Monday, November 22, 2010

குஜிலி!



பெருநிலக்கிழார்களையும், குறுநில மன்னர்களையும், பிரபுக்களையும் பாடிக் கொண்டிருந்த தமிழ்ப்புலவர்களின் வரிசையில் கடைசிக் கண்ணியாய் வந்தமைந்த பாரதியார், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்க் கவிதைகளை பொது மக்களின் புறம் திருப்பினார். மரபார்ந்த வடிவங்களில் கவிதைகள் தத்தம் பாடுபொருட்களை அரசவைகளில் இருந்து அரச மரத்தடிக்கு மாற்றிக் கொண்டன. சுதந்திரம் கிடைத்த பின் பெருகிய கல்விப் பரப்பின் அடியில் துளிர்த்த சமூகத்தின் பசியைத் தணிக்க 'தினத்தந்தி' முனைந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்புச் சங்கிலி போல் அமைந்தவை தாம், படிக்கவும், எழுதவும் கற்றிராத ஆனால் மெல்ல மெல்லத் தம்மைப் பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொள்ளத் துவங்கிய தமிழ்ச் சமுதாயத்தின் சந்து முனைகளில் வழங்கப்பட்ட முச்சந்தி இலக்கியம், பெரிய எழுத்துப் புத்தகம், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், தெருப் பாடல்கள் என்றெல்லாம் வழங்கப்பட்ட 'குஜிலி இலக்கியம்'.

பேராசிரியர் டாக்டர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் வெகுசிரமம் மேற்கொண்டு பற்பல பழைய நூல்களையும், பத்திரிக்கைகளையும் தெருப் புத்தகங்களையும் படித்து அநேக மேற்கோள்கள் இட்டு இந்நூலை எழுதியிருக்கிறார் என்பது ஸ்பஷ்டம்.

பொதுவாக சிந்து என்ற வகையிலேயே எளிதாகப் பாடும் வகையில் தெரு முனையில் நின்று இச்சிறு நூல்களை விற்போர் பாடுவதால், பாரதியாரும் 'காவடிச் சிந்து' வகையில் பாடல்கள் பாடியிருக்கிறார். அதனாலேயே 'சந்திலே சிந்து' என்ற இன்றைக்கும் ஜனப்பிரயோக வார்த்தை வந்திருக்கும் என்பது ஊகம்.

குஜிலி என்ற பெயர் தோன்றிய முறையிலிருந்து இவ்வகைப் பாடல்கள் வளர்ந்த விதம், பாடுபொருட்கள், பாடியோர், விற்பனை முறைகள், வாசகர்கள், தேய்வும் வீழ்ச்சியும் என்று அனைத்தையும் குறைவின்றி ஆய்ந்து சுவாரஸ்யமாகவும் விளக்கமாகவும் சொல்லியிருக்கின்றார்.

அக்காலத்தில் நடந்த ஜனங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடிய அத்தனை விஷயங்களையும் இந்த தெருமுனைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். அம்ஸவல்லிகேஸு, மடராஸ் ரெயில் கலகம், கள்ளப்புருஷன் ஆசையால் பிள்ளையைக் கொன்ற கனகம்மாள் துயரம், கிண்டிரேஸ் பாட்டு, சிலோன் கலகச் சிந்து, விளக்கெண்ணைக்கும் கிருஸ்னாயிலென்ற மண்ணெண்ணைக்கும் சண்டையின் கும்மி நல்லெண்ணெய் சமாதானப்படுத்துதல் போன்று பல விஷயங்களிலும் பாட்டுக்கள் எழுதியிருக்கிறார்கள். கோர்ட்டில் ஏதேனும் பிரபலமான கேஸ் நடந்து கொண்டிருக்கும் போது அன்றைன்றைக்குச் சாயந்திரமே தெருக் கவிஞர்கள் அன்றைய விபரத்தைப் பாடலாக்கி விற்றிருக்கிறார்கள்.

வழக்கம் போல் மேல்தட்டு ஜீவிகளால் 'துர்பாட்டுகள்' என்று ஒதுக்கப்பட்ட இவ்விலக்கிய வகைப் பாடல்கள் தேசியம் நோக்கித் திரும்பியதும் தேசநலன் விரும்பிகளால் வியந்தோதப்பட்டன. காந்திச் சிந்து, பகத்சிங் சிந்து, மாப்ளாக் கலவரச் சிந்து என்று பாடுகிறார்கள். வந்தது வினை. ஆங்கில அரசின் கவனம் இவற்றின் மேல் திரும்ப, பல்லாயிரம் குஜிலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்டதில் கணிசமானவை அழிந்தன.

மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்து இப்போது மிக மிக அரிதாக மாறி விட்ட குஜிலி இலக்கியத்தைப் பற்றி ஒரு வரலாற்றுப் பார்வைக்கு இந்நூல் மிக உபயோகமான பதிவு.

உதாரணத்திற்கு ஒரு பாடல்.

ஸ்ரீ வேணுகோபாலன் திருவடிகளே சரணம்

30 - 7 - 22க்கு ஆடி மீ 15உ பாளையங்கோட்டை பெரிய ஜெயிலிலிருந்து செம்புலிங்க நாடார் ஓடிப்போன பாட்டு

இஃது பாளையங்கோட்டை மில்டெரி லயன் புஸ்தக வியாபாரம் S.A.அளகிரிசாமி பாகவதர் பாடியது
பாளையங்கோட்டை செளராஷ்ட சபையார் பொருளுதவி செய்தது
திருநெல்வேலிப்பாலம் ஸ்ரீ காந்திமதி விலாஸம் பிரஸில், அச்சிடப்பட்டது
காப்பி முதற்பதிப்பு 2000
இதன்விலை 1922 அணா1
விருத்தம்

செம்புலிங்க நாடார்மேல் ஜெகமதில் பாட்டுரைக்க அம்புவியோர் இதைக் கேட்டு ஆனந்தமாய் மகிழ நம்பி எனும் வேலனுக்குத் தமையனாம் கணபதியை தும்பிக்கயுடையோனைத் துரிதமுடன் நமஸ்கரித்தேன்.
ஆல்ரெடி சொவுசுக்காரி - என்ற மெட்டு

செம்புலிங்கம் ஓடினசங்கதி சொல்லவேண்டாமா
அதைப்பாட வேண்டாமா
ஊரில்கேள்க வேண்டாமா
மனங்கொள்ள வேண்டாமா

அணாக்கொடுத்து புஸ்தகம்வாங்கிப் பார்க்க வேண்டாமா
பார்த்துநல்ல குற்றங்குரை தெரிய வேண்டாமா

புஸ்தகத்தை வாங்கிப்பார்த்தால் புலன்வெளியாகும்
கவலைகள் தோணும்
யோஜனை உண்டாகும்
புத்தி தடுமாடும்

செம்புலிங்கம் செய்த விஷயம் செவ்வையாய்த் தோணும்
வம்புவந்த வகையதுவும் தென்புடன் காணும்

பாளையங்கோட்டை பட்டாளம் லயன் அளகிரிசாமி
பாடினேன் இதை
தேடியும் நீங்கள்
நாடியுங் கேட்டு

பாடிப்பாடி நாடுகளில் கூடிப்பேசிடுவீர்
ஆடி ஓடிய செம்புலிங்கத்தைத் தேடிக்கண்டிடுவீர்
நொண்டிச் சிந்து

கொள்ளை செய்த குற்றத்துக்காக- மெத்த சள்ளையில்லாமலிருக்க செம்புலிங்கத்தை- சரியான தென்டனை செய்து- சர்க்கார் அடிதண்டாவைக் காலில்மாட்டி- பக்குவமாய்ப் பாளையங்கோட்டை- புது ஜெயில் தன்னிலல்லோ அடைத்து வைத்து- பந்தோபஸ்துகள் செய்து- அவரைப் பகலும் இரவுமல்லோ பாறாவில் வைத்து- சிலகாலம் பார்த்து வந்து அண்ணே- இந்த விதம் நாள்களித்து வரும்போது- எவ்வித காரணத்தாலோ- அங்கு ஜூலை மீ முப்பதாந்தெய்தி யன்று- ஞாயிற்றுக் கிழமை இரவில்- இந்த செம்புலிங்க நாடாரும் காசிநாடாரும்- தேவமார் ரெண்டு பேரும்- அந்த ஜெயிலுக்குள்ளேயிருந்து வெளியேரி- தந்திரமாய் ஓட்டிவிட்டார்- இந்த நல்ல விவரத்தை முன்பக்கத்தில்-அனைவோர்களும் தெரிய யான் செப்பியிருக்கிறேன் அளகர்சாமி தந்திதை தந்தினனா.

***

புத்தகம் : முச்சந்தி இலக்கியம்

புத்தக வகை : கட்டுரைத் தொகுப்பு.

ஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி

கிடைக்குமிடம் : நூற்கடைகள்.

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்.

விலை : 140 ரூ.

***

Pic Courtesy :: http://upload.wikimedia.org/wikipedia/commons/3/36/Indra_deva.jpg

Wednesday, November 10, 2010

பின் தொடரும் நிழலின் குரல்.



சென்ற ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டுக்கு, கைக்குப் பொருந்தாத வளையல் மாற்ற ப.செ.பார்க்குக்குச் சென்றார். கூடப் போயிருந்தேன். மழை வரும் போல் காற்று சில்லிட்டது. தீவாளி மயக்கம் தீராத கட்டில் கடைகள் ஏறக்கட்டப்பட்டிருந்தன. நேரம் எட்டைத் தொட்டது. வேலா புத்தக நிலையம் சாத்தியிருந்தது. வளையல் கடைக்கு அவர் சென்று விட, வேலாவுக்கு எதிரில் இருந்த மற்றொரு சிறு நூற்கடையில் நான் ஒதுங்கி கண்ணாடிக் கூண்டுகளுக்குள் காகிதங்களை விசாரித்தேன்.

பெரும்பாலும் கிழக்கின் நூல்கள். கொஞ்சம் ப்ராடிகி. கோலம் கோர்ப்பதையும் ஜோசியம் பார்ப்பதையும் தோசை வார்ப்பதையும் சொல்லிக் கொடுக்கும் என்றும் பச்சை ஒல்லி நூல்களுக்கு இடையில் 'பின் தொடரும் நிழ்லின் குரல்' கேட்டது. வாங்கிக் கொண்டேன். 290 ரூ. தமிழினி பதிப்பகம். கூட அம்பானி வாழ்வுச் சுருக்கும்.

ஞாயிறு இரவில் துவங்கி நள்ளிரவு இரண்டரை வரை படித்துப் பின் திங்கள் முழுதும் படித்து நேற்று கடைசி கொஞ்சம் பக்கங்களையும் இரவில் படித்து விட்டு இன்று எழுதுகிறேன். இப்பதிவு நாவலைப் பற்றிய எவ்வித மதிப்புரையோ, விமர்சனமோ அல்ல. படித்து முடித்து யோசிக்கும் போது தோன்றிய எண்ணங்கள் மட்டுமே.

லைப்பின் பொருள் என்ன? நம்மைப் பின் தொடர்ந்து வருகின்ற நிழலின் குரல். அந்த நிழல் என்ன? ஓர் ஒளியின் முன் நாம் நிற்கையில் நம் பின்னே உற்பத்தியாகின்ற நம் வடிவ எல்லை. உண்மையில் ஆசிரியர் குறிப்பிடும் நிழல் அது தானா? நாவலுக்குள் செல்லச் செல்ல வேறு அர்த்தங்களுக்கும் நம்மைக் காட்டுகின்றது.

கம்யூனிசம் என்ற ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்காப்படுகின்ற சோவியத் யூனியன் வீழும் போது, (சிலர் ருஷ்யாவில் அமலாக்கப்பட்டது மார்க்ஸ் சொல்லிய கம்யூனிசமே இல்லை என்று சொல்கின்றார்கள்) அச்சித்தாந்த ஆட்சிக் காலத்தில் அதைச் சொல்லி நடத்தப்பட்ட பேரழிவுகளுக்கு என்ன பொருள்? அதில் வாழ்விழந்த மக்கள் பெருங்கூட்டங்களுக்கு என்ன பதில்? என்ற அடிப்படைக் கேள்விக்கு ஆசிரியர் இந்திய அளவில் பொதுவுடைமை இயக்கம் இயங்கும் விதம் மற்றும் காலப்போக்கில் அது ஜனநாயக வழிக்குத் திரும்ப முற்படும் காலகட்டத்தைக் கொண்டு எழுதியிருக்கும் நாவல் இது.

கம்யூனிசம் பற்றியும் ருஷ்யாவில் நிகழ்ந்தன பற்றியும் எதுவும் தெரியாது என்பதால், அவற்றுக்குள் செல்லாமல் ஒரு படைப்பு என்ற ரீதியில் மட்டும் இதை அணுகுகிறேன். ஆனால் நாவல் அரசியல் பேசுவதால் அதைப் பற்றியும் வரும்.

பொதுவான நாவல் என்ற கட்டமைப்புக்குள் இதைப் பார்க்க முடியவில்லை. ஒரு சீரான கட்டுக்கோப்புக்குள் பயணப்படும் கதை மாந்தர்கள், அவர்களது மனநிலைகள் என்று துவங்கி முடியும் நாவல்களுக்குள் இது ஒரு மாறுபட்ட வடிவம் கொண்டது. கதைப் போக்கின் ஊடாக நாடகங்கள் வருகின்றன; கவிதைகள் வருகின்றன; கடிதங்கள், உரையாடல்கள் என்று பல (உத்திகள் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை.) உருவுகளில் கதை நகர்கின்றது.

அருணாசலம் என்ற தொழிற்சங்கவாதியிடம் வீரபத்திரப் பிள்ளை என்ற இயக்கத்திலிருந்து துரத்தப்பட்ட, இயக்கப் பதிவுகளில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்ட குடிக்குத் தன்னை இழந்து சக்கடையில் மரிக்கும் ஒரு முன்னாள் தோழரின் கைப்பதிவுகள் கிடைக்கின்றன. அவையே மேற்சொன்ன புனைவுகளாக நாவலில் அமைகின்றன.

வீரபத்திரப் பிள்ளையைப் பற்றித் தேடிப் போகையில் அருணாசலம் சந்திக்கின்ற நிகழ்வுகள் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மனப்பிறழ்வுக்கு ஆளாக்குகின்றன.

ஸ்டாலின் புகழ் பாடிக் கொண்டிருந்த அக்காலத்தில் பிள்ளைக்கு சைபீரியப் படுகொலைகள் பற்றியும் புகாரின் என்ற ருஷ்யப் புரட்சியாளரைப் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. அதனைக் கொண்டு கேள்வி கேட்டதால் இயக்கம் அவர் மீது புழுதி வாரித் தூற்றி வெளியே எறிகின்றது. இது காலம் காலமாய் நடப்பது தான் என்பது போல் கெ.கெ.எம். பிள்ளைக்குச் செய்ய, கெ.கெ.எம்.மிற்கு நாராயணன் செய்கிறார்.

நாவலில் வரும் தர்க்க விவாதங்கள் தெளிவாக உள்ளன. ரப்பர் தொழிற்சங்கத்தை உருவாக்கிய கெ.கெ.எம். இறுதியில் கிருஷ்ண பக்தராவதும் (அவர் கடைசியில் வந்து சேரும் வயதான காதலி கிறித்துவராய் இருப்பினும்), அருணாச்சலம் பலிபூஜைக்கு வருவதும் ஆசிரியரின், மரபின் மேலான ஆர்வத்தைக் காட்டுகிறது.

வீரபத்திரப் பிள்ளை எழுதியதாக வரும் சிறுகதைகள் ருஷ்யப் பனிநிலத்திற்கே கூட்டிச் சென்று விடுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அருணாச்சலம் மனநலவிடுதியில் படித்து உள்ளேயே விழுந்து விடுகின்ற நாடகம், ஆசிரியருக்கு மிக எளிதாகக் கைவசப்பெறும் அங்கத வகையில் எழுதப்பட்டிருப்பது அபாரம். ஜெயமோகன் என்ற இளம் எழுத்தாளரும் அருணாசலத்திற்கு எரிச்சலைக் கொடுத்துக் கொண்டு நாவலில் வருகின்றார்.

இறுதியில் மனுஷகுமாரன் வருகின்ற சிறுகதையில் அவனது வாசகங்களாக வருபவை, நாவல் மண்ணில் ஊன்றி நிற்கின்ற ஆணிவேரைச் சொல்கின்றன.

நாவலை முடிக்கும் போது தலைப்பின் கலைடாஸ்கோப் பரிமாணங்கள் தெரிகின்றன.

வீரபத்திரப் பிள்ளையைப் பின் தொடர்ந்தது ஒரு நிழலின் குரல். அது, ட்ராட்ஸ்கியை ஒழித்த அதே ஆயுதத்தால் ஒழிக்கப்பட்ட, சைபீரிய ரயில் நிலையத்தில் கொத்துக் கொத்தாய்க் கும்பல் கும்பலாய்க் கொல்லப்பட்டுக் கிடத்தப்பட்ட எளிய மக்களின் பிணக் குவியல்களில் தேவகுமாரனைக் கண்ட புகாரினின் குரல். அருணாசலத்தைப் பின் தொடர்வது மற்றொரு நிழலின் குரல். அது, ஐம்பது வருடங்களாய் இரும்புத்திரையின் பின் நிகழ்ந்த உண்மைகளை மறைத்து மேடைகளிலும் எழுத்துக்களிலும் முழங்கி வந்த சொந்த இயக்கத்தவரை எதிர்த்து அறம் தேடிய வீரபத்திரப் பிள்ளையின் குரல். அருணாசலத்தின் மனப்பிறழ்வுக் காலத்தில் பின் தொடர்ந்தது ஒரு நிழலின் குரல். அது மனைவி நாகம்மையின் குரல். ருஷ்யக் கனவுகளிலும், பிள்ளையின் புனைவுகளிலும் கரைந்து தறிகெட்டுத் திக்கெட்டும் சிதறிப் போய்த் தன் மாய நினைவுகளில் தொலைந்திருந்த மனதை மீட்டுக் கொணர்ந்த காமத்தின் தீராக் குரல்.

அறம் என்பதன் பொருள் என்ன? மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்ற சித்தாந்தங்களுக்கு ஏற்படுகின்ற வெற்றி தோல்விகளைக் கொண்டு அறத்தை நிர்ணயிக்க முடியுமா? நீதிக்கான இன்றைய பொருள் நாளை செல்லுபடியாகுமா? என்றென்றைக்குமான அறம் என்று ஏதேனும் உள்ளதா? தியாகத்தின் மதிப்பு என்பது எதைச் சார்ந்தது? போன்ற கேள்விகளின் மேலே நின்று செதுக்கப்பட்ட ஒரு பெரும்புனைவு இந்நூல்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டுத் தாங்க முடியாமல் மக்கள் குமுறி அழும் கண்ணீரே அந்த ஆட்சியை அடியோடு அழிக்கும் ஆயுதமாகும்.

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்.

இக்குறட்பாக்களின் சாரத்தில் மிளிர்கின்றது ஜெயமோகர் காட்டுகின்ற தரிசனம்.

***

புத்தகம் : பின் தொடரும் நிழலின் குரல்

புத்தக வகை : நாவல்.

ஆசிரியர் : ஜெயமோகன்

கிடைக்குமிடம் : நூற்கடைகள்.

பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்.

விலை : 290 ரூ.

Friday, October 29, 2010

NaNoWriMo - 2010.



ன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் நானோ துவங்கப் போகின்றது. தயாராகிறீர்களா..?

முந்தைய பதிவுகள் ::

Nanoupdate.1

Nanoupdate.2

Nanoupdate.3

Nanoupdate.4

Nanoupdate.5

Nanoupdate.final

என் நானோ பக்கம் :: வசந்த்.

Wednesday, October 13, 2010

திருமண அழைப்பிதழ்.

நாள் :: 20-அக்டோபர்-2010, ஐப்பசி 3

நேரம் :: காலை 6 மணி முதல் 7 மணிக்குள்

இடம் :: ஸ்ரீ ராஜேஸ்வரி திருமண மண்டபம், கொமாரபாளையம்.

அனைவரையும் அழைக்கிறேன்.

Thursday, October 07, 2010

Jai Hoooo....

Then....




...and now...



Cricinfo

Any differences could be found...? Nope...!!!