Monday, September 02, 2024

லட்டு மலை.

ப்பாவும் ஸ்ரீகுட்டியும் கடைவீதிக்குப் போனார்கள். சமையல் செய்வதற்காகத் தக்காளியும் வெங்காயமும் வாங்கி வரச் சொல்லி அம்மா அவர்களை அனுப்பியிருந்தார்.


கடைவீதியில் நிறைய கடைகள் இருந்தன. துணிக்கடைகள், பாத்திரக் கடைகள், டிவி கடை, பொரிகடலைக் கடை என இருந்தன. காய்கறிக்கடைக்குப் போய் அப்பாவும் ஸ்ரீகுட்டியும் அம்மா சொன்னதை எல்லாம் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார்கள்.


அப்போது வழியில் பலகாரக்கடை இருப்பதை ஸ்ரீகுட்டி பார்த்தாள். அப்பாவைப் பார்த்து ”அப்பா, அங்க பாத்தீங்களா..?” என்று கேட்டாள். அவள் பலகாரக்கடையைத் தான் கேட்கிறாள் என்று தெரிந்தும் , அப்பா தெரியாததைப் போல் “ஆமா, அங்க ஒரு வண்டி நின்னுட்டு இருக்கு. மாடு படுத்திருக்கு. போஸ்டர் பக்கத்துல நாய் ஒண்ணு வேடிக்க பாக்குது..” என்றார்.


ஸ்ரீகுட்டி கொஞ்சமாய் கோபப்பட்டு “அப்பா...நான் ஸ்வீட் கடையைச் சொன்னேன். ஸ்வீட் வாங்கிட்டுப் போகலாம்பா..” என்று அப்பாவுடைய கையைப் பிடித்து இழுத்தாள். அப்பாவும் சிரித்துக் கொண்டே “சரி வா, போகலாம்..” என்றார். இருவரும் ஸ்வீட் கடைக்குப் போனார்கள்.


ஸ்வீட் கடையில் நிறைய இனிப்புப் பலகாரங்கள், காரப் பலகாரங்கள் இருந்தன. குளிர்பதனப் பெட்டிக்குள் குளிர்பானங்கள் இருந்தன. ஸ்ரீகுட்டி மேலே இருந்த கண்ணாடியைத் தொட்டுப் பார்த்தாள். ஜில்லென்று இருந்தது. கண்ணாடிப் பெட்டிகளுக்குள் லட்டுகள், ஜிலேபிகள், மைசூர்பாகுகள், குலாப் ஜாமூன்கள், ரசகுல்லாகள் இருந்தன. முறுக்குகள், சிப்ஸுகள், மிக்சர், பூந்தி இருந்தன. ஸ்வீட் பன், தேங்காய் பன் பப்ஸூகள் இருந்தன. 


ஆனால் ஸ்ரீகுட்டி கண்கள் விரிய ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது லட்டுகளைத் தான். லட்டுகள் உருண்டையாக இருந்தன. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. ஸ்ரீகுட்டி எல்லாப் பலகாரங்களையும் பார்த்தாள். லட்டுகள் மட்டும் மலை போல் அடுக்கப்பட்டிருந்தன. மற்றதெல்லாம் பரவலாய் இருந்தன.


“அப்பா, லட்டு மட்டும் ஏன்பா மலை மாதிரி குவிச்சு வெச்சிருக்காங்க..?” என்று கேட்டாள். அப்பாவும் அப்போது தான் அதை கவனித்தார். “அட, ஆமால..” என்று ஆச்சரியப்பட்டார். “ சரி, இப்போ ஸ்வீட்ஸ் வாங்குவோம். வீட்டுக்கு போகும் போது நான் சொல்றேன்..” என்றார்.


“ஓகேபா..” என்றாள் ஸ்ரீகுட்டி.


அரை கிலோ முறுக்கும் அரை கிலோ லட்டும் அரை கிலோ குலோப் ஜாமூனும் வாங்கி விட்டு இருவரும் கடையிலிருந்து வெளியே வந்தார்கள். இருவரும் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினார்கள்.


“அப்பா லட்டு கதை சொல்லுங்கப்பா.. “ என்று ஞாபகப்படுத்தினாள் ஸ்ரீகுட்டி.


“சரி சொல்றேன்.” என்று அப்பா சொல்லத் தொடங்கினார்.


***


முன்பு ஒரு காலத்தில் சூரியனும் பூமியும் மிகவும் பக்கத்தில் இருந்தன. சூரியன் அதிக வெப்பமாக இருந்ததால், பூமியும் வெப்பமாக இருந்தது. அப்போது பூமியில் தண்ணீரே இல்லை. பூமியில் குளிரே இருக்காது. எப்போதும் வெயில் காலம் போல சூடாகவே இருந்தது. 


பிறகு மெல்ல மெல்ல சூரியன் தள்ளித் தள்ளிப் போனது. பூமியில் கொஞ்சம் வெப்பம் குறைந்தது. கொஞ்சம் குளிரும் வந்தது. அதனால் தண்ணீரும் உண்டானது. அப்படியே சூரியன் தூரமாய்ப் போய்க் கொண்டேயிருந்தது. அதனால் பூமியில் குளிர் அதிகமானது. தண்ணீரும் நிறைய உண்டானது. 


பிரகு பூமியில் உயிர்கள் தோன்றி மனிதர்களும் உண்டானார்கள். அப்போது மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மலைகளில், காடுகளில் மக்கள் வாழ்ந்தார்கள். அப்படி வாழ்ந்த ஒரு குழுவுக்கு ஒரு தலைவி இருந்தார்கள். அவர் பெயர் ஜூஜூலாமா பாட்டி. 


சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தூரம் தூரமாய்ப் போய் ஒரு காலத்தில் காணாமலே போனது. அதனால் பூமி முழுவதும் இருட்டாய் ஆனது. குளிரும் மிக அதிகமாகி விட்டது. மனிதர்களால் வாழவே முடியவில்லை. 


அவர்களும் ஜூஜூலாமா பாட்டியும் ஆலோசனை செய்தார்கள். அப்போது குளிராகவும் இருந்தது. இருட்டாகவும் இருந்தது. எல்லோரும் கனமான போர்வைகளைப் போர்த்திக் கொண்டார்கள். கற்களை உரசி தீ வரச்செய்து அதில் சருகுகளை எரித்து வெளிச்சம் உண்டாக்கினார்கள்.


உலகத்திற்கு சூரியனை எப்படி மீண்டும் கொண்டு வருவது என்று யோசித்தார்கள். அப்போது ஜூஜூலாமா பாட்டி சொன்னார்கள். 'சூரியன் பக்கத்தில் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சம் ஒளியைச் சிந்தியிருந்தது. அதை எல்லாம் ஒன்றாகிச் சேர்த்தால் பெரிய ஒளி உருண்டை கிடைக்கும். அதை வானத்தில் எறிந்தால் சூரியனாகி விடும்’ என்று சொன்னார்கள். அதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்.


ஆனால் அதை ஒருமுறை எறியும் போது எங்காவது போய் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தார்கள். கடைசியாக அவர்கள் ஒரு முடிவு செய்தார்கள். பூமியில் ஓரிடத்தில் இருந்து சூரியனை ஒருவர் எறிய வேண்டும். தூரமாய்ப் போய் இன்னொருவர் அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு, அவர் அங்கிருந்து சூரியனை எறிய வேண்டும். இவர் இங்கே சூரியனைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால், சூரியன் எங்கும் தொலைந்து போய் விடாது, மேலும் அது பூமிக்குப் பக்கத்திலேயே இருக்கும் என முடிவு செய்தார்கள்.


அதன்படி ஜூஜூலாமா பாட்டி கீழே சிந்தியிருந்த ஒளியை எல்லாம் சேர்த்து உருண்டையாக்கினார்கள். அது மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் தந்தது. அங்கிருந்த மனிதர்கள் ஜூஜூலாமா பாட்டிக்கு வணக்கம் சொல்லி விட்டு, அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்கள் நிறைய தூரம் பயணம் செய்தார்கள். மலைகளைத் தாண்டினார்கள். ஆறுகளில் நீந்தினார்கள். கடைசியாகப் பெரிய கடலையும் தாண்டி அந்தப்பக்கம் போனார்கள்.


ஜூஜூலாமா பாட்டி அந்த ஒளி உருண்டையுடன் மலை உச்சிக்குப் போனார்கள். வானம் இருட்டாய் இருந்தது. நூறு நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. ஜூஜூலாமா பாட்டி மலை உச்சியிலிருந்து சூரியன் என்று பெயர் வைத்த அந்த ஒளி உருண்டையை வானத்தில் தூக்கி வீசினார்கள். சூரியன் உயரமாய்ப் பறந்து போனது. பிறகு அங்கிருந்து கீழே விழத் தொடங்கியது. சூரியன் கடலுக்கு அந்தப்பக்கம் விழுந்தது.


அங்கிருந்த மனிதர்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள். கடலில் பெரிய அலைகளும் சிறிய அலைகளும் வந்தன. அவர்கள் பெரிய அலையின் மேல் அமர்ந்து கொண்டார்கள். பெரிய அலை உயரமாய் இருந்தது. அது இன்னும் உயரமாய் எழும் போது, அவர்கள் சூரியனை மறுபடியும் வானத்தில் எறிந்தார்கள். சூரியன் வானத்திற்குப் போய் மறுபடியும் மலை உச்சியில் விழுந்தது. அங்கே இருந்த ஜூஜூலாமா பாட்டி சூரியனைப் பிடித்துக் கொண்டார்கள்.


இப்படி ஒவ்வொரு நாளும் ஜூஜூலாமா பாட்டியும் அவருடைய குழு மனிதர்களும் சூரியனை வானத்தில் வீசினார்கள். இன்னமும் அவர்கள் ஒருவர் சூரியனை வீசி இன்னொருவர் பிடித்துக் கொள்கிறார்கள். மீண்டும் வீசுகிறார்கள். மீண்டும் பிடித்துக் கொள்கிறார்கள். 


தினமும் நாம் பார்க்கும் சூரியன், ஜூஜூலாமா பாட்டி சேர்த்து வைத்த ஒளி உருண்டை தான். ஜூஜூலாமா பாட்டிக்கு நன்றி சொல்வதற்காகத் தான் நாம் சூரியனைப் போன்ற வடிவத்தில் லட்டு செய்கிறோம். ஜூஜூலாமா பாட்டி மலை மேலிருந்து சூரியனை வீசத் தொடங்கியதால், லட்டுகளையும் மலை போல் அடுக்கி வைக்கின்றோம்.


***


அப்பா கையில் இருந்த இனிப்பு டப்பாவில் இருந்து ஸ்ரீகுட்டி, கொஞ்சம் லட்டைப் பிய்த்து எடுத்தாள்.


“அப்பா, நான் கொஞ்சம் சூரியனை சாப்பிடறேன்..” என்று சொல்லி லட்டு சாப்பிட்டாள். 


“சூரியன் இனிப்பா இருக்குப்பா..” என்று ஸ்ரீகுட்டி சிரித்தாள். அப்பாவும் சிரித்தார்.


ஃஃஃ

Thursday, May 23, 2019

இன்னும் எவ்வளவு தொலைவு? (A)



நிலவின் நுரை நிரம்பி வழியும் முன்னிரவு.  பசிய இலைகள் எல்லாம் இருளின் கரும் போதைக்குள் ஆழ்ந்து மெல்ல அசைந்து கொண்டிருந்த குளிரின் நேரம்.  பறவைக்கூடுகளில் நிறைந்த அமைதியின் கனம். வீதிகளில் சிதறியிருந்த தெருநாய்களின் சிறு முனகல்கள், பனியின் அழுத்தத்திற்குள் இறுகியிருந்தன. ஜன்னல்கள் அடைத்திருந்த வீடுகளின் வரிசைகளில் உறக்கங்களை உடுத்தி அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீட்டில் மஞ்சள் விளக்கொளியின் கீழே தனித்த அறைக்குள், நாமிருவர் செய்யப் போவது, செய்யக் கூடியது தான் என்ன?

கூர் நகங்களால் சுவற்றைக் கவ்வி மெல்ல நகரும் இந்த மரப்பல்லியின் சொரசொரப்பான முதுகின் மேல் தடவிக் கொடுத்தால் தான் என்ன? யாரும் தீண்டியிராத மின்விசிறியின் கரங்களை அழுத்திக் கொடுத்து, அதன் சுழலில் இறங்கினால் ஆகாதா என்ன? யாரிடமும் சொல்லி விடுமோ என மெல்லக் கீச்சிடும் முழுதாக மூட இயலாத கதவை, நிறுத்தக் கொடுத்திருக்கும் சிறு கல்லை மெல்ல நகர்த்தி, வெளியே பாயும் காற்றைக் கொஞ்சம், அனல் அடிக்கும் இச்சிறு அறைக்குள் வரவிட்டால் தான் என்ன? நிலவின் அமுதக் கிரணங்களை ஏந்தி, குறுகிய இடைவெளி வழியே சொட்டு சொட்டாய் இறக்கும் தென்னங் கீற்றுகளைச் சுழற்றி ஓடும் வாடைக் காற்றின் வாசனையை இங்கேயும் உள்ளே அனுமதிக்கலாமா?

கசங்காப் படுக்கையின் மேல் நவீன ஓவியம் போல் புரியா வரிகளை எழுதப் போகும் நம் அசைவுகள் தான் எத்தனை? திசைகளை சென்று அடையப் போகும் நம் ஆடைகளின் சுருண்ட மடிப்புகள், இப்போது அடைகாக்கும் அந்தரங்கங்களை இருளுக்கு காட்டப் போகும் நொடி தான் எது? ஒருவரும் தோண்டியிராத கிணற்றுக்குள் இருந்து, சூழ வளர்ந்திருக்கும் கருஞ்சருகுகளை விலக்கி, ஆழத்து நீரை இறைத்து இறைத்து தரையை நனைக்கப் போகும் காலம் தான் எத்தனை குறுகியது? பூமியெங்கும் ஊறியிருக்கும் ஈரத்தை ஈர்த்து வந்து, இழுத்து வந்து நுனிப்புள்ளியில் விண்ணைப் பார்த்து எழுப்பும் ஊற்றுப் புள்ளியை, எத்தனை நிமிடங்கள் தான் காத்து வைப்பது?

நீல மேகங்கள் குழுமிக் கொண்டிருக்கின்றன. அதற்குள் புதைந்து கொள்வதற்குள், அதன் மென்மைக்குள் தலை அமிழ்த்துக் கொள்ள, அதன் தீரா சுரப்புகளைச் சுவைத்துப் பெருமழை பெய்ய வைக்கும், வெம்மையின் நரம்போடும் இக்கைகளை, இச்சமயத்தில் எங்கு தான் வைத்துக் கொள்வது? அதன் விரல்கள், உள்ளங்கைகளுக்குள் வேர்த்து சொட்டும் வியர்வகளை நழுவ விடுகின்றன.

இந்த விழிகளை, இந்த நுனி நாசியை, இந்த செவ்விதழ்களை, இந்த பூமயிர் உலையும் பொன் கழுத்தை, இந்த அமுது நிறைத்து தளும்பும் நிறை மார்புக் குலைகளை, சரிவில் இறங்கும் கொப்பூழ்ப் பள்ளத்தை, உயிர் ஊறிச் சிலும்பும் பூமேடையை, செழும்தெழுந்துத் திமிறி நிற்கும் வலுத்தொடைகளை, தாங்கிப் பதிந்திருக்கும் பூம்பாதங்களை, மழைக்காலத்தில் பசுந்தோட்டங்களை வந்து வந்து மூடிக் குளிரில் நனைத்து, சிறுமழை பெய்து ஈரத்திலேயே வைத்திருக்கும் கருமுகில்களைப் போல், ஏன் இந்த வர்ண ஆடைகளுக்கும், மின்னும் நகைகளுக்குள்ளும் புதைத்து வௌத்திருக்கிறாய்?

ஒவ்வொரு திரையாக விலக்கி விலக்கி, ஸ்வர்ண சொரூபம் காணும் அந்த முதல் நொடிக்கு, இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும், நான்?

Monday, April 29, 2019

விடிகாலை.




விடிகாலை
இன்னும் முழுதாய்த்
துயில் கலையவில்லை.
முதல் உறவுக்குப் பின்
களைத்த
கன்னி போல்
முந்தைய இரவின் மழையீரம்
எழ விரும்பா சோம்பல்
திரண்ட கருமை
இருள் பூசிய பார்வை
வெங்கதிர் விரல்
வந்து
தீண்டும் வரை
வா,
இம்மேகப் புடைப்புகளின்
கீழ்
சற்றே
நிற்கலாம்
விழியிதழ் விரல்நுனி
கோர்த்துக் கொண்டு.

American Beauty.

ந்த ஒற்றை ரோஜா இதழ்ப்பிசிறு எங்கிருந்து வந்து என் மேல் விழுந்தது? சரியும் ஒரு பட்டுத் திரையின் மெல்லிய வழிதல் போல், சொட்டுச் சொட்டாய்ச் சேர்ந்த நீர்த்தாரை ஒன்றின் வடிதல் போல், நமக்கிடையே நிரம்பியிருக்கும் குளிர்க்காற்றின் அடுக்குகளில் மெல்ல மெல்ல தவழ்ந்து படர்ந்து கடந்து வந்ததா உன் காதலை ஏந்தி?
இதன் அடர்சிவப்பு, உன்னுள்ளில் சேர்த்து வைத்திருக்கும் என் மீதான ப்ரேமையின் மெளனத்தைச் சொல்கிறதா? இதன் மேலே புகை போல் விரவியிருக்கும் குளிர்மணம், முன்னிரவில் நீ கொடுத்த முத்தமொன்றின் ஈரம் போல அத்தனை இனிக்கிறதே?
மலரிதழ் நுனியை என் நாவால் தடவிப் பார்த்தேன். உன் மென்சருமத்தின் பூமுடி போல் அத்தனை கூச்சம்; ஒரு மென் சூடு;
கொஞ்சமாய்க் கிள்ளி சுவைத்தேன். உன் சிறிய இளம் மார்புகளுக்கு இடையில் வைத்து அனுப்பினாயா, என்ன? அதே நடுக்கம், அதே வியர்வை வீச்சம்.
ஒரு இதழ் போதாது; இந்த இரவை நிரப்ப, உன்னிலிருந்து அனைத்து இதழ்களையும் விடுவி. ரோஜா செம்மழை என் மேல் பொழியட்டும். அதன் புதர்களுக்குள் என்னைப் புதைத்துக் கொண்டு, இந்த வாழ்வை நீந்திக் கழித்து விடுவேன்.


விண்முழு துளிர்பூச்சிகள்.

கொல்லும் தனிநிலவின்
வெண்ணிழல்
பனிநனைக் குளிரின்
கூர்நுனி கிரணங்கள்
விண்முழு துளிர்பூச்சிகள்
வீசுகாற்றில் மிதக்கும் ஓசைகள்
கருநிழல் உண்ணும்
வெம்மை உலர் சுவர்கள்
இருள்நிறை இல்லங்கள்
ஒற்றையொளி அறைச்சதுரம்
பஞ்சடைத்த படுக்கை
துஞ்சிடா இரு விழிகள்.

மொழித்துணை பிடித்து
விழித்துனை நினைத்து
விரல்வழி வழி சொல்நிரை
முரல்வர்ணச் சிதறல்கள்

மண்மேல் வெகுதூரம்
தீண்டியும் விலகியும்
பேசியும் மெளனித்தும்
வளர் உறவிது தளிர் மரமிது
களர் நிலமிதில் கான் பசியது

நினைவலை மிதக்கும் படகினில்
இருமனம் உலவிய கதைகள்
ஒளிவிழும் சாலையில்
ஒழுகிய மாலைப் பொழுதுகள்
ஒருவரி இருவரும்
ஒருமித்துளறிய வியப்புகள்
சொல்லிலா பரிமாற்றங்கள்
மெளனத்தின் பங்குதாரர்கள்

இன்றுனை இழந்ததன்
இறுகிய கணங்களில் இருப்பு
இனியொரு முறை காணுதல்
இயலுமா என்றொரு மலைப்பு

இன்னுமொரு இவ்விரவு
உறக்கம் விலகிய களைப்பு
இன்றோடு விலகிடுதல்
என்றோ என்னும் தவிப்பு

மலரணிச் சிறுகூந்தல்
பரவிய படுக்கையில்
உறங்கிடும்  எழில்பரலே,
உன் கனவினில்
உலைந்திடும் பொன் வண்டென நுழைந்தனன்;
மனமெனும் குடுவைக்குள் மறைத்திடுக;
தினமொரு சிறு சிறகளிப்பேன்; சூடிப் பறந்திடுக.

Monday, December 17, 2018

சுழலில் இறங்கும் சிற்றிலைகள்.

னிக்கூரைப் பாறை என்றெண்ணிப் பற்ற விழைந்தது போல் ஒரு காதலைப் பற்றிக் கொண்டு இப்பேராழியைக் கடந்து சென்று விட முயன்றேன். தொடத் தொட விலகி வேறொரு கிளையில் அமரும் பட்டுப்பூச்சியைப் போல் அது கிட்டும் என மாயம் காட்டி கிட்டாது எட்டிப் பறக்கிறது.
பொற்காசுகள் குவிந்து கைபடாமல் கிடக்கும் ஆழப்புதையல் போல் ஓர் பேரன்புக் குவியலை யார் கண்படாமலும் எங்கோ பதுக்கி வைத்திருக்கிறேன். வளை தோண்டும் எலி போலாவது வந்து கொறித்துச் சென்றாலென்ன நீ?

சேர்த்தணைத்துக் கொல்லும் இரு கரங்கள் போல் முளைத்து வளர்ந்து எழுந்த ஓரன்பு, ஒரு பிரியம், ஓர் ஆதுரம் உருவு கொண்டு பிறவிகள் தோறும் எனைப் பற்ற வருபவள் என்று ஒரு கணமேனும் நாம் அறிந்திருந்தால், அச்சொல் வந்து அன்று விழுந்திருக்குமா?

சுடறேற்றிய பின் தூர எறியும் கருகிய தீக்குச்சியைப் போல் ஒரு சொல் அணைந்து சென்று விட்டது. அச்சுடர் கல்லில் செதுக்கியது போல் புயல் காற்றுக்கும் பெருமழைக்கும் கடும் குளிருக்கும் அசையாது ஒலித்துக் கொண்டிருக்கின்றது, அச்சொல்லின் ஒலியை.

நீரில் மிதக்கும் நிழல்கள் வீசும் காற்றுக்கும் அலையும் அலைகளுக்கும் ஏற்ப அசைந்து கொண்டிருக்கின்றன. மேலெழும்பியும் கீழே தாழ்ந்தும் அக்கரு உருவங்கள் வான் ஒளிக்கு மண்ணுக்குக் காட்டும் நம் எதிர்வினைகளோ? பொலியும் அவ்வொற்றைக் கதிருக்கு முன் உருகிச் சென்று விடாமல் நம் அகத்தை ஆழக் கவ்வியிருக்கும் ஆணவத்தின் நீள் கூர் நகங்களை வெட்டித் தூரப் போடும் வாள் எங்கே? உன் விழிப்பார்வை தானோ?
சென்ற காலங்களின் நினைவுகள் என நிகழ்ந்தவை அனைத்தும் சென்று சேரும் அப்புள்ளியை அமர்ந்து காக்கும் பெரும்பூதமாய் இருப்பது தான் எது? காலக்குடுவையின் சிறுதுளையில் சொட்டிக் கொண்டிருக்கும் மணற்பருத்துகள்கள் போல் நம் சொற்களும் அங்கு சென்று சேர்ந்து கொண்டேயிருப்பனவோ? சொல் தேவி எங்கோ இருந்து நமட்டுச் சிரிப்புடன் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் வாய் மூடி மெளனமாய் நம்மால் இருப்பதும் தான் இயல்வது எங்ஙனம்?


***

இது போன்ற இருபது கவிதை கட்டுரைகளைத் தொகுத்து அமேஸான் தளத்தில் ’செம்பொற்சுடரொளிர் சிறகு’ என்ற பெயரில் நூலாகக் குறைந்த விலையில் வெளியிட்டுள்ளேன். இணைப்புகள் இடது பக்கமும் உள்ளது.

வாங்கிப் படித்துத் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். 

Thursday, October 11, 2018

நான் ஒரு பொன்னோவியம்...

ளையராஜாவின் ஒரு ரத்தினம், இப்பாடல். அதற்கான என் வரிகள்.




ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ
பாடிவரும் பூங்குயிலோ
பால்நுரை வந்தாடிடும் வஞ்சிக் கொடியோ
பார்க்கையில் பூமரம் பழகிடும் இருதயம் பருகிடும் (ஆயிரம்)

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியும் வரும் தணுமை

சரணம்.1:
ஆண்:
நானும் அழைத்திட நாணம் தடுத்திட
நாடகம் ஆடிடும் நாயகியே
நானும் அழைத்திட நாணம் தடுத்திட
நாடகம் ஆடிடும் நாயகியே

பெண்:
மேகமும் கூட்டியது குளிர்
மோகத்தை மூட்டியது

ஆண்:
சிறுதூறல் பெருஞ்சாரல்
மழையாதல் மதுஊறல்
துணைதேடல் உனைச்சேரல்
மகவாதல் மயங்கிடும் பொழுதிதுவே

பெண்:
சிறுமணி சிணுங்கிடும் சிலைலயம்
சிவந்த முகத்தில் சிதறும் சிரிப்பில்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

சரணம்.2:
பெண்:
ராகம் இசைந்திட தாளம் இணைந்திட
ராஜனின் ராஜ்ஜியம் ராத்திரியில்
ராகம் இசைந்திட தாளம் இணைந்திட
ராஜனின் ராஜ்ஜியம் ராத்திரியில்

ஆண்:
பொன்மணி ஓவியங்கள் சொல்லும்
பூந்தமிழ்க் காவியங்கள்

பெண்:
விழிபேசும் விளையாடும்
உடல்கூசும் உறவாடும்
ஒருவேகம் உருவாகும்
ஒருபோதும் விலகிட விழையாதே

குழு:
எழுதிய இசையது எழுப்பிடும்
எமது மனதில் அமைந்த அழகின்

ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

சரணம்.3:
ஆண்:
வந்தோம் தினம்தினம் தந்தோம் சுகம்சுகம்
வந்ததும் தந்ததும் நானல்லவோ
வந்தோம் தினம்தினம் தந்தோம் சுகம்சுகம்
வந்ததும் தந்ததும் நானல்லவோ

பெண்:
விடையது தெரிந்ததுவே உங்கள்
விருப்பமும் புரிந்ததுவே
விடையது தெரிந்ததுவே உங்கள்
விருப்பமும் புரிந்ததுவே

ஆண்:
மனம்தேடும் உனைநாடும்
மொழிமாறும் துணைசேரும்
பகலோடும் இரவாகும்
உறவாகும் உனைத்தொடும் விழியிதுவே

பெண்:
உருகிடும் உடலிதில் உறைந்திடும்
உமது உயிரில் உணரும் உருவில்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

ஆண்:
பாடிவரும் பூங்குயிலோ
பால்நுரை வந்தாடிடும் வஞ்சிக் கொடியோ

பெண்:
பார்க்கையில் பூமரம் பழகிடும் இருதயம் பருகிடும்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

***

Saturday, October 06, 2018

நிழல்வேகப் பயணி.

ன்று இந்த இரவுடன் கழியட்டும் இந்தக் குளிர், நாளை வருவது மற்றொரு குளிர். தலைக்கு மேல் விரிந்திருக்கும் கருங்கூந்தலில் எண்ணி முடிக்கவியலா தொட்டறியா முடியா இந்த மின்னும் மல்லிகை மொட்டுகளை, நாளை இரவில் வேறொரு இடத்தில் காண்போம். இந்த நறுமணம் மிதக்கும் தென்றல் இத்தோடு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும், நாளை வீசட்டும் மற்றொரு ஈரக்காற்று.

இந்தத் தொடுகை இந்த இரவுடன் அடங்கட்டும், நாளை தொடங்குவது வேறொரு தீண்டல். இந்தக் கோதல், இந்த மென்சூட்டு முத்தம், இந்த தடவல், இந்த கலைந்த விரிப்புகள் இந்த ஒற்றை நிலவின் அடியில், சில்லிடும் மரநிழல்களுக்கிடையில், சரசரக்கும் பாம்புகள் போல் பின்னிக் கிடக்கும் இந்தப் பிணைப்புடன் முடியட்டும், நாளை இரவில் துவங்கட்டும் மற்றொரு பிணையல்.

இந்தக் கிசுகிசுப்பு, இம்முணுமுணுப்பு, இம்முனகல், இவ்வியர்வை, இவ்வெம்மை, இந்த நடுக்கம் இன்று இந்த பின்னிரவின் கடிகாரச் சத்தத்துடன், இந்த சுவர்ப்பல்லியின் ரீங்காரத்துடன், இந்த சில்வண்டுகளின் ஊதலுடன், இந்த நீர்த்தவளைகளின் உரையாடலுடன், வந்து குழுமியிருக்கும் கருமுகில் கூட்டங்களின் இடியோசையுடன் இணைந்து கொள்ளட்டும்.

துளிக்குருதி பூக்கும் இந்த நகக்கீறல்கள், இந்த சுவைக்கும் பற்பதியன்கள், இந்த திசையறியாப் புரளல்கள், இந்த சில்லறை முடித்தூறல்கள் இந்த மெளனத்துடன் சேர்ந்து கொள்ளட்டும். நாளை மிஞ்சட்டும் சில சொற்களும் சில பார்வைகளும் சில உதட்டுச்சுளிப்புகளும் சில கண்காட்டல்களும் அவை மீட்டுக் கொண்டு வருகின்ற மற்றுமொரு நாடகத்தையும் அதன் உணர்வேகங்களையும்.

Thursday, September 20, 2018

அகமெழு சந்தம்.



தேவி,

சொற்சுழலில் மிதக்கும் ஒற்றை இலை, நீர் தாங்காது மிதக்கும் வெளி இது. மின்னல் ஒளியின் கணத்தில் ஓர் அறிதல், இம்முத்தம். பேரருவிக் கீழ் எப்போதும் ஒரு குளிர்ச்சி. பெருகும் ஆற்றங்கரையில் நகரும் நண்டின் கீறல் இவ்விரவு. போதும்...மோதும் என முட்டிக் கொள்ளும்  கொழுத்த முகில்களின் மின் அதிர்வு இக்கூடல்.

சிறு சிறகுகளால் உரசிக் கொள்ளும் சிட்டுக்குருவிகள் அலகு கோதும் அனல் இம்மாலை. தேடிச் சேர்த்த செல்வம் மேலேயே உறங்கும் கஞ்சன் கைநழுவ விடும் காசு இச்சொற்கள். வானவில் எழும்பும் எதிர்வானம் இவ்வூடல். முதல் குரலின் முதிர்மை இவ்விலகல். மழைக்காட்டின் மண் கவ்வும் அடிமர வேர் இத்தழுவல். கிளை வளர்ந்த மரம் மேல் படரும் கொடி இவ்விறுக்கம். கூழாங்கற்கள் பதிந்து கிடக்கும் பாதை இவ்விழி அழுத்தம்.

தேங்கிய வனத்தின் தேன் சுரங்கம் போன்றது இளமை முளைத்த முதல் சேர்த்த இவ்விருப்பம். மலை மூதூரும் மின்மினி கண்ட அளவில் இம்மேனி அறிதல். அடியாழப் பாறை மிதக்கும் சூடான மலைக்குழம்பின் அடர்த்தி இப்பார்வை. நீர் சுமக்கும் கலயம் போல் ஒரு தளும்பல். பின்னிரவுக் குளுமை போல் ஒரு தீண்டல். முன்மாலை மல்லிப் பாத்தியில் நடத்தல் போல் ஒரு தூண்டல். நீள் நகங்கள் எழுதும் முடியாக் காவியமொன்றின் அறியா அசைவுகள், குன்றா இவ்விசைவு.

திரும்பல் இல்லாக் காலநதி சுழித்துப் பெருகியோடும் இவ்வெளியில் ஒரு படகென உனை நினைத்து தினம் எழும் அடங்கும் இம்மனம் நிறைய, குழலென குழலிசையென நீள்சுருள் குழல் வந்துத் தீண்டித் தீண்டி மணங்காட்டும் ஒரு கனவுக்குள் விழிக்கிறேன்.

திசைகள் எல்லாம் மலர்களென மலர்ந்திட, வானும் நிலமும் வசந்தங்களால் நிறைந்திருக்க, உன்னிரு பாதத்தூளிகளைக் கண்டு சிரம் கொண்டு அதில் முட்டி, செங்குருதியால் நகங்களைக் கழுவ சித்தம் கொண்டு தேடியலைகிறேன்.

சிலையென நின் தேகம் செதுக்கிச் செதுக்கி பாறையிலிருந்து எடுத்த வெண்ணைக்குழைவென நிற்கும் வளைவெழிலில், தேவி, என் மனக்கன்று சுற்றிச் சுற்றி வருகிறது. பாதமுதல் சிரம்வரை ஒவ்வொரு கணுவிலும் அழகு பூத்த பசும்பொழில் அரசி நீ.

பாதமென எழுந்த இரு பூங்கொத்துக்கள் இம்மண்ணில் வைக்கின்ற நொடிகளில், என் மனதில் எழும் முதற்சொற்களால் அவற்றை அர்ச்சித்து நிரப்புகிறேன். பத்து மொட்டுகள். பத்து மகுடங்கள். ஐந்தைந்தாய்க் குழு அமைத்த புறாக்குஞ்சுகள். வைக்கின்ற ஓவ்வோர் அடியிலும் அலைகளை அமைதிப்படுத்தி, அருள்கின்ற அமுதக்கட்டிகள். கனிந்த கரைந்த செழுந்தொடைகள். தேவி, நீ பிறப்பிக்கும் இப்பிரபஞ்சத்தின் மூலம் உனதேயல்லவா. நீள்சுடர். அணைப்பின் வெம்மையின் ஊற்று. தீரா சுழல். கனிந்துருகும் கனல். அள்ளி எரிக்கும் அனல். முத்தியெடுக்க ஈரம் பதிகின்ற முத்துத்துளி. திகட்டா மணம். 

Monday, September 17, 2018

பர்வதி மலைக்கு ஒரு சிற்றுலா.



பூனாவிற்கு வந்து முதன்முறையாக வெளியே சென்றேன்.

பர்வதி மலை என்பது அதன் பெயர். பேஷ்வாக்களின் தர்பார் நிகழ்ந்த பகுதி அது. ஒரு சிறு குன்றாக உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட படிக்கட்டுகளைக் கொண்டது. மேலே சென்றால் சில கோயில்களும், தர்பாரும், ஒரு அரும்பொருட்காட்சியகமும் உள்ளன.

ஒரு சனிக்கிழமை அங்கே சென்று வரலாம் என்று முடிவெடுத்துக் கிளம்பினேன். அங்கே தான் தவறு நிகழ்ந்தது.முந்தின வெள்ளி இரவு தான் கடைசியாகச் சாப்பிட்டது. சனிக்கிழமை விரதம் என்று இருந்து விட்டேன். எனவே அன்று மாலை நான்கு மணிக்கு அறையிலிருந்து கிளம்பும் போது, நான் சாப்பிட்டு இருபது மணி நேரங்கள் ஆகி விட்டிருந்தன.

ஹடப்ஸரிலிருந்து ஆட்டோ பிடித்தேன். (ஏனெனில் பேருந்துகள் இன்னும் பிடிபடவில்லை). கிளம்பி ஸ்வர்கேட் வழியாகச் சென்று பர்வதி மலை அடிவாரத்தில் நிறுத்திய போது மீட்டர் 120 எனக் காட்டியது. இங்கெல்லாம் மீட்டர் மட்டுமே கேட்கிறார்கள்.

அடிவாரத்தில் பூ, மாலை, தேங்காய்க் கடைகளுடன் சின்ன உணவுப்பொருட்களும் விற்றார்கள். வியப்பாகப் பார்த்தேன். பிறகு புரிந்தது ஏன் என்று. மலையேறத் தொடங்கினேன். அகலமான படிக்கட்டுகள் தான். ஆடுகள் தாவித்தாவி ஓடின. அங்கேயே வாழும் சிறுவர்கள் பம்பரம் சுழற்றிப் பறக்க விட்டனர். பாறைக் குழுமமே மலை என்றாயிற்று.

கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்கச் சாப்பிடாதது, எக்கச்சக்கமாய் ஊதிப்போயிருந்த உடல் எல்லாம் சேர்ந்து.. ஆம், அதே தான். பத்து, பதினைந்து படிக்கட்டுகள் ஏறுவதற்குள்ளாகவே புஸ்..புஸ்ஸென்று மூச்சு வாங்கியது. உடலின் அனல் ஊற்று கிளம்பி வந்தது. ஓரக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றேன். கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. எப்போதும் மலையேறுகையில் தோன்றும் அதே நினைப்பு. ‘ஆகா.. சாகப் போகிறோம். மொழி தெரியாத ஊரில் செத்து இங்கேயே ஆவியாக ஆலைய வேண்டுமா? ஆவியானாலும் சொந்த ஊரில் ஆவியாவேன்..’ என்று உறுதி கொண்டு, கொண்டு வந்திருந்த நீர் பாட்டிலில் நீரருந்தி தாகம் தணிவித்தேன்.

இந்த நிலையில் எந்த பெருமிதமும் பார்க்கக் கூடாது என்று, படிக்கட்டிலேயே அமர்ந்து கொண்டேன். மூச்சு சீரடையும் வரை எழுந்திருக்கவே கூடாது. அதற்கு அரை நாள் ஆனாலும் சரி என்று. பிறகு, நான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் அமர்ந்து அமர்ந்து தான் மேலேறுவதைக் கண்டு ஓர் அல்ப சந்தோஷம் வந்தது. இப்படியே சென்று, ஒரு வளைவு திரும்பியதும், ஒரு சின்ன மண்டபம் போல ஓரத்தில் இருந்தது. அங்கும் ஒரு சிறு அமரல். அதை ஒட்டி, ஒரு கல் திட்டில் ஒரு பெண்மணி சிறு குழந்தையுடன் அமர்ந்திருந்தார். மறு ஓரத்தில் அமர்ந்து மீண்டும் நீர். பசி மயக்கம் வேறு. மண்டபத்திலிருந்து உச்சி வரை சின்னப் பையன்களும் பெண்களும் ஏறி, இறங்கி ஓடிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். பயிற்சியாளர் விசிலடித்துக் கொண்டு அவர்களை கவனித்தார். விசுக்..விசுக்கென்று மின்மினிப் பூச்சிகளைப் போல பறந்த இளையோர்களைப் பார்க்கையில் எழும் பெருமிதமும் பெருமூச்சும்.

கடும் பசி. தண்ணீர் மட்டுமே குடித்துக் குடித்து அனலவிக்கையில், உச்சியில் இடது புறமாக ஒரு உணவகம். தெய்வமே நேரில் தோன்றியது போல். ‘ஒரு ப்ளேட் போகா’ என்றேன். அது வருவதற்குச் சற்று நேரமாகும் என்பது போல் தோன்ற, காத்திருக்க இயலாது என்று ஒரு லெமன் சர்பத். உப்பும் எலுமிச்சையும் கலந்த அக்குளிர்ந்த நீர் நா தீண்டி உள்ளே இறங்குகையில் தான் எத்தனை குளிர்ச்சி..! கண்களில் ஒளி வந்தது. காதுகள் திறந்து கொண்டன. உலகம் எனக்குள் நுழைந்தது.

கீழே நகரின் வாகனங்களின், மக்களின், பாடல்களின், வீசும் காற்றின், பறவைகளின் அத்தனை ஓசைகளும் கேட்கத் தொடங்கின. வந்த பாதையை விட மற்றுமொரு கடும்பாதையும் அருகில் இருந்தது. அங்கே அவ்வளவாக மக்கள் வராததால், ஆம்... காதல் இணைகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். காத்திருந்து வந்த போகாவையும் உண்டு விட்டு தெம்பாக, மதிலுக்குக் கீழே எட்டிப் பார்த்தேன். குழந்தைகளும் சிறார்களும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மேலேறினேன்.

நுழைவாயிலுக்கு நேராய் பாண்டுரங்கர் கோயில். அதை ஒட்டி இடது புறத்தில் அருங்காட்சியகம். அதையும் தாண்டிச் சென்றால், தர்பாரும், முருகன் கோயிலும் விஷ்ணு கோயிலும் வருகின்றன. இரு கோயில்களுக்கு நடுவில் ஒரு வெட்ட வெளி. அதன் நடுவில் வட்டமாய்க் கூரையிட்டு, தியானம் செய்யலாம் என்று போர்ட் இருந்தது. மக்கள் அங்கே தான் சிதறிச் சிதறி அமர்ந்திருந்தனர்.

நான் முதலில் விஷ்ணு கோயிலுக்குச் சென்றேன். சரியாக நான் உள்ளே நுழைவதற்குள், பூசகர் வெளியே வந்து கதவுகளைப் பூட்டினார். கதவுகளில் தெரிந்த இடைவெளியில் கும்பிட்டு விட்டு, முன் நின்ற கருடரையும் தொழுதேன். இந்தக் கோயில்களின் கோபுரம் வங்கக் கோயில்கள் போல் தாமரை மொட்டுகள் போல் கூம்பிக் கூம்பிச் சென்று அமைகின்றன. கோயிலைச் சுற்றுகையில் மராத்தியர்கள் கட்டி வைத்த கோட்டைச் சுவர்களில், வீரர்கள் நின்று தொலைதூரத்தை நோக்கும் இடைவெளிகளில் எல்லாம், இன்றைய காதலர்கள் அப்பியிருந்தனர்.

வெளியே வந்து, அந்த தியான வெளிக்குச் சென்றேன். அதை ஒட்டி மலை விளிம்புக்குச் சுவர் கட்டி வைத்திருக்க, அந்தக் கொஞ்சம் சரிந்த பகுதியில் பலர் நின்று தற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மாலை வேகமாக மங்கிக் கொண்டே வந்தது. தூரத்தில் தெரிந்த சஹ்யாத்ரி மலை மடிப்புகள் மஞ்சள் காற்றில் மிதந்தன. காலடியின் கீழ் நகரின் ஒரு பகுதி வீடுகளாலும், வாகனங்களாலும் இயங்கிக் கொண்டிருக்க ஸீவேஜ் போர்டு கேம்பஸை ஒட்டி ஒரு சிறு நதி புகுந்து நுழைந்து எங்கோ சென்றது. அபார்ட்மெண்டுகள் நின்றெழுந்து வானைத் தீண்டின. தெருக்கள் நாய்களாலும் வானம் பறவைகளாலும் இரைச்சல் கொண்டிருந்தன.

வெளி வந்து மேடேறி, கார்த்திகேயன் ஸந்நிதிக்குச் சென்றேன். நம் அழகன் இங்கெ கரிய  திருமேனியில் மின்னினான். வேண்டி விட்டு, சுற்றி வருகையில் ஆறுமுகனின் அவதாரமும் ஆற்றிய வினையும் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. அதில் முருகன் என்றும் அவன் சொல்லப்ப்ட்டிருக்க, சிலிர்த்தேன். முருகு என்றால் அழகு என்று தமிழ் கூறும். கேரளத்தில் கூட அவனை ‘ஸூப்ரம்ண்யன் ஸந்நிதி’ என்றே சொல்கிறார்கள். மராட்டிய மண்ணில் இவர்கள் ஆட்சி நிகழ்ந்த  பகுதியில், குமரனை முருகன் என்று சொல்லியிருப்பது கண்டு உளமகிழ்ந்தேன். தஞ்சையை ஆண்ட போது இது வந்திருக்கலாம் என்று ஓர் எண்ணம்.தொடர் படங்களில் கார்த்திகைப் பொய்கை இல்லை, ஆனால் கங்கையில் பிறந்ததாகச் சொல்கின்றனர். சூரபத்மனைக் கொல்லும் வரை படங்கள் இருந்தன. சுற்றி விட்டு, மேல் காற்று திரண்டு பாய்ந்த சூழ்ந்த அம்மதில் சுவர்கள் பல நூற்றாண்டுகளைக் கண்டிருந்தன.

முருகன் கோயிலை ஒட்டி பேஷ்வாக்களின் தர்பார். அவர்களின் படங்கள், முகலாயர் காலத்திலும் அதற்குப் பின்பும் மராத்திய சாம்ராஜ்யத்தின் பரப்பளவு, மன்னர் வருகை, போர்கள் முதலியன வரையப்பட்டிருந்தன. பார்த்து விட்டு, வாசலைக் காத்து நின்ற ஊமைச் சிறு பீரங்கிகளைத் தடவி விட்டு, முன்னே வந்தேன். அருங்காட்சியகத்திற்கு அப்புறம் போகலாம் என்று பாண்டுரங்கர் கோயிலுக்குப் போனேன். கரிய திருமேனிகள். பளபளப்பாய் இருந்தனர்.

இன்னும் கொஞ்சம் மேலே படியேறிப் போனால், மயக்கும் இரு விழிகளோடு மோகினியர் வாயிலைக் காக்க, ஆலவாயன் இறைவன் கோயில், குடும்பத்தினருடன். லிங்க ரூப நாயகன் கோயிலில் ஒரு பெண் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். வணங்கி விட்டு இடதுபுறம் பிள்ளையார், சுற்றி வருகையில் பவானி மாதா, முன்புறம் பெருமாள் சிற்றாலயங்கள். வணங்கி விட்டு, ஒட்டியிருந்த சிறு திண்ணைப் பகுதியில் அமர்ந்து சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். வெளிவந்து அருங்காட்சியகம் சென்றேன். நுழைவுக் கட்டணம் 10 ரூ.

தரைத்தளமும் முதல் தளத்திலுமாக இருந்தது. கீழே மையத்தில் பெரும்பல்லக்கும், மத்தளங்களும், பெரும் சாமான்களும் இருக்க, சுற்றிலும் கண்ணாடி பத்திரங்களுக்குள் அரசர்கள் பயன்படுத்திக் கிடைத்தவை வைக்கப்பட்டிருந்தன. சமையல் பாத்திரங்கள், வாட்கள், ஆயுதங்கள், நகைகள், நாணயங்கள், புகைப்படங்கள், ஆடைகள், தலைப்பாகைகள், ஓவியங்கள், மினியேச்சர் பொம்மைகள். வரலாறு எனும் பெரும் நதியைச் சல்லடைகள் வழியாக அள்ளிப் பார்ப்பது போல் இருந்தது. கைக்குக் கிடைத்த இந்தச் சின்னத் துளிகளைக் கொண்டு அந்த நதியை நாம் நிரப்பிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. இடையில் நமது அழுக்குகளையும் கலந்து விட்டால், கலங்கிய நதி ஆழத்தில் எதையும் காண விடாது, குழைசலை மட்டுமே காட்டுகின்றது.

‘தொடாதீர்’ என்று எழுதப்பட்டிருந்த மத்தளங்களைச் சிறுவர்கள் அடித்தனர். குறு வாட்களை ஆண்கள் நுண்ணிப்பாகப் பார்த்தனர். அவர்களின் கண்களுக்குள் போர் நிகழ்ந்து அவை குருதி சொட்டிக் கொண்டிருக்கும். கிளுகிளுத்த குரலில் மங்கையர் நகைகளையும் அவற்றின் பெட்டிகளையும் ஆடைச் சுருக்கங்களையும் பார்வையால் நீவினர்.

வெளியே வந்து மலையிறங்கத் தொடங்கினேன். மண்டபத்து வளைவில் இறங்குகையில் ஒரு தம்பதி சினத்துடன் ஆனால் உரத்த ஒலியின்றி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர் ஒரு செல்போனை ஓங்கி வீசி எறிந்தார். யாருடையது என்று தெரியவில்லை. அது கல் படிக்கட்டுகளில் விழுந்து அதிர்ந்து உருண்டு மோதி உடைந்து இறங்கிக் கொண்டிருந்த என் கால்களைக் கடந்து சிதறியது. ஒரேயொரு கணம் நின்று விட்டு தொடர்ந்தேன்.

அடிவாரத்தில் ஒரு குளிர்நீர்பானக் கடைக்குப் போய் லஸ்ஸி கேட்டால், அப்போது தான் தீர்ந்தது என்றார். எதிரேயிருந்த அனுமார் கோயிலுக்குச் சென்றேன். எண்ணெயும் பூக்களும் வாங்கி சனீஸ்வரருக்கு எண்ணெய் சாத்தி, அனுமனை வேண்டிக் கொண்டு வெளிவந்தால், பொங்கல் பிரசாதம் போய்க் கொண்டிருந்தது. சுடச்சுட வாங்கி கிடைக்காத லஸ்ஸியை மறந்து கிடைத்த பொங்கலைச் சுவைத்து கைகழுவினேன்.

அப்புறம் ஒரு மாதிரி பல திசைகளில் நடந்து, பஞ்சமி என்ற உணவகம் இருக்கும் காரணத்தாலே ‘பஞ்சமி நிறுத்தம்’ என்று பெயர் பெற்று விட்டிருந்த புள்ளியை அடைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹடப்ஸர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்து வெறும் சிவாஜி நகர் ரயில் நிலையம் செல்லும் வண்டிகளாகவே பார்த்து வெறுத்துப் போய், பின் வந்த வேனில் ஏறி பதினைந்து ரூபாய்க்கு ஹடப்ஸர் வந்தடைந்தேன். மணி 10:15 இரவு.












Wednesday, September 12, 2018

முழுப் பைத்தியமாவதற்கு முன்...2.

சென்றடங்கும் இச்சொல்வெளியில் நுழைந்து விடுவதற்குத்தான் எத்தனைப் பெரும்பாடு? கண்டதையும் படித்து காணாததைக் கற்பனை செய்து, சொல் பொருள் உணர்ந்து காலாதீதமாய் உள்ள இம்மொழியின் களத்திற்குள் சென்று விட எத்தனை தான் எழுத வேண்டியிருக்கின்றது.  ;(

தேடித்தேடி ஓடிக் கண்டடைய வேண்டிய பாதை மெல்ல மெல்ல அகன்று முழுத்தலையும் வெட்டவெளிப்பாழ் என ஆன பின்பு, பதுங்கிக் கொள்ளவோ, ஓய்வெடுத்து உறங்கவோ ஒற்றை முடிகூட இல்லாத வழுக்குப்பாறையிலிருந்து வழுக்கி வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கின்றது ஏதோ வெறி இரவில் எவளிடமிருந்தோ தொற்றிக் கொண்டு வந்த பேன் தலைமுறையின் கடைசிக்குட்டி ஒன்று.

மீன்கள் நீருக்குள் அழுவதை யார் அறிவார் என்கிறார்கள். அவை நீருக்குள் சிறுநீர் கழிப்பதைக் கூடத்தான் எவரும் அறிவதில்லை. வாய் திறந்து மூச்சு விட்டு, வாய் திறந்து உண்டு இட்டு, வாய் திறந்து பேசிக் கொண்டு, வாயாலேயே முத்தங்கள் கொடுத்து விட்டு, வாயாலேலே தூண்டிலைக் கவ்விச் செத்துப் போகின்றன.

கதவுகள் அடைந்து விட்ட பின்பு நள்ளிரவில், பகலில் புழங்கிய சாலைகள் அனைத்தும் தெருநாய்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றன. அவை ஊளையிடுகின்றன; அவை கடித்துக் குதறுகின்றன; அவை சண்டையிடுகின்றன; வெறி கொண்டெழுந்து கூட்டமாய்ப் பிற நாய்களைத் தாக்குகின்றன; எச்சில் ஒழுகும் கூரிய பற்களை நீட்டிக் கொண்டு மென் சதையோ, காய்ந்த எலும்போ கிடைக்கும் எந்த உணவையும் துளைத்துக் குருதி சொட்ட உண்கின்றன. குளிர் இறங்கும் இரவின் காற்றுக்குள் அவை அதிகாரத்தோடு அரசாள்கின்றன. நட்சத்திரங்கள் மட்டும் மினுக்கும் பொழுதில் குரைத்துக் கொண்டேயிருக்கின்றன. புலரி விடிந்த பின், வாலைப் பின்னங்கால்களுக்கு இடையில் சுருட்டிக் கொண்டு,  முன்னங்கால்களை முன் நீட்டி அதன் மேல் வியர்வை ஈரத்துடன் மூக்கைப் பதித்து முகம் நினைவுகளில் ஊறுவது போல் கண்களை மூடிக் கிடக்கின்றன.

பூமரக்குன்று ஒன்று கனவுகளில் அவ்வப்போது வருவதுண்டு. உடல் முழுதும் விரிந்த மலர்கள். வர்ணக்குவியல்கள். வாசனைப்பொழிவு. வேர் பிடித்து, நீர் உறிஞ்சி, கிளை விரித்து, வானை அள்ளத்துடிக்கும் அத்தனை செடிகளும் நுனியில் ஒற்றை மலரைக் கொண்டிருந்தன. தேன் மலையைச் சுமந்து பாரம் தாளாமல் சரிந்த மென் மலர்கள் மண் நோக்கி, கவிழ்ந்து எதிர் நோக்கிக் காத்திருந்தன. எழிலையெல்லாம் சொற்களாக்கி எழுதுவதென்றால், ஒரே ஒரு மலருக்கு இம்மொழியின் அத்தனை சொற்களும் போதுமா? கனவுகள் மொழிபெயர்க்கப்படுகையில் இழக்கும் அழகு தான் எத்தனை? கனவுகளைக் கைமாற்றி விடுவது மட்டுமே காண்பவன் செய்ய வேண்டிய ஒன்று. வெவ்வேறு கண்கள் வழியாக அதே பூவனக்குன்று எழுந்து வந்தால், நாம் காணும் ஒரே கனவென அது விண்ணப்பிக்கப்படுமல்லவா? எங்கோ அமர்ந்து நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் அவனுக்கு அது கேட்குமல்லவா? 

முழுப் பைத்தியமாவதற்கு முன்...1.

ன்றெழுந்தது. இன்றுமிருப்பது. என்றும் சொற்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த வெண்ணிலவில் ஒரு பாதயாத்திரை போய் வந்தால் என்ன? காவியங்களில் காலடி வைத்து நடக்கும் பேற்றை விரும்பார் யார்? ஆம், அவளிடம் கருங்குழிகளும், மென் சேற்றுப்புதைவுகளும் இருக்கும். தடம் பதித்து மிதந்து, காலூன்றி, தடுமாறி, விழுந்து, உருண்டு, புரண்டு, கையூன்றி, எழுந்து, நின்று மீண்டும் அந்த ஒளியுடலில் பரவுதல் என்பது தான் இவ்வுடலின் நோக்கமாய் இருக்கலாம்.

தேர்ப்பூக்களும் சரம் கலைந்த மாலைகளாய் தேவி தோளிலேறி கல் மார்புகள் மேல் படிந்து பூத்து மணந்த வெண் மலர்களும் செம்பூக்களும் கோர்த்த கனமான அவை, இதோ தெரு மூலைகளில் எறியப்படும். அல்லது, நுரை சுழித்தோடும் ஆற்றின் நீர்ப்பரப்பின் மேல் தூக்கி வீசப்படும். எவரெவர் தோட்டத்திலோ முளைத்துப் பூத்த ஒவ்வொரு மலரும் இவ்வூரின் நதிச்சுழலில் மிதந்து எவ்வூரின் மண்ணிற்கோ சென்று சேர்ந்து உரமாகும். அதன் விதி வாழ்க.

சாலைகள் மறந்த நதிகள் பொங்கிப் பெருகி ஓடும் கடுமழைக்காலத்தில், கனமான தார் ஆடைகளுக்கு அடியில் இன்னும் உயிர்ப்பைத் தக்க வைத்துக் காத்திருக்கும் செம்மண் பூமி, விதைகளை வீசும் அந்த உறுதியான விரல்களுக்காக இனி காத்திருக்கும். ஊழிப் பிரளயம் நடந்து முடிந்து பூமிப்பந்து புரட்டிப் போடப்பட்ட பின்பு, மேற்பரப்புக்குக் கீழே கொதித்துக் கொண்டிருக்கும் தீக்குழம்பு பிரவாகித்து, எங்கும் கொப்பளித்து அடங்கிய பின், குளிர் மழை யுகயுகங்களாய்ப் பெய்து மண்ணின் அசுரம் தணிந்த பின், முதற்புல் முளைப்பது எப்புள்ளியில்? இன்று அங்கு எவர் நடந்து கொண்டிருப்பர்?

சன்னல் கம்பிகள் மேல் எப்போதும் வந்தமரும் அந்தச் சின்னக் குருவியை இன்னும் காணோம். கையளவு அரிசிக் குவியலை எடுத்து வைத்துக் காத்திருக்கிறேன். அதன்நெல்மணிக் கண்கள், சாம்பல் வண்ணக் குறுஞ்சிறகுகள், வேலிக்காத்தான் முள்ளென அலகு.. இன்று அதற்கு வேறு எவரேனும் உணவிட்டு விட்டார்களா, அல்லது வேறு எவருக்கேனும் அது உணவாகி விட்டதா என்று தெரியவில்லை. இரவுகளில் மட்டும் நடைபயிலும் அந்த உருண்ட பூனையை ஐயப்படுகிறேன். வெருண்டு உற்று நோக்கும் அதன் சொல்லற்ற கரும் கண்களின் கீழே விடிகாலைக் கதிர்க் கோடு போல் நீளும் கூர்மீசைமேல் குருதித்துளிகளைக் காணலாம் இன்று. குருவிகள் குருதி கொண்டிருக்குமா என்ன?

பாறைகள் கிடந்தன. இணைந்து மலைகளாயின. மலைகள் முளைத்துக் காடாகின. காடுகள் அழிந்து ஊராகின. ஊர்கள் இணைந்து நகராகின. நகர்கள் இணைந்து பெருநகரங்களாகின. நாடுகளாகின. நாடுகள் எல்லை கொண்டன. கோடுகளுக்குள் திசைகள் அறியாது திரிந்து கொண்டிருந்த விலங்குகளைப் பிடித்துக் கொண்டு வந்து கூண்டுக்கம்பிகளுக்கு உள்ளே அடைத்து வைத்து , ஆயிரம் அடையாளங்களோடு அலைகின்ற மனிதர்களுக்குக் காட்டின. விட்டு வந்த பாறைகளையும், நீர் கழித்து தம் எல்லை எனச்சுட்டிய பெருங்காடுகளையும் மறக்காத மிருகங்கள், மிருகக்காட்சி சாலைகளிலும் தமக்கென எல்லைகளைக் கட்டி வைத்து தூங்கிக் கொண்டே இருக்கின்றன. 

Tuesday, September 11, 2018

பூனைகள் நடக்கின்ற இரவுகளில்...

முன் மதியம் ஒன்றில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ கைப்பிடித்து வைத்த செம்மண் கொத்துகள் இறுகிக் கெட்டிப்பட்டு மலைகளாகச் சூழ்ந்த வெளுத்த  நிலப்பரப்பில் யாருமே இல்லை. வானுக்கும் மேலே பிசிறு மேகமும் இன்றி கூசச்செய்யும் ஒளி நீலம். முகடுகளில் கழுகுகளும் வல்லூறுகளும் அனல் நதியில் உருகி வழிந்து விழும் பிணங்களை, வியர்வை படர்ந்த அவர்களின் மேல் கோட்டுகளில், கலைந்த தாடியில்,புழுதி படிந்த தொப்பிகளில், மண் ஊறிய தோல் காலணிகளில் தளர்ந்து விழுகின்ற ஜீவனை, அங்கே உச்சிகளில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கும். இன்று அவைகளும் இல்லை. காற்றில் அடர்ந்து அசைந்து கொண்டிருக்கின்ற காய்ந்த புதர்களின் அடியே வளை தோண்டி பதுக்கி வைத்திருக்கும் கொட்டைகள், பூக்கள், களி மண் உருண்டைகள் உடைந்து, வெடித்து சிலந்திப் பூச்சிகள் தின்னக் கொடுத்து எங்கோ தப்பித்துப் போய் விட்டன மலை எலிகள். சபிக்கப்பட்ட இச்சாலையில் தலைக்கு மேலே பல லட்சம் கொடும் வாட்களுடன் தணல் அலைகளைப் பரப்பி வியாபித்துள்ளான் பாலை அரசன். கானல் பிழைகள் மினுங்கும் மேடு பள்ளங்களில் வெக்கை புழுங்கிக் கொண்டிருந்தது. எங்கோ தொடங்கி எங்கோ செல்லும் இக்கறுப்பாற்றில் தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்தேன்.

இவ்வழியே முன்பு பல காலங்களாய், பல தலைமுறைகளாய்ப் பலர் நடந்து சென்றிருக்கிறார்கள். பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சுகளை முதுகில் கட்டிக் கொண்ட அன்னையர், முதுமையடைந்து, உடலோடு குடலும் எலும்புகளும் ஒட்டிப் போன பெரிய கண்கள் தளர்ந்து போய், ஒவ்வொரு காலாய் எடுத்து வைப்பதற்குத் தடுமாறித் தடுமாறி நடை குலைந்து நடக்கும் வயதான குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்து நடக்கும் கிழவர்கள், அவர்களுடைய தோல் பாக்கெட்டுகளில் மனக் கட்டுப்பாட்டுடன் சேகரித்து வைத்த வேர்க்கடலைகள், வழியில் சந்திக்க நேரும் பாம்புகளை எதிர்க்கத் துப்பாக்கிகள், பழைய காலணிகள், சுருக்கங்கள் நிறைந்த கிழவிகள். மின்னும் கூர்நுனிகள் கொண்ட வேல்களை இறுக்கமாகப் பிடித்துப் பழுப்புக் குதிரைகள் மேல் அமர்ந்து படை படையாய் வரிசைகள்.

இப்பாதையைப் பற்றிய நாடோடிப் பாடல் ஒன்று உள்ளது.

இன்னும் நெடுங்காலத்துக்கு முன்பு ஓர் அக்காவும் ஒரு தம்பியும் இப்பாதை வழியே நடந்திருக்கிறார்கள். அவள் பெயர் மினா என்றும் அவன் பெயர் மிசி என்றும் நாடோடிப் பாடல் ஒன்று சொல்கின்றது. உயிர்களே அற்றுப் போன வெளியானாலும் காற்று இருக்கும் வரை எவனோ ஒருவன் பாடி வைத்த பாடல்கள் இங்கே உலவிக் கொண்டேயிருக்கின்றன. மினாவும் மிசியும் ஒரே ஒரு குடைக்குள்ளே ஒண்டிக் கொண்டே வெயில் தளும்பிய வேளையொன்றில் நடந்திருக்கின்றார்கள்.  மினா பனிரெண்டு வயதிலும் மிசி எட்டு வயதிலும் ஊரில் மவுண்ட் என்ற துறவி கொடுத்த வெண்ணிறக் குடை ஒன்றில் அடைந்து வந்தார்கள். வறண்ட பாறைகள் மட்டுமே விழுந்து கிடந்த மண்பாதையில் அவர்கள் ஒன்றும் பேசாமல் நடந்தார்கள். மிசிக்கு கேட்பதற்குக் கேள்விகள் நிறைந்திருந்தன. ஏன் இங்கே யாருமே இல்லை? ஏன் வானம் இவ்வளவு அமைதியாய் இருக்கின்றது? ஏன் காற்றில் இத்தனை புழுக்கம்? ஏன் நம் எதிரே யாருமே வரவில்லை? கேள்விகள் நிரம்பித் தளும்பும் சிறு மூளை கொண்டவனாய் நடந்தான். மினாவுக்குச் சொல்வதற்கு பதில்கள் ஒன்றும் இல்லை. அவளுடைய மனம் அங்கே நீலவெளியில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அங்கே எண்ணங்களே இல்லை. மதியத்தில் வீசிய காற்றில் இதழ்கள் உதிர்ந்து போய் காலியான ஒரு மலரைப் போல அவள் நடந்தாள்.

அவளுடைய சிறு விரல்களில் எப்போதோ பறித்த மஞ்சள் பூக்கள் கொத்தாக சரிந்திருந்தன.

வெகுதூரம் அவர்கள் நடந்து வந்த பின்பு ஒரு இறுகித் தாளிடப்பட்ட பழைய வீடு ஒன்றை முள்வேலி சூழப் பார்த்தார்கள். வேலி மேலெல்லாம் புழுதி அப்பியிருந்தது. வீட்டின் வாசலில் தூக்கில் ஏற்றப்பட்ட எலிக்குஞ்சைப் போன்ற ஒரு விளக்கு தொங்கியது. அதன் திரி கருகியிருந்தது. கூரையின் மேல் புகைக்கூண்டிலிருந்து கரும்புகை ஒரு துணி உதறலைப் போல வெளிவந்தது. உள்ளே யாரோ இருக்கிறார்கள். மினி வேலியின் கதவை மெல்லத் தள்ள, அவர்கள் நுழைந்தார்கள். வேலிக்கதவு சாத்திக் கொண்டது. மண் படர்ந்த மரப் படிக்கட்டுகளில் தாவி மேலே சென்று கதவைத் தட்டினார்கள். 

Monday, September 03, 2018

Happy Birthday Kannan.

காலடி மலரென கதிசேர்ந்திட நான் ஓடி வந்தேன் கண்ணா...
உந்தன் கள்சொல்
என்மேல் விழுந்தால் என்ன கனிந்தே போகும் என் உள்ளம் - அழகுனை
அணிந்தே போகும் கண்ணா...  (காலடி)

உன்னை அணைத்திட வேண்டுமடா
உன்னுள் அடங்கிட வேண்டுமடா..
உன்னை அணைத்திட வேண்டுமடா
உன்னுள் அடங்கிட வேண்டுமடா..

பெண்ணைப் பேதை ஆக்கினாய்
என்னைச் சேரும் நாளெதுவோ?
பண்ணைப் பாடிடும் பொழுதிலெல்லாம்
கண்ணன் நாதக் குழலொலி கேட்கின்றேன். மின்னும் (காலடி)

மண்ணில் ஓரடி வைக்கின்றாய்
விண்ணிலும் ஈரடி பதிக்கின்றாய்
மண்ணில் ஓரடி வைக்கின்றாய்
விண்ணிலும் ஈரடி பதிக்கின்றாய்

என்னிலே மூவடி வைத்திருந்தால்
பொன்னடி தாங்கிப் பூத்திருப்பேன்
மன்னா மயிலெழில் மகுடத்திலே
முன்னால் சூட்டிய முதலமுதே. வண்ணக் (காலடி)

***

எழில் முதல்வனுக்குத் தமிழ்ப்பரிசு.

Monday, August 27, 2018

வேனில்தரை மழை.

ண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற 'கீத கோவிந்தம்' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'இன்கேம்..' என்ற பாடலுக்குத் தமிழ் வரிகள் கோர்த்த போது.



ததிகின தகஜனு
ததிகின தகஜனு
தரிகிட ததரின
ததம் தீமத ஆனந்தம்

வந்தான் இங்கே
கண்டான் உன்னை
தந்தேன் என்னை
என்றே சொன்னான்
பெண்ணே உன்னுள்
பொங்கும் இன்பம்
இன்றும் என்றும் பேரின்பம்


உன்னை அன்றி கண்கள் பார்க்காதே
மயிலே... இள வெயிலே...
உன்னை விட்டு எங்கும் போகாதே
ஒயிலே... எழில் குயிலே...


மின்னல் வெட்டும் வேகம் ஆளாச்சே..உன்
மின்னுமிரு கண்கள் வேலாச்சே...
பக்கம் நின்றால் வெக்கம் வேறாச்சே.. நீ
பார்த்துச் சொல்லும் சொற்கள் கேட்க
பாலும் தேனும் போலாச்சே... (உன்னை)

மாலைவரும் நிலவென அழகா
மருண்டுவரும் மானென உருவா
வேளையிது விழும்பனி கனவா
விடைதர விரும்பி வா...

மீனுமது விரும்பிடும் விழியா
மீட்டுவது கரும்பெனும் மொழியா
மீறுவதில் மகிழ்வது வருமா
மிளிரொளி பரவி வா...


நான் நடக்கும் நிலமதைத் தொடருமுன் பார்வை...
நான் முகிழ்க்கும் சிரிப்பதில் மலர்வாள் பாவை... (உன்னை)

காதலினில் கலந்திடும் பொழுதா
காத்திருக்கும் கணங்களும் பழுதா
காலைவரை அணைத்திடு முழுதாய்
கடும்குளிர் கரைக்க வா..


கோபமென எழுவதும் உனதா
கோதைமனம் விழைவதும் எனதா
கோலமிடும் விரலிடை மனதா
கொழுமலர் கனிந்து வா...

வேண்டுமென விரைந்துனைத் தழுவிடும் போது...
வேனில்தரை மழையெனக் கரைவாள் மாது... (உன்னை)

Tuesday, August 21, 2018

உடைந்த மூக்கு.

ணையதளத்தில் துளித்துளியாய் ஆடை விலக்கி பரிநிர்வாணம் அடைபவள், அன்று உடைந்த மூக்குடன் தோன்றினாள். ‘ஜென்னி, என்ன ஆயிற்று உன் மூக்கிற்கு?’ என்று வந்த 7713 பேரும் கேட்டார்கள். ‘உடற்பயிற்சிக்கூடத்தில் தவறி விழுந்து விட்டேன்’ என்று அனைவருக்கும் சொன்னாள். ‘மூக்கைத் துணியால் மறைத்துக் கொள். என் கற்பனைக்கு அது இடைஞ்சல் செய்கிறது’ என்றான் ஒருவன். ‘மூக்கு சரியாகும் வரை பின்புற போஸ் மட்டும் காட்டு’ என்றான் மற்றொருவன். ‘கேமிராவைக் உதட்டுக்கு மேல் கொண்டு போய் விடாதே’ என்றான் இன்னொருவன். பார்வையாளர்கள் எண்ணிக்கை சட்டென 5320 ஆனது. ‘ஜென்னி, இப்போது தான் நீ இன்னும் அழகாய் இருக்கிறாய். மேகங்களில் மிதந்து கொண்டிருந்த பொன்புறா, மரக்கிளைமேல் வந்தமர்ந்தது போல். கைக்கெட்டும் அளவான அழகில்.’ என்றான் 4517-ல் மிஞ்சிய ஒரு கவிஞன். அவனுக்கு மட்டும் இரு முத்த எமோஜிகளும் ஒற்றைத் துளி கண்ணீர் எமோஜியும் அனுப்பினாள். யாரும் ‘டேக் கேர்’ சொல்லவில்லை.

ஒரு கோப்பை தேநீர்.

வா...
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டே
நாம் பேசலாம்..’
என்று அழைக்கிறாய்.

ஒரு கோப்பை தேநீர்
தீர்வதற்குள்
அதன் நுரை அடங்குவதற்குள்
அதன் வெம்மை அணைவதற்குள்
அதன் ஒவ்வொரு துளியையும் விழுங்குவதற்குள்
அதன் அடியாழத்துக் கசடைத் தவிர்ப்பதற்குள்
பேசி முடிப்பவை தானா
நம் சிக்கல்களும்
நம் கருத்து வேறுபாடுகளும்
நம் கோபங்களும்
நம் வெறுப்புகளும்?

எனினும்
என்னை அலங்கரித்துக் கொண்டு
என் கைப்பையை நிரப்பி விட்டு
சென்ற பனியுருண்டை விழாவில்,
என் உடனிருப்புக்கு
நீ
பரிசளித்த
பழுப்பு நிற தணப்பு ஷூ அணிந்து கொண்டு
உன்னுடன்
கைகளைக் கோர்த்துக் கொண்டு
புன்னகை சூடிக் கொண்டு
எதிர்ப்படுவோரின் ‘நல்ல மாலை’க்கு
மெல்லத் தலையசைத்து
நடந்து வருகிறேன்.

தேநீர் கடை
இன்னும்
எவ்வளவு தூரம்?

Friday, August 17, 2018

முல்லை.

ங்கிப் பெருந்திசைகளை அளக்கும் விருட்சங்கள் நிறைந்த இப்பெருங்காட்டில், குகை முகடுகளில் தேன் நிறைந்து ஓயாமல் சொட்டிக் கொண்டிருக்கும் தேன் கூடுகள் அடர்ந்த இவ்விருள் பொழுதில், இடிகளும் மின்னல்களும் வான் நிறைக்கும் இப்பின் மாலை நேரத்தில், உன் காலடித்தடம் பதியும் எனச் சேற்றுக்குழைசல் கலங்கி வழியும் ஒற்றையடிப் பாதையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மதியத்தில் துவங்கிய தூறல் பின் விரைவுற்று, பெருந்துளிகளாகி, சரங்களாகி, ஊற்றி இன்னும் நில்லாமல் பெய்து கொண்டிருக்கிறது. ஒரு சாக்கு மூட்டையைக் கவிழ்த்துக் கொண்டோ, இறுகப் பின்னிய கூடைக்குள் ஒளிந்து கொண்டோ நீ வருவாய் என, ஈரம் மறைக்கும் வெளியைக் காத்திருக்கிறேன்.

முல்லை மணம் மட்டுமே கிளர்ந்திருந்த ஒரு நாளில் நாம் இருவரும் உச்சிக்குச் செல்லலானோம். அப்பாதை, பசித்து வரையாட்டை விழுங்கிப் பின் களைத்துத் தளர்ந்து படுத்திருக்கும் ஒரு மலைப்பாம்பைப் போல் வளைந்து சுருண்டு சென்று கொண்டிருந்தது. விட்டு விட்டு தூறல்கள் விழுந்து கொண்டேயிருந்தன. ஓரங்களில் எல்லாம் துளிகள் சுமக்கின்ற பசும்புற்கள். விளிம்புகளில் புதர்களும், கொத்துகளுமாய் பச்சையின் பல ரகங்கள். பெயரறியாப் பறவைக் குரல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. பாதை சற்று வழுக்கலாக இருந்தது. விரல்கள் பின்னிக் கொண்டபடி நடந்தோம்.

விரைந்து செல்லும் மேகங்கள் முகட்டு நுனியைத் தொட்டுத் தொட்டுச் சென்றன. சட்டென ஒரு கொத்து மழையைச் சிந்தி விட்டு அகன்றன. அங்கும் சில சில் மரங்கள் முளைத்துக் காடாகியிருந்தன. அவற்றை நோக்கிச் செல்கையில், பாதையில் கொஞ்சம் குழைந்திருந்த சேறு வழுக்கிச் சரியப் பார்த்தாய். பின்னிய விரல்கள் இன்னும் இறுக்கமாகி, இடை வளைத்து நிறுத்தினேன். கொஞ்சம் மூச்சைச் சரி செய்து கொண்டு, நிதானித்து, விழ வாய்ப்பிருந்த அடிபாதாளத்தை ஒரு கணம் கண்ணுற்று, கண்களைப் பார்த்து மென் புன்னகை செய்தாய். தொடர்ந்தோம்.

கோடானு கோடி தவளைகள் ‘கொரக்..’, ‘கொரக்...’ என்று சொல்லிக் கொண்டிருப்பதை சற்று நேரம் கழித்தே கேட்டேன். எங்கோ பாறை ஒன்று முழுதருவி ஒன்றுக்குள் யுகயுகமாய் நனைந்து கொண்டிருந்தது; எனினும், முழுதும் கரைந்து விடவில்லை. தடாலென ஒரு பேரிடி. எங்கோ அருகில் மின்னல் இறங்கியிருக்க வேண்டும். வேகமாய் ஒரு மழை வந்து நம்மை முழுதணைத்து முழுதாய் நனைத்தது. தடவி விட்டுப் போகும் ஒற்றை மயில் தோகைப் பிசிறு போல் இம்மழை விலகவில்லை; மாறாக, கொத்துக் கொத்தாய்ச் சின்ன ஊசிகளால் தைத்து தைத்து எடுப்பது போல், கூர் நுனித் துளிகள் குத்திக் குத்திச் சென்றன.

நடுக்கம் மிகை கொள்ள, என்ன செய்தலென்று யோசித்தோம். மீண்டும் வழுக்கல் செறிந்த இறங்கு முகம் வழி சென்று, நாம் பத்திரமாய் அடைந்து கொள்ள அக்குடில் அறைக்குள் விட்டு வந்த கலைந்த படுக்கை போர்வைக்குள் புகுந்து கொள்ளலாம். அன்றேல், இன்னும் கொஞ்ச தூரமே என நெடுநேரம் போக்கு காட்டும் அம்முடியை அடைந்து, நம் பாதங்களுக்கு அடியில் விரியும் பசுங்கிராமங்களையும் விட்டு வந்த தொலை நகரத்தையும் ஒரு கடவுள் பார்வை பார்க்கலாம். இரண்டில் ஒன்று என்றேன்.

நீள் கரும் கூந்தல் திரித்திரிகளாய் நனைந்து ஒட்டி ஒட்டி சொட்டிக் கொண்டிருக்க, ஒரே ஒரு மச்சம் மட்டும் பதிந்த முகத்தில் மழை மச்சங்கள் சொட்டிக் கோடாகி விழுந்து கொண்டிருக்க, ஒற்றை மெல்லிய பொன் செயின், நிறைந்த இரு மார்புத் திரள்களுக்கிடையில் தத்தளித்துக் கொண்டிருக்க, உடலொட்டிய உடைகளோடு, உரசுகையில் சப்தித்து எச்சரிக்கும் வளையல்கள் வளைத்த அவ்விரு கைகளையும் முன் நீட்டி, ‘இனியும் நனையாதது எது?’ என்று கேட்டாய். நா நுனி வரை வந்த சொல்லைத் தவிர்த்து, ‘எதுவும் இல்லை’ என்றேன். ‘நீ நினைத்ததை அறிவேன்’ என்பது போல் ஒரு விஷமப் புன்னகை செய்து, முகட்டைச் சுட்டிக் காட்டினாய். மேல் நோக்கி நடந்தோம்.

மரங்களும் சிறு செடிகளும் ஒட்டுண்ணிகளாய்க் கொழுகொம்பை வளைத்து வளர்ந்திருந்த கொடிகளும் தரைப்புற்களும் அடர்பச்சை நிறக் காய்களுமாக, காடு தன் பசும் அரசுக்குள் பல்லாயிரம் பறவைகளும் பல்லாயிரம் விலங்குகளும் பலகோடி பூச்சிகளுக்குமாய் மழைப்பால் அருந்தியது.  பின்மதியம் என்று ஒரு பேச்சுக்குச் சொல்லலாம் எனினும் கதிரின் ஒரு கரம் கூட உள் இல்லை. விரிந்த அகன்ற இலைகள் சுமந்த கொத்துப்புதர்கள் விளைந்த ஓரங்களில், மழைத்தண்ணீர் சிறு ஓடைகளாகிச் சலசலத்துச் சென்றது. அதன் தூய்மையும் செம்மண் நிறமும் வடிந்த குளுமைக்குள் கரைந்திருந்தன. பருத்த அடிமரங்களின் மேலே விரிந்த பேரிலைகள், சேகரித்த துளிகளை இன்னும் சேர்த்து ஊற்றிக் கொண்டிருந்தன.

ஒரு வளைவுக்குப் பின் வலப்பக்கம் திரும்பினோம். ஆம், உச்சியை அடைந்தோம்.  நிறைய கால் படாத புற்களும் கைபடாத பூக்களுமாக மழை வசந்தத்தின் கீழே நாமிருவர் தனித்துக் கிடந்தோம், ஒரு பெரு நாழிகை நேரம். குளிர் மேகங்கள் வந்து வந்து தீண்டிக் குளிரூட்டின. ஈரம் கசகசக்கும் ஆடைகள் சென்றடைந்தன ஓர் ஓரம். மீண்டும் பிள்ளைகள் போல் யாரும் காணவியலா அந்நெடுங்காட்டின் அந்த உயரமான முனையில், பசுந்தரை மண் சேறுகள் உடலொட்ட, மழைக் குளியலுக்கு உள்ளே மெல்ல கரைந்து கொண்டோம்.

Friday, July 20, 2018

நீலாம்பல் நெடுமலர்.39.



ரு மலரின் மலர்மை என்பது தான் என்ன? சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா? நறு சுகந்தம் காற்று வெளியில் தூவிப் பரப்புமே அதுவா? ஒற்றைக் காம்பில் மண் ஊன்றி மொட்டவிழ்ந்து சூரியப்பொழிவை அள்ளி அள்ளி அருந்துமே அதுவா? மலர்மையின் உச்சம் என்பதென்ன? அதன் ஒரு நாள் வாழ்க்கையில் அதன் ஆனந்தத் திளைப்பின் பெருங்கணம் என்பது தான் எது? அதை அடையத்தான் சிற்றணுவிலிருந்து முளைத்து வந்ததா அது? அதை அடைந்த பின் உடனே கீழிறங்கத் தொடங்குமா? இனி மீண்டும் அது அடையவே முடியாத அந்த களிப்புத்துளி நீண்டு நீண்டு வாழ்வெல்லாம் திகட்டாதா? உச்சத்தின் பீடத்திலேயே வீற்றிருக்கும் அம்மலர் தான் எது?

எழும் அனலின் அனல்மை என்பது தான் என்ன? சூழ் அனைத்தையும் எரித்துத் தன்னுள் கரைத்து தானாகிச் சுடர்ந்தெழும் கரைதலா? தீண்டும் இன்பம் திகட்டும் இனிமை கொதிக்கக் கொதிக்கக் கட்டியணைத்து உடன் எரிதலின் பதற்றமா? பொற்கட்டி உருகி வானோக்கிச் சுழலும் மஞ்சள் நிலவு தானா? தீச்சுடரின் நுனி நா சொட்டும் நாக நஞ்சின் குளுமை கொண்டிருக்குமா? நீலத்தணல், நெடும் உயரத்தில் நிலை கொண்டலையும் செழும்பிழம்பு தன்னைச் சுற்றிப் பரப்பியிருக்கும் ஒளிர்மை தான் என்ன? செம்பருந்து விழிக்கூர், வனம் விழுங்கும் பூந்தணல், புதுமுளை துளிர்க்கும் காட்டெரி, பொசுக்கிச் சாம்பல் உதிரும் மென்னுடல், நடுக்குறப் பாயு வெம்மை நதியின் வெள்ளம் விழுங்கும் பசி தான் என்ன? அந்நெருப்பின் வழிகுழம்பு பரவி வழிய இப்பூமிப்பரப்பு போதாமல், வானெங்கும் நிறை கதிர்கள் தான் எத்தனை எத்தனை?

மலர்மையும் அனல்மையும் பிணைந்து எடுத்த உருவென்று ஒன்றிருப்பின் அதன் இலக்கணம் தான் என்ன? கதிருண்ட மலரின் அனலும் நீரணைத்த நெருப்பின் குளிரும் வீசும் இரு விழிகள் கொண்ட செம்முகம் அது என்றமையுமா?  முகிலுறைக் குளிர் துளிகளாய்ப் பொழிந்து தெறித்தல் போல் பார்வை மலர் விழிகளென மலர்ந்திருக்குமா? சதைகிழி வாளின் கூர் முனை சுழலும் நாசி என சரிந்திருக்குமா? முற்காலையின் பனித்துளி ஈரம் சுமக்கும் மலரிதழ்களென முத்தியெடுக்க சிவந்திருக்குமா?  தீ அணைக்கும் மென் பஞ்சுக் குழுமமென கன்னம் எழுந்திருக்குமா? சொல்லென முளைக்கும் செந்தேன் துளிகளை ஏந்திச் சுவைக்கும் மடலிரு செவிகளென கிளைத்திருக்குமா? அமுது நிறை இரு குவலயங்கள் துளிர்த்து முகிழ்த்து மெல்ல கனிந்தமைந்த எழிலென நிலை கொள்ளுமா?  செந்தாமரையும் அக்கமலத்தின் மடி தவழ ஒரு குழவியும் தாங்க வழியுங் கொப்பூழென விழுந்தெழுமா? அருளும் அணைக்கும் அணையும் அன்புறும் நெடுங்கரங்கள் அன்னையென அழல் தணிக்குமா? ஊறும் கேணி இறைக்க இறைக்க நிரம்பா தொல்நிலம் முற்றா இளம்புல் மேய் மூதாதைக்கென முளைத்திருக்குமா? தாங்கும் வாங்கும் துயர்க் கரைக்கும் செழுந்துடை வலுவென நின்று உடல் தாங்கியிருக்குமா? பத்துச் சிமிழ் விளக்குகளின் அசையாச் சுடரென இரு தாள் முனைகளில் எழுந்தருளுமா?

தேவி, அனலெழுந்தோனும் நீரரவில் துயில்வோனும் முகத்திற்கொரு சொல் உதிர்ப்போனும் உன் பேரெழில் முன் நிலை மறப்பின், மானுடனென உள இவ்வுயிர் குனிந்து பாதத்துளிகளை முத்தமிடுகையில் பிழையென ஏதுமுண்டா? மலர் கனிதலும் அனல் குளிர்தலும் தளிர் மணத்தலும் தணல் அடங்கலுமாய் இப்பொழுதுகளில் நகரட்டும் இவ்வாழ்வு.

Saturday, July 14, 2018

காலணி திருத்துனர்.

டைபாதையில்
காலணி திருத்துனர்
கால் மடித்து
எப்போதும்
தலை குனிந்து
அமர்ந்திருக்கிறார்.

கடந்து செல்பவர்களின்
கால்களை மட்டுமே
கவலையுடன்
பார்க்கிறார்.

அறுந்து போன வார்கள்,
கிழிந்த தோலணிகள்,
ஊக்கு குத்தியவை,
ஓரம் விடுபட்டவை,
சேற்றிலூறி வாய் பிளந்தவை...

பிழைகளை ஏந்தி
அப்பிழை ஏந்தி வரும்
கால்களை மட்டுமே
அவர் தேடுகிறார்.

வெறும் கால்களை
மட்டும்
கொண்டவர்களை
அவரும் கூட
விரும்புவதில்லை.

தையல் போட்டுப் போட்டு
நூல் கண்டாய் மட்டும்
தோன்றும்
அவ்விரு இணைக் காலணிகளுக்கு
மட்டும்
இலவசமாய்
இன்னுமொரு
தையல்
இட நினைக்கிறார்.
வயிற்றனல் விடுவதில்லை.

இளமென் சிவப்பு நிறத்தில்
மையத்தில் மலர் சேர்த்து
இரு
பிள்ளை செருப்புகளைத்
தைத்து
நெடுங்காலமாய் வைத்துள்ளார்.
தன் பெயரென்ன,
தான் உணவு உண்டேனா
என்று கேட்கும்
முதல் குரலுக்குப்
பரிசாய்க் கொடுக்க.

அவரிடம் வீசுமுன்
காலால் எத்தும் முன்
விரைவுபடுத்து முன்
கொஞ்சம் புன்னகையையும்
அவரிடம் வீசலாம்,
குறைவில்லை.