Saturday, June 02, 2007

உன் குற்றமா.. என் குற்றமா..?


விறுவிறுவென குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. மலைமுகடுகளின் விளிம்புகள் எங்கும் கருமேகங்கள் குழாம் இட்டிருந்தன. மலையின் பின்புறம் மழை பெய்து கொண்டிருந்ததால், காற்றில் ஈரம் மிகுந்திருந்தது.

கோவை நகரின் இரைச்சலில் இருந்து விலகி நீலக் கார், ஊட்டி சாலையில் போய்க் கொண்டிருந்தது. லேசாகத் திறந்திருந்த ஜன்னலின் இடுக்குகள் வழியே பேரார்வத்துடன் குளிர் புகுந்து கொண்டிருந்தது.

"அருண்..! ஏஸியைக் கொஞ்சம் குறைச்சு வையுங்களேன். ஆஃப் பண்ணிட்டா பெட்டர்.." கழுத்து வரை ஸ்வெட்டரை இழுத்து விட்டுக் கொண்டு சொன்னாள் ரம்யா.

ரம்யா. இருபத்து மூன்று வயது மட்டுமே நிரம்பிய இளமை ஆப்பிள். வெடவெடக்கும் குளிரோடு, படபடக்கும் கண்களோடு, காண்பவர் உள்ளத்தை படபடக்கச் செய்யும், ஜில்ஜில் ஜிகர்தண்டா. இளங்கலை முடித்து விட்டு, முதுகலை வகுப்பில் சேரப் போனவளை, கல்லூரி முதல்வரே, 'நீயா.. முதுகலைக்கா.. ஸாரி.. குழந்தைகளை எல்லாம் முதுகலையில் சேர்ப்பதில்லை.." என்று சொல்லி விட்டதாகக் கேள்வி. அப்படியொரு குழந்தைத் தனமான முகம்.

ஸியை அணைத்து விட்டு, இன்னும் வேகத்தைக் கூட்டினான் அருண்.

"கொஞ்சம் ஸ்லோவாப் போங்க, அருண்.." என்றாள் ரம்யா.

"என்ன ரம்யா.. இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு மேரேஜ் ஆகப் போகுது. இன்னும் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறியே.. இந்த வேகம் எல்லாம் ரொம்ப கம்மி.. பைபாஸ்ல நான் போய் நீ பார்த்ததில்லையே.." என்றான் அருண்.

"ம்ம்ம்... எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான். அப்புறம் பாருங்க..." என்றாள் குறும்புச் சிரிப்போடு. அந்தச் சிரிப்பில் அருணும் கலந்து கொண்டான்.

"இருந்தாலும் நீங்க பண்றது சரியாப் படலை எனக்கு... க்ளைமேட் சரியில்லைனு அப்பா அவ்ளோ சொல்லியும், குன்னூர்ல இருக்கற உங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு அவசியம் இன்னிக்கு போகணுமா..?"

"என்ன ரம்யா.. இன்னும் சின்னக் குழந்தையாட்டமே பேசற.. கல்யணத்துக்கு முன்னாடி இருக்கற இந்த கேப்பில உன்கூட ஊர் சுத்தற த்ரில் இருக்கே... அதுக்காக தான் இப்படி.. ஏன், உனக்குப் பிடிக்கலையா..?"

"பிடிக்கலைனு இல்ல.. இருந்தாலும்..."

"மூச்... இனி இதைப் பத்தி பேசக் கூடாது.." குறும்பாக மிரட்டினான் அருண்.

"ஓ.கே.ஸார்.." பொய்ப் பயத்துடன் வாய் மேல் கை வைத்துக் கொண்டாள் ரம்யா.

சாலையின் வெறிச்சோடிய அமைதியை அவ்வப்போது கடந்த பேருந்துகள் கிழித்துச் சென்றன. பொட்டு, பொட்டாகத் தூறல் விழத் தொடங்கியது. வைப்பர்கள் விளையாட ஆரம்பித்தன.

"அருண்.. உள்ள ஒரே சைலண்டா இருக்கு. ஜன்னல் எல்லாம் வேற க்ளோஸ் பண்ணிட்டீங்க. ஏதாவது பாட்டு பாடுங்களேன்..."

"நான் பாடிடுவேன். ஆனா அப்புறம் நீதான் ரொம்ப கஷ்டப்படுவே. அவ்ளோ கர்ணகடூரமா இருக்கும்... கேளேன்...ஆ..ஆ..ஆ..."

"கவலையே படாதீங்க. மலையேறதால காது ரெண்டும் அடைக்க ஆரம்பிக்குது. அதை மறுபடியும் ஓபன் பண்ணத் தான் உங்களை பாடச் சொன்னேன். காதுகிட்ட வந்து யாராவது கத்தினா, காது அடைப்பு எல்லாம் சரியாயிடும் தான..." என்று சிரித்தாள் ரம்யா.

"அடிப் பாவி... சரி, நீ பாடு, கேட்கலாம்... எனக்கும் காது அடைக்கற மாதிரி இருக்கு.." என்றான் அருண்.

"ஐ... ஆசை தான். நான் பாட மாட்டேன். ஏதாவது கேசட் போடுங்க.. அதையாவது கேட்போம்.." என்றாள் ரம்யா.

டேஷ் போர்டைத் திறந்து தேடினான். கையில் கிடைத்த ஒரு கேஸட்டைப் ப்ளேயரில் கொடுத்து ஓடச் செய்தான்.

காதல் குரலில் எஸ்.பி.பி. பாடத் தொடங்கினார்.


Get Your Own Music Player at Music Plugin

ரம்யாவிற்குத் தூக்கிவாரிப்போட்டது. தலை சுற்றுவது போல் இருந்தது. அருணைப் பார்த்தாள். அவனது முகம் சற்றே இறுகிப் போகத் தொடங்கியது.

'சடாரென' காரை நிறுத்தினான். கார் கட்டுப்பாடு இல்லாமல், சுற்றியது. பின், அமைதியாகி நடுரோட்டில் நின்றது. ரம்யா அதிர்ந்து போனாள். அருணை ஏறிட்டாள்.

அருண் அமைதியாக ரம்யாவைப் பார்த்தான்.

"அருண்.. அருண்.. என்ன ஆச்சு உங்களுக்கு..?" அருண் தோளைப் பிடித்தாள்.

அமைதியாக, மிக அமைதியாக அவளைப் பார்த்த அருண்,"என்னை யார்னு தெரியலயா உனக்கு..?" என்று கேட்டான்.

வானம் வேகமாகக் கருத்துக் கொண்டிருந்தது. இருட்டான சவுக்குத் தோப்புகளின் மரங்கள் பேயாட்டம் ஆடின. மழை பெரிதாகப் பெய்யத் தொடங்கியது. வைப்பர்கள் வேகமாக இயங்கின. காரின் ஹெட்லைட்டின் கீற்றுகள் மழைக் கற்றைகளில் நனைந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் அரவமே இல்லை.

"அருண், என்ன பண்றீங்க..? விளையாடாதீங்க. எனக்குப் பயமாயிருக்கு..." என்று லேசாக கண்ணீர் விடத் தொடங்கினாள் ரம்யா.

வேகமாகப் பாய்ந்து, அவளின் தோள்களைப் பிடித்து, ரம்யாவின் கண்களையே பார்த்துக் கேட்டான் அருண்," நெஜமாவே என்னை யார்னு உனக்குத் தெரியலயா..? இந்தப் பாட்டைக் கேட்டும் ஞாபகம் வரலையா உனக்கு..?" என்று ப்ளேயரைப் பார்த்தான்.

கண்களில் குற்ற உணர்வு பாய, குரல் நடுங்கியவாறே, ரம்யா கூறினாள்,"ச..ந்...தோ...ஷ்..".

"ம்யா.. இங்க பாரேன்.."

"சந்தோஷ்.. எனக்கு பயமாயிருக்கு..?"

"என்ன பயம்..?"

"இப்படி.. தேர்ட் செமஸ்டர் ஃபைனல்க்கு படிக்கப் போறேன்ட்டு, மருதமலை படிக்கட்டுல உட்கார்ந்துட்டு இருக்கேன். பயமாயிருக்காதா..?"

"ரம்யா.. நீ என்ன சின்னக் குழந்தையா... அவனவன் லவ்வரைக் கூட்டிக்கிட்டு எங்கெல்லாமோ போறான். நான் உன்ன கோயிலுக்கு தான கூட்டிட்டு வந்திருக்கேன். முருகா, நீ தான் இவளை மாத்தணும்.."

"ஆமா, முருகனுக்கு இது தான் வேலை..கிட்ட வராதீங்க.. இதெல்லாம் அப்புறம் தான்.. அப்பு..."

"...."

"ஹேய்.. ரம்யா.. என்ன கெளம்பிட்டே.."

"நான் கிளம்பறேன்.. லேட்டாயிடுச்சு... வீட்டுல தேடுவாங்க... அப்புறம், இது கோயில். விட்டா அதை மறந்திடுவீங்க.."

"இரு., நானும் வரேன்.."

"ம்யா., காந்திபுரம் வர்றவரைக்கும் என்ன பண்றது..?"

"ம்ம்... எத்தனை லேம்ப்போஸ்டை க்ராஸ் பண்றோம்னு கணக்கு எடுக்கலாம். மருதமலைல எத்தனை மயில் பார்த்தோம்னு யோசிக்கலாம். போன வாரம் கீதாஞ்சலில படம் பார்க்கும் போது, எத்தனை தடவை நான் 'சும்மா இருங்க'னு சொன்னேனு யோசிக்கலாம். அதெல்லாம் விட.."

"விட..."

"'முருகா.. ரம்யாவும் நானும் எந்த பிரச்னையும் இல்லாம ஒண்ணு சேரணும்'னு வேண்டிக்கிட்டே வரலாம்.."

"ரம்யா.."

"ச்சீ.. என்ன இது பஸ்ல கண் கலங்கிட்டு..."

"ம்யாக் கண்ணு..! எங்கம்மா போய்ட்டு வர்ற..?"

"சுகன்யா வீட்டுக்குப்பா. எக்ஸாம்க்கு படிச்சிட்டு வர.."

"சாய்பாபா காலனி சுகன்யா வீட்டுக்கா..?"

"ஆமாப்பா.."

"அவங்க வீடு, காலனியில தான. மருதமலையில இல்லையே..?"

"அப்பா...."

"நம்ம பார்ட்னர் வீட்டுக்குப் போய்ட்டு வரும்போது, உன்னைக் கூட்டிட்டு வரலாம்னு அங்க போய்ட்டு தான் வந்தேன். நீ அங்க இல்லையேம்மா. அவளைக் கேட்டப்போ அவ எல்லாம் சொல்லிட்டா.."

"..."

"உன்னை எந்தளவு வளர்க்கணும்னு நெனச்சிருக்கேன் தெரியுமா? நீ இப்படி பண்ணலாமா..? இந்தப் பழக்கம் எல்லாம் வேணாம்மா. அப்பா சொல்றதக் கேளு..."

"அப்பா.. சந்தோஷ் ரொம்ப நல்லவர்பா.."

"எதுவும் பேசாத. இந்த டிகிரி முடிச்சதும் உனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை நம்ம பார்ட்னர் மகன் அருண் தான். லண்டன்ல மாஸ்டர் பண்ணிட்டு இருக்கான். அடுத்த வருஷம் படிப்பு முடிச்சிட்டு, நம்ம ஃபாக்டரில டைரக்டரா ஜாய்ன் பண்ணப் போறான். நாங்க முடிவு பண்ணிட்டோம். உனக்கு அவனை கல்யாணம் பண்ணி வைக்கிறதா. இந்த ஒன்றரை வருஷம் ஒழுங்கா படிச்சிட்டு வந்தயினா, உன்னை காலேஜுக்கு அனுப்பறேன். இல்லைனா, இன்னிலிருந்து நீ வீட்டுலயே இருக்கணும்.என்ன சொல்ற..?"

"இல்லப்பா.. நான் காலேஜுக்குப் போறேன்.."

'அப்பா.. சாரிப்பா. நீங்க என்ன நெனச்சாலும் எங்க காதலைப் பிரிக்க முடியாது.."

'ரம்யா.. நான் உன் அப்பாடா.. நீ என்ன நெனைக்கிறேன்னு எனக்குத் தெரியாதா.. அந்தப் பய கதையை முடிச்சிடறேன்.. அப்ப தான் நீ என் வழிக்கு வருவே..'

"ம்யா.. ரம்யா.."

"என்ன சுகன்யா.. ஏன் இவ்ளோ அவசரமா ஓடி வரே.."

"ரம்யா.. சந்தோஷ் கே.எம்.சி.ஹெச்.கிட்ட வரும்போது, கார் மோதி பெரிய ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. கே.எம்.சி.ஹெச்.க்கு தான் எடுத்திக்கிட்டு போயிருக்காங்க.. நீ உடனே போய்ப்பாரு... உன் பேரைச் சொல்லித் தான் முனகிட்டு இருக்கான்.."

"சந்தோஷ்..."

'வா பொன்மயிலே' என்று எங்கேயோ பாடிக் கொண்டிருந்த ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.

"சந்தோஷ்.. நான் தான் உங்க ரம்யா வந்திருக்கேன்.. கண்ணைத் திறந்து பாருங்க சந்தோஷ்.."

"ரம்யா.. வந்திட்டியா.. உன்ன பார்க்காம போய்டுவேனோனு பயந்துட்டு இருந்தேன்.."

"அப்படி எல்லாம் பேசாதீங்க சந்தோஷ்.. உங்களுக்கு ஒண்ணும் இல்ல.. நீங்க நல்லபடியா வந்திடுவீங்க பாருங்க.."

"பொய் சொல்ற... பொய்... பொ..."

"சந்தோஷ்..."

'திடுக்'கென தலையை உலுக்கிக் கொண்டாள் ரம்யா. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்தது, நேற்று நடந்தது போல் இருக்கிறது. சுற்றுமுற்றும் பார்த்தாள். இன்னும் பெரிதாக மழை பெய்து கொண்டிருந்தது. அருண் ஸ்டீயரிங் மீதே தலை வைத்து மயங்கியிருந்தான்.

ரம்யா அவசரமாக செல்போனை எடுத்தாள்.

"அப்பா. ரம்யா பேசறேன். இங்க குன்னூர் மெயின் ரோட்டில, அருண் திடீர்னு மயங்கிட்டார். ஆமாப்பா.. அஞ்சாவது பெண்ட்.."

"த்திங் டு ஒர்ரி, மிஸ்டர் ராஜகோபால். உங்க வருங்கால மாப்பிள்ளைக்கு கொஞ்சம் மூளைல சின்னப் பிராப்ளம். ஏதோ ஒரு நிகழ்ச்சி அவர் மனதை ரொம்ப பாதிச்சிருக்கு. அந்த நிகழ்ச்சிக்கும் நீங்க சொல்ற பாட்டுக்கும் ஏதோ நெருக்கமான தொடர்பு இருக்கணும். நோ பிராப்ளம். அதை ஈஸியாக் கண்டுபிடிச்சு சால்வ் பண்ணிடலாம். நீங்களும், உங்க பொண்ணும் நாளைக்கு வாங்க. அவர் வாயாலயே அந்த நிகழ்ச்சி என்னனு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்." என்றார் மனவியல் மருத்துவர் ரத்னம்.

"டாக்டர். என் பொண்ணும் கண்டிப்பா வரணுமா?" என்று கேட்டார் ராஜகோபால்.

"அஃப் கோர்ஸ். நாளைக்கு ஒண்ணா சேர்ந்து வாழப் போறவங்க. கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்." என்றார் டாக்டர்.

டாக்டர் ரத்னம் சில சிகிச்சைகளைக் கொடுத்து, கேள்விகளைக் கேட்டு முடித்தவுடன், அருண் பேசத் தொடங்கினான், மயக்க நிலையிலேயே.

"ன்றரை வருஷத்துக்கு முன்னாடி, ஒரு வெகேஷனுக்கு நான் ஊருக்கு வந்திருந்தேன். அப்ப ஒருநாள், காரை வேகமா ஓட்டிக்கிட்டு வரும் போது, கே.எம்.ஸி.ஹெச்.க்குப் பக்கத்தில ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. ஒருத்தன் மேல மோதிட்டேன். ஸ்பாட் டெத் ஆகியிருக்க வேண்டியவன். ஆனா அவனைத் தூக்கிட்டு போய், கே.எம்.ஸி.ஹெச்லயே சேர்த்துட்டேன். இருந்தாலும் போலிஸ், கேஸ்க்குப் பயந்திட்டு காருக்குள்ள போய் உட்கார்ந்துக்கிட்டேன். அவனோட சொந்தக்காரங்க யாராவது வந்தாங்கன்னா அவங்க கையில, கால்ல விழுந்தாவது நான் தப்பிச்சுக்கணும்னும், அவங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுத்துடலாம்னு அங்கயே இருந்தேன். அப்ப என் டென்ஷன் குறைவதற்கு எனக்குப் பிடித்த பாடலான இந்தப் பாடலைக் கேட்டுக்கிட்டு இருந்தேன். அப்புறம் எனக்குப் பயம் வந்திடுச்சு. ஸோ, ஸீன்லயே இருக்கக் கூடாதுனு காரை ஓட்டிட்டு வந்திட்டேன். அப்புறம் அந்த ஆள் செத்துட்டான்னு தெரிய வந்துச்சு. அதுக்கப்புறம் இந்தப் பாட்டை எப்பக் கேட்டாலும், அந்த ஆளோட ஆவி என்னை கேள்வி கேக்கற மாதிரியே தோண ஆரம்பிச்சுது. கொஞ்ச நாள்ல, அந்த ஆவி, எனக்குள்ளயே புகுந்துட்ட மாதிரியே ஆகிட்டது.

அன்னியில இருந்து இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் நான் நானா இருக்கறது இல்ல. அந்தா ஆவி தான் என்னை இயக்குது. அந்த ஆளாகவே மாறிடுறேன்.. என்னைக் காப்பாத்துங்க டாக்டர்.." என்று கூறி, அழுதான் அருண்.

'தடார்' என்று மயங்கி விழுந்தாள், ரம்யா.

Friday, June 01, 2007

மோகினி.

காலைப் பொழுது பொலபொலவெனப் புலரத் தொடங்கியது.

மேற்கின் மலைத் தொடர்களின் மேனியைத் தழுவி வந்து கொண்டிருந்த காற்று, மக்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தது. தீ வதந்தி நாலாபுறமும் பரவுவது போல், கருங்குயிலின் இனிய கூவலொசையோடு, வெண்புள்ளினங்கள், மைனாக்கள், சிட்டுக்குருவிகளின் கீச்சுகீச்சென்ற உச்சரிப்புகள் அங்குமிங்கும் தாறுமாறாய்க் கேட்டுக் கொண்டிருந்தன. குளிர்ந்த தென்றல் பட்டு, உறக்கத்திலிருந்த தென்னங்கீற்றுகள், தோட்டங்களின் ஆலமரங்களின் பச்சையிலைகள், பசுமை விளைந்திருந்த வயற்காடுகள் தலையாட்டி மகிழ்ந்தன.

தூண்கள் எங்கும் தீப்பந்தங்கள் ஏந்தியிருந்த திவான் அரண்மனை, சுறுசுறுப்பு அடையத் தொடங்கியது. பணி மாறிய வீரர்கள் தூக்கக் கலக்கத்தோடு கலைந்து செல்ல, புதிய வீரர்கள் புத்துணர்வோடு நிற்கத் தொடங்கினர்.அரண்மனையைச் சுற்றியிருந்த கோட்டை மதிற்சுவரின் மேல், கதிரவன் தன் தங்கக் கிரணங்களை வீசத் தொடங்கினான்.

அந்த அதிகாலை நேரத்திலும், முன்வளாகம் முழுதும் மக்கள் அடைத்தவண்ணம் இருந்தனர்.

"ஏம்பா, காலங்காத்தால நம்மளை எதுக்கு ராசா வரச் சொல்லோணும்..?"

"வேறென்னவா இருக்கப் போவுது? ஏதாவது பிரச்சனைனு சொல்லிட்டு நம்மகிட்ட இன்னும் ஏதாவது பணம் புடுங்க வரச் சொல்லியிருப்பான்.."

"இல்ல.. அவனோட எட்டாவது கல்யாணத்துக்கு நம்மளை எல்லாம் கூப்புட வரச் சொல்லியிருப்பானோ..?"

"இருக்கலாம். யாருக்குத் தெரியும்..? எப்ப வெள்ளைக்காரன் நம்ம நாட்டுல கால் எடுத்து வெச்சானோ, அப்பவே எல்லாம் வெளங்காமப் போச்சு.."

"உஷ்..! மகாராஜா வர்றார். ஏதாவது சொல்லி, அவன் காதுல விழுந்திடப் போகுது..."

வழக்கமான வாழ்த்துக்களோடு, திவான் ரங்கநாத பூபதி முற்றத்துக்குள் வந்தார்.

முடி முதல் அடி வரை இழைத்த தங்க நகைகள், தலையில் கிரீடம், வெண் பட்டு நூலால் நெய்த முன்னங்கி, முத்து மாலைகள், இடையில் தரித்த குறுவாள், உடலுகு முன்னே ஓர் அடி தள்ளி நகர்கின்ற தொப்பையுமாக திவான் உள்ளே வந்தார்.

அருகில் நின்று வணங்கிய கணக்கரைப் பார்த்து, "கணக்கரே..! தாங்கள் படிக்கலாம்.." என்றார்.

கணக்கர் படிக்கலானார்.

"நமது திவான் அவர்களின் நீதியும், நேர்மையும், நிறைந்த நல்லாட்சியின் கீழ் வாழ்கின்ற கொங்கு மண்டலத்தின் முப்பத்து இரண்டு பாளையக்காரர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்த ஆண்டுக்கான நிலவரி, தானிய வரி, ராஜ்ய வரி ஆகியன மும்மடங்கு உயர்த்தப் படுகின்றது. கோயமுத்தூரில் இருக்கும் ஆங்கில கவர்னர் அவர்களின் சீரான ஆலோசனையின் பேரிலும், நமது திவான் அவர்களின் கூர்மையான அறிவுத் திறமையின் காரணத்தாலும் இந்த விதி உடனே அமலுக்கு வருகின்றது. பாளையக்காரர்கள் இதனை நினைவில் கொண்டு, உடனே நிறைவேற்றித் தர வேண்டியது. மறுத்தால், அவர்களது பாளையம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆங்கிலேயர்களின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப் படுகின்றது.

மற்றுமொரு முக்கியச் செய்தி. சேர நாட்டைச் சேர்ந்த கோட்டயம் சம்ஸ்தானத்தின் இளைய அரசி, மாயாமோகினி அவர்கள் நமது தேசத்தின் கோயில்களைக் கண்டு களிக்க வருகிறார். அவர் ஆலய தரிசனம் செய்கையில், பெரும் வரவேற்பு கொடுக்க வேண்டியது அந்தந்த பாளையக்காரர்களின் நேரடிப் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

இது நமது திவான் அவர்களின் ஆணை..."

மக்கள் கூட்டம் முணுமுணுப்புடன் கலைந்து சென்றது. பாளையக் காரர்கள் அதிர்ச்சி நிரம்பிய கண்களுடன் சென்றனர்.

பாலக்காடு கணவாய் சில்லென்று இருந்தது. கேரளக் காற்றின் பாய்ச்சலால், வயலில் பூத்திருந்த நெற்கதிர்கள், புதுப் பெண்ணின் குரலுக்கெல்லாம் தலையாட்டும் கணவனாய் போதையில் தலையாட்டிக் கொண்டிருந்தன. மேகம் கலையாத வானின் விளிம்புகளை சூடாக்கிக் கொண்டிருந்தது பகல்.

கணவாய் வழியாக ஐம்பது குதிரை வீரர்கள், ஒரு பல்லக்கு, நுழைந்து கொண்டிருந்தனர். சாலையோரங்களில் இருந்த குடியானவ மக்களை ஒதுக்கி விட முன்னே சென்றனர் இரண்டு வீரர்கள்.

"அம்மணி.. யாராயிருக்கும் இது..?"

"அட.. ராசா சொன்னாராம்ல.. யாரோ இளவரசி வர்றாங்கன்னு.. அவங்களா இருக்குமோ, என்னவோ..?"

"யாராய் இருந்தால் என்ன? இவங்க வந்து நம்ம கோயில், குளமெல்லாம் சுத்திப் பாக்கறதுக்கு நாம காசு செலவு பண்ணனுமாமே..?"

"உஷ்..! சத்தமாப் பேசாதீங்க..! அவ காதுல விழுந்திடப் போகுது..!"

அடர்ந்த வனங்கள் நிறைந்த பாதை வழியெங்கும் பயணம் செய்து வந்திருந்த பல்லக்கு, மனித குரல்கள், கேட்டவுடன் தன் திரைகளை விலக்கியது.

திகாலையின் பனித்துகள்களை எல்லாம் உறிந்து, எடுத்துக் கொண்ட சூரியன் அவற்றையெல்லாம் கோர்த்து நெய்த ஆடையாலான வெள்ளைத் திரையை விலக்கியது, ஒரு பொற்கை. சந்தனக் கீற்று என்று சொல்லத்தக்க வகையில் இருந்த அக்கைகளை, வழி தெரியாமல் உள் நுழைந்த வண்டை மூடிக் கொண்டு காக்கின்ற பூவின் இதழ்களைப் போன்று, தங்க வளைகளும், வைரம், முத்து பதித்த மணியாரங்களும், அணைத்துக் கொண்டிருந்தன.

திரையின் இடுக்குகள் வழியே, ஒரு முகம் எட்டிப் பார்த்தது.

மேகத்திலிருந்து எட்டிப் பார்த்த முழுநிலா, மூங்கில் காட்டின் வண்டின் துளைகளில் காற்று புகுந்து வெளிப்படுகையில், பரவும் குழலோசை, கம்மென்று வீசும் மல்லிகை மணம், கருக்கல் நேரங்களில் கீழ்த்திசையில் சீறிப் பாய்கின்ற வெண்மின்னல் என்று எப்படி வேண்டுமானாலும், அப் பூமுகத்தை கூறலாம். கவிராயர்களும், விகடகவிகளும், பெரும்புலவர்களும், இலக்கிய சிங்கங்களும் இருந்திருப்பின் இவ்வாறெல்லாம் பாடியிருப்பார்கள். ஆனால் அங்கு இருந்ததோ, முகத்தில் கடுமையும், நெஞ்சில் வீரமும் கொண்ட வீரர்களும், உழைபே வாழ்வாகக் கொண்ட குடியானவர்களும் தான். அதனால், அக்குடியானவர்கள் அந்த அழகிய திருமுகத்தைக் கண்டு வாயடைத்துப் போயினர் என்று சுருக்கமாகநாம் கூறி விடுவோம். மேலும் விரித்துக் கூற, நாமொன்றும் கவிராயர்களோ, விகடகவிகளோ, பெரும்புலவர்களோ, இலக்கிய சிங்கங்களோ இல்லையே..!

கணவாய் வழியாகத் திவானின் அரணமனை நோக்கிச் செகையில் வழியில் உள்ள பாளையக்காரர்களின் பூரணகும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டு நகர்ந்து செல்கையில், அரண்மனைக்கு வந்து சேர்வதற்கு மாலை வந்து விட்டது.

திவான்,அவரது மனைவியர், மக்கள் யாவரும் திரண்டு வந்து வாசல் நின்று இளவரசியை வரவேற்றனர். இளவரசியின் பேரெழிலைக் கண்டு, திவான் வாயடைத்துப் போனார்.

ஆகா..! இப்பெண் இருபது ஆண்டுகள் முன் பிறந்திருக்கக் கூடாதா? நான் வயதாகியிருக்கும் போது தான் என் கண்ணில் பட வேண்டுமா? வயதானால் என்ன? என்னால் இவளை மணக்க முடியாதா? முடியும். இவள் இப்போது என் இராஜ்ஜியத்தில் இருக்கிறாள். என்னை மீறி என்ன செய்து விட முடியும் இவள்? பார்த்து விடுவோம்.

எண்ணங்கள் இவ்வாறு இருந்தாலும், முகத்தில் பவ்யம் வரவழைத்துக் கொண்டு, இளவரசியை எதிர் கொண்டார், திவான்.

"வரணும்.. வரணும்..! இளவரசி..! தங்கள் வருகையால், இந்த கொங்கு மண்டலமே இன்று பாக்கியம் எய்தது..!" என்றார்.

இளவரசி புன்னகை புரிந்தவாறே, பல்லக்கிலிருந்து இறங்கி, அவர்களை எதிர் கொண்டாள். மெல்லிய அல்லிக் கொடியொன்று, வீசும் மாலையின் இதமான காற்றுக்கு ஆடுவது போல், இளவரசி மென்னடை நடந்து வந்தாள்.

"ஐயா..! எனது அறை எதுவென்று கூறினால், சிரம பரிகாரம் செய்கிறேன். நாளை முதல் இத்தேசம் முழுதும் உள்ள ஆலயங்களை தரிசனம் செய்து வருவேன்.." என்றாள்.

"அம்மணி..! இவ்வரணமனையின் எப்பகுதியையும் தாங்கள் தங்களுடையதாகக் கருதலாம். எனினும், தங்கள் தனிமைக்காக, வடமேற்கில், உள்ள, விருந்தினர் மண்டபத்தைப் புதுப்பித்துள்ளோம். தாங்கள் அங்கேயே தங்கியிருக்கலாம். எனது பணியாளர்கள் தங்களுக்கு வழிகாட்டுவார்கள்.." என்றார் திவான்.

இள்வரசி, அவளுடைய தோழிகளுடன் திவான் கைகாட்டிய பணியாளர்களுடன் நகர்ந்தாள்.

பாவம், திவானின் உள்ளத்தின் போக்கை அறியாத இளவரசி, அரண்மனையின் பிரம்மாண்ட தூண்களையும், தகதகவென எரிகின்ற தீப்பந்தங்களையும் கண்டவாறு நடந்தாள்.

சிரிப்பாள்.

வாரத்தின் மறுகரை.

வெயிலில் புலரும் நீண்ட நிழலைப் போல் தெரிகிறது ஒரு வாரம்.

நெளிந்து நெளிந்து செல்கின்ற மலைப் பாம்பாய் மெதுவாய் நகர்கின்றன நாட்கள்.

கடும் இருள் பாறைகளின் நடுவே கசிகின்ற குளிர் நீர்த் துளிகளாய், அவ்வப்போது மட்டும் தெரிகின்ற மகிழ் நேரங்கள்.

என்னைப் பிடித்து உறிஞ்சுகின்றது ஐந்து கரங்களால் பெரும்பூதமாய் காலங்கள்.

உணர்ந்து விழித்தெழும் போதுகளில் தோன்றும் தொலைத்து விட்ட இனிய காலங்கள் என்று, தோன்றும் போது வீணாக்கிக் கொண்டிருக்கும் இந்நேரங்கள் என , விறிவிறுவென என்னுள் ஊடுறுவுகின்றன சில கேள்விகள்.

என்ன தவம் செய்தனை இந்நிலை எய்த என்று இறுமாப்பூதும் நிலையில், இருத்திருக்கவில்லை , முன்னொரு காலத்தில் கொண்டிருந்த பெரும்புகழ்.

ஒருகரை, மறுகரை என்று பயணித்துக் கொண்டிருக்கையில் , முன்னம் கடந்த நீர் இதுவல்ல என்று உணர்த்த நகர்ந்து கொண்டேஇருக்கின்றன, வாரத்தின் நாட்கள்.

Thursday, May 31, 2007

மாமா எங்க?

"மாப்ளை.. கதவத் தெறடி..யேய்.." வரும்போதே கடைக்குச் சென்று விட்டு வருகிறார் என்பது குரலிலிருந்தே தெரிந்தது. மாமாவுக்கு எப்போதும் இதே வேலையாகி விட்டது. கடைக்குப் போய் தண்ணியடித்து விட்டு நேராக எங்கள் வீட்டுக்குத் தான் வருவார். அவர் வீட்டுக்குப் போகவே மாட்டார். காலையில், சேவல் கூவி, நாங்கயெல்லாம் ஸ்கூலுக்குப் போன பின்னாடிதான் போவார்.

சொக்கலிங்கம் மாமா எங்களுக்கு கொஞ்சம் பக்கத்து மாமா. எங்க ஊருக்குப் பக்கத்து ஊருக்கு கிட்டக்க தான் அவருக்கு பொண்ணு எடுத்திருக்காப்ல. அதனால, ஆ.. ஊ..னா மாமியார் வீட்டுக்குப் போயாறேன்னு கெளம்பிடுவாக. ஆனா அங்க போகாம, எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. அப்பாகிட்ட பணம் வாங்கிட்டு போய் கடைக்குப் போய் தண்ணியடிச்சுட்டு எங்கயாவது போய்ட்டு, காலையில வீட்டுக்குப் போயிடுவாங்க. சிலசமயம் எங்க வீட்டுக்கும் வந்து படுத்துக்குவாங்க. அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுனாலும், ஒண்ணும் சொல்ல மாட்டார்.

வழக்கமா அமைதியா வருவாரு. மெதுவா கதவத் தட்டி, அம்மாவைக் கூப்பிடுவாரு. அம்மா வந்து அழும். 'ஏண்ணே, இப்படியெல்லாம் குடிச்சு ஒடம்ப கெடுத்துக்கறேனு' அழும். அங்க ஒரு பாசமலரே நடக்கும். அப்புறம் எங்ககூட வந்து படுத்துக்குவாரு.

சிலசமயம் ரொம்ப சத்தத்தோட வருவாரு. அப்படி வந்தாருனா, அவருக்கும் அத்தைக்கும் ஏதோ பெரிய பிரச்னைனு அர்த்தம். இன்னிக்கும் அப்படித் தான் வந்திருக்காரு. என்ன பிரச்னையோ?

த்தை சிவகாமி ரொம்ப நல்லவங்க. நாங்க ஊருக்கு எப்பப் போனாலும் ரொம்ப நல்லா கவனிச்சுக்குவாங்க. அண்ணனுக்கு ஆத்துல நீச்சல் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு அய்யனாரு தோட்டத்துல மாங்காப் பறிச்சுத் தந்தாங்க. ஏதாவது நோம்பினா அவ்ங்க வீட்டுக்குப் போனா, கெடா வெட்டிப் போடுவாங்க. அதுலயும் வரமொளகாயத் தூவி, எண்ணெயத் தடவி, வெயிலில் காய வெச்சு, நல்லெண்ணெயில வறுத்துக் குடுப்பாங்க பாருங்க, விரால் மீன் துண்டு.! சும்மா, ஜிவ்வுனு மணடையில காரம் ஏறும். கண்ணுல எல்லாம் தண்ணி வந்துடும். அப்புறம் ரெண்டு நாளு, எங்கெங்கெயோ எரியும்.

ஒருதபா நடந்தது நல்லா ஞாபகம் இருக்கு. அண்ணன் மட்டும் ஆத்துல எறங்குறான்னு நானும் தபார்னு ஆத்துல குதிச்சுட்டேன். கல்லு இருக்கும்னு நெனச்சு குதிச்ச எடத்துல ஒண்ணுமே இல்ல. கால ஊனிக்கலாம்னு கால கொண்டு போறேன். ஒண்ணுமே ஆம்படல. தண்ணி உள்ள இழுக்குது. சரேல்னு உள்ள போய்ட்டேன். ஆத்து மண்ணு காலுல் மட்டுப்படுது. சுத்தி சுத்திப் போடுது. ஒருசமயம் மேல வரேன். இன்னொரு சமயம் கீழ போறேன். சுத்திச் சுத்தி வரேன். கைய, கால ஒதறுறேன். நொர நொரயாத் தள்ளுது. வாயில, காதுல எல்லாம் தண்ணி பூந்திடுச்சு. ஒரே மண்ணு கெளறி, கண்ணுக்குள்ள எல்லாம், மண்ணு. கண்ணத் தெறக்கவே முடியல. சர்தான், சோலி முடிஞ்சுதுனு நெனச்சுட்டேன். பக்கத்துல ஏதோ இடிச்ச மாதிரி இருந்துச்சு. ஒரு பாற. அது முச்சூடும், பாசி. புடிக்கப் போனா, வழுக்கி, வழுக்கி வுடுது. போதாக்கொறைக்கு, ஆறு அது பக்கமா இழுக்க ஆரம்பிச்சுது. என்ன பண்றதுனே தெரியல.

யாரோ என் தலமயிரப் புடிச்சு இழுத்தாங்க. அவங்க கையைப் புடிக்க தண்ணிக்குள்ள தடவுறேன். படார்னு ஒரு அறை வுழுந்துச்சு. அவ்ளோதான் அப்படியே மயங்கிட்டேன். ஆனா அறையும் போது, கேட்ட வளையல் சத்தம், அந்த கை அத்தை கையினு சொல்லிடுச்சு.

நல்லவேளை அன்னிக்குப் பொழச்சதே, ஒம்பாடு, எம்பாடுனு ஆயிடுச்சு. தண்ணிய உறிஞ்சி, வைத்தியருகிட்ட கூட்டிட்டு போயி, பச்சில எல்லாம் கட்டி, ஒருவாரம் நல்லா கவனிச்சுகிட்டாங்க, அத்தை.

அப்படிப்பட்ட அத்த கூட ஏன் மாமா அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டு வர்றாருனு தெரியாம எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும். ஆருகிட்ட கேட்கறதுனு நானும் அமைதியா இருந்திடுவேன்.

மாமா வழக்கம் போல உள்ள வந்து எங்ககூட படுத்துக்கிட்டாங்க. எப்பவும் வந்ததும், ஒருபக்கமா திரும்பிப் படுப்பாங்க. கொஞ்ச நேரத்துல கொறட்ட விட்டு தூங்க ஆரம்பிச்சிடுவாங்க. இன்னிக்கு என்னவ்00 தெரியல, தூங்காம எங்களையே பாத்துக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் முழிச்சுக்கிட்டு தான் இருந்தோம்.

என்னை எடுத்து மடியில வெச்சுக்கிட்டாங்க.

"ஏண்டா சுந்தரம்..? ஒனக்கு கட்டிக்க எந்த மாதிரிடா பொண்ணு பாக்கறது..?" அண்ணனைக் கேட்டாரு.

மாமா தண்ணியடிக்காதப்போ, நல்ல மாதிரி எங்ககூட பேசுவாருங்கறதுனால, நாங்களும் அவருகிட்ட கொஞ்சம் நல்லாவே பேசுவோம். இந்த மாதிரி வெசனம் கெட்ட கேள்வியெல்லாம், எங்களுக்கு சகஜங்கறதுனால, எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்ல.

"மாமா..! நான் கட்டிகிட்டா நதியா மாதிரி இருக்கற பொண்ண தான் கட்டிக்குவேன்.."னான் அவன்.

கெக்கேபிக்கேனு மாமாவுக்கு ஒரே சிரிப்பு. " ஏண்டா, மூளையத்தவனே! அதுக்கெல்லாம் செவத்த மூஞ்சி இருக்கணும்டா..! ஒன்ன மாதிரி கருவா மூஞ்சிக்கு நதியா கேக்குதாடா..?" அண்ணன் மூஞ்சில செல்லமா குத்தினாரு. அவன் மூஞ்சி வாடிப் போச்சு.

"ஏண்டா சின்னவனே! ஒனக்கு..?"னு கேட்டாரு.

"மாமா..! நான் கட்டுனா சிவகாமி அத்த மாதிரி இருக்கற பொண்ண தான் கட்டுவேன்.."னேன். இப்ப அவரு மொகம் சுருண்டு போச்சு. என்னை அவர் மடியில இருந்து எறக்கி வெச்சிட்டு, போய்ப் படுத்துக்கிட்டாரு.

எனக்கு எதுவும் வெளங்கல.

"மாமா..! என்ன மாமா அதுவும் சொல்லாம, படுத்துக்கிட்டீங்க.."னு கேட்டேன்.

"டேய்..! உங்க அத்த நல்லவ. ஆனா அவள எனக்குப் புடிக்கல. உங்கப்பனும் அம்மாவும் தான் கட்டாயப் படுத்தி, எனக்கு அவள கட்டி வெச்சிட்டாங்க. உனக்குத் தெரியுமா..? நான் சாமியாரா போயிடலாம்னு இருந்தேன். கல்யாணம் பண்ணி வெச்சா நான் மாறிடுவேன்னு பண்ணி வெச்சாங்க. எதுக்கு நான் மாறணும்? நான் இப்படியே தான் இருப்பேன். நாளக்கு காலையில காசிக்கு திருட்டு ரயில் ஏறப் போறேன். அதுக்கு முன்னாடி உங்கள எல்லாம் பாத்துட்டு போகலாம்னு வந்தேன். உங்கள எல்லாம் பாத்தா எனக்கும் குடும்பம், புள்ள, குட்டிகனு நெனப்பு வந்துடும்னு பயம் இருந்தாலும், உங்கள பாக்காம போக மனசு வரல். அதான் இன்னிக்கு வந்திருக்கேன்."னு சொல்லிட்டு மாமா படுத்திட்டாரு.

எனக்கு பயமாகிடிச்சு. நானும் போய் அண்ணன் கூடயே படுத்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்திடுச்சு.

றுநா காலயில முழிச்சுப் பாத்தா, மாமா இல்ல. அவரு நேரமா போயிட்டாருனு அம்மா சொன்னாங்க. எனக்கு ஒண்ணும் ஞாபகம் இல்ல.

அத்த அழுதிட்டே வந்தாங்க. அவங்க பீரோ துணிகளுக்கு நடுவுல மாமா எழுதி வெச்சிருந்த கடுதாசி இருந்துச்சாம். அதுல எங்கயோ போறேன், தேடாதீங்கனு எழுதி வெச்சிருந்தாராம்.

என்கிட்ட எங்கயோ போறேனு சொன்னாரு. எங்கனு தான் ஞாபகம் வர மாட்டேங்குது. உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சா சொல்றீங்களா..?

தயவு செஞ்சு சொல்லுங்க. பாவம் எங்க அத்தை, இன்னும் அழுதுகிட்டே இருக்காங்க...

துணை நீயே.


ள்ளானா,
இல்லானா..?

இல்லாள்,
இல்லான்,

ஏதும்
அல்லான்,

ஒரு போதும்
பொய் சொல்லான்,

உள்ளே
சூது இல்லான்,

தீவழி
செல்லான்

உள்ளத்தில்
உள்ளானா,
இல்லானா..?

உருவு கொண்டானா,
அருவு என்றானா.

அருவிலிருந்து
கருவாகி,

கருவிலிருந்து
உருவாகி,

உருவிலிருந்து
எருவாகி,

எருவிலிருந்து
அருவானானா..?

ஒருபோதும்
முடியாத சக்கரமாய்
உருள்கின்ற நேரங்களில்,

ஒருநாளும்
அடையாத கதவுகள்
கொண்டவனா?

மனம் வெதும்பி,
மெளனம் பூசிக் கொள்ளும்
போதும்,

தினம் போராடும்
கணங்கள் நிறைந்து
கலங்கிடும் போதும்,

துணை நானே,
உனைக் காக்க,
நினை எனையே
என்பவனா...?

Sunday, May 27, 2007

அன்புடன் - படங்களும், படைப்புகளும்!

ன்புடன் இணையக் குழுமத்தின் இரண்டாம் ஆண்டுக்கான கவிதைப் போட்டிகள், இனிதாக நிறைவுற்று, முடிவுகளும் அறிவிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் கலந்து கொண்ட போட்டியின் முடிவுகள் அறிவிக்கப் பட்டு விட்டதால், நிபந்தனைகளுக்கு உடபட்டு, இப்போது அக் கவிதைகளை இப்பதிவில் இடுகிறேன்.

போட்டியில் வென்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

படம் 1 :



படைப்பு 1 :

ருளின் விரல்கள் நீண்டு
எடுத்துக் கொள்கிறது
ஒளியின் கைகளில்,
நிறைந்திருக்கும் நம்பிக்கை வெளிச்சத்தை!

இதயத்தின் இடுக்குகளிலிருந்து
எண்ணம் நீளுகிறது,
உன் இதமான புன்னகையின்
கதகதப்பைத் தேடி.

படம் 2 :
படைப்பு 2 :

ழையோடும்,
என் மனதோடும்
நான்
மகிழ்ந்திருந்த
பொழுதுகள் சொல்லவா?

முதல் நாள்
பள்ளியில் சேர்கையில்
பெய்த மழை
சீருடையில்
வழுக்கிச் சென்றதில்
ஈரமானது
உள்ளங்கை!

சபித்த
மழை நாளில்
நிறுத்தப்பட்ட
இறுதிப் போட்டியின் வலி
கண்கள் வழி
கசிந்ததை
உணர்வாயா..?

கைக்கெட்டா
கொய்யாக் கனிகளை,
வெயில் பெய்த
ஒரு
மதியத்தின் மழை
பறித்துக் கொடுத்ததை
அறிவாயா..?

வெள்ளமெனத் திரளும்
இருட்டில்,
மழைத்துளிகள் படிந்த
இரு இதழ்களின்
அருகாமையில்
இனித்தது
அந்த இரவு
என்பதை
புரிந்தாயா?

ஈரத்தில்
ஒட்டிப் போன இறகுகளோடு
கூண்டுக்குள்
இறந்து கிடந்த
குருவி கண்டு
திட்டிய
மழை நாள்,
நீ கண்டதுண்டா..?

வெயில் எழுதிய
வலி நிரம்பிய
எழுத்துக்களை
நெஞ்சில்
சுமந்து நடக்கும்
நீ அறிவாயா..?

எங்கள் மனம்
போல்,
விரிசல் கண்ட
நிலம் மேல்
நீ நடந்து
தேடுவது
பானை நீரா?
எங்கள் கண்ணீரா?
வருந்தாதே!
கிடைக்கலாம்
இரண்டும் எப்போதாவது!

எங்கள்
நீராதாரங்களும்
வற்றிப் போய்,
நாங்களும்
உன் போல் ஆகும் வரை
மை ஈரம் தீர்க்க
எழுதிக் கொண்டிருப்போம் உனக்காக,
உடைந்த பானையும்,
உடையாத நம்பிக்கைகளுமாய்
தேடிக் கொண்டேயிரு
ஈரத்தை,
நிலத்திலோ,
எங்கள் நெஞ்சத்திலோ..!


படம் 3 :



படைப்பு 3 :

செந்நிற
ஆடையினால்
கிழக்கில் ஆழி,
நனைகையில்
சொல்வோம்
செம்மொழிப்
புத்தாண்டு வாழி..!

செந்துணி விலக்கி
சிறுமுகம் காட்டும்
சிறுபெண்!
வந்தனை கூறி
வரவேற்போம்,
இன்னாளில்
வெறுப்பேன்?

வெட்கம் பூசிய
மஞ்சள் அடிக்கும்,
முகமெங்கும்
இந்திய வாடை!
அக்கம்பக்கம் பார்க்க
திரை விலக்கும்
துணிவு
இன்று
பெண்ணின் ஆடை..!

அலைகடல்
உள்ளிருந்து
எழும் கதிர் போல்,
அம்மா ஆடையின்
நிழல் தாண்டி
வரும் குழந்தை போல்,
வரும் சர்வஜித்து,
கவலைகள் களைந்து,
நோய்கள் நசிவுற்று,
கைபடும் நல்காரியம்
யாவும்
நன்றாய் நிறைவுற,
சுபமஸ்து...!

http://groups.google.com/group/anbudan