Saturday, June 28, 2008

தலைமுறைகளுக்கு முன்னால்...!

ஹைவே ஜங்க்ஷனில் இருந்து இரண்டு நிமிடம் தொலைவில் இருந்தோம். மெயின் ரோட்டில் இருந்து விலகி, சைட் ட்ராக்கில் போய், ஒரு மோட்டலில் நின்றது. வேறு சில வண்டிகள் நின்றிருந்தன. குழுமத்தில் ஒன்றாக நான் பயணம் செய்யும் கலமும் நின்றது.

"ஸார்! வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிட்டுக்கலாம். டாய்லட் இருக்கு. யூஸ் பண்ணிக்கலாம்.." பக்க விளிம்பில் குரல் தேய்ந்து மறைந்தது.

பத்து நிமிடம் வண்டி நிற்கும்!

எந்தப் பத்து நிமிடத்திற்கு அப்பால், கலம் கிளம்பும்? முன்னால் போயா, இல்லை பின்னால் போயா..?

"Tஎ3@65gH..! உங்களது மெடிக்கல் ரிப்போர்ட் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..! பெற்றுக் கொண்டு, எங்கள் ஸ்கேனரில் ஒரு ஃபேஷியல் அக்னாலெட்ஜ்மெண்ட் அட்டாச் செய்து விடுங்கள்..! எங்கள் சர்வீஸை பயன்படுத்துவதற்கு நன்றி!" வயர்லெஸ் ரிஸீவரின் இன்பாக்ஸைத் திறந்தேன். செக்யூரிட்டி ரீஸன்களுக்காக அயனைஸ் செய்யப்பட்டு அட்டாச் செய்யப்படிருந்த ஃபைலை எடுத்தேன். டீ அயனைஸ் செய்வதற்காக சேர்க்கப்படும் பேஸின் இரகசியக் குறியீட்டைச் சொன்னவுடன், க்ரீன் சிக்னல் எரிந்தது. அதன் குளிர்வெப்ப பின்புலத்தில் என் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு, ரிப்ளையாக அனுப்பப்பட்டது.

கருவியை அணைத்தேன்.

ரிப்போர்டை எடுத்தேன். ரீடரின் க்ளிப்பில் செருகி வைக்க, ரீடர் படிக்கத் தொடங்கியது.

"Tஎ3@65gH..! AD4534 செப்டெம்பர் 27 அன்று உங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மெடிஸினரி அனலிசிஸ் ரிப்போர்ட் இது! உங்களுக்கு அல்ஸர் இருப்பது உறுதியாகி உள்ளது. இது மாதாந்திர ரிப்போர்ட்களின் ரிசல்டுகளை உறுதிப்படுத்துகிறது. நீங்கள் எவ்வளவு சீக்கிரம் டிஸீஸ் அண்ட் அனலிசிஸ் விங்கில் உங்கள் பெயரைப் பதிவு செய்கிறீர்களோ அவ்வளவு நல்லது. இன்றேல், அரசாங்கத்தின் கவனத்திற்கு ரிப்போர்ட் எடுத்துச் செல்லப்படும். நன்றி..!" ரீடர் தூங்கப் போனது.

நான் அவசரமாக என் சீஃபை அழைத்தேன்.

'Tஎ3@6gH! சீஃப் தற்போது உங்களால் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. எனவே என்னைத் தாங்கள் கருத்தில் கொள்ளலாம்..!" ரோப்_54G மாடல் கூறியது.

சீஃப் அவ்வளவு சீக்கிரம் சிக்கக் கூடியவர் அல்ல. அவருக்கு இருக்கும் வேலைகள் அத்தகையன. எனவே சீஃப் போன்ற அத்தியாவசிய பிரஜைகளுக்காக சிமுலேட்டட் ரோபோக்கள் டிசைன் செய்யப்பட்டு உள்ளன. ரோப்_54G அத்தகைய மாடல்.

இந்த மாடல்கள் தமது உரிமையாளரோடு நெருங்கிப் பழகும். அவரது உணர்ச்சிகள், கோபங்கள், தவறுகள், ஆசைகள், முடிவெடுக்கும் நுட்பம், க்ரைசிஸ் அனலைஸ் செய்யும் பாங்கு யாவற்றையும் தமது மெமரியில் பதிந்து கொள்ளும். செட் செய்யப்பட்ட டைமர் காலத்திற்குப் பிறகு இந்த மாடல்களை மட்டுமே ஒரு குறிப்பிட்ட ரேங்கிற்கு கீழ் உள்ள ஆபீஸர்கள் தொடர்பு கொள்ள முடியும். சுருங்கக் கூறின், ரோப்_54G தான் எனது இப்போதைய சீஃப்.

ஒரே வித்தியாசம். சீஃப் நல்ல சிவப்பாக இருப்பார். கிள்ளினால் ரத்தம் கட்டிக் கொண்டு சிவப்பாகத் தெரியும். சிரிப்பார். இந்த சிமுலேட்டட் சீஃப்க்கு சதையும் கிடையாது. ரத்தம் கிடையாது. லேசாகத் தட்டினால், 'நெர்வ் நம்பர் 0x234எ சிக்னல் ரிஸீவ் செய்யப்பட்டது. 0.3 ஆம்பியர் கரண்ட் பாஸ் ஆகியுள்ளது. மெமரி பாங்க் ஃபார் சிஸ்டம் ஸ்டேட் அப்டேட் செய்யப்பட்டு விட்டது. உங்களது அடுத்த எக்ஸைடேஷன் சிக்னல் என்ன?' என்று கேட்கும், உணர்ச்சியே இல்லாமல்! பொம்மை தலைவர்.

"சீஃப்! இன்று அர்ஜண்ட் மெடிஸினரி ரிப்போர்ட் கிடைத்தது. அது மந்த்லி ரிப்போர்ட்டை உறுதிப்படுத்தி உள்ளது. என்ன செய்வது இப்போது..?" கேட்டேன்.

"அறிவோம் Te3! எனக்கும் ஒரு காப்பி வந்தது..!"

"நீங்கள் தான் ட்ரீட்மெண்ட் பிறகு எடுத்துக் கொள்ளலாம். நியர் ஃப்யூச்சர் ரெகக்னைசரில் செக் செய்து எனது ஹெல்த்திற்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்றீர்கள். ப்ராஜக்ட் முடித்துத் தர வேண்டியது தான் முக்கியம் என்றீர்கள். இப்போது கவர்ன்மெண்ட் ஆர்டர் வந்து விட்டது. கூடிய சீக்கிரம் டி.ஏ.வி.யில் பெயர் பதிவு செய் என்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்..?"

சீஃபை போல் மூக்கை சொறிந்து கொண்டது. இப்படி செய்தால் அவர் யோசிக்கிறாராம். சில சமயம் மூக்கின் மேல் குறுகுறுப்பு வரும் போதும் மனிதர்கள் இப்படி தேய்த்துக் கொள்ளுவார்கள் என்பது இந்த முட்டாள் ரோபோவிற்கு தெரிந்திருக்கவில்லை.

"Te3! நீங்கள் அட்மிட் ஆவது தான் சரி! அரசாங்கத்தினோடு முரண்பட முடியாது. கூடாது. ப்ளக்கை பிடுங்கி விட்டு விடும். நலம் ரிப்போர்ட் வந்தவுடன் சந்திப்போம்..! நன்றி! வணக்கம்..!" ஸ்க்ரீனில் புள்ளியாகச் சுருங்கி மறைந்தது.

சேனலை ட்யூன் செய்து அரசாங்கத்தின் மெடிசினரி தொடர்பாளரைப் பிடித்தேன். மற்றொரு மாடல் தோன்றியது.

"நான் டி.ஏ.வி.யில் அட்மிட் ஆக விரும்புகிறேன். எனக்கு ஒரு அட்மிஷன் கொடுக்கவும். மேலும் 60G ட்ராவலுக்கு விசாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்."

"Te3! நீங்கள் இந்த சமயத்தில் 60G ட்ராவல் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? டி.என்.ஏ. பாங்கில் இருந்து ரீப்ளேஸ்மெண்ட் செய்து மாற்று அமைப்புகளோடு தங்கள் பணியைத் தொடரலாமே!"

"டாக்டர்! எனக்கு வந்திருக்கும் நோயை நீங்கள் ஜஸ்ட் மற்றுமொரு டிசீஸாகப் பார்க்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை இது டி.என்.ஏ. நூல் சரட்டின் சடைப் பின்னலில் ஒரு பிசிறு. ஒட்டிக் கொண்டு வந்துள்ளது. அறுபது தலைமுறைகளுக்கு முன்னால் எனது முன்னோரில் ஆரம்பித்து அறுபது தலைமுறைகளாக அமுங்கி இருந்து, இப்போது என்னில் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன். அந்த ஆரம்பப் புள்ளி! எப்படி இருந்தார்? எதனால் இந்த நோய்க் காரணம் ஆரம்பித்தது என்பதை அறிய விரும்புகிறேன்..."

"அதை நீங்கள் ஹிஸ்டாரிக்கிள் டேட்டாபேஸில் சேர்ச் செய்து, வீடியோவாகப் பார்த்துக் கொள்ளலாமே..?"

"டாக்டர்! அது எல்லாம், டைம் மெஷின் வருவதற்கு முன்பாக ரீஸனல் கால்குலேஷனுக்காக சேகரித்து வைக்கப்பட்டவை. இப்போது தான் மெஷின் வந்து விட்டதே. நேரிலேயே சென்று பார்க்கும் வாய்ப்பு இருக்கையில், எதற்காக டேட்டா பேஸ்..?"

பின் அனுமதி கிடைத்தது. இப்போது கலத்தில் அமர்ந்திருக்கிறேன்...! இன்னும் இரண்டு நிமிடத்தில் கிளம்பி விடும்.

இது போன்ற அனுமதி கிடைப்பது சிரமம். ஒரு கலீக் இவ்வாறு பாட்டி இறந்து விட்டதாகச் சொல்லி விடுமுறை கேட்க, டைம் மெஷினில் சென்று பிறகு பார்த்துக் கொள் என்று சொல்லப்பட்டது. அதே போல் ஃப்யூச்சருக்குப் போய் ப்ராடக்டை எடுத்து வரலாமே? அது தான் முடியாது. ஃப்யூச்சரில் போய் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் திரும்பவும் ரிடர்ன் வருகையில் அந்தப் ப்ராடக்ட் கரைந்து கொண்டே வந்து, ஆரம்ப நிலைக்கு வரும் போது, அதே பழைய நிலையிலேயே நின்றிருப்போம். அந்த நினைவுகளும் அவ்வாறே படிப்படியாக அழிக்கப்பட்டு, சுழி நிலைக்கு வந்து விடுவோம். ஏனெனில் அப்பொது தான், லீனியர் ஸ்கேலில் ஃப்யூச்சரை நோக்கி போகையில் படிப்படியாக ஞாபகங்களும், ப்ராடக்ட் வளர்ச்சியும் கிடைக்கும் என்ற இயற்கையின் எளிமையான வழிமுறை.

Nature hates Discontinuity.

இந்த கட்டுப்பாடு இறந்த காலத்திற்கு செல்கையில் இல்லை. இறந்த காலத்திற்குப் போய் வருகையில் வெறும் நினைவுகளை மட்டுமே கொண்டு வருவோம். கடந்த காலத்தின் காட்சிகளை கலைக்க முடியாது. ஒரு சலனப்படம் பார்ப்பது போல் பார்த்து விட்டு வரலாம். அவ்வளவு தான். கடந்த காலத்தில் சென்று புதிதாக ஏற்றுக் கொள்ளும் நினைவுகள் மீண்டும் நிகழ்காலத்திற்குப் பயணம் திரும்புகையில் நடக்கும் சம்பவங்களைப் பாதிக்காத வகையில் மட்டுமே நினைவில் இருக்கும். இயற்கையின் மற்றுமொரு விளையாட்டு விதிமுறை இது..!

நான் பயணம் செய்யும் கலம் இந்த ட்ரிப்பில் கடந்த காலத்திற்குச் செல்கிறது. மேலும் சில கலங்கள் எதிர் காலத்திற்குச் செல்லும். அதாவது கடந்த காலத்தில் இருந்து கரண்ட் நிகழ் காலத்திற்குச் செல்கின்றன. நாங்கள் கடந்த காலத்திற்குச் செல்லும் ரூட்டில் மிட் வேயில் நின்று கொண்டிருக்கிறோம்.

"ம்மா..! பசிக்குதும்மா..!"

"கொஞ்சம் இருப்பா..! அப்பா வந்திடுவாங்க..! வரும் போது நமக்கு சாப்பாடு வாங்கிட்டு வருவாங்க..! இதோ அப்பா வந்திட்டாரு..? என்னங்க வெறும் கையோட வர்றீங்க..!"

"இன்னிக்கும் சம்பளம் அறுபது ரூபா தான் குடுத்தாங்க. வரும் போது மளிகை கடைக்காரர் பழைய கடனுக்கு வாங்கிட்டாரு..! புள்ள சாப்பிட்டுச்சா..?"

"ஐயையோ..! இல்லியே..! ஏங்க உங்களுக்கு சம்பளம் நூறு ரூபானு தானே வாத்தியார் அன்னிக்கு சொன்னாரு! சாலைப் பணியாளர்களுக்கு நூறு ரூபானு தான சொன்னாரு..?"

"அந்த மேஸ்த்ரி அறுபது ரூபா தானே குடுக்கறான்..! உன் சம்பளத்துல ஏதாவது வாங்கிட்டு வந்து பையனுக்கு குடுக்க வேண்டியது தானே..?"

"அதுல வாங்கி குடுத்து தான் கொஞ்சம் பசி அடக்கிருக்கான். ஆனாலும் வளர்ற வயசு..! நல்ல பசி எடுக்கும் இல்லியா..? உங்களுக்கு அறுபது ரூபா வந்தாலும் போதுமான சாப்பாடு குடுத்திட்டு இருந்தோமே? இப்ப என்னங்க ஆச்சு..?"

"வெலவாசி எல்லாம் ஏறிப் போச்சு..! இந்தியாவிலயே போதுமான சோறு இல்லியாம்..! வெளி நாட்டுல எல்லாம் சாப்பாட்டை எரிச்சு பெட்ரோல் ஆக்கறானாம். அதனால உலகம் முழுக்க சாப்பாட்டு பத்தாக்குறையாம்! அதனால வெலவாசி ஏறிப் போயிடுச்சுனு வர்ற வழியில வாத்தியார் சொன்னார்..!"

"அடக் கருமம் புடிச்சவங்களா..! அவனுங்க நல்லா இருக்கறதுக்கு ஏழைங்க நம்ம வவுத்துல அடிக்கறாங்களே..! அவனுங்க நல்லா இருப்பாங்களா..?"

"ம்மா..! வயிறு வலிக்குதும்மா..!"

"ஐயோ ! என்னடா கண்ணு பண்ணுது..?"

"தெரீலம்மா..! ஐயோ! பயங்கரமா வலிக்குதே..!"

"என்னங்க..! வாங்க புள்ளய கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்குப் போவோம்..!"

"ன்னங்க பையனை இந்த நிலைமையில கொண்டு வந்திருக்கீங்க..? சரியா சாப்பாடு குடுக்கறதில்லையா..?"

"ஐயா..! நாங்க என்னய்யா பண்றது..? வர்ற சம்பளம் கால் வயித்துக் கஞ்சிக்கு கூட பத்த மாட்டேங்குதே..!"

"பாருங்க..! பையனுக்கு சரியா சாப்பாடு போடாததனால, உணவுக்குடல் கொஞ்சம் புண்ணாகி இருக்கு. அல்சராக இருக்க வாய்ப்பு இருக்கு..! எதுக்கும் கொஞ்சம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்குங்க..! பட் இது தலைமுறைகளாத் தொடரவும் வாய்ப்புகள் இருக்கு. கவனம்..!"

"முருகா..!"

நான் ஒரு பொம்மை போல் இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாட்டின் ஊழல், அக்கறையின்மை, சுயநலத் தன்மை எப்படி தலைமுறைகளைத் தாண்டியும் பாதிக்கின்றது...!

தாத்தா..! தாத்தா..! என்று மனம் அரற்றியது...!

Friday, June 27, 2008

முதல் அறிவியல் புனைகதை.

புலவர் தேர்மேகர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அதிகாலை. பொழுது புலர்ந்து புள்ளினங்கள் பறந்து கொண்டிருந்தன. காற்றில் இன்னும் குளிர் மிச்சம் இருந்தது. ஆற்றின் கரைகளை நதியலைகள் முத்தமிட்டு முத்தமிட்டு ஓடிக் கொண்டிருந்தன. தருக்களில் வர்ணமயமான மலர்களும், கனிகளும் காற்றில் ஆடின. கரையோரம் இருந்த சிறிய கோயிலில் விளக்கொளிகள் கண் சிமிட்டின.

தேர்மேகர் அரசவையின் ஒரு முக்கிய புலவர். பிரஜாபதியாகிய மாமன்னர் தமது இராஜாங்க விவகாரங்களை முடித்துக் கொண்டு மாலை வேளைகளில் ஓய்வெடுக்கும் போது கலைகளும், காவியங்களும் தர்பாரில் களை கட்டும்.

புலவர்களும், கவிஞர்களும், ஆடற் பெண்களும், நாட்டிய நங்கைகளும், இன்னிசைவாணர்களும் குழுமும் அச்சபைதனிலே, தேர்மேகருக்கு தனியொரு இருக்கை இருக்கும் எனில் அவரது பெருமை எங்ஙனம் இயம்ப?

தினம் தினமும் அவர் அரசரை விளித்துப் புகழும் கவிப் பேருரைகள் காற்றில் கலந்து, கரைந்து ஆங்கே குவிந்திருக்கும் கலைவாணர்களுக்கும், கலைதேவிகளுக்கும் தேன்மாரி பொழிவது அன்ன அமையும் எனில் அவர்தம் நாப் பெருமையையும், பாப் பெருமையையும் நவில்தல் நம்மால் தகுமா..?

தர்பார் துவங்குகையிலும், நிறைகையிலும் தேர்மேகர் அரசரைப் புகழ்ந்து வரவேற்புப் பாடலும், வழியனுப்புக் கவியும் இசைத்து நலம் கூறுவார்.

நேற்று நடந்தது என்ன? மாமன்னர் வருகிறார். இவர் மொழிவதைக் கேளுங்கள்.

"பஞ்சடைத்த படுக்கைகளில் வஞ்சியரின் வலுவான நெஞ்சமதை நெருங்கிக் கொண்டு, கொஞ்சிக் குதூகலித்து அவர்தம் பிஞ்சு விரல்களைப் பிடித்திழுத்து, மஞ்சமதில் மயக்கம் காட்டி விஞ்சிய விளையாட்டு ஆடுதலும்,

நாகர்

நஞ்சமதை ஒத்த வஞ்சகரின் வாளைத் தூள் தூளிட்டு, தஞ்சமென அவர் வர, வெஞ்சினம் தவிர்த்து மஞ்சு போல் ஈரத்தோடு அஞ்சற்க என்று அபயமளித்து, சஞ்சலம் அற்ற மனத்தோடு எஞ்சிய வாழ்நாளில் எம்மோடு இரும் என கருணை காட்டியும்,

பஞ்சமென வரும் பாணர்க்கும், கொஞ்சம் எனக் கேட்கும் கொலைப் பட்டினிகாரர்க்கும், மிஞ்சுமே என்ற கவலை தோன்ற, எடுத்தெடுத்து அருளும் எம் மன்னவா, நீ வாழி! நீ வருக...!"

மன்னர் வந்தமர்ந்தார். அனைத்து கலைகளும் அரங்கேறின. பின் தனிமையில் தேர்மேகர் மன்னரைச் சந்தித்தார்.

"புலவர் பெருமகனே! எமக்கு ஓர் ஆசை..!"

"பெரு மன்னவ! ஆணையிடுக..!"

"எப்போதும் நீர் என்னைப் புகழ்ந்து பாடுகிறீர்! நலம். அடுத்த முறை ஏதேனும் புதுமையாக முயற்சி செய்யுங்கள். பாடல் வரிகள் அலுப்படைந்து விட்டன. இரு நாட்களில் ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு வாரும். அறிவியல் சிறுகதையாக இருக்கட்டும்..!"

"அரசே! நாளையே எழுதிக் கொண்டு வருகிறேன்..!"

"வேண்டாம்..! நாளை முதல் இரு நாட்கள் நான் தெற்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்ய இருக்கிறேன். இரு நாட்கள் கழித்து நீர் அரண்மனைக்கு வந்து கூறும்..!"

"உத்தரவு தலைவ..!"

"சரி..! நீர் இப்போது செல்க..! உமது பாடல்கள் என்னை உசுப்பேற்றி விட்டிருக்கின்றன. யாரங்கே? அந்தப்புரத்தில் அம்பிகா இன்று இருக்கிறாளா என்று விசாரித்து விட்டு வா..!"

தேர்மேகர் யோசித்துக் கொண்டிருந்தார். என்ன அறிவியல் சிறுகதை எழுத..? ஹ்ம்..!

மன்னரிடம் ஜம்பமாக சொல்லியாகி விட்டது. கவிதை எழுதுவதற்கே நூலக அகராதிப் புத்தகங்களைப் புரட்ட வேண்டியதாக இருக்கின்றது. கலிங்க மொழி, காச்மீர மொழி, வடமொழி நூல்கள் இருப்பதால் சமாளித்து வருகிறோம். இல்லாவிடில் நம் கதி? அறிவியல் சிறுகதைக்கு எங்கே செல்வது? தருமி நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள் போல் இருக்கிறதே.

நாம் படித்த அறிவியல் எத்தகையது..? குருகுலத்தில் என்ன படித்தோம்..?

எங்கே படித்தோம்?

குருவின் மான் தோலில் கள்ளிச் செடி முள் வைத்தோம். தோட்டத்தில் மாங்காய்கள் அடித்துத் தின்றோம். குருபத்தினி குளிக்க, வெளியில் வைக்கும் பாத்திரத்தில் இறந்த பல்லியைப் போட்டோம். ஓலைச்சுவடியைச் சுருட்டி, அம்பு செய்து குருவின் கொண்டையில் வாகாகச் செருகச் செலுத்தினோம். தேர்வுக் காலங்களில் இடுப்பு வேட்டி மடிப்பில் எழுதிய ஓலைச் சுவடிகளை மறைத்து தேறினோம்.

எங்கே படித்தோம்?

கொஞ்சம் தொலைவில் இருக்கும் கோயிலைப் பார்த்தார்.

கோயில் கல்வெட்டு அவர் கண்ணில் பட்டது. 'மாமன்னர்...'.

எண்ணங்கள் வரிசையாக ஓடின. மன்னர் இன்று என்ன செய்வதாகச் சொன்னார்? தெற்குப் பகுதிகளுக்குப் பயணம். என்று திரும்புகிறார்? நாளை மறுநாளுக்கு நாளை. எவ்வளவு காலம்? இரண்டு நாட்கள். அதுவரை பயணம். காலம். பயணம். பயணக்காலம். காலப் பயணம்.

ஆம். காலப் பயணம். ஒருவன் காலப் பயணம் செய்தால், அவன் காலப் பயணி**. ஆஹா..! அருமையான சிந்தனை. இதுவரை புரட்டிய எந்த நூலிலும் இந்த சிந்தனை இல்லை. நாம் தான் முதல்..!

சரி. இது என்ன வருடம்? பார்த்திப வருடம். ஆனி மாதம் க நாள்.

இப்படி சிந்திப்போம். வெகு வெகு வெகு காலங்களுக்கு அப்பால் வசிக்கும் ஒருவன், ஒரு தேர் பிடித்து நம் காலத்திற்கு வருகிறான். காலத்தேர். மன்னரைக் கண்டு வியந்து புகழ்கிறான். மன்னரும் மகிழ்கிறார். ஓர் அபூர்வ பொருளைக் கொடுத்து விட்டு, மீண்டும் அவனது தேர் பிடித்து மறைகிறான்.

ஆஹா..! என்ன ஒரு அபூர்வமான சிந்தனை! தேர்மேகா! உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கின்றதடா..!

எழுதத் துவங்கினார்.

'காலத்தேரில் காளை ஒருவன் வந்தான். மார்பில் மர உரியும், இடையில் பெருந் துணியும் அணிந்து வந்தான்..'

"நெனச்சேன் வாத்யாரே..! நீ இப்டி தான் கரீட்டா ராங்கா எளுதுவேன்னு..!"

தடாலென நிமிர்ந்து பார்த்தார். அதிர்ந்து எழுந்தார்.

ஒரு மனிதன். தடித்த மீசை. கூராக இருந்தது. வலது கன்னத்தில் கருப்பாய் மரு. கழுத்தைச் சுற்றி பூக்கள் வரைந்த கைக்குட்டை. சுருள் சுருளான முடி. கிடைமட்ட கோடுகள் வரைந்த இறுக்கமான மேலாடை. நீல நிற கட்டங்கள் கொண்ட முழு கீழாடை மடித்துக் கட்டப்படிருந்தது. முட்டியை மறைத்து நெடு கோடுகள் வரையப்பட்ட அரையாடை.

திடுக்கிட்டுப் போய் விட்டார் தேர்மேகர். இது போன்ற ஓர் அலங்காரத்தை அவர் தம் வாழ்நாளில் கண்டதில்லை.

"யார் நீங்கள்..? உங்களுக்குத் தமிழ் தெரியுமா..?" திக்கித் திணறினார்.

"அட.. குந்து நைனா..! இன்னா நீ என்னவோ பேய் பிசாசை பாத்த கணக்கா பேஸ்தடிச்சுப் பாக்கற. நானும் மன்சன் தான்யா..! அட, குந்துப்பா..!"

"நீங்கள் பேசும் மொழியே புரியவில்லையே..! நீங்கள் யார்? எதிரி நாட்டின் ஒற்றரா..? உங்களைப் பார்த்தால் எனக்கு அச்சமாக இருக்கின்றது. முருகா..! முருகா..! ' அல்லல் படுத்தும் அடங்கா முனியும், ப்ரம்ம ராட்சதரும்...!"

"ஐய்ய...! சஸ்டி கவசம் தான சொல்ற..! எனக்கும் தெர்யும்யா..! இன்னா ராகம் இது? ரோசாப் பொண்ணு சொம்மா கிக்கா பாடுமே, அதான...?"

"தெய்வமே..! நீங்கள் பேசும் மொழி நான் அறிந்ததில்லை. இமயம் தாண்டி வருகின்றீர்களா..?"

அவன் சிரித்தான்.

"இன்னாடாது..? நாம பேசற பாஷ புரியலன்றாரு இந்தாளு..? யோவ் இதுவும் தமிளு தான்யா..?"

"தமிழா..? எந்தப் பிரதேசத்து தமிழ்..? நான் அறிந்ததில்லையே..?"

"இது மெட்ராசுல பேசறது. நீ கண்டுக்கனதே இல்லியா..?"

"இல்லை. நீர் எங்கிருந்து வருகின்றீர்..?"

"தோ பாரு. மொதல்ல குந்து நீ. நிக்க வெச்சே பேசினுகீற. டேசனுக்கு கூடிட்டு போனாக் கூட, ஏட்டு ஒக்கார வெச்சு தான் பேசுவாரு. நீ இன்னாடான்னா..?"

இருவரும் அமர்கின்றனர்.

"ஆமா...! ஒன் வூட்டுல யாரும் இல்லியா..? ஒனக்கொரு பொண்ணு இருக்கணுமே..? போய் அத்த இட்டாந்து ஒரு சொம்பு தண்ணி கொண்டு வரச் சொல்லு போ. மனுஷன் தொலோலிருந்து வந்திருக்கான்..."

தேர்மேகர் அவனைக் குழம்பிப் போய்ப் பார்க்கிறார்.

"இன்னாயா, நீ அப்டி பாத்துகினே கீற..? விருந்தோம்பல்னு எல்லாம் பட்ச்சதே இல்லியா நீ..? வூட்டுக்கு வர்ற கெஸ்டுக்கு ரெஸ்பெக்ட் குடுக்கணும்யா. அட்லீஸ்ட் ஒரு சொம்பு தண்ணியாவது குடுக்கணும். வள்ளுவர் கோட்டத்துப் பக்கம் போய்ப் பாரு. தூண்ல எளுதி வெச்சிருக்காங்க.."

"இல்லை. உங்களுக்கு எப்படி எனக்கு ஒரு பொண்ணு இருக்கின்ற விவரம் தெரியும் என்று யோசிக்கிறேன். நீங்கள் ஒற்றரா..?"

அவன் சிரித்தான்.

"பாத்தியா..! நீயும் பொண்ணுன்னு சொல்லிட்ட.."

"ஆம்..! எப்படி கூறினேன்? பெண் என்பதல்லவா அழகிய தமிழ் வார்த்தை..!"

"நீ ரொம்ப டென்சன் ஆயிக்காத. ஒரு நாலு தபா நம்ம கைல பேச சொல்ல அல்லார்க்கும் இந்த பாஷ தொத்திக்கிது. இன்னா பண்றது, சொல்லு..? யோவ்.. உன் ஜாதகமே எனக்குத் தெரியும்யா. நீ என்ன என்ன டேட்ல என்ன என்ன பண்ணிகினு இருந்த, இருக்க, இருக்கப் போற எல்லாம் தெர்யும், எனக்கு. யாருனு நெனச்ச என்னிய..! பூக்கடை டேசன்ல இருந்து, அடயாறு வரிக்கும் அல்லா டேசன்லயும் இந்த கபாலி போட்டோ இல்லாத எடமே கெடியாது, பாத்துக்கோ..!"

"என் மகள் அவளது தோழியரோடு கோயிலுக்குச் சென்றிருக்கிறாள். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்..? தயவு செய்து அதையாவது சொல்லுங்கள். தமிழில் சொல்லுங்கள்..."

"தமிள்ல சொல்றதா..? இவ்ளோ நேரம் நான் என்ன தெலுங்குலயா செப்பினு இருந்தேன். தமிள்ல சொல்றதாம். சரி சொல்றேன் கேட்டுக்கோ. நீ ஒரு கதை எழுத ஒக்காந்த இல்ல. அதுல வர்ற காளை நான் தான்.."

"என்ன..? குழப்புகிறீர்களே..! நான் இன்னும் கதையை எழுதவே துவங்கவில்லை. ஒரு வரி தான் எழுதினேன்.."

"அதான்யா. அந்த ஒத்த வரில வர்ற ஆளு நான் தான். இரு நடுவுல கொஸ்சீன் கேக்காத. அப்பால மொத்தமா கேட்டுக்கலாம். நான் ஃபுல்லா சொல்றேன். கேட்டு மெர்சலாயிடாத, என்ன? இந்த மாதிரி நீ ஒரு ஆளு. ஒரு கதை எளுதுவ. இல்ல எளுதின. அதுல ராங்கா நீ எளுதுவ. ஒர்த்தன் வர்றான். ஒங்க ஊரு ராசாவப் பாக்கறான். கிஃப்டு குடுக்கறான். அப்பால மறஞ்சு போறான்னு. அத்தினியும் தப்பு. நீ எளுதுற ட்ரெஸ்ஸெல்லாம் எங்க காலத்துல கடியாது. நான் எப்டி ட்ரெஸ் போட்டிருக்கேன் பாத்தியா? இது ஒரு டைப். அப்பால நெறைய டைப்புல இருக்கு. ஃபுல் ஏண்டு, ஆப் ஏன்டு, காக்கி ட்ரெளசர் அப்டி இப்டினு. ஆனா நீ எப்டி எளுதுவ? அது இன்னாது? மர உரியா..? மரத்தை உறிச்சு ட்ரெஸ் செஞ்சுக்கிவீங்களா..?"

"எனக்குத் தெரிந்ததை வைத்து தானே நான் எழுத முடியும்?"

"க்ரீட்டு தான். ஆனா உங்க ஊரு கதய எளுதுய்யா. அத்த வுட்டுட்டு அப்பால நடக்க போற மன்சன் இப்டி இருந்து வருவான்னு எளுதுனா, அந்த மன்சங்களுக்கு கோவம் வரும்ல? அதான் வந்திருச்சு. என்ன அனுப்பிருக்காங்க. வந்திட்டேன். ஒயுங்கா மாத்தி எளுது.."

"எனில் தாங்கள் பிற்காலத்தில் இருந்து வந்திருக்கிறீர்களா..?"

"ச்சட். அத்த தான்யா இவ்ளோ நேரம் சொல்லிகினு இருந்தேன். தோ பார். நான் வந்த வண்டி. எப்டி ஷோக்கா கீதா..?"

கபாலி கைகாட்டினான்.

டன்லப் டயர்களில் ரிஸ்ட் வாட்ச்கள் கட்டப்பட்டிருக்க, உள்ளே கன்னா பின்னா என்று எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் டிஜிட்டல் மீட்டர் காட்டிக் கொண்டிருக்க, க்ளாஸ் டாப்பின் உச்சியில் ஏரியல் ஒன்று நீட்டிக் கொண்டிருக்க, சுற்றுப்புறம் முழுதும் எல்.ஈ.டி.களால் மின்னிக் கொண்டிருந்தன.

ஆவென வாயைப் பிளந்து பார்த்தார் தேர்மேகர்.

"என்ன ஓர் அற்புதமான வாகனம். மன்னரின் தேர் கூட இவ்வளவு அலங்காரத்தோடு இருந்ததில்லையே. நீங்கள் என்னோடு சிறிது காலம் இருக்க முடியுமா? உங்களுக்கு மன்னரை அறிமுகப் படுத்தி வைக்கின்றேன்." என்றார் தேர்மேகர்.

"அதுக்கெல்லாம் டைம் இல்ல எனக்கு. அர்ஜெண்ட்டா கெளம்பணும் நான்!" என்றான் கபாலி.

அப்போது ஒரு சிறு பெண் உள்ளே வந்தாள்.

"ஆ...! தந்தையே யாரிது? அச்சமூட்டும் உருவத்தில்...!" அலறினாள்.

"பாப்பா யாரு..? ஒம் பொண்ணா..? என்னய்யா ஒன் ஜாடையே இல்ல. அம்மா ஜாடையா..?"

"ஆம். என் மகள் தான். மேகங்கள் கருத்திருக்க, மின்னல் நாட்டியங்கள் நடத்தும் மேடையாய் வானம் விளங்க, துளித் துளியாய் விண்ணும் மண்ணும் இணைத்துக் கொண்டு, பிணைத்துக் கொண்டு, அணைத்துக் கொன்ட ஓர் ஐப்பசி நாளில் அவதரித்த தேவ மங்கை இவள்..."

"மழ பெய்யச் சொல்ல பொண்ணு பொறந்துச்சு. இத்த தான சொல்ல வர்ற. அதுக்கு ஏன்யா, இவ்ளோ பெர்சா அடிச்சு வுடுற..? பாப்பா இன்னா க்ளாஸ்மா படிக்கிற நீ..?"

"அவள் படிக்கவில்லை. பெண்ணுக்கு எதற்கு படிப்பு? கணவனின் கை கொண்டு காலம் தள்ளவும், பிள்ளையைப் பெற்றெடுத்து பேணி வளர்க்கவும், சமையலறையில் புகுந்து சாப்பாடு வார்க்கவும், சாகும் வரை சளைத்திடாது உழைக்கவும் படிப்பெதற்கு..?"

"படிக்க வெக்கல. அவ்ளோ தான. இன்னாயா எத சொன்னாலும் பட்டிமன்றம் ரேஞ்சுல வுட்டு வெளாசற. பொண்ண படிக்க வெக்காம இருக்க. வெக்கமா இல்ல ஒனக்கு? ஒரு பொண்ணு பட்ச்சா ஒரு குடும்பத்தயே காப்பாத்துவாய்யா. ஒனக்கு பாரதியார எல்லாம் தெர்யுமா..? எப்டி தெர்யும்..? ஒன்னோட ஜாதி தான். பாட்டு எளுதறவர். அவரோட எல்லாம் கம்பேர் பண்ண சொல்ல, நீயெல்லாம் டுபாக்கூர்யா. மன்சன் இன்னா சொல்லி இருக்கார் தெர்யுமா..? 'அடுப்பூதற பொண்ணுக்கு படிப்பெதுக்குனு கேட்டவன்லாம் ஒயுஞ்சு போனான். கும்மியடி பொண்ணு'னு. ஒயுங்கா பொண்ண படிக்க வெய்யி..."

"மிக்க நன்றி ஐயா..! தாங்கள் வெகு தூரத்தில் இருந்து வந்திருப்பது போல் தெரிகின்றது. ஏதேனும் அருந்துகிறீர்களா..? இளநீர், நீர் மோர், பனங்கள்.." பயம் தெளிந்து அவள் கேட்டாள்.

"இதான்யா பொண்ணுன்றது. இவ்ளோ நேரம் கத கேட்டியே, ஒனக்கு தோணுச்சா ஏதாச்சும் சாப்புடக் குடுக்கணும்னு. இப்டி ஒரு மகாலச்சுமிய படிக்க வெக்கலன்றயே. கண்ணு..! கொஞ்சம் தண்ணி மட்டும் கொண்டாம்மா."

"இதோ, உடனே வருகிறேன்..!" சிட்டாகப் பறந்து போனாள்.

"தோ பார். சொம்மா டைம் மெஷின்ல மன்சன் வந்தான்.. அதான்யா காலப் பயணம்.. அத்த புட்ச்சிக்கினு கத, கித எளுதின அவ்ளோ தான். எளுது. ஆனா உண்மைய எளுது. நீ எளுதுற காலத்துல இருக்கச் சொல்ல மன்சங்கள போலவே ஃப்யூச்சர்ல இருக்கற மன்சங்களும் இருப்பாங்கன்னு செனச்சிகினு அப்டி இருந்தாங்கோனு எளுதாத. முடிஞ்சா அந்த ஃப்யூச்சருக்குப் போய் பாத்துனு வந்து எளுது. அது முடியாதுல்ல. அப்பால எப்டி எளுதுவ? அப்டி எளுதுனா அது பொய்யாயிடுதுல்ல. அப்றம் எப்டி அந்த மன்சன் வர முடியும்? என்ன தல சுத்துதா..? டைம் மெசினு, டைம் ட்ராவல்னாலே இப்டி கொயப்பம் தான். 'Grandfather Paradox'னு ஒண்ணு இருக்கு. அத்த விக்கிபீடியால போய்ப் பாரு. ஒனக்கு எங்க அத பாக்க முடியும்.? சரி.. நான் இப்ப கெளம்பணும்...!"

"கிளம்புங்கள் ஐயா..? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்..?"

"ஒரே அடி. அப்டியே தாராந்துடுவ. நானாய்யா வந்தன் இங்க..? நீ எளுதின இல்ல. அதுனால வந்தேன். நீ இப்ப இன்னா பண்ணனும் தெர்யுமா..? கதையோட அடுத்த லைன்ல, அது இன்னாது... காளை.. அவன் போய்ட்டான்னு சொல்லி முடி. அப்ப தான்யா நான் போவ முடியும். லாஜிக்கலா அதான் க்ரீட்டு. இன்னா புர்யுதா..?"

தேர்மேகர் அவசரமாக ஓலைச் சுவடியை எடுத்தார். அடுத்த வரியில், 'அப்படி வந்த காளை வந்த வேலை முடிந்து மறைந்தான்.' என்று எழுதினார்.

பிறகு என்ன நினைத்தாரோ என்னவோ, அந்த வரிகளுக்கு இடையில் கொஞ்சம் மாற்றி எழுதினார்.

'அப்படி வந்த காளை, தேர்மேகரை வணங்கி, அவர் காலில் விழுந்து கும்பிட்டான். பின் அவரைப் பார்த்து, 'தவ சிரேஷ்டரே! கவிராசரே! கலைத் தாயின் செல்லக் குழந்தையே! நீரே பெரும் கனவான். புலவர்களில் நீரே பெரும் தெய்வம்! என்று வணங்கினான். பின் அவனது காலத் தேரில் ஏறி மறைந்தான்.'

கபாலி," யோவ் பெருசு..! படா ஆளுய்யா நீ..! நைசா ஒன்னிய நல்லா ஏத்தி வுடற மாரி எளுதிக்கினே இல்ல. இந்த கபாலி கட்சிக் கூட்டத்துல கூட இப்டி எல்லாம் யாரையும் ஐஸ் வெச்சது இல்லய்யா..! நீ எளுதீட்ட. வேற வளியே இல்ல. இல்லாங்காட்டி, நான் போவ முடியாது..!" என்றான்.

அவர் எழுதியபடியே செய்தான். பின் டைம் மெஷினில் ஏறி மறைந்தான்.

தேர்மேகரின் மகள் வந்தாள். கையில் சூடான பால்.

"தத்தையே! எங்கே அந்த மனிதர்..?"

"எந்த மனிதர் அம்மா..?"

"இங்கே நின்று கொண்டிருந்தாரே..! அவருக்காகத் தான் இந்த சூடான பால் கொண்டு வந்தேன்..!"

"யாரும் இல்லையே இங்கே..! ஏதோ உனக்கு பிரம்மை போல் இருக்கின்றது. அந்தப் பாலை நீயே குடித்துக் கொள்ளம்மா..! நாணல் புதர்கள் ஈரக்காற்றில் தலையசைக்க, நுரை ததும்ப ஓடி வரும் நதியலைகள் சிந்திச் செல்லும் வண்டல் மண் சேர்ந்த வயல் காட்டில் விளைந்த நெற்பயிர்கள் போரடிக்கையில் தெறிக்கின்ற உமி பாண்டிய நாட்டில் சென்று விழும் அளவிற்கு காற்று வீசுகின்ற இக்காலத்தில் வெகு நேரம் வெளியே நிற்பது உடலுக்கு நன்றன்று. உள்ளே செல்லம்மா..."

அவள் உள்ளே சென்றாள்.

தேர்மேகர் அவரது முதல் அறிவியல் புனைகதை ஓலைச் சுவடியைக் கிழித்தார்.

யோசித்தார்.

மன்னரிடம் அறிவியல் புனை கதை என்று இரு நாட்களில் எதைக் கொடுப்பது..? வேறு வழியே இல்லை. மன்னரது படுக்கையறை பராபரித்தனங்களையும், போர்க்கள் போராட்டங்களையும் படுக்கையறை பராக்கிரமங்களாகவும், போர்க்கள ப்ரசன்னமாகவும் மாற்றி எழுத வேண்டியது தான். இதனை மிஞ்சின அறிவியல் உண்டா என்ன..?

'மெல்லிய இடை வல்லிய மார் வில்லின் விழி கள்ளில் இதழ்
அள்ளிய கரம் கிள்ளிய கன்னம் கொல்லும் கூந்தல் சொல்லிட வந்தேன்...'

எழுதத் தொடங்கினார்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

***

** எல்லாம் ஒரு விளம்பரம் தான். ;-)

Thursday, June 26, 2008

கொசு கடித்தது.

'னிய காலை வணக்கம்'. விக்கி அசிஸ்டெண்ட் குரல் தேனாய்ப் பாய்ந்தது. ஃபோம் மெத்தையின் பஞ்சுப் பொதிகள் அட்டோமேட்டிக்காக சுருங்கிக் கொள்ள, லேஸர் தட்டில் இரண்டு டாப்லெட்டுகளுடன், ஸிந்தட்டிக் சூரியக்கதிர்கள் ஜன்னல் வழி பாய மற்றொரு தினம் துவங்கியது.

இது வழக்கமாக எழும் நேரம் அல்ல. கொஞ்சம் தாமதம் தான். காரணம்... அதை விடுங்கள். அலுவலகம் விட்டுக் கிளம்பும் போது அரசாங்கத்தின் புகை அறிவிப்பு வந்தது. வழக்கமாக புகை அறிவிப்பு வராது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் சின்னமோன் பிடிக்கும் போது, புகையில் அறிவிப்பு வரும். 'இன்றைய கோட்டா முடிகின்றது..'.

நேற்று வந்த அறிவிப்பு முற்றிலும் நான் எதிர்பாராதது. ட்ரான்ஸ்போர்ட்டிங் டிவைஸின் முன் காத்துக் கொண்டிருந்து, எனது முறை வந்த போது, C654 நிறுத்தி புகை அறிவிப்பை விரித்துக் காட்டியது.

'நாளை உஷாராக இருக்கவும். புது வைரஸ் அட்டாக் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'. மறைந்தது.

ட்ரான்ஸ்போர்ட்டிங் டிவைஸின் கதவுகள் திறந்து கொள்ள, புகுந்தேன். வழக்கமான ப்ராசஸ் நிகழ்ந்து, மெகா அல்ட்ரா ஹை ஃப்ரீக்வன்ஸி அலைகளாகப் பயணம் செய்த போது, மனம் எனும் வஸ்து சிந்தித்தது. வஸ்து என்றால் திடமான வஸ்து அல்ல. அது கிகாஹெர்ட்ஸ் ரேஞ்சில் காரியர் வேவாக அனுப்பப்படும்.

திடீரென எட்வர்டு பேஜ் மைக்கேலின் கதை போல் எங்காவது பேட்டரி தீர்ந்து போனால் என்னாகும்? அலைகளாகவே சுற்ற வேண்டியதாகவே இருக்கும் என்று தோன்றியது.

கொஞ்ச நாட்களாகவே இந்த சிந்தனை, பயம் வந்து கொண்டே இருக்கின்றது. கூடிய சீக்கிரம் ஏதோ நிகழப் போகின்றது என்பதற்கான அடையாளமாகத் தோன்றியது.

'ணக்கம். அரசாங்கத்தின் அறிவிப்பு இது. இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. உங்கள் வீட்டைச் சுற்றிலும் செக்யூரிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை உணவை எடுத்துக் கொண்டு விஷன் ஸ்பெக்ஸில் அமிழ்ந்து கொள்ளவும்.'.

சொல்லி விட்டு விக்கி தலை வணங்கி, கை குவித்து நின்றான். இந்த போஸ் நன்றாகவே இருக்கிறது. ஒரு முறை ஏர் இந்தியா பற்றி தேடச் சொல்ல, 'மஹாராஜா' பிக்சர் பார்த்து விட்டு, 'பாஸ், எனக்கும் இந்த போஸ் எடுத்துக்கறேன்.'

பிட் மேப் பிக்சர்ஸ் எல்லாம் சேர்ச் பண்ணி விட்டு, அந்த பிக்சர்ஸை வயர்லெஸ் வழி ப்ரிண்ட் எடுத்து, அணிந்து கொண்டான். விக்கி அசிஸ்டெண்ட் உண்மையிலேயே நன்றாகவே வேலை செய்கிறான். கான்ஃபிக்யூரேஷன் அட்டகாசம். அவனுக்கு காலை உணவிட வேண்டும்.

'இட்லி, மசால் வடை, கெட்டிச் சட்னி, சாம்பார், அஸ்ஸாம் டீ' என்று சியர்ச் செய்யச் சொல்லி விட்டேன். எனர்ஜி ஃப்ரம் இன்ஃபர்மேஷன். விக்கி அசிஸ்டெண்ட் அப்படித் தான் அஸெம்பிள் செய்யப்பட்டு உள்ளான்.

லேஸர் தட்டில் இருந்த டாப்லெட்ஸை எடுத்துக் கொண்டேன். மெர்க்குரி ரசாயனத்தில் கலந்து குடித்து முடித்து, விஷன் ஸ்பெக்ஸை அணிந்து கொண்டேன்.

'வணக்கம். இன்றைய நாள் முழுதும் உங்களுடன் பேசிப் பொழுது போக்க நான் அனுப்பப்பட்டுள்ளேன். ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா..?' வசீகரமாய் சிரித்தாள். ஃபைபர் தொகுப்புகளில் மல்டிகலர் ஆப்ஷனில் லேஸர்களைச் செலுத்தி உண்டாக்கப்படும் பிம்பம். நமக்கு எப்படிப்பட்ட எதிராளி வேண்டும் என்பதை செட் செய்ய ஆப்ஷன்கள் இருந்தன. வேறு மாதிரி செட் செய்து விடுவார்களோ என்ற சர்வைவல் பயம் இன்றி சிரித்துக் கொண்டு இருந்தாள்.

பேசத் தொடங்கினோம்.

'முதலில் உன் பெயர் என்ன..?' பேஸிக் இன்ஸ்டின்க்ட்.

'எனது பெயர் Thg4de3.'

இதற்கு மேல் ஏதும் அவளிடம் இருந்து பெயராது. தர்க்கவியலின் உச்சபட்ச கான்செப்ட்களைக் கொண்டு உருவாக்கப்படும் சாதனங்களில் மிக எளிமையான பதில்களே காத்திருக்கும்.

'சரி. இன்று எனக்கு என்ன நிகழப் போகின்றது?'

'மன்னிக்கவும். அதைப்பற்றிய ரிப்போர்ட்கள் எனக்குத் தரப்படவில்லை.'

'கொஞ்ச நாட்களாக எனக்கு ஏற்படும் சிந்தனைக்கு காரணம் என்ன?'

'நீங்கள் க்ளாஸிக் சயின்ஸ் பிக்ஷன் ஸ்டோரிஸ் எடுத்துக் கொள்ளும் போது கொஞ்சம் கூட டோஸ் எடுத்துக் கொண்டீர்கள். அதன் மிச்ச விளைவுகளே நீங்கள் கொள்ளும் தேவையற்ற பயம்.'

கொஞ்ச நேரம் இது போல் பேசிக் கொண்டிருந்து விட்டு, அணைத்தேன். தொலைந்தாள்.

படுத்துக் கொண்டேன். தூங்கி இருப்பேன் என்று நினைக்கிறேன்.

'சுரீர்...'.

ஒரு புது மாதிரி பறவை. பூச்சி. வாயால் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. வியப்பாகப் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தில் ஒரு மாதிரி நமைச்சல் எடுத்தது. புது உணர்வு.

இது போன்ற உணர்வை இது வரை கண்டதில்லை. இது போன்ற பூச்சியையும்!

உடனடியாக ஒன்று செய்தேன். ஸ்பெக்ஸை ஆன் செய்து, ஸ்கேன் செய்தேன். விக்கியை அழைத்து ஸ்கேன்ட் வீடியோவைக் காட்ட, உடனடியாக சியர்ச்சில் இறங்கி, மைக்ரோ செகண்டில் சொன்னான்.

'இது ஒரு பழைய பூச்சி வகையைச் சார்ந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டு விட்டது. இதன் பெயர் கொசு.'

ரோபாட் காவலர்கள் எங்கிருந்தோ வந்தார்கள். சிவப்பு நிறப் புகையும் சிறு குமிழில் அதனை பிடித்துக் கொண்டார்கள்.

'சார்.. நீங்களும் வர வேண்டும். ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் அட்மிட் ஆக வேண்டும்.'

'என்ன செய்யப் போகிறீர்கள்..?'

'இந்த புதிய வகை பூச்சியினால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அனலைஸ் செய்ய வேண்டும். உங்களது பாதையில் நீங்கள் போகக் கூடாது. எங்களது ட்ரான்ஸ்மிஸன் பாதை மிக செக்யூரிட்டியானது. அதில் செல்லலாம். வாருங்கள்..'

அவர்கள் கொண்டு வந்திருந்த டிவைஸில் உட்புகுந்து கொண்டோம்.

'டாக்டர். இந்த புது விதப் பூச்சி எங்கிருந்து வந்திருக்க வேண்டும்..?' கேட்டேன்.

'எனக்கு அரசாங்கம் அளித்துள்ள தகவல் படி, இந்த கொசு பல நூற்றாண்டுகள் பயணம் செய்து வந்திருக்கின்றது. பழைய நூற்றாண்டு மனிதர்கள் டைம் மெஷின் தயாரித்து விட்டார்கள். அதனை டெஸ்ட் ட்ரைவ்வுக்கு உட்படுத்துகையில், வழக்கமான மெதட் படி நாய், பூனை போன்றவற்றை அனுப்ப முடியவில்லை. காரணம் ப்ளூ க்ராஸ், ரெட் க்ராஸ் போன்று பல வண்ணங்களில் விலங்குகளைக் காக்கும் அமைப்புகள் தடுத்து விட்டன. எனவே கேட்க ஆளில்லாத கொசுவைப் பிடித்து அனுப்பி உள்ளார்கள். டோண்ட் வொர்ரி. எப்படியும் உங்களைக் காப்பாற்றி விடுவோம். பழைய மெடிஸினரி ஆர்டிக்கிள்ஸை எல்லாம் எல்லா டாக்டர்களும் லோட் செய்து கொண்டிருக்கிறோம். அரசாங்கம் ஸ்பெஷல் கேர் எடுக்கச் செய்துள்ளது.'

'இந்த கொடிய பூச்சியை எப்படி கொல்லப் போகிறீர்கள்..?' ஆர்வமாக இருந்தது.

'இதனை எப்படி அழிப்பது என்பதைப் பற்றி பல வகைகளில் சிந்தித்துக் கொண்டுள்ளோம். பழைய புக்ஸ் எல்லாம் லோட் செய்து பார்க்கிறோம். கவலைப்படாதீங்க..' சென்று விட்டார்.

சுற்று முற்றும் பார்த்தேன். மிகப் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது, புரிந்தது.

வெளியே மேலும் பல சிகிச்சையாளர்கள் படுத்திருப்பதை பார்த்தேன். வழக்கமான மெதட்படி டெலிபதியில் அழைத்தேன்.

'சார்.. உங்க கூட பேச எனக்கு பயமா இருக்கு. உங்களுக்கு மிக புதிதான நோய் வர வாய்ப்பிருக்குன்னுட்டு சொல்லி இருக்காங்க..'

'சரி.. நீங்க எதுக்காக அட்மிட் ஆகி இருக்கீங்க..?'

'ரொம்ப சிம்பிள் சார். ஒரு சின்ன ஆப்ரேஷன். ப்ரெய்ன்ல ஒரு சின்ன பார்ட் டேமேஜ் ஆகி இருக்காம். பிட்யூட்டரி க்ளாண்ட்க்கு ஒரு ரீப்ளேஸ்மெண்ட் வெக்கப் போறாங்க. அவ்ளோ தான். அதுக்கு தான் வந்திருக்கேன்.'

'அந்தப் பக்கம் இருக்கறவர்..?'

'அவருக்கு இன்னும் மைனர். மெண்டல் தாட்ஸ் எல்லாம் ரொம்ப பழசாயிடுச்சுனு வந்திருக்கார். புது இமாஜினேஷன், தாட்ஸ் எல்லாம் பண்டல் பண்ணி, பாக்கேஜ்ல டவுன்லோட் ஆகிட்டு இருக்கு. நீங்களே சொல்லுங்க, இவ்ளோ சின்ன வயசில அவருக்கு ந்யூ தாட்ஸ் தேவையா..?'

'அப்படியா.. என்ன ஏஜ்?'

'4694னு சொல்றார்..'

டெலிபதி சேனலை டிஸ்கனெக்ட் செய்து விட்டு, யோசித்தேன்.

இவ்ளோ பேர் இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் இது மாதிரி அதிசயமாக நடக்க வேண்டும்? வித்தியாச சிந்தனைகளுக்கெல்லாம் அர்த்தம் புரிந்தது எனக்கு. இது போன்ற சமயங்களில் தான் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகமே வருகிறது. கடவுள் கான்செப்ட் என்பது எப்போதோ வழக்கொழிந்து போய், ஜீன்கள் எல்லாம் பேக்டரிகள் மூலமாக உற்பத்தியாகி விரும்பியபடி ஜெனரேஷன் உருவாக்கம் செய்கின்ற போது, கடவுள் என்ற பழைய கருத்துக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.

எனினும் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் வாசனை ஞாபகங்கள் அவ்வப்போது எழும்பி விடுகின்றன.

அகஸ்மத்தாய் விக்கி அசிஸ்டெண்ட் ஞாபகம் வந்தது. பைபர் பெண்ணின் ஞாபகம். நமைச்சல் என்ற அந்த உணர்வு கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து போனது, வியப்பாக இருந்தது.

டாக்டர் வந்தார்.

'அந்த பூச்சியை எப்படி அழிக்கறதுனு கண்டுபிடிச்சிட்டோம்.'

'எப்படி டாக்டர்..?'

'பழங்காலத்தில கையிலேயே அடிச்சுக் கொன்னிருக்காங்க. நாமும் அதே தான் பண்ணப் போறோம்..' சொல்லி விட்டு வெற்றிகரமாக சிரித்தார்.

புன்னகைத்து கண்கள் மூடி படுத்துக் கொண்டேன். உடல் வெப்பம் உயர்வதை உணர முடிந்தது.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

***

ஒரு குட்டிக் கவிதை.

யாரும் சொல்வது
காதல் ஒரு Brinjal..!
பாரதியாரும் சொன்னது
சாதல் அதனைப் பிரிஞ்சால்..!

Tuesday, June 24, 2008

ஹைய்யா... ஜாலி...!

ரு சீன்.

மேடை. இரண்டு பேர் ஷார்ட்ஸில் நின்று கொண்டிருக்கிறார்கள். நின்று என்றால் சாதா நின்று அல்ல. உடலெங்கும் வியர்வை பொங்கிக் கொண்டிருக்கின்றது. கண்களில் ஆக்ரோஷம். உடல் அங்குமிங்கும் நகர வெறியோடு நின்று கொண்டிருக்கின்றார்கள். எஸ். குத்துச் சண்டை மேடை அது.

பல ரவுண்டுகள் மோதிக் கொண்டு இப்போது ஆளுக்கு ஒரு புறம் நின்று அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பித்து விட்டதை ரெஃப்ரி தெரிவிக்க, மோதுகிறார்கள்.

படார்... படார்..

கன்னங்கள் கிழிபடுகின்றன. ரத்தம் வாயிலிருந்து தெறிக்கின்றது. வியர்வையும் கலந்து சிதறுகின்றது. அதிர்கின்ற அகெளஸ்டிக்கில் காற்றில் வெறியேறுகின்றது.

'சார்.. யார் ஜெயிப்பார்னு நினைக்கிறீங்க..?'

'இவர் தான்னு நினைக்கிறேன்...'

'எப்படி சார்... போன ரவுண்ட்ல அவர் என்னமா அடி வாங்கி இருக்கார். இன்னும் ரெண்டு ரவுண்டு தாண்டறதுள்ள தாவு தீரும்.. டவுசர் கிழியும்.. பாருங்களேன்..'

'இல்ல... அவர் ராசிப்படி, இந்த ரவுண்ட்ல தான் அவரோட ஃபுல் பவர் காட்டுவார்...'

'அவர்கிட்ட என்ன பேச்சு..? என்ன கேளுங்க... நான் பல வருஷமா இந்த ஃபீல்ட்ல இருக்கேன். ப்ளாக் ஷார்ட்ஸ் தான் இந்த கேம்ல வின். என்ன பெட்..?'

'பெட்டா..?'

'அட.. மெது வா பேசுங்க சார்... பெட் எல்லாம் பேன்ட்...ஐநூறு ரூபா..?'

'அதுக்கு ஏன்யா என் காதக் கடிக்கிறே.... அட.. அங்க பாரு... உங்காளு நெஜமாலுமே அவன் காத கடிச்சிட்டார். அவ்ளோ தான். வயலேஷன் ஆஃப் ரூல்ஸ்..தூக்கிடுவாங்க...'

எவ்வளவு காலம் தான் இந்த பாக்ஸிங்கையும், WWF-ஐயும் பார்ப்பது என்கிறீர்களா..?

ஸீன் மாறுகின்றது.

கும்பலாய் குத்த வைத்து உட்கார்ந்து இருக்கிறார்கள்.

இரண்டு சேவல்கள் சிலிர்த்துக் கொண்டு நிற்கின்றன. நகங்கள் கூர்மையாகச் சீவப்பட்டு உள்ளன. கால்களில் சின்னச் சின்ன ப்ளேடு துணுக்குகள் கட்டி வைக்கப்பட்டு உள்ளன.வட்டக் கண்களில் சிவப்பு சாராயத்தின் விளைவாக மின்னுகிறது. கொண்டை காற்றில் நெருப்பாய் பறக்கிறது.

இரண்டின் வலது கால்களிலும் சணல் கயிறு கட்டப்பட்டு இருவர் பிடித்துள்ளனர். சேவல்கள் மேல் கிள்ளியும், குத்தியும் வெறி ஏற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

'பங்காளிங்களா.. இப்ப விடுங்கடே...'

இருவரும் அவரவர் சேவல்களை வீசுகின்றனர். இரண்டும் ஒன்றன் மேல் ஒன்றாய் விழுகின்றன.

கண்களில் கோபத் தீ கொதிக்க.. அவை சீறுகின்றன. கொத்துகின்றன. அங்குமிங்கும் சுற்றுகின்றன. கூரிய அலகுகள் உடல்களைப் பதம் பார்க்கின்றன. நக ப்ளேடுகள் கீறுகின்றன.

'பங்காளி.. ராசப்பன் சேவ தான் ஜெயிக்கப் போகுது.. என்ன சொல்லுதாம்ல நீ..?'

'நேத்து ராவு அவந்தான் உனக்கு சரக்கு வாங்கி குடுத்தானாலே....க்காளி.. நானும் வந்ததுல இருந்து பாக்கேன். நீ அவனுக்குத் தாம்லே சப்போட்டா இருக்க...'

'..க்காளி... சரக்கு அது இதுனெல்லாம் பேசாத..அத எல்லாம் வுட்டு நாலு மாசமாகுது..'

'அப்ப... நேத்து பொளுதோட தோப்புக்கு போனியே.. எதுக்கு பூச பண்றதுக்கா... ஏம்லே, பொய் சொல்லுத...'

'மச்சான்.. அவங்கிட்ட என்ன பேச்சு...க்காளி.. அவம் பரம்பரயே சரக்கடிச்சு தெருவுக்கு வந்தது தாம்லே..'

'ஏம்லே சண்ட போட்டுக்கறீய... சேவச் சண்ட பாக்க வந்து நீங்க சண்ட போடுத... தாணாக்காரனுக்குத் தெரிஞ்சுது, அம்புட்டு பேரயும் உள்ள வெச்சு பூட்டிப்புடுவாம்ல...'

'பூட்டிடுவானா... எங்க சாதிக்காரம் மேல அவ்வளவு சுளுவா கை வெச்சிட முடியுமாலே... டேசனையே கொளுத்திட மாட்டம்..'

'எங்க மேல மட்டும் கை வெச்சிட முடியுமாலே... க்காளி, அவன் குடும்பத்தையே வெட்டி பொலி போட்ருவம்ல...'

'யப்பா.. எளந்தாரிகளா...சேவச் சண்டைய பாருங்கலே... பொசக் கெட்டதனமா இங்கிட்டு வந்தும் உங்க சாதி சண்டய ஆரம்பிச்சுக்கிட்டு..'

'யோவ் பெருசு... பொத்திகினு இரும்வே... உமக்கென்னய்யா இங்கன வேல...போய் கோயில் மண்டபத்துல குப்புற சாஞ்சு தூங்கும்வே..'

துவும் போர் அடித்து விட்டதா..?

தெருக்கோடி குழாயடிச் சண்டை, பஸ்ஸில் கண்டக்டர் - பயணி சண்டை, பாராளுமன்ற / சட்டசபைகள் ரகளைகள், ஆஃப்கன் போர், சினிமாவில் பொய்ச் சன்டைகள் என்று எல்லாம் பார்த்து மிகவும் போர் அடித்துக் கிடக்கிறீர்களா?

அனானி அண்ணாச்சிகளும், போலி காலிகளும் இல்லாமல் சண்டை பார்க்காமல் சோம்பிப் போயிருக்கிறீர்களா..?

கவலையற்க.

அனல் பறக்கும், கனல் தெறிக்கும் வினைகள், எதிர் வினைகள், எதிர் எதிர் வினைகள், பூமராங், மல்டி லெவல் பல்டி தாக்குதல், சும்மா பறந்து பறந்து அடித்தல் என்று விதம் விதமாக, வகை வகையாக, தரம் பிரித்து வார்த்தைகளால் அறிக்கை, பதிவுகளால் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இருவர்.

சாரு நிவேதிதா மற்றும் ஜெயமோகன்.

தமிழ் இலக்கிய உலகின் தற்போதைய நிலையை அறிய இவர்கள் இருவரின் வலைப்பதிவுகளைச் சென்று பாருங்கள்.

அட்டகாசம். ரொம்ப ரீஜண்டாக எப்படி அடித்துக் கொள்வது என்பதை கற்றுக் கொள்ளலாம்.

சாருவின் மம்மி ரிட்டர்ன்ஸ் தொடர் பதிவுகளைப் படித்து எஞ்சாய் செய்க. ஜெ.வின் இன்றைய பதிவைக் கண்டு, லிங்க் பிடித்து இன்னும் பல பதிவுகளைக் கண்டு மகிழ்க.

ப்போது அடுத்த ஸீன்.

'ஹாய் TX24#76Jf.ஹவ் ஆர் யூ..?'

'ஃபைன். என்ன பண்ணிட்டு இருக்கீங்க...hg54@!H)u?'

'உங்க கூட சாட்...'

'21-ஸ்ட் செஞ்சுரி காமெடி...'

'அவ்ளோ பழசா..?'

'எஸ். வேற என்ன பண்ணிட்டு இருக்கீங்க...?'

'சாருனு ஒரு ரைட்டர் ஒன்ஸ் இருந்தார் போல. அவரோட ராஸலீலா பார்ட்25 தமிழ் ட்ரான்ஸ்லேஷன் படிச்சிட்டு இருக்கேன்...யூ நோ திஸ் கை...?'

'எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு...யா.. ஐ காட் இட். நேத்து நைட் ஜெயமோகன்னு ஒரு பழைய ரைட்டரோட ஆர்டிக்கிள்ஸ் எல்லாம் சீப்பா பர்மா பஜார்ல வித்துட்டு இருந்தாங்க... ரெண்டு காப்ஸ்யூல் 25 எம்.எல். வோட்காக்கு...'

'அவ்ளோ சீப்பா... பரவால்லயே...காப்ஸ்யூல் ஃபார்ம்ல கிடைக்கறதா...சாருவோட புக்ஸ் எல்லாம் டானிக் ஃபார்ம்ல தான் இருக்குனுட்டான்.. இப்ப தான் ரெண்டு டீஸ்பூன் குடிச்சேன்..'

'முழுசா சொல்ல விடுங்க... நான் வாங்கின காப்ஸ்யூல்ல 0.425 மி,கி. எடுத்து நேத்து நைட் போட்டுக்கிட்டேன். மெடிஸினரி ப்ரிஸ்க்ரிப்ஷன்ல 'இது ஜீரணிக்க கஷ்டமானது. எனவே கூட கோபுலு ஜோக்ஸ் டாப்லெட் 0.0025 மி,கி.யும், தேவன் கதைகள் இஞ்சக்ஷன் 0.21 மி.லி.யும் சேர்த்துக்குங்க. துப்பறியும் சாம்பு கிடைத்தால் இன்னும் விசேஷம்னு போட்டிருந்தாங்க.' பட் அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி. மாஸ் ப்ரொடக்ஷன் நெக்ஸ்ட் மந்த் தான் அப்டினு சொல்லிட்டான் பஜார்ல. பைரேட்டட் இருக்குனு கண்ணடிச்சான். வேணாம்னு சொல்லிட்டேன். எதிக்ஸ்னு ஒண்ணு இருக்கோ இல்லியோ..?.... வெய்ட் ஒன் நானோசெகண்ட்....ராஸலீலா... தமிழ் ட்ரான்ஸ்லேஷனா..? அதை எழுதும் போதே அவர் தமிழ்ல தான் எழுதினதா, விக்கி சொல்றான்..'

'வாங்கிட்டியா...?'

'நான் எங்க வாங்கினேன்..? கூகுள் தான் இப்ப விக்கியை வாங்கிட்டான். ஜிமெயில் அக்கவுண்ட் இருக்கறவா எல்லார்க்கும் ஒரு விர்ட்சுவல் விக்கி அசிஸ்டெண்ட் அட்டாச்மெண்டா அனுப்பிடறான். டவுன்லோட் பண்ணிட்டேன். க்யூட் கை. கான்ஃபிக்யுரேஷன் நாமளே பண்ணிக்கலாம். இல்ல, நாமே சொன்னா கூகிள்ல அஸெம்பிள் பண்ணிக் குடுத்திடறான்...'

'நீ எங்க வாங்கினே...?'

'உசிலம்பட்டிக்கு கிட்டக்க குறுக்குப்பட்டில இருக்கற கூகுள் லேப்ஸ்ல தான் ஆர்டர் குடுத்தேன். நம்ம ஏரியாவுக்கு அங்க தான் சர்வர் இருக்கு. சர்வீஸ் ஆன்லைன்லயே முடிச்சிடறான்...'

'விக்கி அசிஸ்டெண்ட் சொல்றது கரெக்ட் தான். அவர் எழுதும் போது தமிழ்ல தான் எழுதினார். பட் அது அப்புறம் மலையாளத்தில ட்ரான்ஸ்லேட் ஆச்சு. அப்புறம் அரபி. உருது. எஸ்பிஞோல். ஆங்கிலம். சைனீஸ். டாய்ஸ்ச். ப்ரெஞ்ச். நிஹோங்கோ... தென் நிறைய ட்ரைபல் லாங்வேஜஸ்ல எல்லாம் ட்ரான்ஸ்லேட் ஆகி இருக்கு. அப்புறம் மறுபடியும் எஸ்பிஞோல்ல இருந்து தமிழுக்கு ட்ரான்ஸ்லேட் பண்ணி இருக்காங்க. ஏன்னா காஸ்ட்ரோனு ஒருத்தர், உனக்கு கூட தெரியுமே, 2500+ ஏஜ்ட் கூபாவோட ப்ரெஸிடெண்ட்... அவர் தான் ஃபினான்ஸியல் ஸப்போர்ட் பண்ணி இருக்கார், ட்ரான்ஸ்லேஷனுக்கு..!'

'சரி... நான் சொல்ல வந்தத சொல்லிடறேன். இந்த ஜெயமோகன் ஆர்ட்டிகிள்ஸ்ல அவரைப் பற்றி கன்னாபின்னானு திட்டியிருக்கு... அந்த சாருவா..?'

'எக்ஸாக்ட்லி...! இந்த சாரு ஆர்ட்டிகிள்ஸ்லயும் மம்மி ரிட்டர்ன்ஸ்னு ஒரு சீரீஸ் இருக்கு. அதுல எல்லாம் இந்த ஜெயமோகன் பற்றி எக்கச்சக்கமா இருக்கு...'

'இவங்க எல்லாம் இதுக்கு வேஸ்ட் பண்ணின எனர்ஜில இன்னும் கொஞ்சம் கதை எழுதி இருக்கலாம். ரான்பாக்ஸில 0xDFD3353FF கலர்ல இன்னும் கொஞ்சம் காப்ஸ்யூல்ஸ் போட்டிருப்பான். இப்ப எழுதுற கதை எல்லாம் கவர்ன்மெண்ட் சென்ஸார் பண்ணிடுது. இந்த சாரு, ஜெயமோகன் போல ஆன்ஸியன்ட் ரைட்டர்ஸ் ஆர்டிக்கிள்ஸ் மட்டும் ஃப்ரீ ஃப்ளோல விட்டிருக்காங்க. அவங்க இந்த மாதிரி சண்டை போட்டிருந்த டைம்ல இன்னும் நிறைய கதை.. வாட்ஸ் தட் ஓல்ட் வேர்ட்..?'

'இலக்கியம்..'

'யா... தட்ஸ் ரைட். அப்படி எழுதி இருக்கலாம்.'

'நீ சொன்னப்புறம் தான், ஐ காட் தட். லாஸ்ட் நைட் கவர்ன்மெண்ட் நோட்டிஸ் வந்திச்சு. இது மாதிரி அடிச்சுக்கிற ஆர்ட்டிக்கிள்ஸ் எல்லாத்தையும் அழிச்சிடப் போறாங்களாம். ஒன்லி ஸ்டோரிஸ் அண்டு லிட்ரேச்சர்ஸ் மட்டும் தான் டேட்டா பேஸ்ல வெச்சு ப்ரொடக்ஷன்ல விடணும்னு பப்ளிஷிங் ஹவுஸ்க்கு ஆர்டர் போயிருக்காம்...'

'கரெக்ட் தான்... அவங்க அடிச்சிக்கிட்டது எதுக்கு நமக்கு...? எனக்கு கிளம்பணும். நைட் லண்டன்ல ஒரு பார்ட்டி இருக்கு. அப்புறம் சிவகாசில ஒரு மைனர் ஆப்ரேஷன் இருக்கு. என்னோட ப்ரெய்ன்ல இருக்குற லாங்குவேஜ் பட்டனை எடுத்திட்டு அங்க A.I. டைமர் வெச்சு மாஸ்க் போடப் போறாங்களாம். ஆர்டர் வந்திருக்கு.. பை.. பை..'

'ஸீ.யூ.. பை.. எனக்கும் டோக்யோல ஒரு டூயல் க்ளோனிங் ஆப்ரேஷன் இருக்கு. ஒரு பேக் அப்புக்கு க்ளோன் எடுத்திட்டு என்னை அழிச்சிடப் போறாங்களாம். தென் ந்யூ பர்த். த்ரில்லா இருக்கு நெனச்சாலே..! பை.. பை...!'

Monday, June 23, 2008

பெருமாளே.. பெருமாளே...!

ன்று மார்க் ட்வைன் அவர்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க எழுத்தாளரான இவரின் சிறுகதைகள், கட்டுரைகளை விட மேற்கோள்கள் இன்றும் பிரபலமாக, பலரால் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. சில:

ஜனனத்தையும் மரணத்தையும் நாம் ஏன் கொண்டாடுகிறோம்? அதில் பங்கெடுக்கும் மனிதனாக நாம் இல்லாதிருப்பதால்.

கற்ற ஒரு ஜெர்மானியன் ஒரு வாக்கியத்தில் விழுந்தான் எனில் அது தான் நீங்கள் அவனை கடைசியாகப் பார்ப்பதாக இருக்கும், அட்லாண்டிக் மாகடலின் மறு கரையில் அவன் வினைச் சொல்லோடு எழும் வரை! (ஜெர்மானிய மொழியின் கடினத்தன்மைகளை அட்டகாசமாக காலை வாரி விடுகிறார் ட்வைன் இங்கே.)

சந்தேகமாய் இருக்கையில் உண்மையைப் பேசி விடல் உத்தமம்.

What is the difference between a taxidermist and a tax collector? The taxidermist takes only your skin.

ஆதாமின் அதிர்ஷ்டம் தான் என்ன? அவன் ஏதாவது நல்லதாக கூறினால், அவனுக்கு முன்பாக யாரும் அதைக் கூறியிராத பெருமை அவனுக்கே!

அனுபவத்தில் இருந்து கிடைக்கின்ற அறிவில் நாம் உஷாராக இருக்க வேண்டும். சூடான பானையின் மேல் அமர்ந்த பூனை மறுபடியும் சூடான பானையின் மீது அமருமா? ஆனால் அது குளிர்ந்த பானையின் மீதும் அமர எண்ணாது.

விருதினை மறுத்தல் என்பது இயல்பை விட அதிக கூச்சலோடு அதைப் பெற்றுக் கொள்ளலே ஆகும்.

புகைப்பிடித்தலை நிறுத்துகிறேன் என்று உறுதிமொழி எடுத்தல் மிகச் சுலபம். நான் அதை ஆயிரக்கணக்கான முறைகள் மேற்கொண்டிருக்கிறேன்.

ஆயிரக்கணக்கான அறிவாளிகள் அடையாளம் கண்டு கொள்ளப்படாமல் மறைகின்றனர் - தம்மாலோ, பிறராலோ.

பொய்கள், பெரும் பொய்கள் மற்றும் புள்ளி விவரங்கள்.

சரியான வார்த்தை பொருத்தமானதே; எனினும் சில சமயங்களில் மெளனம் மிகப் பொருத்தம்.

நண்பராய் இருத்தல் என்பது நாம் தவறாய் இருக்கும் போதும் அருகில் இருப்பதே; சரியாய் இருக்கையில் எவரும் கூட இருப்பர்.

நல்ல புத்தகங்களை படிக்காதவன் படிக்க முடியாதவனை விட சிறந்தவன் அல்ல.

The difference between the right word and the almost right word is the difference between lightning and a lightning bug.

நட்பின் அழகு என்பது இனிமையாயும், விசுவாசமோடும், உறுதியோடும் வாழ்நாள் வரை இருத்தல், கடன் கேட்காமல் இருந்தால்!

ஏப்ரல் முதல் நாள், நாம் மற்ற 364 நாட்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நினைவுறுத்தத் தான்!

வாழ்வின் முதல் பாகம் அனுபவிக்க வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் அற்றும் இருப்பது; இரண்டாம் பாகம் அப்படியே எதிராக!

வேதப் புத்தகம் என்பது ஒரு மருந்துக் கடை; சரக்கு அதே தான், வழங்குபவர்கள் மாறிக் கொண்டே இருப்பர்.

கடவுளால் இயலாத காரியம் என்பது ஒன்றே ஒன்று தான்; காப்பிரைட் விதிகளில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்பதை அறிவது தான் அது.

சில சமயங்களில் நோவா மற்றும் அவரது குழுவினர் படகை நழுவ விட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

பெரும் கூச்சல் எதையும் உணர்த்துவதில்லை; ஒரு கோழி கூட முட்டையிடுகையில் ஒரு விண்கோளையே இடுவது போல் கூச்சலிடுகின்றது.

எல்லா கண்டுபிடிப்பாளர்களிலும் சிறந்தவர் யார் எனின், அது தற்செயல் தான்.

நாம் எண்பதில் பிறந்து, பதினெட்டை நோக்கி நகர்வதாய் இருந்தால் வாழ்க்கை இன்பமயமாக இருந்திருக்கலாம்.

சென்ற வாரம் ஒரு பெண் தான் நான் சந்தித்த பெண்களிலேயே அசிங்கமானவள் என்று சொன்னேன். இன்று அவள் தங்கை என்னைப் பார்க்க வந்தவுடன், அந்த வாக்கியத்தை திரும்ப பெற விழைகிறேன்.

நாம் அனைவரும் ஒன்று போல் சிந்திப்பது சிறந்த ஒன்றாய் இருக்க முடியாது; வேறுபட்ட சிந்தனைகள் தான் குதிரைப் பந்தயங்களை நடத்த உதவுகிறது.

உண்மையில் எதுவும் சரியான சமயத்தில், சரியான இடத்தில் நடப்பதில்லை; வரலாற்று ஆசிரியர்களும், பத்திரிக்கை ஆசிரியர்களுமே அதைச் செய்கிறார்கள்.

சண்டையிடும் பூனைகளே தங்கள் எரிச்சலுக்கு காரணம் என்று அறியாதவர்கள் நினைக்கிறார்கள்; அல்ல, அவற்றின் தவறான இலக்கணப் பிரயோகமே அதற்குக் காரணம்.

நீங்கள் ஒரு வறுமையான நாயை செல்வந்தனாக ஆக்கினால் அது என்றும் உங்களைக் கடிக்காது; இது தான் நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்.

மேலும் அறிந்து கொள்ள :: மார்க் ட்வைனின் மேற்கோள்கள்.

மேலே பார்த்த பல வாக்கியங்களில் ; பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை நாம் நடைமுறை வாழ்வில் எங்கு உபயோகிக்கிறோம். கணிணியில் நிரல்கள் எழுதுகையில் மட்டுமே! தமிழ் இலக்கியங்களில் எங்காவது செமி கோலன் (முக்காற்புள்ளி?) இருக்கின்றதா என்று யாராவது பெரியவர்கள் சொன்னால், நலம்.

புள்ளி வைத்து தொடர்பை கத்தரித்து விட்டு விடக்கூடாது. ஆனால் வாக்கியமும் முற்றுப் பெற்று அடுத்த வாக்கியத்தில் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க வேண்டும் என்ற சமயங்களில் ; உபயோகப்படுத்துக என்கிறார் விக்கி ஆர்டிக்கிளார்.

நேற்று மதியம் இலேசாக மேகமூட்டம் போட்டிருந்தது. வீட்டில் இருந்து கிளம்பி, பேருந்து நிறுத்தம் வந்தேன். 10 நிமிடங்களாக காத்திருக்கிறேன், மர்பியின் விதிகளை நிரூபிப்பது போல் கிழக்கு கோட்டை வரும் பேருந்துகளே வரவில்லை. தம்பானூர் செல்லும் பேருந்துகளே தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. பிறகு ஒரு பேருந்து வந்தது. ஏறி, அமர்ந்து கிழக்கு கோட்டைக்கு சீட்டு எடுத்துக் கொண்டு ஒரு புறம் அமர்ந்தேன்.

'இங்க எங்கயுமே தமிழ்ப்படம் சி.டி. கிடைக்க மாட்டேங்குது. எங்க கிடைக்கும்.?'

'பீமாபள்ளி போங்க. அங்க எல்லா சி.டி., டி.வி.டி.யும் கிடைக்கும்.'

ஈஸ்ட் ஃபோர்ட்டில் இறங்கிக் கொண்டு விசாரித்தேன். அப்புறத்தில் உள்ள பேருந்தில் ஏறிக் கொள்ளப் போகையில் ஒரு திரையரங்கு இருந்தது. பெயர் மறந்து விட்டது. தசாவதாரம். செம கூட்டம். பா.ராகவன் சார் சொன்னதை விடவும் நிறைய விசிறிகள் கமலுக்கு இருப்பார்கள் போல்!

பேருந்து கிளம்பி, வெஸ்ட் ஃபோர்ட், கோவளம் ஹைவே ஜங்க்ஷன் கடந்து அரபிக்கடலை நோக்கி போனது. ஏர்போர்ட்டைத் தாண்டியது. பல குட்டி குட்டி ஊர்களைக் கடந்தது.

பீமாபள்ளியில் வந்து நின்றது. அற்புதமான ஒரு மசூதி. தர்கா. ஒரு காலத்தில் பிக் ஃபன் என்று ஒரு பபுள்கம் வந்தது , ஞாபகம் இருக்கிறதா? அதனுடைய ரோஸ் கலர் இருக்குமே, அப்படி ஒரு பால் ரோஸ் கலரில் மசூதி. அதன் வளாகத்தில் தான் பஸ் டெர்மினஸ் போலும்!

அங்கேயே இறங்கிக் கொண்டு பார்த்தால் எக்கச்சக்க டி.வி.டி., சி.டி. ஷாப்புகள்.

ஒரு கடைக்குச் சென்று சில வாங்கினேன். சொன்னால் பெருமாளின் கடைசி அவதாரத்தில் ஸம்ஹாரம் செய்யப்பட வேண்டியவர்களின் ஹிட் லிஸ்டில் என் பேரும் ஏற்றப்படும் என்பதால்...உஷ்ஷ்ஷ்ஷ்...!

அப்படி சீப்படுகிறது! எங்கே பார்த்தாலும் விஜய் போஸ்டர்! போக்கிரி சி.டி.ஸ்! கூவிக் கூவி விற்கிறார்கள். நான் வாங்கிய கடையில் நான் தேடிக் கொண்டிருந்த போது ஒருவர் வந்தார். அவர் ஒரு சீட்டைக் கொடுத்து, அதில் இருக்கும் படங்கள் எல்லாம் வேண்டும் என்றார். பாருங்கள் :

தாய்க்குப் பின் தாரம் - எம்.ஜி.ஆர்.

நீதிக்குத் தலை வணங்கு - எம்.ஜி.ஆர்.

பறக்கும் பாவை - சிவாஜி.

மெல்லத் திறந்தது கதவு - மோகன்.

எங்க ஊரு பாட்டுக்காரன் - ராமராஜன்.

இன்னும் இந்த ரேஞ்சிலேயே சில படங்கள். எனக்கு எங்கு இருக்கிறோம் என்று சந்தேகமே வந்து விட்டது. ஊரில் கிராமத்துப் பக்கம் திருவிழாவின் கடைசி நாளில் தெருவில் ஸ்க்ரீன் கட்டி ப்ரொஜக்டரில் போடும் படங்களாக வாங்கிக் கொண்டிருந்தார்.

கிளம்பும் போது மசூதிக்குச் சென்று பார்க்கலாமா என்று ஆசை வந்தது. கேட்டாலும் விட்டிருப்பார்கள் என்று தான் தோன்றியது. பேருந்துப் பயணத்தில் படிக்கலாம் என்று கொண்டு வந்திருந்த புத்தகம் தான் பயமுறுத்தியது. சரி, இன்னொரு நாள் வரலாம் என்று திரும்பி வந்து விட்டேன். ஆசிரியர் :: குஷ்வந்த் சிங். புத்தகம் :: ட்ரெயின் டு பாகிஸ்தான்.

சாவதாரம் பற்றிய விமர்சனங்கள் தூள் பறந்தது கொஞ்ச காலமாய்! என்னைப் பொறுத்தவரை கமல் சொன்னது கொஞ்சம் மாற்றி, 'அற்புதமாக படம் எடுத்தால் அனுபவிக்கணும்! ஆராயக் கூடாது.' அவ்ளோ தான்.

1. மல்லுக்குட்டி அசினுக்கு ஒரு டூயட் வெச்சிருந்திருக்கலாம். வேஸ்ட் பண்ணிட்டாங்களே!

2. எனக்கு பிடித்த கமல் கலிஃபுல்லா தான். அந்த அப்பாவித் தனம் தான்.

3. ஒக்கே ஒக்க டவுட். 12-ம் நூற்றாண்டில் கடலில் நம்பியை விட்டதும், அசின் தாலியை ஒரு சிங்க சிலையில் வீசி எறிகிறார். அதே சிலையில் நவீன காலத்தில் கால் இடறுகிறார். எனக்குத் தெரிந்து ஆற்று மணலைத் தான் கடத்துவார்கள். எனில், 12-ம் நூற்றாண்டில் கடற்கரையோரமாக இருந்த மண் டபமும், சிங்க சிலையும் இருந்த பகுதி, 21-ல் ஆற்றுப்பகுதியாக மாறி விட்டதா?

அட, ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம, பத்து கமலையும் ஆற, அமர இரசிப்பதற்காக இன்னும் சில முறைகள் படம் பார்க்கணுங்க.

பத்து தடவை ஹேட்ஸ் ஆஃப் கமல்ஜி!!!

கமல் ரசிகர்களே, கஷ்டப்பட்டு மாஸ்க் எல்லாம் போட்டு பத்து வேஷங்கட்டி கலக்கி எடுத்திருக்கார்னு ரொம்ப பந்தா பண்ணிக்காதீங்க!! குசேலன் ஃபோட்டோ எல்லாம் பாத்தீங்க இல்ல? தலைவர் எப்படி வர்றார்னு வெய்ட் செஞ்சு சூஸ்தண்டி....!