Saturday, March 31, 2018

அணை தீண்டும் மதில்.


பேரறியா வனங்களின் மேல் எங்கெங்கெங்கிருந்தோ வந்து குழுமியிருந்த கருமுகில் கூட்டங்கள் நாளென்றும் இரவென்றும் பெய்து குளிர்ந்த மண்ணில் ஊறிய நீர்த்துளிகள் ஒன்றிணைந்தன. தாமே உருவாக்கிய பாதைகளில் ஒன்றோடொன்று இணைந்திணைந்து துளிகள் கோடுகளாயின; கோடுகள் ஓடைகளாயின; சிற்றோடைகள் சிற்றாறுகளாயின; சிற்றாறுகள் அருவிகளாயின; பேரருவிகள் நதிகளாயின; நதிகள் சேர்ந்து சேர்ந்து பேராறாகின; பேராற்றைத் தேக்கி வைத்த மதில்களாலான அணையை கணந்தோறும் முட்டி மோதித் தத்தளிக்கின்றது பெரு நீர் வெள்ளம்.

கரைகளை மீறத்துடிக்கும் பேரார்வம். ஈர மண்ணைக் குழைத்த ஓரங்களில் நாணல் செடிகள் பூத்து நிறைத்த வெண் படலம். அலைந்தும் குழிந்தும் தழைந்தும் குவிந்தும் தடுமாறும் மேல் தளத்திற்குக் கீழே நீலம் கரைந்த அடியாழம். பெரு முதலைகளும், ஐந்தடக்கல் போலும் ஆமைகளும், முள்ளென்றேயான மீன்களும் நீந்தும் ஆளறியா உலகு. தங்கமீன்களும் தவளைகளும் நஞ்சில்லா சிறு பாம்புகளும் விளையாடுதல் கண்டு நீந்த நனைதலுக்கு இறங்குவோர் கவ்வப்படுவர்.

அசட்டு தைரியத்தாலும் ஆர்வத்தாலும் தரை தொடாக் கால் கொண்டு உள் நுழைவோர் மேல் முதலில் சிறு பல் படும்; ஏதோ ஒரு செடி என்ற நினைவில் தள்ளி விடுவர். சற்றே கூரான நகங்கள் தோலெல்லாம் கீறிச் செல்லும். புதுக்குருதித் துளிகள் துளிர்த்து உடனே கரையும். எரிச்சலில் ஈரம் மேவும்.

மஞ்சு பொழியும் முன் மயில் நவிலும்; நதி நுரைக்கும் முன் கரை நாணல் நாணும்; வான் நிறையும் முன் புள் அறியும்; கண் காணும் முன் மனம் உணரும். தேன் தடவிய அம்பின் நுனி கூராய்க் கொல்லும் திசைகள் ஆயிரம்.

மேலே விரி ஆகாயநீலம்.. கீழே நீரீரம். இருள் நதி நிறைக்கும் ஒளிப்பூச்சிகள் மிதக்கும் வழியில் விழிகள்.

Pic :: https://fineartamerica.com/featured/black-and-white-erotic-stefan-kuhn.html

No comments: