Thursday, July 26, 2007

அர்ச்சனை.


"ம்மி.. வாட் இஸ் திஸ்..?" கேட்டான் ஹரி.

"திஸ் இஸ் சிவலிங்கா.. நான் சொல்லி இருக்கென் இல்லையா, லார்டு சிவா. அவர் தான் இவர்." சொன்னாள் வித்யா.

"மம்மி.. மம்மி.. இந்த ப்ளேஸ் நாம பிட்ஸ்பெர்க்ல ஒரு டெம்பிளுக்குப் போனோமில்லையா.. அது போலவே இருக்கு.."

"எஸ்.. இதுவும் கோயில் தான். பட் அங்கே நாம் பார்த்தது வெங்கடேஸ்வர் டெம்பிள். இவர் அவ்ரோட ரிலேஷன். ஓ.கே. இப்போ நம்ம ஷூஸ் எல்லம் ரிமூவ் பண்ணி, கார்லயே வெச்சிடுவோம்."

"மம்மி.. இந்த டெம்பிளுக்கு நாம ஷூ போட்டூக்கிட்டே போகக் கூடாதா? டாடி கூட சர்ச்க்கு போகும் போதெல்லாம் ஷூ போட்டுக்கிட்டு தான் போறேன். வொய் நாட் ஹியர்..?"

"அது வேற டெம்பிள். அங்க அப்படிப் போகலாம். இது வேற டெம்பிள். இங்க இப்படித் தான் போகணும்னு ரூல்ஸ் இருக்கு. நம்ம வீட்ல நாம ஸ்பூன்ல தான் சாப்பிடறோம். ஆனா, இங்க ஆண்டி வீட்ல கையில எடுத்து தானே சாப்பிடறோம். அது மாதிரி.."

"ஓகே மாம்.."

"சொல்லுங்கோ. யார் பேருக்கு அர்ச்சனை பண்ணனும்..?"

"ஹரி வில்லியம்ஸ்.."

"என்ன சொன்னேள்..? வில்லியம்ஸா..? இந்தப் பேருக்கெல்லாம் இங்க அர்ச்சனை பண்றதில்ல.."

"என்ன பண்ண மாட்டேளா..? என்னை யாருன்னு நெனச்சிண்டேள்..? திருவாரூர் சுவாமிநாதப் பிள்ளை தெரியுமோ நோக்கு? அந்தக் காலத்துல அவர் பாட ஆரம்பிச்சா, ஊருல இருக்கிற எல்லாக் குழந்தையும் தூங்கிடும். ஒரு தடவை, தஞ்சாவூர் மஹாராஜாவே நின்னு அவர் பட்டை ரசிச்சிண்டு அரசவைக்கு கூப்பீடு முந்நூறு ஏக்கரா எழுதி வெச்சார் தெரியுமா..? அவரோட பேத்தி வயிற்று மக நான். என் பையன் பேருல அர்ச்சனை பண்ண மாட்டேளா?"

"க்ஷமிக்கணும். நீங்க நம்மவானு தெரியாம போயிடுத்து. இருந்தாலும் பையன் பேருல துரைமார் பேர் இருக்கு. அதை எப்படி பகவான் கருவறையில சொல்றது..?"

"ஏன்..? நம்ம பகவான் தொரைமார்க்கெல்லாம் கருணை காட்ட மாட்டேன்னுட்டாரா..? நான் லண்டன் போய் படிச்சு, அங்கேயே வெள்ளைக்காரர் ஒருத்தரை விரும்பி கல்யாணம் செஞ்சுட்டேன். எங்களுக்குப் பிறந்த பையன் பேருக்கு நீங்க அர்ச்சனை பண்ண மாட்டேளா..?"

"இதோ பண்றேன்.."

"ம்மி..! எப்படி நீ இவ்ளோ அழகா இந்த லாங்குவேஜ்லாம் பேசறே..? வொய் நீ இந்த கண்ட்ரிய விட்டுட்டு, லண்டன் போனே?"

"அது ஒரு பிக் ஸ்டோரி ஹரி..! ஐ வில் டெல் யூ லேட்டர். இப்போ ப்ரே பண்ணலாமா..?"

கணினி ஓவியப் போட்டி.

இரவின் நதிக்கரையில்..!



ரவின் நதிக்கரையில் நெடும்பொழுது காத்திருந்தேன். இருளின் போர்வையும் தாண்டி நதியின் மேனியெங்கும் முத்தமிடும் பிரபஞ்சத்தின் நீலநிறம் போல், நம் பிரிவின் நீளத்தையும் மீறி, உன் மீது படிகின்றது, நம் உல்லாச நேரங்களின் ஞாபகங்கள்..!

உத்தர வானெங்கும் மினுமினுத்துக் கொண்டிருக்கும் மின்மினிகள், நம் நிழல்களையும் தீண்டாமல் மெளனமாய் நகர்ந்து சென்ற ஈரப் பூச்சிகள், நுரை சிந்தி அலை தூவும் கரைகள், சிலுசிலுப்பாய் வீசும் தென்றல் தனிமையில் அமர்ந்திருக்கும் என்னைக் கண்டு அனுதாபம் தெரிவித்துப் பின் போயின..!

இரவின் நீள ஆடையில் நூலாய்ப் பின்னிக் கொண்டிருந்த நம்மை அவிழ்த்து எறிந்தது, விதியின் வலுக் கரங்கள். பாலாடையில் ஓராடையாயும், நீரோடையில் நுரையாடையாயும் நீந்திக் கொன்டிருந்த நம்மை பிரித்துப் போட்டது, வெயிலின் வறண்ட கரங்கள்!

நாணல் கரைகளில் நனைந்திருக்கும் நம் கால்களை உரசிச் சென்ற ஈரமணல் உலர்ந்து போனது, என் அனல் மூச்சோடு!

ஒரு நாழிகை போல் நகராமல் நகர்ந்து செல்கின்றது, நொடி முட்களின் மேல் நடக்கின்ற நம் வாழ்க்கைப் பயணம்...!

கணினி ஓவியப் போட்டி.

Wednesday, July 25, 2007

உள்ளே.. வெளியே..!


பெரிதாகத் துளிகள் விழத் தொடங்கின.

கதவை இறுக்கமாகச் சாத்தினேன்.

இதை எதுவும் அறியாமல், அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

"லுக் பாபு! காதல் உங்களுக்கு வேணா விளையாட்டுப் பொருளா இருக்கலாம். ஆனா, என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு இது வாழ்க்கை பற்றிய பிரச்னை. ப்ளீஸ்! என்னைக் கைவிட்டுடாதீங்க. திடீர்னு என்ன பிராப்ளம்? ஏன் என்னை உங்களுக்குப் பிடிக்காம போயிடுச்சு? ஐயோ...! உங்க மேல நம்பிக்கை வெச்சு, உங்க கூட கோவளம் வரைக்கும் வந்தேனே.. அது தான் நான் பண்ணின பெரிய தப்பு. அங்க தங்கின ரெண்டு நாள்ல இப்ப, உங்க வாரிசு என் வயித்துல..! என் வாழ்க்கையே உங்க கையில் தான்.." அவள் அழுவது நன்றாக கேட்டது.

வெளியே தூரப் பார்த்தேன். மழை வலுத்து விட்டிருந்தது. ஃபோன் கூண்டின் மேல் துளிகள் கற்கள் போல் விழுவது நன்றாக உணர முடிந்தது.

ஏதாவது சொல்ல வேண்டுமே என்று வாயைத் திறப்பதற்குள், அவள் மீண்டும் குறுக்கிட்டாள்.

"வேணாம். நீங்க எதுவும் சொல்ல வேணாம். நீங்க ஒரு சீட்டர். பொறுக்கி. பொண்ணுங்களோட வாழ்க்கையோட விளையாடறதே உங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேலையாப் போச்சு. உங்களை நான் சும்மா விடப் போறதில்ல. போலிஸ் வரைக்கும் போவேன். ஆனா... உங்களை நம்பி என் வயித்துல உருவாகி விட்ட கருவுக்காகப் பாக்கறேன். தயவு செஞ்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க.. ப்ளீஸ்..." அவள் அழுவது கேட்டது.

இது போன்ற எத்தனை பெண்களைப் பார்த்திருப்பேன்..! முதலில் கோபப்படுவார்கள். பின் குழைவார்கள். பின் சமாதானப் படலம் வருவார்கள்.

மெளனமாய் இருப்பதை உணர்ந்து, "என்ன எதுவும் பேச மாட்டேங்கறீங்க? சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்.." என்றாள். ரிசீவர் டக்கென்று வைக்கப்பட்டது.

"எவ்வளவு சார் ஆச்சு..?" கேட்டபடி சில்லறைகளை அள்ளினான்.

"மூணு ரூபா குடுங்க ஸார்.." என்றேன் பில்லைச் சரிபார்த்தபடி. பூத்தின் கதவை இறுக்கிச் சாத்தியபடி, அடுத்த கஸ்டமர் எப்போது வருவாரோ என்ற எதிர்பார்ப்போடு..!

Tuesday, July 24, 2007

தீபாவளி வருதேன்னா..!


"ன்னா.."

"என்னடி?"

"இல்ல.. தீபாவளிக்கு இன்னும் மூணு மாசம் தான் இருக்கு.."

"அதுக்கென்ன இப்போ..?"

"போன வருஷமே நம்ம பொண்ணுக்கு 20 பவுன் தங்க நெக்லஸ் போடறதா சொன்னேள். இப்ப, அடுத்த வருஷமே வந்திடுத்து. மாப்பிள்ளை தங்கமான மனுஷன். இன்னும் அதப் பத்தி எதுவும் கேக்கல.."

"உன் பொண்ணு தான் கேட்டு நச்சரிக்கறாளா..?"

"அப்படி இல்லேன்னா... அவ சின்னப் பொண்ணு. இப்போ தான் கல்யாணம் ஆயிருக்கு. புருஷனோட நாலு எடத்துக்கு நக, நட்டோட போய் வந்தாத் தான நமக்கும் பெரும. அவா ஆத்துக்காரவாளுக்கும் சந்தோஷமா இருக்கும்னு நெனக்கறா.. தப்பில்லையேன்னா..?"

"உம் பொண்ணுக்குத் தோணலினாலும், நீயே எடுத்துக் கொடுத்துரு. ஏண்டி.. எனக்கு மட்டும் நம்ம பொண்ணு அப்படியெல்லாம் இருக்கணும்னு ஆசயில்லயா? போன வருஷம் தலதீபாவளிக்கு எடுத்த போனஸ் பண்மே இன்னும் முழுசா கட்டி முடிக்கல. அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்திடுத்து. பாப்போம். வேற எங்கயாவது கடன் வாங்க முடியறதானு..?"

"அப்படி விட்டேத்தியா சொன்னா, ஒண்ணும் நடக்காதுன்னா.."

"சரி..சரி.. ஆரம்பிச்சுடாத.. நான் ஆபிஸுக்கு கிளம்பறேன்.."

"ம்மா.. அப்பாகிட்ட பேசினியா..? என்ன சொன்னார்?"

"என்னடி இந்த மனுஷன் இப்படி இருக்காரு..! நானும் இன்னிக்கு சொல்லிப் பாத்துட்டேன். பொண்ணுக்கு நகை போடணுங்க. வருஷம் ஆகிப்போச்சுன்னு! மனுஷன் காதுலயே போட்டுக்கலயே! பாப்போம்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு..!"

"அம்மா! சீக்கிரம் செய்யச் சொல்லும்மா! இவர் தங்கைக்கு மறு தீபாவளிக்கு 25 பவுன் நகை போட்டாங்களாம். மாமி சொல்லிக் காட்டிண்டே இருக்கா. உங்க வீட்டுல எவ்ளோடி போடுவானு கேட்டுண்டே இருக்கா.."

"நானும் சொல்லிட்டு தாண்டி இருக்கேன். இப்போ உன் மாமி பக்கத்துல இல்லியா..?"

"இல்லம்மா. கோயிலுக்குப் போயிருக்கா. அவங்க வர்றதுக்குள்ள வீட்டு வேலையெல்லாம் முடிக்கணும்னு இருக்கேன்..."

"சரி வெச்சிடுடி. போன் பில் எக்கச்சக்கமாகிடப் போகுது. அப்புறம் உங்கப்பா அதுக்கும் என்ன, ஏதுனு கேப்பாரு.."

"சார்.. உங்களைப் பாக்க கிருஷ்ணன்னு ஒருத்தர் வந்திருக்கார். உங்க மாப்பிள்ளையாமே... ரிஷப்ஷன்ல வெயிட் பண்ணிட்டு இருக்கார். சீக்கிரம் போங்க.."

"மாப்பிள்ள.. வாங்க.. வாங்க.. என்ன ஆஃபிஸ் வரைக்கும் வந்திருக்கேள்? வீட்டுக்கே பொண்ணையும் அழைச்சிண்டு வந்திருக்கலாமே.."

"இல்ல மாமா.. உங்ககிட்ட தனியா பேசணும்னு தான் இங்க வந்தேன். கேண்டீன் வரைக்கும் போய்ப் பேசிட்டு வரலாமா..?"

"ஒரு நிமிஷம்.. உள்ள சொல்லிண்டு வந்திடறேன்.."

"மாமா.. இந்த வருஷம் தீபாவளியும் வந்திடுத்து.. இன்னும் நீங்க அந்த நகையைப் பத்தி ஒண்ணும் சொல்லலயே..?"

"கொஞ்சம் பணமுடை மாப்ள.. உங்களுக்குச் சொல்லப்படாது. இருந்தாலும் சொல்றேன். தலைதீபாவளிக்குப் பண்ணின செலவுக்கே இன்னும் வட்டி கட்டிண்டு இருக்கேன். இருந்தாலும் எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு, இந்த தீபாவளிக்குள்ள வாஙிக் குடுத்திடறேன்.."

"நீங்க அது மாதிரி சிரமப்படுவேள்னு தெரியும் மாமா.. அந்த மாதிரி எல்லாம் எதுவும் நீங்க பண்ண வேணாம்னு தான் சொல்ல வந்தேன்.."

"என்ன சொல்றேள் நீங்க..?"

"உண்மை தான் மாமா. போன வருஷம் என் தங்கைக்கு 25 பவுன் நகை போட்டேன். சரி. நான் நல்லா சம்பாதிக்கிறேன். இன்னும் வயசும் இருக்கு. இன்னும் நிறைய சம்பாதிப்பேன். நிறைய நகை போட என்னால முடியுது. நீங்க சம்பாதிச்சதெல்லாம் பொண்ணுக்குக் குடுத்திட்டேள்னா, கடைசி காலத்துல, உங்களுக்குனு என்ன இருக்கும்? அதனால நீங்க நகையைப் பொறுமையா குடுத்தாப் போறும்னு சொல்லத் தான் நான் வந்தேன்.கடன், கிடன் எல்லாம் பட்டு குடுக்க வேணாம்.."

"மாப்ள.."

"அது மட்டுமில்ல மாமா. நேத்து டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ணியதுல, உங்க பொண்ணு கன்சீவ் ஆகியிருக்கிற விஷயம் தெரிஞ்சிது. அப்பதான் ஒரு அப்பா ஸ்தானத்தோட பெருமை, பொறுப்பு புரிஞ்சுது. இப்போ நம்ம வீட்டுக்கு ஒரு மஹாலக்ஷ்மி வர்றானு வெச்சுக்கோங்க. அப்ப நான் என்ன பண்ணனுங்கிறதை, உங்களைப் பாத்துத் தான் கத்துக்கணும் மாமா. பொண்ணப் பெத்தா என்ன பண்ணனும்னு உங்ககிட்ட தான் கேட்டுத் தெரிஞ்சிக்கணும் நான். உங்களுக்குக் கஷ்டம் குடுக்க நான் நெனப்பனா? பிறகு எனக்கும் அந்த கஷ்டம் வராதா..? அதனால நீங்க பொறுமையா நகை பண்ணிக் குடுத்தாப் போறும்.."

"மாப்ள.. ரொம்ப சந்தோஷம்.. கங்கிராட்ஸ். பேரர், ரெண்டு ஸ்வீட் அல்வா எடுத்திண்டு வாப்பா.."

தாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே, வருக, வருக!


மேதகு குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜ.அப்துல் கலாம் அவர்கள் இன்று நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்து, ஐந்தாண்டு காலம் சிறப்பாகப் பணியாற்றி, மீண்டும் தன் தாய்மண்ணிற்குத் திரும்புகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தாம் விட்டுச் சென்ற பணியைத் தொடர வருகிறார்.

முதன்முதலில் அவரைச் சந்தித்ததைப் பற்றி இங்கே கூறுகிறேன்.

பொக்ரானில் வெற்றிகரமாக அணுச் சோதனையை நிறைவேற்றி, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராகிப் பணியாற்றி விட்டு, பின் எங்கள் கல்லூரிக்கு பேராசிரியப் பணியாற்ற வந்தார். கணிப்பிறி ஆய்வகத்தில் இரு அறைகள் அவருக்காக ஒதுக்கப்பட்டன. அவர் அதைத் தம் பணியறையாக வைத்துக் கொண்டார்.

வார இறுதிகளில் ஊருக்குப் போய்விட்டு அதிகாலையில் விடுதிக்குத் திரும்பும் மாணவர்கள், மைதானத்தின் வழியாக வருகையில், இவர் ஒரு பாதுகாவலரோடு காலைநடை போவதைப் பார்த்து வணக்கம் செலுத்துவர். (மற்ற நாட்களில் எங்கே அத்தனை அதிகாலையில் யார் எழுவர்? அதுவும் விடுதியில்?)

அவரும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் செலுத்துவாராம்.

இப்படி ஒருவர் பெரிய மனிதர் நம் கல்லூரியில் இருக்கும் போது, அவரை எப்படியாவது சந்தித்திட வேண்டும் என்று விருப்பம் இருந்தது. எப்படிச் சந்திப்பது என்று தயக்கம் வேறு!

அவ்வப்போது கணிப்பொறி ஆய்வகத்திற்குச் செல்கையில், அவரது அறையை எட்டிப் பார்ப்பதுண்டு.

ஒரு வாசல். அதன் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பார். அவரிடம் சந்திக்க விரும்புவதின் நோக்கத்தைக் கூறினால், அவர் கலாமிடம் கூறி அவரது விருப்பத்தை அறிவார். பின் நேரம் ஒதுக்கப்படும். அக்குறிப்பிட்ட நேரத்தில் அவரைச் சந்தித்துத் திரும்பி விட வேண்டும். இது தான் முறை என்பதை அறிந்தேன்.

அப்போதே அவர் கல்லூரி மாணவர்கள் என்றால், எந்த தயக்கமும் இன்றி, அனுமதிக்கச் சொல்லி இருந்தார் என்று கேள்விப்பட்டு இருந்தேன். எப்படி, என்ன சொல்லி அவரைச் சந்திக்கலாம் என்று யோசித்தேன்.

ஏதாவது சொல்ல வேண்டும் அல்லவா?

சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம்.

பத்திரிகைகளில் ஏதேனும் அருமையான ஓவியம் கண்ணில் பட்டு விட்டால், கை அரிப்பெடுக்க ஆரம்பித்து விடும். நானும் தான் வரைவேன் என்று சொல்லிக் கொண்டு, சாட் பேப்பரில் வரைவேன். அது கமல் செய்வது போல், படைப்பாளி ஓவியத்தில் நீர் ஊற்றிய துடைப்பாளி வேலை போல் இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

குங்குமம் இதழில், 'பாண்டியன்' என்ற ஓவியர் வரைந்த கலாம் அவர்களின் ஓவியம் பார்த்தவுடன், இதை வரைய வேண்டும் என்று தோன்றியது. அதை வரைந்து கொண்டிருக்கையிலேயே, இதை வரைந்து கலாம் அவர்களிடமே காட்டி கையெழுத்து வாங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. (இதுவரை இது எப்பேர்ப்பட்ட சிந்தனை என்று இறுமாப்போடு இருந்தேன். சென்ற வார விகடனில் ஓவியர் ஸ்யாம் அவர்கள் இது போல் பல பெரியவர்களிடம், அவர்கள் படத்தை வரைந்து, அவர்களின் கையொப்பம் வாங்கியிருக்கிறார் என்று படித்தவுடன், புஸ்ஸென்றானது ஒரு சோகக் கதை.)

மாதத் தேர்வுகள் முடிந்த ஒரு திங்கட்கிழமை அந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு, அவரது அலுவலகம் சென்றேன். கையில் புகைப்படக் கருவி இல்லாததால், நண்பரிடம் வாங்கிச் சென்றிருந்தேன்.

அவரது அறைக்கு முன்னிருந்த அலுவலரிடம் கலாம் அவர்களைக் காண வேண்டும் என்றேன். எதற்காக என்ற கேள்விக்கு, மாணவர் அட்டையைக் காட்டி விட்டு, அந்த ஓவியத்தைக் காட்டி, 'இதை அவரிடம் காட்டி, அவரது கையொப்பம் வாங்க வேண்டும்' என்றேன். அலுவலர், பாதுகாப்புக்குக் கையில் துப்பாக்கியுடன் இருந்த பாதுகாவலர், உள்ளிருந்த அலுவலர்கள் அனைவரும் ஓவியத்தைப் பார்த்து வியந்து வாழ்த்தினர்.சோதனைகள் முடிந்த பின் அவரிடம் அனுமதி பெற்று, உள் அனுப்பி வைக்கப் பட்டேன்.

பின் உள் நுழைகையில் தான் தெரிந்தது. உள்ளே மற்றுமொரு அறை இருப்பதை! முன்னறையில் அமர வைத்தனர். ஓர் ஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார்கள். அதற்குள், இரண்டு தொலைபேசி அழைப்புகள். ஒண்று டி.ஆர்.டி.ஓ.வில் இருந்தும், மற்றொன்று ஹரிகோட்டாவில் இருந்தும்.

அழைப்பு கிடைத்தது.

அறைக்கதவு திறந்தது.

முன்னறை சிறியதாக இருந்தாலும், அவரது அலுவல் அறை பெரியதாக இருக்கும், நீளமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே சற்று நிதானமாக உள் நுழைந்தால், 'தடார்' என்று எதிரில் உட்கார்ந்திருக்கிறார். 'பட்'டென்று ஆகி விட்டது எனக்கு. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அமைதியாக எழுந்து நின்று கை கொடுத்தார். அமரச் சொன்னார். அமர்ந்தேன். பெயர், வகுப்பு என்று விசாரித்தார். பின் அந்த ஓவியத்தைக் காட்டினேன். பாராட்டினார். அதில்,'Role Model for Rural Students' என்று எழுதி, கீழே A.P.J.Abdul Kalam என்று எழுதியிருந்தேன். அவரது பெருமை பாடும் புகழ்ப் பட்டப் பெயர்களையோ, எந்த புகழ் உரைகளையோ எழுதாமல், வெறும் பெயர் மட்டும் எழுதியிருந்தேன். உண்மையில் அது மட்டும் தானே நமது அடையாளம்? மற்ற பட்டங்கள் எல்லாம் பிறர் தருவது தானே? என்ற எண்ணத்தில்..!

'With Best Wishes' என்று எழுதி,அவரது கையொப்பம் இட்டார். 'Rural Students' என்று எழுதி இருந்ததால், எந்த ஊர் என்று கேட்டார். 'பவானி' என்று சொல்ல எனோ கூச்சப்பட்டு, (அவருக்குத் தெரியுமோ, என்னவோ என்ற எண்ணம் தான்) 'ஈரோடு' என்றேன்.

பின் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தயக்கத்துடன் கேட்டுக் கொண்டேன். பொதுவாக அவர் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை/ விரும்புவதில்லை என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால் தான்.

ஆனால் அவர் ஒத்துக் கொண்டார்.

பரவசத்தில், பதட்டத்தில் தடாரென்று எழுந்ததில், நான் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளி விட்டு விட்டேன். பின் எடுத்து ஒழுங்கு படுத்தினேன். அவரது அலுவலக ஊழியரைக் கூப்பிடலாம் என்று கதவைத் திறக்கப் போனேன். அங்கு அடுத்த தவறுதல். அவரது அறைக் கதவு, உள்ளே தாழ்போட்டுக் கொள்ளும் வகையில், பட்டன் சிஸ்டத்தில் இருந்தது. பதட்டத்தில் அதை அழுத்தித் தொலைத்து விட்டேன். கதவைத் திறக்க முடியாமல் போயிற்று. சோகமாய் அவரைப் பார்த்தேன். 'சுத்த லூசா இருப்பான் போல்' என்று எண்ணினாரோ என்னவோ, அவரே வந்து கதவைத் திறந்து விட்டௌ, அவரது ஊழியர் ஒருவரை அழைத்து, புகைப்படம் எடுக்கச் சொன்னார்.

அந்த ஓவியத்தின் ஒரு முனையில் நானும் மறு முனையில் அவரும் மேலும் கீழும் பிடிக்க, அவரது ஊழியர் காமிராவின் பட்டனை அழுத்தினார்.

ஒரே ஒரு ஃப்ளாஷ்.

மற்றுமொன்று எடுக்கச் சொல்லலாமோ என்று (பேக் அப் - சரியாக வரவில்லை என்றால் என்பதால்) நினைக்கையிலேயே, அவர் கை கொடுத்தார். வேறு வழியின்றி நானும் கை கொடுத்து விட்டு வெளி வந்தேன். பிறகுதான் மூச்சே இயல்பு நிலைக்குத் திரும்பியது.

பிறகு சந்தோஷமாக அதை அனைத்து அலுவலர்களிடம் காட்டி விட்டு, விடுதிக்கு அத்தனை மகிழ்ச்சியுடன் திரும்பினேன். ஆனால் பசங்கள் அதை நம்பவேயில்லை. 'யார்ரா இந்த பொம்பளை' என்றே கேட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள்.

அப்போதெல்லாம் அவர் குடியரசுத் தலைவர் ஆவார் என்று யாரும் எண்ணவேயில்லை.

பிறகு அந்த வரலாறு நிகழ்ந்த போது, ஐயாவுடைய மதிப்பு சும்மா, ஜிவ்வென்று கலாம் அனுப்பிய இராக்கெட் கணக்காக மேலேறியது. நானும் போதாக்குறைக்கு கொஞ்ச காலம் 'எனக்கு கையெழுத்து போட்டதால் தான் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்து ஜனாதிபதியானார்' என்று சொல்லிக் கொண்டு திரிந்தேன்.

முன்பே அவரது 'அக்னிச் சிறகுகள்' படித்திருந்தேன். அப்போதே அவர் மேல் மதிப்பாய் இருந்தது. அவர் எங்கள் பல்கலைக் கழகத்தில் படித்தவர் என்று அறிந்ததும், இன்னும் கொஞ்சம் நெருக்கம் மனதில் தோன்றியது. அது இன்னும் வளர்ந்தது, இந்த ஓவிய விளையாட்டில்!

ஒரு விஞ்ஞானி ஜனாதிபதியாகவும், ஒரு பொருளாதார மேதை பிரதமராகவும், ஒரு பொருளாதார அறிஞர் நிதியமைச்சராகவும் இருக்கையில் நாடு இன்னும் நிறைய விஷயங்களில் முன்னேறி இருக்கலாம் என்று தோன்றுகிறது இப்போது! இப்படி ஒரு கூட்டணி இனி இந்த தேசத்திற்கு மறுபடியும் எப்போது அமையுமோ?

ஆனாலும் தேசத்தின் இளம் தூண்களின் மனத்தில் நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியதிலும், உலகிலேயே இளமையான தேசத்தின் எதிர்காலம் இளம் குழந்தைகளின் கைகளில் தான் என்பதை உணர்ந்து, நாடெங்கும் பயணித்து இலட்சக்கணக்கான இளஞ்சிறார்களின் மனத்தில் தேசத்தின் வளர்ச்சியைப் பற்றிய கனவை விதைத்ததிலும், தான் வெறும் 'இரப்பர் ஸ்டாம்ப்' அல்ல என்று உணர்த்தியதிலும் கலாம் நாம் கண்டுவந்த மற்ற வெற்று ஜனாதிபதிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டு விளங்கினார்.

பல இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்ற நாட்டில், இராக்கெட் அனுப்புவதற்கும், செயற்கைக் கோள் அனுப்புவதற்கும் இத்தனை பணம் செலவு செய்ய வேண்டுமா என்று பலர் கேட்ட போது, 'தேசத்தின் பாதுகாப்பு' தான் முக்கியம். அது ஸ்திரமாக்கி விட்டு, பின் உற்பத்தியைப் பெருக்கலாம் என்று உண்மை நிலையைக் கூறினார்.

வெறும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான்,'அண்ணன் அழைக்கிறார்',' தலைவர் தறிகெட்டுக் கூப்பிடுகிறார்' என்று போஸ்டர் அடித்து வரவேற்பு கொடுக்க வேண்டுமா?

இதோ..

'தலை நகரில் ஆண்டு விட்டு, தாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே.. வருக.. வருக..'

'இராமேஸ்வரத்தில் பிறந்த இரத்தினமே... இந்தியா தந்த இசுலாம் இதயமே.. வருக.. வருக..'

'கற்ற இடத்திற்குப் பெருமை சேர்த்து, உற்ற இடம் அடைந்து, உயர் புகழ் பெற்று, தாயகம் திரும்பும் தவத் திருமகனே வருக...'

'அண்ணா பலகலைக்கழகத்திற்குத் திரும்பும் அண்ணலே வருக.. வருக..'

குறிப்பு : சிறப்பு இருக்கும் இடத்தின் மீது சேறு வீசப்படுவது உலக இயல்பு. 'ஞானி' என்று தம்மைத் தாமே கூறித் திரியும் ஒருவர், கலாம் அவர்களைப் பற்றி ஆ.வி.-யில் கேவலமாக எழுதியிருந்தார். அவருக்குக் கூறிக் கொள்ளும் பதில் இது தான்:

'ஆண்டவரே.. இவர்கள் தாம் என்ன செய்வது என்பதை அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்..'

கலைந்தது கலாம் கனவு..! பிழைத்தது இந்தியா..!

அப்துல்கலாம் ஏன் ஜனாதிபதி ஆக கூடாது?

அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி

விடை பெறுகிறார் 'மக்கள்' ஜனாதிபதி.....

Monday, July 23, 2007

Thinkers of the East. (கிழக்கின் சிந்தனையாளர்கள்.)


சென்னை நூல் அழகத்திற்கு இவ்வாண்டு சென்றிருந்த போது, Islamic Foundation Trust பதிப்பாளர்கள் திருக் குர் ஆனை வெளியிட்டு விற்பனைக்கு வைத்திருந்தனர். அதுவும் இப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற இந்துக்களுக்கு, மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டது. உடனே வாங்கி விட்டேன்.

அவ்வப்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் படித்து வருகின்றேன்.

அதற்கு முன்பாக, பா. ராகவன் அவர்களின் 'நிலமெல்லாம் இரத்தம்' நூலைப் படித்த பின்பு, இசுலாம் மார்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றி இருந்தது.

சிறுவயதில் மெட்ரிக்கில் படிக்கும் போது, பைபிள் பற்றி சிறு அறிமுகம் இருந்தது. மேலும் 'கருணாமூர்த்தி' போன்ற டி.டி. தொடர்களும், டிசம்பர்- 25 அன்று (ஒரு காலத்தில்) டி.டி.யில் போடப்படும் 'அன்னை வேளாங்கன்னி' போன்ற படங்களாலும் ஓரளவு கிறித்துவ வரலாறும், இயேசுவின் வரலாறும் தெரிந்திருந்தது.

ஆனால் இசுலாமியத்தைப் பற்றிய அறிமுகம் எப்படிக் கிடைத்தது? 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' போன்ற படங்களாலும், 'அலிப்லைலா',' திப்பு சுல்தான்' ஆகிய தொடர்களாலும் தான் கிடைத்தது. ஆனால் அவற்றில் இறைக் கருத்துக்கள் பற்றிய காட்சிகள் இன்றி, நாயகனின் சாகசங்கள் மட்டுமே இருந்தது.

'எதைத் தேடிப் போகின்றோமே, அது தானே நம்மைத் தேடி வரும்'(WYSIWYG) என்பது முன்னோர் வாக்கு.

அது போல், திருக் குர் ஆன் படிக்கத் தொடங்கிய சிறு காலத்திலேயே, ஒருமுறை சென்னை மத்திய புகைவண்டி நிலையத்திற்குச் சென்ற போது, ஹிக்கின்பாதம்ஸில் கிடைத்த புத்தகம் தான் - Thinkers of the East.

இசுலாமியத்தின் ஒரு பிரிவான சுஃபியிசத்தில் சிறந்த அக்கால அறிஞர்களின் கருத்துக்கள் மட்டுமே உள்ள இந்நூல், அற்புதமான கருத்துக்களை எளிய வடிவில் கூறுகிறது.

நூலில் இருந்து சில சிறிய நிகழ்வுகள்.

THE BOOK OF WISDOM

SIMAB said:

' I shall sell the Book of Wisdom for a thousand gold pieces, and some people will say that it is cheap.'

Yunus Marmar said to him:

' And I shall give away the key to understanding it, and almost none shall take it, even free of charge.'

ALMOST AN APPLE

NAJRANI said:

' If you say that you can "nearly understand", you are talking nonsense.'

A theologian who liked this phrase asked:

'Can you give us an equivalent of this in ordinary life?'

'Certainly,' said Najrani; 'it is equivalent to saying that something is "almost an apple".'

FEELING

UWAIS was asked:

'How do you feel?'

He said:

'Like one who has risen in the morning and does not know whether he will be dead in the evening.'

The other man said:

'But this is the situation of all men.'

Uwais said:

'Yes. But how many of them feel it?'


THE QUESTION


A RICH braggart once took a Sufi on a tour of his house.


He showed him room after room filled with valuable works of art, priceless carpets and heirlooms of every kind.


At the end he asked:


'What impressed you most of all?'


The Sufi answered:


'The fact that the earth is strong enough to support the weight of such a massive building.'


SEEING


IT is reported that Avicenna the philosopher said to a Sufi:


'What would there be to be seen if there were nobody present to see it?'


The Sufi answered:


'What could not be seen, if there were a seer present to see it?'


***
புத்தகம் : Thinkers of the East.

புத்தக வகை : கதைத் தொகுப்பு. தத்துவம். (ஆங்கிலம்)

ஆசிரியர் : Idries Shah (தொகுப்பு).

கிடைக்குமிடம் : புத்தகக் கடைகள்.

விலை : ரூ. 195/- மட்டுமே.

பூச்சி பிடித்தல் முறைகள்.


பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?

சிறிய தொல்லைகளில் இருந்து, அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கின்ற பிரச்னைகளில் இருந்து தப்பியோடாமல், அவற்றை முறியடித்து வெற்றி பெறுவது எப்படி?

ஒவ்வொரு செயலுக்கும் ஏதாவதொரு காரணம் இருக்கும். கண்டிப்பாக அது ஒரு பிரச்னையின் முடிவை நோக்கிப் போகின்ற பயணமாகத் தான் இருக்கும்.

காலையில் மார்க்கெட்டிற்குப் போகின்றோம். எதற்கு? வீட்டில் சமைக்க காய்கறிகள் இல்லை. வாங்கி வந்தால் அந்தப் பிரச்னை ஓவர். சுபம்.

அவசர அவசரமாகக் காலையில் கிளம்புகையில், பெட்ரோல் இல்லை. இது ஒரு பிரச்னை. இதைத் தீர்ப்பது எப்படி? பெட்ரோல் போடலாம். வண்டியை ஓரக்கட்டி, நடக்கலாம். ஏதோவொன்று செய்ய, சற்றுமுன் பிரச்னையாய் நம் முன் இருந்தது, தீர்ந்தது.

இப்படிச் சின்னச் சின்ன சிக்கல்களில் இருந்து, பெரிய, பெரிய பிரச்னைகள் வரை தீர்ப்பதற்காக ஏதாவது பொதுவான சூத்திரங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

'இந்த எல்லாப் பிரச்னையும் ஒரே மாத்திரையில் தீரணும்' என்றால், அப்படி ஒரு மாத்திரை கிடைக்குமா?

இருக்கின்றது.

கிடைத்திருக்கின்றது. பலரால் உபயோகப் படுத்தப்படுகின்றது வெற்றிகரமாக ...!

DEBUGGING RULES.

ஒன்பது சூத்திரங்கள். பிரச்னையின் மூலத்தைக் கண்டறிவதற்கும், தீர்வுக்கான வழிமுறைகளை எளிதாகக் கண்டறிவதற்கும், பயன்படுத்துவதற்கும்..!

1.Understand The System.

2.Make it Fail.

3.Quit Thinking and Look.

4.Divide and Conquer

5.Change one thing at a time.

6.Keep an audit trail.

7.Check the Plug.

8.Get a fresh view.

9.If you didn't fix, it ain't fixed.

பெரும்பாலும் நாம் அறிந்த, சிலவற்றை மட்டுமே உபயோகித்துப் பார்க்கின்ற முறைகள் தாம்.

ஆனால், வரிசைக்கிரமமாக உபயோகித்துப் பார்க்கையில், ஒரு மேம்பட்ட, தொழில்முறை பயன்பாடாக இருப்பதை நாமே உணர்வோம்.

புத்தகத்தில், அத்தனை முறைகளுக்கும் வலிய நகைச்சுவையோடான உதாரணங்கள், ஆசிரியரால் தரப்பட்டுள்ளன. பெரும்பாலும் அவரது நெடிய தொழில் வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களைக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளதால், இப்போது தான் பணி செய்யத் துவங்கியிருக்கும் நமக்கு மிக்கத் துணையாய் இருக்கும் என்பது திண்ணம்.

பணியில் சேர்ந்த முதலில், இந்த புத்தகம் வடிவில் இணையத் தபாலில் கிடைத்தது. இப்போது இது அமேஸான் - ல் மட்டுமே கிடைப்பதாகத் தெரிகின்றது. விரும்புவோர், பின்னூட்டத்தில் தெரிவிப்பின் அனுப்பி வைக்கப்படும்.

Sunday, July 22, 2007

வாழ்த்துக்கள்...!


ஸ்டார் விஜய்யில் 'ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்' நிகழ்ச்சி ஒரு வெற்றியால்ரைத் தேர்ந்தெடுப்பதோடு அருமையாக முடிந்து விட்டது. இருந்தாலும் தமிழ் மக்களிடையே பெற்றுள்ள பெரும் வரவேற்பினால், அதனை இன்னும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சிறுவர்கள் செய்த குறும்புகள், அவர்களது செல்லச் சண்டைகள் மற்றும் சின்மயியின் சொதப்பல்கள் என்று வெற்றி நடை போடுகிறது.

பங்கு பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றியை விட்டுக் கொடுத்தவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

இதெல்லாம் ஒரு தோல்வியா என்ன? தட்டி விட்டு எழுந்து ஓட வேண்டியது தான் நான் சொல்கின்ற வார்த்தைகள். இன்னும் வெல்வதற்கு இருக்கிறது ஒரு வாழ்க்கை.

கமல் ஒருமுறை சொன்னார். ' நாம் எல்லோரும் வெற்றி பெறுவதற்கே வந்தவர்கள். எப்படி யென்றால், தாயின் கருப்பையை அடைவதற்கு நம்மோடு போட்டி போட்டு ஓடி வந்த நம் மில்லியன் கணக்கான சகோதரர்களையும், சகோதரிகளையும் மீறித் தானே நாம் எல்லோரும் இப்பூவுலகிற்கே வந்துள்ளோம். பிறகு எப்படி நம்மால் தோல்வி அடைய முடியும்..?'.

அது போல், உத்வேகம் கொள்ள வேண்டுகிறேன்.

சச்சின் - வினோத் காம்ளி ஜோடியாக சாதனை படைத்த போது, அந்த ஆண்டிற்கான 'ஜூனியர் கிரிக்கெட்டர்' விருது சச்சினுக்கு கிடைக்கும் என்று எண்ணியிருந்தார். ஆனால் அந்த வருட விருது வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. அதனால் சச்சின் வருத்தத்தில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டார், அப்போதைய பிரபல கிரிக்கெட்டர் ஒருவர். அவர் சச்சினுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில்,

'உன்னைப் போல தான் ஒருவன் சிறு வயதில், ஜூனியர் கிரிக்கெட்டர் விருது கிடைக்கவில்லையே என்று வருத்தத்தில் இருந்தான். இன்னும் கடுமையாக உழைத்து இந்திய அணியிலேயே இணைந்தான்.பிறகு அவன் அப்படியொன்றும் மோசமாக விளையாடவில்லை.' என்றார்.

அவ்வாறு தன்னைப் பற்றிக் கூறி, சச்சினின் மன வருத்தத்தைப் போக்கியவர், சுனில் கவாஸ்கர்.

அது போல் விருது கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், இன்னும் முயற்சி செய்தால், முன்னேறலாம் அல்லவா..?

ன்னராக வந்த விக்னேஷுக்கு ஒரு கதை.

1994-ல் இந்திய அழகிப் போட்டியில் ஒரு பெண் இரண்டாவதாக வந்தார். ஆனால் அவர்தான் பிற்காலத்தில் முதலாவதாக வந்த பெண்ணை விட பெரும்புகழ் பெற்றார். இரண்டாவதாக வந்த 'ஐஸ்வர்யா ராயை' விட உனக்கு முதலாவதாக வந்த 'சுஷ்மிதா சென்'னை நன்றாகத் தெரியுமா, என்ன?

இவ்வளவு ஏன்?

தலைவரே என்ன சொல்லி இருக்கிறார்?

'ஒரு குழந்தைகிட்ட போய் உனக்கு ஒரு பிஸ்கெட் வேணுமா, ரெண்டு பிஸ்கெட் வேணுமானு கேட்டா என்ன சொல்லும்?'

'ரெண்டு பிஸ்கெட்னு தான் சொல்லும்'

'ஒரு குரங்குகிட்ட போய் உனக்கு ஒரு பழம் வேணுமா, ரெண்டு பழம் வேணுமானு கேட்டா என்ன சொல்லும்?'

'ரெண்டு பழம்னு தான் சொல்லும்'

'இப்ப உங்ககிட்ட ஒரு ருபா வேணுமா, ரெண்டு ருபா வேணுமானு கேட்டா என்ன சொல்லுவீங்க?'

'ரெண்டு ரூபானு தான் சொல்லுவேன்'

'அப்ப ஒண்ணு பெருசா, ரெண்டு பெருசா?'

'ரெண்டு தான் பெருசு'

'அப்ப நான் தான் பெருசு'

(தலைவா.. தலைவா.. உய்ய்ய்ய்...)

அது போல் விடாதே, தூள் கிளப்பு.

வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்திக்குச் சொல்லிக் கொள்வது ஒன்று தான்.


'SUCCESS IS NOT THE DESTINATION. IT IS A JOURNEY'.