Friday, July 24, 2009

ஒரு ஹைக்கூ, உதித்த, கதை!!!


Oru_Haiku_Kathai.mp3 -

சுவாரஸ்ய சிக்ஸர்ஸ்.

வீனக் கவிஞர் அனுஜன்யா, என்னையும் 'சுவாரஸ்யப் பதிவர்களில்' ஒருவராக அடையாளம் காட்டியிருப்பது மகிழ்ச்சி கொடுக்கின்றது. அவரது கவிதைகளில் நிறைய புரியாமல் போனாலும், படித்து யோசிக்க வைப்பதில் சமர்த்தர். புரியாததற்கு நமக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வேண்டும் போலிருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு சமாதானப்படுவேன். அவர் சொல்லித்தான் 'Tongue in Cheek' தெரிய வந்தது. நன்றிகள் சார்.

நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.வின் தத்துவத்தைத் தலைகீழாக்கி, ஆளாளுக்குச் சண்டை போட்டு, 'ஊராய்யா இது?' என்று சொல்லிக் கொண்டிருந்த போது, 'இந்தாங்க விருது எடுத்துக்கோங்க!' என்று அன்புக்கரசு ஐ.ஏ.எஸுக்கு போல் எல்லோரும் கொடுத்துக் கொள்ள, தமிழ் வலைக்களம் கொஞ்சம் சாந்தாமாகியிருப்பதாகத் தெரிகின்றது. செந்தழலுக்கு நன்றி.

விருது பெற்றவர்கள், தாங்களும் ஆறு பேரைக் கூப்பிட்டுக் காட்டி விட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். ஒரே நிபந்தனை, அவர்கள் சுவாரஸ்யமாய் எழுதுகிறார்கள் என்று விருதினர் நம்பியிருக்க வேண்டும்.

எந்த அளவுகோலில் 'சுவாரஸ்யம்' என்று அளவிடுவது என்று யோசித்தால், ஒன்று தான் தோன்றியது. ஒரு பதிவை ரேண்டமாகப் படித்து, அது ஏற்படுத்திய ஈர்ப்பின் காரணமாக எழுதியவரின் அத்தனை பதிவுகளையும் அப்பவே படிக்கத் தூண்டியதானால் அவர்களை சுவாரஸ்ய கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.

அப்படி சிக்கியவர்கள் ::

அ. வெட்டிப்பயல்.



கி.பி.2006 மேயிலிருந்து எழுதி வரும் வெட்டிப்பயலின் எழுத்துக்களில் தெறிப்பவற்றில் முதலிடம், அமைதியான நகைச்சுவை. டெவில்ஸ் ஷோக்களில் கவுண்டர் கவுண்ட்டர் கொடுத்து ஓட வைப்பார். ஆர்த்தி கார்த்திக்கோடு நம்மையும் யோசிக்க வைப்பாள். கொல்ட்டிகளும் கோழியும் சிரிக்க வைப்பார்கள். அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரனின் அறிவுரையை சிரமேற்கொண்டு யாரையும் புண்படுத்தாமல் எழுத விரும்பும் வெட்டிப்பயலின் கோப முகம் 'சாரு நிவேதிதா' பற்றிய விவகாரத்தில் தெரிய வந்தது.

நல்ல சிறுகதைகளும் எழுதும் இவர், பெரும்பாலும் மென்பொருள் களத்திலேயே எழுதுவது போதாது என்று சொல்ல விரும்புகிறேன். சொல்லப்படாத தளங்கள் சுற்றிலும் கொட்டிக் கிடக்கின்றது. வெட்டிஜி என் கல்லூரி நண்பனின் அறைத்துணைவர் என்பது அறிந்து கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தாலும், மனதின் அடியில் கலக்கமும் ஏற்பட்டது.

'என்னென்ன சொல்லி இருப்பானோ..?'

ஆ. ஆர்.வி., பக்ஸ்.



இருவரும் நூவார்க்கில் செட்டிலாகி யுகங்கள் ஆனாலும் இன்னும் மண் மறக்காமல் 'அவார்டா கொடுக்கறாங்க' தளத்தில் 'கல்யாணப் பரிசு'க்கும், 'மந்திரிகுமாரி'க்கும் விமர்சனம் எழுதிக் கொண்டு, நாஸ்டால்ஜியாவில் நனைந்து கொள்கிறார்கள். படிக்கும் நமக்கும் ஜில்லென்றிருக்கின்றது. ஸ்ரீதர் பற்றி எழுதி எழுதி மாய்கிறார்கள். 'அட, போதும்பா!' என்று பிடித்து இழுத்தாலும், 'மாத்தேன் போ!' என்று அடம் பிடித்தார்கள். நாகேஷும் பெரிதாகப் பாதித்திருக்கிறார்.

மற்றொரு பதிவான 'கூட்டஞ்சோறில்', 'உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் திடீரென்று கொஞ்ச நாள் ஒன்றும் எழுதாமலும் இருப்போம்' என்று சலுகை கொடுக்கும் போது, 'நமக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் குறைவாய் இருந்தால் தான் என்ன?' என்று தோன்ற வைக்கும் அளவிற்கு எழுதிய ஜாதி, ஆரியர்கள், இட ஒதுக்கீடு பற்றியவற்றை விட, இலக்கியவாதிகள் மற்றும் புத்தகங்கள் பற்றிய பதிவுகள் எனக்கு முக்கியமாகப் படுகின்றன.

நிறைய தருகிறார்கள், சலிப்பைத் தவிர!

இ. லதானந்த்.



ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல்களில் பைத்தியமாய் மயங்கியிருந்த போது, அடிக்கடி 'ஃபாரஸ்ட் ரேஞ்சர்' வைத்து நிறைய கதைகள் படித்திருக்கிறேன். (சுபா இராணுவக் கதைகள் எழுதுவார்கள்). உண்மையான காட்டு அதிகாரி வாழ்க்கை எப்படி இருக்கும் என்று லதானந்த் சார் வலைப்பதிவைப் படித்து தெரிந்து கொள்ளலாம். (எல்லோரும் 'லதானந்த் மாமா' என்று அழைக்கிறார்கள். இவருக்கு ரெண்டு பசங்க தான். மாமானு கூப்பிட்டு என்ன ஆகப் போகின்றது? ஹூம்..!)

கொங்குத் தமிழில் புகுந்து விளையாடும் பதிவுகள் ரொம்பப் பிடிக்கும். அவ்வப்போது வெண்பாவும் எழுதுவார்; சென்னை மொழி பேசுவார்; சொல்லாமல் கொள்ளாமல் ரேஞ்சர் மாமா அவதாரம் எடுப்பார். பத்திரிக்கைகளில் கதைகள் எழுதுவார்; கடைசி வரியில் ஒரு பஞ்ச் வைப்பார். நண்பர்கள் கோவை வந்தால், அந்தப் பயணத்தை மறக்க முடியாத படி கவனிப்பார். ஆனால் என்ன எழுதினாலும் ரெண்டு விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். கிளுகிளு கமெண்ட் மற்றும் குளுகுளு படம்.

ரவி பிரகாஷ் சாரை அன்பாலே திணறடித்தார். அதற்குப் பின்னூட்டிய வெண்பா :

காட்டிலாகா ஆசாமி கண்போல் கவனிப்பார்.
ஊட்டிக்குச் செல்ல விருப்பமா? - மாட்டுஜெர்கின்.
கைவீசிப் போகலாம், கிஸ்ணா சுவீட்ஸின்மென்
மைசூர்பாக் கும்கிடைக்கும், உண்.

ஈ. டுபுக்கு.



நெல்லைச் சீமையிலிருந்து ஒரிஜினல் சீமைக்கே போய் கலக்கும் டுபுக்கு சாரின் பதிவுகள் படிக்காமல் நகைச்சுவை முயற்சி செய்வது, வீண். நான் வலைப்பதியத் துவங்கிய புதிதில் இவரது பதிவுகள் ஓர் ஊக்கி. காமெடியில் அடி பின்னியெடுக்கும் அட்டகாசப் பதிவுகள் படைக்கும் டுபுக்கு சார், தேன்கூடு போட்டிக்கு எழுதிய ஒரு கதை, அவரது மறு திறமையைக் காட்டி மிரள வைத்தது. வசனமே இல்லாத ஒரு குறும்படம் எடுத்தார். சிறுகதைகள் துல்லியமாக எழுதுவார். டூர் சென்று வந்ததை விவரிப்பார். பாம் ப்ளாஸ்ட்டில் இருந்து தப்பியதை பயமேயின்றி விவரிப்பார்.

எதைக் குறிப்பாகச் சொல்வது என்று தெரியாத அளவிற்கு ரகவாரியாக கில்லியாடும் டுபுக்கு சார், சுவாரஸ்யர் என்று சொன்னால் மறுப்பவர் யாருமிருக்க மாட்டார். அவரது பதிவிலேயே ஒரு லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார். பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.

உ. சந்தை நிலவரம்.



வழக்கமாகப் பொருளாதாரம் தொடர்பான செய்திகள் படிப்பது நியூரான் பிரதேசத்தை கிறுகிறுக்க வைத்து, 'நமீதா வாந்தி எடுத்தாங்களாமே?' என்று வேறு தெருவுக்குத் தாவச் செய்து விடும். மும்பையிலிருந்து எழுதும் இவர், சுலபமாக முகம் மறைத்துக் கொண்டு சந்தை நிலவரங்களை அழகாக எழுதுவதில் புரிகின்றது. மட்டுமின்றி, மும்பை வெள்ளம், தாஜ் தாக்குதல் போன்ற நகர நிகழ்வுகளில் உள்ளூரியாக தன் கருத்துக்களை வைத்தும், அதே சமயம் ஊடகங்களில் சொல்லாத செய்திகளையும் சொன்னார்.

பொதுவாக உலர் விஷயமாக இருந்தாலும், ஏனோ எனக்குப் படிக்கப் பிடித்திருக்கின்றது.

ஊ. வானவில் வீதி - கார்த்திக்.



மிக புத்துணர்வாக எதையாவது படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், வலிமையாக நான் கார்த்திக்கை சிபாரிசிப்பேன். குறைவாகத் தான் எழுதியிருக்கிறார். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் இன்னஸன்ஸ் மினுக்கும் அத்தனை இளமையாகத் தெரியும் பளிச் வார்த்தைகள் & context. ஒரு ஜிலீர் போதை உள்ளிருக்கும் எழுத்துக்கள். படித்துக் கொண்டே எழுதுவதைத் தொடர்ந்தால், கார்த்திக் விரைவில் பெருமளவில் விரும்பப்படும் ஒரு ரைட்டராவார்.

விரவும் இன்னும் நிறையர் கவரும் விதத்தில் எழுதுகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பலருக்கும் தெரிந்தவர்களாய் இருப்பதால் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியானது.

ஒரே ஒரு வரி சொல்ல முடியும். எதையும் எழுதி முடித்தவுடன் ஒரு முறை படியுங்கள். உங்களுக்கு முதலில் பிடித்திருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் CtrlA DEL தான். இரக்கமே கூடாது. உங்களுக்கே பிடிக்கும் வரை திருத்த வேண்டியது தான். எழுதுவது குறைந்தது ஒருவராவது ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எழுதும் நீங்களாவது! ஒன்பது வரிகள் ஆகி விட்டன..!!

நன்றிகள். பதினொரு வரிகள்.....!!!!!

Wednesday, July 22, 2009

நானும் எழுதுகிறேன் 10!



ப்போது பத்து விஷயங்களை எழுதுவது தான் தமிழ் வலைக்களத்தில் பிரசித்தி பெற்றிருக்கின்றதாகத் தெரிகின்றது. எனவே நானும் ஒரு பத்து எழுதுகிறேன்.

ஆங்கில எழுத்தாளர் Alex Keegan இளம் புனைவு எழுத்தாளர்களுக்குச் சொல்லும் பத்து ஆலோசனைகள்.

a. நீங்கள் எழுத விரும்பும் கதையின் ஆதாரக் கருத்து உங்களை ஏதேனும் செய்திருக்க வேண்டும். கோபப்பட, வருத்தப்பட, ஊக்கப்பட இப்படி எதுவும் செய்யாதவற்றை தொட வேண்டாம். தேய்வழக்குகளையோ, உங்களுக்கே சலிப்பேற்படுத்துவதையோ எழுதவே வேண்டாம். அஸிமோவையோ, ஷாண்ட்லியரையோ மீண்டும் எழுத முயலாதீர்கள். நீங்களாகவே எழுதுங்கள். உங்களது மில்லியன் வார்த்தைகளை எழுதுகையில், எவரையும் போல் எழுத வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் சுயமானவர். உங்கள் உண்மையாக எழுதுங்கள்.

b. உங்களை நான் நம்ப வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், படம் வரைந்து காட்டுங்கள். வர்ணிப்புகள் இல்லாமல் என்னை வலி உணரச் செய்யுங்கள். எல்லோரும் சொல்லிய, 'சொல்லாதே; காட்டு' என்பதை புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்ளும் வரை செப்பனிடுங்கள்.

c. கதைத் தளத்தை மறங்கள். கதாபாத்திரங்களை நினையுங்கள். அவர்கள் கதைத் தளத்தை நிர்ணயித்துக் கொள்ளட்டும். இளம் எழுத்தாளர்கள் முதலில் தடுமாறுவது இங்கே தான். அவர்கள் முதலில் கதையின் வகையை முடிவு செய்து கொண்டு (உதா : நான் காபி குடித்து விட்டு, அறிவியல் புனைகதை எழுதப் போகிறேன்!) ஆரம்பிக்கிறார்கள். அது வேண்டாம். படிப்பவர்கள் நம் பாத்திரங்களையும், சூழல்களையும், உணர்ச்சிகளையும் தான் நினைவில் வைத்துக் கொள்கிறார்களே தவிர்த்து, கதை சரித்திரமா, பேய்க்கதையா என்பது பற்றி அல்ல; பாத்திரங்களை உருவாக்குங்கள்; அவர்களை எங்காவது சிக்க வையுங்கள்; அவர்கள் தாமாக வெளிவரட்டும்.

d. உங்கள் மொழிப்பிரயோகம், நடை மற்றும் கவித்துவம் ஆகியவற்றில் கவனம் வையுங்கள். மிகவும் சுவாரஸ்யமற்று எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்; தமக்கான பிரமாத நடையில் நம்மை மயக்கிச் சுழல வைப்பவர்களும் இருக்கிறார்கள். வார்த்தைகளை ரம்மியமாகவும், கவித்துவ கலாப்பூர்வமாகவும் கையாளப் பழக்கப்படுத்திக் கொள்வது உங்களை தனித்துக் காட்டும்.

e. ஒரு சிறந்த உரையாடல் என்பது உண்மையான பேச்சு போல் இல்லாமல், ஆனால் தினப்படி சம்பாஷணை போன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தும். அதை கற்றுக் கொள்ளுங்கள். சிறந்த உரையாடல் எழுத்தாளர்களைப் படியுங்கள். நான் Elmore Leonard சிபாரிசிக்கிறேன்.

f. இப்போது ஒரு பழைய அறிவுரை. ஒரு நாவலை எழுதுவதற்கு முன் குறைந்தது ஐம்பது சிறுகதைகளாவது எழுதி விடுங்கள்; பரிட்சை செய்யுங்கள்; சிறந்த கதைகளை அல்லது ஒரு நாவலின் துவக்க வரிகளை மாற்றி எழுதிப் பாருங்கள்; கவிதைகள் எழுத முடிகிறதா என்று சோதியுங்கள்; சிறுசிறுகதைகளை முயலுங்கள்; வார்த்தை எல்லைகளுக்குள் ஒரு கதை முடிக்க முடிகின்றதா என்று வெட்டுங்கள். இதெல்லாம் எதற்காகவெனில், தெரிந்தவற்றை எரித்து விடுவதற்கும், பொதுக் களங்களைக் கழற்றி விடவும், கிட்டத்தட்ட சுயசரிதையாக கதை சொல்லும் ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளவும் தான் (நிறைய சிறுகதைகள் எழுதுவது இவற்றிற்குத் தான்!). பலன், நீங்கள் நிறையக் கற்றுக் கொள்வீர்கள் மற்றும் இன்னும் மதிப்புள்ளதாக உங்களிடமிருந்து கதைகள் வெளிப்படும்.

g. வாழ்வைச் சொல்லும் கதைகளைச் சொல்லுங்கள். 'எழுத்தாளர்' போல் சொல்ல முயல வேண்டாம். நேர்மையாக எழுதுவது போதும். (Try to tell stories that illuminate life: be honest. Don't try to "be a writer," because that's the quickest way to dreadful purple prose and pretentiousness. )

h. படியுங்கள்; படியுங்கள்; படியுங்கள்; படியுங்கள்; மற்றும் எழுதுங்கள்; எழுதுங்கள்; எழுதுங்கள்; ஆனால் பிறகு அவற்றை வெளியிட மறக்காதீர்கள். மீண்டும் மீண்டும் திருத்தி வெளியிடுவது என்பது எழுத்தாளர் ஆவதற்கான ஒரு முக்கிய செயற்பாடு. படிப்பதற்காகத் தான் எழுதுகிறீர்கள். யாரும் படிக்கத் தேவையில்லை என்பது உங்கள் எண்ணமாக இருக்குமானால், எழுதுவதை நிறுத்தி விட்டு, எழுந்து செல்லுங்கள்; வேறு ஏதேனும் செய்யுங்கள். வேறு யாராவது படிப்பது என்றால், அவை வெளியிடப்பட வேண்டும்; பிரசுரிகப்பட வேண்டும். பிரசுரிக்கப்பட வேண்டும் எனில் நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள்; பத்து முறை, நூறு முறை ஏன் ஆயிரம் தடவைகளும்!

i. புறக்கணிக்கப்படுவதற்கு தயாராக இருங்கள். எடுத்தவுடனே நியூயார்க்கருக்கு குறி வைக்காதீர்கள். அதற்காக ஓர் அற்புத படைப்பை நாலாந்தர பத்திரிக்கைக்கும் தந்து விடாதீர்கள். சந்தையைப் புரிந்து கொள்ளுங்கள் (அதாவது பத்திரிக்கைகளை!) நீங்கள் எந்த பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதைத் தொடர்ந்து படித்து, கவனித்து எழுதிய கதை அதற்கு ஏற்றது தானா என்று அலசி அனுப்புங்கள்.

j. இறுதியாக, நீங்கள் நினைத்ததை எழுதுங்கள். பின்வாங்க வேண்டாம். எழுதுவது என்பது அப்படியொன்றும் சுலபமான வேலை இல்லை என்றாலும், நீங்கள் பாதி எழுதினாலும் அதில் உங்கள் உழைப்பு இருக்கின்றது. வீரமாய் உணருங்கள். எழுத்தாளர்கள் வீரர்கள்.

நன்றி அலெக்ஸ் கீகன் Sir..!

Monday, July 20, 2009

மொக்ஸ் - 20.Jul.2K9

வீனக் கவிஞர் அனுஜன்யா, தனக்குப் பிடித்த சுவாரஸ்யமான பதிவர்கள் அறுவரில் ஒருவராக இந்தப் பதிவையும் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இது போன்ற சந்தோஷங்கள் அவ்வப்போது கிடைத்துக் கொண்டிருப்பது, தொடர்ந்து இயங்குவதற்கான எரிபொருளை ஊற்றுகின்றது. அனுஜன்யாவிற்கு நன்றிகள். இன்று தான் பாராட்டைக் கண்டதால், அடுத்த பதிவில் எனக்கு சுவாரஸ்யமான பதிவர்களை எழுதுகிறேன்.

நன்றி அனுஜன்யா சார்.

சென்ற வார இறுதியில் ஊருக்கு ஒரே ஒரு வேலைக்காக மட்டும் போயிருந்தேன். ஒரு நெருங்கிய நண்பரின் பாட்டி, தன் படைப்பாளியிடம் சென்று சேர்ந்து விட்டார். அவனைக் காணச் சென்றேன்.

ஒரு மரணம் ஏற்படுத்தும் வெற்றிடம் என்பது எதனாலும் நிரப்பப்பட முடியாதது. அது நாம் வரைந்து வைத்திருக்கும் ஒரு வரைபடத்திலிருந்து, ஒரு பங்கை உருவிச் சென்று விடுகின்றது. அந்த வெட்டப்பட்ட பகுதி, மனவெளியில் என்றுமே காலியாகவே இருக்கும். இராக்காலக் குளிர்க் கனவுகளில் அவர்கள் பிம்பங்களாக நடக்கையில், அதிர்ந்து விழிக்கும் போது 'எது கனவு? இதுவா? அதுவா?' என்ற குழப்பம் மிகப் பிரகாசமாய் அடியில் தேங்குகின்றது. நேற்று வரை நம்மோடு உடலும், குரலுமாய் உரையாடிய ஜீவன் இன்று வெறும் நினைவுகளாய் உறைந்து, நம் வாழ்நாளெங்கும் விலகாத துயரத்தைத் தந்து விட்டு மறைவது, வாழ்க்கை பற்றி அதுவரை நாம் கொண்டிருக்கும் சமன்பாடுகளை அசைத்துப் போடுகின்றது. 'One's presence is felt in its absence' என்பதை அத்தனை அழுத்தமாகப் பதித்து விட்டுச் செல்லும் ஒரு துக்கம்.

அவரது வீட்டிற்கு அதிகபட்சம் இருபது முறைகளுக்கு குறைவாகத் தான் சென்றிருப்பேன். எனக்கே பாட்டி இல்லாத, அவரது வரவேற்புச் சத்தங்கள் இல்லாத தன்மை வெகுவாக உனரப்பட்டதெனில், நண்பரை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியவில்லை. மெளனம் சூழ்ந்த அந்த வீடு என்னை மூச்சுத் திணறச் செய்தது.

கொல்லைப்புறத்தில் ஒரு வேப்பமரம் நின்று கொண்டிருந்தது. அதன் அடியில் ஒரு நாடாக் கட்டில். சகடைச் சுற்றிய ஒரு கிணறு. மாலை வேகமாக மங்கிக் கொண்டு வந்தது. இருவரும் பேசத் துவங்கி விட்டோம். ஆனாலும் அந்த துக்கத்தைத் தொடுவதற்கு எங்களுக்கு பயமான தயக்கம் இருந்தது. அதைப் பற்றிப் பேசாமல் தாண்டிச் சென்று விடும் அவசரத்தில் ஏதேதோ பேசினோம். ஈரோடு நூல் அழகம், படித்த புத்தகங்கள், செய்த பயணம் என்றெல்லாம் போய்க் கொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக இருள் தின்ற வானம் கிழக்கிலிருந்து கடுகித் துரத்திக் கொண்டு வந்த போது, எங்களைச் சுற்றி கொசுக்கள் திரண்டன. வேம்பு காற்றின்றி மெளனித்து நின்றது. தப்பிக்க, வீட்டு முன்னறைக்குச் சென்றோம்.

ஒற்றைத் திரியில் மெல்லிய சுடர் தத்தளித்துக் கொண்டிருந்தது. லாந்தர் விளக்கின் பாதாள வாய்க்குள்ளிருந்து மஞ்சள் தீ நடுங்கியது. அருகில் மடித்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பச்சைப் புடவை எங்கள் முகமூடிகளைத் திறந்து விட்டது. மெல்ல, மெல்ல இறப்பின் கணங்கள், அந்த உறவு ஏற்படுத்திய சலனங்கள்.... அதன் இல்லாமையால் துயரத்தின் முட்கரங்கள் பிசையும் கண்கள் ஊறிக் கொண்டேயிருந்தன.

ஒரு சோகத்திலிருந்து கொஞ்சமாவது விடுபட, அதை விட அதிக வலி கொண்டவரை எண்ணிப் பார்த்தல் ஒரு கொடூர முறை. இதுவரை யாரிடமும் சொல்லியிராத சில கதைகளை நடுங்கும் குரலில் சொன்னேன்.

நான்கு மணிநேரங்களுக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்து விட்டு, விலகும் போது, Ezra Poundன் ஒரு கவிதையைச் சொல்லி அர்த்தத்தை நினைத்தோம்.

And the days are not full enough
And the nights are not full enough
And life slips by like a field mouse
Not shaking the grass .

நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

சில வெண்பாக்கள், வெண்பா எழுதலாம் வாங்க பதிவில் எழுதியதிலிருந்து!

'காண வருமாங் கனி' என்ற ஈற்றடிக்காக (கடைசி வரி) ::

மதுவிறைக்கும் தேகம்நீ! மாலைவான மஞ்சள்
அதுயெரிக்கும் மேகம்நீ! ஆழ - வதுவையில்நீ
நாணங் களையும் முதலிராவைக் கண்கொண்டு
காண வருமாங் கனி!

முதலிரவில் யாரும் தீண்டாமல் டேபிள் மேல் ஊதுபத்தி சாம்பல்களோடு இருக்கும் பழங்களைச் சொல்கிறாராம்! வதுவை - புணர்தல்.

'சொல்லே மிகவும் சுடும்!' என்ற ஈற்றடிக்காக ::

தீதேநான் செய்தது! திட்டிவிட்டுப் போ!நீயென்
மீதேபி ழைசொன்னால் ஏற்கிறேன். - ஏதேனும்
சொல்லாமல் நீவுதிர்த்துச் செல்லும் மவுனமெனும்
சொல்லே மிகவும் சுடும்.

'வானம்' என்ற கருத்தை வைத்து எழுதச் சொன்ன போது ::

தீராத நீலச்சூள்! தீயாத சோதிக்கல்!
தூராத மேகப்பால்! தூரத்தின் - வாராத
விண்மீன்கள்! பூப்பொறி மின்னும் புதுவர்ணம்
கண்நிறையக் காட்டிடும் வான்!

தற்போது ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதற்காக எழுதியது ::

இங்கிதம் இன்றி இயற்கை அழைத்திட
லுங்கியை தூக்கிச் சுவற்றிலே - அங்கிங்கே
கோடுபோட்டு ஒண்ணுக் கடித்திட்டால், வல்லரசு
நாடு மணக்குமா சொல்.

வார இறுதிப் பயணத்திற்காக சுந்தரிடமிருந்து மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு படித்தேன்.

அ. மதி - கார்ட்டூன்கள்.

கிழக்குப் பதிப்பகத்தின் நூலான இதில் மதியின் கார்ட்டூன்கள் பக்கத்திற்கொன்றாகப் பதிப்பித்துள்ளனர். உண்மையில் எல்லா நகைக்குற்றோவியங்களும் சிரிக்க வைக்கவில்லை. சில பெரும் சிரிப்பை ஏற்படுத்தின.

இது போன்ற தொகுப்பு நூல்களில் ஏற்படுகின்ற சிக்கல், படைப்பாளியின் பொதுவான டெம்ப்ளேட் புலப்பட்டு விடுவது தான். பிறகு அது திகட்டும் அளவிற்கு நம்மைக் கொண்டு சேர்த்து விடுகின்றது. இதனால் தொடர்ந்து வரும் படைப்புகளை ரசிக்க முடியாமல் சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. உதாரணமாக அரசியல்வாதி பற்றிய நகைக்குற்றோவியங்களில் பெரும்பாலும் அவரது மனைவியைக் கொண்டு வந்து விடுகிறார், மதி. இது எளிதில் நமக்கு போரடித்து விடுகின்றது.

தப்பிக்க என்ன வழி? மிக மிக வேறுபட்ட, பலதர தளங்களில் தம் படைப்பைக் கொன்டு வருதல் தான். மதன் இதற்கு நல்ல உதாரணம். சிரிப்புத்திருடன் சிங்கார வேலு, ரெட்டை வால் ரெங்குடு, புரோக்கர் புண்ணியகோடி போன்ற பல பாத்திரங்களை விகடனில் உருட்டி விட்டிருக்கிறார். மதனுக்கு கிடைத்த வாய்ப்புகள் தினப்பத்திரிக்கையில் மதிக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். தொகுப்பு அமைப்பவர்கள் இதனையும் கருத்தில் வைத்துக் கொள்வது நலம்.

நகைக் குற்றோவியங்கள் வரைய மூன்று திறமைகள் தேவைப்படுகின்றன என்கிறார். ஓவியம் வரையும் திறன், சமூக நிலைமைகளையும், நிகழ்வுகளையும் கூர்மையாக கவனித்தல் மற்றும் நகைச்சுவை ரசனை. முதல் இரண்டையும் எப்படியாவது படித்து தேர்ந்து விடலாம் என்றும், மூன்றாவது உங்களுக்கு இயல்பிலேயே இருக்க வேண்டும் என்கிறார்.

அதுதானே கடினம்.

ஆ. ஸ்ரீமான் சுதர்சனம் - தேவன்.

தேவனின் இனிமையான ஒரு குடும்ப நாவல் இது. ஆபீஸ் அரசியல்கள், குடும்பத்தில் உறவினர்களால் வரும் தொல்லைகள், என்ற இரண்டு வகை பிரச்னைகளால் தடுமாறும் சுதர்சனம் அலுவலகத்தில் நான்கு முறை கையாடுகிறான். அவனது அழகான கோமளா மனைவியுடன் அவன் சமாளிப்பது மிக எளிமையான நகைச்சுவைகளாக சொல்லப்பட்டிருக்கின்றது. முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தேவன் கொடுத்திருக்கும் தலைப்புகள் இன்னும் அழகு.

இ. அம்பலம் கட்டுரைத் தொகுப்புகள்.

வாத்தியாரின் அம்பலம் இணையத் தளத்தில் வெளிவந்த விதவிதமான கட்டுரைகளின் தொகுப்பு நூலில் அவரது கேள்விபதில்கள், பொதுக் கட்டுரைகள், மேலும் பலரது நேர்காணல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்று பல விதமாய் இருக்கின்றன. இன்னும் படிக்க வேண்டியிருக்கின்றது. படித்து விட்டுச் சொல்கிறேன்.