Saturday, June 20, 2009

மொக்ஸ் - 20.JUN.2K9



ருக்குச் செல்வதற்கு ஒவ்வொரு முறையும் வழிகள் மாற்றுவதில் எனக்கு விருப்பம் அதிகம். சில சமயங்களில் இங்கிருந்து கிளம்பி, இரண்டு மணிகளில் எல்லை கடந்து, நாகர்கோயில், நெல்லை, மதுரையில் உதிர்ந்து, பஸ்ஸில் ஈரோடு அடைந்து 5 அல்லது 3-ல் வீட்டை அடைவேன். பிற சமயங்களில் கேரளா உள்ளேயே ஊடுறுவி, கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்ப்ரஸில் சென்று, அங்கே இருக்கும் கனெக்ஷன் பாஸஞ்சரில் கோவையில் இறங்கி, இரண்டரை மணி நேரத்தில் வீட்டுக்கு மறு பஸ் பயணம் செய்வேன். இதில் இனிப்பாய் இருப்பது பாலக்கட்டுப் பயணம்.

அமிர்தா எக்ஸ்ப்ரஸ் நாளின் இறப்பிற்குச் சற்று முன் 23 மணிக்கு அனந்தபுரத்தில் இருந்து கிளம்பும். ஏழு, ஏழேகாலுக்கு பாலக்காட்டை அடையும். திருச்சூர் வரை கூட்டம் அப்பும். பிறகு ஏறக்குறைய வண்டி காலியாகிவிடும். அதிகாலை ஐந்து மணியில் இருந்து ஏழு மணிக்குள் அத்தனை குளிரில் கேரளத்தைத் தாண்டுவது ஓர் அனுபவம்.

கொஞ்சம் மேட்டிலேயே பயணிப்பதால், பனி அப்படி கொள்ளை கொள்ளையாய் வயல்களைத் தழுவியிருக்கும். பொதிப் பொதியாய் மிதக்கும் வெண்புகைகள் கால்களை வந்து நனைக்கும். சோம்பேறித்தனமாய் எழ யோசிக்கும் தொலைதூர கதிரொளிகள் சிலீர் என வானின் பெரும்பரப்புக்குள் நீண்ட விரல்களை நீட்டும். வயல்வெளியின் சிலுசிலு பரப்புக்குள் அத்தனை வெகுகாலையில் ஈரத்துணியை மேலே போட்டு நடப்பாள் ஒரு பெண். கைகாட்டி மரங்கள் இரவு முழுதும் பெய்த குளிரில் பொட்டுப் பொட்டாய் நனைந்திருக்கும். பள்ளி மாணவர்களின் பளிச் சீருடையில் நமது தூக்க வீக்க முகம் அசிங்கமாய்த் தெரிய, அவர்கள் தமக்குள் இளம் பாஷையில் சிரித்துக் கொண்டே வருவார்கள்.

மஞ்சு போர்த்திய வீடுகள், சிம்னிகளிலிருந்து மேல் நோக்கி கசியும் சமையல் புகை, கொத்துக் கொத்தாய் வாழைப் பச்சைகள், நெளிந்து நெளிந்து அலையலையாய் மிதந்து வரும் மலைத்தொடர் வடிவங்கள், கூடவே ஓடி வரும் ஆற்றின் மணற்துகள்கள்.. அழகு..!

சென்ற முறை பாலக்காடு - கோவை பாஸஞ்சரில் சென்ற போது வானம் எங்கிருந்தோ அவ்வளவு மேகங்களை அள்ளிக் கொண்டு வந்திருந்தது. பாலக்காடு, கஞ்சன் கோடு, வாளையார், மதுக்கரை, கோயம்புத்தூர் ஜங்ஷன் ஸ்டேஷன்களில் மட்டும் நின்று நின்று வரும். சரியாக காலையில் இவற்றைக் கடக்கும் போது தான், மூன்று எக்ஸ்ப்ரஸ்கள் எதிரே கடக்க வேண்டி வரும். பாஸஞ்சர் என்ற இந்த தாழ் ஜாதி வண்டி உடனே ஒதுங்கி நிற்கும். அது ஏதாவது ஸ்டேஷனோ இல்லை 'யானைகள் கடக்கும்' போர்ட் நிற்கும் காட்டுப்புறமோ, எங்காகிலும் நின்று, நம் பொறுமையைப் பலமாகச் சோதித்து விட்டு எக்ஸ்ப்ரஸ்கள் கடந்தவுடன் கிளம்பும்.

ஓர் அப்பா, இரண்டு பெண்களைப் பார்த்தேன். பெரியவள் ஜன்னலோரமாக அமர்ந்து அவ்வப்போது வானிலிருந்து தெறிக்கும் சாரல்களை கைகளால் ஏந்திக் கொண்டு ஊதினாள். அவள் உள்ளங்கைகள் அத்தனை வெண்மையாய் இருந்தன. சின்ன சந்தன பொட்டிட்டு இருந்தாள். அழகான சுடி, இடது தோளில் தொங்கிய கண்ணாடிப் பொட்டுக்கள் பதித்த டாப்ஸ், ஹோல்சேல் ரோஸ் நிற உதடுகள், லேசான அலைபாயும் தயக்கப் பார்வைகள் இருந்தாலும், அவள் தங்கை என்பதாலேயே பக்கத்திலிருந்த குட்டிப் பெண் இன்னும் அழகாய்த் தெரிந்தாள்.







ண்பர் செந்தழல் ரவி, உரையாடல் போட்டிக்கு வந்த கதைகள் ஒவ்வொன்றையும் படித்து விமர்சனங்கள் வைத்துள்ளார். கடின உழைப்பைக் கேட்கும் இந்த செயலை மேற்கொண்டதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். எனக்கும் சில விமர்சனங்கள் உள்ளன. போட்டி முடிந்ததும் எழுதுகிறேன்.

மீபத்தில் படித்துக் கொண்டிருக்கும் நூல்களில் 'ஹாத்திம் தாய்' என்ற புத்தகம் பிடித்திருக்கின்றது. இது ஒரு பாரஸீகப் பெருங்கதை. ஹஸன்பானு என்ற இளவரசி ஏழு கேள்விகள் வைக்கிறாள். ஹாத்திம் தாய் என்ற கட்டழகான இளவரசர் அந்த ஏழு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிக் கண்டுபிடித்து பானுவிடம் வந்து சொல்லும் பெருங்கதை. 1 * 8 க்ரவுன் அளவில், 11 புள்ளி எழுத்திலேயே 424 பக்கங்கள் வந்திருக்கின்றன. சுத்தமான சேப்டர் hierarchy கதை.

ஒரு கேள்விக்கு விடை தேடிப் போகிறார். அங்கே ஒருவரைச் சந்திக்கிறார். அவனுக்கு ஒரு கஷ்டம். தயாள தாய் அவன் கஷ்டத்தை நீக்கப் பார்க்கிறார். அதற்கான முயற்சிகளில் இறங்கும் போது ஒரு பாம்பு வந்து, நான்கு கேள்விகளை அள்ளிப் போடுகின்றது. அதில் முதல் கேள்விக்கு விடை காண ஒரு காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஒரு கிழவி அழுகிறாள். அவள் பேரனை ஒரு பூதம் தின்னப் போகிறது. தாய் விட்டு விடுவாரா என்ன? பூதத்தை வெல்ல வழி தேடும் போது வேதாள உலகத்தில் விழுந்து விடுகிறார். அங்கே வேதாள இளவரசி இவர் அழகைக் கண்டு மயங்கி விட, தாய் இளவரசியோடு ஜல்ஸா செய்கிறார். வேதாள அரசனுக்கு கோபம். அதிலிருந்து தப்பிக்க, ஒரு குளிகையைச் சாப்பிட ஒரு கிணற்றுக்குள் மயங்கி எழுகிறார். ஒரு பிசாசு அவர் எதிரில் நிற்கிறது.

இப்படியே போய்க் கொண்டே இருக்கின்றது கதை. ஒரு வாரமாகப் படித்து இப்போது தான் முதல் கேள்விக்கு விடை கண்டுபிடித்திருக்கிறார். இரண்டாவது கேள்விக்கு பயணம் துவங்கி இருக்கிறார். நமது சிம்பிள் கற்பனைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு 'நெக்ஸ்ட்?' என்று கேட்கிறார்கள்.

செம ஜாலியாக படிக்க வேண்டிய கதை இது. இவன் என்ன ஆனான்? அவளுக்கு நோய் சரியானதா? என்றெல்லாம் கவலையே படாமல் கதை செல்லும் போக்கிலேயே போக வேண்டியது தான். முந்தைய ஸீக்வென்ஸ்களை நினைவில் வைத்துக் கொள்ள முயன்றால் அவ்வளவு தான். கிறுகிறுத்து விடும்.

பிரேமா பிரசுரத்தில் (aruram@md2.vsnl.net.in) சேரன் என்பவர் தொகுத்து எழுதியிருக்கிறார். (இவர் எந்த சேரன்?).

65 ரூபாய்க்கு அளவிலா கற்பனைகள்.

பாஞ்சாலி சபதம் எழுதி முடித்தவுடன், மகாகவி பாரதியார் ஒரு சமர்ப்பணமும், முகவுரையும் எழுதியிருக்கிறார்.

சமர்ப்பணம்

தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கும், அவர்களுக்குத் தக்கவாறு காவியங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும் இந்நூலைப் பாத காணிக்கையாய்ச் செலுத்துகிறேன்.

- ஆசிரியன்

முகவுரை

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு - இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன், நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைபடாமலும் நடத்துதல் வேண்டும்.

காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆகையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன். பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக!

...

தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங்கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலிலே தூண்டினாளாதலின் இதன் நடை நம்மவர்க்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன். ஓம் வந்தே மாதரம்!

- சுப்பிரமணிய பாரதி.

ரு சலூன் வெண்பா.

வெட்டும் தலைமேல் வழித்த முகதாடை
தொட்டிட பட்டாய்ப் பளபளக்க - கட்டாயம்
கட்டிங்கோ ஷேவிங்கோ காலையில் வந்தாலோர்
சிட்டிங்கில் சீராகும் பார்.

Sunday, June 14, 2009

புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.



1. ப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். 'துருவனும் குகனும்' என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, 'போலீஸ் செய்தி'க்கு அனுப்பாதீர்கள்.

2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். 'பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்' என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி...

4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். 'உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.' என்று சொல்வதை விட 'துப்பினான்' என்பது மேல்.

6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். 'அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்... இத்தியாத்திக்குப் பதிலாக, 'அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட 'போனான்' என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக 'னான்' என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.

10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.

11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.

***

பக்கங்கள் 118 - 119. தோரணத்து மாவிலைகள். சுஜாதா. விசா பப்ளிகேஷன்ஸ், தி.நகர். 044 - 24342899, 24327696.

Thursday, June 11, 2009

வாழ்த்துக்கள்.



திவர் பொன்ஸுக்கு இன்று திருமணம். வாழ்த்துக்கள்.

http://sangamwishes.blogspot.com/2009/06/wishes_11.html

'பொன்ஸ்’க்கு கன்னாலம்…

Monday, June 08, 2009

மொக்ஸ் - 09.JUN.2K9



ண்பர் பதிவர் தமிழ்ப்பறவை, எனது கதை ஒன்றுக்குத் படங்கள் அனுப்புவதாக உறுதியளித்து முதல் சேப்டருக்கு அனுப்பி இருந்தார். அது இங்கு உள்ளது. அந்த சேப்டரிலும் இணைத்து விட்டேன். தொடர்ச்சியாக படங்கள் வரைந்து தருவதாக கூறி, அதற்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அந்தக் கதையை முழுதும் எழுதி முடிக்க வேண்டுமாம்.

கஷ்டம் தான் என்று சொல்லியிருக்கிறேன்.

டந்த சில தடவைகளாக கவனிக்கிறேன்.

தென்னக ரெயில்வேயின் கேரளா செல்லும் அத்தனை ரயில்களின் அத்தனை ஜெனரல் கம்பார்ட்மெண்ட்களிலும் பீகாரிகள், ஒடிஸாக்கள்; பெங்காலிகள் அப்பிக் கொண்டு வந்து, வழிகளில் கொத்துக் கொத்தாக உதிர்கிறார்கள். தங்களது பான் தடங்களையும், பல வர்ண லுங்கிகளையும், இடைவெளியிட்ட கறை படிந்த பற்களையும் கூட உயிர் வாழ்ந்தாக வேண்டிய சர்வைவல்தனத்தையும் சுமந்து வருகிறார்கள்.

நிலம் அதிரப் பிளக்கும் மல்டி அபார்ட்மெண்ட், மால் கட்டிடங்களின் ஸ்கெலடன்களை உருவாக்குவதில் இவர்கள் தான் சீப்பாக கிடைக்கிறார்கள். என்கிறார்கள். முன்பு தமிழர்கள் கிடைத்துக் கொண்டிருந்தார்கள்; இப்போது அவர்கள் டீக்கடைகளிலும், ஹோட்டல்களில் பெஞ்ச் துடைப்பதிலும், ஒதுங்கிக் கொள்ள வறுமை துரத்தும் கடின உழைப்பாளிகளாக வடவர்கள் கிடைப்பதாக ஒருவர் சொன்னார்.

கல் உடைக்கிறார்கள்; சிமெண்ட் கலக்கிறார்கள்; டயர் காலணி கட்டி தாரில் நடக்கிறார்கள்; ரோட்டிலேயே அவ்வப்போது துப்புகிறார்கள்; மீசை இல்லாத முகங்கள், சட்டென கேரளர்கள் மத்தியில் அன்னியப்படுத்தி விட, ஒரு குரூப்பாகவே அலைகிறார்கள்; வெளிறிய ஜீன்ஸ் மேல் சட்டை இழுத்து விட்டு இறுக்கமாக துண்டு கட்டுகிறார்கள்; பறட்டையான எண்ணெய் காணாத மென் பழுப்பு முடி வறவறக்க அலைகிறார்கள்; கையேந்தித் தள்ளுவண்டிகளிலேயே முடித்துக் கொள்கிறார்கள்;

கலைந்து தூங்கிக் கொண்டே ஒவ்வொரு பெட்டியிலும் அடைத்துக் கொண்டு வரும் இவர்களை விந்தியத்தின் கீழ் முனைக்குத் துரத்தியது யார்கள்..?

நேற்று இரவு பயணிக்கும் போது, காய்ந்த மார்பை நிரடிக் கொண்டு, தேடிக் களைத்து அழுத கைக்குழந்தையை, முதுகில் அடித்து, மார்பெலும்புக் கூட்டிற்குள் திணித்துப் புடவையில் மூடிக் கொண்ட பெண்ணுக்கு இந்தப் புண்ணிய தேசத்தை ஆண்டவர்கள் செய்தது என்ன? செய்வது என்ன...?

முதல் தளத்தில் என் எதிரில் அமர்ந்து கொண்டு, என்னை விட, இரண்டு அடி முன்பாகவே பயணம் செய்தவர் ஒரு கேரளர். அவரிடம் 'கொறச்சு கொறச்சு' மலையாளத்தில் 'சம்ஸாரித்த' போது, என்னை அவரினம் என்று நினைத்துக் கொண்டார். பின் உண்மை தெரிந்து, 'எனக்கும் தமிழ் கொறச்சு அறியான். தமிழ் மாத்ரம் அல்லா, கொறச்சு இங்க்லீசு, கொறச்சு ஹிந்தி, கொறச்சு அரபி அறியான்' என்றார். வியப்பாக இருந்தது. பின் பேச்சு எங்கெங்கோ திரும்பி, இந்த வட இந்தியர்கள் 'பெங்காலிலிருந்து வரவில்லை; கல்காத்தாவில் இருந்து' என்றார். 'எந்தா வல்லிய difference?' என்று கேட்டேன். அவர், 'கல்காத்தா பெங்காலில் இருந்து கிட்டத்திலா, தூரத்திலா?' என்று கேட்டார்.

அத்தனை கொறச்ச மொழிகளிலிருந்தும் அப்படி என்ன தான் அறிந்து கொண்டிருப்பார் என்று சந்தேகம் வந்தது.

ஞாயிற்றுக்கிழமை மொட்டை மாடிப் படிக்கட்டில் அமர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்த போது, ஒரு நியூஸ் சேனலில், ஏற்காடு பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். 'ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்ப்டுகின்றது...'. ஒரு அழகான வாக்கியம் எப்படி முட்டாள்தனமாக இருக்க முடியும் என்பதற்கு உதாரணம் இது எனலாம். யார் ஏற்காட்டை 'ஏ.ஊ.' என்று அழைக்கிறார்கள்? ஏற்காடு என்ன உயிரினமா? உயர்திணையா? யாராவது அழைத்தால் அது பதில் சொல்லுமா..? அது ஓர் ஊர் அல்லவா? பின் எப்படி அதை 'அழைக்க முடியும்..?'. சொல்லப்படுகின்றது. குறிப்பிடப்படுகின்றது. என்பன தானே சரியாக இருக்க முடியும். இது போன்ற அர்த்தம் கெட்டவற்றைக் கேட்கும் போது ஏற்படும் எரிச்சல் கொஞ்சம் அல்ல.

ற்றுமொரு எளிமையாகச் செய்ய முடிகின்ற தவறு, Invention, Discovery இடையேயான உபயோகங்கள். Invention என்றால் புதிதாக உருவாக்குவது; Discovery என்றால் ஏற்கனவே இருந்த ஒன்று, இதுவரை யாராலும் வெளியுலகிற்குச் சொல்லப்படாமல், வெளியுலகு அறியாத ஒன்றைக் (கண்டு - பிடிப்பது).

டெலிவிஷனை உருவாக்கியவர் ஜான் பெயர்ட்.
அமலாவைக் கண்டுபிடித்தவர் டி.ஆர்.

Telephone was invented by Bell.
America was discovered by Columbus.

இதனை எளிமையாக நினைவு கொள்ள நான் ஒரு கொக்கி வைத்திருக்கிறேன்.

டிஸ்கவரி சேனலில் பெரும்பாலும் என்ன காட்டுகிறார்கள்? யானைகள் தும்முவதையும், மான்கள் கிழிக்கப்படுவதையும், கொம்புகள் முறிக்கப்படுவதையும், மூட்டைப்பூச்சிகள் முதுகில் அமர்ந்து முனகுவதையும் தானே பார்க்கிறோம். அவை ஏற்கனவே இருப்பவை தானே? எனவே ஏற்கனவே இருப்பது என்றால் டிஸ்கவரி. புத்தம் புதிய மேட்டர் என்றால் இன்வென்ஷன்.

சிம்பிள். இல்லையா? சின்ன வயதில் அம்மா தான் வித்தியாசத்தைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

Sunday, June 07, 2009

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.

ண்மையில் வாங்கிய வாத்தியாரின் 'ஓரிரு எண்ணங்களில்' எழுதுவது பற்றி சில வரிகள் சொல்லியிருக்கிறார். தெரிந்து கொள்வது இன்னும் நம்மைக் கொஞ்சம் விசாலமாக்கும் என்பது என் நம்பிக்கை.

689 நல்ல கதைகள் படித்து அலசிய ஹெல்மட் பான்ஹைம் என்பவர் நல்ல சிறுகதை என்பதற்கு பன்னிரண்டு அடையாளங்கள் சொல்கிறார்,

1. என்ன சொல்லப்பட்டது என்பது எப்படி சொல்லப்பட்டது என்பதை விட முக்கியமாக இருக்கும்.

2. ஒரு சிறுகதையின் ஆரம்ப வாக்கியத்திற்கு முன் கதையின் தொண்ணூறு சதவிகிதம் நடந்து முடிந்திருக்கும். அதாவது சிறுகதை முடிவுக்கு மிக அருகில் ஆரம்பிக்கும் பெரிய கதை.

3. எல்லோருக்கும் எழுத வரும். ஆனால் அந்தக் காலகட்டத்திலும் சுமார் 10 பேர் தான் நல்ல சிறுகதை எழுத்தாளர்கள்.

4. சிறுகதைக்கான விஷயம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் திறமை, பிறவியில் ஏற்படுவது. அதை எந்தக் கல்லூரியிலும், புத்தகத்திலும் கற்க முடியாது.

5. எந்த நல்ல கதையிலும் எழுதியவரின் நினைவாற்றலின் நுட்பம் இருந்தே தீரும்.

6. உலகத்தில் எழுதப்பட்ட மொத்த கதைகளில் 85% பார்த்த, கேட்ட, உணர்ந்த, படித்த அனுபவத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. இது ஒரு .விவரம்.

7. எனவே, நல்ல சிறுகதை எழுத்தாளனுக்கு கண், காது, மூக்கு சரியாக இருக்கும்.

8. சிறுகதைக்கான விஷயம் தேர்ந்தெடுப்பதில் இரக்கமோ நாசூக்கோ மரியாதையோ இருக்காது. அதற்கு காப்பியடிப்பதைத் தவிர, மற்ற எந்தவிதமான பாவச்செயலும் செல்லுபடியாகும்.

9. நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் நிறையப் படித்திருக்கிறார்கள்.

10. உலகில் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது.

11. கதைக் கருத்து என்று புதுசாக ஏதும் இல்லை. எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டு விட்டன. புதிய இடங்களில், புதிய காலங்களில், புதிய வடிவமைப்புகளில் பழைய கதைகளைத் தான் சொல்கிறோம்.

12. கதைக்காக ஒரு 'இன்ஸ்பிரேஷன்' - ஒரு கற்பனைக் கன்னி வந்து பால் புகட்ட வேண்டும் என்று ஒரு கதாசிரியர் காத்திருந்தால், பட்டினியால் செத்துப் போவார். எல்லாக் கதைகளும் கொஞ்சம் அவசரமும், கொஞ்சம் உணர்ச்சி ஊற்றும் கலந்து எழுதப்பட்டவை.

சில பொன்மொழிகள் :

பெரும்பாலான கதைகள் ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன.

வாழ்க்கையின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி ஒரு கேள்விக்குறியில் முடிகின்றன.

ஃப்ராங் ஓ கானர், 'சிறுகதை சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்களின் தனிமையைப் பற்றியது' என்றார்.

சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது.

அன்றாட அலுப்பு வாழ்க்கையில் உயிரின் புதிர் சட்டென்று புரியும் கணம் ஒன்றை அது சொல்லும். அந்தக் கணத்தை ரெவலேஷன் அல்லது வெளிப்பாடு அல்லது epiphany என்கிறார்கள். அவதாரம், அற்புதத் தோற்றம் என்று பலதும் சொல்கிறார்கள். இது zen தத்துவத்திலும் உண்டு. Satori என்பார்கள்.

'எப்போது கதை எழுதினாலும் சந்திரனை எட்டிப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அப்போதுதான் தெரு விளக்காவது; அல்பம் ஒரு மெழுகுவர்த்தியாவது கிடைக்கிறது.'

ராபர்ட் பென் வாரன் சொன்னது;

"THE IMAGE THAT FICTION PRESENTS IS PURGED OF THE DISTRACTIONS CONFESSIONS AND ACCIDENTS OF ORDINARY LIFE."

"தின வாழ்வின் அலுப்பான விவரங்கள் விலக்கிவிட்டு அதன் காலம் கடந்த சமாச்சாரப்க்களைக் கண்டுபிடிப்பதுதான் இதன் சூட்சுமம்".

ழுதுவது எப்படி என்று என்னைக் கேட்டு பல கடிதங்கள் வருகின்றன. என்னால் அதை விளக்கமாகச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. பதிலாக எழுத்துக் கலையைப் பற்றி சில நல்ல எழுத்தாளர்களும் அறிஞர்களும் சொன்னதை வாராவாரம் சொல்கிறேன்.

இந்த வாரம் அரிஸ்டாட்டில்:

"நன்றாக எழுதுவதற்கு அறிஞர்களைப் போல சிந்தித்து சாதாரண மக்களைப் போல வெளிப்படுத்து."

எர்னஸ்ட் ஹெமிங்வே:

"நான் பார்ப்பதை, உணர்வதை என்னால் முடிந்த வரை மிகச் சிறந்த, மிக எளிய முறையில் எழுதுவதே என் குறிக்கோள்."

ஜான் ஹெர்ஸே:

"எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது; மார்புக்குள்ளிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்குக் காத்திருப்பதல்ல-திரும்பத் திரும்ப எழுதுவது-மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது! எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதுவதில் திருப்திப்படாமல் இருப்பது... மீண்டும் எழுதுவது!"

வில்லியம் பாக்னர்:

"ஒரு கதைமாந்தனுடன் ஆரம்பிக்கிறேன். அவன் உருப்பெற்று நின்று நடக்கத் தொடங்கியதும் நான் செய்வதெல்லாம் பேப்பர் பென்சிலுடன் அவன் கூடவே ஓடி, அவன் செய்வதையும் சொல்வதையும் படி எடுக்கிறேன். அவ்வளவு தான்."

தாமஸ் ஹார்டி:

"உண்மையாக எழுத வேண்டுமானால், சாதாரண விஷயங்களைச் சொல்ல வேண்டும். சுவாரஸ்யமாக எழுத வேண்டுமானால், அசாதாரண விஷயங்களைச் சொல்ல வேண்டும். எழுத்தாளனின் பிரச்னை இவையிரண்டையும் சமனப்படுத்துவது தான்."

"மூன்று பேர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தார்கள். ஜானகி அப்போதுதான் கணவனுடன் போட்ட சண்டையை நினைத்துப் பார்த்தாள். ரமேஷ் தன் மூக்குக் கண்ணாடியை துடைத்துக் கொண்டு, போட்டுக் கொண்டான். திவாகரன் அந்த ஒட்டகத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்தான்..."

இந்த கதை ஆரம்பத்தில் என்ன தப்பு? வ்யூபாய்ண்ட் தான்! யாருடைய கதை இது? ஜானகியா, ரமேஷா, திவாகரனா? யாராவது ஒருத்தர்தான் மையமாக இருக்க வேண்டும். மற்ற பாத்திரங்கள் வரக்கூடாது என்றில்லை. ஓர் ஆசாமியின் பேரில் "emotional focus" என்பார்கள். அது வேண்டும். ஒரு பாத்திரத்தின் வெளி உலக மன சஞ்சலங்களை விட்டு கதை விலகக் கூடாது. உங்களுக்குப் பிடித்தமான நல்ல கதைகளைத் திருப்பிப் படித்துப் பாருங்கள், வ்யூபாய்ண்ட் மாறுகிறதா என்று மாறினால் உடனே கதையின் பெயர் குறிப்பிட்டு ஒரு கார்டு எழுதவும். நிரூபிக்கப்பட்டால் பரிசு ரூ 4.95, ஒன்றுக்கு மேற்பட்ட விடை வந்தால் பரிசு பகிர்ந்தளிக்கப்படும்.

"ன்றி வாத்யாரே!" என்று சொன்னால் க்ளிஷே என்பாய். இருப்பினும் மற்றும் ஒருமுறை சொல்வேன்.

"நன்றி வாத்யாரே!!"


***

புத்தகம் : ஓரிரு எண்ணங்கள்.

புத்தக வகை : கட்டுரைகள்.

ஆசிரியர் : சுஜாதா.

கிடைக்குமிடம் : விசா பதிப்பகம்.

பதிப்பகம் : திருமகள் நிலையம், தி.நகர்.(044 - 24342899, 24327696), நூற்கடைகள்.

விலை : 115 ரூ.