Wednesday, December 20, 2017

விஷ்ணுபுரம் விருது விழா - 2017 - ஒரு பயணம்.


ருக்குச் செல்லாமல் நேரடியாகவே கோவைக்குச் செல்லும் திட்டம் என்பதால், தாமதமாகவே 10:30 மணி அளவில் தான் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். பெங்களூரு கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர் கொள்ளத் தொடங்கியிருந்தது. மேம்பாலத்தடி சிக்னலில் இரவு வாகனங்கள் சிவப்புக்குக் கொஞ்சமாய்த் தான் தேங்கி நின்றன. சில்க் போர்ட் செல்லும் பேருந்து இனிமேல் வருமா என்று எண்ணிக் கொண்டிருக்கையில், ஆம்னி வேன் வந்து ‘மாரத்தஹள்ளி..?’ என்றது.  இங்கிருந்து காத்திருப்பதைக் காட்டிலும் ஹள்ளி சென்றால், பேருந்தோ ஐ.டி.பி.எல்.லிலிருந்து வரும் வேன்களோ நிறைய என்பதால், ஏறிக் கொண்டேன். டின் பாக்டரிக்கு இறங்கிக் கொள்வதாகச் சொன்னவர்கள் இடப்புற ஜன்னல் அமர்ந்து, என்னை அப்புறம் ஒதுக்கினர். கழுத்துக்குப் பின்புறம் கன்னட ஹாடுகள். சிமெண்ட் சாலைகள் மற்றும் புது மேம்பாலப் பணிகள் (வரும் வருடம் தேர்தல்!) காரணமாக ஊர்ந்து நகர்ந்த வண்டி, கிருஷ்ணராஜபுரம் தொடர்வண்டி நிலையம் கடந்து வேகமெடுத்தது. ஓட்டுனருடன் கன்னடத்திலேயே கதைத்துக் கொண்டு வந்ததில் இருவருக்கும் சிறு திருப்தி. மாரத்தஹள்ளியில் இறங்கிக் கொண்டு, வேறொரு வேன் பிடித்து சில்க் போர்ட் அடைந்தேன். ஏனோ கூட்டம் வழக்கத்தை விடக் குறைவு தான். தனியார் சொகுசுப் பேருந்தில் கோவைக்குக் கூவிக்கூடி அழைத்தனர். தவிர்த்துப் பின் நடந்து மேலே சென்றால், அதிசயத்திலும் அதிசயமாக சேலம் பேருந்துகள் நான்கு தொடர்ந்து வந்தன, பாதி மட்டுமே நிரம்பியனவாக. ஒன்றைத் தெரிவு செய்து வசதியாக அமர்ந்து கொண்ட பின் தெரிந்தது, அது சுற்றிச் செல்லும் வண்டி என்று.

எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தை விட்டு, கீழேயே சென்று, அத்தனை ஊர்ப் பேருந்து நிலையங்களிலும் இளைப்பாறி, சுங்கச் சாவடிகளைக் கடந்தவுடனே ஓரமாய் நிறுத்தி, காணாமல் போய், வெகு நேரம் கழித்து வந்து சேலம் மத்தியப் பேருந்து நிலையத்தை அடைகையில் விடிந்தும் விடியாமலுமான 04:30 எட்டியிருந்தது. கோவை செல்லும் இடை நில்லாப் பேருந்தை எட்டிப் பார்த்தால் நிரம்பியிருந்தது. வேறு வழியின்றி தடமெங்கும் கால் பதிக்கும் மற்றொன்றில் அடைக்கலம் புகுந்தேன். சேலத்திலிருந்து கிளம்புகையில் 04:45. சீட்டெடுத்து விட்டு, செவிகளை மீண்டும் புதிதாய் வாங்கிய சீனா ஹெட்போனில் புதைந்தேன்.

ஊர் வாசமோ அன்றி நீர் வாசமோ தெரியவில்லை, காவிரிப் பாலத்தில் கண் விழித்தேன். கோயில் மின் ஒளிப் பிம்பங்கள் நிறைந்த நீரலைகளில் படிந்தலைந்தன. மீண்டும் உறக்கம். இறுதி வரிசையில் அமர்ந்ததால் தொடர்ந்து தழுவிய காலடிக்குளிர், குறைந்து குறைந்து செல்கையில் காலைப் பொன்னொளி ஜன்னல் அழுக்குகளை மின்ன வைத்தது. கருமத்தம்பட்டி கடந்து செல்கையில், கண்களில் தூக்கம் அப்பிய களைப்போடு காண்கையில் பேருந்துள்ளே புது மலர்களென நின்றிருந்த இளையோரைக் கண்ணுற்று மகிழ்வு எய்தினேன். வெளியே ஊர்கள் மற்றொரு நாளுக்குப் புலர்ந்திருந்தன.

அசிங்கமாக முழுக்க முழுக்கப் பச்சை நிறத்தால் பூசப்பட்டிருந்த மேம்பாலம் கண்களைக் கூச காந்திபுரம் வந்தது. இங்கே, பெங்களூருவில் மகாத்மா காந்தி சாலை மெட்ரோ பாலத்தூண்களில் வெர்டிகல் கார்டனிங் எனும் முறைப்படி பசுஞ்செடிகளைப் படர விட்டிருக்கிறார்கள். இயற்கைப் பசுமை. கடந்த சில ஆண்டுகளாக கோவை இழந்து வரும் பல்லாயிரம் மரங்களின் ஆத்மாக்கள் இப்பாலத்தில் அடை பிடித்து கிடக்கின்றன போலும்.

மத்திய நிலையத்திலிருந்து பொங்கல், இட்லிக்கென அழைக்கும் டிபன் கடைகளையும், சாலை விளிம்புகளில் வணிகம் விரித்திருக்கும் தள்ளுவண்டிகளையும் கடந்து சென்று சிறு எல்.ஈ.டி. குமிழ்களால் மருந்து விற்கும் குறுவீதி நுழைந்து பார்ப்பதற்கு எளிய விடுதி ஒன்றை அடைந்தால், ஆளில்லை. நாற்காலியை அடைத்து குன்றிய குஜராத்தைக் கைவிட்டு ஆர்.கே.நகர் என்று அலறிக் கொண்டிருந்த நாளிதழ்களைப் புரட்டுகையில், வந்தார். நூறு ரூபாய்க்குப் பேரம் படிந்தது. முதல் மாடியில் ஒற்றை அறை. தொங்கலைத் தாங்க இயலாதவாறு குட்டி மின்விசிறி; உயரமும் போதாது. குளித்துக் கிளம்பி சூடாய்ப் பொங்கலும், இரு வடைகளும் கொண்ட பின் ஏழாம் எண் நகரப் பேருந்தில் ‘பாதமலர் புட்வேர்’ போன்ற அழகிய கடைகள் அமைந்த சாலை வழி ஆர்.எஸ்.புரம் வந்தடைந்தேன்.

நவீன கோவையை வடிவமைத்த சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியார் என்பவர் பெயரால் அமைந்த (விக்கி!) ஆர்.எஸ்.புரத்தில், ராஜஸ்தான் விற்பனைப் பொருட்கள் சந்தை விரித்திருந்த கூடாரத்தருகில் ராஜஸ்தான் ஸங் என்ற சங்கத்தினரால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் தான் ‘இவ்வருட விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாமதமாக வந்து விட்டிருப்பதால், மின் தூக்கி வழி இரண்டாம் தளத்தை அடைந்து ஒரு வரிசையில் அமர்கையில், மேடையில் தூயனும் அசோக்குமாரும் பதிலளித்துக் கொண்டிருந்தனர். கொஞ்சமும் அறிமுகம் இல்லாமலிருந்ததால் செவி வழி உள்வாங்கி மட்டும் கொண்டிருந்தேன்.

தேநீர் இடைவேளையில் ஈரோடு பாரதி பதிப்பகத்தாருடன் ஓர் எளிய அறிமுகம் செய்து கொண்டேன். (”கொங்கு வரலாறு கிடைக்குமா சார்..?” “கண்டிப்பா..”) பின்பு அவர் பெட்டி கட்டிக் கொண்டு வந்திருந்த புது நூல்களை கடை பரப்பி, கிடைத்த மேடைகள் மேல் அடுக்கடுக்காக அடுக்கி ஒரு மாதிரி அத்தனையையும் நிரப்பி விட்டு, தேநீர் எடுத்துக் கொண்டு உள் நுழைய, ஆர்.அபிலாஷின் அமர்வு பாதி தாண்டியிருந்தது. குளிர்மையும் காற்றும் உலவும் ஓர் இனிய புள்ளியில் அமர்ந்து கொண்டு அவர் கூறியவற்றைக் கேட்டேன். அதன்பின் சுரேஷ்பிரதீப் மற்றும் விஷால்ராஜாவின் அமர்வு.

எதையும் உண்பவன், திருப்பிச்செய்ய வேண்டியன இரண்டு என்று என் தலைவன் பீமன் உணர்ந்திருப்பதை வெண்முரசுவில் ஜெ சொல்கிறார். சமைத்தல் மற்றும் பரிமாறுதல். இங்கே சமைக்கும் பணி இல்லை என்பதால், பரிமாறும் பணியில் இணைந்து கொண்டேன். கிடைத்த வாய்ப்புகளில் வாளிகளில் உணவள்ளிப் பரிமாறும் போது, கிடைக்கும் திருப்தி வேறெதிலும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை அறிய முடிந்தது. இரு நாட்களும் பந்தி பரிமாறலில் பங்கெடுத்துக் கொண்டேன். ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வந்த மனிதருக்கெல்லாம்’ என்று விருந்தோம்பிய விஷ்ணுபுரத்தினருக்கு பெருவயிறார்ந்த நன்றிகள்.

சனி மதியம் உணவு இடைவேளைக்குப் பின் போகனின் அரங்கு. உண்ட களைப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வந்த கலகலப்பான அரங்கு. தொடர்ந்து கவிஞர் வெய்யிலின் அரங்கு. கவிதை என்பதுமே களைப்பு பறந்து, அரங்கமே உற்சாக வெறியடைந்தது. நிறைய கேள்விகள் இதில் தான். எல்லா பந்துகளையும் திசைகளுக்குப் பறக்க விட்டார் வெய்யில்.  பின்பு மலேசிய வருகையாளர்களுடனான அரங்கு. மென்மையும் அமைதியுமாகப் பேசிய ஷண்முகசிவா, எப்போதும் புன்னகையுடனே இருந்த சுவாமி, இளமைச் சுடர் எரிந்த நவீன், கம்மென்று அமர்ந்திருப்பினும் சமயம் கிடைக்கையில் தெளிவாகப் பேசிய விஜயலக்‌ஷ்மி மற்றும் தயாஜி என ஐவர். இங்கே பத்திரமாக இருந்து கொண்டு, அயல் நிலத்தை எட்டிப் பார்த்து அங்கே நிகழ்வதை அறிந்து கொள்ள உதவினர்.

இரவுணவுக்குப் பின் நடந்த வினாடி-வினா நிகழ்வு எவ்வளவு நிரட்சரகுட்சியாக இருக்கிறேன் என்று தெரியவந்தது. நல்லவேளை, அனந்தபுரத்தில் குப்பை கொட்டிய சிலகாலத்தில் கிடைத்த அறிமுகத்தால், நீல.பத்மனாபன் அவர்கள் குறித்த கேள்விக்கு ஒரு பதில் அளித்து பறந்து கொண்டிருந்த மானத்தைக் கொஞ்சமாவது கீழிழுக்க முடிந்தது. அமைந்த அணியில் அனைவருக்கும் நூல் பரிசு கிடைக்க, பதில்களைப் பகிர்ந்து கொண்டதில் ஒரு நிறைவு.

இரு அறைத்துணைவர்களுடன் சேட் செமயாகக் கட்டி வைத்திருந்த சொகுசான அறையில் பொருட்களைப் பத்திரப்படுத்தி விட்டு, காலாற சிறு நடை சென்றோம். குளிர் குறைந்த கோவையைப் புலம்பி விட்டு, வெண்முரசுவைப் பற்றிக் கொஞ்சம், படித்த நூல்களைப் பற்றிச் சிறிது பேசி விட்டு, மூன்று நாற்சந்திமுனைகளைத் தாண்டி, ‘இப்போதைக்கு மூடுவதாயில்லை’ என்று இயங்கிக் கொண்டிருந்த கடையில் முதலிரவுக்குத் தயாராவது போல் பாதாம் பாலும், செவ்வாழையும் உண்டு விட்டு, விடுதிக்குத் திரும்பினோம். ஒருவர் விரைவில் சென்று உறங்கிவிட, ஜெ நடத்திய சபைக்குள் ஐக்கியமானேன். பல மொழிகளில் பல்லாண்டுகளாக மெளனமாக இருந்த கவியோகியைப் பற்றியும் மேலும் பல விஷயங்களையும் தெரிந்து கொண்டு, இரண்டு மணிக்கருகே சென்று படுத்துக் கொண்டேன்.

புது இடம்; மனமெங்கும் சொல்வெளி; தயங்கித் தயங்கித் தான் வந்த தூக்கத்தில் மூழ்குகையில் கனவில் இரு பாதமலர்கள்.

ஞாயிறு புலர்ந்தது. காலைநடையைத் தவற விட்டு, தேநீர்க் குடுவையருகே நிகழ்ந்து கொண்டிருந்த சிரிப்பான குறுங்கூட்டத்தை மேலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டு விட்டு தயாராகி, மீண்டும் அரங்கிற்கே வந்தேன். காலையொளி கழுவிக் கொண்டிருந்த கருஞ்சாலையைப் பார்த்துக் கொண்டிருந்த மலேசியருடன் ஓர் அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, சில கருத்துச் சிதறல்களைச் சிதற விட்டு, முதல் அரங்கிற்கு வந்தேன். பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடனான அமர்வு.  சுவாரஸ்யமாகவும் ஆர்வத்துடனும் சென்றது. மருத்துவம் குறித்த திசைக்குச் செல்லும் முன் ஜெ இலக்கியத்திற்கு இழுத்துக் கொண்டு வந்தார். பின், பரிசு வாங்கப்போகும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள். பெரும் அனுபவங்களையும் வாழ்வையும் மீண்டும் நாங்களும் வாழ்ந்தறிந்தோம். இறுதி அமர்வாக, மேகாலயா எழுத்தாளர் ஜெனிஸ் பரியத் அவர்களுடனான ஓர் இனிய அமர்வு. வழுக்கிக் கொண்டு சென்ற ஆங்கிலம், உற்சாகமான எழுத்தாளர். மற்றுமொரு உற்சாகமாக மணி சாருடைய வியத்தலும், வாழ்த்தும்.

கொஞ்சம் பெரிய இடைவெளிக்குப் பின், பரிசு வழங்கும் நிகழ்வு. அறையை காலி செய்து விட்டு, ஐந்தரைக்கு அரங்கிற்கு வந்தேன். செல்வேந்திரனின் ஆற்றொழுக்காகத் தொகுத்து வழங்கினார். மகிழ்மலர் இனிய குரலில் கிராதநாயகனைப் பாடினார். நகலிசைக் கலைஞர் ஜான்சுந்தர் தன் குழுவினருடன் வந்து சங்கை முழக்கினார். அவர் குரலே அவ்வளவு கணீரென இருக்கையில், சங்கொலி சற்று சுதி குறைவாகத் தான் இருந்தது. சீ. முத்துசாமி அவர்களுக்கு அரங்கிலிருந்த ஜெ, ’இளைய தளபதி’ நவீன், பி.ஏ.கிருஷ்ணன், ஜெனிஸ், ராஜகோபாலன் சூழ 2017-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுர விருது வழங்கப்பட்டது. அனைவரும் பேசிப்பேசி முடிக்க, முத்துசாமி அவர்கள் ஒரு நீண்ட ஏற்புரை நிகழ்த்தினார். தன் நீண்ட வாழ்வின் ஒளிரும் பொன் மணிகளில் ஒன்றாக இந்நிகழ்வை அவர் என்றும் நினைவில் வைத்திருப்பார் என்பதை அவருடைய உணர்ச்சி வயப்பட்ட உரை சொன்னது. பேசியது முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மீண்டும் ஓர் இரவு உணவு. முதலிலேயே உண்டு விட்டு, பொறுப்பாளரான விஜய்சூரியனிடம் மட்டும் விடைபெற்றேன்.

அரங்கை விட்டு வெளிவந்து, நிறுத்தத்தில் ஏழைப் பிடித்து, காந்திபுரம் மைய நிலையத்தில் சேலம் விரைவுப்பேருந்தில் ஓரிடத்தில் நிலைத்து மீண்டும் எனக்குத் திரும்பினேன்.

நன்றி ஜெ மற்றும் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தினருக்கு.

நொறுக்கு:

* ஜெ ‘வளர்ந்து வரும் எழுத்தாளர்’ என்று சொல்லி பி.ஏ.கிருஷ்ணன் அவர்களிடம் சொன்னது, ஓர் ஜில்கட்டி கொடுத்தது.

* பாரதிமணி சாரிடம் நினைவுபடுத்திக் கொண்டதும், மீண்டும் மீண்டும் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தார். பெருமகிழ்வு.

* நாஞ்சிலாரிடம் சிறிது நேரம் பேசியது ஒரு மனநிறைவு.

* முத்துசாமி அவர்களின் அமர்வில், சாரு போல் இருப்பதையும், 100 டிகிரி எழுதச் சொல்லி மணி சார் கேட்டதும் அதற்கு அவர் அளித்த பதிலும் ‘வயசானாலும் உம்ம குறும்பு போகலியே’ என்று தோன்றியது.

* அரங்கிலேயே இளைஞரான மணிசார் தான் ‘நீங்கள் ஓர் அழகிய பொம்மை’ போல் இருக்கிறீர்கள் என்று மற்றவர் சொல்ல மறந்த புகழுரையை ஜெனிஸ் பரியத்திடம் சொன்னார். ரசிகமணி.

* அமர்வுகள் அலைபாய்கையிலோ உறைந்து நின்று விட்ட போதுகளிலோ ஜெ தன் கேள்விகளாலும் கமெண்டுகளாலும் முன்னகர்த்திக் கொண்டிருந்தார்.

* வரிசையில் வண்ணதாசன், நாஞ்சில், கண்மணி, கோவை ஞானி என்று பலபேரை மொத்தமாகக் காண்பது கொடுத்த கிளர்வு, தனி.


Thursday, December 14, 2017

Accident.1985.Kannada.

He was a spoiled son. Motherless so that father's careless. And, because of his political career, the dad didn't focus on his son much. The son had a close friend whose mother was alone and had some suspicious life. One fateful night both of them went on dark road, crazily. First they attended a party in which liquor overflowed. They could not get a girl there. Increased frustration. He returned back to drop his friend in his house. He didn't go back. They travelled again. Under the darkness of late night, under the effect of drugs, under peace less mind, under the raging young blood, he drove his imported white Plymouth car under no control. Time flew. Suddenly, to avoid hitting the fire engine which was coming from opposite side, he steered the wheels near ninety degrees. The long car tires screeched on the platform and crushed nearly twenty people who was sleeping there. They were pulled down from their dreams into a dark red bloodshed. One survived from death and turned as the only eye witness.

No, this is not a news bit about some of contemporary happenings.

Welcome to the movie 'Accident', a 1985 Kannada film by Shankarnag.

With the help of a helpless inspector Ramesh Bhat, Shankarnag as a journalist tried to tear down the screens which were tied by the creepy politician Anantnag, to show the hidden truth behind them. During the election time, Anantnag smelled this accident case could become a big obstacle on his political path. Arundhatinag, the mother of the friend, who brought this case to his attention suggested to send the sons abroad to avoid any limelight on them. The head of police advised Ramesh to drop the case because of political pressure. Anantnag pushed a longtime servant in his house as a 'driver' on that night. Case closed.
Did Shankarnag satisy with this turn? What the only eye witness could do? Did the arrogant son live scot free? Watch this brilliant movie.
In this song free film, Ilaiyaraja shown his full calibre in the form of his forte, BGM. And, Shankarnag's direction skills and the characterisation shined in many scenes.

Even though they were close, the inspector signalled the doctor to avoid telling the complete details to the journalist.
For the journalist, everything is an 'explosive' news.
To avoid the question of 'why a journalist has a gun?', a scene arrived very earlier in a very un important scene.
Initially inspector mentioned about his two daughters and at the end in his house two daughters were shown.
.. and much more.

In my opinion, the prime of the movie is Anantnag. Here, we could see the ever charming Anantnag in a near villainic portrait. His mannerisms, powerful eyes, controlled emotional dialogue deliveries proved him.
One of the cult movies in Kannada, which can be suggested to the new comers to watch and get into the feel of old glorious days of KFI.

Thanks.

PS: The movie reminded me Sujatha's '24 ruubaay thiivu' in which a journalist was hunted by many elements of society because he had a diary which could shake their life to the core.

Tuesday, December 05, 2017

நீலாம்பல் நெடுமலர்.27.

ருங்கால் வேங்கை உகு மலர்
பாறை புலிக் குருளை ஆக்கல்
போல்
இலையெலாம் பூத்த கொன்றை
இவள் மேல் பொன் குமிழ் சொட்ட
நான் அகற்றும் நாளே!

குன்றெரி குறும்பூ செம்மை போல்
கன்றோட்டிக் கட்டும் சிறுகை
விளி நீள்விரல்,
குறுகு மாலை பூசிய
விழுகதிர் எச்சம் எனப்படும்.

பொல்லா உடையவன்,
பசலை அறியாச் சிறுபெண்
ஈதென்று காட்டிய பெருமகள்
பெருவழி கடந்த பின் குழம்பிய  அவளை
உணரச் செய்தனன் அவனே.

கவனம் உடையேம் யாம்,
கதிரள்ளும் குருவி துரத்தி
பசுமை உண்ணும் பல விரட்டி
நிலமூரும் அரவகற்றிக் கொண்ட துணிபை
சோழன் பரிசில் மாயமாக்கும் வறுமை போல்
இல்லாதாக்கின அவன் கண்.

வளப்பமுடை காவிரி நீர் அள்ளி உமிழ்ந்து
ஆடுகையில் அறியார் காண்கை
நாணத்தை விட,
மயில் தோகை இலைகள் விரிந்த
பசுமைக் கீழ் கைப்பிடித்து
உறுதிகண்ட போதடைந்த நாணம்
குறைந்தன்று.

குழல் மேலிட்ட குறும்பூக்கள் மலர்ந்து வாடி விழும் மாலை நேரத்தில், தூரத்தில் கேட்கின்ற ஒற்றைக் குதிரைக்காலடி, தலைவர் வந்து கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்கின்றது.

தேன்பூசிய கூர் அம்புகள் கொண்டு பேசும் இப்பெண் விழிகள் துளைத்திடும் இரு மார்புகள், பின் பெறற்கரிய பகைவர்களின் புது வேல்களையும் தாங்கி வளைக்கும் திண்மை உடைத்து.

வெள் அருவி வீழ் பாறையடியில், தூறல்கள் மட்டும் அணிந்த அவருடைக் கரிய உடலை என் கண்கள் வேறுபட்டு அறிய ஒண்ணாது, விரல்களின் துணையை நாடின.

பூத்தற்கரிய குறிஞ்சி போன்ற இவள் சொற்கள், கேட்கப்படினும் உண்ணத்தக்கதாய் இருப்பதை, கருங்குயில் மட்டும் கண்டு கொண்டிருந்த அடர்வனத்து புங்கை மரத்தடி வெளிப்படுமுன் உண்டறிந்தேன்.


Wednesday, November 29, 2017

Movies. Some Thoughts.

Today I watched two movies and my small thoughts.

a. 'Anand' of ShivRajKumar and Sudharani - 1986.
Both of them were introdcued in this film. A happy going college movie with some family elements. To be honest I felt, comparing with his later movies (like the cult one 'Om'), Shiv struggled little bit in emotinal delivery in this one. Ofcourse first movie. It is difficult to accept his current matured face against the chocolate boy of this movie. Time flies.
And, surprisingly Sudharani's acting was not like a debutant and ofcourse, she was fabulously beautiful. ;)
I added two songs in my playlist from this Shankar-Ganesh musical hit, 'Neela megha gaali' and 'Mogavu chenna'. Thanks.

b. 'Geetha' of ShankarNag and Padmavathu Rao - 1981.
I came to know about this movie nearly 11 years back, when I arrived to Bangalore very first time. The FMs played the classic melody 'Jotheyali' from this movie almost daily. The song attracted me not only because of its sweet tune but it was already familiar by used in a Tamil song 'Vizhiyile Mani Vizhiyile'. (Much later Balki used as 'Jaane Do Na'.) Then onwards, I tried to watch the movie to know whether the movie has carried the same calibre of the song. After watched today, I happily accepted that the song and movie was 'made for each other'.

After watching 'CBI Shankar' and 'Janma Janmada Anubandha', I admired ShankarNag's brilliance in acting and film making. In Geetha, he acted as a lover, singer and his acting was magnetized. But, the prime character was of heroin's. Her act from a free bird to a diseased one was simply, wonderful.

This tear-jerking movie brought out the thoughts of two of the similar tragic end movies. 'Geetanjali' of Telugu and 'Punnagai Mannan' of Tamil. Not surprise, all these three movies were musical hits and scored by Maestro Ilaiyaraja. And nothing to say about his BGM, which highly boosted the emotions delivered in the scenes.
I already had 'Jotheyali' and 'Kelade nimageega' in my playlist from 'Geetha', I added 'Yenu Kelu' as a new entry.
Thanks.

Both of the movies show the three decades older Bangalore. Yes, the peaceful, greenery and cool city. Gone are the days.  

Thursday, November 23, 2017

நீலாம்பல் நெடுமலர்.26.

 ப்ரியவதனி! ப்ரேமஸ்வரூபிணி! வித்யரூபிணி! பத்மவாஹினி! நித்யமோஹினி! காமதேஹினி! நிருத்யநாடஹி!

தேவி, தளிர்மை நிறைந்து ததும்பும் இரு விழிகள் உனதல்லவா? கடலாழத்தில் மூழ்கிக் கிடக்கும் இரு சிப்பிகள்; அவை தம்முள் உருண்டு விளையாடும் கருமுத்துக்கள். மையெழுதாப் பொய்யெழுதா மெய்க்கருமை விளிம்புகள்; வெண் வானில் விளைந்த முழுக்கரு நிலவுக் குட்டிகள்; அவை, கற்களைக் கண்டு கற்கண்டாக்கின; அவை பெரும் தேங்கற்கண்டு தேன் கற்கண்டாக்கின; மதுவூட்டும், மகிழ்வூட்டும், சினம் காட்டும், சிலிர்ப்பாக்கும். தினம் காணும் எனினும் திகைப்பூட்டும். குளிரூட்டும், களிகூட்டும், அணியாகும், அளியாற்றும்.  அவ்வாற்றில் எனை முழுக்காட்டி முக்தி கொளச் செய்யாது, இம்முழுப்பிறவியும் கழிதல் உந்தி வந்த முந்தி செய்த முன்வினைப் பயனா?

மொழியெழும் தேன்குகை; சொல் விழிக்கும் சூரியமனை; ஒலி குழைந்தொழுகும் ஓர ஈரங்கள்; பசுங்கிளியலகுச் செம்மை; பைந்தமிழ் நுரைத்த கள்ளினிமை; தின்னத் தின்னத் தீரா திகட்டல்; திளைக்கத் திளைக்க முழுதாய்ப் புகட்டல்;  புன்னகைப் புறப்பாடு; புதுநகைப் புனலாட்டு; இளந்தளிர் ஈரிலைகள்; மணங்கொண்ட மாவிலைகள்;  மந்தார மண மயக்கம்; மதுவூறும் மலரிதழ்கள். தேவி, நீ வாய் திறந்து சொல்லும் சொற்களைக் காற்றில் எங்கோ யாரோ சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவாயா? கண்ணாடிப் பீங்கான் குடுவைக்குள் இட்டு நிரப்பி, இரவின் பின் பாரத்தில் நோக்க, பின்னொளிர் மின்மினிக்கள் போல் அவை தண்ணொளி கொண்டு சுழல்வதை, ஒளித்துளிகள் போல் அவை ஒசிவதைக் கண்டு கண்டு துயர் துடைத்துக் கொள்வதை, இப்போது தானே நீ அறிகிறாய்?

வண்டமர் மலர்க்குவை; வற்றாத அமிழ்துக்குலை; வளைந்தாடும் வனமுல்லைக் கொத்து; வெயிலறியா முகட்டுக் குன்றுகள்; குயிலறியாக் குரல் குழைவுகள்; தளும்பும்; தருக்கும்; தழையும்; தகையும்; நிறைந்தெழும்; நின்றமையும். தேவி, உன்னிலூறும் பெருங்கருணையும் பேரன்பும் இரு பொற்கோபுரங்களாய் எழுந்தனவா?

செழும் எழில் நிறைந்த திருப்பாதங்கள். முளைத்தெழுந்த ஈரைந்து விரல் கணுக்கள். கணு சூடிய பொன் மலர்களென மணிகள். அம்மணிகள் சப்திக்கக் காலடி மேல் காலடி வைத்து நீ வந்து நின்று என் குறைவுளம் நிறைவுளதாக்கத் திருவுளம் கொள மாட்டாயா? செம்மாந்த உள்ளங்கால்கள்; மண் காணா குளிர்மை உள்ளார்ந்தவை;பூத்த செந்தாமரை ஈரிதழ்கள்; அவை ஓரடி மண் வைத்து, வேறடி விண் வைத்து, ஈற்றடி மாபலி சிரம் வைத்த மோகனபாலனின் உளம் கொண்ட பொன்மகளின் செம்மை அல்லவா?

பார்வையைப் பற்றிக் கொள்க என்றளிக்கிறாய்; சொற்களைச் சேர்த்துக் கொண்டுய்க என்று தருகிறாய்; இழுத்தணைத்துச் சேர்த்து பசி தணிக என்றமுதூட்டுகிறாய்; தேவி, உன் மேலான செல்வங்களைக் கொண்டு வந்து இருளிலிருந்து எனைக் காத்த பின் உனக்கென்று கொடுக்க ஒன்றுளது என்னிடம்; உன் இரு தாள்களை முடி சூடி, அறிமொழியில் உனைச் சொல்லல்.

Tuesday, November 07, 2017

நீலாம்பல் நெடுமலர்.25.


பொற்றனல். பைங்கிளிக்கூட்டம். வெண்முகில் சாரம். பூந்துகில் மடிப்பு. பண்மொழிப் பாவை.

தீச்சரம் தீய்க்கும் படுக்கைப் போர்வையின் பேச்சரவம் கேட்டிலையோ, நீ? மென்விரல் பிடித்திழுத்தணைத்திதழீரம் பரிமாறிக் கொள்ளும் இரவுப் போது இப்போது போதுமா? தேங்கும் நதி அணைக்கட்டில், ஏங்கும் உயிர் காக்கும் வந்தணைக்கட்டில்.

மெளனம் ஒரு விழி. மதுரம் மறு விழி. செந்தாமரைச் சேற்றிலூறி எழும் பொன் மாலையில், வெண்ணிலா வானிலேகும் முன்னிரவில், தென்றல் வழிகளில் குளிர்ப்பதியன் இடும் நேரங்களில், ராகமெழுப்பிக்குழலீனும் மோகக்கடலில் நீந்தும் சிறுமீன் நான்.

சிற்றவை நுழைந்த சிற்றெறும்பைப் போல் திகைத்து நின்றேன் உன் முகம் தெரியாமல் தென்படுகையில். செழுந்தீ எழுப்பி ஆகுதியாகும் குருதிக் குடுவையாய்க் குலுங்கல் இவ்வுடல் கொளும் அதிர்வு.

நேற்றைய நாள் ஒரு சொல்லில் முடிந்தது. நேற்றைய இரவு இன்னும் குளிர்மையாய் நீண்டு கொண்டே இருக்கின்றது.

பூப்பறிக்கும் குளிர் விரல்கள் கோதுதல் போல் இலை பரப்பி இதழ் பிரித்து மகரந்த மொட்டுகளை மெல்ல மலரள்ளும் பின் மணம் நிறைக்கும்.

இரு தாளொற்றி இரு கைப்பற்றி மற்றுமிரு விழிகள் கண்டு மாற்றுரு கொண்டு வாழ்நாளெல்லாம் வனைந்திருக்க.

Monday, October 30, 2017

நீலாம்பல் நெடுமலர்.24.



எந்த சிற்பி கண்ட கனவு நீ?

நறுமுகை கெழு மணம். அருவி எழு சாரல். மலைமுகட்டுத்தூறல். வானவில் வர்ணக்குழைவு. பூவனக்குன்று புறம். மாமலர்த்திறம். சாறு வழியும் செங்கனி. வெயில் திரை கழுவும் பசிய இலைக்கொத்து. கருமுகில் குளிர்மை. பனி சறுக்கும் மென்மை. பேரெழில் குவித்திடும் பொற்பேழை. நீலவெளி நிறையும் வெண்ணொளி.

போர்க்கென எழுகையில் வேல்விழி; பால்மொழி; கார்க்கற்றை பாய்ப்புனல். நேரங்கழியும் நேர்க்கோடு. அலைநில்லா அமுதக்கலம். வேரூறும் ஈரமண். கிளைதுழாவும் வளி. பீறிடும் ஊற்று. மலரென்று பிறந்த மதுக்குடம். தளிரென்று துளிர்த்த தங்கரசத்துளி. நிழல் மறைக்கும் நீலச்சுடர். பிணியென்றும் மருந்தென்றும் பிறிதெனப் பிரியவியலா சொல். மறுகரை தீண்டித்தீண்டி நிறையா குளிரலை.

தனிமைக்கிழி கூர்வாள். தமிழினிமை. தாளிரு தோள். தாழடையா தவிப்பு. தாமிரத் தண்ணொளி நிலா. முறுகலென சொல்லெடுத்து முந்திநின்று முத்தமிடும் முத்தமாரம். பேச்சொலி கேளா நொடி வாழா நொடி. பொன்முகம் காணா நாள் வீணாள். பேணுதலின்றிப் பொழுது விரையும் காலக்கடலில் கைப்பிடிக்கக் கிடைத்த வீணை. குழலோசை கேள் தவம்.

நச்சரவத் தொடுகை. நாதத்திலகம். சுழல் இழுப்பு. ஸ்வர பேத தூரம். வாழ்ப்பேரேட்டில் பாராட்டு ஒரு மணி. பெருந்தச்சன் செதுக்கிய கற்சிற்பம். பெருமொழியன் உருக்கிய சொற்களி. கனவுகள் உலாவரும் கடுமிரவில் சிறகடித்துப் பறக்கும் இளந்தேவதை. பாதை வழுக்கும் பசியவழு.

மகரந்தம் குவிந்த மொட்டு. தும்பி சுவைக்கும் தேன்கடல். கனிச்சுவை ஊறும் காணா மேல்.

அரசூரும் அமுதப்பாதை. ஆலமரும் அவனிடம். செங்கனல் சிந்தும் பிரபஞ்சம். சக்தி பிம்பம். பெருங்கருணைப் பேராறு. நாணிலா வில். கானுலா கவித்திறம். பூரண ஒளிக்கிடங்கு. மோதித்திரியும் வண்டென வந்தமர வந்தசுவை. கூதல் பொழுதின் குளிர்ப்போர்வை. கூறா சொல் குவிந்திடும் இருளாழம். வெண் தந்தம் முன் சுமந்து வரும் பெண்வேழம்.

Friday, October 20, 2017

நீலாம்பல் நெடுமலர்.23.



சென்ற ஆண்டு முதல் கொஞ்ச கொஞ்சமாகக் கன்னட மொழியைக் கற்க முயன்று கொண்டிருக்கின்றேன். க்ளாஸிக் என்று அறியப்படும் காலத்தை வென்ற திரைப்பாடல்களைக் கேட்டுக் கேட்டுச் சில சொற்களை அறிந்து வைத்து, அவற்றைக் கொண்டு எழுதிய சில கவிதைகளை இங்கே இணைக்கிறேன்.

தமிழ் மொழிபெயர்ப்புகளும் கூடவே.


நின்ன சவி மாத்துகளு
ஒல்லே கவி மாத்துகளு
ஆ மாத்துகளு சங்கீதவாய்த்து
கேளிதே நனகே சந்தோஷவாய்த்து.

உன்னுடைய இனிய சொற்கள்
நல்ல கவிதைச் சொற்கள்
அந்தச் சொற்கள் சங்கீதம் போன்றன
கேட்கையில் எனக்கே மகிழ்ச்சி ஆகின்றது

நின்ன ஹெஸரு ஏனு ஹெண்ணே?
நன்ன ஹெஸரு நிமகே யாக்கே?
யாக்கேந்த்ரே நாளெ நின்னனு கரெதனு அந்தா
நீவு கரெதனே நன்னனு சந்தா அந்தா.

உன்னுடைய பெயர் என்ன பெண்ணே?
என்னுடைய பெயர் உங்களுக்கு எதற்கு?
ஏனென்றால் நாளை உன்னை கூப்பிடுவதற்கு என்பதற்காக.
நீங்கள் கூப்பிடுங்கள் என்னை அழகு என்று.

நின்ன முகவு பெலதிங்களு அந்தா
நின்ன மனவு சவிஜேனு அந்தா
நின்ன தேகவு கெம்பு பெங்கி அந்தா
நன்ன கனவு ஆ பெங்கினல்லி சேரலு அந்தா.

உன் முகம் ஒளிவிடும் நிலவு போன்றது
உன் மனம் இனிய தேன் போன்றது
உன் தேகம் சிவந்த நெருப்பு போன்றது
என் கனவு அந்த நெருப்பில் சேரவேண்டும் என்பது.

ஹஸிரில்லா பனவந்தா நானிருவனு
தங்காலி மலெயந்தா நீ பருவெனு
மனவு தனுவு தம்பதாய்த்து
நன்ன நெரலவு பிலி பன்னவாய்த்து

பச்சையில்லா வனம் போன்று நான் இருக்கிறேன்
குளிர்த்தென்றல் மழை போல நீ வருகின்றாய்
மனதும் உடலும் குளிர்வாயிற்று
என் நிழலும் வெண்மையான நிறமாயிற்று

மோடகளிந்தா மலெ பந்தனு
கண்ணுகளிந்தா ப்ரீத்தி பந்தனு
மலெபில்லுனல்லி ஏலு பன்னா இருத்ததே
மனகுஹயுனல்லி ஏலு ஸாவிர பன்னா இருத்ததே

மேகங்களிலிருந்து மழை வந்தது
கண்களிலிருந்து காதல் வந்தது
மழைவில்லில் ஏழு வர்ணங்கள் இருக்கின்றன
மனக்குகையில் ஏழாயிரம் வர்ணங்கள் இருக்கின்றன

நினகாகி நன் ஜீவனா
யாக்கே ஈ கோப பாவனா
கோபதல்லி ஹூவந்தா நின் மொகவு
சந்தோஷதல்லி சந்த்ரனந்தா பால செலவு

உனக்காக என் வாழ்வு
ஏன் இந்தக் கோப பாவனை
கோபத்தில் பூப்போல உன் முகம்
மகிழ்ச்சியில் நிலவைப் போல பேரழகு

Friday, October 13, 2017

நீலாம்பல் நெடுமலர்.22.




சொன்னாலும் கேட்பதில்லை...

தித்திக்கும் சொல் ஒன்றை நீ விழிகளால் சொல்லிச் சென்ற பின், தூரத்து நிலவும் செம்மை பூண்டது. இன்றில் அன்றில் பறவைகள் இரண்டும் அலகுகளால் அலகுகளைக் கோதிக் கொண்டு திசைகளில் மிதக்கின்றன. பொற்சிறகுகள் விரித்த கன்னி தேவதைகள் மெல்லிய விரல்களால் என் கன்னம் வருடிப் போகின்றன. மழை வரப்போகிறதென கட்டியம் சொல்லி இரு பூமயில்கள் அகவுகின்றன. மேற்குத்திசை வானில் மேகங்கள் குழுமி மண்ணை நனைக்க யோசிக்கின்றன. சாலையோர மரங்களில் சின்னஞ்சிறு மஞ்சள் மலர்கள் தலையாட்டிச் சிரிக்கின்றன.

காற்றின் வெம்மை பனிக்குளிர் ஆகின்றது. தென்றல் இத்தனை நாள் எங்கிருந்தது? எங்கோ ஒளிந்திருந்த குயில் இப்போது எப்படி குரல் வழி எட்டிப் பார்க்கின்றது? இதோ, இந்த மாநகரப் பேருந்தின் காற்று ஒலிப்பான், காதல் ஒலிப்பானானது எம்மாயம்? பல்வர்ணச் சாலை விளக்குகள் மாறிமாறி ஒளிர்தல் ஒளிச்சிரிப்பாகத் தெரிவது எனக்கு மட்டும் தானா?

கூட்டத்தில் தொலைந்து போன இதயத்தைக் கைப்பற்றி மனம்பற்றி இதழ்பற்றி விழிபற்றி மீண்டும் என்னுடன் ஒட்டி வைத்துச் சென்றது ஒரு பசுங்கிளி. காலடியை மொத்தி மொத்தி முத்தமிட்டு ஓடிப் போனது ஒரு வெண்முயல்குட்டி. மூக்குகளால் முட்டிகளை உரசி நகரச் சொன்னது செம்மை அணிந்த பன்றிக்குட்டி. ராட்டினப் பெட்டியில் ரகசியமாய் விட்டு வந்த ஒரு பார்வை காற்றில் மிதந்து மிதந்து மெல்லச் சுழன்று, உன் தோடுடைய செவிகளைத் தொட்டு உள் நுழைந்ததா?

ஆயிரம் பேர் வந்தமர்ந்துண்டு செல்லும் காற்றில் நம்மைத்தேடிய நம் விழிகள், கண்டுகொண்டதும் மென் மின் அதிர்வு தீண்டினாற்போல் மெல்ல விலகுகின்றன. காற்றில் பார்வைப் பாதையின் தடத்தில் இசைக்கார்வைகள் இணைந்து இசைந்து இசைக்கின்றன நூறு வயலின்கள். கண்ணாடி ஜன்னல்களைத் தாண்டி வந்து நம் மேல் மட்டும் வீசுகின்றது குளிர்க்காற்று. பூக்களைச் சுமந்து வந்த புறாவொன்று தலை மேல் கொட்டிவிட்டு மணம் பரப்புதல் போல், ஓர் பார்வை வீணை நரம்பை அதிரச் செய்து இன்னிசை எழுப்புகின்றது.

ஒரு பொன்னொளிர்த் தருணத்தில் மீண்டு மீண்டுமொரு சொல் சொல்லச் சொல்லவில்லையா, உன் இரவுகளின் கனவுகளில் நதிக்கரை அமர்ந்து கதை சொல்லும் அக்கண்ணிலாக்கிழவி? சொல் தின்று பார்வை உடுத்தி கனவுகளை சுவாசித்து வாழும் ஒரு ஜீவனின் கைகளைப் பிடித்து மென்முத்தம் பதித்து ஒளிநிறைந்த உலகுக்கு அழைத்துச் செல்லச் சொல்லவேயில்லையா அக்கிழவித் தோள் மேல் அமர்ந்து தலையாட்டும் மலர்க்கொத்து ஒன்று?

Sunday, October 08, 2017

நீலாம்பல் நெடுமலர்.21.

ரு சிறகுகள் கொண்ட சிறு பறவையொன்று தோள்களில் அமர்ந்து சென்றது. ஓர் இறகுத்தூவலுடன் கையகல் நிழல் மட்டும் மிஞ்சியது.

செம்பொன் நிழல் காட்டும் உன் சிற்றுடல் எரிமலை மையம் போன்ற வெம்மை.

துளித்துளியாய் உன் பார்வைகளைச் சேர்த்து வைத்துள்ளேன். ஒவ்வொன்றும் ஊறித்ததும்பும் பழமைக்கள் என் மனம்.

வாவென அழைக்கும் ஒரு சொல், தழைக்கும் கணம் பிறவிநேரம்.

நேற்றும் நாம் கண்டோம், மெளனத்தின் பெருந்திரை இடைநிற்கும் நாள்.

மழை வரும் என்றறியாமல் குடை மறந்து நனைதல் போல் உன் பார்வைகளுக்குள் குளிர்தல் ஒரு பொற்கணம்.

தூய வெண்பனி போன்ற குடையொன்றுக்குள் நீ மறைந்து நின்றாய். மரம் பூத்திருந்த மஞ்சள் மலர்களைப் பெய்து உன்னை நனைத்தது.

தேன் நிறைக்கலங்கள். பூக்குலைக் குடங்கள். குளிர்நிறைக் குறுமுகில்கள். செம்மலர்த்திரள்கள். பண்டிகை நாளில் காசு தீர்ந்த பையன் போல் சொல் தீர்ந்து உன்னைக் கண்டு திகையா நின்றேன்.

விடிகாலை மழை போல் ஓர் அற்புதம், நீ ஒரு பார்வை தருதல்.
எதிர்பாராமல் முழுக்க நனைந்து விடுதல் போல் ஒரு தித்திப்பு.

மனமறியும் உன் சொல்; விழியறியும் உன் பாதை; மொழியறியும் உன் நினைவு; இரவறியும் என் அனல்.

இன்னும் இன்னும் என எதை இட்டும் நிறையா சுழி உன் கலம்; நிரப்பித் தீராத ஊற்று என் நிலம்.

தனித்திரு என்றாய்; சொல் மறந்து எங்ஙனம் என்பதைச் சொல்ல மறந்தாய்.

ஒரு பூ மலர்தல் எக்கணம்; முதற்துளி பெய்தல் எந்நொடி; ஒரு சொல் திரள்தல் எப்பொழுது; ஒரு புல் நிமிர்தல் எவ்விரவு; பனித்துளி உலர்தல் எப்பகல்; சொல்லும் விழியும் மூச்சும் உறைதல் என்று தொடங்கியது என்றறிவர் யாவர்;

மூடி திறந்து உள் கொதிக்கும் எரிகுழம்பை விரல் நுனியால் தீண்டினாய்; குளிர்ந்துறைந்து நிறைந்தது மனக்கலம்.

சென்ற நாட்களின் இரவை நிரப்பின உன் கனவுகள்; நாட்களை அறுத்தன என் பிழைகள்.

குளிர்ந்த இரவின் பெருவெளியில் தனித்து நின்றிருந்தேன். ஒற்றை விரல் நீட்டி பிடிக்கச் செய்தாய். இனி இப்பெருங்கடல் கடக்கும் துணிவுற்றேன்.

செக்கிலுழலும் எள்ளாய் நீ நிரம்புகிறாய்; சுற்றிச் சுற்றி வந்தும் தொடவியலா மாடென நான்; இணைத்துப் பிரிக்கின்றது இடை வந்த ஆண்டுகள்.

காணும் முன் கருமை பூண்டேன். கண்ட பின் வெறுமை கொண்டேன்.

மேகங்கள் பூத்து நின்ற மாலையொன்றில் பூக்கள் சேகரித்து சாலையொன்றின் விளிம்பில் நடந்து சென்றாய். இன்னும் கொஞ்ச நொடிகளில் மழை பிரசவிக்கும் என்றறிந்தோரில் ஒருவனாய் நான் குடைகள் சேகரித்து நின்றிருந்தேன். சிறு தூறல்கள் கிளம்பின. கைநிரப்பிய மலர்களைப் பிடித்து நனைதலைத் தவிர்த்தாய். அத்தனை மலர்களும் மீண்டும் நனைந்தன.

Tuesday, September 19, 2017

திருக்குறுங்குடி.



துளி கொஞ்சம் தாராயோ - வெண்ணெய்த்
துளி கொஞ்சம் தாராயோ..
எலியுடனே காத்திருக்கும் எங்கள்மேல்
அளிகொண்டு கண்ணாநீ...
(துளிகொஞ்சம்)


ஆவினங்கள் அடிசேர ஆனந்த
ஆயர்பாடி குடிசேர மாமலை
கோவர்த்தன கிரி தாங்கி தன்
கோகுலம் காத்த விரலளவு
(துளிகொஞ்சம்)


அடைந்திருக்கும் விழிதிறக்க
அடைந்திருக்கும் வழிதிறக்க
அடைந்திருக்கும் செருக்கழிய
முடைந்திருக்கும் மணமொழிய
கடைந்தெடுத்த ஞான நறுநெய்யில்
(துளிகொஞ்சம்)

அழைப்பாயா?


மோகன மதுபாலா..! மேக வர்ணா..! மோக யதுகிரிநாதா..! மதுரநாதப்ரபு..! வா வா..! எனை அழைக்க! பிரிவிலுழல்கிறேனே, காணவில்லையா? எரிநெய்யாய் எரிகிறேனே, சுடவிலையா? நீயும் நானுமென ஒரு பறவைக்கூட்டில் அமர்ந்து குழலிசைக்க மடிமேல் துயிலக் கூறாயா?

பண்டரிநாதா..! அழகே..! அமுதே..! குழல் குமுகா..! தழல் தழுவிப் புகைகிறேனே? எங்கே சென்றாய்? நீலத்திருமேனி தவழக் கைகளில் அள்ளி அணைத்திடவே ஆசை பெருகுதடா..! ஷ்யாமா! சாரதகுரு! குசேலநண்ப! குருகோவிந்தா! குன்றேறிக் குலம் காத்த கருமணியே! ரதிவிஹாரி..! ரதிபரோபகாரி..! ரதிசாரதி..! ரதிரதிரதி..! அன்னதாதா..! அமுதபாதா! மதுசூதனா! கிரிதரா..! கிருஷ்ணதேவரே...!

பாண்டுரங்கா! பாரதராஜா! மங்கை மணாளா! மீராப்ரேமா! ஆண்டாள் ஆனந்தா! மயில்பீலி மதுரா மன்னா! ப்ருந்தாவனப்ரபு! ராமா! ராதாநாதா..! அய்யா! அம்மா! அண்ணா..! நீயே எல்லாம்..! நீயே எங்கும்..! காணுமிடமெலாம் கண் காணும் கார்முகிலே! நீரும் நீயே! அனலும் நீயே! அங்கும் நீயே! இங்கும் நீயே! எங்கும் நீயே! நானும் நீயே..!

மலர் சொரிந்து நிறைக்கிறேன்! மரெங்கும் சந்தனம் பூசுகிறேன்! மாலே! மதுரையம்பதி அன்னை அண்ணா!  பாற்கடல் பரந்தாமா..! கோவிந்தா! ரங்கா! காவேரி மைந்தா! வா..! வா..! முதற்கரிச்சான் கூவும் முதற்சொல்லே! வானெங்கும் நிறைந்த ஓங்காரமே! முத்தமிட்டுக் கொஞ்சக் கூறாயா? அச்சுதா! தாமோதரா! நாராயணா! அனந்தா! பத்மநாபா! மோகினிரூபா!

தேனே! தென்னனலே! நூறாயிரம் ரூபம் காட்டும் மாயவா! துவாரகையே! பாஞ்சன்யமே! பாலே! கொழு நெய்யே! செழுநுரையே! நிறைமணமே! வல்லபா! தீராப் பெயர்களில் உனை அழைக்க அழைக்க நாவினிமை சொல்லினிமை தமிழினிமை கோடி மடங்கு!

யசோதபுத்ர! பலராம சோதரா! நந்த மைந்த! கோகுலப்ரிய! ஆயர்பாடி ஆவே! வில்லிபுத்தூர் மருகா! ஸ்ரீ ரங்கராஜா! திவ்யபுருஷா! மாலை சூடி அழகேற்றியவளைக் கொண்டு சென்ற ராஜமன்னாரே! போதை தெளியவிலையே! யாதும் தெளிவில்லையே! யாதவ கோவே! கோபாலா! கோபாலா! ஆலிலை அமர்ந்த அன்பே! வாமனா! வா! வா! கேடில் விழுச்செல்வமே! கரி காக்க கருடனேறி வந்த கருணையே!

காதலா! காதலா! கோபியர் கொஞ்சும் ரமணா! கொஞ்சம் வாராயா? கொஞ்ச வாராயா? தஞ்சம் தாராயா? துஞ்சப் பாராயா?

சுதாகரா! சுலோக்‌ஷணா! சுத்தப்ரம்மா! சகல்லோக சத்வமே! சத்யனே! சமுத்ரதேவ! சுகராகா! ஸ்ருதிபாவா! உனுள் எனை உள்ளிழுத்துக் கொள்ள மாட்டாயா? பரிதி மேலெழு கதிரே! பனியென உறிஞ்சிக் கொள்ளாயா? குயிலே! குறும்பே! 

Monday, September 18, 2017

நீலாம்பல் நெடுமலர்.20

காற்றில்
குளிர் கனத்திருக்கும்
உன் மாநகரில்
செம்பொளி
பொழிந்து
மௌனித்திருக்கும்
உன் வீதியில்
பனிசூடிய மலர்கள்சூழ்
உன் வீட்டில்
உன் மூச்சுக்காற்று
வட்டமிடும்
உன் அறையில்
வெண்ணுரை மெத்தை
இட்ட
உன் படுக்கை மேல்
கடல் நீலத்தில்
பூக்கள் வரைந்த
உன் போர்வைக்குள்
கதகதப்பாய்
உறங்குகிறாய்.

மேகங்கள்
விரைந்து நகரும்
இருள் விடிகாலை
வான் கீழ்
தனித்திருக்கிறேன்.
***

உன் வீடு
உன் இருப்பால்
உன் இன்மையால்
உன் சொற்களால்
உன் மௌனங்களால்
உன் சிரிப்புகளால்
உன் கண்ணீரால்
நிரம்பியுள்ளது.

நான்
உன்னால்
நிரப்பப்பட்டுள்ளேன்.
***

இம்மொழியிலா
நீ
வெளிப்பட்டாய்?

இச்சொற்களிலா
உனைப்
பேசினாய்?

உன்
இதழ்வழி
கசியும்
பேறுற்ற
மதுர பாவனைகள்
இவ்வார்த்தைகள் தாமா?

கனி மேலமர்ந்த
பழஈ போல்
நானும்
சுவைத்தினிக்கிறேன்.
***

Tuesday, September 12, 2017

நீலாம்பல் நெடுமலர்.19.

னக்கென ஒரு மொழியை உருவாக்கி நன்கு பயின்றும் வைத்திருக்கிறாய்.

மெல்லச் சிரித்தல், புருவங்களை நெரித்தல், கண்களைச் சுருக்கி உதடுகளைக் குறுக்கி வைத்துக் கொள்ளல், காது மடலூரும் சிறு முடிக் கற்றையைச் சுருட்டிப் பின் தள்ளல், இருபுறமும் விழியுருட்டித் திசை காட்டல், ஏதறியேன் எனல் போல் தோள் குலுக்கல், எழுத்துக்கள்.

தேறல் கள் மாந்திய செங்கரும்பு போன்ற இதழ்களைச் சுளித்தல், கணு கழிந்த மூங்கில் தோள்களை முறுக்கி மிரட்டல், நிலம் துளைத்த நெடுநெல் நாற்று விரல்களால் காற்றில் இசையெழுப்பும் சமிக்ஞைகளை இயற்றல், முழுதாய்த் திரும்பிச் சென்றபின்னும் முகம் காட்டிப் பழிப்பூட்டல், சொற்கள்.

நீலிரவு நீண்டெழ நில்லா உரையாடலில் வான் விரி மீனளவு உணர்வு முகங்கள், செலுமுன் விரைந்து மீண்டு முழுதாயிடும் ஈர முத்தம், சிறு பரு ஒன்றெழக் காரணம் வினவ கதிர்மறை மலைமுகட்டுச் செம்மை அடை சிரம் கவிழ்தல், யாரோ எனக் கண்டு பின் யானே எனக் கண்டு நானே என அணைத்தென் முதுகில் உன் மாரெழ இறுக்கும் இறுக்கம், வாக்கியங்கள்.

Sunday, September 10, 2017

லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்.

லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்.


அமெரிக்கக் கருப்பினக் கவிஞர். உலக வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞர். அவருடைய இருவழி தாத்தாக்களும் வெள்ளையர்களாகவும் இருவழி பாட்டிகளும்
கறுப்பினத்தவர்களாகவும் இருந்தபடியால் அடையாளக் குழப்பத்தில் வாழ்ந்தவர். 

ஆனாலும் தம்மை கறுப்பினத்தவராகவே சொல்பவர். கவிமனம் கொண்டவர் என்பதால் எவரையும் வெறுக்க இயலாதவர்.
நம்பிக்கையுடன் கறுப்பரின் நல்வாழ்வுக்கு கனவு கண்டவர்.
அவருடைய கவிதைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிவன இவையே.


சில மொழிபெயர்ப்புகள்.


1. சந்திப்பு முனை.

என் வயதான மனிதன்
ஒரு வெள்ளையின வயதானவன்.
மற்றும் என் வயதான அம்மா
கறுப்பினத்தவள்.

ஒருவேளை என்றாவது
நான் என் வயதான
வெள்ளை மனிதனை
சபித்திருந்தால்,
அவற்றை
நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

ஒருவேளை என்றாவது
என் வயதான கறுப்பு அம்மாவை
சபித்திருந்தால்,
அவள்
நரகத்தில் இருக்க
விரும்பியிருந்தால்,
அத்தீய விருப்பத்திற்காக
வருந்துகிறேன்.
மற்றும் அவள் நலத்தை
விழைகிறேன்.

என் வயதான மனிதன்
இறந்தது
ஒரு நல்ல பெரிய வீட்டில்.
என் அம்மா
இறந்தது
ஒரு குடிசையில்.
நான் எங்கே இறக்கப் போகிறேன்
என்று வியக்கிறேன்,
கறுப்பனாகவோ வெள்ளையனாகவோ
நான் இல்லாதிருப்பதால்.


2. குடியரசு.

இன்று, இவ்வருடம்
குடியரசு வரப்போவதில்லை.
சமரசத்தாலோ, பயத்தாலோ
என்றுமே.

மற்றொருவன்
கொண்டிருப்பதைப் போல
நானும் உரிமை கொண்டுள்ளேன்.
இரண்டு பாதங்களால்
நிற்பதற்கு.
மற்றும்
நிலத்தை உரிமை கொள்வதற்கு.

ஒவ்வொன்றும் அதற்கான
காலத்தை
எடுத்துக் கொள்ளட்டும்
என்று சொல்லும்
மக்களால்
நான் சலிப்புற்றுள்ளேன்.
நாளை என்பது மற்றுமொரு நாளே.
நான் இறந்தபின் கிடைக்கும்
என் விடுதலையை
நான் விரும்பவில்லை.
நாளைய உணவின்
மீது
நான் இன்று வாழவியலாது.

சுதந்திரம் என்ற
ஒரு
வலுவான விதை
ஒரு
உன்னதத் தேவையின்
மீது
விதைக்கப்படுகின்றது.
நானும்
இங்குதான் வாழ்கிறேன்.
நானும்
சுதந்திரத்தை விழைகிறேன்,
உங்களைப் போல.


3. கனவுகள்

கனவுகளை
வேகமாகப்
பிடித்துக் கொள்ளுங்கள்

ஒருவேளை
கனவுகள் மரித்தால்,
வாழ்வு,
முறிந்த சிறகுகளையுடைய
பறவையாகி விடும்
பறக்கவியலாத ஒன்றாய்.
கனவுகளை
வேகமாகப்
பிடித்துக் கொள்ளுங்கள்.

கனவுகள்
போய் விட்டதெனில்,
வாழ்வு,
பனிமூடி உறைந்த
தரிசு நிலமாகி விடுகின்றது.


4. சலிப்பு

எப்போதும்
ஏழையாகவே
இருந்து கொண்டிருப்பது
சலிப்பாய் இருக்கின்றது.


5. இறுதி வளைவு

வளைவில் திரும்புகையில்
உங்கள் மீதே
நீங்கள்
மோதிக் கொண்டால்,
நீங்கள் அறிவீர்கள்
விடுபட்டிருந்த
அத்தனை வளைவுகளிலும்
நீங்கள்
திரும்பி விட்டிருந்தீர்கள்
என்று.

6. செல்மாவுக்காக..

செல்மா, அலபமா
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்...” என்று.
சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”லண்டன், பாரீஸ்
போன்ற இடங்களில்...” என்று.
லண்டன், பாரீஸ்
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்...” என்று.


7. நான் கனவு காண்பதைத் தொடர்வேன்

என் கனவுகளை எடுத்து
அவற்றை
ஒரு வெண்கலக் குடுவையாக்குவேன்
மையத்தில் அழகான ஒரு சிலையுடன்
வட்டமான நீரூற்றுடன்.
மற்றும் ஓர் உடைந்த மனதுடன்
ஒரு பாடல்.

உன்னைக் கேட்பேன்:
”என் கனவுகளைப்
புரிந்து கொண்டாயா..?”

சில சமயங்களில்
நீ சொல்கிறாய் ஆம் என,
மற்றும்
சில சமயங்களில்
நீ சொல்கிறாய் இல்லை என,
எப்படியாகிலும்
அது நான் பொருட்படுத்தத் தக்கதல்ல.

நான்
கனவு காண்பதைத் தொடர்வேன்.


8. என் மக்கள்.

இரவு அழகானது,
என் மக்களின் முகங்களைப் போல.
நட்சத்திரங்கள் அழகானவை,
என் மக்களின் கண்களைப் போல.
சூரியனும் கூட அழகானது,
என் மக்களின் ஆன்மாக்களும் அழகானவை.



Thursday, August 17, 2017

சோகமயமான கவிதை.


வ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.

எழுத, உதாரணமாக:
இரவு நட்சத்திரங்களால் நிறைந்துள்ளது.
மற்றும் நட்சத்திரங்கள் நீலமாய்த் தொலைவில் நடுங்குகின்றன.

இரவில் காற்று ஆகாயத்தில்
பாடிக்கொண்டே சுழல்கின்றது.

(இத்தகைய) இவ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.
நான் அவளை விரும்பினேன்,
சிலசமயங்களில் அவளும் என்னை விரும்பினாள்.

இது போன்ற இரவுகளில்
நான் அவளை என் கைகளுக்குள் பொத்திக் கொண்டேன்.
முடிவேயில்லாத வானின் கீழே
நான் அவளைப் பலமுறை முத்தமிட்டுள்ளேன்.

அவள் என்னை விரும்பினாள்,
சிலசமயங்களில் நானும் அவளை விரும்பினேன்.
எப்படி அவளுடைய நீளமான நிலைத்த
விழிகளை
நான் விரும்பாமல் இருந்திருக்க முடியும்?

இவ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.
நான் அவளை (என்னுடன்) வைத்துக் கொண்டிருக்காமல்
இருப்பதை நினைப்பதற்கு.
நான் அவளை இழந்து விட்டதை
உணர்வதற்கு.

மகத்தான இரவைக் கேட்பதற்கு, அவளில்லாமல்
மேலும் மகத்தானதாக ஆன இரவு.
மற்றும் கவிதை ஆத்மாவில் விழுகின்றது,
பனித்துளி புல் மேல் விழுவதைப் போல்.

அவளை என்னுடன் நிறுத்திக் கொள்ளாத என் காதலை
விட, வேறெது பொருட்படுத்தத் தக்கது?
இரவு நட்சத்திரங்களால் நிறைந்துள்ளது,
அவள் என்னுடன் இல்லை.

அவ்வளவு தான்.
தொலைவில் யாரோ பாடுகிறார்கள். வெகு தொலைவில்.
அவளில்லாமல் என் ஆத்மா தொலைந்து விட்டது.

அவளை என்னருகே கொண்டு வந்து விடுவதைப் போல,
என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
என் இதயம் அவளைத் தேடுகின்றது,
மற்றும்
அவள் என்னுடன் இல்லை.

அதே மரங்களை வெளிச்சப்படுத்துகின்ற
அதே இரவு.
நாங்கள்
யாராக இருந்தோமோ,
அவர்களாக இல்லாமல் போனோம்.

உண்மை,
நான் அவளை இப்போது விரும்பவில்லை தான்..
ஆனால், அவளை நான் எவ்வளவு விரும்பினேன்...!
என் குரல்
அவள் செவிகளைத் தொடுவதற்காகக்
காற்றைத் தேடியது.

வேறு ஒருவருடையவள்.
அவள் வேறு ஒருவருடையவள் ஆவாள்.
ஒருசமயம் என் முத்தங்களுக்கு
உடையவளாய் இருந்தவள் போல்.
அவள் குரல்,
அவள் மெல்லுடல்,
அவளுடைய கரைகாணவியலாக் கண்கள்.

உண்மை,
நான் அவளை இப்போது விரும்பவில்லை தான்..
ஒருவேளை நான் அவளை விரும்புகிறேன்.
காதல் கொண்டது குறைவு மற்றும்
மறதியோ வெகு காலம்.

ஏனென்றால்,
இது போன்ற இரவுகளில்
நான் அவளை என் கைகளில்
கொண்டிருந்தேன்..
அவளில்லாமல் என் ஆத்மா தொலைந்து விட்டது.

இருப்பினும்,
இதுவே அவள் எனக்குத் தரும்
இறுதி வலியாக இருக்கலாம்.
மேலும்,
இதுவே நான் அவளுக்காக எழுதும்
கடைசிக் கவிதையாக இருக்கலாம்.

- பாப்லோ நெருதா.

பாப்லோ நெருதாவின் The Saddest Poem கவிதையை மொழிபெயர்த்தது.

https://www.poemhunter.com/poem/the-saddest-poem/

Save to PDF

Thursday, July 27, 2017

நீலாம்பல் நெடுமலர். 18.



பொன் விளை நிலத்தில் செம்மணிக்கல் போல் முளைத்த முத்துத்துளி. நீலவிண் பாதையில் உருண்டு வரும் வெண்ணுரைத்தேர். நிழல் கருமையை உண்டு வளர்ந்த குழல் கற்றை. மென்முகில் சுருள் நுரைத்த நீள் சாரல்.  மொழிச் செழுமை குளிர்ந்து வந்த சொல்வெளி.

பனிபொழி பார்வை. தினை உயர் கூர்மை. தனிநில் தளிர்மரம். நனிசுவை நல்லிமை. பசுமை துளிர்த்து நிறையும் இளமேனி. பசுங்கிளி அலகின் செம்மை இதழ்கள். ஐவிரல் அமுதூறும் பூங்கரங்கள். தொல்தமிழ் கரைந்த சொற்கள் வழியும் மூவா முத்தம்.

மென்முத்தங்கள் இடும் நீரிதழ்கள். மயக்குறு மணம். மருதோன்றி இலைச்சாறிட்டு குடுமிகளில் குருதிக்குளிர்மை சூடிய நீள்விரல்கள். பித்தெழுந்த மாயம். பின்னெழுந்த காயம். தத்திவிழும் கைப்பிள்ளை. முன்னிற்கும் கோபுரம்.

நில்லா வான்மழையில் நனைந்து நிற்கும் பூமரம். இலைநுனிகளில் சரியும் வெண்பனித்துளி. நிலாப்பாலில் குளிக்கும் வர்ணமலர்கள். அடிவேர் வாசம். மண் குழைந்த ஈரம் கோடையில் கனவுகளாய் எழும் இரவு.

pic: https://s-media-cache-ak0.pinimg.com/736x/24/91/3b/24913b86c74e90b034cbdb730db77420--divine-goddess-goddess-art.jpg

Sunday, July 16, 2017

சொல் ஆட்டம்.

வி, ம், ந, ர, வ, பா, தா, த, ள

மேற்கண்ட எழுத்துக்களைக் கொண்டு எத்தனை சொற்களை உருவாக்க முடியும் என்று தினத்தந்தியில் ஒரு முறை பார்த்து முயன்றதில் கிடைத்தவை கீழே.

தாவரம்
வனம்
தா
வரம்
வளம்
பாவி
பாதாம்
பானம்
பாரம்
பாவம்
பாளம்
தளம்
தாளம்
விதானம்
தரம்
ரதம்
பாதம்
வதனம்
வரதம்
தாரம்
பாதாளம்
தாம்
ரவி
தனம்
தம்
தாவி
தவி
விதம்
தவம்
வதம்
விவரம்
பா
பாரதம்
பாவதானம்
வரதா

மேலும் சொற்களை அமைக்க முயன்றால், சொல்லுங்கள்.

Thursday, March 23, 2017

அசோகமித்திரன் நினைவஞ்சலி.

மிழ் மொழியின் மிகச் சில பேரெழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன், இன்று மறைந்து விட்டார்.

தினொன்றாம் வகுப்பில் அரையாண்டில் நடந்த ஒரு பேச்சுப்போட்டியில் வென்றதற்காக புத்தகப் பரிசு கொடுத்தார்கள். அதை நானே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதால் ஒரு சனிக்கிழமையில் ஈரோடு வேலா புத்தக நிலையத்திற்குச் சென்றோம். அந்நாட்களில் நூல்கள் என்றால் ஈரோட்டில் வேலா மட்டும் தான். அவ்வளவு பிரபலம்.

அதிகம் விற்கின்ற பேனா, பென்சில், நோட்டுப் புத்தகம், சார்ட் பேப்பர், பாட புத்தகங்கள் என்று அடுக்கப்பட்டிருந்த தரைத்தளத்தின் மேலேறி முதல் தளத்திற்கு வந்தால் பொது நூல்கள். அலமாரிகளிலும் சுழல் அடுக்குகளிலும் நிரப்பப்பட்டிருந்தன. அங்கே இங்கே சுற்றிச் சுற்றி அலைந்து எதை எடுக்க எதை விடுக்க என்று ஆனந்தத்தில் திணறி, இறுதியாகத் தேர்ந்தெடுத்தது, ஒரு சிறுகதைத் தொகுப்பு.

70களில் வெளிவந்த சிறுகதைகளில் தமக்கு நன்றென பட்ட சிறுகதைகளைத் தொகுத்து ‘நவீனத் தமிழ் சிறுகதைகள்’என்று வெளியிட்டிருந்தார், அசோகமித்திரன். இன்றும் அப்புத்தகம் வீட்டில் இருக்கின்றது. நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு என்று நினைக்கிறேன். சாம்பல் நிற அட்டையில், ஒயிலாய் ஒரு பூச்செடி நின்றிருக்கும்.  அதைத் தேர்வு செய்து, கூட வந்திருந்த ஆசிரியரிடம் கொடுத்து விட்டேன்.

அரை நாள் பள்ளி முடிந்து, நடந்த கலை விழா நிகழ்வில் அப்புத்தகம் பரிசாக எனக்குக் கொடுக்கப்பட்டது. பள்ளியிலிருந்து வீட்டுக்குப் பதினாறு கி.மீ. பேருந்தில் அமர்ந்து படிக்கத் தொடங்கினேன்.

உண்மையில் சொல்லப் போனால், வயதுக்கு வருதலைப் போன்ற நிகழ்வு அது. அந்நாள் வரை துப்பறியும் கொலைக் கதைகளில் மட்டுமே ஊறியிருந்த ( நன்றிகள் : ஜி.அசோகன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர்...) மனம் புது பரவசத்தைக் கண்டு கொண்டது.

’மருமகள் வாக்கு’ என்ற கிருஷ்ணன் நம்பி கதை தான் முதல் கதை. அங்கிருந்து துவங்கி, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்’, ‘எஸ்தர் - வண்ணதாசன்’, ‘தனுமை - வண்ணநிலவன்’, ‘நகரம் - சுஜாதா’, ‘நாயனம் - ஆ.மாதவன்’, ’தவம் - அய்க்கண்’, இந்திரா பார்த்தசாரதியின் ஒரு டெல்லிக் கதை, இறுதியாக அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’. மேலும் பல கதைகள். நினைவிலிருந்து மீட்டு எழுதுவதால், சில கதைகள் விடுபட்டிருக்கும். ஒவ்வொரு கதையும் மன உலகின் வாசல்களை ஒவ்வொன்றாகத் திறந்து விட்டன.

இப்படியெல்லாம் கதைகள் இருக்கின்றன, தமிழில் எழுதுகிறார்கள் என்று தெரிய வந்த ஆச்சரிய அனுபவம் அது. வீட்டிற்கு வருவதற்குள்ளும் வந்தும் மொத்தக் கதைகளையும் படித்து முடித்து விட்டுத் தான் மறு வேலை பார்த்தேன். இவ்வகையில் தலைப்பே போல், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பரந்த அறிமுகத்தைக் கொடுத்த வகையில் அசோகமித்திரன், எனக்கு ஓர் காணா ஆசிரியர்.

18-வது அட்சக் கோடு’ என்ற நாவலை எதோ ஓராண்டு ஈரோடு நூல் அழகத்தில் வாங்கினேன். நீரொழுக்கு போன்ற கதை. அதிர்ச்சி சம்பவங்களோ, தடாலடி திருப்பங்களோ, உணர்ச்சிப் பிழம்பாறுகளோ எதுவுமே இல்லை. கதை, அது பாட்டுக்குப் போகின்றது. சந்திரசேகரனின் கதை. கடைசி நிகழ்வு வரை மெதுவாக, மிக மெதுவாக டெம்போ ஏறிக் கொண்டு சென்று, சந்திரசேகரன் தன்னைச் சூழ்ந்தெரியும் அரசியல் அனலை அறிந்து கொள்ளும் முடிவில், மனம் கனம் கொள்கின்றது. ஜெயமோகன் தன் தளத்தில் இந்நாவல் பற்றிய ஆர்.வி.யின் கேள்விக்கு அளித்த விளக்கமும், பதிலும் அட்சக்கோட்டை புதுப் பார்வையில் காண வைத்தது.

ற்றன் நாவலையும் ஒருமுறை சென்னை நூல் அழகத்தில் தான் வாங்கியிருந்தேன். அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்கள் மாநாடு. தனித்தனிக் கதைகள் போல் தோன்றும் இக்குறுநாவல் அவ்வாறல்ல் என்றே தெரிந்தது.

ஜெயமோகனை அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்ற போதும், அவர் நினைவு கூர்ந்து சொன்ன கதையும் அசோகமித்திரனின் கதை தான். திருப்பம் என்று தலைப்பு என்று நினைக்கிறேன். கியர் மாற்றக் கற்றுக் கொள்ள முடியாமல் திணறும் க்ளீனர் பையன், சட்டென ஒரு கணத்தில் கிளட்ச் போடும் லாவகத்தைக் கற்றுக் கொள்கிறான். ஓர் அறிதல். இனி அவன் பழைய ஆள் அல்ல. ஒரு புது அறிதல் அவனுக்கு கிடைத்து விடுகின்றது.

இப்படி, ஓர் கண நேர அறிதலை அளித்த ஆசிரியர் அசோகமித்திரன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

தமிழுக்குத் தொண்டு செய்வோன் மறைவதில்லை;

வாழிய நீர் என்றும்,  எம் மொழியில், எம் சொல்லில், எம் நினைவில்!

Saturday, March 11, 2017

தேவி நின் புகழ்

தேவி

செஞ்சுடரோ செம்மலரோ செவ்விதழோ செய்தவம்
பஞ்சிணையோ பால்கலமோ பற்றெரியோ உய்நலம்
வஞ்சினமோ வாய்நலமோ வன்வழியோ பெய்புலம்
அஞ்சுவனை ஆதரிக்கும் தாள்.

கோடானு கோடிகோள் ஓயா வெளியிடை
ஓடாநின்ற ஒற்றைப் புவிதனில் - பாடாத
பாடுபடும் பிள்ளையைப் பாராட்டத் தாலாட்டப்
பீடுடன் தோன்றியதுன் தாள்.

நெய்யகல் பூமுகம் பொய்யகல் தீநிறம்
கையகல் பொன்னொளி மையகல் கூர்விழி
தையலுக்குத் தேந்தனம் வையலுக்குத் தீங்குரல்
மையலுக்கு நீர்மணம், நீ.

அனல்பூ முகமே தணல்தேன் விழியே
புனலாழ் மனமே புதுஆ - மணற்றுளி
முத்தே மரகதச் சொத்தே மதுரசப்
பித்தாக்கும் பின்னும் நடை.

Tuesday, March 07, 2017

புதுப் பிள்ளையார்.

பல்லவி:

மூத்தபிள்ளை சுந்தரா...
முழுமதிநிறை மந்திரா...

கனிகொண்ட கள்வனே - மாங்
கனிகொண்ட கள்வனே - என்மேல்
கனிவாய்நீ கணபதியே...


அனுபல்லவி:

தந்தைக்குத் துணைவன்நீ
தம்பிக்கு நண்பன்நீ
அன்னைக்கு அன்பன்நீ
அன்பர்க்கோ யாவும்நீ... (மூத்தபிள்ளை)



சரணம் 1:

அவ்வைக்குத் தமிழைத் தந்து,
அவள்தமிழில் குளுமை கொண்டு,
அழகனுக்குக் கன்னி தந்து,
அரசடியிலே அமர்ந்த.. (மூத்தபிள்ளை)



சரணம் 2:

எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை
எவரிடத்தும் மறுப்புமில்லை
பொல்லார்க்கும் பொறுமைகாட்டி
நல்லார்க்கு நலமூட்டும்... (மூத்தபிள்ளை)


புது ஊர்வசி.


ஊர்வசி, ஊர்வசி, you just do it ஊர்வசி,
ஊக்கமின்றி ஓய்ந்திருந்தும், you just do it ஊர்வசி,

வாய்ப்புகள் கொட்டவே, you just do it ஊர்வசி,
வாசலைத் தட்டவே, you just do it ஊர்வசி,

கேளடி ஒளியே, ஒயிலே உலகில் வாய்ப்புகள் நூறு லட்சம்
நீயடி உளியே, சிலையே கொண்டு செல்லடி உனது பக்கம்

வாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,
வானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி

(ஊர்வசி)

நாலு பேரு மறுத்து சொன்னா, you just do it ஊர்வசி,
நூறு பேரு எதிர்த்து நின்னா, you just do it ஊர்வசி,
வெட்டி வேலைன்னு யாரும் சொன்னா, you just do it ஊர்வசி,
பொறுப்பே இல்லன்னு ஊரும் சொன்னா, you just do it ஊர்வசி,

கேளடி இன்றே, இங்கே உழைக்கும் கைகள் ஊரை வெல்லும்
நீயடி நின்றால், வென்றால், இமய மலையும் குனிந்து செல்லும

வாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,
வானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி

(ஊர்வசி)

தொட்டதும் வீணை மீட்டாது
தொல்லைகள் இருக்கும் போகாது
பூக்களால் பாதை அமையாது
புதையலோ எளிதில் கிட்டாது

வேர்களில் நீரே தங்காது
வேர்வையில் வீணே கிடையாது
இடையிலே நில்லா துழைத்தாலே
இறுதியில் தோல்வி கிடையாது.

இலக்கு ஒன்றை இருத்திக் கொண்டு, you just do it ஊர்வசி,
அதற்கும் மேலே ஆசைப் பட்டு, you just try it ஊர்வசி,
முட்டி நிற்கும் குட்டி சுவரை, you just break it ஊர்வசி,
முயற்சி செய்து முழுமை கொள்ள, you just live it ஊர்வசி,

(ஊர்வசி)

இளமையில் உழைப்பே இல்லாமல்
இருந்திட வாழ்ந்தும் என்ன பயன்?
இதயத்தில் துடிப்பே இல்லாமல்
இருப்பவர்க் குலகில் என்ன பெயர்?
விளக்குகள் சுடரே ஏந்தாமல்
விலகுமா அறையைச் சூழ்ந்த இருள்?
விடியலை நோக்கிப் போகாமல்
விழுந்துமே கிடந்தால் என்ன பொருள்?


நன் இனிப் பால்.

குனிந்த முகத்தின் கனிந்த இதழைத்
துணிந்து மலர்த்திப் புரள்.

கனியே உனையே இனியே நினையேன்,
தனியே படுப்பின் துயர்.

உம்மைக் கருதினேன் வெம்மை பெருகினேன்.
நம்மை எரிப்பது தீ.

விரல்தொடு வில்லாய் விழிதொடு விண்நீர்க்
குரலெடு, குன்றுது நாள்.

தளிரிலை அங்கே கனியிணை இங்கே
களித்திடு என்றது யார்?

குவிமலை மையம் குவிந்தது எண்ணம்
கவிழ்ந்தது வாயென்ற நா.

Friday, February 24, 2017

நீலாம்பல் நெடுமலர்.17.


ழிலியே! மெல்லெழும் தென்றல் நறுமண மயில் தோகையே! மல்லிச்செடி இலையே! கெழு உடல் தேக்கென நிற்கும் செம்பொன் மேனித் தேவியே! கருவன் குழலென குரலிழையும் தேன் வழித் தேவதையே!

என் படுக்கை முட்கள் மேல் குளிர்ப் போர்வையாய் மூடுக! போர்வைக்குள் பொத்தி வைத்துக் கொள்க கொல்க என்னையே! கூர்நுனிக் கத்தி முனைகளைத் தீட்டிக் கொண்டு வெந்தசையில் மெல்ல இறக்கிக் ரத்தத் தீற்றல் ஊற்றலாகி உருகி ஊற்றுகையில் நூல் கற்றைகள் செந்தீ பரவு வான் போல் சிவக்கையில், என்னுயிர் உன்னுடன் கலக்கட்டும்.

தகதிமி..! தகதிமி..!

உன் பாதங்கள் என் இதயத்தை ஆளட்டும்! உன் கூந்தல் என் உதயத்தில் விரியட்டும். உன் இடை என் இருப்பை இறுக்கட்டும்! உன் விரல்கள் என் கர்வத்தைக் கலைக்கட்டும்! உன் செவ்வதரங்கள் என் செங்குருதித் தீயை அணைக்கட்டும்!

தகதிமி..! தகதிமி..!

சொல் களைந்து மெளனம் அணிவோம்; மெளனம் கலைந்து உளறல் புகுவோம்; பொய் கலைத்து மெய் தெரிவோம்; பகல் தவிர்த்து இரவணைவோம்; காற்றுலைந்து கரு புனைவோம்; இரு தொலைத்து ஒன்றாவோம்;


Sunday, February 19, 2017

செஞ்சுடராழித்துளி.



ப்ரியவதனி,

தேன் துளிர்த்திருக்கும் பல்லாயிரம் மலர்களில் எம்மலர் உன்னைச் சுமந்து கொணர்ந்து சேர்க்கும் என்னிடம்? ஈரம் குளிர்ந்திருக்கும் பலநூறு மேகங்களில் எவ்வொன்று உன்னைக் குளிர்விக்கும்? மனதேவதையே, உன் சிறகுகளில் பொத்தி வைத்திருக்கும் மெல்லிய கதகதப்பில் என்னை இழுத்தணைத்துக் கொள்வது எப்போது? மதுர மொழி பேசும் உன் அதரங்களில் ஆழ்ந்து அணைவது என்று?

தண்ணூறும் கேணியில் நீர் சேர்ந்து விளிம்பில் தளும்பும் சரத்கால முகில்களில் மென் மின்னலைக் கோர்த்து நீ உதறும் வெள்ளித்துளிகளில் நனைவது எந்நாள்?

பொன்மான் கொம்புகளில் சிக்கிக் கொள்ளும் மல்லிகைக் கொடியில் நிறைந்திருக்கும் சிறுமொக்கு மலர்களின் மணம், கொம்பு துழாவும் திசைகளெல்லாம் தன்னைப் பரப்பித் தானும் நிறையும் போல், உன் சொற்களில் என்னை அழைத்து பெயருக்குப் பொருள் தருதல் எக்காலம்?

இல்லையென ஒரு நாளும் உள்ளதென ஓர் இரவும் இப்புடவியைத் திருப்பித் திருப்பி விளையாடல் போல், பார்வையைத் திருப்பியும், பார்த்தலைத் தவிர்த்தும் புரட்டிப் போடுகிறாய். குளிர்க் குருதியில் குறுமுட்கள் குத்திக் கிழிக்கும் பொழுதுகளில் உன் படுக்கையில் நீ கவலையின்றி உறங்குகின்றாய்.

நதியின் ஆழிருளில் பாசிகள் வளரும் பாறைகள் யுகயுகமாய்க் கிடத்தல் போல், மனக்குடிலின் கூரை மேல் உன் விழிகள் பதியன் போடும் புள்ளிகளில் எல்லாம் தேன்பூச்சிகள் சுற்றுகின்றன.

பெய்யும் பெருமழைக்கு கரும்பாறைக்கடியில் குடைபிடித்து அமர்ந்து கொண்டு, வெறுங்கை நீட்டிக் குவித்துச் சிறு துளிகளைச் சேகரித்து தாகம் தணிக்கிறேன்.

பனிக்காற்றுக்குப் பதுங்கிக் கொள்கின்ற வெண்கரடி உள்ளம் உனது; தேடித் தேடிக் கொணர்ந்த வர்ணக் குடையை விரித்துக் கொண்டு நீர்க்கரைகளில் காத்திருக்கிறேன், உன் காலடித்தடங்களை மஞ்சள் பூக்களால் அலங்கரித்து.

(PIC: http://data.whicdn.com/images/22354922/original.jpg)

Saturday, February 18, 2017

ராத்திரியின் பயணி.


தேங்கிய நீரோடையின் கரையில் ஒரு பாறை யுக யுகமாய்க் காத்திருக்கின்றது, ராத்திரியில் மட்டும் வரும் ஒரு பயணிக்காக.

தனிமையில் இருளில் நிழல் கூட அறியாது வருகின்ற அந்த ஒரு பயணிக்காக மட்டும், இறுகிய பாறையின் உள்ளிடுக்குகளுக்கு இடையிலே ஊறிக் கொண்டிருக்கும் வெந்நீர்த் துளிகளுக்காக, மேற்கே உலர்பாலைப் பெருநிலத்திலிருந்து கசங்கிய குடையை விரித்து, புழுதியில் அலைந்த சிக்கெடுத்த தாடியைச் சிதற விட்டுக் கொண்டு வருகின்ற அந்த ஒரு பயணிக்காக.

சூரியன் தினம் சிந்தும் துளி விந்துவைத் தேக்கிக் கொண்டு அழுகின்ற நிலவைத் தலையில் தாங்கிக் கொண்டு கால்களைத் தேய்த்துத் தேய்த்து இழுத்துக் கொண்டு வருகின்ற, உருளும் கண்களில் கரை கட்டியிருக்கும் நீர்த்தேக்கத்தில் பிம்பங்களைப் பதிக்கும் மணல் பாதையின் முடிவில் அமர்ந்து ஓய்வெடுக்கின்ற வயதான அந்த பயணிக்காக.

முட்புதர்களுக்குள் பதுங்கிய எலிகளுக்கும் ஏதேனும் கொண்டு வருகின்ற பயணியின் ராத்திரிக் கதைகளில் ஏதேனும் மிஞ்சியிருக்குமா முந்தைய ஊரின் நிழல்கள்?

(PIC: http://farm3.static.flickr.com/2017/2116909026_f90dba8d16.jpg)

Tuesday, February 14, 2017

நீலாம்பல் நெடுமலர்.16.


நீள்மணிக் கழுத்தில் மென் முத்தங்கள் பதித்திடும் இவ்வேளையில், உன் வெட்கத்தைக் கொஞ்சம் வெளியே போகச் சொன்னாலென்ன?

சிறு கற்றைகள் சரிந்திருக்கும் நெற்றியில் ஒதுக்கி மணம் நுகர்கையில், பின் நகர்ந்து நீ மறைப்பது தான் என்ன?

முகமெழும் கோபத்தைக் கொஞ்சிக் கொஞ்சி ஆற்றிவிட்டபின் ஆழிதழ்த் திறந்து நாசுவைக்கையில் நீ கொள்ளும் மகிழ் தான் என்ன?

பூவாகும் வாழ்வில் தேனாகும் பாவம் போல் தேவி நீ கொள்ளும் ஆறாக் கனவில் நானுமொரு தேனீ போல் வனமெங்கும் உலாவி, உன் பல்வர்ண மலர்களில் சொட்டுச் சொட்டாய் இனிப்பள்ளி சேகரித்து வைக்கும் கூட்டில் மெல்ல உள் நுழையும் பொன்விரல் உன் பார்வை என்கையில் நாணம் களைந்து நீ அணைத்திடுவாய் என்றால் என் சொல்வாய்?

நறுமலர் புனையும் நெடுங்கூந்தலில் விரல் விரவி அளைந்து பின்னிரவின் வான்சரடு போன்ற ஒற்றைக் கற்றையைக் கட்டிச்சுருட்டிப் பின்னிழுத்து மேனோக்கும் விழிகளில் மென்பற்கள் பதித்து ஈரமிழக்கையில், மனமெண்ணுவது எது என்று கேட்டால் என் சொல்வாய்?

வெம்மை அலையடிக்கும் செவிமடல்களை நாசியால் வருடி செம்மையாக்குகையில், துளியாய்த் துவங்கி பனிப்பாறையாய்ச் சரிந்து பாய்ந்து பின்னெழிலில் மறையும் வியர்வைத் துளியைச் செய்கையில், இமைப்பீலி நுனிகளில் விடிகாலை இலைநுனிப் பனித்துளிகள் போல் கண்ணீர் சுமந்திருக்கையில், மாங்கதுப்புக் கன்னங்களில் மாறிமாறி இதழுரசுகையில்... மோகினி, நீ சூரிய ஒளிக் கதிர்க்கிரணம் போல் பொலிகிறாய் என்றால், பின்னிரவில் மலைமேல் விண்ணொளி விரவுப் புலத்தில் அசையும் காட்டுமரங்கள் போன்ற மயிர்கள் மண்டிய என் மார்பில் முகம் புதைத்து இதயத்திற்கு செவிகேளாமல் ஏதோ சொல்கிறாய்...

என்ன..?

Sunday, February 05, 2017

நீலாம்பல் நெடுமலர்.15.




னமே விழி; கனவே ஒழி; தினமே பொழி;

நகும் முகம் தெரியும் வேளையில் கடல் நுனியில் கதிரெழும் கணம்.

நீலத்தாமரையைச் சுற்றும் பொன்வண்டு என் எண்ணம். வேறெங்கே மழை பொழிகின்றது என்றறியாது நனையத் துடிக்கின்ற நீர்த்தவளை என் நினைவு. தீந்தழல் நடமிடும் சுடுவெளியைச் சுட்டிச் சுட்டி விழுகின்ற சிறு பூச்சி என் சொல். கனவிலும் நடிக்கின்ற நிழல் என் தவிர்ப்பு. கனவோ கற்பனையோ உன் விரல்நுனிகளைக் குளிர்விக்கின்ற இந்நதியின் அலைகளில் சுழல்கின்றது என் இருப்பு.

நீ வருகின்ற பாதைகளின் விளிம்புகளில் அடர்த்தியாய்ப் பூத்திருக்கும் செவ்விதழ் ரோஜாக்கள், என் முத்தங்கள். நீ உணர்கின்ற சுகந்தத்தின் சுரப்பு மையங்களாய் மஞ்சள் சம்பங்கிகளை என் சொற்களில் பூசி அனுப்புகிறேன். நீ மெல்லிய வெண்விரல் கொண்டு கோதுகையில் விலகி விடுபடும் ஒற்றை முடி உறங்குகின்றது என் மனவிருளின் ஆழங்களில்.

எழிலொளி வீசி வரும் பசுமுகிலே! ஈரக்கொத்துகளை சுமந்து நிலவு மறைத்து நீ மிதக்கின்ற வானவெளியில் வெண்புறாவென உனைத்தீண்டி நனைய இரு சிறகுகளை இறைஞ்சுகிறேன்.

புது மொழியொன்றின் பரவசத்தில் நீ சிந்தும் சொற்களை அள்ளிக் கொண்டு என் பெட்டிகளில் பதுக்கிக் கொண்டபின், மயில்குட்டிகளாய் அவை பெருகுவதை ஒவ்வொரு இரவும் ரகசியமாய்த் திறந்து பார்த்து மகிழ்கிறேன்.

Friday, February 03, 2017

நீலாம்பல் நெடுமலர்.14.



மீண்டும் ஒரு மழைக்காலத்தில் சந்திப்போம்.

மென்மலராய் நீ விலகிச் செல்கிறாய். நதியின் மேலிருந்து வீசிக் கொண்டிருக்கும் மாலைக் காற்றில் கரையோர நாணல் செடியிலிருந்து பறந்து செல்லும் வெண்பிசிறிலை போல. மடிப்புள்ள மலைகளின் இடுக்குகளிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் காட்டின் மணம் போல, நீ நகர்ந்து கொண்டிருக்கின்றாய்.

நேற்று நாமிருந்தோம் சொர்க்க வெளியில். இன்று நாம் பிரிந்தோம் தர்க்க வெளியில்.

பெய்யு மழை அறிவதில்லை, செம்மண் பூமியிலா, செங்காந்தள் மலர்மேலே, கருங்கல் பாறையிலா, காதல் மனதிலா என்று.

எதிர் நோக்குகையில் கடக்கின்ற இரண்டு நொடிகளுக்குள் புன்னகைப்பதா, வேண்டாமா என்று முடிவெடுக்குமுன் துளியினும் துளியாகச் சின்னஞ்சிறு இதழ் அசைப்பாய். காலப் பிரம்மாண்டம்.

நெய்நிறை சுடர்முகம் சொட்டுகின்ற பார்வை ஒளி மனவிருளை ஒருகணம் விலக்கி அணைகின்றது.

நீள்விரல்கள் நீள் திசைகளில் எல்லாம் நீர் போல் நீயே குளிர்ந்திருக்கிறாய்.

கண்களைக் கற்று கொண்டு விட்டாய் எளிதில். நடிக்க முடியாத நொடிகளைத் தருகின்றாய்.

மனக்கோட்டை இடையில் நிற்கின்றது. கடக்கவியலா அகழியில் கொடுமுதலைகள். மென்புற்களாலான பரிசலை ஏந்திக் கொண்டு, நாணல் துடுப்பால் கடக்கத் தெரியாமல் அக்கரையில் நிற்கின்றேன்.

Thursday, January 26, 2017

நீலாம்பல் நெடுமலர்.13.



நீ என் முடிவுறாத மெளனம்
நான் உன் முடிவிலாத நாணம்

கனவுகளில் ஓராயிரம் கணங்கள்
காண்கையில் மோதிடும் எண்ணங்கள்

பாதைகளில் பதியன் போடும் பூக்கள்
பதிகையில் குருதி வழியும் முட்கள்

வர்ணமழிந்த ஓவியத்தின் நகல்
வாசமிழந்த மலரின் நிழல்

இரவுகளில் நிழல்களின் பயணம்
இருக்கையில் தனிமையின் சலனம்

இதயமே வலியின் இருப்பிடம்
இருக்கும்வரை துயரத்தின் வசிப்பிடம்

போரிடும் களத்தின் விதிகள்
பொம்மைக் கரங்களில் வாட்கள்

வேனில் மரத்தினடி விழுகனி
கானல் நதியினுள் களிமனம்.....

Friday, January 13, 2017

பொங்கல் வெண்பா.

'கரம் வெண்பா அரங்கம்'  ஃபேஸ்புக்கில் முதன்முறையாகப் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெண்பா இயற்றும் போட்டியை அறிவித்தது.
அதற்கு எழுதிய வெண்பாக்கள் ::

முதல்வன் துதி!
**********
முந்திவரும் மூத்தோனே! முன்னிற்கும் முற்றருளே!
தொந்திபெரும் தோழமையே! தொல்லெழிலே! - தந்திடுவாய்க்
கந்தனுக்குக் காதலிபோல் காவியமாய்ச் சொல்லாட
வந்தருளை வாரித்தா நீ.

கலைமகள் காப்பு.
************
வெண்கமல வேதவல்லி! நல்வீணை நாதமல்லி!
பெண்ணுருவில் பேரறிவே! பெற்றுனைநான் - எண்ணியசொல்
இங்கிவனே சொல்வதன்முன் இன்றென்று மெப்பொழுதுந்
தங்கிடுவாய்த் தாயேயென் னுள்.

குரு வணக்கம்.
**********
எங்குமிருப் பேரொலியை எண்ணென்றும் சொல்லென்றும்
எங்களுக்குக் கற்பிக்கும் எல்லோர்க்கும் - எங்கெங்கும்
தாழ்பணிந்துக் கீழமர்ந்துத் தானிறங்கிக் கும்பிட்டால்
தாழ்வில்லை வாழ்வினிலே பார்.

கண்ணன் முத்தம்.
****************
மதுரநாத வேய்ங்குழல் மாலைநேரக் காற்றில்
மதுக்குடம் வீழ்ந்த எறும்பா - யதுவுமூறித்
தேனாடும் மாய்வது போலாகும் காதலி
நானாடும் கண்ணன் இதழ்.


பழம்பொருள் அகற்று நாள்.
******************
இல்லத்தின் உள்நிறைத் தூசடைத் தொல்பொருள்
உள்ளத்தின் உள்ளுறைத் துர்க்குணங்கள் - வெள்ளத்
தழுக்கென நீங்க புதுப்பொருள் தேங்க
செழுந்தீ துடிக்கின்ற நாள்.

தைத்திருநாள்.
*********
வானிலிருள் போகுமுன்னே வீசுபனி தீருமுன்னே
கேணிநீரைச் சேந்தியெடுத் தூற்றிமேலுன் - மேனிமுழு
நீராட்டிப் புத்தாடைத் தானணிந்துப் பெற்றோரைப்
பாராட்டிப் பாதத்தில் சேர்.

தெய்வந் தொழுது மலர்தூவிக் கும்பிட்டுப்
பெய்கப் பெறுக திருவாழ்த்து - செய்க
புதுப்பானை செங்கரும்பு பொன்னரிசி வெல்லம்
எதுவேண்டு மென்றறிந் தால்.

கதிருக்குத் தீகாட்டி வெம்பானை நீரில்
கதிரள்ளி இட்டுக் கலக்கி - அதிசுவை
எங்கும் பரவ இனிப்பிட்டுக் கூவுக
பொங்கலோ பொங்கல் என.

கீழ்வானில் செவ்வாடை மேலுறையும் வெண்ணிலவு
தாழ்வாரப் பூவாடை தாவணிப்பூ - வாழ்வூறும்
பொற்பானைப் பொங்கலிட செங்கரும்புச் சாறுடனே
நற்பாடல் கூவிக் களி.

நற்சொல் வளருதல் நண்பர்க்கும் சொல்வதால்
நற்பேர் வருதலோ உற்றாரால் - உற்றநற்
பொங்கலைப் புத்துணவை எல்லோர்க்கும் தந்திட
பொங்குமாம் இன்பமே நாள்.

அன்னைக்கைப் பொங்கலில் அக்காக்கைச் சட்னியில்
கன்னல்நீர்ச் செங்கரும்பில் சேற்றுக்கை - நன்றாய்ச்
சுவைத்து மகிழ்ந்து இனிப்பூறுஞ் சொல்லால்
அவையில் இயம்பு "நலம்!"

கரும்பைக் கடித்து வழிசாற்றை உண்டு
அரும்பும் அனைவரோடும் அன்னைப் - பெருமூத்தோர்
சேர்த்து உரையாடு! பேசு மகிழ்வோடு!
தீர்த்து கசப்பை மற.

வீதியெலாம் கொண்டாட்டம் ஊரிலெலாம் உற்சாகம்
ஆதிநாள் ஆர்ப்பாட்டம் ஆட்டத்தில் - மோதிநீ
சேர்ந்தாடு வென்றாடு தோற்றாடு வெள்ளமாய்
வேர்த்தாடு ஆண்டிலிந் நாள்.

ஏறு தழுவுதல்
**********
துடுக்கான பிள்ளையைத் தாமடக்கல் போலே
விடுக்கின்ற காளையரை வீழா - தடுத்திடும்
பாய்வீரம் கொண்டு தழுவி அணைத்துப்பின்
சேய்போலே கட்டியணை வோம்.

Thursday, January 12, 2017

நீலாம்பல் நெடுமலர்.12.


குறுவாளின் நுனிநாணும் விழிகொண்டு வந்தாய்!
குறுந்தோகை நனிகாணும் நிறம்கொண்டு வந்தாய்!

சிறுமுருங்கை மரம்போலே தோள்கொண்டு வந்தாய்!
சிவப்பான பழம்போலே முகம்கொண்டு வந்தாய்!

வளைந்தாடும் மலைபோலே இருபுருவம் கொண்டாய்!
வளையாத வாள்போலே ஒருநாசி கொண்டாய்!

கலையாத கனிபோலே இருகன்னம் கொண்டாய்!
களியூறும் செழிப்பாலே இருவிதழ்கள் கொண்டாய்!

சறுக்காத வழிபோலே பனிக்கழுத்து கொண்டாய்!
சலிக்காத மதயானை இருமார்பு கொண்டாய்!

முளைக்காத கொழுந்தாக இருகூர்மை கொண்டாய்!
முழுதாகச் சுவைக்காத இருவமுது கொண்டாய்!

(வேறு)

சரியாத பெரும்பாறைச் சிலையொட்டி நிற்க
சரியாகக் குறும்பாறை அதன்மேலே நிற்க
வரையாத இருவட்டக் குமிழ்நுனியோ நிற்க
வனையாத தழல்மூச்சு அதைச்சுற்றி நிற்க

இணையாத ஒருபாதை இடையினிலே ஓட
இணையான இருமதலை இறுக்கங்கள் கூட
இனிமைத்தீ அனலோடு அருகினிலே வாட
இனிக்காத எச்சில்நதி தீராது நாட

(தொடர்)



பிறக்காத நிழல்களுக்குள் பதுங்கி வந்த இருள் நீ!
பிதற்றாத மொழிகளுக்குள் மிதந்து வந்த பொருள் நீ!

திறக்காத கதவுகளைத் திறக்க வந்த கரம் நீ!
திகட்டாத உதடுகளைச் சுரக்க வந்த சுரம் நீ!

இமையாத இரவுகளில் இணைக்க வந்து படர் நீ!
அமையாத உறவுகளில் அணைக்க வந்த சுடர் நீ!

மதுப்பார்வை உருக்க வந்த ஒரு கள்ளிமலர் நீ! என்
மனப்பாறை பிளக்க வந்த சிறு மல்லிச்செடி நீ!


Thursday, January 05, 2017

நீலாம்பல் நெடுமலர்.11.


கல் விளக்கின் சுடர் நிலையாக நின்றிருக்கின்றது. பொன் கல்லால் செதுக்கி வைத்த ஒற்றை விரல் போல் குவிந்து கீழகன்று மேல் குறுகிக் கூர் நுனி கொண்டு வானோக்கி ஒரு சிகரம் போல். செழும் செவ்வண்ணம் அடிவானின் சிவப்பு போல் அடியில் தேங்கி குவிகின்றது. புதுக்காலை கீழ் ஆகாயம் போல் இளமஞ்சள் நிறம் பரவிய மேல் பகுதியைத் தாங்கி நிற்கும் சுடர் ஓர் அற்புதம்.

சுடரைத் தீண்டும் எண்ணம் கிளரச் செய்யும் இளமனதை. சுடர் எப்போதும் எரிந்து கொண்டிருப்பதில்லை. விளக்கின் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கையில் தூண்டும் எரி அகம் கிளறிப் புறம் ஏகப் பற்றி எரியும் செந்தீ. சிறியதாய்த் தெரியும் திரியை வெம்மை தின்று கொண்டிருக்கும்.

அணையாச் சுடர் ஆளும் புடவியை பலகோடி சிறு சுடர்கள் காக்கின்றன. அவ்வெம்மை தீராதிருக்கும் வரை ஜீவ செழுமை நிறைத்துக் கொண்டிருக்கும் இவ்வெளியை.

Wednesday, January 04, 2017

நீலாம்பல் நெடுமலர்.10.

தேவி..!

இருள் கவியும் இலைகளின் அடியில் கவிழ்ந்துறங்கும் புழுவைப் போல் உறங்கிக் கிடந்தேன். பொன்னொளிர்க் கன்னிமையில் என்னுள் மஞ்சள் கதிரென நுழைந்தாய். விண்ணிலிறங்கும் வெண்ணிறகுகளுடன் ஒரு தேவதையாய் வந்தருகணைந்து மெல்லத் தீண்டினாய். பெரும்பாறை அடைத்துக் கிடந்த மனதின் பாதையில் உன் தொடுகை, நெய்யென உருகி ஒளி பாய்ச்சியது. கருணை பொழியும் கண்களால் என்னுள் நிறைந்தாய். உதிரமொட்டுகளை உன் தண்விரல்களால் மெல்லத் தட்டியெழுப்பினாய். நறுமணம் படர்க் காற்றை என்னைச் சுற்றிலும் நிரப்பினாய். சுகந்தம் திகழும் ஸ்வர்ணமாய்ப் பரவினாய்.

தேவி..!

இனிமை சுமக்கும் உன் இதழ்களில் ஒரு புன்னகை கொடுத்தாய். இமயத்தின் கருவறைக்குள் இருத்திக் கொண்ட குளுமையில் அமர்த்தினாய். ஒரு சொல் சொன்னாய். பைங்கிளிப் பேச்சின் பசுமையில் மறந்தேன். வெண்மணி வரிசையில் தத்தித் தத்தித் தாவிச் செல்லும் சிறு பிள்ளையாக மாற்றினாய்.

தேவி..!

மதுவே! மலரே! மலர் கொள் மணமே! புகழே! சிறுவிளக்கின் அகலே! மெய்யகல் நெய்ச்சுடரே! நெய்யகல் சுடர்முகமே! திருமகளே! துளிகர்வம் கொண்டு என்னை அள்ளிக் கொள்ளாயோ? அணைக்கும் இருகரங்களால் முழுதுடலை உனக்குள் இறுக்கிக் கொண்டாய். இன்னும் எஞ்சியிருப்பது சிறு வாழ்வே! தடுமாறி அலைபாயும் நாட்களில் பற்றிக் கொள்ள ஒரு வேங்கைமரக் கொம்பு போல கிடைத்தாய். மண் விலகி விண்ணேகும் பொழுதில் எண்ணிக் கொள்ள சில புன்னகைகளை விட்டுச் சென்றாய். இன்னும் கிடைக்கின்றது வாழ சில காரணங்கள்.

தேவி..!

முகில் கொழுத்த மாலை வானில் எட்டுத் திக்குகளும் அதிரக் கிளம்பும் வெண்மின்னல் போல் பேரொலி எழுப்பி நீ உள் நுழைந்தாய். குகைகளில் பதுங்கிக் கிடக்கும் மலை எலி போல சுருண்டு கிடந்தேன். பெருமழை புகுந்து தனதாக்கிக் கொண்ட பின் அலைகளில் அலைப்புண்ட மெல்லிலை போல் தத்தளிக்கிறேன்.

தேவி..!

உனக்கே என் நாட்களெலாம் அர்ப்பணம். உனக்கே என் இரவுகளெலாம் சமர்ப்பணம். சிரம் மேல் தாள் பதித்து நீ நடனமிடும் ஆனந்த நர்த்தனத்தில் என் குருதி உடைந்து பெருகி நின் கழலிணைகளைச் சூழும்.  அருளுடன் ஒரு கரம். அபயமென ஒரு கரம். பயங்கரத்துடன் ஒரு கரம். பயப்படேலென ஒரு கரம். ஆயிரம் பல்லாயிரம் சிரங்கள் காட்டி மாயத்தில் ஆழ்த்தும் மகாசக்தி, உன் செவ்விழி சினத்தில் எரிந்து தூசாகுமுன் மடி மேல் வைத்து உன் அமுதில் எனைக் குளிப்பாட்டு.