மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தேன்.
இரவின் மெளனமான குளிர் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு சல்லாத் துணியைப் போல் மேகப் புகைகளைக் கொண்டு, நிலாப் பெண் தன் வெண் முகத்தை மறைத்தும், காட்டியும் ஒரு இரகசிய நாடகம் நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு வாரமாக விட்டு விட்டு பெய்து கொண்டிருந்த மழைத்தூறல் முன்பே பரப்பிய குளிர்மையை விட்டு வைத்திருந்தது. மஞ்சள் மின் விளக்குகளின் ஒளி, சாலையோரம் தேங்கியிருந்த மழைத் தேக்கத்தில் மரங்களின் இலைகளில் இருந்து நழுவும் துளிகள் விழுந்ததால் கலைந்து போய்க் கொண்டிருந்தது. வழக்கமாய் அலுவலகத்தில் இருந்து அந்நேரத்திற்கு திரும்புகையில், வாழ்த்துப் பாடி வரவேற்கும் பைரவர்களின் ஒலியும் இல்லை. தெருவே வெறிச்சோடி இருந்தது. கள்வர்களின் பயம் மட்டும் மனதின் ஓரம் மினுக்கிக் கொண்டிருந்ததால், சற்று வேகமாகவே நடையை எட்டிப் போட்டுக் கொண்டிருந்தேன்.
இன்று அதிகாலை 3 மணி.
அரை மணி நேரத்திற்கு முன்பு நான் இருந்த தம்பானூர் பேருந்து நிலையத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச கூட்டமும் இங்கு இல்லை.
பூச்சிகள் பறந்து கொண்டிருந்த டியூப் லைட்கள், நகர்த்த இயலாமல் கால்களில் ஆணியடிக்கப்பட்ட சேர்களில் அமர்ந்தும், புரண்டும், சரிந்தும், வாய் திறந்தும், மூடியும், அரைக் கண்களை திறந்தும், மூடியும் இருந்த பல பிரயாணிகள், நாள் முழுதுமான பயணத்தில் களைத்த பேருந்துகள் ஓய்வு, திறந்திருந்த சில ஓட்டல்கள், நேரக் கண்காணிப்பாளர் அலுவலகம், சில பத்திரிக்கை கடைகள் ( அங்கிருந்த ஆடையில்லாத படங்களை வெறித்துப் பார்த்தும், நகர்ந்தும் சுற்றிக் கொண்டேயிருந்த சில கண்கள்), டீ ஆற்றும் ஒரே ஒரு அரசாங்கக் கடை, அங்கிருந்து மிதந்து வந்து காற்றின் பக்கங்களில் தன் வரிகளைப் பதித்துப் போன 'கண்ணன் ஒரு கைக்குழந்தை...'....
3 comments:
அப்பா !! என்ன மாதிரி வர்ணனைகள்... படிக்கும் போது..சே இதை நாம் கவனிக்கவில்லையே என்ற உணர்வு..எப்படி இவரால் மட்டும் இவ்வளவு நுணுக்கமாக இடங்களை, ஆட்களை பார்க்க முடிகிறது...அருமை..அருமை....
அன்பு பின்னோக்கி...
மிக்க நன்றிகள். நுணுக்கமாக கவனிப்பதற்கு இப்போது தான் கற்றுக் கொண்டு வருகிறேன். ஒரு படைப்பாளிக்கு அது ரொம்பத் தேவையான பழக்கம் என்று அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். :)
நெல்லையப்பர் கோவில் போயிட்டு இருட்டுக்கடை அல்வா வ விட்டுட்டீங்களே.
Post a Comment