Monday, April 29, 2019

விடிகாலை.




விடிகாலை
இன்னும் முழுதாய்த்
துயில் கலையவில்லை.
முதல் உறவுக்குப் பின்
களைத்த
கன்னி போல்
முந்தைய இரவின் மழையீரம்
எழ விரும்பா சோம்பல்
திரண்ட கருமை
இருள் பூசிய பார்வை
வெங்கதிர் விரல்
வந்து
தீண்டும் வரை
வா,
இம்மேகப் புடைப்புகளின்
கீழ்
சற்றே
நிற்கலாம்
விழியிதழ் விரல்நுனி
கோர்த்துக் கொண்டு.

American Beauty.

ந்த ஒற்றை ரோஜா இதழ்ப்பிசிறு எங்கிருந்து வந்து என் மேல் விழுந்தது? சரியும் ஒரு பட்டுத் திரையின் மெல்லிய வழிதல் போல், சொட்டுச் சொட்டாய்ச் சேர்ந்த நீர்த்தாரை ஒன்றின் வடிதல் போல், நமக்கிடையே நிரம்பியிருக்கும் குளிர்க்காற்றின் அடுக்குகளில் மெல்ல மெல்ல தவழ்ந்து படர்ந்து கடந்து வந்ததா உன் காதலை ஏந்தி?
இதன் அடர்சிவப்பு, உன்னுள்ளில் சேர்த்து வைத்திருக்கும் என் மீதான ப்ரேமையின் மெளனத்தைச் சொல்கிறதா? இதன் மேலே புகை போல் விரவியிருக்கும் குளிர்மணம், முன்னிரவில் நீ கொடுத்த முத்தமொன்றின் ஈரம் போல அத்தனை இனிக்கிறதே?
மலரிதழ் நுனியை என் நாவால் தடவிப் பார்த்தேன். உன் மென்சருமத்தின் பூமுடி போல் அத்தனை கூச்சம்; ஒரு மென் சூடு;
கொஞ்சமாய்க் கிள்ளி சுவைத்தேன். உன் சிறிய இளம் மார்புகளுக்கு இடையில் வைத்து அனுப்பினாயா, என்ன? அதே நடுக்கம், அதே வியர்வை வீச்சம்.
ஒரு இதழ் போதாது; இந்த இரவை நிரப்ப, உன்னிலிருந்து அனைத்து இதழ்களையும் விடுவி. ரோஜா செம்மழை என் மேல் பொழியட்டும். அதன் புதர்களுக்குள் என்னைப் புதைத்துக் கொண்டு, இந்த வாழ்வை நீந்திக் கழித்து விடுவேன்.


விண்முழு துளிர்பூச்சிகள்.

கொல்லும் தனிநிலவின்
வெண்ணிழல்
பனிநனைக் குளிரின்
கூர்நுனி கிரணங்கள்
விண்முழு துளிர்பூச்சிகள்
வீசுகாற்றில் மிதக்கும் ஓசைகள்
கருநிழல் உண்ணும்
வெம்மை உலர் சுவர்கள்
இருள்நிறை இல்லங்கள்
ஒற்றையொளி அறைச்சதுரம்
பஞ்சடைத்த படுக்கை
துஞ்சிடா இரு விழிகள்.

மொழித்துணை பிடித்து
விழித்துனை நினைத்து
விரல்வழி வழி சொல்நிரை
முரல்வர்ணச் சிதறல்கள்

மண்மேல் வெகுதூரம்
தீண்டியும் விலகியும்
பேசியும் மெளனித்தும்
வளர் உறவிது தளிர் மரமிது
களர் நிலமிதில் கான் பசியது

நினைவலை மிதக்கும் படகினில்
இருமனம் உலவிய கதைகள்
ஒளிவிழும் சாலையில்
ஒழுகிய மாலைப் பொழுதுகள்
ஒருவரி இருவரும்
ஒருமித்துளறிய வியப்புகள்
சொல்லிலா பரிமாற்றங்கள்
மெளனத்தின் பங்குதாரர்கள்

இன்றுனை இழந்ததன்
இறுகிய கணங்களில் இருப்பு
இனியொரு முறை காணுதல்
இயலுமா என்றொரு மலைப்பு

இன்னுமொரு இவ்விரவு
உறக்கம் விலகிய களைப்பு
இன்றோடு விலகிடுதல்
என்றோ என்னும் தவிப்பு

மலரணிச் சிறுகூந்தல்
பரவிய படுக்கையில்
உறங்கிடும்  எழில்பரலே,
உன் கனவினில்
உலைந்திடும் பொன் வண்டென நுழைந்தனன்;
மனமெனும் குடுவைக்குள் மறைத்திடுக;
தினமொரு சிறு சிறகளிப்பேன்; சூடிப் பறந்திடுக.