Tuesday, August 21, 2018

உடைந்த மூக்கு.

ணையதளத்தில் துளித்துளியாய் ஆடை விலக்கி பரிநிர்வாணம் அடைபவள், அன்று உடைந்த மூக்குடன் தோன்றினாள். ‘ஜென்னி, என்ன ஆயிற்று உன் மூக்கிற்கு?’ என்று வந்த 7713 பேரும் கேட்டார்கள். ‘உடற்பயிற்சிக்கூடத்தில் தவறி விழுந்து விட்டேன்’ என்று அனைவருக்கும் சொன்னாள். ‘மூக்கைத் துணியால் மறைத்துக் கொள். என் கற்பனைக்கு அது இடைஞ்சல் செய்கிறது’ என்றான் ஒருவன். ‘மூக்கு சரியாகும் வரை பின்புற போஸ் மட்டும் காட்டு’ என்றான் மற்றொருவன். ‘கேமிராவைக் உதட்டுக்கு மேல் கொண்டு போய் விடாதே’ என்றான் இன்னொருவன். பார்வையாளர்கள் எண்ணிக்கை சட்டென 5320 ஆனது. ‘ஜென்னி, இப்போது தான் நீ இன்னும் அழகாய் இருக்கிறாய். மேகங்களில் மிதந்து கொண்டிருந்த பொன்புறா, மரக்கிளைமேல் வந்தமர்ந்தது போல். கைக்கெட்டும் அளவான அழகில்.’ என்றான் 4517-ல் மிஞ்சிய ஒரு கவிஞன். அவனுக்கு மட்டும் இரு முத்த எமோஜிகளும் ஒற்றைத் துளி கண்ணீர் எமோஜியும் அனுப்பினாள். யாரும் ‘டேக் கேர்’ சொல்லவில்லை.

ஒரு கோப்பை தேநீர்.

வா...
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டே
நாம் பேசலாம்..’
என்று அழைக்கிறாய்.

ஒரு கோப்பை தேநீர்
தீர்வதற்குள்
அதன் நுரை அடங்குவதற்குள்
அதன் வெம்மை அணைவதற்குள்
அதன் ஒவ்வொரு துளியையும் விழுங்குவதற்குள்
அதன் அடியாழத்துக் கசடைத் தவிர்ப்பதற்குள்
பேசி முடிப்பவை தானா
நம் சிக்கல்களும்
நம் கருத்து வேறுபாடுகளும்
நம் கோபங்களும்
நம் வெறுப்புகளும்?

எனினும்
என்னை அலங்கரித்துக் கொண்டு
என் கைப்பையை நிரப்பி விட்டு
சென்ற பனியுருண்டை விழாவில்,
என் உடனிருப்புக்கு
நீ
பரிசளித்த
பழுப்பு நிற தணப்பு ஷூ அணிந்து கொண்டு
உன்னுடன்
கைகளைக் கோர்த்துக் கொண்டு
புன்னகை சூடிக் கொண்டு
எதிர்ப்படுவோரின் ‘நல்ல மாலை’க்கு
மெல்லத் தலையசைத்து
நடந்து வருகிறேன்.

தேநீர் கடை
இன்னும்
எவ்வளவு தூரம்?