Saturday, May 02, 2009

ஏப்ரலில் இருந்து மேக்கு ஒரு பயணம்!

னோ இருள் கடிக்கும் இந்த ராத்திரிப் பயணத்தில் குளிரக்குளிர ரஹ்மானைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. மொபைலின் மெமரி வயிற்றுக்குள் 45 பாடல்கள் திணத்திருந்தேன். எனிமா கொடுத்த குழாய் சட்டென பிரிந்து ஸ்டீரியோ கரங்கள் வழியாக காதுகளுடன் இணைத்து, தட்ட, முதல் பாடலில் 'வானம் இடிக்க எகிறிக் குதித்தார்கள்'.

ரவிக்கை தேவையற்றதாகச் செய்த வறுமை கரைத்த மனைவியை அர்த்தநாரி போல் தன் இடப்புறம் வைத்து, என் இடப்புறம் உட்கார்ந்திருந்த அந்த மத்திய வயதினர் ஐந்து நொடிகளுக்கொரு முறை சாய்ந்து கொள்ள என் தோள் கேட்கிறார். 'தள்ளி விடு' என்று ஒரு குரலும், 'பாவம்! உழைத்த களைப்பாய் இருக்கலாம்' என்றூ மறு குரலுமாய் அலையடித்தது.

வண்ணதாசன் சொல்வது போல் ஒரு நாவல் கதாபாத்திரங்களாய், எங்கெங்கோ பிறந்தவர்களையும், எப்படி எப்படியோ வாழ்பவர்களையும் ஓர் ஏப்ரல் இறந்து, மே பிறக்கும் அர்த்த ராத்திரியில், ஓர் இரண்டு மணி நேரம் நாகர்கோயில் - தின்னவேலி வரை இழுத்துச் செல்கின்ற கைகளின் பெயர் என்ன? விதியா? இயற்கையா? நெல்லை அடைந்தவுடன் அவரவர் வெவ்வேறு திசைகளில் சிதறிப் போவதற்கு முன் ஓர் ஒற்றை முடிவை நோக்கி எங்களை சுமந்து போவது எந்த விளையாட்டின் எத்தனையாவது விதி?

எதிர்ப்படும் லாரிகள், பேருந்துகளில் ஒளிப்பற்களை நீட்டிக் கொண்டு, வாய் திறந்து, இரண்டு கண்களில் ஒன்றில் டிரைவர் இயங்கிக் கொண்டிருக்க, மூச்சு முட்டிக் கொள்ளும் சுமை அடைத்து புயலாய்க் கடப்பவற்றுள் எத்தனையை சரிந்த கோலத்தில் நாளை தினத்தந்தியில் பார்ப்பேன்?

முன்னாள் வயல்களில் நட்டு வைத்திருந்த இராட்சஸ மின் காற்றாடிகள், அசுரத்தனமாய் சுற்ற முயலும் போது, சில கொண்டையில் செருகிய பூவாக, சிலவற்றின் மூக்குத்தியாக ஆரஞ்சு மின்விளக்குகள் தெரிந்தன; எரிந்தன. செல்போன் டவர்களில் சிகப்பு புள்ளிகள் துளிர்க்கும் போது, அந்தரத்தில் அமைதியாக கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றே ஒரு நட்சத்திரம்.

அத்தனை வைக்கோல்களையும் சுமந்து, திணித்து, சத்தியமாய் அடையாளம் மறைத்து, அழுத்தி அழுத்திச் சென்று கொண்டிருந்த அந்த லாரி, ஒரு பிடரி சிலிர்க்கும் சிங்கமாய்த் தோன்றுகிறது.

'வெண்ணிலவே.. வெண்ணிலவே.. விண்ணைத் தாண்டி வருவாயா..'

நெல்லை புது பஸ் ஸ்டேண்டை ஒட்டிப் போகும் பரந்த நீர்த் தாம்பாளத்தின் மேல், ஓரங்களில் குத்தி வைக்கப்பட்டிருந்த சோடியம் வேப்பர் கம்பங்களில் இருந்து பாயும் மஞ்சள் ஃபோட்டான்களின் பிம்பங்கள் காற்றில் களி பாடிக் கொண்டிருக்கின்றன.

நொறுக்கிய எழுத்துக்களில் ஏதோ பேர் கிறுக்கி விட்டு, 'சாந்தி ஸ்வீட்ஸ்' வரைந்த பெரிய போர்டுகளின் நெற்றியில் ஆணியடித்துக் கொண்ட கடைகளில் அல்வாக்கள், பால்கோவாக்கள் ஒன்றாம் தேதி சம்பளக் கவர்களுக்காகக் காத்திருக்கின்றன. ஒரு சின்னச் செவ்வக ஓட்டல் முன் பாத்திரங்களைக் கவிழ்த்துப் போட்டுக் கழுவிக் கொண்டிருந்தவனுக்கு இன்னும் அக்குளில் கூட முடி முளைக்கவில்லை. மெளனம் தாளிக்கும் இந்த இரவில், வெட்கம் பார்க்காத சனம் தரையோடும் உட்கார்ந்து, கதை பேசி அரைத்தூக்கத்தில் சரிந்திருக்கின்றது.

'போறாளே பொன்னுத்தாயி...பொல பொலவென்று கண்ணீர் விட்டு...'

அனந்தபுரத்தில் இருந்து என்னை நானே கடத்திக் கொண்டு வந்து சேர்ந்த போது, தம்பானூரில் 22:20 ஆகியிருந்தது. பஸ் (அ) ரயில். இரண்டே தேர்வுகள். ரயில் நிலையத்தில் அடை மேல் ஒட்டிய ஈக்களாய்க் கூட்டம் இருந்து. நானும் சென்று சேர்ந்து நின்றால், என் முறை வரும் முன் வெள்ளி பிறந்து விடும் அபாயம் இருந்ததால், இம்முறை பஸ் டிக் செய்தேன். இரவு 22:30க்கு கிளம்பும் திருச்சி செல்லும் பேருந்து நிறுத்தப்ப்ட்டு விட்டதால், தவளைக் குதியல் பயணம் துவங்கியது.

நாகர்கோயில் வண்டி தயாராக உறுமிக் கொண்டிருந்தது. எல்லை தாண்டி, மார்த்தாண்டம் நெருங்கும் போது, எப்போதும் குளிர்வூட்டும் ஒரு நதியின் ஒரு பாலத்தில் செல்கையில் தெரியும் ஒரு கடக்கும் கரையின் படிக்கட்டுகளில் அந்நேரத்திற்கு யாரோ குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்து கரைந்து ஆற்றோடு சென்று கொண்டிருந்தது. அதே போன்றதொரு காட்சியை நெல்லை வரும் போதும் கண்டேன்.

ஒரு சாலை விளக்கின் அடியில் இருவர் மயங்கி/தூங்கி கிடந்தனர். பக்கத்தில் சைக்கிள் ஒன்று ஸ்டாண்டில் இருந்தது. அந்த சைக்கிளும் தூங்குமா? அதுவும் நின்று கொண்டு? ஏன் தூங்கக் கூடாது? குதிரைகள் மட்டும் தான் நின்று கொண்டே தூங்குமா? குதிரைப் பேரரசன் ஓட்டும் லாரிகள் எல்லாம் 'இரும்புக் குதிரைகள்' எனில், அவற்றின் கீழ்ப் பரிமாண வஸ்துவான சைக்கிளை என்னவென்று சொல்லலாம்? 'இரும்புக் குளவிகள்...?'

'மதுர பஸ் எங்கிட்டுணே நிக்கும்?'

'அங்கன போங்க!'

மற்றொரு எல்லைக்கு நடக்கையில் தினகரன் கட்டு ஒன்று இறங்கி இருந்தது. மைக் குரல் ஒலிக்கும் மேலிரண்டு பட்டன்கள் திறந்த நீலச் சட்டை நேரக் கண்காணிப்பாளர் டேபிள் மேல் ஜூ.வி., ரிப்போர்ட்டர் இருந்தன.

தமிழ் நெடுஞ்சாலையின் நடுவிலெல்லாம் அசைந்தாடிச் சென்ற நடை பழகிய மாடு, திக்கித் திக்கிப் பெய்த மூத்திரம் போல் வெள்ளைப் பட்டைகள்.

'நேற்று உன் நினைவில் நித்தியப் பூமணியில்
காற்று நுழைவது போல்...'

நீல விளக்குகள் மட்டும் பரவுகின்ற இந்த ஜன்னல் ஜரிகை நகர்வில், அத்தனை பேரும் சரிந்து, சாய்ந்து, தூங்கிக் கொண்டே இருக்க, விழித்திருக்க காக்கிச் சட்டையினர் இருவரோடு எனக்கு மட்டும் ஏன் விருப்பம்? எழுதுவது ஓர் அப்ஸஷனாக மாறிக் கொண்டிருக்கின்றது. என்ன இந்த மயக்கம்? இதில் ஒரு சுகம் இருப்பதாகத் தோன்றுகிறதே, அது மாயமா? எழுதுவதில் ஏதோ ஒரு கிளர்ச்சியை, கிளுகிளுப்பை உணர்வதாய்ப் படுகின்றதே? அது உண்மை..?

'வாழ்வின் எல்லை வரை வேண்டும்..வேண்டுமே!'

ரோட்டை இரண்டாகக் கிழித்து, 'இந்தா இது உனக்கு', 'இது உனக்கு' என்று பிரித்துக் கொடுத்த பின்னர், பட்டாடை பளபளப்புச் சாலையில் சறுக்கிக் கொண்டு செல்லாமல், சவலைப் பிள்ளையாய் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறதே..? ட்ரைவர் காதில் குச்சி விடலாமா..?

'என் வீட்டுத் தோட்டத்தில்.. பூவெல்லாம் கேட்டுப் பார்..'

'புத்தம் புது பூமி வேண்டும்...'

நல்ல பாடல்! பாட்டு ஆரம்பத்தில் வரும் ஃப்ளூட் இசை இசைத்தது யார்? யமஹாவா..? தோஷிபாவா..? பின் ஏதோ சொல்கிறார்களே..? என்ன மொழி?

இந்த பஸ்ஸில் நெல்லை - மதுரை செல்கிறேன், 56 ரூபாயில்! ஒரு திருக்குறள் ட்ரைவர் முதுகில் தெரிகின்றது. 'அடக்கம் அமரருள் உய்க்கும். அடங்காமை அண்டர்ட்ரா.. இல்லை...இல்லை.. ஆரிருள் உய்த்து விடும்'. வேறு எங்கும் 'நான், நீ, நாம்', 'வெள்ளி, சனி, ஞாயிறு' வகையறா குரல்களில் முதல்வரைக் காணோம். ஆச்சரியமாக இருக்கிறது.

ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தவன், தானே அதற்கு முழுப்பாத்தியவான் போல், கீழே இழுத்து ஜன்னலை அடைக்கிறான். இது என்ன நியாயம்? என்னைக் கேட்பதில்லையா? எனக்கும் பாதி உரிமையாவது இருக்கிறதா, இல்லையா? எல்லா ஜன்னல்களையும் அடைத்த பின்னும், எங்கிருந்தோ லேசாக வரிசையாக காற்று விழுகின்றது.

தற்காலிக குபேரபுரியான திருமங்கலத்தை அடைந்த போது, 'ஆரப்பாளையம் போக இங்கேயே இறங்கலாம்' என்ற நடத்துனர் குரலுக்கு மதிப்பளித்து, நிலைய வெளியில் இறங்கும் போது, சாக்கடை தேங்கி இருந்தது; அருகின் டீக்கடையில் இருவர் பேசிக் கொண்டிருக்க, கால்களுக்கிடையில் வால் போஸ்டரில் தேர்தல் நிலவரங்கள்.

சொகுசுப் பேருந்தில் ஏறிக் கொண்டு சென்று 7.15 சுமாருக்கு, சுமாரான விழிப்பில் ஆரப்பாளையம் அடைந்தேன். வழக்கமாக சாப்பிடும் 'ப' அறை ஓட்டலுக்குள் சென்று எதுவும் இன்னமும் தயாராகத் துவங்கியில்லாமலிருக்க, 'வெண் பொங்கல்' உதிரி உதிரியாய்த் தட்டில் கொட்டி, 15ரூ. வாங்கிக் கொண்டார்கள்.

ஈரோடு பேருந்தில் ஏறி அமர்ந்தால், முடிவை சட்டென மாற்றிக் கொள்ளும் வகையில் திருமலை ஓடிக் கொண்டிருந்தது. கலங்காமல் விஜயிடமிருந்து தப்பிக்க, காவ்யாவின் வெங்கட் சாமிநாதன் எழுதிய 'சில இலக்கிய ஆளுமைகளில்' கண்கள் பதித்து, காதுகளில் ரஹ்மானை அடைத்துக் கொள்ள முயன்றேன். செல் சக்தி இழந்திருந்தது. வழியின்றி காதுகளை திருமலைக்கு சமர்ப்பித்து விட்டு, நூலில் கவனம் பதிக்க நிம்மதி!

மதுரைப் பொங்கல், வாடிப்பட்டி(வாடிவாசல்?) தாண்டியவுடன் வீச்சைக் காட்டி விட்டது. மீண்டும் விழித்துப் பார்க்கும் போது, திண்டுக்கல்லை நெருங்கிக் கொண்டிருந்தது. கரூர் அடையும் வரை நிலம் தான் எத்தனை மொட்டையாக இருக்கின்றது! பெருக்கின்ற நெடுஞ்சாலைகளுக்காக வழியோரப் புளியமரங்கள் சுத்தமாக விரவப்பட்டிருக்க, தூரத்து மலைகள் கூட பளிச்செனத் தெரிந்தன. வழியில் ரெயில்வே ட்ராக்குகளில் இரண்டு ரயில்கள் கடந்தது, பொம்மையாய் அழகாய்த் தெரிந்தன. சன்னல் வழி பொங்கிப் பொங்கிப் பாய்ந்து கொண்டிருந்த ஆரம்ப பகல் நேரத்து அனல் காற்று, மே மாதத்தின் வருகையை வேர்வை அறைந்து தெரிவித்தது.

துரை - ஈரோடு என்ற பேருந்தில் செல்லக் கூடியதான ஐந்து மணி நேர அமர்வை, க.மு., க.பி., என்று பிரிக்க விரும்புகிறேன். (க.பி. - கரூருக்குப் பின்.) திட்டப்படி கரூர் அடைய மூன்றரை மணி நேரமும், அங்கிருந்து ஈரோடு அடைய ஒன்றரை மணி நேரமும் எடுத்துக் கொள்ளும்.

கரூருக்கு முன், பொட்டல் காடுகள், செம்மண் நிலங்கள், உடைக்கப்படும் மலைகள், மரமின்மையால் உதிக்க மறந்த நிழல்கள், காற்றை உஷ்ணப்படுத்தி ஜன்னல் கம்பிகள் அத்தனையையும் தொடப் பயமுறுத்தும் வெம்மை மிதக்கும், ஒற்றை ரெயில்வே ட்ராக்குகளையும், தூரத்து நிழல் மலைகளையும், கொப்பளிக்கும் தார் சிதறும் புதிய, பழைய நெடுஞ்சாலைகளும், அங்கங்கே அவ்வப்போது உதிரியாய்த் தட்டுப்படும் ஊர்களுமாய், நம்மோடு ஊடுறுவி வருகின்றன வெட்ட வெளிகளும், மொட்டை வெயில்களும்..!

கருவூர் என்ற முன்னாள் சோழ நகரம், இன்று கரூராகி வினைல் போர்டுகளிலும், காகங்கள் உட்கார்ந்த சிலைகளாலும் திணறுகிறது. மேம்பால பணிகள் இன்னும், இன்றும் ந..ட..க்..கி..ன்..ற..ன.. கொங்கு மண்டலத்தின் ஓர் எல்லையில் இருக்கும் இவ்வூர், காவிரி மற்றும் துனை நதிகளின் தடங்கள் பற்றி பச்சை காட்டுகிறது. நிலையம் சென்று, ஒரே ஒரு 'U' டர்ன். அவ்வளவு தான். வெளியே வந்தாயிற்று. மீண்டும் பாலத்தின் அடியில் புகுந்து, 'ஈரோடு - 65' போர்டைப் பார்த்து, வெளியேறும் ரோட்டில், அத்துவான மொட்டை இடங்களில் திடீர் நகர்கள் தோன்ற முயல்கின்றன. வெள்ளைக் கற்கள் நட்டு, சதுர அடிகள் பிரிகப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு நகரின் வாசலில் மட்டும் அலங்காரமாய்த் தூண்கள் அழகுபடுத்த, உள்ளே வெகு தூரத்தில் ஒரே ஒரு வீடு மட்டும் தெரிகின்றது.

சாலைகளில் இன்னும் புளியன்கள் இருக்கின்றன. வெயில் எறத் தொடங்கி இருக்கின்றது. அனலும், நிழலும் மாறிமாறிப் பூசிக் கொள்ளும் காற்று எட்டிப் பார்க்கிறது. பஸ் டி.வி.யில் 'வேல்' எறிகிறார்கள். துப்பட்டாவைக் கழுத்துக்கு கீழ் இழுத்தே விடாத அசினையும், அழகான அந்த தாவணித் தங்கையையும் தவிர வேறு யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை.

அரிவாள்களும், அலறிப் பறந்து சறுக்கிட்டு நிற்கும் டாடா சுமோக்களும், அழுது வடியும் ஒரு வெள்ளைப் புடவை பாட்டியையும், மீசை முறுக்கிய ஹீரோவையும், பழி வாங்குவதே பிறவிப்பயன் என்று கர்ஜிக்கும் வில்லனையும், சாதிப் பெருமை பேசும் வசனங்களும், க்ரேன் ஷாட்டில் ரோலர் கோஸ்டர் துவக்கப் பாடல்களையும் காட்டாத ஹரி படம் சொல்லுங்கள். மே மாதத்திற்கு மட்டும் மதுரைக்கோ, இராமநாதபுரத்திற்கோ உங்கள் ஓட்டர் ஐ.டி. மாற்ற வேண்டிக் கொள்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சம் பச்சை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சாலைகள், துளித்துளியாய் உக்கிரம் பெற்று, வயல்கள், நிழல்கள், மரங்கள் என்று அதிகரித்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும் ஒரு நேர்ச் சாலை, ஒரு ரைட் டர்ன் அடித்து நகரும் போது (ஊஞ்சலூர்..?) பசுமை ஒரு பரிபூரணத்தை அடைகின்றது.

சரேல் சரேலென கடக்கின்ற வயல்களில் நெல்லோ, கரும்போ, மஞ்சளோ போட்டிருக்கிறார்கள். கிணற்று பம்ப் செட்டில் நுரை நீர் பாய்கின்றது. வரப்பில் பழுப்புத் தண்ணீர் ஓடுகின்றது. சாலையை ஒட்டியே வெட்டப்பட்டுள்ள மழை ஓடையில் சலசலக்கும் ஈரம், விஷுக் விஷுக் என கடக்கும் புளிய மரங்கள், அவ்வப்போது தாண்டி போகும் ஒற்றை அறை கிராமத்துக் கோயில்கள்....எங்கேயும், எப்போதும் குளுகுளு பசுமை தான்.

வெய்யிலே கொஞ்சம் வெட்கப்பட்டு, இலைகளின் ஊடாகத் தெரியாமல் வந்து போகின்றது. மதுரை மொழி குறைந்து, குறைந்து, கொங்குத் தமிழ் அதிகரிப்பதைக் கேட்பது, அந்த சூழல் மாறுதல்களை அவதானிப்பது சுவாரஸ்யமாய் இருக்கின்றது. செழித்து வளரும் நிலத்தில் காற்றுக்கு ஒரு மணம் இருக்கும். உணர்ந்திருக்கிறீர்களா? நான் முகர்ந்தேன். குளுமை தடவிய காற்று!

வேல் முடிந்து, டி.வி. நிறுத்தப்பட்டிருக்க, அந்த ஈரப் பச்சைப் பிரதேசம் மெல்ல மெல்ல கலைந்து, நெருங்கும் ஒரு மாநகரின் நிழல்கள், எல்லைப்பூ வீடுகள் தோன்றி, மறைந்து, தோன்றி, மறைந்து, தோன்றி, தோன்றி, தோன்றி... ஈரோடு பேருந்து நிலையத்தை அடைந்த போது, மதியம் ஜனித்து 12:30 ஆகி விட்டிருந்தது.

கடைசியாக ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.

அனந்தபுரம் - நாகர்கோயில் - நெல்லை - திருமங்கலம் - ஆரப்பாளையம் - ஈரோடு - பவானி. இத்தனை பஸ்கள் மாறி மாறி வந்தும், என்னோடு துணைக்கு வந்தது இரண்டே இரண்டு! அழுக்குத் துணிகளையும், புத்தகங்களையும் தன் வயிற்றில் அடக்கிய பயணப்பை. அனந்தபுரம் - நா.கோ., பஸ் தவிர்த்து, மற்ற அத்தனை பஸ்களிலும் 'அடக்கம் அமரருள் உய்க்கும்' குறளே கூட வந்தது.

'நம்புங்கள் நடந்தது, 'அதிசயம் ஆனால் உண்மை' போன்ற excitement வகையறாக்களைத் தவிர்த்து, இதன் காரணத்தை ஆராய்ந்தால், என்னென்ன காரணங்கள் தோன்றுகின்றன. அடக்கம்' போஸ்டர் தான் பெரும்பாலான அரசுத் தொலைவுப் பேருந்துகளில் இருக்கலாம். அதுதான் அதிக அளவில் ஒட்டப்படும் ஒன்றாக இருக்கலாம். ஆனாலும்... 5 பஸ்களில் என்னை விடாமல் தொடர்ந்து வந்ததை அறிவியல் பூர்வமாக என்னதான் ஸ்டாடிஸ்க்ஸ், ப்ராபலிட்டி என்றெல்லாம் அலசினாலும், அதில் ஒரு மர்மம் இருப்பதாக எண்ணிக் கொள்வதில் ஒரு 'குறுகுறு' இருக்கத் தான் செய்கின்றது.

8 comments:

thamizhparavai said...

என்ன திடீர்ப் பயணம்...?!
தொடர்ந்து மூன்று பதிவுகளாக ‘ஜரிகை’ என்னும் வார்த்தையைப் பயன்படுத்திவிட்டமையால், வசந்தை ஆட்டத்தை விட்டு விலகுமாறு நிர்ப்பந்திக்கிறோம்.
//
'நேற்று உன் நினைவில் நித்தியப் பூமணியில்
காற்று நுழைவது போல்...'//
இது என்ன பாடல்..?
(அவசரத் தட்டச்சினால் பிறந்த பிழைக்குழந்தைகளை அன்போடு அரவணைப்போம்)

Venkatesh Kumaravel said...

கவனமாக கோத்த சொற்கள். சற்றே நீளமான ஆனால் நேர்த்தியான கட்டுரை. நானும் பயணக்கடுரை எழுதுவதற்காகவே வலைப்பூ தொடங்கினேன். ஆனால் இது கொஞ்சம் நேரம் இழுக்கும் சமாச்சாரம். நல்ல இன்ஸ்பிரேஷன் தருகிறீர்கள். வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதி வருவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

ஆயில்யன் said...

//ஏனோ இருள் கடிக்கும் இந்த ராத்திரிப் பயணத்தில் குளிரக்குளிர ரஹ்மானைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது.//

டைட்டிலையும் இந்த வரிகளையும் பார்த்ததுமே சடார்ன்னு எனக்கு மேமாதம் படத்து பாட்டுதான் ஞாபகத்துக்கு வந்திச்சு “ என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்


கேட்டுட்டுத்தான்,பதிவின் அடுத்த வரிகளுக்கே...! :)))

ஆயில்யன் said...

வாவ்....!


இத்தனை அழகிய வர்ணிப்புக்களுடன் ஒரு பயணத்தினை சொன்ன நேர்த்தி

இதே போன்றதொரு பயண குறிப்பினை
மனதில் மாதிரியாய் எழுதிப்பார்க்க தூண்டுகிறது !

தொடருங்கள் பயணத்தை...!

மெனக்கெட்டு said...

//
நீல விளக்குகள் மட்டும் பரவுகின்ற இந்த ஜன்னல் ஜரிகை நகர்வில், அத்தனை பேரும் சரிந்து, சாய்ந்து, தூங்கிக் கொண்டே இருக்க, விழித்திருக்க காக்கிச் சட்டையினர் இருவரோடு எனக்கு மட்டும் ஏன் விருப்பம்? எழுதுவது ஓர் அப்ஸஷனாக மாறிக் கொண்டிருக்கின்றது. என்ன இந்த மயக்கம்? இதில் ஒரு சுகம் இருப்பதாகத் தோன்றுகிறதே, அது மாயமா? எழுதுவதில் ஏதோ ஒரு கிளர்ச்சியை, கிளுகிளுப்பை உணர்வதாய்ப் படுகின்றதே? அது உண்மை..?
//
உங்களின் பயணக் கட்டுரைகளை மிகவும் ரசிக்கிறேன். தொடரட்டும்.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

ஜரிகை சொல் அத்தனை பதிவுகளிலும் மிகப் பொருத்தமான பங்கைச் செய்திருப்பதாகவே எனக்குப் படுகின்றது. பிழைக் குழந்தைகள் திருத்தப்பட்டாயிற்று!

***

அன்பு வெங்கிராஜா...

நன்றிகள். நீங்கள் எனது பதிவை பெரிய பதிவு என்று சொல்கிறீர்கள். இதிலிருந்தே நீங்கள் தமிழ் வலைப்பதிவுலகத்திற்கு புதியவர் என்று தெள்ளெனத் தெரிகின்றது. இங்கே ஒரு பிரகிருதி இருக்கின்றார். அவரது பதிவுகளைச் சென்று பாருங்கள். பிறகு உங்களது ஸ்டேட்மென்ட் பற்றி பேசுவோம்.

அவர் பெயர் உண்மைத்தமிழன்.

***

அன்பு ஆயில்யன்...

நன்றிகள். கண்டிப்பாக எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.

***

அன்பு மெனக்கெட்டு...

நன்றிகள். தொடர்வோம்.

மெனக்கெட்டு said...

முன்பெல்லாம் உங்கள் பயணக் கட்டுரைகளில் போட்டோ எல்லாம் வரும் !?!

அந்த இடங்களை எல்லாம் நாங்களும் நேரில் பார்த்தது போல் நினைத்துக் கொள்வோம்.

ஹூம்! அடுத்த முறை கேமராவை எடுத்துப் போங்கள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு மெனக்கெட்டு...

இந்த பதிவு முழுதும் பயணமாகியதால் இரவில் எங்கும் படம் எடுக்க முடியவில்லை. மதுரை வந்த போது செல் பேட்டரி காலி. பயணித்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் வித்தியாசமாக எழுத முயற்சி செய்திருக்கிறேன். சரியாக வரவில்லை போலிருக்கிறது.

மெருகேற்றுவோம்.