Saturday, March 17, 2007

என்னய்யா... இப்படிப் பண்றாய்ங்க...

என்னம்மா கண்ணு படத்தில், வடிவேலு கோவை சரளாவிடம் கூறுவார்.


"அவன் குடும்பத்த நான் கேவலமாப் பேசுவான். என் குடும்பத்த அவன் ரொம்பக் கேவலமாப் பேசுவான். இத நாங்க ஒரு ஜாலியாவே எடுத்துக்கறது..."


என்பார்.


அது போல, இந்தப் பக்கம் இந்தியா இவ்வளவு கேவலமாக விளையாடுகிறதே என்று அடுத்த மேட்சைப் பார்த்தால், அயர்லாந்து பாகிஸ்தானுக்குத் தாண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.


என்னய்யா... இப்படிப் பண்றாய்ங்க...

பார்க்க:


இந்தியா : வங்காளதேசம்,பாகிஸ்தான் : அயர்லாந்து.

Monday, March 12, 2007

ஓர் ஆய்வு.

காதல், வெயில், பருத்தி வீரன் போன்ற படங்களுக்கு கிடைக்கின்ற பிரம்மாண்டமான வெற்றிக்குக் காரணம் என்ன?

ஆர்குட்டில் மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் அனைவரும் தத்தம் சாதிக் குழுவில் உறுப்பினராய் இருக்கும் நிலைக்குக் காரணம் என்ன?

ஒவ்வொருவரும் தத்தம் உள்ளம் தோன்றும் எண்ணங்களை, திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான களமான தமிழ்ப் பதிவுகள், சாதி வெறியோடு ஒவ்வொருவரும் அடித்துக் கொள்வதற்கான இடமாய்ப் போனதற்குக் காரணமென்ன?

சிந்தித்துப் பார்த்ததில், சில விடயங்கள் எனக்குத் தோன்றின.

வெளி உலகப் பழக்கமே இல்லாதிருந்த காலங்கள் கடந்து வந்து, இப்போது எல்லொரும், எங்கு வேண்டுமானாலும் யாரையும் தொடர்பு கொள்ள முடியும் என்ற காலத்திற்கு வந்துள்ளோம். தனி மனிதனாய், காட்டுமிராண்டியாய் இருந்து, பின் சமூகத் தேவையை உணர்ந்து குழுக்களாய் வாழ்ந்து, பின் எப்படியோ சாதி, இனம், மதம் எனும் கூட்ட உணர்வுகளுக்குள் வந்து வாழ்ந்தோம். சாதிக் குழுக்கள் தனித்தனியாய் வாழ்ந்து, இப்போது நகரங்களில் பக்கத்து வீட்டுக்காரர் யாரென்னும் அறிந்து கொள்ளாத நிலையில் வாழ்கிறோம்.

மனித மனம் 'இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்' என்று தேடக் கூடிய சுபாவம் கொண்டது. இருப்பதோ ஒரேயொரு தனிமையான கிரகம். யாரும், எங்கும் செல்லலாம் என்ற நிலை வந்த பின்பு, மனித மனம் சலிப்புறத் தொடங்கியுள்ளது. இனி செல்வதற்கு எங்குமில்லை என்று உணர்ந்த பின்பு, உள்முகமாய்த் திரும்புகிறது.

'என் மதம்',' என் இனம்', 'என் மொழி', 'என் மண்', 'என் ஊர்' என்ற எண்ணங்கள் தலைதூக்குகின்றன.

புலம் பெயர்ந்து வாழ்கின்ற மனங்கள், மகிழ்வாய் இருந்த மீஇளம் காலங்களை அசை போடுகின்ற போது, அப்போது கழித்த ஊர் நினைவுகள் வருகின்றன. பின்னாலேயே வால் போல, மேற்சொன்ன 'என்..' களும் வருகின்றன.

வேறென்ன காரணம் இருக்க முடியும், பரந்து விரிந்த உலகில், தத்தம் சாதிக் குழுவில் உறுப்பினராகும் ஆர்குட் நண்பர்களுக்கு?

வேறென்ன காரணம் இருக்க முடியும், கிராமத்துப் படங்கள் வெற்றி பெறுவதற்கு?( மேலும் பல கிராமத்துப் படங்கள் ஊற்றிக் கொண்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய 1).

உயர்ந்த எண்ணங்களை, அற்புதமான கனவுகளை சொல்லும் இடத்தில், என் சாதி, என் மதம் என்று ஒருவர் மேல் ஒருவர் உமிழ்ந்து கொள்வத்று வேறு என்னதான் காரணம் இருக்க முடியும்..?