Thursday, March 27, 2008

ஒரு யோகியின் சுயசரிதம்.



சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மயிலை சிட்டி சென்டருக்குச் சுற்றுலா சென்றிருந்த போது வாங்கிய ஒரு புத்தகம் தான் 'ஒரு யோகியின் சுயசரிதம்'. பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு இந்நூல்.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில் இருந்து இது போன்ற இளந்துறவிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் இருந்து வந்தது. இந்நூல் யோகானந்தராலேயே இயற்றப்பட்டு இருப்பதால் அவருடனே வாழ்ந்து நாமும் வளர்வதாக உணர முடிகின்றது.

மஹா அவதார் பாபாஜி பற்றி முதன்முதலில் எழுத்து வடிவில் இவர் தான் முதலில் வெளிக் கொணர்ந்தவர் என்கின்றனர். பாபாஜி, லாஹிரி மஹாஸயர், குரு யுக்தேஸ்வரர் மற்றும் பல சாதுக்களையும் சன்னியாசிகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களது வாழ்வின் அற்புதங்கள் நம்மை திகைப்பின் எல்லைக்குள் இழுத்துச் செல்கின்றன.

வாழ்வின் நிலை, இறப்பிற்குப் பிறகான வாழ்க்கை, இந்த வாழ்வின் அர்த்தம் என்ன, எதற்காக நாம் இங்கு வந்திருக்கின்றோம் என்ற ஆதிகால கேள்விகளுக்கு எல்லாம் யோகானந்தர் எளிமையாக கூறும் பதில்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

ரஜினி அனைவர்க்கும் படிக்க சிபாரிசு செய்யும் இரண்டு புத்தகங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று The Himalayan Masters.

மேலும் இந்நூலைப் பற்றிய மதிப்புரை எழுத என்னால் இயலாது.

நீங்களே படித்துப் பாருங்களேன்.

*****

புத்தகம் : ஒரு யோகியின் சுயசரிதம்.

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : பரமஹம்ஸ யோகானந்தர்.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : யோகதா சத்சங்க இயக்கம், ராஞ்சி.

இணையம் : Autobiography of a Yogi .

Tuesday, March 25, 2008

யமுனே நின்னுட நெஞ்சில்...



ரு பொற்பொழுதாய் விரிகின்றது அக்காலம்.

வானின் மந்தகாசப் புன்னகை, வரப்போகும் இராச லீலையைக் காண வெட்கப்பட்டு பூத்த பொன் வர்ணம் எனறானது. பிரம்மாண்டமான பிரபஞ்சம் முழுதும் சிவந்த மாதுளை விதைகள் போல் விண்மீன்கள் மின்னத் தொடங்கின. காதலனின் முகத்தை ஒற்றி ஒற்றி தன் நிறம் போல் பூசிக் கொள்ளும் காதலியின் திருமுகம் போல் யமுனா நதி விண்ணின் சிவந்த நிறத்தை தன் மேனியெங்கும் அப்பிக் கொண்டு நகர்ந்தது. மதியத்தின் கதிரவனின் ஆதுரத் தீண்டல்களால் கன்றிப் போய்ச் சிவந்திருந்த பூக்களும், காய்களும், கனிகளும் வீசத் தொடங்கும் மாலைத் தென்றலில் மயங்கி அசைந்து கொண்டிருந்தன. தூர மலை முகடுகளின் உச்சிகளில் மொட்டு விட்ட செந்தாமரை போல் சிவப்புப் பொன்னிறம் பூத்திருந்தது.

பூங்காற்றின் நிலையைத் தான் என்னவென்று சொல்வது? வேணு கான நாயகனின் மதுர நாதத்தை தனக்குள் சுமந்து கொண்டு, போதையில் கிறங்கிப் போன பின் தள்ளாடித் தடுமாறிக் கையில் கிடைத்த பூக்களை எல்லாம் கிள்ளிப் பார்த்தது; பெரும் மரங்களின் கடும் மேனியின் மீதெல்லாம் மோதிக் கொண்டது; ஈரம் பூக்கத் தொடங்கி இருக்கும் மண் மேல் நடந்து, பின் முடியாது, விழுந்து, புரண்டு, கனிந்து, எழுந்து, குப்புறக் கவிழ்ந்து, அசைந்து யமுனா நதிக்கரையில் காத்திருக்கும் கோபிகையர்களுக்கெல்லாம் கண்ணனின் வருகையைக் குழறலாய்க் கூறியது.

விழிகளை இமை எப்போதும் காத்திருக்கும். ஆனாலும் இமை அசந்திருக்கும் போது பார்த்து கண்ணீர் கரை புரண்டு ஓடோடி வரும். போல், காதல் நிரம்பி மனத்தில் ததும்பிக் கொண்டிருக்கும். ஒரு சிறு கீறல், பூங்காற்றின் ஒரு சிறு கூறல் பட்டதும் பொங்கி வழிகின்றது, கோபியரிடமிருந்து..!

அந்த இராசத் திருமகனைக் காணாது விழித்திருக்கும் போதெல்லாம் வீணாய்த் தோன்றுகின்றது என்கிறாள் ஒருத்தி! அந்தக் கார்மேகவர்ணனை நினையாது கழித்திருக்கும் போதெல்லாம் காடுண்ட இருளென நகர்வதேயில்லை என்கிறாள் மாற்றொருத்தி! முட்டி போட்டுக் கொண்டு பால் கறக்கையில், நம்மை முட்டிக் கொண்டு, தாய் மடியை முட்டி, முட்டி அமுதருந்தும் கன்றினைப் போல் எந்நிலையிலும் நினைவுகளை முட்டி, தட்டி கிளம்பி கிறுகிறுக்க வைக்கின்றது அவன் திருமுகம் என்கிறாள் ஒருத்தி! தோப்புகளைத் தாண்டிச் செல்கையில் வீசும் ஊதற்காற்று அவன் திருவாய் ஊதும் காற்று போல் இசை எழுப்பி மேனியைச் சிலிர்க்கச் செய்கின்றது என்கிறாள் மற்றும் ஒருத்தி!

மோகன வர்ணமென எடுத்துப் பூசிக் கொள்கின்றது அவன் பிரிதலில் நான் கொள்ளும் நிறத்தை மாலை வானம் என்றாள் நாணத்தால் சிரம் கவிழ்ந்து, ஒருத்தி! குளிக்கையில் மஞ்சள் அள்ளி பூசுகையில், மனதில் ஒரு சிரிப்பு பூக்கச் செய்கின்றன அவன் விரல்கள் விளையாடிய தடங்கள் என்று வெட்கிக் கூறிச் சிரித்தாள், இன்னும் மஞ்சள் நிறம் கிளைக்கச் செய்யும் புன்னகையோடு ஒருத்தி!

இன்னும் இன்னும் காற்றின் காதுகளுக்கும், யமுனை ஆற்றின் அலைகளுக்கும் மட்டும் சொல்லிக் கொண்ட கதைகளை கோபியர் கூறிக் கொண்டே இருக்க, கண்ணன் அங்கு வந்தான்.

லையாமாருதம் வருகையில் நாணலென்ன செய்யும்? பேரலை காதலுடன் பொங்கி வருகையில் கரையோர வெண் சங்கு என்ன செய்யும்? இரவின் குளிர் இசைப் பாடி வருகையில் கானகத்தின் சிறு கிளைகள் என் செய்ய முடியும்? மதுர கானமென இசைத்துக் கொண்டே அந்தக் கள்ளன் வருகையில், காதலின் மனங்கள் தான் என்ன செய்ய முடியும்?

மெல்ல மெல்ல தன் இதழ்கள் திறக்கையில் சுற்றிக் கொண்டே இருந்த தேனீ, இன்பத்தின் பேரெல்லைக்கே சென்று தேன் துகள் குடத்தில் தலைக் குப்புற விழுதல் போலும், வான் மஞ்சள் இராகங்கள் வாசிக்கையில் நந்தவனத்தின் புஷ்பங்கள் பூத்து கலகலவென சிரித்து மகிழ்தல் போலும், சின்னச் சின்னதாய் அலைகள் வந்து மோதுகையில் சிலிர்த்து சிலிர்த்து கலகலக்கும் கரையோர பூச்சிகள் போலும், அந்த நாத நாயகனின் கானக் காதல் காற்றின் மேனியெங்கும் தடவித் தடவி நிரப்ப, அமிர்த குடத்தில் விழுந்து தத்தளிக்கும் மீன்களாயினர் கோபியர்.

பனித்துகள்களைக் கொண்டையாய் அணிந்து கொள்ள தயார்ப் படுத்திக் கொண்டிருந்த, பச்சைப் பசும்புற்கள் எல்லாம், தரையோடு ஆழப் புதையும் வகையில் யாவரும் ஓடோடி அந்த மாயனைச் சூழ்ந்தனர்.

மேகங்களும் மாமழையும் பெய்யும் போதெல்லாம் தன் வானுயர் மகிழ்வை தோகைகள் வழி சிந்தும் மயில்கள், இப்போது இந்தக் கார்மேகவர்ணனைக் கண்ட மாத்திரத்தில் பெரும் பரவசத்தில் அழ்ந்து சிறகுகள் விரித்து நடனமாடின. புள்ளிமான்களும், பேடைக் குயில்களும், சின்னப் புறாக்களும், பொன் வர்ணப் பறவைகளும் சீச்சுக் கீச்சென்று குரல் எழுப்பிக் கொண்டே எங்கும் பொங்கிப் பறந்தன.

பலவண்ண மலர்கள் பொலபொலவென தங்கள் சந்திரக் காதலனை வரவேற்கப் பூக்கத் தொடங்கின. வெண்ணிலாவின் நிறத்திற்கு முற்றிலும் வேறுபட்ட இந்த கரியனைக் கண்ட மாத்திரத்தில் சற்று குழம்பினாலும், தெளிவுற்று தம் கைகளால் கொப்பி அடிக்கத் தொடங்கின.

கோபியர் மட்டும் சும்மா இருந்தனரா...?

ந்த லீலைக் காதலனின் கன்னங்களைப் பிடித்து இழுப்பதும்; அவன் கைகளின் குழல் போலின்றி சுருண்டு சுருண்டு குழல்களாய் இருக்கும் கருங் கூந்தலை அள்ளி முத்தமிடுவதும்; அவன் கரங்களைப் பிடித்து தம் புறம் இழுத்து அணைப்பதும்; அவன் சிவந்த இதழ்களால் தினம் தினம், நிதம் நிதம் சுவைத்து, அவன் மூச்சுக் காற்றால் உயிர் பெற்று கருவத்தால் இசை பரப்பி, இசை பெறும் குழலாய்த் தாம் ஆக மாட்டோமா என்ற பெருமூச்சோடும்; அவன் மணிமார்பில் தவழும் பூமாலையின் ஒரு பூவாக மாட்டோமா என்ற ஆசையோடும்; அவனோடு விளையாடத் தொடங்கினர்.

அந்த இராச லீலை மன்னனின் விளையாட்டுக்களைத் தான் என்னவென்று சொல்லுவது?

பூக்கள் கிளைத்து மணம் வீசும் கன்னியின் கூந்தலைக் கலைத்துப் போடுகிறான். தன் கன்னத்தில் இதழ் பதிக்க வந்த ஒருத்தியின் முகத்தில் கொட்டி விடுகிறான். தன் குழலைப் பிடுங்க வரும் ஒருத்தியின் கைகளுக்கு அக்குழலாலேயே அடி ஒன்று வைக்கிறான். தன் பின் வந்து அணைக்க முயன்ற ஒருத்தியைப் பயமுறுத்த திடுமென திரும்பிப் பழிப்புக் காட்ட, அந்த மதுரமான திருமுகத்தில் பரவசமுற்று தடரென விழுகின்றாள், அவள்.

கொப்பி விளையாடி மகிழ்விக்கிறான். கைகளைப் பிடித்து சுழலாட்டம் செய்கிறான். நடனம் ஆடுகிறான். முதுகோடு சாய்ந்து கொண்டு பாடுகிறான். ஒருத்திக்கு தலை நிறைய பூக்கள் வைக்கிறான். ஒருத்தியின் தலையின் பூக்களைப் பறித்து, அவளது முகமெங்கும் ஊதுகிறான். நாதப் பெருங்குழலில் உயிர் உருக்கும் பூங்கானம் இசைக்கிறான்.

இராச லீலைகளை மெல்ல மெல்ல அவன் அரங்கேற்றுகையில் வெட்கத்துடன், வீசிக் கொண்டிருந்த குளிர்க்காற்றும் நிறம் மாறத் தொடங்கியது.

சந்திரமதியும் எட்டிப் பார்த்து, கள்ளத்தனத்தோடு சிரிக்க, வெட்கத்தால் கூச்சப்பட்ட கோபியர் உற்சாகப் பரவசத்திலும், உல்லாச சஞ்சாரத்திலும் யமுனையைப் பார்த்துப் பாடத் தொடங்குகிறார்கள்.

'யமுனே நின்னுட நெஞ்சில்.....'

Get this widget | Track details | eSnips Social DNA


இப்பாடலில் ஷோபனாவின் சிறப்பான ஒரு நடனத்தின் ஒளிப் படத்திற்கு!

சிறகுகளின் கதைகள்.


டபடவென அடித்துக் கொள்ளும் இறக்கைகளில் இருந்து சிறகொன்று மெல்ல கழன்று விழுகின்றது. அலகால் கோதிக் கொண்டிருக்கையில் மற்றுமொன்றும் விலகி மிதக்கின்றது. உயரே பறக்கையிலும் சில சிறகுகள் வானின் பிரம்மாண்டத்தில் பயந்து கீழே பாய்கின்றன.

நீர் கொண்ட கண்களின் மீது ஈரப் பிம்பமாய்ப் படிகின்றன அவற்றின் கதைகள்.

த்தித் தத்தி நடக்கப் பழகுகையில் ஒரு சிறகு மெல்ல எட்டிப் பார்த்தது. வியப்பில் ஆழ்ந்து கலையும் முன், வளர்ந்து உடலை மூடுமாறு தெரிந்தது. வளர்கின்ற காலத்தில் கொத்திக் கொத்தி, கீறிக் கீறி, குத்திக் குத்திச் சிதைக்க, மெல்ல மெல்ல காற்றின் போக்கிற்கோ, காலத்தின் போக்கிற்கோ தன்னைக் கொடுத்து மெல்ல மாயமாகி மறைந்தது அச்சிறகு..!

மெல்ல இழப்பின் வலி புரிகையில் நெடுங்காலம் முளைக்கவேயில்லை சிறகுகள்.

பறக்க முயல்கையில் சிறகுகளின் இல்லாமை கால்களில் வலியைக் கொட்டியது. பறக்கவும் இன்றி, நடக்கவும் இன்றி போகும் திசையின் வழிகளில் எல்லாம் பதித்துச் சென்றது தன் பயணத்தை!

காலத்தின் மற்றொரு கனவு ஓவியத்தில், மற்றொரு சிறகு முளைத்தது.

போன ஒரு சிறகின் வலி மிஞ்சியிருக்க, பொன்னிறத்தின் இச்சிறகை கவனிக்கவில்லை. அச்சத்தால் ஆகிப் போன காலங்களில் பறக்க பயந்த நேரங்களில் ஜ்வலித்த சிறகின் ஒளிக்கு கண் மூடிக் கிடந்தது. சற்று தூரம் பறக்கும். பின் விலகும். பின் பயத்தின் விரல்களைப் பிடித்துக் கொண்டு கீழே வேகமாக இறங்கும்.

வேகமான ஒரு சக்கரத்தில் இறங்கி ஏறுகையில் ஏதோ ஒரு ஆரம் பட்டு வலியோடு விலகிக் கொண்டது. மெல்ல மெல்ல கண் பார்வையின் எல்லைகளுக்குள் இருந்து மறைந்து போனது, அச்சிறகு...!

ர்ணங்களால் நிரப்பப்பட்ட வானவில்லின் மேல் பயணம் செய்கையில் பல நிறங்களை எடுத்து மேலே விசிறி அடித்து, விளைந்தது ஒரு சிறகு. ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஆயிரம் கதைகள் சொல்லி மனதின் ஓரங்களில் இருந்து , பிரம்மாண்டமாய்ப் படர்கின்றது முழு இதயத்தின் பரப்பிற்கும்!

கூறவே விடாமல், மொழிந்து கொண்டே இருக்கின்றது சிறகு, படபடவென சிரித்துக் கொண்டே! மெளனத்தால் நனைக்கின்ற அலைகளில் முழுக்கடித்தாலும், சிறகு சிலிர்த்துக் கொண்டு கதைகள் பேசும்.

எப்போது இச்சிறகு விலகிப் போம் என்ற துயரக் கேள்வியோடு அமைதியாய கவனித்துக் கொண்டிருந்தாலும், நிறுத்துவதே இல்லை மலரம்புகளின் வழி விளைவித்துக் கொண்டே இருக்கும் சிறகுகளின் விதைப்பை, மதன்...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Monday, March 24, 2008

பவளத் துளசி.


சிலுசிலுவென நகர்ந்து கொண்டிருக்கின்றது வாய்க்கால் தண்ணீர்.

நுரை நுரையாய்ப் பொங்கு அருவியென ஓடி வரும் ஆற்றின் ஓரமாக வெட்டி, பாத்தி கட்டி, பிரித்து, வாய்க்காலில் நீர் ஓடி, வெகு தூரம் வயலிலும் வரப்புகளிலும் ஈரம் பூக்கச் செய்து செம்மண் கரைசலாக மீண்டும் நதியினோடு கலந்து விடுகின்றது.

ஆரஞ்சுப் பெருந் துளியாய் மெல்ல மெல்ல மலையின் பின்புறம் விழுந்து கொண்டிருக்கின்றது சூரியன்.

திருட்டுப் பயல் இவன்! காலை எடுத்து வைத்து வருபவன், பகலெல்லாம் தன் வெப்பம் ஏறின கரங்களால் பூமிப் பெண்ணைப் புரட்டிப் புரட்டி விளையாடி விட்டு, களைத்து ஓய்வெடுக்க கரையும் போது தான் அவளுக்கு மாலை அணிவிக்கிறான்.

ரீங்காரங்கள் சிறகடித்துப் பறக்கும் தோட்டத்தின் நுழைவாயிலைத் தடவி குளுகுளுவென ததும்பி ஓடிக் கொண்டே இருக்கின்றது பச்சை நீர். கால்களை விட்டபடி மாலை முழுதும் பேசிக் கொண்டே இருப்பதில் எத்தனை ஆனந்தம்.?

தோட்டம் முழுதும் குளிர் பெய்யத் தொடங்கி இருக்கும் நேரத்தின் சந்தோஷங்கள். சின்னச் சின்னப் பூச்சிகளும், மினுக் மினுக்கென சிரித்துக் கொண்டே இருக்கும் மின்மினிகளும், சுறுசுறுவென சிலிர்த்து போய்க் கொண்டே இருக்கும் சிற்றெரும்புகளும் கலகலவென கத்திக் கொண்டே இருக்கும் கருங்குருவிகளும்.... நம்மோடு பரவசத்தின் இறக்கைகளில் பறந்து கொண்டே இருக்கின்றன.

சாரலாய் எங்கோ பெய்யத் தொடங்கி இருப்பதை காற்றோடு இரகசியமாய் ஒரு மொழி பேசி, மண் வாசனையில் நமக்குச் சொல்லி அனுப்புகின்றது துளி மழை. 'வாடைக் காற்று வீசத் தொடங்கி இருக்கிறதா?' என நான் கேட்க, தோட்டத்தின் எல்லாச் செடிகளும் தலையசைத்து ஆமோதிக்கின்றன.

ஊருக்குள் அழைத்துச் செல்லும் ஒற்றையடிப் பாதையின் மேனியில் தடங்கள் எல்லாம் நாம் நடந்து வருகையில் பேசிய வார்த்தைகளின் வாசம் அடித்துக் கொண்டே இருப்பதை, வந்த தென்றல் சொல்லிக் காத்திருக்க, வெட்கத்தால் சிவந்த ஒரு முகத்தின் சிவப்பை அள்ளிக் கொண்டு நகர்ந்து சென்றது.

'பேசியது போதும், கிளம்பலாம்' என்று மாறி மாறி இடைவெளிகளில் சொல்லிக் கொள்ள, 'எத்தனை முறை சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்?' என்று கிண்டலிட்டு கிளம்பியது, உன்னைப் போல் பேச முயன்று தோற்றுப் போன வெறுப்பில் குயில் ஒன்று!

கரைகளில் வரிசையாக வீற்றிருந்த அரச மரங்களின் மஞ்சள் சருகுகளைச் சுமந்து கொண்டே நம் கால்களை நனைத்து கொண்டே செல்கையில், 'மஞ்சள் பூக்கள எங்கே?' என்று நான் கேட்க, 'நீ அருகில் வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறாயே? எப்படி எடுத்துச் செல்ல நான்?' என்று சோகத்துடன் சொல்லி ஓடியது சிலு நீர்.

செந்தூரம் அள்ளிய கைகள் போல் சிவந்திருந்த உள்ளங்கைகளால் வானைத் தடவ, மென் பொன்னிறம் பூசலானது அடிவானம்.

'தன்னிறம் போல் இருட்டிப் போம்' என்று சபித்த கருங்குயில் வெற்றி பெறும் வகையில் மெல்ல இருட்டிக் கொண்டே வருகின்றது வான். புதையல் ஒன்று திறக்கக் காத்திருந்த வறியோர் போல் எங்கெங்கு காணினும் பூக்கத் தொடங்கினர், வான் மின்மினிகள். மூடியிருக்கும் முல்லை மொட்டு, தன் வெண் இதழ்களைத் திறக்கும் இலாவகத்துடன் தன் தேகம் ஜ்வலிக்கத் தோன்றியது வெண்ணிலா.

'செல்வோம்' என்ற கடைசி வார்த்தையைச் சொல்லி நம் பெரும் சொற்பொழிவை நீ முடித்துக் கொள்ள, 'வேண்டாம், வேண்டாம்' என்பது போல் கீச்சு கீச்சென்று குரல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன தோட்டத்தின் பறவைகளும், பூச்சிகளும்!

'நாளையும் மற்றொரு மாலை வரும்!' யாருக்குக் கூறினாயென குழம்பிப் போய் நின்றோம் நானும், தோட்டப் பிரஜைகளும்..!

கிளம்புகையில் ஒட்டியிருந்த ஈர மண் துகள்களை நீ உதற, கதறிக் கொண்டே என் மீது விழுகின்றன 'எங்களை உதறித் தள்ள வேண்டாம் என்று சொல்' என்று, நான் கூறிக் கொண்டே இருக்கும் அதே சொற்களைச் சொல்லி...!

'நாளை பார்ப்போமா..?' கூறிக் கொள்கிறேன் பனி பெய்து ஈரமான மண்ணிற்கும், காதல் பெய்து ஈரமான மனதிற்கும்....!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Sunday, March 23, 2008

பாபா.

ஹா அவதார் பாபாஜியைச் சந்திக்கும் ரஜினி.