Saturday, January 02, 2010

பிலிப்ஸ் இரவில் ஜனித்த சிம்பொனி!



முன்னொரு நாளின் இரவில் மின்சாரத்தைத் தின்று மின்னல் வெளியிட்ட மழை ஒன்று இரவின் ராகத்தில் பெய்து கொண்டிருந்தது. சாலைகளில் ஈரம் சறுக்கிக் கொண்டு போனது.

ஒரே ஒரு பேருந்து மட்டும் நனைந்து கொண்டிருந்த புறநகர் நிலையத்தில் சக்கரத் தொப்பியின் மேல் கால்கள் வைத்து கம்பிகளில் நடக்கும் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தேன்.

தூரத்துப் பச்சை வயல்கள், அடித்துப் பெய்த ஈரச் சிதறல்களுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தன. கொண்டல் சரங்களின் இடைவிடாத மறைப்புகளுக்கு இடையில், குளிர்ந்து கொண்டிருந்த தனியான ஒரு வீட்டில் மெழுகுத் தலைகள் ஜன்னல் கண்ணாடிகளில் படர்ந்தன.

குட்டி விளக்குகள் மின்னிக் கொண்டிருந்த இந்த கடைசிப் பேருந்தைத் தவிர, பிரதேசத்தை கறுப்பாய் இருள் கரைத்த மழை கழுவிக் கொண்டிருந்தது. வாகனர்கள் பாதிக்கதவு அடைத்திருந்த தேநீர்க் கடையில் பேசிக் கொண்டிருந்தனர். கடையின் ஆதி வானொலி ஒன்றிலிருந்து 'என் வானிலே ஒரே வெண்ணிலா...' மண்ணெண்ணெய் விளக்கின் திரியிலிருந்து கசியும் புகையோடு நழுவிக் கொண்டிருந்தது.

என் கைகளில் பாலிதீன் காகித உறையில் பத்திரமாய்ப் பதுக்கி வைத்திருந்த சான்றிதழ்கள். சட்டைக்குள் ஒளித்து வைத்தேன். ஜன்னல் கம்பிகளில் மழைத்துளிகள் தெறித்த கொலுசு மணிகள் போல் தனித்தனியாக நகர்ந்து, ஒன்றாகிச் சொட்டின.

படிக்கட்டுகள் பதற்றமாகும் அதிர்வில் அவள் ஓடி உள் ஏறி வந்தாள். கூட்டத்தை எதிர்பார்த்தாளோ, தனிமைக்குத் தயாராய் இருந்தாளோ, ஒற்றையனாய் என்னைக் கண்டதும் ஓர் அதிர்ச்சி அவளது அழகிய முகத்தில்!

நெற்றியிலிருந்து இறங்கிச் சுருண்டிருந்த மெல்லிய கொத்து ஒரு கன்னத்தை வளைத்திருந்தது. மஞ்சளில் பூக்கள் வரைந்த உடையில் கைப்பை சுமந்திருந்தாள். கண்ணாடி வளையல்கள் சிணுங்க முகத்தில் வந்து விழுந்த அடர்ந்த கற்றையை பின்னே ஒதுக்கி விட்டாள். எதிர் வரிசையில் ஒரு ஜன்னலோரத்தில் அமர்ந்து சுருட்டி வைத்து, முனைகளில் ஒட்டியிருந்த பத்திரிக்கையைப் பிரித்துப் படிக்கத் திடங்கினாள். அவள் ஜன்னல் சாத்தியிருந்தது.

எங்கிருந்தோ பிறந்த ஒரு துளி, அவள் பின்னங்கழுத்தில் பூத்து, மெல்ல நகர்ந்து, சுற்றி, தங்கப் பாள முதுகு இறக்கத்தின் நுனியில் கால் வைத்துச் சரேலென சரிந்தது. கைகளோடு முத்தமிட்ட பிஞ்சு முடிகள் ஒரு நவீன ஓவியம் போல் கலைந்திருந்தன. மென் மஞ்சள் முதுகோடு ஒட்டி மிக வெள்ளையாய் ஒரு பட்டை, புகை போல் தெரிவதை உற்றுப் பார்ப்பதற்குள், திரும்பிப் பார்த்தாள்.

அவள் இரு புருவங்களுக்கும் இடையே மிக மிக இலேசான கருப்பாய் ஓர் இணைப்புப் பாலம் தோன்றியிருந்தது. மூக்கின் நுனியில் சிவப்பாய் ஒரு கோபம் கிளம்பத் தயாராய் இருக்க, செழித்த உதடுகள் சூரியனைப் பிளந்தாற்போல் ஜொலித்தன. இமைகளின் ஒவ்வொரு கேசக் குட்டிகளிலும் ஒவ்வொரு மழைத்துளி ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தது. கீழே உயிர்த் துடிப்போடு உருண்டு கொண்டிருந்த கறுப்பு குலோப் ஜாமூன்களாய் இரு விழிகள், என் மேல் கேள்விகள் எறிந்தன.

'தனிமையிலே... வெறுமையிலே... எத்தனை நாளடி இளமையிலே..!'

விரல் நீட்டி தலை சாய்த்து எச்சரித்தாள். துளிக் கொஞ்சமாய்த் தெரிந்த பொன் மார் பின்புலத்தில், அந்த விரலில் மருதாணி பூசியிருந்தாள். கவிழ்ந்த அந்த செந்தொப்பி கவ்விய விரல் நுனி ஜில்லென்று சுருண்டிருந்தது.

கண்ணாடி முகமூடிகள் கழண்டிருந்த சின்ன வெளிச்சங்கள் மட்டும் நிறைந்திருந்த பேருந்தின் வலது கன்னம் வைப்பரால் தேய்த்துத் தேய்த்துக் துடைக்கப்பட்டுக் கொண்டேயிருக்க, தளர்வுறா மாமழை தன் ஆயிரம் ஆயிரம் அம்புகளால் மீண்டும் மீண்டும் சேதப்படித்திக் கொண்டேயிருந்தது. அத்தனை ஜன்னல்களும், அழுக்கு படிந்த பச்சைத் துணிகளால் மறைக்கப்பட்டிருக்க, ஓர் அன்றலர்ந்த மஞ்சள் ரோஜா போல் அவள் பார்த்தாள்.

(...)

Friday, January 01, 2010

I see you....Avatar!



மாலை மங்கி மெல்லிய வசந்தத்தின் வாடைக்காற்று வீசிக் கொண்டிருந்த போது, அவதார் பார்த்தேன்.

அவதார் ஓர் அற்புதப் கனவுநிலம். பண்டோராவின் மின்னும் மரங்களும், ரேடியம் ஜொலிக்கும் பாதைகளும், ஹோலி கொண்டாடிய பறவைகளும், பஞ்சுப் பூக்களாய் மிதக்கும் ஒளிப் பூச்சிகளும் நீல 'நவி'களும் இந்த இரவின் கனவுகளில் என்னை ஆக்ரமிக்கின்றன.

மிதக்கும் மலைகளில் இருந்து சாரல் அருவிகள் முகில்களிலிருந்து நேரடியாகப் பொழிகின்றன. பிரார்த்தனை மரத்தின் பிசிறான வெள்ளி நார் இழைகள் மிருதுவாக மேனிகளில் ஊடுறுவுதல் எனக்குள் சுகமாய்ப் பிறக்கின்றது.

வெயில் கூட இலேசாகத் தான் பாய்கின்றது. தொட்டால் சிணுங்கும் சுழல் பிங்க் மலரிலைகளும், வானெங்கும் பிரம்மாண்டமாய் நிறைந்திருக்கும் மற்றொரு கோளும், சில சந்திரன்களும்.... துல்லிய பிரமிப்புகள்.

ஒவ்வொரு இழையையும் பார்த்துப் பார்த்து நெய்தெடுத்த பட்டுப் பிரளயம் போல் வந்திருக்கின்றது படம். தவறாமல் மூன்று பரிமாணத்தில் மட்டும் பாருங்கள். ஓர் உன்னத அனுபவம் பெறுவீர்கள்.

ஃபேண்டஸி எழுத்தாளர்களுக்கெல்லாம் கேமரூன் ஒரு வலுவான சவால் வைத்து விட்டார். இனி கற்பனை உலகத்தைச் சிருஷ்டிக்கும் போது, 'அவதாரை'த் தாண்டிச் செல்வது மட்டுமே இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

Thursday, December 31, 2009

வாழ்த்திய வாழ்த்தொலி போய்...



புத்தம் புதிய ஆயிரம் ஆண்டுகளின் முதல் பத்தின் கடைசிப் பெளர்ணமியில் என்னைச் சுற்றி இலேசான குளிர் பறக்கிறது. பின்புறத் தோட்டத்தில் விரிந்த வாழை இலைகளில் நிலவொளி வெள்ளம் பாய்ந்துச் சேகரமாகி, நடுப் பட்டையில் ஓடி நுனியில் சொட்டுகின்றன. செதுக்கிய இலைகளில் ஒளிக் குளங்கள் தேங்கிக் காற்றுக்குத் தத்தளிக்கின்றன. தென்னங் கீற்றுக்கள் சரிந்த வாட்களாகிக் கூர்மைகளில் வெள்ளி பூசியிருக்கின்றன. கொஞ்சம் சாய்ந்த ஒற்றைப் பலா மரத்தின் ஒரு 'சிறு காம்பில் தொங்கும் பலாக்கனியை' எறும்புகள் கீறியிருக்க, வெடித்ததில் மெல்லிய இனிப்பு மணம் காற்றில் சுகமாய்ப் பரவுகின்றது. வாசலொட்டிய சிற்றோடையில் குளிர்ந்த நீர் சலசலத்து ஓடுகையில், அசைந்தாடும் காதல் வடிவ இலைகளில் நீர்ச் சுட்டிகள் உள்ளங்கையில் பாதரசத் துளிகள் போல் மின்னுகின்றன. மதில் பக்கத்தில் பூத்திருக்கும் செம்பருத்திப் பூக்களுக்கும், பெயர் தெரியாத அந்த மஞ்சள் மலர்களுக்கும், இரவின் கரும் இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டு 'ட்ரூச்சு..ட்ரூச்சு..' எனச் சத்தமிடும் பூச்சிகளுக்கும், மழை வாசம் உணர்ந்தாலே 'கொர்ரக்...கொர்ரக்...'காய் உற்சாகக் கூச்சலிடும் சின்னத் தவளைகளுக்கும், கம்பி வேலி மேல் நின்று கொண்டு சின்னத் தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் துளிக் கண்களை இமைத்து, தன் துயர் நனைந்த இராக்காலக் கனவுகளைக் கூவும் வயலட் நிற வெல்வெட் சிறகு மைனாவுக்கும் நாளை புத்தாண்டு என்பது தெரியுமா?

ஆனால், நமக்குத் தெரியும்.



தன் கடைசி மணிகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கி.பி.2009 எனக்கு என்ன அர்த்தம் ஆகின்றது என்பதைக் கொஞ்சம் - கழுத்து வலித்தாலும் பரவாயில்லை என்று - திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்.

எழுதுவதைப் பொறுத்த வரை கொஞ்சம் வருத்தமும் நிறைய சந்தோஷங்களும் கலந்திருந்தன.

சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு பத்திக்குப் பாதி பதிவுகள் குறைந்து விட்டது என்பதில் வருத்தம் இருக்கின்றது. காரணமும் புரிகின்றது. கடந்த வருடத்தின் சந்தோஷ மனநிலை இந்த ஆண்டு முழுதுமே இல்லை. மென்பொருளாளனுகே ஆன பொருளாதாரப் பயங்கள், தனிக் கவலைகள் போன்றவை இருந்தன. எழுதுவதை முதன்மைப்படுத்தி, கவலைகளை நியூரான் குழப்பத்தின் இருளான பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தேன்.


மகிழ்ச்சி பல காரணங்களால்!

செறிவான சில சிறுகதைகள் எழுத முடிந்தது.

மனையியல்.
கோடானு கோடி!
கிளி முற்றம்.
பொன்னி.
ஓர் உரையாடல்.
Blackhole..!

பயணக் கட்டுரைகள் எனக்கே பிடித்த மாதிரி நன்றாக வந்தன.

காவிரிக் கரையோரத்திலேயே...
சுதந்திர நாளில்...மதுரையில்..!
ஏப்ரலில் இருந்து மேக்கு ஒரு பயணம்!
பண்ணாரிக்குப் போனேன்.

உரையாடல் அமைப்பினர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இருபதில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு கதையை எழுதியதில் மற்றொரு மகிழ்ச்சி. பாஸ்டன் பாலா அதை முதல் மூன்றுக்குள் வைத்தது எதிர்பாராத இனிப்பு.

புதுக்கவிதை இயக்கம் தோன்றி ஐம்பது ஆண்டுகள் ஆகியதைக் கொண்டாடிய 'நவீன விருட்சத்தின்' செப்டம்பர் மாதக் காலாண்டு இதழில், யோசிப்பவர் மற்றும் அனுஜன்யாவின் சிறுகதைகளுக்கு இடையே நெருக்கிக் கொண்டு 'மாமா எங்க' கதையும் அச்சில் வந்தது. யோசிப்பவரின் ஆலோசனையின் படி அனுப்பி வைத்ததால், 'யுகமாயினி'யில் 'முதல் அறிவியல் புனைகதை' வெளியானது.

மும்பையில் இருந்து 'எதைப் பற்றியும் பற்றாமலும்' நவீனக் கவிதை எழுதும் 'யூத்' அனுஜன்யா, 'சுவாரஸ்யப் பதிவர்களில்' ஒருவனாக என்னையும் டிக் செய்தது ஆச்சர்யக் களிப்பை அளித்தது.

வலைச்சரத்தில் அ.மு.செய்யது என்ற பதிவர் 'காலத்தை வென்றவர்கள்' என்று இந்தக் கதைகளை வைத்துச் சொல்லியிருந்தது கூச்சம் கொடுத்தது. இவர் படிக்கிறார் என்பதே இவர் சொல்லித் தான் தெரிந்தது. இது போன்று எத்தனை பேர் சைலண்டாகப் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

பிறந்த நாளுக்கு முன்னாள், நீல.பத்மநாபன் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்று வந்ததையும், அடுத்த நாள் நாகர்கோயிலில் மீனாட்சிபுரத்திற்குப் போய் ஜெயமோகன் அவர்களைப் பார்த்து, ஒரு கிட்கேட் மட்டும் கொடுத்து, மதிய உணவுடன் ஆலோசனைகளையும் பெற்று வந்ததையும் மறக்க முடியாது.

தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று மிக நாட்களாக விருப்பம் இருந்தது. இயற்பியல் கட்டுரைகள் எழுதி வந்தாலும், அவை அறிவியல் என்ற வகையின் கீழ் வரும். ஏற்றாற்போல் சிங்கைப் பதிவர்கள் அமைப்பு 'மணற்கேணி - 2009'ல் கட்டுரைகள் கேட்க, பணியாற்றும் துறையின் அடிப்படைகளை முடிந்த அளவுக்குத் தமிழ்ப் படுத்தி அனுப்பி வைத்தேன். முடிவுக்காகக் காத்திருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும்.

இந்த ஆண்டின் மிகப் பெரிய சாதனையாக கருதுவது, நேனோரிமோ. முதன் முதலாக ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதும் சவாலை எனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு, எழுத உட்கார்ந்தேன். செப்டம்பர் மத்தியில் இருந்து ஆரம்பித்து, அக்டோபர் மாதம் முழுக்கவே ஒன்றும் க்ரியேட்டிவாகத் தோன்றவேயில்லை. ஜெயமோகன் அவர்களிடம் கேட்ட போது, 'அவ்வளவு தான். சரக்கு காலி' என்றார். 'சரிதான்' என்று கொஞ்சம் துக்கத்தோடு இருந்தேன். 'அது ஒரு பனித்திரை' என்று காட்டி மீண்டும் அடைத்திருந்த பாட்டில்களை நுரைகள் பீய்ச்சியடிக்கத் திறந்து விட்டது, நேனோ. என்.சி.சி. கேம்ப் அனுபவங்களைக் களமாக்கிக் கொண்டு எழுதத் துவங்க காதல்களும், மோதல்களும், கிண்டல்களும், சாகசங்களுமாக அந்த நாவல் அருமையாக வந்து கொண்டிருக்கின்றது.

Na-No-Wri-Mo.
NaNoWriMo.Update.1
NaNoWriMo.Update.2
NaNoWriMo.Update.3
NaNoWriMo.Update.4
NaNoWriMo.Update.5
NaNoWriMo.Update.6.Final

சில முயற்சிகள் குறைப்பட்டும் போயின. 'ஆகாயக் கொன்றை' என ஒரு குறுநாவல் எழுதத் துவங்கி மூன்று சேப்டர்களில் நிற்கின்றது. முடிக்க வேண்டும்.

என்னமோ நிறைய எழுதிக் கிழித்தவன் போல் சிறுகதை எழுதுவது பற்றிச் சில பதிவுகள் எழுதினேன். பாறைகளில் பதுங்கிய விதை போல் சில மனங்களில் ஒளிந்திருக்கலாம். மழை நுனி தொட்டதும் முளைக்கலாம். முதல் துளி விழும் நொடி தான் ரகசியம்.

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!
சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.
புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.
நானும் எழுதுகிறேன் 10!

வருடக் கடைசியில் ஈரோடு பதிவர்கள் சங்கமம் மற்றுமொரு திருப்புமுனை. மேடையில் நூற்றுக்கும் மேலான இரட்டைக் கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் உள்ளங்கை வேர்க்காமல் பேச முடிகின்றது என்பதை அறிந்து கொண்டேன். அதற்கு முழுக் காரணமும், பேசுவதை முன்பே எழுதிக் கொண்டு சென்றது தான். எனவே பேட்டை மாறாமல் ஓட முடிந்தது. பேசிய உரையைப் படித்துப் பார்த்தால் ஒன்று தெரியும். அப்பட்டமான வாத்தியார் ஸ்டைல். அதற்காகவும் வாத்தியாருக்கு மேலும் சில நன்றிகள்.

இந்த ஆண்டு முழுதும் படித்தது என்று பார்த்தால் மிகக் குறைவு தான். வலைப்பக்கங்களைப் படிப்பதைத் தவிர, புத்தகங்கள் நிறைய படிக்கவில்லை. நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படைப்பு எழுதும் ஐடியா இருக்கின்றது. இது நம் எழுத்தாளர்கள் அனைவருக்குமே இருக்கும் என்று நினைக்கிறேன். பிரிவினை அத்தனை சம்பவங்கள் நிறைந்த உணர்ச்சிபூர்வமான வரலாறு. பதினெட்டாம் நுற்றாண்டின் மத்திய ஆண்டுகளில் பம்பாயின் எல்லைக் குடிசைகளில் வாழ்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறக்கும் பையனின் வாழ்க்கையை, கூடவே பிறந்த இந்திய ரெயில்வேயுடன் பின்னிப் பிணைந்து 1947-ல் உச்சக் காட்சியுடன் நிறைவு செய்ய ஆசை.அதற்காக வாங்கிய புத்தகங்களை மட்டுமே படித்தேன். தோதாக, ஜெயமோகன் அவர்களும் காந்தியைப் பல கோணங்களில் எழுத, சேர்த்து வைத்து விட்டேன்.

வலை மற்றும் அலுவலகம் தாண்டிய ஒரு குடும்ப வாழ்க்கை என்ற ஒன்றுமிருக்கின்றது. அதில் இவ்வாண்டின் பெருமகிழ்வாக ஒரு சொந்த வீடு வாங்க முடிந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஐ.சி.எஃப். செல்லும் 47-டியில் இரண்டு நாட்கள் சாப்பிடாததால் மயங்கி விழுந்தவனுக்கு இன்று ஒரு அடர்ப் பச்சைப் பெய்ண்ட் அடித்த வீடு சொந்தம் என்பதற்கு ஆச்சரியப்படுவது இயல்பே என்றான் சீனி. எஸ்.பி.ஐ. கட்டிய ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறோம் என்பதாகவே நான் உணர்கிறேன். என்ன, மாத வாடகை தான் கொஞ்சம் அதிகம்!

தமிழ்ப்பறவையுடன் ஏறத்தாழ வருடம் முழுக்க தினம் பேசினேன். யோசிப்பவர் அவர் முயற்சிகளில் என்னையும் இழுத்துக் கொள்கிறார். அதற்கு என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை.

அனலில் எரிந்த முத்துத் தமிழன் மறக்க முடியாமல் செய்து விட்டான். ஆஸ்கார்த் தமிழன் அன்பையும், அடக்கத்தையும் பறைசாற்றினான்.

மொத்தத்தில் 2009 கொஞ்சம் நடுக்கத்திலேயே வைத்திருந்தாகவும் எழுதுவதில் கொஞ்சம் தனித்த நடை வந்திருப்பதாக உணர்வதாகவும் கடந்து கொண்டிருக்கின்றது. வரும் ஆண்டிற்கென சில கனவுகள் வைத்திருக்கிறேன்.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Cheeeeeerzzzzz and Rock U Buddiezzzzz.....!!!!!!

Wednesday, December 30, 2009

முரண் உணர்.(A)

ஸ்ட்ராபெர்ரி நிறம் விரும்புவாள்.
சீதாப்பழத்தைத் தோல் வரை தின்பான்.
பாயும் ரயிலுக்குள் பின்னே நடப்பாள்.
கடப்பாறை நீச்சல் தெரிவான்.
தோல் என்பதால் ஷூ வெறுப்பாள்.
தனியாய் மலையேற்றம் போவான்.
தோழியிடம் பிணக்கென்றால் நிலவுடன் சண்டையிடுவாள்.
ஹாங்காங் படப் பேய்களின் ரசிகன்.
பப்பி1, பப்பி2 என்று பூனைகள் வளர்க்கிறாள்.
கண்களைக் கட்டி ரேடியோ அஸெம்ப்ளிங் செய்வான்.
நகங்களை ரத்தம் வரை கடிப்பாள்.
வாட்ச் கட்ட மாட்டான்.
கணக்கில் எப்போதும் அவள் நூறு.
டாய்லெட்டில் புத்தகம் படிப்பான்.
ஊட்டியில் பாட்டி வீட்டுக்குப் பக்கத்தில் முதல் தற்கொலை பார்த்தாள்.
லாரிக்கடியில் பிராய்ந்ததில் வலதுகாலில் அவனுக்கு ஒரு தழும்பு.
வானம் பார்த்து மேகம் எண்ணுவாள்.
பஜ்ஜி படர்ந்த தந்தியை உதறிப் படிப்பான்.
45க்குள் ஒருமுறை அண்டார்ட்டிகா அவள் ஆசை.
டாம் சாயருக்கு ஒரு ஃபேன் ஃபிக்ஷன் அவன் கனவு.
மழையென்றால் அவளுக்கு ஆஹா.
மழையென்றால் அவனுக்கு ஆகா.
கார்த்திகை கடைசி முகூர்த்த முன்னிரவில்,
மண்டபத்தில் டெக்கெடுத்து
'சிங்கார வேலன்' ஓடுகையில்,
சாத்திய அறைக்குள்
பூக்கட்டில் நடுங்க,
அவர்கள்
வேகமாய்ப் புணர்ந்தனர்.

***

(உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது.)