Saturday, January 19, 2008

ஆ.. காட்டு.. ஆ..!



ளிங்கு வனத்தின் மேல் பாய்ந்த ஒளி வெள்ளம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது ஆயர்பாடி.

இன்னும் உக்கிரம் கொள்ளாத சூரியனின் பார்வைகள் தீண்டும் பகுதிகளில் எல்லாம் வெம்மையில் பூத்துக் கொண்டிருந்தது வெயில். கொத்தாய்ச் சிரித்துக் கொண்டிருந்த பச்சை இலைகளைப் பிரித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது பகல் ஒளி. வெள்ளிக் காசுகள் தூவிய போர்வையாய் அசைந்து, அசைந்து ஓடிக் கொண்டிருந்தது யமுனை நதி.

ஆவினங்களை ஓட்டியபடி அருகின் வனம் புகுந்திருந்த நாயகர்களின் வீரக் கதைகளைப் பேசிக் கொண்டு யமுனையின் குளிர்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது கோகுலத்தின் கன்னிப் பெண்களின் குழாம்.

கவனம். இது கன்னியர்களின் அந்தரங்கங்கள் அலசப்படும் இடம். நமக்கு, இங்கே என்ன வேலை? வாருங்கள். நாம் ஊருக்குள் செல்வோம்.

அடடே, அங்கே ஒரே கூட்டமாய் இருக்கின்றதே? என்னவாய் இருக்கும்? வாருங்கள். சென்று பார்ப்போம்.

நானா, உங்களை அழைக்கிறேன்? நம்மையெல்லாம் அழைப்பது ஒரு நாதம். கள்ளினும் பெரும் போதையில் நம்மை ஆழ்த்தும் இந்த குழலோசையின் நாயகன், வேறு யாராய் இருக்க முடியும்? அந்த மாயவனே தான்.

தேன் சொரியும் மலரைச் சுற்றிலும் மது மயக்கத்தில் மனம் கிறங்கிய வண்டுகள் இருப்பது அதிசயமா என்ன? பச்சைப் பசிய மரங்கள் நிரம்பிய காடுகளில் மேகங்கள் தங்கி இளைப்பாறுவதும், களைப்பாறுவதும் இயல்பானதே அல்லவா? இந்த மதுசூதனின் மாயக் கரங்கள் மூடித் திறந்து விளையாடும் புல்லாங்குழலின் இனிய இசையில் மன அமைதியுறாத மானிடர் தாம் உண்டோ?

நாமும் அந்தக் குழுவில் இணைகிறோம்.

யாரென்ன , எவரென்ன , குலமென்ன, கோத்திரமென்ன, இனமென்ன, இவனென்ன என்றெல்லாம் பார்த்தா கதிர் ஒளி தருகின்றது? நதி நீர் தருகின்றது? அது போல், யாரெல்லாம் இங்கே உள்ளார்கள்?

வாழ்வின் கடைசிப் படிகளில் படுத்திருக்கும் கிழவர் முதல், முதல் படிக்கட்டில் முழந்தாள் பதித்திருக்கும் பச்சை மண் வரை இவனது குழல் நாதத்தில் மயங்கி இருக்கிறார்களே!

அல்லி மலர்கள் இதழ் கூம்பியிருந்தாலும், நிலவின் ஒளி அதனைத் தட்டித் தட்டி எழுப்புவதில்லையா? தாமரை வெட்கத்தால் தலை கவிழ்ந்திருந்தாலும், கதிரொளி அந்த சிவந்த முகத்தைக் கரங்களால் அள்ளி முத்தமிட இட செந்தாமரை முகம் இன்னும் சிவந்து பரவசம் கொள்ளுவதில்லையா?

இந்த மாயவனின் மனம் கவரும் குழலின் ஓசையில் நாமும் கலந்து நிற்கிறோம்.

ஆ..! இது என்ன எல்லோரும் கலைந்து ஓடுகிறார்களே!~ யாரத்கு, வருவது?

கையில் கழியோடு யசோதை வருகிறாள்.

"கண்ணா..! இது என்ன , எப்போது நீ இங்கே வந்தாய்? உன்னை சமையலறையில் அல்லவா கட்டிப் போட்டேன்! அடே, மாயப் பயலே? என்னையா ஏமாற்றி விட்டு வந்தாய்! இந்த வெயிலைப் பார்த்தாயா? நெல் மணிகளை வெளியே கொட்டி வைத்தால், நிமிடக் கணக்கிலே அரிசியாய்ப் பொறிந்து போகுமே! இந்த சூட்டில் நீ நிற்கலாமா? நாளை உன்னை மணக்கப் போகும் மகராசி வந்து உன்னை கருப்பாக வளர்த்து விட்டேன் என்று குறை கூறுவாளே! அதற்காகவா நீ திட்டம் போட்டு பகலெல்லாம் வெயிலின் சூட்டையேல்லாம் உன் மேனியோடு தாங்கிக் கொண்டு வருகிறாய்? வா. வீட்டுக்கு! உனக்குப் பிடித்த வெண்ணெய்ப் பலகாரங்கள் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் நமது தொழுவத்தில் பிறந்த கன்றுக்கும் தராமல் சீம்பாலில் இனிப்புகள் செய்து வைத்திருக்கிறேன். வா, மனைக்கு..! அடே பயல்களா! நீங்கள் விளையாட என் மாணிக்கம் தான் கிடைத்தானா? இரவெல்லாம் இந்தப் பெண்கள் அள்ளிக் கொண்டு போய் கொஞ்சித் தீர்க்கிறார்கள். அவர்களது முத்தங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு சிவந்த சிறுவனாக வருகிறான். பகலில் நீங்கள் வந்து கூட்டிக் கொண்டு போய் வெயிலில் விளையாடி அவனைக் கருநிறத்துக் கண்மணியாக மாற்றி அனுப்புகிறீர்கள். என் செல்வத்தின் உடல் தான் என்னாவது? இனிமேல் மனைப் பக்கம் வாருங்கள். உங்களையும் இவனுடன் சேர்த்து உரலோடு கட்டிப் போடுகிறேன். பிறகு எங்கும் நகரவியலாது. உங்கள் தாயார்கள் வந்து தயை கூறக் கேட்டாலும் அனுப்ப மாட்டேன். ஆமாம். கண்ணா! இனிமேல் வெளியே வந்து விளையாட மட்டேன் என்று உறுதி கூறு? எங்கே சொல்லு..! அது என்ன வாயில் அடைத்துக் கொண்டு இருக்கிறாய்? எங்கே காட்டு? ஆ.. காட்டு..! ஆ..!"

ஆஹா! இந்த அம்மையின் அன்பையும், ஆதுரமான பேச்சையும் வேறெங்கே காண முடியும்? நாமும் கண்ணனின் லீலையைப் பர்ப்போம்.

புல்லாங்குழலிற்கு உயிர் கொடுத்து உற்சாக உணர்வூட்டும் அந்த செவ்விதழ்களைத் திறந்து காட்டுகிறான். ஆஹா! ஆங்கே காண்பது தான் என்ன!

பிரபஞ்சத்தை அல்லவா காட்டுகிறான். அவன் இங்கே காட்டியதால், பிரபஞ்சத்திலேயே ஒன்றும் இல்லாமல் பஞ்சம் ஆனது போல் உள்ளதே! அவை தான் இங்கேயே உள்ளதே.! ஏ.. மனமோகனா! அழகிய மணவாளா! மகா பிரபு! உன் கருணையின் வெள்ளத்தையும், மஹாமாயாவின் லீலைகளையும் உன் அன்னை யசோதையே தாங்கிக் கொள்ளவியலாமல் மயங்கி விழுகிறாளே! நாங்கள் என்ன செய்வோம்?

விளக்கு - ஒரு விளக்கம்.



ந்து விளக்குகளில் ஓர் அர்த்தம் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.

விளக்குகள் எப்படி பணியாற்றுகின்றன?

ஒரு சிறு குழிவான பாத்திரம். அது தான் விளக்கு. அதனுள் எண்ணெய் அல்லது நெய் ஊற்றப்படுகின்றது. பஞ்சு அல்லது நூலினால் திரிக்கப்பட்ட திரியானது அதனுள் இடப்படுகின்றது. ஒரு முனை வெளியே மேல் நோக்கி நீட்டப்படுகின்றது. திரியில் நெருப்பு ஏற்றப்படுகின்றது. விளக்கில் இடப்பட்டிருக்கும் நெய்யோ, எண்ணெயோ திரி வழியாக மேலேறி நெருப்பு எரியத் துணையாய் இருக்கின்றது. எண்ணெய் தீரத்தீர விளக்கு எரிந்து , எண்ணெய் தீர்ந்தவுடன் விளக்கும் அணைந்து போகின்றது.



மனித உடலும் இந்த விளக்கைப் போல் தான் உள்ளது.

உடலின் கீழ் இருக்கும் ஆற்றலானது எண்ணெய் போன்றது. அது தலையில் இருக்கும் வரையில் தான் நமது ஐந்து புலன்களும் செம்மையாகப் பணியாற்றுகின்றன. எண்ணெய் தீரத் தீர எரிகின்ற ஆற்றல் குறைந்து அதனால் ஐம்புலன்களும் தமது ஆற்றலை இழக்கத் தொடங்குகின்றன. எவ்வாறு எண்ணெயைத் திரியின் நுனிக்குக் கொணர்வது? அதற்குத் தான் முதுகெலும்பு எனும் திரி உதவுகின்றது. அதன் மூலமாக எண்ணெய் வேறெந்த வழியிலும் வீணாகாமல், திரியின் நுனிக்கு ஏற்றிக் கொண்டு வர திரி சுடர் விட்டு பிரகாசிப்பது போல், நமது ஐம்புலன்களும் திறம்பட பணியாற்றுகின்றன.

விளக்கு : மனித உடல்.

எண்ணெய் : உடலின் கீழ் உள்ள ஆற்றல்.

திரி : முதுகெலும்பு.

திரியின் நுனி : தலை, முகம்.

என்னே, நமது முன்னோர்களின் சிந்தனை...!

2007 - ல் எழுதியதில் பிடித்தது.

ர்வேசன் ஒரு தொடர் விளையாட்டு துவங்கி இருக்கார். பதிவர்கள் கடந்த ஆங்கில ஆண்டு 2007-ல் தாம் பதித்த பதிவுகளில் தமக்குப் பிடித்த பதிவு என்று ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும் என்று விளம்பியிருக்கிறார்.

நிறங்கள் வேறெனினும் தமது குட்டி என்றின்றி போகுமா என்று மகாகவி கேட்டிருப்பது போல், தமது படைப்புகளில் தமக்கு மிகப் பிடித்தது என்று எது எனும் கேள்விக்கு தாய் என்ன பதில் கூற முடியும்? 'காக்கைக்கும்...' தானே!

எனினும் இப்போது மறுபடியும் அனைத்துப் பதிவுகளையும் மீண்டும் எடுத்துப் படித்துப் பார்க்கையில், மிகவும் பிடித்துப் போயிருந்தது, இது தான்.

இவனை இவளால்..!

தலைப்பு , புகைப்படம், நடை, ஆரம்பித்து முடித்த விதம் என்று அனைத்து அம்சங்களிலும் எனக்குப் பிடித்துப் போன ஒன்றாக இருக்கிறது.

இப்பதிவில் ஒரு சிறப்பு உள்ளது.

முன்னொரு காலத்தில் எழுதிய கவிக் கட்டுரைகள் இரண்டை இணைத்து எழுதியதோடு, இரண்டையும் மிக்ஸ் செய்து, பதிவிட்டுக் கொண்டிருக்கையில், அப்போது தோன்றிய புதிய கருத்து(?)களையும் இணைத்து எழுதியது.

லிஸ்ட்.

அழைப்பு.

Friday, January 18, 2008

எதிர்காலம் - அறிய முடியுமா?

ரு சிறு கேள்வி!

நீங்கள் அடுத்த நொடியில் உங்கள் இடது கண்ணை என்னவெல்லாம் செய்யக் கூடும்? எனக்குத் தெரிந்து கீழ்க் காணும் ஏதேனும்.

இடது புறம் கண்களின் பாப்பாவை நகர்த்திப் பார்க்கலாம்.

வலப்புறம். மேலே. கீழே.

இமையால் மூடலாம். இமையைத் திறக்கலாம். பிடுங்கி எறியலாம். கைகளால் தேய்க்கலாம். கைகளால் தேய்ப்பதை நிறுத்தலாம்.

போதும்.

இந்த உலகில் உங்கள் இடது கண் மட்டும் மற்றும் நீங்கள் தான் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கவனம். வேறு எதுவும் இல்லை.

எனவே அடுத்த நொடியில் உங்கள் இடது கண் அடையப் போகும் நிலை என்பது மேலே கூறப்பட்ட நிலைகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே.! நிகழ்தகவுத் தத்துவம் (Probablity Theory)உபயோகித்தால், இடது கண் அடையக் கூடிய நிலை தெரிந்து விடும் அல்லவா?

ஆனால் உலகம் இயங்கும் விதம் அவ்வளவு எளிதல்ல.

நமது இடது கண் அடையப் போகும் நிலை, பற்பல காரணிகளைப் பொறுத்து இருக்கிறது. அந்த நிகழ்வுகளின் நிகழ்தகவுகள் வேறு வேறாக இருக்கும். சார்பு நிகழ்தகவு. (Mutual Probability).

இது போல், உலகில் நிகழக் கூடிய அத்தனை நிகழ்வுகளும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்து விடும். உதாரணமாக கண்களால் பார்க்க மட்டுமே முடியும் அதனால் சாப்பிட முடியாது அல்லவா?

இப்படி உலகின் பொருட்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தமது செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தனை அத்தனை நிகழ்வுகளின் கூட்டு நிகழ்தகவுகள் தெரிந்திருப்பின் எதிர்காலம் நாம் கணித்து விட முடியும் அல்லவா? அத்தகைய வலிய கணிணி உருவாக்கப் பட்டால், காலக் கண்ணாடி நம் எதிரே...!

Theory of Everything மாலையில் படித்ததின் விளைவு.

மெளனமே பதில்.



ரீசார்ஜபிள் பேட்டரி எப்படி சார்ஜ் ஆகின்றது தெரியுமா..?

ப்ளக்கில் கனெக்ஷன் கொடுத்தவுடன் மெயின் கரண்ட் பாய்ந்து பாட்டரியச் சார்ஜ் செய்கின்றது என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிற்கு யாஹூவைக் கேட்டதில் யாஹூவார் இப்படி பதில் கூறினார்.

http://ask.yahoo.com/20031030.html

அதாவது நெகட்டிவ் முனையில் இருந்து பாஸிட்டிவ் முனைக்கு சர்க்க்யூட் வழியாகச் சென்ற எலெக்ட்ரான்களை மீண்டும் எதிர் முனைக்குக் கூட்டி வருவதைத் தான் சார்ஜ் செய்வது என்கிறோம். (இதெல்லாம் கல்லூரியிலேயே படித்தது தான். என்ன செய்வது? பிடுங்கும் ஆணிக்கும் படித்த பிரியாணிக்கும் ஸ்நானப்ராப்தி (அப்படின்னா என்னாங்கோ?) கூட இல்லை.)

இக்கதை எதற்கு இப்போது?

நமது உடலிலும் ஆற்றல் உள்ளது. அதனை எழுப்பி, அவ்வப்போது தலையில் ஏற்றி விட்டால் தான் அடுத்த நாள் நம்மால் வேலை செய்ய முடியும். இல்லாவிடில் கொஞ்ச கொஞ்சமாக ஆற்றல் தீர்ந்து போய், பேட்டரி Died .

எங்கு வேண்டுமானாலும் எலெக்ட்ரான்களை எதிர்முனைக்கு கொண்டு வர முடியுமா? அதுதான் எலெக்ட்ரான்கள் மற்றும் அதனை ஏற்ற வேண்டிய எதிர்முனை இரண்டும் பேட்டரியிலேயே உள்ளன. பின் ஏன் மெய்ன் ப்ளக் தேவைப்படுகின்றது?

அது போல் தான் உடலின் கீழ் இருக்கும் ஆற்றலை மீண்டும் தலைக்கு ஏற்ற உதவும் மெய்ன் ப்ளக்குகளாக கோயில்கள் உள்ளன. (இங்கு கோயில்கள் என்பன வழிபாட்டு இடங்கள்.)

நமது ஆற்றல், மற்றும் ஏற்ற வேண்டிய நமது தலை இரண்டும் நம்மிடமே இருப்பினும், கோயில்கள் அதைத் தூண்டும் வேலை செய்ய தேவைப்படுகின்றன.

அந்த ஆற்றல் எனும் இறைநிலை நமக்குள்ளேயே இருக்கின்றது.

கவுண்டரின் காமெடி நிகழ்ச்சியைப் பார்ர்கின்றோம். வாய் விட்டு சிரிக்கின்றோம். அவர் வந்து நம்மை சிரி என்றாரா? இல்லை ஏதேனும் தொடு முறையில் சிரிக்கச் சொன்னாரா?
இல்லை இந்தச் சிரிப்பு நம்முடன் தான் இருந்தது. அதனை மூடியிருந்த திரையைத் திறக்கும் வேலையைத் தான் அவர் செய்தார்.

அது போல் தான் துக்கமும், கோபமும், இன்ன பிற உணர்ச்சிகளும், உணர்வுகளும் நம்முடன் தான் இருக்கின்றன. சுற்றி நிகழும் நிகழ்வுகளும், நாம் காணும் காட்சிகளும் தான் ஒவ்வொரு உணர்வை நம்க்குள் இருந்து வெளிக் கொணர்கின்றன.

அது போல் இறைநிலையும், இறைவனும் நமக்குள்ளேயே தான் இருக்கிறார்கள். நாம் காணும் காட்சிகள் அந்த இறைநிலையை வெளிக் கொணரும் வகையில் , காட்சிகளை நாம் காண வேண்டும்.

கண்களைத் திறந்து காணும் வெளிக் காட்சிகளால் பல உணர்வுகள் தூண்டப்பட்டாலும், இறைநிலை அதனால் மிகக் குறைந்த அளவே தூண்டப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கண்களை மூடி உள்ளே பார்ப்போம். நாம் கண்களை இமைகளால் மூடியபின் நம் கண் பார்வை இன்றி போய் விடுகின்றதா என்ன? இல்லை. வெளி உலகத்திற்கும், நம் கண்களுக்கும் இடையில் திரை விழுகின்றது. அவ்வளவு தான். மற்றுமொரு உலகம் நமக்குள் இருக்கின்றது.

ஆன்மீக நிலை பற்றி வெளியே சொல்லக் கூடாது என்பார்கள்.

ஒரே ஒரு சிந்தனையை மட்டும் கூறிக் கொண்டு இப்பதிவை முடித்து விடுகிறேன்.

நமது வாழ்வின் பொருள் என்ன? எதற்கு இங்கு வந்திருக்கிறோம்? என்பதெல்லாம் கல்பகாலமாக கேட்கப்பட்டு வந்திருக்கும் கேள்விகள்.

தற்காலத்துக்கு, பொட்டி தட்டுவது தான் என் வேலையா? இதற்கு தான் நான் பிறவி எடுத்திருக்கிறேனா? இந்த Project -ஐ வெற்றிகரமாகச் செய்து முடிப்பது தான் என் பிறவியின் நோக்கமா? எதற்கு இந்த வேலை? என் நாள் பொழுதுகள் எல்லாம் 4 போல் மடிந்து உட்கார்ந்து போக வேண்டுமா?

.. இன்னும் பல கேள்விகள் நாக்கின் நுனியில் அமர்ந்திருக்கின்றன.

ரஜினியும் நாசரின் முகமும்...!

இது ஒரு லேட்டான பதிவு. கொஞ்சம் லேட்டான.! 6 வருடங்கள்.

'லகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான ...' என்று முழங்க சன் டி.வி.யில் போடப்படும் ஓடாத படங்களைப் பார்த்திருப்பீர்கள். எப்போதாவது இந்த மாதிரி படங்களில் எது மிகவும் குறைந்த காலத்திலேயே சன் டி.வி.யில் ரிலீசான படமாக இருக்கும் என்று யோசித்ததுண்டா? அப்படியொரு ஐயம் வந்தால், நீங்கள் கவலையே பட வேண்டாம். நான் இப்போதே அதற்கான விடையைக் கூறி விடுகிறேன். கோடீஸ்வரன் நிகழ்ச்சிகளிலோ, 'ஆர் மனசில் ஆரு' நிகழ்வுகளிலோ தலையை மேலும் கீழுமோ, சைடுவாக்கிலோ ஆட்டுவதற்கு முன் ஞாபகப்படுத்திக் கொள்ளவோ தேவைப்படலாம்.

அது நாசர் அவர்களின் 'முகம்' என்ற படம்.



என்ன, பேரைக் கேள்விப்பட்டது போலவே இல்லையா? இது போதுமே, நான் சொல்லும் தகவலின் நம்பகத்தன்மைக்கு..! என்னங்க இது, YouTube-ல் தேடினாலும் ஒரு Clip கூட கிடைக்கவில்லை..!

கதை இது தான்.

ஓர் அவலட்சணமான முகம் கொண்டவர் நாசர். அவரது முகத்தைப் பார்த்தாலே மக்கள் அடிக்கக் கூடிய அளவிற்கு அருவெறுப்பாக இருக்கும். ஏதோவொரு ஆர்ட் இயக்குநர் கண்களில் பட்டு விடுவார். விடுவாரா அவர்? அவரது படத்தில் நடிக்க வைத்து விடுவார். ரசிகர்கள் திரையைக் கிழித்தே விடுவார்கள்.

நாசர் பின் ஒரு பெட்டியைக் குடையும் போது ஒரு முகமூடி முகத்தில் விழுந்து மெழுகுவர்த்தி சூட்டில் உருகி அவர் முகத்தோடு ஒட்டிக் கொள்ளும். அவர் அதிரூப சுந்தரனாகி விடுவார். திரைப்படங்களில் நடித்து பெரிய ஹீரோவாகி, ரோஜா என்ற பேரழகியையும் மணந்து கொள்வார்.

ரசிகர்கள் அவரது முகத்தைத் திரையில் பார்த்தாலே உணர்ச்சி பெருகி 'தலைவா.. தலைவா' என்று பெருங்குரலெடுத்துக் கூவுவார்கள்.

அவரோ தனது உண்மையான முகத்தை அவ்வப்போது தனியறையில் பார்த்து மகிழ்வார். ஒருமுறை அவர் தன் உண்மையான முகத்தோடு மனைவி முன் நின்று உண்மையைக் கூற முயல, அவரே நம்பாமல் வேறு யாரோ கிறுக்கன் என்று பயந்து அடித்துத் துரத்தி விடுவார்.

அவரும் ரசிகர்கள் கூட்டத்தில் வந்து 'நான் தான் அவன்' என்று கூறிப் பார்ப்பார். அவர்களும் ஏதோ பைத்தியக்காரன் போலும் என்று பயந்து அவரைத் துரத்தி விடுவார்கள்.

பிறகு அவர் ரசிகர்களுக்கு தனது பொய் முகம் தான் சந்தோஷம் அளிக்கிறது என்பது புரிந்து, அந்தக் கோலத்திலேயே மீண்டும் மாஸ்க் அணிந்து 'ஹேய் ஹேய்' என்று பாடுவார். ரசிகர்களும் அவரை அப்படியே அள்ளிக் கொள்ளுவார்கள்.

இப்படி படம் முடியும்.

உண்மையில் பார்க்கப் போனால், நமது அடையாளம் என்று எது இருக்க முடியும்? முகம் தானே..! கழுத்துக்கு கீழ் எல்லோர்க்கும் ஒன்று தானே! நமது முகம் தானே நாம் யார் என்று காட்டுகிறது.

சரி, இதில் ரஜினி எங்கு வந்தார்?



தனது ஆசைக்காக 'பாபா' என்றொரு படம் எடுத்தார். ரசிகர்கள் துரத்கி விட்டார்கள். பிறகு ரசிகர்கள் விரும்புவது தான் தனக்கும் என்று தன்னை மாற்றிக் கொண்டு, சந்திரமுகி, சிவாஜி கொடுத்தார். இளமையாக, தனது பெண் போன்ற ஸ்ரேயாவுடன் டூயட் பாடிக் கொண்டு, காலைதூக்கி நின்று ஃபைட் கொடுத்து, கணிணிக் கலையில் நிறம் மாற்றிக் கொண்டு....எத்தனை மாற்றங்கள் திரையில் காட்டும் முகத்திற்காக..!

சந்திரமுகி வந்த சில நாட்களிலேயே இமயப் பயணம். விகடனில் அட்டையில் அந்த சொட்டைத் தலை, வெள்ளைத் தாடி, அக்குளில் கிழிந்த கதர்ச் சட்டை, ஜோல்னாப் பை...

எது உண்மை...?

இந்தக் கோலத்தில் அவர் நடித்தால் படம் ஓடுமா..? ஓடாது என்று காட்டி விட்டது 'பாபா'..

இப்போது அடுத்த ஏமாற்று வேலை. 'ரோபோ' என்ற பெயரில்.! தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, மாற்றிக் கொண்டு..!

என்னமோ போங்க.!

பி.கு.: ரோபோ -க்கு தமிழ் பெயர் யோசிக்கிறார்களாம். 'ரோட்டோரம் போய்க்கினேயிரு' என்று வைத்து, ரோ - வையும் போ - வையும் ஹைலைட் பண்ணினால் போதுமே..! ஆமா, இந்த வார்த்தை தமிழ் வார்த்தை தானே!. இல்லையென்றால் அவ்ளோ தான், வூடு கட்டி அடிப்போம், அக்காங்..!இன்னா நெனச்சிகினுகிறீங்க...! கீசிப்புடுவோம்..!

எனது 'சென்னைச் செந்தமிழ்' பதிவுகள் இங்கே..!

இப்ப இன்னான்ற..?

கூவக்கரையாண்ட...!

இன்னா சார்?

(இந்த பந்தாவுக்காகத் தான் இந்தப் பதிவா..?)

Wednesday, January 16, 2008

இன்னிய நெலம.

சேர நாட்டில் நிலைமை இந்த ரேஞ்சில் போய்க் கொண்டிருப்பதால், கூடிய விரைவில் மலையாள ப்ளாக் ஒன்றையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.



ச்சும்மா...............

சிறுவர் மலரும் Corporate Debugging-ம்.



முன்னமொரு நிலாக் காலத்தில் படித்த சிறுவர்மலர் கதை நினைவுக்கு வந்தது. நம்ம கதைப் பைத்தியம் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. (எல்லாம் ஒரு விளம்பரம் தான்...!)

மூன்று பேர் ஓர் ஊரிலிருந்து மற்றுமொரு ஊருக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது வழியில் கனமழை பிடித்துக் கொள்ளும். காட்டோரம் சென்று கொண்டிருக்கும் அவர்கள் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒதுங்குவார்கள்.

பெய்த பெருமழையால், பெருமரங்கள் எல்லாம் சாய்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இருக்கும் மண்டபமும் மெதுவாக ஆட்டம் காண ஆரம்பிக்கும்.

முதலில் ஒருவன் வெளியேறுவான். மண்டபம் இலேசாக ஆட்டம் காணும். அடுத்து இரண்டாமவன் வெளியே ஓடுவான். இப்போது மண்டபம் இன்னும் கொஞ்சம் ஆட்டம் அதிகரிக்கும்.

கடைசியாக மூன்றாமவன் வெளியேறியது தான் தாமதம். மண்டபம் பொலபொலவென இடிந்து விழும்.

முதலிருவர் கடைசியாக வந்தவனைப் பார்த்துக் கூறுவர். "அடப்பாவி..! உன்னால் அல்லவோ இந்த துரதிர்ஷ்டம் வந்தது. நாங்கள் வெளியேற, வெளியேற மண்டபம் இடிந்து விழ ஆரம்பித்தது. நீ வெளி வந்தவுடன் மொத்தமாக இடிந்து விழுந்து விட்டது.."

கடைசியாக வந்தவன் சொல்லுவான். "தவறு. நான் கடைசி வரை இருந்ததால் தான் மண்டபம் முதலிலேயே இடியாமல் இருந்தது. ஒருவேளை நான் முதலிலேயே வெளியேறி இருந்தால், அடுத்த கணமே இடிந்திருக்கும். நீங்கள் மாட்டிக் கொண்டிருப்பீர்கள்.." என்றான்.

இந்த மூவரில் யார் அதிர்ஷ்டசாலி என்ற சந்தேகத்துடன் சில நாட்கள் கழிந்தன.

ந்தக் கதை எதற்கு இப்போது என்றால், பணியில் ஒரு பிரச்னை. Debug செய்ய வேண்டும். எந்த காரணி இதற்குக் காரணம் என்று Divide and Conquer வழிமுறையில் பிரித்து ஆராய்ந்து கொண்டிருந்த போது, சடாரென இக்கதை நினைவுக்கு வந்தது.

சிறு வயதில் படித்த சிறுவர்மலர் கதை நினைவுக்கு வந்த அளவுக்கு, 'நாலு வருஷம் உக்காந்து படித்த' இஞ்சினியர் படிப்பு ஞபகத்திற்கு வரவில்லையே என்ற சுய பரிதாபமும் வந்து தொலைத்தது.

Tuesday, January 15, 2008

தைப் பொங்கல்.

னைவர்க்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஓர் அருமையான இராஜாப் பாடலோடு தைப் பொங்கலைக் கொண்டாடுங்கள்.