Saturday, September 01, 2007

செங்கோட்டுப் பயணம்.

"திருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி
திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள்
கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும்
கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!"
- கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள்.

மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம்.

விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல்.

கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது.

'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்று பிரித்தறிய முடியா வண்ணம், உடனே மின்சாரம் போனது. எங்கும் இருள் சூழ்ந்தது. மழை வெட்டித் தள்ளும் வாகனங்களின் ஒளி மட்டும் மினுக்கிக் கொண்டிருந்தது. பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் 'பட் பட்' என இழுத்து மூடப்பட்டன.

நேரம் நழுவிக் கொண்டிருந்தது.

9:31...

9:32...

பின் மெது,மெதுவாக நகரத் தொடங்கினோம். நானும் மற்றொரு நண்பரும் மீண்டும் நம்பிக்கை பெறத் தொடங்கினோம். அந்தப் புள்ளியைக் கடந்த பின் வேகமெடுத்த பேருந்து, கிண்டி நிறுத்தத்தில் நிற்கையில் மணி, 9:45.

அவசர, அவசரமாகப் பின்னோக்கி நடக்கத் தொடங்கினோம்.

சேறும், சகதியும் நம் உடையோடு சேரும் எண்ணத்தோடு சாலை முழுதும் பரவி இருந்தது.

பாஸ்ட் புட் பிரியாணிக் கடை...

சங்கீதா...

பெட்ரோல் பங்க்...

சாய்பாபா கோயிலின் பிரிவு...

மற்றோரு பெட்ரோல் பங்க்...

டாஸ்மாக் கடைச் சந்து..

அனைத்தையும் கடந்து, பயணச்சீட்டுக் கவுண்டர் முன் நின்று மணி பார்க்க...

9:52.

பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு, தாவிக் குதித்து, படிகளில் ஏறிப் பாய்ந்து, மேலேறி, கீழே குதித்து, நடைமேடையை அடைகையில்.. மணி..9:55.

இன்னும் அரை மணி நேரம் மட்டுமே..!

பெருமூச்சோடு வந்து நின்ற மின்சார இரயிலின் ஒரு பெட்டியில் அமர்ந்து, மணியைப் பார்த்துக் கொண்டே, ஸ்டேஷன்களை எண்ணிக் கொண்டே வந்தோம்.

சைதை...

மாம்பலம்..

கோடம்பாக்கம்..

நுங்கம்பாக்கம்...

சேத்துப்பட்டு...

எழும்பூர்...

பார்க்...

நிறுத்தியும் நில்லாமலும், நின்ற பின் இறங்கி, நடைமேடையைக் கடந்து சாலையில் இறங்க ஆயத்தமானால் மற்றுமொரு அதிர்வு.

ரோடெங்கும் சாக்கடை நீர் கரை புரண்டு ஓடுகின்றது. சாலையின் இருபுறமும் பிளாட்பாரக் கடைகள். ஓரமாக எங்கும் ஒதுங்கி நடக்கவே முடியாது. பார்த்தோம். 'இது ஆகிறதில்லை' என்று முடுவெடுத்து, இறங்கினோம்.

'சளக் புளக்' என்று மிதித்துக் கொண்டே, கிட்டத்தட்ட ஓடினோம். சாலையின் இறுதியை அடைந்து, சுரங்கப் பாதை வழி இறங்கி ஓடினோம். கடந்து, மறுபுறம் மேலேறி.. பிரியாணிக் கடையில் யார் மீதோ இடித்து விட்டு, யாரென்றும் பார்க்காமல் ஓடினோம்.

10:20.

மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த, ஆட்டோ ஸ்டேண்ட் தாண்டி, பார்க்கிங் பக்கத்தையும் தாண்டி விட்டு, டிக்கெட் கவுண்டரைக் கடந்து, நடை மேடை 6-ஐ அடைந்தோம்.

10:28.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் நீண்ட உடலைக் கிடத்தியிருந்தது. எஸ் - 5 கோச் இன்னும் 0.5 கி.மீ நடக்க வேண்டும் என்று தோன்றியதால், அவசர அவசரமாக நடந்தோம். பொதுப் பிரிவு, ஏ.ஸி. கோச், தன்டி எஸ் பிரிவுகளை அடைந்தோம்.

ஏறிக் கொண்ட பின் தான் மூச்சே வந்தது.

சரியான சீட்டை அடைந்து அமர்கையில்...

'கூ ஊஊஊஊஊஊஊஊ....'

ஒரு நீண்ட விசிலோடு நகரத் தொடங்கியது மின்வண்டி.

ஹிக்கின்பாதம்ஸில் ஏதும் புத்தகம் வாங்கவில்லையே என்ற குறையோடு, வேகமாக ஓடத் தொடங்கிய ஏற்காட்டின் வழியே பின்னுக்கு நகர்கின்ற சென்னையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன்.

மெல்லப் புலர்கின்ற அதிகாலை ஆறு மணி அளவில் சங்ககிரி நிறுத்தம்.



சங்ககிரி நிறுத்தம்.



பால்மடை ஈஸ்வரன் கோயில்.



பால்மடை நல்லபுள்ளி அம்மன் கோயில்.





காவல் தெய்வத்தின் புரவி வாகனங்கள்.


சப்த கன்னிமார்.



திருக்கோயிலின் அருகில் உள்ள வயற்காடுகள்.







திருவிளக்கு.


மலைக்கோயிலை நோக்கிப் நடைப்பயணம் தொடங்கியது.



ஆரம்பத்தில் காணும் சித்தர் மருத்துவ மடம்.



பாறைகளின் மேல் ஏறிச் செல்கின்ற படிக்கட்டுகளின் அணிவரிசை.



நாகராஜா.


பாதி வழியில் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில் பார்த்த நகரின் பறவைப் பார்வை.


பாறையில் பொறித்த பாம்புப் படம்.


'இதோ நெருங்கி விட்டோம்' என்று நம்பிக்கை ஊட்டுகின்ற இளைப்பறல் மண்டபங்கள்.


திருக்கோயிலின் ஒரு வாசல்.


மண்டபத்தின் சில தூண்கள்.






ஒற்றைக் கால் தவம் புரியும் பரசுராம முனிவர்.


திருக்கோயிலின் ஒரு வாயில் வழி.


ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் இருந்து கோயிலின் ஒரு பார்வை.


தென்னாடுடைய சிவனே போற்றி..!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

Friday, August 31, 2007

மழை பொழிந்த வானமும், மனதில் கிளர்ந்த கானமும்..!

..! யாரது இலைகளின் இடையில் எல்லாம் பனித்துளிகளைப் பதியன் போட்டு வைத்தது? மேனி முழுதும் தடவி, வழிந்து சென்ற மழைக் காதலனா? இல்லை, இரவு முழுதும் கூடிக் களித்து விட்டு, இறங்கிச் செல்கின்ற பனிப்பாடகனா?

இருளின் ஆடையில் சுமக்கின்ற எண்ணிலா துளைகள் வழி, எட்டிப் பார்க்கிறாள் இயற்கையன்னை! மோகனக் குயிலோசைகளும், மதுரமான ரீங்காரங்களும் அடங்கிய பின் அடர்ந்து எழுகின்ற, மோனக் கோலத்தைச் சூடியதில், அமைதியில் ஆழ்கின்றது, பெருங்காடு!

குளிரின் ஜதியோசையில் நனைகின்ற ஊதற்காற்று, மெதுவாய் வீசுகின்றது. துளித்துளியாய்த் திரள்கின்ற வெண்பனித்துகள்கள் நிரம்பிய இப்பெரும் இரவின் பேராடை முழுதும் பாலாடை போல் பரவி வழிகின்றது நிலவின் வெண்ணொளி..!

Sunday, August 26, 2007

படங்கள்.

சில முயற்சிகள், எம்.எஸ்.பெய்ண்ட்-ல்.

ஆற்றோர மரம். (வண்ணத்தில்.) :



மற்றுமொரு ஆற்றோர மரம். (இரவின் மயக்கத்தில்.) :



தாய் குழந்தைக்குப் பாலூட்டுகிறார் :



அட.. அதே படம் திருப்பிப் பார்க்கையில், சுகமாய்ப் படுத்திருக்கிறார் ஒருவர் :



ஒருவேளை இவர் அந்தக் குழந்தையின் தந்தையாக இருப்பாரோ..? அன்னையின் பொறுப்பை இரசிக்கிறார் போலும்..!