Sunday, February 05, 2017

நீலாம்பல் நெடுமலர்.15.




னமே விழி; கனவே ஒழி; தினமே பொழி;

நகும் முகம் தெரியும் வேளையில் கடல் நுனியில் கதிரெழும் கணம்.

நீலத்தாமரையைச் சுற்றும் பொன்வண்டு என் எண்ணம். வேறெங்கே மழை பொழிகின்றது என்றறியாது நனையத் துடிக்கின்ற நீர்த்தவளை என் நினைவு. தீந்தழல் நடமிடும் சுடுவெளியைச் சுட்டிச் சுட்டி விழுகின்ற சிறு பூச்சி என் சொல். கனவிலும் நடிக்கின்ற நிழல் என் தவிர்ப்பு. கனவோ கற்பனையோ உன் விரல்நுனிகளைக் குளிர்விக்கின்ற இந்நதியின் அலைகளில் சுழல்கின்றது என் இருப்பு.

நீ வருகின்ற பாதைகளின் விளிம்புகளில் அடர்த்தியாய்ப் பூத்திருக்கும் செவ்விதழ் ரோஜாக்கள், என் முத்தங்கள். நீ உணர்கின்ற சுகந்தத்தின் சுரப்பு மையங்களாய் மஞ்சள் சம்பங்கிகளை என் சொற்களில் பூசி அனுப்புகிறேன். நீ மெல்லிய வெண்விரல் கொண்டு கோதுகையில் விலகி விடுபடும் ஒற்றை முடி உறங்குகின்றது என் மனவிருளின் ஆழங்களில்.

எழிலொளி வீசி வரும் பசுமுகிலே! ஈரக்கொத்துகளை சுமந்து நிலவு மறைத்து நீ மிதக்கின்ற வானவெளியில் வெண்புறாவென உனைத்தீண்டி நனைய இரு சிறகுகளை இறைஞ்சுகிறேன்.

புது மொழியொன்றின் பரவசத்தில் நீ சிந்தும் சொற்களை அள்ளிக் கொண்டு என் பெட்டிகளில் பதுக்கிக் கொண்டபின், மயில்குட்டிகளாய் அவை பெருகுவதை ஒவ்வொரு இரவும் ரகசியமாய்த் திறந்து பார்த்து மகிழ்கிறேன்.