Sunday, April 25, 2010

Longing for the future...

2008-ல் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த ருஷ்யப் படம், பார்த்த எல்லோரையும் கண்ணீர் விடச் செய்தது. படத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். உருக்கும் படத்தின் பாடலைத் தேடியதில் கிடைக்கவேயில்லை.

இப்போது கிடைத்தது. கேளுங்கள்; பாருங்கள்; கேட்டுப் பாருங்கள்.

Friday, April 23, 2010

எழுதுவது எதற்காக?



நேற்று ஜிமெய்ல் உரையாடியில் ஒரு தோழியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர் சொன்ன ஒரு வரி, இரவுத் தூக்கத்தைக் கொஞ்சம் இழக்கச் செய்து சிந்திக்க வைத்து, இந்தத் தலைப்பையும் கொண்டு வந்தது.

கொஞ்சம் சுயபுராணம்.

ஆப்பிளையும், பந்தையும், பூனையையும், பொம்மையையும் எழுதினாலும் எழுதும் பொருட்களில் வித்தியாசம் ஆரம்பத்திலேயே இருந்தது. எல்லோரும் ஸ்லேட்டில் எழுதிய போது, பேப்பரில் கேம்லின் பேனா கொண்டு எழுதினேன். காரணம், உணவுப்பழக்கம்.

மெட்ரிக் பள்ளியில் புதுக் கட்டிடத்திற்காக ஜல்லிகள், செங்கற்கள், ஈரமணல், கம்பிச் சல்லடைகள், ரப்பர் வாளிகள் வந்திருக்கும். மதிய இடைவேளையில் லஞ்ச் முடித்து விட்டு அங்கே கொட்டி வைக்கப்பட்டிருக்கும் களிமண் உருண்டைகளை வாயில் போட்டுக் கொள்வேன். இன்று வரை அவற்றைப் போன்ற மென் உணவுகள் மிகக் கொஞ்சமே கண்டிருக்கிறேன். அப்படியே கரைந்து போய்க் கடைசியில் சிறு கற்களைத் துப்பி விடுவேன். தின்ற களிமண் தலைக்குள் சென்று சேகரமானதா என்று இன்னும் தெரியவில்லை.

அப்படியே விரிந்து, ஸ்லேட்டுக் குச்சிகளையும் தின்று, தினம் வீட்டுக்கு காலி பாக்ஸோடு போன போது, உஷாராகி விட்டார்கள். இங்க் ஊற்றி பேனாவில் பேப்பரில் எழுத அனுமதி வாங்கி எழுதிக் கொண்டிருந்தேன். மாலையில் விரலெல்லாம் நீலம்.

மெட்ரிக் காலங்களில் படிப்பைத் தவிர ஸ்போர்ட்ஸ்களில் எதிலும் கலந்து கொண்டதில்லை. ஓட்டப்பந்தயம், ரிலே, கோ-கோ, கபடி, கால்பந்து.... ம்ஹூம், எதிலும் இல்லை. ஒரே முறை, ஸிண்ட்ரெல்லா நாடகத்தில் கடைசிக் காட்சியில், அவள் ஒற்றைச் செருப்பைத் தூக்கிப் போகும் ராணுவத் தளபதியின் படையில் வலது மூலையில் ஒரு சிப்பாயாக வந்து லெஃப்ட்-ரைட் போட்டது மட்டுமே, சாதனை.

கட்டுரைப் போட்டிகளில் சேர்ந்ததில்லை. காரணம், மிக மிக மோசமான கையெழுத்து. முட்டி முட்டியாக அடிப்பார்கள். திருந்தவேயில்லை. காசியில் துவங்கி நாக்பூரில் இறங்கி பூடானுக்குப் போகும். அழகோ, விஸ்கி அடித்த கோழியின் காலில் பென்சிலைக் கட்டி, விரட்டியது போல் தமிழை எழுதினால், கொரியன் போல் காட்சி தரும்.

ஒருமுறை கண்ணாடி ஸ்கேலை உடைத்தே கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்து அப்பாவிடம், "ஸ்கேல் உடையற அளவுக்கு அடிக்கறாங்கப்பா..!" என்று அழ, அப்பா, "கவலைப்படாதே..! இதை வெச்சுக்கோ! உடையவே உடையாது..!" என்று மர ஸ்கேல் கொடுத்தார்.

பிறகு கையெழுத்து கொஞ்சம் அழகானது (அதாவது புரியும்படியானது), வேறு தனிக் கதை.

பேச்சுப் போட்டியே என் களம். அங்கே இங்கே கொஞ்சம் பேசி, இருக்கவே இருக்கிறார்கள், பாரதியும், கம்பனும், இளங்கோவும், வள்ளுவரும். ஒவ்வொரு வருடமும் ஏதாவது பரிசு அதில் கிடைத்து விடும். எழுத்து..? இல்லவே இல்லை.

முதன் முதலில் கற்பனை கலந்து எழுதியவை, மூன்று நாவல்கள்.(என்று நானாக நினைத்துக் கொண்டேன்.)

அப்போது ராஜேஷ்குமார் பைத்தியம் பிடிக்க ஆரம்பித்துப் பித்து முத்திப் போய்க் கொண்டிருந்தது. வீட்டிலும் அனுமதி இருந்தது. செக்ஸ் இன்றி, வன்முறை இன்றி இருந்த ஒரே கிடைத்த புத்தகங்கள் அவருடையது. சுபா, பி.கே.பி., கொஞ்சம் அவற்றைத் தொட்டுத் தான் எழுதுவார்கள். வாத்தியார் என்று ஒருவர் இருந்ததை யாரும் சொல்லவேயில்லை.

ராஜேஷ்குமார் பாதிப்பில் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ரத்தம் சிந்த எழுதினேன். மூன்றும் மூன்று வெரைட்டி. முதல் கதை சபையர் லாட்ஜில் நடக்கும் ஒரு கொலை என்றால், இரண்டாவது பக்க கிராமத்து ப்ளாட். அதில் முதல் சேப்டரில் வாய்க்காலில் ரத்தம் கலந்து ஓடும். மூன்றாவது நினைவில்லை. அந்த டைரி தொலைந்து விட்டது. வைத்திருப்பவர்களுக்கு யாருடைய பாதி ராஜ்யமாவது கிடைக்கட்டும். :)

ஏழாம் வகுப்பில் வெண்பா எழுதுகிறேன் பேர்வழி என்று சொல்லி, ஒன்றை எழுதிக் காட்ட, அவர் யாப்பை விளக்க, விட்டால் போதும் என்று விலகினேன். பேச்சுப் போட்டிகளில் போட்டி அதிகமாகிய போது கையெழுத்து கொஞ்சம் பார்க்கும்படி தோன்ற ஆரம்பிக்க, ட்ரான்ஸிஷன் போல் கட்டுரைப் போட்டிகளுக்கு நகர்ந்தேன்.

ஒன்பதாம் வகுப்பில், லீலாவதி டீச்சர் வரவில்லை. லஞ்ச் முடித்த மோனத் தவ நேரம். நானும் சதீஷும் சும்மா வெளியே வரக் கிளம்பினோம். பதினொன்றாம் வகுப்பறையில் ஏதோ ஒரு கட்டுரைப் போட்டி என்றார்கள். 'சரி..! சும்மா தானே இருக்கிறோம்' என்று இருவரும் போனோம். தலைப்பு, 'அறிவொளி இயக்கப் பணிகள்'. எனக்கு கிக் ஏறியது. காரணம் அந்த வாரக் கடைசியில் தான் பவானி கிளை நூலகத்தில் அறிவொளி இயக்கத் தளத்தில் ஒரு குறுங்கதை படித்திருந்தேன். ஒரு கிராமத்திற்கு ஆசிரியரும், சில மாணவர்களும் இயக்கம் சார்பாகப் போய், முதலில் கொஞ்சம் அடி வாங்கிப் பின் தியாகம் செய்து கிராம மக்களைத் திருத்திக் கல்வி புகட்டி....they live happily thereafter.

போர்க்களம் நுழைந்த வேழம் போல் புகுந்து் போட்டிக்குப் பெயர் கொடுத்து எழுத ஆரம்பிக்க, கற்பனை வெள்ளம் ஐஸ்லாந்து எரிமலைப் புகை போல் எட்டுத் திசைகளிலும் பாய்ந்து பரவும் வகையில் எழுதப் போய்..

"ஸார்..! எக்ஸ்ட்ரா ஷீட் சார்..!"

"திரும்பத் திரும்பக் கேக்கற நீ..!" என்றார். முதல் பரிசு கிடைத்தது.

சோகமித்திரக் கவிஞர்கள் சொல்வது போல், 'நிராசையின் வலியும், புறக்கணிப்பின் கசப்புகளும்' கிடைத்த போதெல்லாம் கவிதைகள் எங்கிருந்தோ பாய்ந்து வந்து என் நோட்டுப் புத்தகங்களில் விழுந்தன.

பிடித்த ஒரு சிறு கவிதை :

"என்னைத்
தவிர்க்கப் பார்ப்பதிலும்
தள்ளி
வைப்பதிலும்
நீ
சொல்லும்
பொய்களின்
சாயம்
வெளுக்கும் போதெல்லாம்
கூசிப் போவது
நீயில்லை..!"

கவிதைகளில் திளைத்துப் பின் மிக லேசான சலிப்பு அதில் ஏற்பட்ட போது, தபு சங்கரின் அரை உரை வடிவக் காதல்களின் வடிவில் பிரியம் ஏற்பட்டு அந்த பாட்டிலுக்குள், சரக்கை ஊற்றிக் கொண்டிருந்து விட்டு, 2006-ல் பதிவுகளுக்கு வந்தேன்.

எத்தனை பதிவுகள்..!! அவற்றுள் எத்தனை உருப்படியான எழுத்துக்கள்..!

தேன்கூடு போட்டிகளில் இறங்கும் போது தான், சிறுகதை வடிவத்தில் எழுத ஆரம்பித்தேன். அந்த வகையில் முதல் கதை :: "ங்கா...ங்கா..". அப்போது வெறும் உரையாடல் மட்டும் கொண்டு எழுதுவது சொகுசாய் இருந்தது. மற்றொன்று :: இன்னா சார்?

பிறகு பல சிறுகதைகள். வெவ்வேறு தளங்கள். அறிவியல் கதை, வரலாறு, சில குறுநாவல் முயற்சிகள், ஆங்கில நாவல் முயற்சி....! பல தோல்விகள்; சில வெற்றிகள்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் கதைகள் எனக்கே பிடித்தவை, எழுதிய போதும், மீண்டும் வாசகனாகப் படித்த போதும்..! அதுவரை எனக்குத் திருப்தி.

அந்தத் தோழி சொன்னது :


*: EXactly... wonderfulll
me: is this a sarcastic tone..? :)
*: My god... not at all
8:43 PM see... i am so happy.... bcoz i dnt read tamil.... its after ur blog i read a few
me: aah...thanks ***...its a real big compliment to me...


இரவுக் காட்டுக்குள் தனி வேடன் எய்தக் கூர் அம்பினைப் போல் எழுதியது எதையும் மொழி வீணாக விட்டு விடுவதில்லை. வீணான எதையும் எழுதி விடக் கூடாது என்ற பயம் தான் அதிகம் ஆகியிருக்கின்றது.

Wednesday, April 21, 2010

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.



சென்னையில் தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் ஏப்ரல் 30 வெள்ளி மாலை 5:45 மணிக்குத் திரிசக்தி பதிப்பகத்தினரால் பனிரெண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக என் சிறுகதைத் தொகுப்பான 'கிளி முற்றம்' வருகின்றது.

எனவே, சென்னையில் அந்நன்னாளில் இருக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் குறித்து வைத்துக் கொண்டு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமாய் வரவேற்கிறேன். சென்னையில் இருக்க வாய்ப்பில்லாதவர்கள், எப்படியாவது முயன்று நிகழ்ச்சிக்கு வரப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இடம் :: தேவநேயப் பாவாணர் அரங்கம், சென்னை - 2.

நாள் :: 30.ஏப்ரல்.2010.

நேரம் :: மாலை 5:45.

Saturday, April 17, 2010

17.Apr.2010 - காலை - 06 Hrs.



கா! இளம்பரிதி அடிவானில் ஜொலிக்குது! போதா அதன் ஒளிச்சிதறல்கள் மேகங்களை நனைக்குது; ஏதோ ஒரு புகைபோக்கி கரும்புகையை உமிழுது; மாதோ வளர் தூதோ என நீலம் சுமக்கும் வானம் பரந்து வரிந்த வனத்தின் கீழ் வருகுதடி வருடுதடி தென்றல்!

ஏதோ ஒரு பறவை எதையோ பாடுகிறது. காக்கைக் குடும்பத்தார் எதையோ கவ்விப் பறக்கின்றார். தென்னை இளஞ்சோலையில் மரங்கள் அசையா நிற்கின்றன. சிவந்த தன் பொன் அதரங்களால் நாரைகள் தேடுகின்றன.

காற்றில் இது என்ன சுகந்தம்? அதிகாலையின் ஒரு பூபாள வாசம்? மெல்லத் தன் குளிராடை விலக்கி மர்மப் பிரதேசங்களைத் தீண்டும் ஆரஞ்சுக் கதிர்க்கரங்களைக் கண்டு வெட்கி இந்த இளங்காலை பூத்ததோ?

செம்மணிப் பூந்தூறல்கள் ஆகாயத்திலே! செழும் பொழில் வயல்களிலே! ஒரே போல் வளர்ந்திருக்கும் பயிர்ச் சகோதரிகளுக்கு அப்படியென்ன பேரானந்தம்..? ஈரப் பூக்களை இறக்கிக் கொண்டே இருக்கின்றனவே?

ஆகா! என்ன இது! எந்த மரத்தின் எந்த இருண்ட கிளையின் மீதமர்ந்து ஒரு குயில் சரத்தின் ஒற்றை ராகம் என்னை மோதுகின்றதே! சிட்டுக்குருவிகள் செல்லாமல் என்ன சொல்கின்றன? அவர்றின் சின்னத் தொண்டைகளில் யாரது சிந்தசைஸர் அமைத்தது?

’காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று அரிசி தூவிய எம் கவிராஜனே! இதோ, உன் பெயர் சொல்லி என் வீட்டு உணவைத் தட்டில் திட்டில் வைத்தேன்.

பாய்ந்தன காகங்கள்! மோந்தன எம் சாதத்தை! அதன் கண்கள் சொல்லும் ஆகாயப் பசியை நான் கண்டதில்லையே இதுவரை!

எங்கிருந்து வந்தன இத்தனை பஞ்சு முடிச்சுகள்? சுருள் சுருளாய்... மிதக்கின்ற இந்தச் சொர்க்கத் துண்டுகளை ஏவியது யார்? விளிம்புகளில் மஞ்சள் கலந்த ஆரஞ்சை அள்ளி அள்ளிப் பூசிக் கொண்ட விரல்களை அவை எங்கிருந்து பெற்றுக் கொண்டன?

எருமைகள் எவற்றை உண்கின்றன? அதோ, அந்தப் பெரிய எருமைத் தாத்தாவின் கொம்பின் மேல் அமர்ந்து அந்தச் சின்னக் குருவி என்ன ரகசியம் சொல்கின்றது? அது அவற்றுக்கு ஏற்புடை அல்லனவா? ஏன் கயிறு கட்டிய மணி ஒலிக்கக் கழுத்தை இப்படி ஆட்டுகின்றன?

ஆ..! அந்தச் சின்னக் கன்றுக் குட்டியின் குட்டி வாலில் வெண் முடிகளை வளர்த்தது யார்?

யாரங்கே, ‘ட்ரூட்...ட்ரூட்...’ என்று சொல்லுவது? பேரண்டத்தின் எந்தத் திசையில் நிற்கின்றாள் அந்தக் குரல்காரி? அவள் கொண்டையில் ஊதாச்சிறகு இருக்குமா? அவள் அலகு எத்தனை கூர்? அவள் வாலில் எவ்வளவு இறகுகள் இருக்கும்?

அதோ ஒரு வேப்பமரம்! ஏன் ஐயா, இங்கே இத்தனை பேர் உன் இனத்தார் இருக்கையிலே அதென்ன நீர் அருகினிலே ஒரு பனைமரத்துடன் இத்தனை நெருக்கமாய் நிற்கின்றீர்? மஞ்சள் பழங்களை உதிர்க்கும் வேம்போடு நீ ரொம்ப வைத்துக் கொள்ளாதே பனையே! உன் நுங்கெல்லாம் கசப்பாகும்; ஆனால் நல் மருந்தாகும்.

அந்த ‘ட்ரூட்...ட்ரூட்...’ பறவை ஏதேனும் அந்தப்புரத்து ராஜகுமாரியா? ஒற்றையாய் ஒலித்துக் கொண்டிருக்கிறாளே..!!!

பம்ப்செட் போட்டு நீரிறைக்கும் பெரிய கிணற்றைச் சுற்றி யாரது வேலிக்காத்தானை விதைத்தது? என் பார்வை கேணிக்குள் பதியாமல் தடுக்கவா? முகக்கண்ணை யாரும் தடுக்கலாம்? என் மனக்கண்ணை நீர் என் செய்வீர்?

இதோ... பகலின் பேரரசன் கிளம்பி விட்டான். அவன் பொன் தேரில் புறப்படும் கிழக்கில் பிரகாசம் தான் எத்தனை! இரவில் பனிப் போர்வைக்குள் மூடி அவன் சேர்த்து வைத்த ஒளிப்பேழையை திறந்து விட்டிருக்கின்றான்.

ஆகா..! அதில் தான் எத்தனை ரத்தினங்கள்! எத்தனை வைரத் துணுக்குகள்! அவைதான் எப்படித் துள்ளித் துள்ளித் துளித்துளியாய் ஓடிப் பின் பிரவாகமாய்க் கிழக்கை நிறைக்கின்றன..! ஏ..! ஈரக் கர்ப்பிணி மேகங்களே! எங்கே செல்கின்றீர்கள்? ஓ..! குளிர் தேடி நகர்கிறீர்களா..? சரிதான். எங்கள் வெயில் சுரக்கும் வேங்கை வந்து விட்டானே! உங்கள் வெட்கத்தில் சிவந்த முனைகளை சுருட்டிக் கொண்டு வழி விடுங்கள்.

ஒருபக்கம் சரியும் ஓட்டு வீட்டிலிருந்து ‘கருத்த மானுடம்’ ஒன்று வரப்போரம் நடக்கின்றது. எந்தத் தெருவின் நாய் ஒன்று குரல் எழுப்புகின்றது..? அதோ அந்தத் தெருவில் கேட்பது, இதன் எதிரொலியா இல்லை, எதிராளியா..?

தூரத்துச் சாலையை அவ்வப்போது நினைவுறுத்தும் ஹாரன் சப்தங்களும், சிவப்பு மாருதிகளும் கடக்காவிடில் அங்கென்ன தார்நதியா? என்றன்றோ கேட்டிருப்பேன்...!

காகங்களே! மின் கம்பிகளின் மேல் எத்தனை ஒய்யாரமாய் நிற்கின்றீர்..! எத்தனை லாவகமாய் நடக்கின்றீர்..! எப்படி கம்பின்றி உங்கலால் சமன் செய்ய முடிகின்றது?

இதோ, வீட்டுத் தோட்டச் சின்னச் செடிகள் மேல் வெயில் பூச்சுகள் படியத் தொடங்கி விட்டன. இரவில் சுமந்த ஈரத் துளிகளை அவன் உறிஞ்சி விட்டு, தங்க முலாமை அல்லவா அந்த மகராஜன் ஈடாய்த் தருகின்றான்.

எத்தனை ஏகாந்தம்..! எத்தனை பறவைகள்..! அவற்றின் எத்தனை குரல்கள்..!

இதோ, இந்தச் சின்னச் சிற்றெறும்புகளைக் காண்கிறேன். வரிசை தவறாது எங்கே அத்தனை அவசரமாய்ப் போகின்றன..? அவற்றின் இராணுவ ஒழுங்குக் குழுமத்திலும் ஒரு புத்தன் இருப்பானா? ஒரு பாரதி பிறந்திருப்பானா..? ஓர் எறும்பு கவிதை எழுதினால் அது என்னவாய் இருக்கும்? ஒரு லட்டை, ஓர் எறும்பு உலகை நிறைந்த மஞ்சள் சொர்க்கம் என்று நினைத்தால், ஏ சூரியனே..உன் சூட்டுக் கரங்களால் இவற்றைத் அன்பால் கூட தடவி விடாதே! ஏதென்று அறியும் முன்னே, இந்தத் துளிப் பிராணிகளின் துயர் வாழ்வு தீர்ந்து போகும்.

ஓ..இரு பச்சைக் கிளிகள்! எங்கே பறந்து செல்கின்றீர்? வாருங்கள் என்னிடம்..! இதுவரை யாரும் கொய்யாக் கவிகளை உங்களுக்குக் கூறாக்கிக் கூராக்கித் தருகிறேன்.

தூரத்து மேற்கு மலைத்தொடர்களைச் சொகுசாய்க் கட்டிப் பிடித்துப் படர்ந்திருந்த இரவில் மட்டுமே வரும் கள்ளப் பனிக் காதலர்கள் சுருட்டியடித்துக் கொண்டு ஓடி மறைகின்றார்கள். இதோ வெப்ப வேந்தன் வந்து கொண்டிருக்கிறான்...!

தங்க மகன் அவன் வான் அதிர நடந்து வரும் போது, ரோஜா வனம் போல் இந்த வானமே, பூமியே, உங்களது பொருளிலா உறக்கத்திலிருந்து எழுந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் முகட்டு நேரங்களே! உங்கள் வள்ளல் பெரும்பசு வந்து விட்டான். கிழக்கு தேசத்தையே தன் கைப்பிடிக்குள் இழுத்து வைத்து, பரந்த நீல மண்டலமே ஜொலிக்க வந்து கொண்டிருக்கிறான். நானும் என் குறிப்புகளை நிறுத்தி விட்டு, இதோ செல்கிறேன், என் இன்றையக் கடமைகளுக்கு..!

ஆனாலும்... அந்த ‘ட்ரூச்சு...ட்ரூச்சு...’ தனிமை இளவரசிக்கு யாரையேனும் அனுப்பி வையும் ஆகாயம் ஆளவந்தாரே..! அவளின் சோகக் குரலைக் கேட்கக் கேட்க, என் கண்கள் துயரம் சொரிகின்றனவே, என் செய்வேன்...!!!

***

17.ஏப்ரல்.2010 காலை ஆறு மணிக்கு எழுதியது.

Wednesday, April 07, 2010

மொக்ஸ் - 07.Apr.2010.



ற்றும் சில ஆசிரியப்பாக்கள்.

தாக மோமிகு; தவித்திடும் நாவிடம்
தண்ணிய நீரைக்கேட்
டாக வேண்டிய மொழியென மிரட்டியே
தமிழினைச் சொன்னால்செத்
தாக வேண்டிய நிலைவரும். பொருந்திய
தக்கநல் அயல்சொல்முத்
தாக எழுதிட, முறைத்திடும் சிலரினைத்
தவிர்த்திடும் விரையும்நாள்.

வானைப் பிளந்தது வெப்ப
வாசனை தீட்டிய அப்பம்.
கானை நனைத்தது மாலை
கழுவியக் கடுமிரா மேகம்.
மானைக் குறித்தது மதியம்
மாமிச உணவெனச் சிங்கம்.
ஏனைக் காட்சிகள் உண்டு
என்மடிக் கணிணியில் படமாய்!

நித்தம் கருவிழி எண்ணம்
நீங்கிடா நெஞ்சில் அடங்காச்
சத்தம் அலைபோல் எழும்பிச்
சகாரா மணலில் மணந்த
மொத்த மலர்களும் கட்டி
முடித்த பரிசினை வாங்கிக்
கொத்தாய்க் கொடுத்தேன், இதழில்
கன்னம் பதித்து இனிப்பாய்.

மேகம் திரண்ட மாலை
மின்னல் தெறித்த வேளை
மோகம் கிளர்ந்த போது
மேனி நடுங்கும் நேரம்
வேகம் கொண்ட மழைநீர்
வெப்பப் பகலில் படர்ந்துத்
தாகம் தணிக்கும் கூரைகீழ்த்
தானும் ததும்பும் காமம்.

சிறுசிறு துளிகள். சில்லென காற்று.
சின்னதாய் ஒருகுளம். மங்கை.
குறுகுறுப் பூட்டும் குதூகலப் புற்கள்.
குடையடிக் கீழமர்ந் தநாம்.
துறுதுறு கைகள் தடவிட, நரம்புத்
துடித்திடும் கிடாருடை மேனி
"பொறுபொறு" என்றாய். பூக்களை உதறிப்
பொழிந்திட, நனைத்தது மழைநீர்.