Thursday, November 28, 2013

ஆமென் - குளுமையில் ஒரு படம்.

ரோடு கதிர் அவர்கள் ஃபேஸ்புக்கில் ‘ஆமென்’ என்ற மலையாளப் படத்தைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னதன் பேரில், நேற்று இரவு அப்படத்தைத் தரவிறக்கிப் பார்த்தேன். ஃபகத் பாஸில், இந்த்ரஜித், ஸ்வாதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

கதை முழுதும் நீர்வளம் நிறைந்த ஒரு கேரளக் கிராமத்தில் நடக்கின்றது. சர்ச்சைச் சேர்ந்த பேண்ட் வாத்தியக் குழுவில் இருக்கும் ஸோலோமனுக்கும் செல்வந்த காண்ட்ராக்டர் குடும்பத்தின் ஷோஸன்னாவுக்கும் சிறு பிராயத்திலிருந்து முகிழ்ந்து வரும் அன்பு பருவத்தில் காதலாய்க் கனிந்து நிற்கின்றது. இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்ற கேள்விக்கு பதிலைப் படம் பார்த்து அல்லது விக்கியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

கதைக்களனில் நீல நீர் தளும்புகின்றது. குளிர்ந்த காயல்கள் மிதக்கின்ற ஆற்றுவழிகளில் பெளர்ணமி நிலவு அலையடிக்கின்றது. மெல்லிய க்ளாரினெட்டின் இனிமை சுமக்கும் இசை திரையிலிருந்து நழுவி வந்து வருடி விட்டுப் போகின்றது. வெண்ணிறச் சட்டை, வேட்டியில் தான் பெண்களும் நடமாடுகின்றனர். துல்லிய ஒளிப்பதிவு மிக அழகாகக் குமரன்கிரியைக் காட்டுகின்றது. சின்னச் சின்னப் புன்னகையூட்டும் காட்சிகள் படம் முழுக்க வருகின்றன.

செல்போன்கள் இல்லாத இப்படத்தை ஒரு கேரளக் கிறித்துவ கிராமத்து அனுபவத்திற்காகப் பார்க்கலாம்.

Wednesday, November 27, 2013

சர்வாதிகாரம் கூடாது - தனிப்பட்ட அனுபவம்.

ள்ளியில் படிக்கும் போது கிடைத்த ஓர் கருத்தை இப்போது மீண்டும் சிந்தித்துப் பார்க்கையில், சர்வாதிகாரம் அல்லது தனி மனித ஆட்சி என்பது இடையில் நிற்காமல் விளைவுகளின் விளிம்புகளில் கொண்டு சேர்க்கும் என்பதை உணர முடிந்தது.

தற்போது இருப்பதைப் போன்று ஊர்களை விட்டு விலகிய நீண்ட தார் நெடுஞ்சாலைகள் அப்போது அமைந்திருக்கவில்லை. மக்கள் புழங்கும் இடங்களுக்கு இடையே தான் தொலைதூரப் பேருந்துகளும் சென்று வர வேண்டும் என்பதால், அவை குறைந்த வேகத்திலேயே ஓட்டப்படும். எனவே, செய்தித்தாள்களில் வரும் விபத்துகளில் மிகப் பெரும்பாலும் லாரிகளே விபத்து உற்பத்திக்காரர்களாக இருப்பார்கள்.

‘லாரி - பஸ் நேருக்கு நேர் மோதல்’, ‘ட்ராக்டர் மீது லாரி ஏறியது’.

டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பள்ளிப் பேருந்துக்குக் காத்திருக்கும் நேரத்தில், கையில் கிடைக்கும் தினத்தந்தியின் மூன்றாம் நான்காம் பக்கங்கள் இப்படிப்பட்ட செய்திகளாலேயே நிறைந்திருக்கும். முதல் பக்கங்கள் அரசியல் பேசும். எனவே அவை அரசியல் பேசுபவர்கள் கைகளில் தான் எப்போதும் இருக்கும். நிறைய விபத்துச் செய்திகளைப் படித்துப் படித்து, உறுதிப்பட்ட ஒரு கருத்துக்கு வந்து சேர்ந்தேன் - ‘லாரிகள் தான் எல்லா விபத்துக்கும் காரணம். எனவே எல்லா லாரிகளையும் ஒழித்துக் கட்டினால் விபத்துகளே நேராது.’

பத்தாம் வகுப்புக் காலம். ஒரு நாள் காலை தினத்தந்தி ‘நாளை முதல் கால வரையற்ற லாரி ஸ்ட்ரைக்’ என்று முதல் பக்கத்தில் பருத்த எழுத்துகளில் அலறியது. பக்கத்திலேயே கசங்கிய கறுப்பு நிறத்தில் வரிசையாக லாரிகள் நின்றிருக்கும் ஒரு படம். அன்று சாயங்கால ட்யூஷனின் ரிலாக்ஸான நேரத்தில், இதைப் பற்றிப் பேசும் போது ‘இன்னும் கொஞ்ச நாளைக்கு ஏக்ஸிடெண்ட் எதுவும் இருக்காது. எப்பவுமே லாரி எதுவும் ஓடலைன்னா நல்லா இருக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

கேட்ட ஸார் ‘அப்படி கிடையாது. ரெண்டு நால் லாரி எதுவும் ஓடலைன்னா நீ காலையில டீ குடிக்க முடியாது. ஒரு வாரத்தில அரிசி கிடைக்காது. மொத்த சரக்குப் போக்குவரத்தும் லாரில தான் இருக்கு...’ என்று நிறைய சொன்னார். அப்போது தான் motel-க்கும் hotel-க்கும் வித்தியாசமும் தெரிந்தது.

அவர் சொல்லி முடிக்கையில் தான் லாரிகளின் இயக்கம் சமூகத்தின் தேவைகளுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது புரிந்தது.

ப்போது இப்படி எடுத்துக் கொள்வோம்.

ஒருவர் கையில் ஒரு சமூகத்தின் , ஒரு நாட்டின் மொத்த வாழ்வையும் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கின்றது. உச்ச அதிகாரம். அவருக்கு மேலே யாரும் இல்லை.

இப்போது அவரிடம் ஒரு கருத்து இருக்கின்றது. ‘லாரிகள் தான் அனைத்து விபத்துகளுக்கும் காரணம். எனவே லாரிகளைப் போக்குவரத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டால், விபத்தே நடக்காது.’ உடனே ‘ஓடிக் கொண்டிருக்கும் எல்லா லாரிகளையும் அப்படியே அங்கேயே ஓரம் கட்டுங்கள்’ என்று ஓர் ஆணை பிறப்பிக்கிறார். இப்படி ஓர் முடிவை அவர் சுயநலமாக எடுக்கவில்லை. மாறாக அவரைக் கேட்டால், ‘மக்கள் விபத்துகளிலிருந்து தப்பிக்கவே இப்படி ஓர் உத்தரவு’ என்பார். அவருக்கு அது ஒரு பொது நலம் சார்ந்த முடிவாகவே தென்படும்.

ஆனால் அம்முடிவால் ஏற்படும் விளைவுகள் எதிர்பாராத இடங்களில் எல்லாம், எதிர்பாராத கோணங்களில் இருந்தெல்லாம் வரும்.

இங்கே தவறு எங்கே நிகழ்கிறது? அவரிடம் இருக்கும் புரிதல் போதாமை.

அவரே உச்ச அதிகாரி. அவருக்கு அறிவுரை சொல்ல எவரும் இல்லை; சொன்னாலும் இவர் கேட்கக் கூடியவர் இல்லை, சொல்பவரை காலி செய்து விடுவார் என்றால் என்ன ஆகும்?

ஸ்டாலினின் சீர்திருத்தங்களையும், மாவோவின் கலாச்சாரப் புரட்சியையும், போல்பாட்டின் ‘விவசாயத்திற்குத் திரும்புவோம்’ படிக்கும் போதெல்லாம், லாரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.