருபத்து மூன்றாம் கையையும் உபயோகித்து, ஒழுங்கு செய்தன.

வெளிக் கோள்களுக்கு வெகேஷன் பயணம் சென்றிருந்தவர்களின் பயங்கள், பதற்றங்கள் தோன்றின. போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு எல்லைகளில் ட்ரைவர்கள் சுடோகு வெர்ஷன் 75ஐ முயன்று கொண்டிருந்தார்கள்.

நகரின் வீதிகளில் அவசர முத்தங்கள் பரிமாறப்பட்டன. ஒரு பெண் அவசரமாக ஓடினாள். அவளது இடுப்பில் இருந்து ஒரு ஸ்விட்ச் சரிந்தது. ரோட்டின் விளிம்புகளின் நெருக்கமாக பவர் சார்ஜர் புள்ளிகளில் இயந்திரங்கள் உணவைச் சேகரித்துக் கொண்டன.

வீட்டின் நேரம் காட்டியில் இன்னும் 'இன்னும் அரை நிலா நேரமே' என்றது.

ட்டென்று வீட்டின் அனைத்துச் சுவர்களிலும் இன் - பில்ட்டாகச் செருகப்பட்டிருந்த உஷார் எல்.இ.டி.க்கள் உயிர் பெற்றன. மூன்று பரிமாணங்களிலும், 360 டிகிரி திசைகளிலும் எளிதில் மடக்கி எடுத்துச் செல்லும் வசதியுடன், இன்ஸ்டண்ட்டாகக் கிடைக்கின்ற வீடுகள்.

"ஹாய்..!" என்றது குரல்.

எந்தப் புள்ளியில் இருந்து உற்பத்தி ஆகின்றது என்று சொல்ல முடியாத வகையில் குழப்பமாக வரும் குரல்.

பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் கவர்ச்சிக் குரல். கொஞ்சம் மென்மை பூசப்பட்ட குளிர்ச்சி கலந்த மோனலிசப் புன்னகை வகை மர்மக் குரல். நியும் மயங்கினாள் போல் தோன்றினாள்.

"இப்போதிலிருந்து தங்களது வீடு முழுதும் மத்திய ஒழுங்கு கட்டுப்பாட்டுக் குழுமத்தின் கண்காணிப்பின் கீழ் வருகின்றது. வீட்டின் அத்தனைப் புள்ளிகளையும் மாறி மாறி கவனத்தில் கொள்ளும் குரல் நான். இனி மறு
உத்தரவு வரும் வரை எனது ஆணைகளுக்கு மட்டுமே தாங்கள் உட்பட வேண்டும். அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகள், எடுத்துக் கொள்ள வேண்டிய ஸ்நாக்ஸ், பேச வேண்டிய வார்த்தைகள், சிந்திக்க வேண்டிய
சிந்தனைகள்... அத்தனையும் என்னால் கவர்ன் செய்யப்படும். மிஸ்.நி, நீங்கள் அணிந்திருக்கும் மேலாடை முதுகுப்புறம் கொஞ்சம் டைட்டாக... மன்னிக்கவும் நீங்கள் மிஸ்ஸா அல்லது மிஸஸா..?"

எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. நான் பதில் சொல்வதற்கு முன், "இரண்டு மாதங்கள் முன்பு ஆர்டர் செய்து, ஃபைபர் இழைகளால் நெய்யப்பட்டு, எலாஸ்டிக் நெகிழ்வுத்தன்மை ஏற்றப்பட்டது.." என்றாள்.

"உன்னால் எல்லாவற்றையும் பார்க்க முடியுமா..?" என்று கேட்டேன்.

"இல்லை. எனக்குப் பார்வை இல்லை. வெறும் உணர்வுகள் தான். நான் சொல்வது மனித உணர்வுகள் அல்ல.அதி உயர் அதிர்வெண் கதிர்களால் காற்றின் அணுக்களில் ஊடுறுவித் தங்கள் வீட்டை அலசிப் பார்த்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் எனக்கென ஒதுக்கப்பட்ட அலைவரிசையில் துல்லியமாகத் தரவு அறிக்கையைத் தலைமைக் குழுமத்திற்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன்..."

இப்படித் தான் நகரத்தின் அத்தனை வீடுகளையும் போல, நாங்களும் குரலின் கட்டளைகளுக்கு அடிமைப்பட்டோம். சுதந்திரமான எண்ணங்கள் அத்தனையும் மழுங்கடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட நாங்கள் டிசைன் செய்த
இயந்திரங்களைப் போலவே மாறிப்போனோம்.

என்னால் இதன் எல்லை மீறிய கட்டளைகள் பொறுத்துப் போக முடியவில்லை. அறிவின் தளத்தில், அவை எழுதப்பட்ட நிரல்களின் வழி நடத்தப்படுவதை உணர்ந்த பின்னும், அடிப்படைச் செயல்களில் இதன் தலையீட்டை
என்னால் தாங்க முடியவில்லை.

ஆச்சரியகரமாக நி குரலின் வசீகரத்திற்கு முற்றிலுமாகத் தன்னை இழந்து விட்டிருந்தாள் என்று எனக்குப் பட்டது.

"மிஸஸ் நி.. நீங்கள் இன்று செய்ய வேண்டிய வேலைகள் கொஞ்சமே! ஸ்பாஞ்ச் குளியல் எடுத்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சாறு நிரம்பிய நார்களை முப்பத்தேழு கிராம் கொறித்து விட்டு, மூன்று டிகிரி செல்ஷியஸ்
குளிர்ச்சிப்படுத்தப்பட்ட படுக்கையில் அமர்ந்து கொண்டு, தின நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருங்கள் போதும்..."

எனக்கு கட்டளை இடும் போது மட்டும் குரலில் கொஞ்சம் கடுமை சதவீதம் ஏறி இருப்பதாக எனக்குத் தோன்றும்.

"மிஸ்டர் ஆ.. இன்று தங்களிடம் நான் கொஞ்சம் இறுக்கமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. நேற்று அனுமதித்த அளவிற்கு மேலாக, சுகப் போதைப் புகை பிடித்துள்ளீர்கள். நான் கண்டறிந்து, இன்று அரசாங்கத்தால்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு குறைக்கப்பட்டு உள்ளது. நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் சுரங்க அறைகள் பற்றிய தகவலையும் நேற்றே எனது தகவல் அறிக்கையில் அனுப்பி உள்ளதால், இன்னும் இரண்டு நிலாக் கால
வேளையில், சோதனை வீரர்கள் வருவார்கள். பதுக்கி வைத்துள்ள சுகப் போதைக் கட்டுகள் பறிமுதல் செய்யப்படும். மன்னிக்கவும்..."

நீங்களே சொல்லுங்கள். இப்படிப்பட்ட ஒரு வெற்றுக் குரலின் கருணையற்ற இராஜாங்கத்தின் பிரஜைகளாக எவ்வளவு நாட்கள் தான் இருப்பது..? எனவே நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

முந்தின நாட்களில் அரசின் உயர் துறையில் பணியாற்றி, இன்று நாடெங்கும் பரவலான புழக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் டி.எஸ்.5எம்4 ரக இயந்திரங்களின் வடிவமைப்பிலும், நிரலாக்கத்திலும் பெரும்பங்கு வகித்தவன் என்ற தகுதிக்காக எக்ஸ்.சி.எஃப் உயர் பிரிவிற்கு நான் உயர்த்தப்பட்டிருந்தேன்.

இப்போது போல் அவசர நிலை நிலவும் போது, என் போன்ற உயர் நிலைப் பிரஜைகள், சாதாரண ஜனங்களுக்கு கிடைக்காத சில சலுகைகளை பெற்றுக் கொண்டு கொஞ்சம் இலகுவாக மூச்சு விடலாம்.

இன்றைய நிலையில் ஒரே ஒரு முறை மட்டுமே, மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுமத்தை என் பிரிவு மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியும் என்று தெரிந்திருப்பினும், அந்த பிரம்மாஸ்திரத்தை உபயோகப்படுத்தி விடுவது என்று முடிவு செய்தே விட்டேன். பின்னே, எவ்வளவு நாட்கள் தான் இப்படி முகம் இல்லாத குரலின் சேவகனாய் இருப்பது...?

"அன்பார்ந்த குரல் அவர்களே... நான் எக்ஸ்.சி.எஃப். பிரிவில் ஒரு மனிதன் என்பதை உங்கள் குழுமத்தின் தரவுத் தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். எனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் தொடர்பு கொள்ளும் சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளேன். இணைப்பு தருகிறீர்களா..?" கேட்டேன்.

"சோதித்து விட்டுத் தருகிறேன்.."என்றது குரல்.

கொஞ்ச நேரம் மெளனமாகக் கழிந்தது.

"கிடைத்து விட்டது. நீங்கள் உயர் பிரிவில் தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு கட்டுப்பாட்டுக் குழுமத்தைத் தொடர்பு கொள்ளும் அனுமதி உண்டு. ஆனால் ஒரு முறை தான் என்பதை நினைவில் வைத்துள்ளீர்களா..? நீங்கள் கேட்கும் உதவி தங்களுக்குச் செய்யப்படும். ஆனால் மறுபடியும் தொடர்பு ஏற்படுத்தித் தர அனுமதி இல்லை. எனவே ஜாக்கிரதையாகக் கேளுங்கள். இந்த செயலுக்கான விதிமுறைகளைப் படித்துக் காட்டட்டுமா..?" என்று கேட்டது குரல்.

"வேண்டாம். கல்லூரியில் நீ சொல்லும் விதிமுறைகள் கட்டாயப் பாடம். அறிவேன். நீ இணைப்பு மட்டும் கொடு, போதும்..!" சற்று சலிப்புடனே சொன்னேன்.

சுவரின் ஒரு செவ்வகப் பகுதி சட்டென ஒளி பெற்றது. அதில் குழுமத்தின் அதிகாரி காட்சி தந்தார். எங்கள் பகுதியின் கண்காணிப்பு அதிகாரி. சோம்பலாய்த் தெரிந்தார்.

"சொல்லுங்கள் மிஸ்டர்.ஆ..! என்ன வேண்டும் உங்களுக்கு...? தேசத்தின் அவசர நிலையில் நீங்கள் சின்னச் சின்ன வேண்டுகோள்கள் வைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கேளுங்கள். ஒருமுறை தான் இந்த இணைப்புச் சலுகை என்பதை மனதிற்கொண்டு கேளுங்கள்.."

"மன்னிக்கவும் மிஸ்டர் யே.எட்..! தேசத்தை என்ன விதமான அபாயம் சூழ்ந்துள்ளது என்பதை தாங்கள் சொல்ல முடியுமா..?"

"இல்லை. அதைச் சொல்வதற்கு எனக்கு அதிகாரமும் இல்லை; அதை அறிவதற்கு உங்கள் நிலையில் இருப்பவர்களுக்கு உரிமையும் இல்லை.."

"சரி..! எவ்வளவு நாட்கள் இந்த குரல் கண்காணிப்பு நிலை நீடிக்கும்..? சென்ற வாக்கியமே எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. குரலின் கண்காணிப்பு..." மெல்ல சிரித்தேன்.

அவர் இந்த அவதானிப்புகளுக்கெல்லாம் அசருகிறவராகத் தெரியவில்லை.

"தெரியாது. நீங்கள் இன்னும் ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா..? ஏதேனும் சலுகைகள்..?"

"ஆம்..! எனக்கு இந்த குரல் பிடிக்கவில்லை. இதன் கட்டளையிடும் தொனி, என் ஈகோவைக் கிள்ளுகின்றது. என்னை அடிமை செய்யும் இதன் வித்தை விந்தை வசனங்கள் என்னை எனது பொறுமையில் இருந்து இடறச் செய்கின்றது. குரலில் இருக்கும் குளிர்ச்சி என் மனைவியை என்னை விடவும் ஈர்க்கின்றது. இந்தக் குரலின் மேல் எனக்கிருக்கும் வெறுப்பில் என்ன செய்து விடுவேனோ என்று எனக்கே பயமாக இருக்கின்றது. எனவே தாங்கள் எனக்கு ஒரே ஒரு சலுகை செய்ய வேண்டும்.."

"சொல்லுங்கள் மிஸ்டர்.ஆ..! கண்டிப்பாகத் தங்களது சலுகை நிறைவேற்றப்படும். கேளுங்கள்.."

"எனக்கு இந்தக் குரல் வேண்டாம். இளமையான, கவர்ச்சி பொங்கும் இளம்பெண் குரல் வேண்டும்..!" என்றேன்.

***

(அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைவு போட்டிக்காக எழுதியது.)

சில கடிதங்கள்.

ப்போது தான் கடிதம் எழுதும் முறைகளைத் தேடிப் பார்த்தேன். கடிதங்களை 'அன்புள்ள' என்று துவங்க வேண்டும் என்பது விதிகள் நிரம்பிய அட்டவணையில் வி34.2.4. ஆனால் உனக்கும் எனக்கும் இடையே எப்படிப்பட்ட 'அன்பு' இருக்க முடியும்? எங்களால் விதிகளை மீற முடியாததனாலும், உண்மையிலேயே உன் மேல் எனக்கு 'அன்பு' இருக்கின்றது என்பதாலும் அப்படியே எழுதுகிறேன்.

அன்புள்ள...,

ஆமாம், உன் பெயர் என்ன? எனக்குத் தெரியாது. இங்கே பெண்களுக்கு ஜோ, ஸி, ஹா என்று தான் பெயர்கள் வைப்போம். அதுவும் நாங்கள் கூப்பிடுவதற்காக! மையக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கும், பூமியில் இருக்கும் தரைத் தளத்திற்கும் நாங்கள் வெறும் எண்கள். என் எண் என்ன தெரியுமா? 3 - 27 - 194.

நேற்றோடு நான் பிறந்து இருபத்தேழு ஆண்டுகள் ஆகின்றன. தீராத ஓட்டத்தால் கடிகாரம் சொல்கிறது. இதனிடம் எங்கள் அனைவரின் வயதும் இருக்கின்றன. மூ, ஆ, நி...அத்தனை பேருடையதும்..!

கொண்டாட்டங்கள் நடந்தன. ஸி முத்தம் கொடுத்தாள். இன்னும் ஒரு வருடத்திற்கான என் காதலியாக அனுமதிக்கப்பட்டுள்ளவள். பத்தாம் காதலி. காதல்கள் எனக்கும் அலுத்துப் போய்க் கொண்டிருக்கின்றன.

பதினேழாம் வயதிலிருந்து காதலிகள் கிடைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். வருடத்திற்கு ஒரு பெண். அவளுக்கு ஒரு குழந்தை. இப்படி நாங்கள் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் பூமியிலிருந்து எறியப்பட்டு…மூன்றாம் தலைமுறை நான். இன்னும் பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். எங்களுக்கும் உங்களுக்கும் தகவல் தொடர்புப் பாதையில் தான் எத்தனை வித்தியாசம்?

நாங்கள் உங்களுக்குத் தகவல் தர வேண்டும்; நீங்கள் எங்களுக்கு கட்டளைகள் இடுவீர்கள். மாற்றிச் செய்வதற்கில்லை.

இங்கே உங்கள் பூமியின் அத்தனை தகவல்களையும் சேர்த்து வைத்துள்ளார்கள். கேட்டால் கிடைக்கும். உங்கள் நாடுகள், உங்கள் வாழ்க்கைகள், உணவுகள்... அத்தனையும் நாங்கள் இங்கே தெரிந்து கொள்கிறோம். என்னிடம் உன் தாத்தாவைப் பற்றிய தகவல்கள் படங்களாக உள்ளன. அதை வைத்து உன்னை கற்பனை செய்து கொள்கிறேன். உனது வீட்டுக் கிணறு, மல்லிகைச் செடிகள், கோயில் கோபுரம், மழை...!

உன்னைப் பற்றி அப்பா நேற்று தான் சொன்னார்கள். நாங்கள் அங்கேயே இருந்திருந்தால், இப்போது தான் எனக்குத் திருமணம் ஆகியிருக்குமாம். நீ தான் என் மனைவியாக வந்திருப்பாயாம்.

அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

நாங்கள் பெரும்பாலும் தூங்கிக் கொண்டேயிருப்போம். எத்தனை நேரம் என்று கேட்காதே! நேரங்கள் எல்லாம் எங்களுக்கு கிடையாது. கட்டளைகள் வரும். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். ஆற்றல் சேமிப்பிற்காக! இன்னும் மூன்று தலைமுறைகள் போக வேண்டும். அதுவரைக்கும் நாங்கள் பத்திரமாக இருக்க வேண்டும்.

எங்கள் ஆயுளுக்கு எதிரிகள் இல்லை. எந்த வித விபத்துக்களும் இல்லை; பசி, பஞ்சம் இல்லை; கலவரங்கள் இல்லை; ஜாதிகள் இல்லை; ஸ்கூல் அட்மிஷன்கள் இல்லை; வேலை தேடல்கள் இல்லை; எல்லோரும் ஓரினம்; எல்லோரும் ஒரு மக்கள்; ஒரே ஒரு நோக்கம். குழந்தைகள் பெற்றுக் கொள்வது!

பூமியில் இருந்து கிளம்பும் போது ஐந்து தலைமுறைகள் ஆகும் என்று கணக்கிட்ட படி, இப்போது மூன்றாம் தலைமுறையில் நான்! என் தாத்தாவும், பாட்டியும் பூமியில் பிறந்து, பூமியை வாழ்ந்து கலம் ஏறியிருக்கிறார்கள். என் பேரனோ, பேத்தியோ புதிய கிரகத்தை அடைந்து புத்தம் புதிய மனித சாம்ராஜ்யத்தை ஆரம்பிப்பார்கள். அவர்கள் மற்றுமொரு ஆதாம், ஏவாள் என்றும் போற்றப்பட்டு, மதம் துவங்கி, கடவுளாகி...!

இடைப்பட்ட நான் யார்? என் வாழ்க்கை எதற்காக அமைக்கப்பட்டது? என் நாட்கள் முழுதும் ஓர் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் கலத்தின் லட்சியத்தில் இடைப்பட்ட ஒரு பிரதிநிதியா? இதற்காகத் தான் நான் பிறந்தேனா..?

என் பிறப்பின் அர்த்தம் என்ன? என் அர்த்தம் என்ன? நான் யார்? புத்துலக வரலாற்றில் எனது இடம் என்ன?

'பூமியில் இருந்து கிளம்பிய 'அவர்' குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறையில் வந்த 'இவர்' நமது கிரகத்தை அடைந்து, புதிய மனித சாம்ராஜ்யத்தைத் துவக்கினார். அவர் குடும்ப வரலாறு : தந்தை தாய் : …, ..., தாத்தா, பாட்டி: நான்,…..'

எனது பங்களிப்பு அவ்வளவு தான்.

ன்பான ரோஹிணி... உனக்கு இந்தப் பெயர் பிடித்திருக்கின்றதா..? நேற்று தேடிப் பார்த்துப் பிடித்தேன். பூமியில் உன் பெயர் என்னவாகவும் இருக்கட்டும். எனக்கு நீ ரோஹிணி தான்.

ரோஹிணி... ரோஹிணி...!

என்னைப் போல் முட்டாள் எங்காவது உண்டா? கலத்தில் தான் எத்தனை பெண்கள்..? லா, ஷி, ம்யூ...! அதிகபட்ச இச்சைகளோடு கொண்டாட இங்கே இருக்கும் போது, பார்க்கவே பார்த்திராத, பார்க்கவும் முடியாத உன்னை நினைக்கிறேனே ரோஹிணி.. இதன் பெயர் தான் நீங்கள் அதிகம் நாடும் காதல் என்பதா..?

தனிமையின் பயப் பிராந்தியங்களில் சில பேருக்கு இங்கே பைத்தியம் பிடித்து விடும். நினைத்துப் பார். எந்த வேலைகளும், சவால்களும், கவலைகளும், சாகசங்களும், இலட்சியங்களும், கவிதைகளும் இல்லாமல் நகர்ந்து கொண்டேயிருக்கும், இறுதி நோக்கத்திற்கு தேவையில்லாத ஆனால் அவசியமான தலைமுறை மனிதர்கள் நாங்கள். துவங்கியதும் தெரியாது; சென்று சேர்வதும் முடியாது. வாழ்க்கை முழுக்க கலத்தில் நகர்ந்து கொண்டே இருப்பது என்றால்... நான் இன்னும் தெளிவாக இருப்பது ஓர் ஆச்சரியமே!

ஆனால் நிறைய நாட்களுக்கு இப்படியே இருப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை.

ரோஹிணி, என்னைப் பற்றி நீ நினைத்துப் பார்ப்பாயா? நான் ஒருவன் இருப்பதாவது உனக்குத் தெரியுமா? இருக்காது. உன்னைப் பார்க்கச் செய்யாது இப்படி ஒரு கலத்தில் பிறக்கச் செய்து, ஏதோ ஒரு வலியை எனக்குள் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற நிகழ்வுக்குப் பெயர் தான் நீங்கள் சொல்லும் விதியா..?

பூமியில் நிலவும் அத்தனையும் இங்கே பொய். விதி, பண்பாடு, நாகரீகம், கடவுள்கள், மதங்கள், எல்லைகள், வஞ்சனைகள், பழிவாங்கல்கள், பணம்... எவற்றுக்கும் இங்கே அர்த்தம் இல்லை.

உங்கள் பூமியைச் சுற்றிலும் குளிர்ச்சியான வாயு மண்டலம் இருக்கின்றதாமே? எனக்கு 'குளிர்ச்சி', 'வாயு' இவற்றுக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. ஆனால் தகவல்களில் பார்க்கிறேன். அதைப் போல, நீங்களும் உங்கள் அற்புதமான வாழ்க்கையைச் சுற்றிலும் பல கொள்கைகளையும், பல தத்துவங்களையும், குழப்பங்களையும் கொண்ட கனமான போர்வைகளால் போர்த்திக் கொண்டு வாழ்கிறீர்கள்.

ன்புள்ள ரோஹிணி... அன்புள்ள ரோஹிணி...

மறுபடியும் மறுபடியும் உன் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கின்றது. ஒரு வேளை இதுவே கடைசியாக நான் சொல்லும் வேளையாக இருக்கலாம்.

போன கடிதத்தில், இங்கே சிலருக்கு பைத்தியம் பிடித்து விடும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அவர்கள் கலத்திற்குத் தேவையற்ற கனம். செலவு. எனவே என்ன செய்வார்கள் தெரியுமா..? அவர்களிடம் இருந்து ஆதாரமான, அவசியமான சில பகுதிகளை எடுத்துக் கொண்டு...கலத்தின் இறுதிப் பகுதியில் ஒரு வால் இருக்கின்றது. அங்கே தள்ளி விட்டு, திறந்து விட்டு மூடி விடுவார்கள்.

பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் மிதக்கும் கோடானுகோடி துகள்களில் மைக்ரோ நானோ நொடிகளில் அவர்களும் ஒரு பஸ்பத்துகளாகி காணாமல் போவார்கள்.

இரவும், பகலும் இல்லாத இந்த மிதந்தோடும் அமைப்பில் கவனங்கள் குறைந்திருக்கும் இந்த நேரத்தில், நான் இப்போது சில எதிர் வேலைகள் செய்து, வால் பகுதியில் அமர்ந்திருக்கிறேன். திறக்கும் நேரத்தைச் சரியாக அமைத்திருக்கிறேன். இன்னும் மூன்று நிமிடங்கள். அதற்குள் உனக்கு இன்னும் கொஞ்சம் சொல்லி விடுகிறேன்.

ரோஹிணி...ரோஹிணி... இந்த அர்த்தமின்மை நிறைந்த வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் இதனைப்பற்றி அறியாமல் இருந்த போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் இன்னும் நான் இங்கே கழிக்க வேண்டிய வாழ்க்கை முழுக்க இது போல் செயல்களற்ற நகர்வு தான் என்பதை நினைப்பதே எனக்கு பயம் அளிக்கின்றது.

உனக்கு மறு ஜென்மத்தில் நம்பிக்கை இருக்கின்றதா..? என்னைக் கேட்டால் 'தெரியாது' என்பேன். ஆனால் இப்போது நம்ப விரும்புகிறேன்.

மர்மமான கணக்குகள் கொண்ட ஏதோ ஒரு விதியோ, கடவுளோ என்னை இந்தக் கலத்திலும், உன்னை பூமியிலும் படைத்து விட்டது. அதன் கணக்கீடுகளில் நிகழக் கூடிய வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்று அடுத்த முறை என்னை பூமியில் உன்னருகில் படைத்து விடாதா..?

இன்னும் ஒரு நிமிடம் தான். விளக்கு மினுக்கிறது.

உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்? இங்கே தகவல் தளங்களில் தேடிப் பார்த்து, உன்னைக் கற்பனை செய்து வைத்திருக்கும் வடிவத்திற்கு… மெல்லப் பேசுவது பிடிக்கும்; அடர் ரோஸ் தாவணியும், மென் மஞ்சள் ஜாக்கெட்டும் அணிந்து கொண்டு கோயிலுக்குச் செல்லப் பிடிக்கும்; எல்லோரோடும் நட்பாய் இருப்பது பிடிக்கும்; அம்மா கையால் தோசை ஊட்டி விட்டால் பிடிக்கும்; இரவில் பயணம் செய்யும் போது, கூடவே வரும் உங்கள் ஒற்றை நிலவைப் பார்த்து ஏதேனும் பேசப் பிடிக்கும்; காதல் கவிதைகள் பிடிக்கும்; ரோஜா பிடிக்கும்.

ரோஹிணி... எங்கள் கலத்தில் நோவா சாம்பிள்கள் போல் நட்டு வைத்த ரோஜாச் செடிகளில் இருந்து சிவப்பு நிற ரோஜா ஒன்றை எடுத்து வந்திருக்கிறேன். ஈரமாக, வாசமாக இருக்கின்றது.

எனக்கு மறு பிறவி இருந்து உன்னோடு வாழ உன்னருகில் நான் பிறக்க வேண்டுமெனில், இந்த ரோஜாப் பூவுக்கும் மறுஜென்மம் நம்மோடு தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

விளக்கு எரிகின்றது. கதவு திறந்து விட்டது.

வருகிறேன் ரோஹிணீணீணீ....

"ரி..! இதான் பார்க்குக்கு வர்ற நேரமா..? தனியா எவ்வளவு நேரம் தான் உக்கார்ந்திட்டு இருக்கறது..?

"இல்ல ரோ! கிளம்பும் போது மானேஜர் கிழம் மந்த்லி அனலிஸிஸ் ரிப்போர்ட் அடிச்சுட்டு வான்னு சொல்லிடுச்சு! அவசர அவசரமா அடிச்சுட்டு வர லேட்டாகிடுச்சு..."

"ஆமா..! எப்போ பார்த்தாலும் ஒரு எக்ஸ்க்யூஸ் சொல்லிடுங்க. ஆமா, அதென்ன கைல..?"

"ஓ! சொல்ல மறந்துட்டேன். வரும் போது வீட்டுக்குப் போய்ட்டு வந்தேன். அம்மா தான் குடுத்தாங்க. 'ரோஹிணியைத் தான பார்க்கப் போற. தோட்டத்துல ரோஜாச் செடில பூ பூத்திருக்கு. என் மருமகளுக்கு கொண்டு போய்க் குடு. சீக்கிரம் வந்திடுடா. ரெண்டு வாரத்துல கல்யாணம் பண்ணப் போறீங்க. அதுக்குள்ள என்ன தான் பேச்சோ..?'னு ஆரம்பிச்சாங்க. பூவ மட்டும் பிச்சிட்டு கொண்டு வர்றேன்.."

"எங்க வீட்லயும் இதே தான் சொல்றாங்க. ஆமா, போன தடவ வந்தப்போ உங்க வீட்ல ரோஜாச் செடியையே நான் பார்க்கலயே? இப்ப எப்படி புதுசா வந்துச்சு..?"

"அதான் எனக்கும் தெரியல! நேத்து வரைக்கும் இல்ல. இன்னிக்கு திடீர்னு புதுசா வந்திருக்கு. கடவுள் நமக்காக நம்ம மேரேஜுக்காக அனுப்பி வெச்சிருக்காருன்னு நினைக்கறேன்.."

"போதும் வழிஞ்சது! கிளம்புங்க. படம் போட்டுடப் போறான்..."

***

(அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைவு போட்டிக்காக எழுதியது.)