Thursday, December 13, 2007

தனிமையில் ஒரு கூட்டம்...!

Wednesday, December 12, 2007

ரொம்ப நாள் கழிச்சு...!

ன்னிக்கு தலைவரோட பிறந்தநாள். தலைவருக்கு 58-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா.

அப்புறம் இன்னொரு விஷயமும் சொல்லி விடுகிறேன். இப்போது தருமமிகு சென்னையில் இருந்து மலைநாட்டிற்கு வந்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச ஆண்டுகளுக்கு திருவனந்தபுர வாசம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இந்த இடப்பெயர்வு பணிகள் இருந்ததால், இந்தப் பக்கம் அவ்வளவாக வர முடியவில்லை. இனிமேல் அடிக்கடி பார்க்கலாம்.

யாருப்பா அங்க.. சிச்சுவேஷனுக்கு சம்பந்தமா சாங்க் போடுங்கப்பா...

சரி.. அப்புறமா பார்க்கலாங்க...!

மலையாளக் கரையோரம்.

வர்ர்ர்ர்ர்ர்ட்டா...?

Friday, November 16, 2007

பழி.




ரு கன்னத்தை
அறைந்தால்
மற்றதைக் காட்டு
என்ற எண்ணத்தை
மிதித்துத்
தேய்த்து விடுகின்றன
கால்கள்,
அடுத்தவர் தன்னை மிதிக்கையில்!
கால்கள்
அறிவதில்லை
கன்னங்களின்
பெருந்தன்மை...!

Tuesday, October 23, 2007

எனது சுய சரிதை.



சிடி சென்டரில் வாங்கிய மற்றுமொரு புத்தகம், 'எனது சுய சரிதை'. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு.

எங்கள் தந்தையும் அவரது நண்பர்களும் அக்காலத்திலேயே 'சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்' என்ற பெயரில், மன்றம் அமைத்து பல பணிகள் செய்துள்ளனர். திருச்சியில் ஒரு முறை நடந்த இரசிகர் மன்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிவாஜி அவர்களுடன் அருகில் நின்று புகைப்படம் எடுத்த போது, அவர் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே..!

அவர் தொகுத்த அப்போது வெளியான பாடல் புத்தகங்கள், புகைப்படத் தொகுப்பு ஆகியவற்றை இன்னும் நான் பத்திரமாக வைத்துள்ளேன்.

நாங்களும் அவருக்கு சிறிதும் சலிக்காமல், ரஜினியின் ஒரு பிறந்த நாளுக்கு தெருவெங்கும் மிட்டாய் கொடுத்து தூள் பரப்பினோம். அது அந்தக் காலம்...!

இந்தக் காரணங்களாலும், இயல்பாகவே சிவாஜி அவர்களது நடிப்பால் கவர்ந்திழுக்கப் பட்டதாலும், இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இன்னும் நினைவு இருக்கின்றது 'தங்கைக்காக' என்ற படத்தைப் பார்த்து விட்டு கொஞ்ச நேரம் அழுது கொண்டு இருந்தது...!

இது வரை படித்த வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் போல் இல்லாமல், இது வேறு மாதிரியாக எழுதப் பட்டு இருக்கின்றது.

டி.எஸ்.நாராயணசாமி என்ற எழுத்தாளர் அவரைப் பேட்டி கண்டு அதன் தொகுப்பாக இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது.

சிவாஜி அவர்களே, இந்நூலைப் பற்றி தன் கருத்தாக கூறியிருப்பது :

"என்னுடைய வாழ்க்கை ஒரு பரந்த கடல் போல. என்னுடைய கலையுலக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், நான் எத்தனையோ கலைஞர்களையும் பெரியோர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் வரிசைப்படுத்தி, இந்த 'சுயசரிதையில்' குறிப்பிடுவது கடினம். எனக்கு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவங்களையும், என்னைப் பாதித்து, வியக்க வைத்த சில மறக்க முடியாத கலைஞர்களையும், பெரியோர்களையும் மட்டுமே, நினைவில் கொண்டு குறிப்பிட்டுள்ளேன். இதில் விட்டுப் போனவர்கள் எல்லோரும் என் நினைவில் வராவிட்டாலும், என் இதயத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருப்பவர்கள் என்பதைக் கூறிக்கொள்கிறேன்."

புத்தகம் : எனது சுய சரிதை

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : திரு.டி.எஸ்.நாராயணசாமி.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

விலை : ரூ.70.

பதிப்பகம் : Sivaji Prabhu Charities Trust, Royapettah, Ch - 14.

Friday, October 19, 2007

மீண்டும், மீண்டும்...!



ருவரிடம் ஒரு முறை மட்டுமே வரும் என்று கவிஞர் சொன்ன காதல், மீண்டும் ஒருமுறை தனது பொன் சிறகுகளால் அவனைத் தழுவுகின்றது.

வறண்டிருந்த பாலையின் வழி நடந்து சென்று கொண்டிருக்கையில், அவ்வப்போது அவன் மேல் தூறிக் கொள்கின்றன சில்லென்ற சில துளிகள். முட்களையே கடித்து தின்று கொண்டிருக்கும் மெளன ஒட்டகத்தின் வாயின் ஓரங்களை முத்தமிட்டுச் செல்கின்றன சில ரோஜா இதழ்கள்.

போகின்றது என்று பார்த்தபடியே நகர்கின்ற காலத்தின் முட்களோடு போட்டியிட்டு புலம் பெயர்கின்ற கரிய மேகங்களினோடு அவனது பார்வையும் தூரே எங்கோ பதிகின்றது.

அலை அலையாய் அடிக்கின்ற கானல் நீரின் நிழல்களின் கீழே அசைவற்று இருக்கின்ற கருஞ்சாலைகளின் மேலாக அவனது பயணம் தொடங்குகின்றது.

பகலின் கொடிய விரல்களால் கிழிபட்டும் அவனது நடை நிற்கவில்லை. மதியத்தின் கொடூர கரங்களில் கரும் பூச்சுகள் பூசிக் கொண்ட முகத்தினோடு அவன் இன்னும் நடக்கிறான். மெல்ல கவிந்து வருகின்ற மாலையின் போர்வையில், போர்த்திக் கொண்ட பின்னும் முத்து முத்தாய் வேர்த்துக் கொண்டேயிருக்கின்றது உடல்.

இலேசாக இரவின் பெரும் இராஜ்ஜியத்தில் நுழைகின்றான்.

எவரையும், எதனையும் தெரிந்து கொள்ள வேண்டியிராத இருளின் முகாமிற்குள் அவன் நுழைந்து விட்ட பின் கரிய ஆழம் காண முடியாத அவனது மனத்தின் பேராழத்திற்குள் குப்புற விழுகின்றான்.

வெளிப்புற பயணங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ பேரதிசயங்களையும், பெரு மயக்கங்களையும் தன்னுள் கொன்டு அவனுக்காகக் காத்திருக்க... அவனோ தனக்குள் இன்னும் மூழ்கிக் கொண்டு காணாமல் போய் இருக்கிறான்.