Monday, September 02, 2024

லட்டு மலை.

ப்பாவும் ஸ்ரீகுட்டியும் கடைவீதிக்குப் போனார்கள். சமையல் செய்வதற்காகத் தக்காளியும் வெங்காயமும் வாங்கி வரச் சொல்லி அம்மா அவர்களை அனுப்பியிருந்தார்.


கடைவீதியில் நிறைய கடைகள் இருந்தன. துணிக்கடைகள், பாத்திரக் கடைகள், டிவி கடை, பொரிகடலைக் கடை என இருந்தன. காய்கறிக்கடைக்குப் போய் அப்பாவும் ஸ்ரீகுட்டியும் அம்மா சொன்னதை எல்லாம் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார்கள்.


அப்போது வழியில் பலகாரக்கடை இருப்பதை ஸ்ரீகுட்டி பார்த்தாள். அப்பாவைப் பார்த்து ”அப்பா, அங்க பாத்தீங்களா..?” என்று கேட்டாள். அவள் பலகாரக்கடையைத் தான் கேட்கிறாள் என்று தெரிந்தும் , அப்பா தெரியாததைப் போல் “ஆமா, அங்க ஒரு வண்டி நின்னுட்டு இருக்கு. மாடு படுத்திருக்கு. போஸ்டர் பக்கத்துல நாய் ஒண்ணு வேடிக்க பாக்குது..” என்றார்.


ஸ்ரீகுட்டி கொஞ்சமாய் கோபப்பட்டு “அப்பா...நான் ஸ்வீட் கடையைச் சொன்னேன். ஸ்வீட் வாங்கிட்டுப் போகலாம்பா..” என்று அப்பாவுடைய கையைப் பிடித்து இழுத்தாள். அப்பாவும் சிரித்துக் கொண்டே “சரி வா, போகலாம்..” என்றார். இருவரும் ஸ்வீட் கடைக்குப் போனார்கள்.


ஸ்வீட் கடையில் நிறைய இனிப்புப் பலகாரங்கள், காரப் பலகாரங்கள் இருந்தன. குளிர்பதனப் பெட்டிக்குள் குளிர்பானங்கள் இருந்தன. ஸ்ரீகுட்டி மேலே இருந்த கண்ணாடியைத் தொட்டுப் பார்த்தாள். ஜில்லென்று இருந்தது. கண்ணாடிப் பெட்டிகளுக்குள் லட்டுகள், ஜிலேபிகள், மைசூர்பாகுகள், குலாப் ஜாமூன்கள், ரசகுல்லாகள் இருந்தன. முறுக்குகள், சிப்ஸுகள், மிக்சர், பூந்தி இருந்தன. ஸ்வீட் பன், தேங்காய் பன் பப்ஸூகள் இருந்தன. 


ஆனால் ஸ்ரீகுட்டி கண்கள் விரிய ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது லட்டுகளைத் தான். லட்டுகள் உருண்டையாக இருந்தன. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. ஸ்ரீகுட்டி எல்லாப் பலகாரங்களையும் பார்த்தாள். லட்டுகள் மட்டும் மலை போல் அடுக்கப்பட்டிருந்தன. மற்றதெல்லாம் பரவலாய் இருந்தன.


“அப்பா, லட்டு மட்டும் ஏன்பா மலை மாதிரி குவிச்சு வெச்சிருக்காங்க..?” என்று கேட்டாள். அப்பாவும் அப்போது தான் அதை கவனித்தார். “அட, ஆமால..” என்று ஆச்சரியப்பட்டார். “ சரி, இப்போ ஸ்வீட்ஸ் வாங்குவோம். வீட்டுக்கு போகும் போது நான் சொல்றேன்..” என்றார்.


“ஓகேபா..” என்றாள் ஸ்ரீகுட்டி.


அரை கிலோ முறுக்கும் அரை கிலோ லட்டும் அரை கிலோ குலோப் ஜாமூனும் வாங்கி விட்டு இருவரும் கடையிலிருந்து வெளியே வந்தார்கள். இருவரும் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினார்கள்.


“அப்பா லட்டு கதை சொல்லுங்கப்பா.. “ என்று ஞாபகப்படுத்தினாள் ஸ்ரீகுட்டி.


“சரி சொல்றேன்.” என்று அப்பா சொல்லத் தொடங்கினார்.


***


முன்பு ஒரு காலத்தில் சூரியனும் பூமியும் மிகவும் பக்கத்தில் இருந்தன. சூரியன் அதிக வெப்பமாக இருந்ததால், பூமியும் வெப்பமாக இருந்தது. அப்போது பூமியில் தண்ணீரே இல்லை. பூமியில் குளிரே இருக்காது. எப்போதும் வெயில் காலம் போல சூடாகவே இருந்தது. 


பிறகு மெல்ல மெல்ல சூரியன் தள்ளித் தள்ளிப் போனது. பூமியில் கொஞ்சம் வெப்பம் குறைந்தது. கொஞ்சம் குளிரும் வந்தது. அதனால் தண்ணீரும் உண்டானது. அப்படியே சூரியன் தூரமாய்ப் போய்க் கொண்டேயிருந்தது. அதனால் பூமியில் குளிர் அதிகமானது. தண்ணீரும் நிறைய உண்டானது. 


பிரகு பூமியில் உயிர்கள் தோன்றி மனிதர்களும் உண்டானார்கள். அப்போது மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மலைகளில், காடுகளில் மக்கள் வாழ்ந்தார்கள். அப்படி வாழ்ந்த ஒரு குழுவுக்கு ஒரு தலைவி இருந்தார்கள். அவர் பெயர் ஜூஜூலாமா பாட்டி. 


சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தூரம் தூரமாய்ப் போய் ஒரு காலத்தில் காணாமலே போனது. அதனால் பூமி முழுவதும் இருட்டாய் ஆனது. குளிரும் மிக அதிகமாகி விட்டது. மனிதர்களால் வாழவே முடியவில்லை. 


அவர்களும் ஜூஜூலாமா பாட்டியும் ஆலோசனை செய்தார்கள். அப்போது குளிராகவும் இருந்தது. இருட்டாகவும் இருந்தது. எல்லோரும் கனமான போர்வைகளைப் போர்த்திக் கொண்டார்கள். கற்களை உரசி தீ வரச்செய்து அதில் சருகுகளை எரித்து வெளிச்சம் உண்டாக்கினார்கள்.


உலகத்திற்கு சூரியனை எப்படி மீண்டும் கொண்டு வருவது என்று யோசித்தார்கள். அப்போது ஜூஜூலாமா பாட்டி சொன்னார்கள். 'சூரியன் பக்கத்தில் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சம் ஒளியைச் சிந்தியிருந்தது. அதை எல்லாம் ஒன்றாகிச் சேர்த்தால் பெரிய ஒளி உருண்டை கிடைக்கும். அதை வானத்தில் எறிந்தால் சூரியனாகி விடும்’ என்று சொன்னார்கள். அதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்.


ஆனால் அதை ஒருமுறை எறியும் போது எங்காவது போய் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தார்கள். கடைசியாக அவர்கள் ஒரு முடிவு செய்தார்கள். பூமியில் ஓரிடத்தில் இருந்து சூரியனை ஒருவர் எறிய வேண்டும். தூரமாய்ப் போய் இன்னொருவர் அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு, அவர் அங்கிருந்து சூரியனை எறிய வேண்டும். இவர் இங்கே சூரியனைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால், சூரியன் எங்கும் தொலைந்து போய் விடாது, மேலும் அது பூமிக்குப் பக்கத்திலேயே இருக்கும் என முடிவு செய்தார்கள்.


அதன்படி ஜூஜூலாமா பாட்டி கீழே சிந்தியிருந்த ஒளியை எல்லாம் சேர்த்து உருண்டையாக்கினார்கள். அது மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் தந்தது. அங்கிருந்த மனிதர்கள் ஜூஜூலாமா பாட்டிக்கு வணக்கம் சொல்லி விட்டு, அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்கள் நிறைய தூரம் பயணம் செய்தார்கள். மலைகளைத் தாண்டினார்கள். ஆறுகளில் நீந்தினார்கள். கடைசியாகப் பெரிய கடலையும் தாண்டி அந்தப்பக்கம் போனார்கள்.


ஜூஜூலாமா பாட்டி அந்த ஒளி உருண்டையுடன் மலை உச்சிக்குப் போனார்கள். வானம் இருட்டாய் இருந்தது. நூறு நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. ஜூஜூலாமா பாட்டி மலை உச்சியிலிருந்து சூரியன் என்று பெயர் வைத்த அந்த ஒளி உருண்டையை வானத்தில் தூக்கி வீசினார்கள். சூரியன் உயரமாய்ப் பறந்து போனது. பிறகு அங்கிருந்து கீழே விழத் தொடங்கியது. சூரியன் கடலுக்கு அந்தப்பக்கம் விழுந்தது.


அங்கிருந்த மனிதர்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள். கடலில் பெரிய அலைகளும் சிறிய அலைகளும் வந்தன. அவர்கள் பெரிய அலையின் மேல் அமர்ந்து கொண்டார்கள். பெரிய அலை உயரமாய் இருந்தது. அது இன்னும் உயரமாய் எழும் போது, அவர்கள் சூரியனை மறுபடியும் வானத்தில் எறிந்தார்கள். சூரியன் வானத்திற்குப் போய் மறுபடியும் மலை உச்சியில் விழுந்தது. அங்கே இருந்த ஜூஜூலாமா பாட்டி சூரியனைப் பிடித்துக் கொண்டார்கள்.


இப்படி ஒவ்வொரு நாளும் ஜூஜூலாமா பாட்டியும் அவருடைய குழு மனிதர்களும் சூரியனை வானத்தில் வீசினார்கள். இன்னமும் அவர்கள் ஒருவர் சூரியனை வீசி இன்னொருவர் பிடித்துக் கொள்கிறார்கள். மீண்டும் வீசுகிறார்கள். மீண்டும் பிடித்துக் கொள்கிறார்கள். 


தினமும் நாம் பார்க்கும் சூரியன், ஜூஜூலாமா பாட்டி சேர்த்து வைத்த ஒளி உருண்டை தான். ஜூஜூலாமா பாட்டிக்கு நன்றி சொல்வதற்காகத் தான் நாம் சூரியனைப் போன்ற வடிவத்தில் லட்டு செய்கிறோம். ஜூஜூலாமா பாட்டி மலை மேலிருந்து சூரியனை வீசத் தொடங்கியதால், லட்டுகளையும் மலை போல் அடுக்கி வைக்கின்றோம்.


***


அப்பா கையில் இருந்த இனிப்பு டப்பாவில் இருந்து ஸ்ரீகுட்டி, கொஞ்சம் லட்டைப் பிய்த்து எடுத்தாள்.


“அப்பா, நான் கொஞ்சம் சூரியனை சாப்பிடறேன்..” என்று சொல்லி லட்டு சாப்பிட்டாள். 


“சூரியன் இனிப்பா இருக்குப்பா..” என்று ஸ்ரீகுட்டி சிரித்தாள். அப்பாவும் சிரித்தார்.


ஃஃஃ

Thursday, May 23, 2019

இன்னும் எவ்வளவு தொலைவு? (A)



நிலவின் நுரை நிரம்பி வழியும் முன்னிரவு.  பசிய இலைகள் எல்லாம் இருளின் கரும் போதைக்குள் ஆழ்ந்து மெல்ல அசைந்து கொண்டிருந்த குளிரின் நேரம்.  பறவைக்கூடுகளில் நிறைந்த அமைதியின் கனம். வீதிகளில் சிதறியிருந்த தெருநாய்களின் சிறு முனகல்கள், பனியின் அழுத்தத்திற்குள் இறுகியிருந்தன. ஜன்னல்கள் அடைத்திருந்த வீடுகளின் வரிசைகளில் உறக்கங்களை உடுத்தி அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீட்டில் மஞ்சள் விளக்கொளியின் கீழே தனித்த அறைக்குள், நாமிருவர் செய்யப் போவது, செய்யக் கூடியது தான் என்ன?

கூர் நகங்களால் சுவற்றைக் கவ்வி மெல்ல நகரும் இந்த மரப்பல்லியின் சொரசொரப்பான முதுகின் மேல் தடவிக் கொடுத்தால் தான் என்ன? யாரும் தீண்டியிராத மின்விசிறியின் கரங்களை அழுத்திக் கொடுத்து, அதன் சுழலில் இறங்கினால் ஆகாதா என்ன? யாரிடமும் சொல்லி விடுமோ என மெல்லக் கீச்சிடும் முழுதாக மூட இயலாத கதவை, நிறுத்தக் கொடுத்திருக்கும் சிறு கல்லை மெல்ல நகர்த்தி, வெளியே பாயும் காற்றைக் கொஞ்சம், அனல் அடிக்கும் இச்சிறு அறைக்குள் வரவிட்டால் தான் என்ன? நிலவின் அமுதக் கிரணங்களை ஏந்தி, குறுகிய இடைவெளி வழியே சொட்டு சொட்டாய் இறக்கும் தென்னங் கீற்றுகளைச் சுழற்றி ஓடும் வாடைக் காற்றின் வாசனையை இங்கேயும் உள்ளே அனுமதிக்கலாமா?

கசங்காப் படுக்கையின் மேல் நவீன ஓவியம் போல் புரியா வரிகளை எழுதப் போகும் நம் அசைவுகள் தான் எத்தனை? திசைகளை சென்று அடையப் போகும் நம் ஆடைகளின் சுருண்ட மடிப்புகள், இப்போது அடைகாக்கும் அந்தரங்கங்களை இருளுக்கு காட்டப் போகும் நொடி தான் எது? ஒருவரும் தோண்டியிராத கிணற்றுக்குள் இருந்து, சூழ வளர்ந்திருக்கும் கருஞ்சருகுகளை விலக்கி, ஆழத்து நீரை இறைத்து இறைத்து தரையை நனைக்கப் போகும் காலம் தான் எத்தனை குறுகியது? பூமியெங்கும் ஊறியிருக்கும் ஈரத்தை ஈர்த்து வந்து, இழுத்து வந்து நுனிப்புள்ளியில் விண்ணைப் பார்த்து எழுப்பும் ஊற்றுப் புள்ளியை, எத்தனை நிமிடங்கள் தான் காத்து வைப்பது?

நீல மேகங்கள் குழுமிக் கொண்டிருக்கின்றன. அதற்குள் புதைந்து கொள்வதற்குள், அதன் மென்மைக்குள் தலை அமிழ்த்துக் கொள்ள, அதன் தீரா சுரப்புகளைச் சுவைத்துப் பெருமழை பெய்ய வைக்கும், வெம்மையின் நரம்போடும் இக்கைகளை, இச்சமயத்தில் எங்கு தான் வைத்துக் கொள்வது? அதன் விரல்கள், உள்ளங்கைகளுக்குள் வேர்த்து சொட்டும் வியர்வகளை நழுவ விடுகின்றன.

இந்த விழிகளை, இந்த நுனி நாசியை, இந்த செவ்விதழ்களை, இந்த பூமயிர் உலையும் பொன் கழுத்தை, இந்த அமுது நிறைத்து தளும்பும் நிறை மார்புக் குலைகளை, சரிவில் இறங்கும் கொப்பூழ்ப் பள்ளத்தை, உயிர் ஊறிச் சிலும்பும் பூமேடையை, செழும்தெழுந்துத் திமிறி நிற்கும் வலுத்தொடைகளை, தாங்கிப் பதிந்திருக்கும் பூம்பாதங்களை, மழைக்காலத்தில் பசுந்தோட்டங்களை வந்து வந்து மூடிக் குளிரில் நனைத்து, சிறுமழை பெய்து ஈரத்திலேயே வைத்திருக்கும் கருமுகில்களைப் போல், ஏன் இந்த வர்ண ஆடைகளுக்கும், மின்னும் நகைகளுக்குள்ளும் புதைத்து வௌத்திருக்கிறாய்?

ஒவ்வொரு திரையாக விலக்கி விலக்கி, ஸ்வர்ண சொரூபம் காணும் அந்த முதல் நொடிக்கு, இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும், நான்?

Monday, April 29, 2019

விடிகாலை.




விடிகாலை
இன்னும் முழுதாய்த்
துயில் கலையவில்லை.
முதல் உறவுக்குப் பின்
களைத்த
கன்னி போல்
முந்தைய இரவின் மழையீரம்
எழ விரும்பா சோம்பல்
திரண்ட கருமை
இருள் பூசிய பார்வை
வெங்கதிர் விரல்
வந்து
தீண்டும் வரை
வா,
இம்மேகப் புடைப்புகளின்
கீழ்
சற்றே
நிற்கலாம்
விழியிதழ் விரல்நுனி
கோர்த்துக் கொண்டு.

American Beauty.

ந்த ஒற்றை ரோஜா இதழ்ப்பிசிறு எங்கிருந்து வந்து என் மேல் விழுந்தது? சரியும் ஒரு பட்டுத் திரையின் மெல்லிய வழிதல் போல், சொட்டுச் சொட்டாய்ச் சேர்ந்த நீர்த்தாரை ஒன்றின் வடிதல் போல், நமக்கிடையே நிரம்பியிருக்கும் குளிர்க்காற்றின் அடுக்குகளில் மெல்ல மெல்ல தவழ்ந்து படர்ந்து கடந்து வந்ததா உன் காதலை ஏந்தி?
இதன் அடர்சிவப்பு, உன்னுள்ளில் சேர்த்து வைத்திருக்கும் என் மீதான ப்ரேமையின் மெளனத்தைச் சொல்கிறதா? இதன் மேலே புகை போல் விரவியிருக்கும் குளிர்மணம், முன்னிரவில் நீ கொடுத்த முத்தமொன்றின் ஈரம் போல அத்தனை இனிக்கிறதே?
மலரிதழ் நுனியை என் நாவால் தடவிப் பார்த்தேன். உன் மென்சருமத்தின் பூமுடி போல் அத்தனை கூச்சம்; ஒரு மென் சூடு;
கொஞ்சமாய்க் கிள்ளி சுவைத்தேன். உன் சிறிய இளம் மார்புகளுக்கு இடையில் வைத்து அனுப்பினாயா, என்ன? அதே நடுக்கம், அதே வியர்வை வீச்சம்.
ஒரு இதழ் போதாது; இந்த இரவை நிரப்ப, உன்னிலிருந்து அனைத்து இதழ்களையும் விடுவி. ரோஜா செம்மழை என் மேல் பொழியட்டும். அதன் புதர்களுக்குள் என்னைப் புதைத்துக் கொண்டு, இந்த வாழ்வை நீந்திக் கழித்து விடுவேன்.


விண்முழு துளிர்பூச்சிகள்.

கொல்லும் தனிநிலவின்
வெண்ணிழல்
பனிநனைக் குளிரின்
கூர்நுனி கிரணங்கள்
விண்முழு துளிர்பூச்சிகள்
வீசுகாற்றில் மிதக்கும் ஓசைகள்
கருநிழல் உண்ணும்
வெம்மை உலர் சுவர்கள்
இருள்நிறை இல்லங்கள்
ஒற்றையொளி அறைச்சதுரம்
பஞ்சடைத்த படுக்கை
துஞ்சிடா இரு விழிகள்.

மொழித்துணை பிடித்து
விழித்துனை நினைத்து
விரல்வழி வழி சொல்நிரை
முரல்வர்ணச் சிதறல்கள்

மண்மேல் வெகுதூரம்
தீண்டியும் விலகியும்
பேசியும் மெளனித்தும்
வளர் உறவிது தளிர் மரமிது
களர் நிலமிதில் கான் பசியது

நினைவலை மிதக்கும் படகினில்
இருமனம் உலவிய கதைகள்
ஒளிவிழும் சாலையில்
ஒழுகிய மாலைப் பொழுதுகள்
ஒருவரி இருவரும்
ஒருமித்துளறிய வியப்புகள்
சொல்லிலா பரிமாற்றங்கள்
மெளனத்தின் பங்குதாரர்கள்

இன்றுனை இழந்ததன்
இறுகிய கணங்களில் இருப்பு
இனியொரு முறை காணுதல்
இயலுமா என்றொரு மலைப்பு

இன்னுமொரு இவ்விரவு
உறக்கம் விலகிய களைப்பு
இன்றோடு விலகிடுதல்
என்றோ என்னும் தவிப்பு

மலரணிச் சிறுகூந்தல்
பரவிய படுக்கையில்
உறங்கிடும்  எழில்பரலே,
உன் கனவினில்
உலைந்திடும் பொன் வண்டென நுழைந்தனன்;
மனமெனும் குடுவைக்குள் மறைத்திடுக;
தினமொரு சிறு சிறகளிப்பேன்; சூடிப் பறந்திடுக.