Saturday, December 30, 2006

ரொம்ப நாள் கழித்து...!


புகைப்படம் நன்றி : தினமலர்
மிக்க வேலை கொடுத்து விட்ட திட்ட மேலாளரை திட்டி விட்டு (மனதிற்குள் தான்) இப்பதிவை இடுகிறேன். ரொம்ப வருத்தமாய் இருக்கிறது. தேன்கூடு போட்டிகளின் கடைசிப் போட்டியில் பங்கு கொள்ளமுடியாமல் போனதை நினைத்து.

இனி தவறாமல் அவ்வப்போது பதிவு இட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

இன்று மனம் சரியில்லாமல் தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஈராக் 'முன்னாள்' அதிபர் சதாம் தூக்கிலப்பட்டார் என்ற செய்தி கொஞ்சம் எல்லாரையும் பாதித்துள்ளது போல் என்னையும் கொஞ்சம் . ஒருவேளை அவரைப் பற்றி நான் அறிந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தான் எனக்கு அவர் தூக்கிலிடப்பட்டதில் அனுதாபம் தோன்றுகிறதோ? அவர் எனது இனத்தை அழித்திருந்தால் நானும் அவர் மரணத்திற்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியிருப்பேனோ, என்னவோ?

மிகச் சமீபத்தில் தான் பா.ராகவன் அவர்களின் 'டாலர் தேசம்' நூலைப் படித்து முடித்தேன். அதிலிருந்து அறிந்து கொண்ட வரையில், உலக தாதா என்ற பட்டத்தைப் பெற்ற பின்னால், அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டி அமெரிக்கா ஆடுகின்ற ஆட்டங்களில் ஒன்று தான், இந்த ஈராக் ஆக்ரமிப்பும் என்பதை உணர முடிகின்றது.

இதனை ஈராக் மேல் போர்த் தொடுக்கையில் கூட்டாளியாக இருந்த பிரிட்டனின் பிளேர், அதற்காக வருத்தம் தெரிவித்ததில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இனி அடுத்த இலக்கு என்னவாக இருக்கும்?

ஈரான், வட கொரியா... இந்தியா..?

ஏன் இருக்க முடியாது? இதேபோல் தான் வட கொரியாவிற்கும் முன்பு அமெரிக்கா அணு தத்துவம் பற்றி மாய்ந்து,மாய்ந்து உத்வியது. இப்போது அதன் மேல் பொருளாதாரத் தடைகள். இப்போது நமது நாட்டிலும் அது தான் நடந்து வருகிறது.

உஷாராக இருக்க வேண்டியதாகிறது.

புத்தாண்டைத் துவக்க வேண்டிய நேரத்தில் இப்படி ஒரு செய்தி.

இந்த ஒரு வருடத்தில் நான் என்ன செய்துள்ளேன், என்ன வெல்லாம் எனக்கு நடந்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

கொஞ்ச நாள் பெங்களூரு சென்று பணிபுரிந்து விட்டு மீண்டும் சிங்காரச் சென்னைக்கே வர வேண்டியதாகிப் போய் விட்டது. பரவாயில்லை. ஆனாலும் இலக்கு வைத்திருந்த பணி ஊதியத்தை அடைய முடிந்ததில் மகிழ்வே.

மீண்டும் சென்னை வந்து பணி தொடங்கியதில் இருந்து என்ன என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேனோ, அவற்றில் ஒவ்வொன்றாக மேற்கொண்டு வருவதில் மகிழ்வாகவே இருக்கிறது.

வரப்போகும் ஆண்டிற்கான திட்டங்கள் வகுப்பதிலும், அதற்கான செயல்களை பகுப்பதிலும் கொஞ்சம் நேரம் செலவிடப் பட வேண்டியுள்ளது. திட்டப்படி நடந்தால் நமது வலையுலக அன்பர்கள் பலரை நேரில் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த ஆண்டு நடந்த மற்றுமொரு முக்கிய நிகழ்வு, வலைப் பதிவு உலகத்தில் நானும் ஒரு மின்மினியாகப் பறக்கத் தொடங்கியது. என்னால் சிறுகதைகளும் எழுத முடியும் என்று எனக்கே புரிய வைத்த தேன்கூடு மற்றும் பல நண்பர்கள் அறிமுகம்.

மீண்டும் விரைவில் சந்திப்போம்.

அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Sunday, December 03, 2006

நவம்பர் மாதப் போட்டி முடிவுகள்.

நவம்பர் மாதத் தேன்கூடு போட்டியில் நமது வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விபரங்கள்.

வலைப் பதிவர் வாக்கு:

1.பரவசம்.. இலவசம்...! - வசந்த் 8.9%

2.இப்ப இன்னான்ற..? - வசந்த் 6.7%

3.எது இலவசம்? - வசந்த் 6.7%

4.இணைத்த இலவசம். - வசந்த் 6.7%


வாசகர்களின் ( வலைப் பதிவு இல்லாத) வாக்கு:

1.இப்ப இன்னான்ற..? - வசந்த் 3.2%

2.எது இலவசம்? - வசந்த் 3.2%

3.பரவசம்.. இலவசம்...! - வசந்த் 3.2%

4.இணைத்த இலவசம். - வசந்த் 3.2%

பெருவாரியாக வாக்களிக்காமல் , சிறுவாரியாகவாவது வாக்களித்து, குறைந்தது களத்திலாவது இருக்கச் செய்த வாக்காளப் பெருங்குடி மக்களுக்கு என் நன்றிகள்.

மீண்டும் டிசம்பர் மாதப் போட்டியில் பார்ப்போமா..?

Thursday, November 23, 2006

அர்த்தம்.. அனர்த்தம்..!

23. நவ.2006 அன்று தமிழ் முரசு பத்திரிக்கையில் பார்த்த செய்தி.

'காங்கிரஸ் அமைச்சர்களைப் பிடித்து சிறையில் அடைப்போம்' என்று
கர்னாடக துணை முதல்வர் எட்டியூரப்பா அவர்கள் கூறியிருப்பதாகவும், அதனை
முன்னாள் முதல்வர் தரம்சிங் அவர்கள் ம்றுப்பு தெரிவிப்பதாகவும் அந்த
செய்தி வெளியாகி இருந்தது.

இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா..?

'அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா' என்கிறீர்களா..?

விஷயம் இதில் இல்லை. மறுப்பாய் என்ன கூறியிருக்கிறார், பாருங்கள்.

'... துணை முதல்வர் தவறாகப் பேசியிருக்கிறார். அவர்கள் மக்கள்
னலத் திட்டங்களை செயற்படுத்துவதில்லை. ஆனால் பல கோடிக் கணக்கான
ரூபாய்களுக்கு ஊழல் செய்துள்ளார்கள். விரைவில் நாங்கள் அவர்கள்
இடத்தைப் பிடிப்போம்...'

என்ன சொல்ல வருகிறார் இவர்..?

இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி தான்
ஞாபகம் வருகிறது.

அப்போது நான் +1 படித்துக் கொண்டிருந்தேன். +2 மாணவர்கள் ஏதோ ஒரு
காரணத்துக்காக தமிழ் ஆசிரியரைத் தண்டிக்க வேண்டும் என்று ஸ்டிரைக்
( பணி நிறுத்தம் என்று சொல்லலாமா..?) செய்தார்கள். எங்களையும் அதில்
இழுத்து விட்டார்கள்.

பின் தலைமை ஆசிரியரிடம் மனு கொடுப்பதற்காக பல கோரிக்கைகளை
எழுதினார்கள். பின் நாங்கள் படை சூழ, அவரிடம் கொடுத்தார்கள்.

அதைப் படித்து விட்டு தலைமையாசிரியர் அதிர்ச்சி அடைந்து
விட்டார்.'தமிழாசிரியரை மட்டும் தண்டி' என்று சொன்னால் பழிவாங்கி விடும்
சாத்தியம் உள்ளதால், பல கோரிக்கைகளை எழுதி, கடைசியாக, இதற்காக
தமிழாசிரியரைத் தண்டியுங்கள் என்று மனு எழுதியிருந்தார்கள்.

'....

மிதிவண்டி நிறுத்தம் சரியாகப் பராமரிக்கப் படவில்லை.

....
கழிப்பறை சரியாகச் சுத்தம் செய்யப்படவில்லை. எல்லாம் அங்கேயே
தேங்கி நிற்கின்றன.

இதற்கு காரணமான தமிழாசிரியரை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய
வேண்டும்'

என்ன நடந்தது என்றால், அவர் அடித்து ஒரு மாணவன், மருத்துவமனை
செல்ல வேண்டியதாகி விட்டது. அதை எழுதாமல் விட்டதால், அர்த்தம்
அனர்த்தமாகி இருந்தது.

Tuesday, November 07, 2006

இணைத்த இலவசம்.

"சொல்கிறேன். ஆனால் நீ சிரிக்கக் கூடாது.." என்றாள் ப்ரியா.

"சொல்.சிரிக்க மாட்டேன்.." என்றேன் நான்.

"அப்ப நமக்கு ஏழு இல்ல எட்டு வயசு இருக்கும். தீபாவளிக்காக நான் உன் வீட்டுக்கு வந்திருந்தேன். தீபாவளி அன்னிக்கு நீ தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு இருந்த. நிறைய எண்ணெய் கையில ஊத்திக்கிட்டதனால கையில எல்லாம் எண்ணெய் வழிஞ்சு ஓடுது. அதை அப்படியே தலையில தேய்ச்சுக்கிட்ட. அது ரொம்ப அதிகமாகி, முகத்தில எல்லாம் வழிஞ்சுது. அப்ப உன்னைப் பாக்க அசல் குரங்கு மாதிரியே இருந்துச்சு. 'எண்ணெய் சட்டி குரங்கு','எண்ணெய் சட்டி குரங்கு'ன்னு உன்னை கேலி பண்ணி பாடினதை நினைச்சா இப்பவும் சிரிப்பு தான் வருது.." என்றபடி சிரித்தாள்.

நானும் மெல்ல சிரித்தேன்.

"அதுக்கு பழி வாங்க நான் என்ன பண்ணினேன், ஞாபகம் இருக்கா..?" என்று கேட்டேன்.

"அதை மறக்க முடியுமா..? நான் குளிக்கப் போகும் போது, பின்ல சரவெடியைக் கட்டி, அதை என் தலைமுடியில கட்டி, பத்த வெக்கப் போறேன்னு பயமுறுத்தினாயே.. அதை மறக்க முடியுமா..? அன்னிக்கி நான் அழுதிட்டேன்.. தெரியுமா.." என்று சிரித்தாள்.

"எப்படி அழுத, தெரியுமா..?" என்று விட்டு நான் குரங்கு போல் செய்து காட்ட, இருவரும் கலகலவெனச் சிரித்தோம்.

இது போல் இருவரும் சேர்ந்து சிரித்து, பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது.

ப்ரியா என் மாமா பொண்ணு தான். எங்களுக்கு பத்து வயது ஆகற வரைக்கும் ஒண்ணா தான் இருந்தோம். ரெண்டு குடும்பமும் சேர்ந்து சுற்றுலா போவோம். ஏதாவது கோயில் பண்டிகை, தீபாவளி, பொங்கல் என்றால் இரண்டு குடும்பமும் ஒன்றாகத் தான் கொண்டாடுவோம்.

அப்புறம் என்ன ஆனது என்றால், ரெண்டு குடும்பமும் சேர்ந்து ஊரில் கொஞ்சம் நிலம் வாங்கினோம். அதைப் பிரித்துக் கொள்வதில் துவங்கிய சண்டை, பின் பழைய மறைந்திருந்த கோபங்களையெல்லாம் கிளறி பெரிய பிரிவுக்கு வழி வகுத்து விட்டது. அன்று பார்த்தது தான், பேசிக் கொண்டது தான்.

பிறகு இரண்டு குடும்பமும் வெவ்வேறு ஊர்களுக்கு சிதற, புதுப்புது இடங்கள், புது நண்பர்கள் என்று மாறிப் போனதில் இருவரும் ஒருவரையொருவர் மறந்தே போனோம். அவ்வப்போது ஊரில் ஏதேனும் பண்டிகை, எவருடையவாவது நெருங்கிய இறப்பு என்று நிகழும் போது அப்பாவும், அம்மாவும் மட்டுமே போய் வருவார்கள். அவர்களிடம் மெதுவாகக் கேட்டுப் பார்ப்பேன், ப்ரியா வந்தாளா என்று. அவளும் படிப்பு தான் முக்கியம் என்று இதற்கெல்லாம் வருவதில்லையாம்.

எப்போதாவது அவள் பற்றி விசாரிப்பேன். அவளும் அப்படித்தான் விசாரித்தாள் என்பார்கள். கொஞ்சம் சந்தோஷமாகவே இருக்கும்.

இப்போது நானும், அவளும் சென்னையில் வசிக்கிறோம். ரெண்டு பேரும் கணிணியில் தட்டிக் கொண்டிருக்கிறோம். அவள் 'அன்புடன் வழியனுப்பும்' நிறுவனத்திலும், நான் ' உண்மை' நிறுவனத்திலும் பணியாற்றுகிறோம். அவ்வப்போது வார இறுதிகளில் சந்திப்பதை வழக்கமாகிக் கொண்டோம்.

முதலில் சந்தித்த போது ' நீங்க' என்று ஆரம்பித்து பிறகு ' நீ, வா, போ' என்றாகி', பின் 'போடி கழுதை' என்ற ரேஞ்சில் வந்து விட்டது.

"ப்ரியா.. இந்த வாரமாவது வீட்டுக்கு வரலாம்ல.. அம்மா உன்னைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.." என்றேன்.

"இல்ல மனோ.. அம்மா, அப்பாகிட்ட சொல்லாம வந்தா.. அது நல்லாயிருக்காது.." என்றாள்.

"ஓ.கே. இந்த தீபாவளிக்கு என்ன துணி எடுக்கப் போற? எங்க?"

"அம்மாவும், அப்பாவும் இங்க வந்து சென்னை சில்க்ஸோ, போத்தீஸோ போவோம். இல்லைனா வழக்கம் போல ஊர்லயே சாரதாஸ் தான். க்ரீன் கலர்ல ஒரு சில்க் ஸாரி வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுல தான் எடுக்கறதா இருக்கேன். நீ என்ன வாங்கப் போற..?"

" நீ ஏதாவது வாங்கிக் குடுத்தனா, ஓசியில வாங்கிக் போட்டுக்கலாம்னு இருக்கேன்.." முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு சொன்னேன்.

"தோடா..! ஆசையப் பாரு இதுக்கு.." என்று சிரித்தாள்.

பில் செலுத்தி விட்டு இருவரும் வெளியே வந்தோம்.

"சரி வா, ப்ரியா..! உன்னை உங்க கோட்டைக்கு கொண்டு போய் விட்டுடறேன்.. டைமுக்குப் போகாட்டி, உங்க எல்லைச்சாமி கண்ணாலயே மிரட்டிடுவார்.." என்றேன்.

அவள் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறாள். அந்த விடுதியின் வாட்ச்மேனைத் தான் நான் 'எல்லைச்சாமி' என்பேன்.

சிர்த்துக் கொண்டே, " வேற வண்டி இல்லையா..? இந்த 'பிங்க் பெப்' யாருது?" என்று கேட்டாள்.

"இது பக்கத்து வீட்டு ப்ரீத்தியோட வண்டி. எங்க வீட்டு இரும்புக் குதிரை, இன்னேரம் ஒர்க்ஷாப்ல கொள்ளு தின்னுக்கிட்டு இருக்கும்னு நினைக்கிறேன்.."

சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே, என்னுடன் வண்டியில் ஏறிக் கொண்டாள். பெசன்ட் நகரிலிருந்து கிளம்பிய எங்கள் மீதே எல்லார் கண்களும் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

"னோ..! நிறுத்து..! நிறுத்து.." என்றாள் ப்ரியா.

ப்ரேக் போட்டு ஓரமாய் நிறுத்தினேன்.

"என்ன ப்ரியா..?" என்று கேட்டேன்.

"அந்த க்ளாத் ஷாப்புக்கு போ" என்றாள்.

இருவரும் நடந்து போனோம்.

"யெல்லோ சுடி ஒண்ணு எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இங்க இருக்கும்னு நினைக்கிறேன். நீ ரிசப்ஷன்கிட்டவே வெயிட் பண்ணு.." என்றாள்.

சரியென்று நானும் உட்கார்ந்து கொண்டேன். அவள் உள்ளே சென்று விட்டாள்.

ஒரு மணி நேரம் கழித்து கையில் இரண்டு துணி பார்சலோடு வந்தாள்.

"ப்ரியா..! என்னையவே இவ்ளோ நேரம் காக்க வைக்கிற. கல்யாணத்துக்கப்புறம் உன் கணவரை எவ்ளோ நேரம் காக்க வெப்பியோ..?" என்று கேட்டேன்.

" நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன். அவரையே வாங்கிட்டு வரச் சொல்லிடுவேன்.." என்றாள்.

"சரி.. என்ன ஒண்ணு மட்டும் எடுக்கறேன்ட்டு, ரெண்டு பேக் கையில வெச்சிருக்க..?"

"எனக்கு மட்டும் எடுக்க மனசில்ல. அதுதான் உனக்கும் சேர்த்து எடுத்திட்டு வந்தேன்.."

"ரொம்ப நடிக்காதடி. அங்க பாரு.." என்று கை காட்டினேன்.

அங்கே ஒரு போர்டில்
' இலவசம்.! இலவசம்..! ஒரு சுடிதார் எடுத்தால் மற்றொன்று இலவசம்..!'
என்றிருந்தது.

"பார்த்துட்டியா..?" என்று அசடு வழிந்தாள்.

"இந்தா, வயலட் கலர் சுடி நீ எடுத்துக்கோ..!" என்று கொடுத்தாள்.

"உன்னைப் பத்தி தெரியாதா என்ன..? என்னை யாருனு நினைச்சே..? எப்படி கண்டுபிடிச்சோம்லெ..!" என்று, போட்டிருந்த சுடிதாரில் காலர் இல்லாததால், துப்பட்டாவைத் தூக்கி விட்டுக் கொண்டேன், மனோன்மணியாகிய நான்.

எங்கிருந்தோ 'லூசுப் பெண்ணே.. லூசுப் பெண்ணே..' என்று பாட்டு கேட்டது.இருவரும் விழுந்து, விழுந்து சிரித்தோம்.

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)

Monday, November 06, 2006

பரவசம்.. இலவசம்...!

"ணியண்ணே... சேலம் பைபாஸ் தாண்டி, சங்ககிரி போற ரூட்டுல, நெறைய கிராக்கி நிப்பாங்கண்ணே.. இன்னிக்கு ஒண்ணு பாக்கலாம்ணே.." குமாரு மணியின் மனதில் ஆசையை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தான்.

ஆத்தூரிலிருந்து லாரி பாய்ந்து வந்து கொண்டிருந்தது.

ணி கோயமுத்தூரில் டெக்ஸ்டைல் மில்களுக்கு சரக்கு மற்றிச் செல்லும் ட்ரான்ஸ்போர்ட் ஆபிஸில் டிரைவராக வேலை செய்து கொண்டிருக்கிறான். குமாரு அவன் லாரியின் கிளீனர். மணிக்கு இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் நடக்க இருந்தது.. சொந்த அக்கா பெண் பவானியைத் தான் மணன்ப்பதாக திட்டம்.அதற்குள் அவசர சரக்கு மாற்றுவதற்காக சூரத் வரை செல்ல வேண்டியதாகி விட்டது. கூட குமாரும்.

கோவையிலிருந்து துணிகளை எடுத்துக் கொண்டு, சூரத் சென்று மாற்றி விட்டு, பாவு நூல்களையும், பஞ்சு மூட்டைகளையும் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

"ண்ணே.. சொல்றேனு தப்பா நெனச்சுக்காதீங்க.. இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுது. அங்க போய் ஒண்ணும் தெரியாம முழிக்கறதுக்கு, ஒரு சின்ன ரிகர்சல் மாதிரி இருக்கட்டுமே..இவ்வளவு நாள் நல்லவனாவே இருந்துட்டோம். இன்னிக்கு ஒரு தடவை போய்ப் பார்ப்போம்ணே.." கெஞ்சல் குரலில் தூபம் போட்டுக் கொண்டிருந்தான் குமாரு.

மணிக்கு லேசாக ஆசை கிளரத் தொடங்கியது. மூன்று நாட்களாய் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கும் கொஞ்சம் இளைப்பாறுதல் தேவைப்பட்டது.

"டேய்.. நோய் எல்லாம் வந்திடாதே..?"

குஷியான குமாரு " அதெல்லாம் அவங்களே தெளிவா பாத்துக்குவாங்க.. நீங்க சேலம் பைபாஸ் தாண்டினப்புறம் நான் சொல்ற எடத்துல நிறுத்துங்க. நான் உள்ள போய் பேசிட்டு வந்ததுக்கப்புறம் நீங்க போய்ட்டு வாங்க.." என்றான்.

லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. சேலம் - கோவை நெடுஞ்சாலை அந்த பின்னிரவு இரண்டு மணிக்கு வெறிச்சோடி இருந்தது. அவ்வப்போது தென்படுகின்ற தொலைதூரப் பேருந்துகளும், லாரிகளும் கடந்து சென்று கொண்டிருந்தன. புளிய மரங்கள் விசுவிசுவென்று அடித்துக் கொண்டிருந்த கற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

மணி பொறுமை இழந்தவனாய் லாரியில் காத்துக் கொண்டிருந்தான். குமாரு ஓரமாய் இறங்கிப் போயிருந்தான். பழைய பீடி ஒன்றைப் புகைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று 'க்ரீச்'சென்று சத்தம். லாரி ஒன்று ப்ரேக் அடித்தது போல். 'வள்..வள்' என்று நாய் ஒன்று குலைக்கும் சத்தம். மணி தடாரென்று கதவைத் திறந்து இறங்கினான். 'சடார்'என்று அவனை ஒரு லாரி எதிர்ப்புறத்தில் இருந்து கடந்து சென்றது. அதன் வலது முன் லைட்டில், சிவப்பு நிற ரத்தக் கறை.

மணி கிட்டத்தட்ட ஓடி நாயின் குரல் வந்த இடத்தை அடைந்தான்.

ஒரு ஆண் நாய் குடல் சரிந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. 'ஊ..ஊ' என்று ஊளையிட்டது. அதன் பக்கத்தில் ஒரு பெண் நாய் சுற்றிச் சுற்றி வந்தது. சில சமயம் அதுவும் ஊளையிடும். சில சமயம் அது, ஆண் நாயின் அருகில் போய் முகர்ந்து பார்க்கும். ரோட்டில் படுத்துப் புரளும். திடீரென்று இவனைப் பார்த்த்க் குரைக்கும். உடனே ஆண் நாயைக் கடிக்கும்.

இன்னும் சிறிது நேரத்தில் ஆண் நாய் இறந்து விடும் என்று என்று தெளிவாகத் தெரிந்து விட்டது போல் ஒரு நீளமான ஊளையிட்டது பெண் நாய்.

யாரோ சாட்டை எடுத்து அடித்தது போல் இருந்தது மணிக்கு. பெண் நாயின் ஊளை அவன் முதுகுத் தண்டின் வழியே பாய்ந்து, மூளையை சில்லிடச் செய்த்தது. அவனால் தாங்க முடியவில்லை. ஓடி வந்து லாரியில் ஏறிக் கொண்டான்.

என்ன காரியம் செய்ய இருந்தேன்? கேவலம் ஒரு நாய் கூட துணையின் மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறது. ஆண் நாய் இறக்கப் போகிறது என்பதை உணர்ந்தவுடன் , பெண் நாய் எவ்வளவு துயரப்பட்டிருந்தால், இப்படி அழும்?

மணிக்கு திடீரென்று, சூரத் கிளம்பும் முன் பவானியுடன் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

"புள்ள.. இங்க வா.."

"என்னுங்க மாமா..?"

"இதப் பாரு புள்ள. இதுவரைக்கும் மாமா வீடுனு வந்திட்டு இருந்த.சரி. இப்பொ நாளைக்கு வந்து வாழப் போற வீடு. அதனால கல்யாணம் ஆனதுக்கப்புறம் தான் நீ வரணும்.."

"எப்படியும் நான் வரத் தான போறேன். அதுக்கு இங்கயே இருந்தா என்ன தப்பு?"

"இருந்தாலும் ஊரு ஒண்ணுனா ஒம்போது பேசும்ல? எதுக்கு ஊர் வாய்க்கு நாமளே அவல் போடணும்..?"

"ஊர்னா யாரு மாமா? நீயும், நானும், நம்ம மக்களும் தான் எனக்கு ஊரு. அவங்க ஒண்ணும் தப்பா நெனைக்க மாட்டாங்க. என்னால உன்னைப் பிரிஞ்சு இருக்க முடியல மாமா.."

"அட.. இதுக்கு ஏன் அழுவுற.. உனக்கு இதை சொல்ல தான் கூப்பிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு நான் சூரத் வரைக்கும் போக வேண்டியிருக்கு. வர ஒரு வாரத்துக்கு மேல ஆகும்."

"சரி மாமா. பார்த்து போய்ட்டு வாங்க. இருந்தாலும் கல்யாணத்தை இவ்ளோ கிட்டக்க வெச்சிக்கிட்டு ஊருக்குப் போறது நல்லாஇல்ல மாமா.."

"ஒரு கேள்வி கேக்கறேன். லாரியில் போகும் போது, எங்கயாவது விபத்தாகி நான் இல்லைனா நீ என்ன பண்ணுவ.. ஏய்.. புள்ள.. நில்லு.. ஓடாத.. அழாத..."

ச்சே..! எம் மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தா, அதுக்கப்புறம் ரெண்டு நாளா என்னைப் பாக்க கூட வராம அழுதுட்டு இருந்திருப்பா..? அக்கா கூட கேட்டாளே.'என்னடா சொல்லி புள்ளயை மிரட்டினேனு'.

உடம்பில அடிபட்டா தான் விபத்தா? இந்த மாதிரி ஒரு கீழ்த்தரமான காரியத்தில இறங்கி, வாழ் நாள் முழுக்க இவளுக்குத் துரோகம் பண்ணிட்டமேனு உறுத்தல் இருக்குமே. அது எவ்வளவு பெரிய விபத்து.
இவ்ளோ நாள் பொறுமையா இருந்தோம். இன்னும் கொஞ்ச நாள் பொறுக்க முடியாதா?

நல்ல வேளை. இது மட்டும் கெட்டுப் போகாம, திரும்பிட்டோம். இந்த குமாரு பயலை வேற காணோம். வந்தவுடனே கிளம்பணும். பவானி எனக்காகக் காத்திருப்பா.

"ண்ணே.. உள்ள போய்ட்டு வாங்க. லாரியை நான் பார்த்துக்கறேன்."

மணி அமைதியாக குமாரைப் பார்த்தான்.

"குமாரு..! உன்னை ஒரு கேள்வி கேக்கறேன்?"

"கேள்வி கேக்கற நேரமாண்ணே இது. ரொம்ப நேரம் நின்னா, போலிஸ் பேட்ரல் வந்திரும்ணே.. சரி.. கேளுங்க"

"கல்யாணத்துக்கு அப்புறம் அனுபவம் வேணும்னு இங்க எல்லாம் போகச் சொல்றியே. இதே மாதிரி, உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவளும் அனுபவம் வேணும்னு கரும்புக் காட்டுக்குள்ளயோ, பம்பு செட்டுக்குள்ளயோ போனானா ஏத்துக்குவியா.. சொல்லு..?"

செருப்பால் அடிபட்டது போல் நிமிர்ந்தான் குமாரு. அவன் கண்களில் இருந்து கண்ணீர் வரப் பார்த்தது.

"என்னை மன்னிச்சிருங்கண்ணே.. இனிமேல இந்த மாதிரி எல்லாம் போக மாட்டேண்ணே.." அழுதான்.

"சரி.. கதவைச் சாத்து.போகலாம். விடியறதுக்குள்ள கோயமுத்தூர் போயாகணும். கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு.." என்றபடி லாரியைக் கிளப்பினான் மணி.

போகும் போது, இறந்து கிடந்த ஆண் நாயையும், அதனருகில் படுத்திருந்த பெண் நாயையும் பர்த்தான் மணி. லேசாக கண்ணீர் வந்தது. அதன் அருகில் இருந்த போர்டைப் பார்த்தான். எழுதியிருந்ததை வாய் விட்டுப் படித்தவாறு லாரியை ஓட்ட ஆரம்பித்தான்.

விலைமாதருடன் கொள்ளும் பரவசம்!
விலையில்லாமல் எய்ட்ஸ் இலவசம்!!

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)

எது இலவசம்?

"ன்னங்க.."

"ம்.." என்றேன் இட்லியைப் பிட்டுக் கொண்டே.

"ஒண்ணும் இல்ல. தி. நகர்ல புதுசா ஒரு துணிக்கடை திறந்திருக்காங்களாம். நாம ஒரு விசிட் அடிச்சா என்ன..?" புகை வர ஆரம்பித்தது.

'ஒருவனின் செலவு, மற்றொருவனின் வரவு' என்ற அடிப்படைத் தத்துவத்தை கொல்கத்தாவில் சென்று கற்று வந்து, சென்னையில் ஒரு பன்னாட்டு (இது நல்ல வார்த்தையா, இல்லையா?) நிறுவனத்தின் மேலாண்மைப் பிரிவ்ல் இருக்கிறேன். போட் கிளப்பில் பெரிய வீடு. அழகான (இந்த உவமை வலுவிழந்து கொண்டே வருகின்றது) மனைவி. டி.ஏ.வி.யில் ஐந்தாவது படிக்கின்ற செல்லக் குட்டி. ஊரில் பெற்றோர். இப்படி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கின்ற வாழ்வில், அவ்வப்போது அடிக்கின்ற குட்டிச் சூறாவளி இவளது ஷாப்பிங்.

நகரில் ஏதாவது புது துணிக்கடை, நகைக் கடை, பாத்திரக் கடல் திறந்து விடக் கூடாது. உடனே இவளுக்கு அங்கே விசிட் செய்தாக வேண்டும். விசிட் என்றால், போய் வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு வருவாளா என்றால் அது தான் இல்லை. கிரெடிட் கார்டு தீர்ந்து விடும். இவள் ஒரு கடைக்குப் போய் விட்டு வந்தால், எப்படியோ இந்த பேங்க்காரங்களுக்கு மூக்கு வேர்த்து விடும். உடனே ஒரு கால் அடித்து 'மேடம். புது கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்ளுங்கள்' என்று எனக்கு செக் வைத்து விடுவார்கள்.

"ஆமாப்பா..! அந்தக் கடைக்குப் பக்கத்திலேயே புதுசா டாய் ஷாப் ஒண்ணு ஓபன் பண்ணியிருக்காங்களாம்பா..! ப்ளீஸ்பா.. போலாம்பா.." அம்மாவுக்கேற்ற பெண். முகத்தைக் குழந்தை போல் வைத்துக் கொண்டு அம்மா கேட்கையிலேயே மறுக்க மனம் வராத போது, என் குட்டிப் பெண் கேட்கும் போதா மறுக்கத் தோன்றும்?

"ஓ.கே. நெக்ஸ்ட் சண்டே போகலாம்.." என்றேன்.

வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த அவள் ஓடி வந்து என் மேல் ஏறிக் கொண்டாள்."மை டாடி இஸ் குட் டாடி..." என்று இரண்டு கன்னத்திலும் மாறி, மாறி முத்தமிட்டாள்.

' நீ என்ன தரப் போகிறாய்' என்று கண்களால் கேட்டவாறு,மனைவியை நிமிர்ந்து பார்த்தேன்.

"சரி..சரி. பப்பி, நீ போய் மேத்ஸ் போடு. என்னங்க, நீங்க கொஞ்சம் கிச்சன் வரைக்கும் வாங்க.." என்றாள் கண்ணடித்தவாறு. கள்ளி.

ஞாயிற்றுக் கிழமை.தென் மேற்கு போக் ரோட்டில் காரை பார்க் செய்து விட்டு, மூவரும் இறங்கினோம். அப்போது தான் அந்தப் போர்டு என் கண்ணில் பட்டது.

"கண்ணம்மா. நீயும், பப்பியும் போய்ட்டு வாங்க. நான் இங்க ஒரு ப்ரெண்டைப் பார்த்துட்டு வரணும். இப்ப தான் ஞாபகம் வந்தது." என்றேன்.

எதிர்பார்த்தது போலவே " என்னங்க, எப்பவுமே ஆபிஸ், வேலைனு அலையுறீங்க. கொஞ்சம் நேரம் கிடைச்சு இப்படி வெளியே வந்தா, உடனே நண்பர்கள் பார்க்க போறேனு போயிடறிங்க. உங்க நண்பரை இன்னொரு நாள் பார்த்துக்கலாம். இன்னிக்கு எங்க கூட வந்தே ஆகணும்.." என்று அன்பு வழிய பேசினாள்.

இந்த மாதிரி பர்ஸுக்கு வேட்டு வைக்கும் நேரங்களில் மட்டும் பாசம் பொங்கும்.மற்ற நேரங்களில் பார்க்கணுமே..!

"இல்லம்மா..! இந்த நண்பனைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. நீங்க போய்ட்டு வாங்க. ஆனா கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுங்க." என்றவாறே என் கிரெடிட் கார்டை நீட்டினேன்.

அசடு வழிந்தவாறே அதை வாங்கிக் கொண்டு, இருவரும், ஸ்டாப் ப்ளாக்கில் மறைந்தார்கள்.அந்தப் போர்டு கை காட்டிய முதல் மாடியை நோக்கி நடந்தேன்.

"வாங்க சார்.! எப்படியிருக்கீங்க..?" என்று கேட்டபடி வந்தார் மருது.

" நல்லாயிருக்கேன் மருது சார்! நீங்க எப்படியிருக்கீங்க?" என்றேன்.

" நல்லாயிருக்கேன்.! வழக்கமான வேலை தான..?"

"ஆமா.! இன்னிக்கு யாரு இருக்கா?"

"இன்னிக்கு டேவிட் தான் இருக்கான்.டேவிட்! சார் வந்திர்க்கார் பாரு. உள்ள ரெடி பண்ணு" என்றார் உள் நோக்கி குரல் கொடுத்தவாறு.

டேவிட்டின் விஷ்ஷை ஏற்றுக் கொண்டு " சாரி மருது சார். வழக்கமான ரொட்டீன்ல கொஞ்சம் மிஸ்ஸாயிடுச்சு. கரெக்டான டைம்படி, போன சனிக்கிழமையே வந்திருக்கணும். கொஞ்சம் வேலை அதிகமாகிடுச்சு."என்றேன்.

"நெவர் மைண்ட் சார்! நீங்க வாலண்டியரா வந்து, மூணு மாசத்துக்கு ஒருதடவை இலவசமா இரத்தம் குடுக்கறீங்க. அதுவே பெரிய விஷயம்."

"ஓ.கே." என்றவாறு நான் அறையின் உள்ளே சென்றேன், சட்டையின் வலதுகையை மடித்து விட்டவாறே.

"ண்ணு..!"

"சொல்லுங்கப்பா..!"

"விடுதி யெல்லாம் நல்லாயிருக்காப்பா..?"

" நல்லாயிருக்குப்பா.என்னப்பா திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க..?"

"மனசை திடப்படுத்திக்கோ..! நம்ம கண்ணன் இப்ப நம்ம கூட இல்ல.."

"அப்பா.....! என்னப்பா சொல்றீங்க..?"

"ஆமாப்பா..! நேத்து கெணத்துல குளிச்சிட்டு இருந்தவன் கல்லுல அடிபட்டு, ரொம்ப ரத்தம் சேதாரம் ஆகிடிச்சு. எல்லாரும் அவனைத் தூக்கிட்டு, நம்ம ஜி.எச்.சுக்கு போனோம். ஆனா, அங்க அவனோட ரத்த வகை இல்லனுட்டாங்க. மறுபடியும் ஆட்டோ புடிச்சு, ஈரோடு கொண்டு போகறதுகுள்ள, நம்ம கண்ணன்..."

"அப்பா..! நான் உடனே கிளம்பி வர்றம்பா.."

"இல்ல..! நீ வர வேணாம். வந்து என்ன ஆகப் போறது? நீ செமஸ்டர் எல்லாம் முடிச்சிட்டு வாப்பா..!கண்ண்னை நெனச்சு பரிட்சையில கோட்டை விட்றாதப்பா. அது கண்ணனுக்கும் பிடிக்காதுனு உனக்குத் தெரியும். நீ நல்ல மார்க் எடுத்து, நல்ல வேலைக்குப் போகணுங்கறத் தான் உன் நண்பன் கண்ணனோட ஆசை. அதை எங்கிட்டயும் சொல்லியிருக்கான். அதை நீ காப்பாத்தணும். அப்பத் தான் அவன் ஆத்மா சாந்தியடையும். என்ன..?"

"சரிப்பா.."

"சரி.. உடம்பை கவனிச்சுக்கப்பா.. நான் வெச்சிடறேன்."

"ன்னங்க...! எவ்ளோ கூட்டம் தெரியுமாங்க, அந்தக் கடையில..? புதுசு,புதுசா புடைவை, மேட்சா ரவிக்கை. சில்க்ஸுக்குனே தனி டிவிஷன் வேற ஓபன் பண்ணியிருக்காங்க. ரெண்டாவது மாடியிலேயே கோல்டு ஷாப். அங்க புதுப்புது டிசைன்ல நகைங்க. நீங்க வந்திருக்கணும். மலைச்சுப் போயிருப்பீங்க. ரெண்டாயிரத்துக்கு மேல பர்ச்சேஸ் பண்ணினா கிச்சன் கிட் ஒண்ணு இலவசம்னு சொன்னாங்க. நம்ம வீட்டுல எல்லாம் பழசா இருக்குனு நான் ரெண்டு கிச்சன் கிட் கிடைக்கற மாதிரி பர்ச்சேஸ் பண்ணினேன். அவ்வளவு தான். அதுவும் இல்லாம, இன்னிக்கு முதல் நாள்ங்கறதுனால, லஞ்ச் வேற ப்ரீயா அவங்களே ப்ரொவைட் பண்ணினாங்க. யாரும் வெட்கப்படவேயில்ல. கேட்டு, வாங்கிச் சாப்பிட்டாங்க. நீங்க இல்லாததுனால நான் கொஞ்சம் தான் சாப்பிட்டேன். உங்களுக்கு கால் பண்ணினேனே, கவனிக்கலையா..?"

ரெண்டாவது கீருக்கு மாறியவாறு, செல்லை எடுத்துப் பார்த்தேன். நான்கு மிஸ்டு கால்கள். எல்லாம் இவள் பண்ணினது தான். ஏதாவது சொல்ல வேண்டுமேயென்று வாய் திறந்தேன்.

"போறும். ஒண்ணும் சொல்ல வேணாம். ப்ரெண்ட்ஸைப் பார்த்த குஷியில என்னையும் மறந்திடுவீங்கங்கிறது தெரிஞ்ச விஷயம் தான" என்று அவளே சமாதானம் கூறிக் கொண்டாள்.

பப்பி, புதிதாக வாங்கிய கார் பொம்மையின் மேல் டெடி-பியர் பொம்மையை வைத்தி பின்சீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

இவள் இன்னும் பேசிக் கொண்டு வந்தாள்." நாலு பட்டுப் புடவை எடுத்தா, வேறெண்ணவோ இலவசம்னு சொன்னாங்களே.. பப்பி, என்ன அது..?"

என் கவனம் மெல்ல திசை மாறியது.இவள் எதை இலவசம் என்கிறாள்? மதிய ஒரு வேளை உணவா? நகை, பாத்திரங்களா..? மருது சார், என் கண்ணன் நினைவாக நான் ரொட்டீனாக இரத்தம் கொடுப்பதை இலவசம் என்கிறார். உண்மையில் அது இலவசம் தானா? இல்லை. அது கண்ணனுக்கு என் சம்பாத்தியத்தில் ஒரு வாய் சாப்பாடு ஊட்ட முடியவில்லை என்கின்ற என் எண்ணத்திற்கு, நானே கொடுத்துக் கொள்கின்ற திருப்தி. அவ்வளவு தான்.

கார் வேகமாகச் சீறிப் பாய்ந்தது.

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)

Thursday, November 02, 2006

இப்ப இன்னான்ற..?

"க்கா..யக்கா.."

பொன்னாத்தா தான். இவளுக்கு இப்பக்கி இன்னா கேடு வந்திச்சினு இப்புடி கத்திக்கினுகீறா..? சோசப்பு தொளிலுக்கு போச்சொல்லோ, தட்டிய நல்லா இறுக்கச் சாத்திக்கினு போவான். இன்னிக்கி மறந்து போய்க்கினான் போல. இல்லாங்காட்டி இவ இப்புடி கத்தறதெல்லாம் கேக்குமா..?

"இன்னாடி.. இப்புடி எளவு வுளுந்த கணக்கா கத்தற..?" கொண்டையை முடிந்து கொண்டே, சரசக்கா தட்டியை ஒதுக்கி விட்டு வெளியே வந்தாள்.

"எளவெல்லாம் ஒண்ணும் இல்ல. உன் வூட்டு முன்னாடி பாரு.." என்றாள் பொன்னாத்தா.

அப்போது தான், கண்களை நன்றாகக் கசக்கிக் கொண்டு சரசக்கா பார்த்தாள். வீட்டின் முன்னே ஒரு கிழவன் சுருண்டு விழுந்து கிடந்தான்.

பரட்டையாய் சூம்பிப் போன தலை. கண்கள் எல்லாம் குழி விழுந்து, கன்னங்கள் எல்லாம் ஒடுங்கி இருந்தன. கை, கால்கள் இருக்கும் இடங்களில் எல்லாம், சுருங்கிய தோல் போர்த்திய குச்சிகள் இருந்தான்.

சரசக்கா அதிர்ச்சியுறாததில் இருந்து, ஏற்கனவே இந்தக் கிழவனை அறிந்தவள் போல் இருந்தது.

"யாருக்கா, இந்த ஆளு..? ஓடிப் போன உன் வூட்டுக்காரனா..?" கேட்டாள் பொன்னாத்தா.

"அந்தாளு எதுக்குடி இங்க வரப் போறான்? போன தபா, ராயபுரத்துல நம்ம சேட்டாண்ட, குண்டா ஒண்ண அடகு வெக்கப் போச்சொல்ல, இந்தாளப் பாத்தன். முனீசுவர் கோயிலு முன்னாடி குந்திக்கினு, பிச்ச எடுத்துக்கினு இருந்தான்.."

"சரி.. இப்ப இன்னா பண்ணப் போற..? உன் வூட்டு முன்னாடி வுளுந்து கெடக்கான்.."

"ஒரு கை புடி..வூட்டு ஓரமா தூக்கிப் போட்டுருவோம்.. சை.. காலங்காத்தால முளிச்ச மொகமே சரியில்ல.. இன்னிக்கு வேல வெளங்கினாப்ல தான்.."

"யக்கா.. என்னயவா சொல்ற.. முளிச்ச மொவம் சரியில்லனு..?"

"அட.. நீ வேற..இந்தா நீ கையப் புடி.."

இருவரும் அந்தக் கிழவனைப் பிடித்து வீட்டின் வெளியே ஓரமாய்ப் போட்டார்கள்.

"க்கா.. உனக்கு விசயம் தெரியுமா..?" பொன்னாத்தா கத்திக் கொண்டே ஓடி வந்தாள்.

மீன் சுட்டுக் கொண்டிருந்த சரசக்கா, நிமிர்ந்து பார்த்தாள்.

"இன்னாடி..?"

"அடுத்த வாரம், நம்ம முனிசிபாலிடி இஸ்கூலுல வேட்டி, சேல தராங்களாம். பொங்கலுக்கு வருசா, வருசம் தருவாங்கல்ல, அது.."

"அதுக்கு ஏண்டி இந்த குதிகுதிக்கிற..? எப்பவும் தர்றது தான..? செரி.. உனக்கு எப்புடி இந்த மேட்டரு தெரியும்..?"

" நம்ம எம்மெல்லே மணியண்ணன் கூடவே சுத்திக்கினு இருப்பான்ல, பளனி அவன் நேத்து ராவா வூட்டாண்ட வந்துருந்தான். போச்சொல்ல காசு கேட்டேன். எல்லாம் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேல குடுக்கச் சொல்ல தர்றன்னுட்டான்..."

"பாவிங்க.. இதுலயுமா கடன் சொல்லிக்கினு போறாங்க.. தூ..ஏண்டி, இலவசமா சேல தர்றான்ட்டு, இவனுக்கு இலவசமா வுட்டிட்டியாக்கும்..?"

"ளனி..! எனக்கு வேட்டி ஒண்ணு குடுடா.." சரசக்கா கேட்டாள்.

"யக்கா..! உன் கார்டுக்கு, குடுக்குற வேட்டிய இப்ப தான் சோசப்பு வந்து வாங்கிக்கினு போனான்.." என்றான் பழனி.

"தெரியுண்டா...! இப்ப எனக்கு வேட்டி கெடைக்குமா, இல்லயா..?"

"என்னக்கா..? புதுசா எவனயாவது புடிச்சிக்கினியா..?" கண்ணடித்தான் பழனி.

"தூ..! செருப்பால அடி நாய..! என் வூட்டுக்காரன் என்ன வுட்டு ஓடிப் போனதுல இருந்து, நெருப்பு மாதிரி இருந்துக்கினு இருக்கேன். பேச்சப் பாரு!.." கத்தினாள் சரசக்கா.

பழனி பயந்து போனான்.

"யக்கா..! மன்னிச்சுக்கோ..! உன்னப் பத்தி தெரியாதா..! சும்மா வெள்ளாட்டுக்கு கேட்டேன். ஆனாலும், உன் கார்டுல வேட்டி ஒண்ணுக்கு மேல தர முடியாதேக்கா..!"

குறுக்கே புகுந்தாள் பொன்னாத்தா.

"யோவ்..! இன்னா பேச்ச வளத்துக்கினே போற. இப்ப என்ன? அக்கா கார்டுக்கு வேட்டி இல்ல. அவ்ளோ தான். என் கார்டுக்கு குடு.."

"உன் வூட்டுக்கு வர்ற எல்லா ஆம்பளக்கும் ஒண்ணு தரணுமா..?" நக்கலாக கேட்டான் பழனி.

"இந்தா..! இந்த எகத்தாளப் பேச்செல்லாம் ராத்திரி வரச் சொல்லொ, பேசிப் பாரு. அப்பாலக்கி இன்னா சேதினு சனம் அடுத்த நா பேப்பர பாத்து தெரிஞ்சிக்கும்.."

"கோச்சுக்காத பொன்னு. இந்தா இந்த வேட்டிய எடுத்துக்கோ.."

"ரத்திரி வருவயில்ல.. உன்ன அங்க வெச்சுக்கறன்.. நீ வாக்கா போலாம்.." சரசக்காவை இழுத்துக் கொண்டு நடந்தாள் பொன்னாத்தா.

"க்கா..! இப்ப இன்னாத்துக்கு பளனியாண்ட உனக்கு இன்னோரு வேட்டி வேணும்னு சண்ட போட்ட.." கேட்டாள் பொன்னாத்தா.

"அது ஒண்ணும் இல்லடி.! நம்ம வூட்டாண்ட கெளவன் கெடக்கான்ல. அவனுக்காத் தாண்டி.."

ஆச்சரியப் பட்டாள் பொன்னாத்தா.

"எதுக்கொசரம் அந்தக் கெளவனுக்கெல்லாம் துணியெடுத்துக் குடுக்கற..? உன் சொந்தமா..?"

"அய்ய..! அப்டியெல்லாம் ஒண்ணும் கெடியாது. ஒருத்தருக்கும் சொல்லாத ரகசியம் உனக்கு இப்ப சொல்றன். கேட்டுக்க.கைக் கொளந்தையோட என்ன வுட்டு ஓடிப் போன என் புருசன், வட நாட்டுக்கு போயி, ஒருத்திய கட்டிக்கினானாம். அப்பாலக்கி அவன் ரத்தம் எல்லாம் சுண்டிப் போனப்புறம், அவ அவனத் தொரத்தி வுட்டுட்டாளாம். அதுவும், அங்கன எங்கயோ காசிப் பக்கம் பிச்ச எடுத்துக்கினு கீறானாம். ராயபுரம் சேட்டு தான் ஒரு தபா சொன்னாரு. அது போலவே, இந்தக் கெளவனும் எங்கயோ அடிபட்டுக்கினு வந்திருக்கான். அட, இவனுக்கு எதுனா நல்லது நாம பண்ணினா, நம்ம புருசனுக்கும் ஏதாவது மவராசன் நல்லது பண்ணுவான்னு ஒரு ஆச தான்.."

"யக்கா..! எதுக்கு ஓடிப் போன புருசன் மேல போயி இம்பூட்டு அக்கற காட்டற..?"

"ஓடிப் போனாலும், அவன் எங்கனயாச்சு உசுரோட கீறான் அப்புடிங்கிற நம்பிக்க தாண்டி என்ன வாள வெக்குது. அவன் கட்டுன தாலி தான், இந்த மோசமான உலகத்துக்கிட்ட இருந்து என்ன காப்பாத்திக்கினு இருக்கு. இல்லாங்காட்டி, நானும் உன்ன மாதிரி... சரி வுடு. அது என்னாத்துக்கு, இப்ப..?"

பொன்னாத்தா மெளனமானாள்.

இருவரும் வேகமாக நடந்தனர்.

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)

Tuesday, October 31, 2006

50..!

இதுவரை பதிவுகள் பல இட்டு என்ன சாதித்துள்ளேன் என்ற கேள்வி என்னைக் கேட்டுப் பார்க்கிறேன். வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் ஏதேனும் சாதிப்பதற்காக மட்டுமே என்று இருக்குமா? நாம் நடப்பது, சுவாசிப்பது போன்ற செயல்கள் 'சாதரணமா' இல்லை ஏதேனும் சாதனையா என்று எண்ணிப் பார்க்கின்றேன்.

இவை போல பதிவுகள் இடுவதையும் மிகச் சாதாரண நிகழ்வாக நான் நினைத்துக் கொண்டால், ஏதேனும் சாதித்துள்ளேனா என்று கேள்வி எழுப்பியிருக்க மாட்டேன்.

ஆனாலும் சில நன்மைகள், சில பிழை திருத்தல்கள் மற்றும் கருத்து மாற்றங்கள் என வாழ்வின் கூறுகளைப் பாதியளவிலாவது பாதிக்கக் கூடிய, இயக்கங்கள் நிகழ்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

வசனக் கவிதைகள் என்ற பெயரில், கட்டுரைகளைக் கிறுக்கிக் கொண்டிருந்தேன். அருமையான தோழி ஒருத்தி, 'இது போன்ற பெரிய வரிக்கு வரி, வர்ணிக்கின்ற கவிதைகளைப் படிக்க யாருக்கும் காலமில்லை. சுருக்கமாகவும், இனிமையாகவும் எளிமையாக எழுத முயற்சி செய்து பார்' என்றாள். முயன்றதில் குறுங்கவிதைகள் வரை குறுக்கி எழுத வந்தது. அந்தத் தோழிக்கு நன்றி. அது போல வெறும் கவிதைகளும், சோகப் புலம்பல்களுமாய் கிறுக்கிக் கொண்டிருந்த என்னாலும் சிறுகதைகள் எழுத முடியும் என்று எனக்கே உணர்த்திக் காட்டியது 'தேன்கூடு' போட்டிகள்.

சில நண்பர்கள் கிடைத்தார்கள். பல பதிவர்கள் அயல் நாடுகளில் இருந்து இயங்குவதைக் கண்டதும், நாமும் அயல் நாடு சென்று பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் தோன்றியுள்ளது. இப்படி ஊக்கிகளாய் பதிவர்களின் பதிவுகள் பயன்பட்டன.

அருமையான கருத்துக்கள், ஆரோக்கியமான விவாதங்கள், விதவிதமான மொழி நடைகள், சில்லென்ற சிறுவயதுக் குறும்புகள், இளம் வயதைக் கிளர்வுறும் பலதரப்பட்ட காதல்கள்....

இப்படிப் படிக்கப் படிக்க விழிகளுக்குத் தேனாய் இனிக்கின்ற பதிவுலகத்தை வாழ்த்தி வணங்குகிறேன்.

எனக்கும் 'ப்ளாக்' ஆர்வத்தை ஏற்படுத்திய மாய வரிகளுக்கு உரிமையாளர்களான
'கொங்கு ராசா' அவர்களுக்கும், அண்ணன் 'டுபுக்கு' அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அப்புறம் பல பேரைப் பார்த்தாச்சு.

எதற்கு இப்படி உருகி, உருகி நெஞ்சை நக்குகிறேன் என்று நினைக்கிறீர்களா...
ஏனென்றால்...

இது என்னுடைய 50வது பதிவு.

(50க்கெல்லாம் இவ்ளோ பந்தாவா என்று கேட்பவர்களுக்கு என் பதில்..
:-)............ :-)
)

அக்டோபர் போட்டியில்..!

அக்டோபர் மாதத் தேன்கூடு போட்டியில் நமது வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விபரங்கள்.

வலைப் பதிவர் வாக்கு:

1. விடுதலை எதற்கு? - வசந்த் 15.6%

2.வாங்கிய விடுதலை. - வசந்த் 12.5%

3.விடுதலைத் திரு நாளில்... - வசந்த 12.5%

4.வாசம். - வசந்த் 9.4%

5.இரகசியம். - வசந்த் 9.4%


வாசகர்களின் ( வலைப் பதிவு இல்லாத) வாக்கு:

1.விடுதலை எதற்கு? - வசந்த் 4.2%

2.வாங்கிய விடுதலை. - வசந்த் 4.2%

3.விடுதலைத் திரு நாளில்... - வசந்த 4 .2%

4.வாசம். - வசந்த் 4.2%

5.இரகசியம். - வசந்த் 4.2%

பெருவாரியாக வாக்களிக்காமல் , சிறுவாரியாகவாவது வாக்களித்து, குறைந்தது களத்திலாவது இருக்கச் செய்த வாக்காளப் பெருங்குடி மக்களுக்கு என் நன்றிகள்.

மீண்டும் நவம்பர் மாதப் போட்டியில் பார்ப்போமா..?

Monday, October 30, 2006

கடங்காரப் பய.

"Hello மிஸ்டர்! எப்படி இருக்கீங்க..?" கொஞ்சம் காட்டமாகவே கேட்டான் கதிரவன்.

"உங்க புண்ணியத்தில் நல்லாவே இருக்கேன்."

இப்போது கதிரவனுக்கு கோபம் வந்து விட்டது.

"என்னது..? என் புண்ணியத்திலயா..? சொல்லுவடா, சொல்லுவ. ஏன் சொல்ல மாட்டே? உனக்கு கடனும் குடுத்திட்டு, திருப்பி வாங்க முடியாம இருக்கேன் பாரு, இதுவும் சொல்லுவ. இன்னமும் சொல்லுவ.."

" நான் என்னங்க பண்ணறது..? உங்க கடனைத் திருப்பிக் குடுக்கிற நிலைமையில நான் இல்லையே..?"

"திருப்பிக் குடுக்க முடியாதவன் எல்லாம் ஏண்டா கடன் வாங்கறீங்க..? பொதுவா கடன் கொடுத்து திருப்பி வராட்டி, வயிறு தான் எரியும்னு சொல்லுவாங்க. எனக்கு உடம்பே எரியுதுடா.."

"அண்ணே.. கொஞ்சம் மெதுவா பேசுங்க. ஊரு, உலகத்துல எல்லாரும் தூங்கற நேரம்.."

"அவ்ளோ ரோஷம் இருக்கிற பய, வாங்கின கடனை வட்டியோட திருப்பித் தர வேண்டியது தான. யப்பா, எவ்ளோ வருஷமா கடன் வாங்கிட்டு இருக்க. ஏண்டா உங்க அண்ணன், தம்பி ய்யர்கிட்டயாவது வாங்கிக் குடுக்கலாம் இல்ல..?"

"எங்கண்ணே.. அவங்களும் உங்கள மாதிரி நல்லவங்க கிட்ட கடன் வாங்கித் தான் ஓட்டிட்டு இருக்கோம்.."

"அது சரி..! குடும்பமே இப்படித் தானா.! சரி, பகல்ல எல்லாம் கண்ணுலயே பட மாட்டேங்கற, இராத்திரி மட்டும் தான் வெளியவே வர்ற அப்படினு எல்லாம் ஊருல பேசிக்கறானுங்க.., நெசமாலுமா..?"

"அடப் போங்கண்ணே..! ஒண்ணுமே தெரியாத மாதிரி தான் கேப்பீங்க. அதெல்லாம் ஊருல இருக்கற பயலுகளுக்கண்ணே..! நான் உங்க கூட தான் இருக்கறேன் அண்ணே..!"

"சரி..! உன்ற அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பங்காளிங்களை எல்லாம் அடிக்கடி பாக்கறதுண்டா..?"

"எங்கண்ணே..! அடிக்கடி எல்லாம் பாத்துக்கறதில்ல. எப்பவாவது குடும்பத்தோட வழியில சந்திச்சுக்கிட்டா உண்டு. அவன் அவன் பொழப்ப பாத்து, ஊரு, உலகம் சுத்தறதுக்கே நேரம் சரியா இருக்கே. நீங்க எப்படிண்ணே..?"

" நீ சொல்றதும் சரி தாம்பா. நானும் ஒரு காலத்துல ஒண்ணா, மண்ணா ஒரே குடும்பமா இருந்தவங்க தான். நல்லா தான் போய்ட்டு இருந்துச்சு. நீயெல்லாம் அப்ப பொறந்திருக்கவே இல்ல. ஒரு நா, ஏதோ ஒரு கோபத்துல சண்டை போட்டு எல்லாரும் குடும்பத்துல இருந்து வெடிச்சு செதறினோம். அன்னிக்குப் பிரிஞ்சவுக தான். இன்னி வரைக்கும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கவே முடியல. என்னையும் ஓரமா ஒதுக்கி வெச்சிட்டாங்க. என்ன பண்றது..? குடும்பம் பெருத்துப் போச்சு. என்னை நம்பி ஒம்போது உருப்படிங்க வந்திடுச்சு. எதுக்கெடுத்தாலும், என்ன வேணும்னாலும் என்னையவே சுத்தி, சுத்தி வர்றானுங்க. அவனுங்களை உட்டுட்டுப் போகவும் மனசு வரல. இப்படியே காலம் வேகமா ஓடிட்டு இருக்கு. இப்ப என் கவலையெல்லாம் என் காலத்துக்கு அப்புறம் இவங்களை யார் பாத்துக்குவாங்கங்கறது தான்.. நான் செத்துப் போய், என் ஒடம்பு சூடெல்லாம் அடங்கிப் போனதுக்கு அப்புறம், இவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்கனு நெனச்சாலே, எனக்கு கஷ்டமா இருக்கு தம்பி.."

"சரி விடுங்கண்ணே..! அதுக்குத் தான் இன்னும் ரொம்ப காலம் இருக்குல்ல..?"

"அதெல்லாம் ஊர்ல பாக்குற பயலுகளுக்கு. எனக்குத் தான தெரியும். சரி நீ கெளம்பு..!"

"சரி பாக்கலாம்ணே.." கிளம்பியது சந்திரன்.

கதிரவன் தன் அருகில் உருண்டோடிக் கொண்டிருந்த கிரகங்களை வாஞ்சையோடுப் பார்த்தது.

இலக்கு.

நான் தற்போது படித்து வரும் பலதரப்பட்ட புத்தகங்களில் ஒன்று 'தி கோல்' எனும் ஆங்கிலப் புத்தகம். இலியாகூ எம்.கோல்ட்ராட் மற்றும் ஜெப் காக்ஸ் இணைந்து எழுதி இருக்கிறார்கள்.


நிறுவன மேலாண்மை தொடர்பான பல புத்தகங்கள் வந்துள்ளன. தற்போதும் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் வெறும் கருத்துக்கள், யோசனைகள் ஆகியவற்றால் அவை நிரப்பப் பட்டிருக்கும். தற்போது இந்தியாவில் முது நிலை மேலாண்மை பட்டதாரிகளுக்கான தேவை பல மடங்கு பெருகி இருப்பதால், நம் நாட்டுப் புத்தகச் சந்தையையும் பல மேலாண்மை புத்தகங்கள் எட்டியுள்ளன.


இப் புத்தகமும் மேலாண்மை தொடர்பாக இருந்தாலும், வெறும் கருத்துக் கூட்டங்களாகவோ, அறிவுரை அருவியாகவோ இல்லை. மாறாக ஒரு நிறுவனப் பிரிவின் தலைவர் 'தம்-மொழிதல்' முறையில் கூறுவது போல் எழுதப்பட்டுள்ளது.


அவரும் அவர்தம் பிரிவின் துணைத் தலைவர்களும் சேர்ந்து எவ்வாறு தம் பிரிவை இழுத்து மூடுவதிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதை ஒரு தெளிவான த்ரில்லர் நாவல் போன்று எழுதியுள்ளார்கள்.


இதனிடையே அவருடைய குடும்ப வாழ்வில் ஏற்படுகின்ற கணவன் -மனைவி உறவில் ஏற்படுகின்ற விரிசலையும் எப்படி சமாளிக்கிறார் என்பதும் கிளைக் கதை போல் கூறப்பட்டுள்ளதால், படிப்போர் மேலாண்மைக் கூறுகளில் இருந்து சற்று நிதானித்துக் கொள்ளவும் அவகாசம் கிடைக்கின்றது.


பிரிவுத் தலைவரது பள்ளி இயற்பியல் ஆசிரியரின் வழிகாட்டுதலால், அவர் புது பார்வை பெற்று, பிரிவை இலாபத்தின் பக்கம் திசை திருப்புகிறார்.


இன்னும் படித்து முடிக்கவில்லை. எனினும் படித்ததில் இருந்து அறிந்து கொண்ட விஷயங்கள்:


1. மேலாண்மை என்பது வேறு ஒன்றுமில்லை. இயற்பியல், வேதியியல் போன்று அதுவும் அறிவியலே.! மிகச் சிக்கலான அமைப்புகளுக்கு அடிப்படையாக எளிய அறிவியல் விதிகள் இருப்பது போல், மேலாண்மைச் சிக்கல்களுக்கும் எளிய விதிமுறைகளை உபயோகித்தாலே போதுமானது.

2. நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளில் இருந்தே நாம் பல பிரச்னைகளுக்கு தீர்வு பெறலாம்.

3. மூலக்கதையை மூல மொழியிலேயே படிப்பது தான் (மொழி தெரிந்திருக்கும் பட்சத்தில்) சிறந்தது. விகடனில் இப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். நன்றாகவே இல்லை.

முழுதும் படித்து விட்டு மேலும் கூறுகிறேன்.

சென்னையில் இது ஒரு மழைக் காலம்.

தொடார்ந்து பெய்கின்ற கனமழையால், சென்னை புற நகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. போதாக்குறைக்கு புயல் அச்சுறுத்தல்களாலும் மா நகரெங்கும் பய மேகங்கள் சூழ்ந்துள்ளன. நான் தற்போது படூர் கிராமத்தில் இருந்து, வேளச்சேரி வந்து பணியாற்றுகிறேன். இடைப்பட்ட பகுதிகளான நாவலூர், சோழிங்க நல்லூர், துரைப்பாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி ஆகிய அனைத்து பகுதிகளும் பெரு வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.

இத்தனைக்கும் இந்த பழைய மகாபலிபுரம் சாலையை 'ஐ.டி. நெடுஞ்சாலை' என்று அரசு அறிவித்து உள்ளது. மேலும் நான்கு வழிச் சாலையாக இதனை மாற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மென்பொருள் நிறுவனப் பேருந்துகள் சாலையின் குழிகளில் விழுந்து எழுந்து சென்று கொண்டிருக்கின்றன.

அவை மட்டுமல்ல, நகரப் பேருந்துகள் தமது கச்சடா அமைப்பை வைத்துக் கொண்டு தடுமாறியபடி சென்று கொண்டிருக்கின்றன.

சென்ற வாரம் சைதை அருகில், ( வேளச்சேரி பிரிவு என்று நினைக்கிறேன்) ஏற்பட்ட கடும் வாகன நெரிசலில் மாட்டிக் கொண்ட பல நூறு சென்னைவாசிகளில் நானும் ஒருவன். அந்த தாமதத்தால் நான் படூர் சென்று சேர்வதற்குள் நள்ளிரவு 12:30 தாண்டி விட்டது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஊராட்சி/ நகராட்சி/ பெரு நகர உறுப்பினர்களுக்கான பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

Tuesday, October 10, 2006

இரகசியம்.

" நான் கொஞ்சம் புகை பிடிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு சிகரெட் கிடைக்குமா..?" என்று நிமிர்ந்து பார்த்து கேட்டான் ஜெர்ரி.

அறையில் கனமான அமைதி நிலவியது. தூய வெண்மையான அறை. இரும்பு நாற்காலிகளில் எதிர் எதிராய், அமர்ந்திருந்தனர் ஜெர்ரியும், வில்லியம்ஸும். பெர்னாண்ட் கதவின் அருகில் கைகளைக் கட்டி நின்று கொண்டிருந்தார்.

வில்லியம்ஸ் திரும்பிப் பார்த்தார். பெர்னாண்ட் தன் கோட் பாக்கெட்டில் இருந்து, மார்ல்பரோ சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொடுத்தார். ஜெர்ரி அதை வாங்கி நன்றாக இரண்டு முறை இழுத்தான். நுரையீரல் வரை சென்று நிரம்பியதன் நிறைவைக் கண்கள் மூடி, அவன் அனுபவித்ததை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மெல்ல கண் திறந்து பார்த்தான்.

"இப்போது கேளுங்கள்.." என்றான்.

வில்லியம்ஸ் மேசை மேல் இருந்த புகைபடத்தை அவன் பக்கம் தள்ளினார்.

"மிஸ்டர் ஜெர்ரி! இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை உங்களுக்கு நினைவிருக்கிறதா..?" கேட்டார் வில்லியம்ஸ்.

ஜெர்ரி அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். ஒரு இளம்பெண் சிரித்துக் கொண்டிருந்தாள். கல்லூரிப் பெண் போல் இருந்தாள். பொன்னிற முடி காற்றில் அலைபாய, சிகப்பு நிற சட்டை அணிந்திருந்தாள். பொதுவில் வசீகரமான முகத்தோற்றம்.

"ம்..! இவள் என்னுடன் கல்லூரியில் படித்தவள்."

"பெயர்..?"

"ரோசி..!"

" நல்லது. இவளைப் பற்றிய தகவல்கள் எங்களுக்கு வேண்டும். இவள் கல்லூரியில் உங்களுடன் தான் நெருக்கமான பழக்கம் என்று விசாரணையில் அறிந்தோம். தற்போது இவள் எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்."

சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டான் ஜெர்ரி. பின் கண் திறந்து பார்த்தான்.

"மன்னிக்கவும். கல்லூரியோடு இவளுடன் என் பழக்கம் முடிந்து விட்டது. இப்போது இவளைப் பற்றி எதுவும் தெரியாது."

"பொய் சொல்வதைக் கொஞ்ச நேரம் மறப்பது உங்களுக்கு நல்லது. நேற்று இரவு முழுவதும் இவள் உங்களுடன் தங்கியிருந்தாள் என்று நான் கூறுவதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்"

"இல்லை.கல்லூரி முடிந்து இவளை நான் பார்க்கவேயில்லை. நேற்று நான் இண்டர்னெட் மூலம் பிடித்த ஒரு கால் கேர்ளுடன் தான் இரவைக் கழித்தேன்."

கொஞ்ச நேரம் மெளனம் நிலவியது.

"சரி. நீங்கள் போகலாம். ஏதாவது தகவல் கிடைத்தால் உடனடியாகத் தெரிவிக்கவும்."

ஜெர்ரி எழுந்து, இருவரையும் பார்த்து விட்டு, கதவைத் திறந்து விட்டு வெளியேறினான்.

வில்லியம்ஸ் பெர்னாண்ட்டைப் பார்த்தார். பெர்னாண்ட் உடனடியாக தன் வாக்கி-டாக்கியை எடுத்துக் கண்ட்ரோல் அறையைத் தொடர்பு கொண்டார்.

ஜெர்ரி மெதுவாக தனது வீட்டுக் கதவை மூடினான். பின் வரவேற்பறையில் இருந்த சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். ஏதோ நெடி பரவுவது போல் உணர்ந்தான். உதாசீனத்தான்.

அவசரமே இல்லாமல் ஒவ்வொரு அறையாகச் சென்றான். ஜன்னல், வெண்டிலேட்டர்களின் முன்பிருந்த கர்டைன்களால் அவற்றை முழுதும் மறைத்தான். பாத்ரூமிற்குச் சென்று மெதுவாக, மிக மெதுவாக வெண்டிலேட்டர் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான். தூரத்தில் கருப்பு நிற கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

மெல்லப் புன்னகைத்தான்.

என்னை என்னவென்று நினைத்து விட்டார்கள். என்னை வெளியே விட்டு விட்டபின் தொடர்வார்கள் என்பது கூட தெரியாதவனா நான்?

படுக்கையறைக்கு சென்று பார்த்தான்.

படுக்கையின் அருகில் இருந்த மேஜையின் மேல் ஒரு காகிதம் படபடத்துக் கொக்ண்டிருந்தது. எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.

இனிய ஜெர்ரி,

உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் விடை பெற்றுச் செலவதற்கு மன்னித்து விடு. என்னுடன் நீ இருப்பதால், போலிஸ் உன்னையும் துரத்தத் தொடங்கும். அதை நான் விரும்பவில்லை. நீ இப்போது கொஞ்சம் குழப்பம் அடைந்திருப்பாய் என்பதை உணர்கிறேன். எந்த இரகசியத்தை உன்னிடம் சொல்லாமல் வைத்திருந்தேனோ, அதை சொல்லப் போகிறேன்.

கல்லூரிக் காலத்தில் நாம் இருவரும் சேர்ந்தே சுற்றி வந்தோம். எளிதில் எவருடனும் பழகியிராத நானும் உன்னுடன் நன்றாகப் பழகினேன். யாரையும் நம்பாத என் அம்மாவும் உன்னை மட்டும் வீட்டிற்குள் அனுமதித்தார்கள். என் வீட்டிற்கு வந்திருக்கையிலேயே நீ உணர்ந்திருப்பாய். பிரிவினைப் பிரச்னைகளின் படுக்கையில் தான் நாங்கள் தினம் தூங்குகிறோம் என்று.

அதையெல்லாம் மீறித் தான் லண்டன் வரை வந்து நான் படிக்க முடிந்தது. கல்லாய் போன மனதோடு தான் வாழ வேண்டும் என்று நான் நினைத்து வந்தேன். ஆனால் உன்னைக் கண்ட பின்பு, உன்னுடன் பழகிய பின்பு, என் கல் மனதிற்குள்ளும் பூ பூத்தது.

இலையுதிர் காலத்தில் மஞ்சள் நிறப் பூக்கள் சிந்திச் சிதறிய சாலைகளின் வழியே நாம் பலமுறை நடந்திருக்கிறோம். வெண் பனித்துகள்கள் தூவிக் கொண்டிருக்கும் மாலை நேரங்களில் உன் கோட்டுக்குள் நுழைந்து, கண் மூடி நடந்து கொண்டிருக்கையில் நான் மெல்ல, மெல்ல என் மனதையே உன்னிடம் இழந்து விட்டேன்.

கல்லூரிக் கடைசியில் நாம் பிரிந்து விட்டோம். என் தாயிடம் சொல்லி விட்டு நம் மணம் என்று நினைத்தேன்.

பிரிவினையின் எல்லைப் போர்களில், பிரிவினைவாதிகளின் மீதான போர்களில் எங்கள் ஊர் மீது தாக்குதல் நடந்திருந்ததில், என் குடும்பமும் அழிந்திருந்தது. என்ன கொடுமை, பார்த்தாயா..? இரண்டு வருடங்கள் பைத்தியம் போல் அலைந்தேன்.

பின் லண்டன் வந்தேன். இங்கு தான் அறிந்து கொண்டேன். இப்போது இந்த ஆபரேஷனுக்கு நீயும் ஒரு ஜோனுக்கான இயக்குனர் என்று.

நீ அறிவாயா?

பிரிவினை கேட்பதெல்லாம் ஒரு சில இயக்கங்கள் தான் என்று. பெரும் பகுதி மக்கள் அமைதியைத் தான் விரும்புகிறோம். அதை உன்னைப் போன்ற அதிகார மைய மக்கள் அறிவதில்லை. அல்ல, அறிந்தாலும் கண்களை இறுக மூடிக் கொள்கிறீர்.

நீங்கள் கண்களை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு போவதில்லை. நாங்கள் விழித்து எழுந்து விட்டோம். பிரிவினைவாதிகல் மீது தொடுக்கும் உங்கள் தாக்குதலில் எங்களைப் போன்ற அப்பாவிகளை அழிப்பீர்கள். அதற்கு '' collateral damage" என்று பெயரும் இட்டுக் கொள்வீர்கள்.

நானும் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். எங்களுக்கு விடுதலை. உங்களிடமிருந்து விடுதலை.

எங்கள் இயக்கத்தில் ஒவ்வொருவருக்கும் பணிகள் இருக்கின்றன. எனக்கான பணி உன்னைப் போன்ற தள்பதிகளை அழிப்பது.

அதற்காகவே நேற்று இரவு வந்தேன். ஒரு மரம் போல், உன் செய்கைகளுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் கிடந்தேன். நீ களைப்புற்று உறங்குகையில், உன் வீட்டின் அறைகள் அனைத்திலும், விஷவாயுக் கலன்கள் பொருத்தி விட்டேன்.

நீ இதைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், வாயு பரவத் தொடங்கியிருக்கும்.

குட்பை.
காதலுடன்,ரோசி.

நீ அந்த அளவு முட்டாளில்லை என்பதால், நாங்கள் விலைக்கு வாங்கிய போலிஸ் தான் உன்னை விசாரணை செய்தார்கள் என்பதை நீ உணர்ந்திருப்பாய்.

காற்றில் மெல்ல மெல்ல நீல நிறம் பரவியது.

(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

Saturday, October 07, 2006

வாங்கிய விடுதலை.


பெற்ற தாயினும்
பெரிது
எனினும்,
தெருவில் துப்புகின்ற
வாய்
வாய்த்தது!

இந்தியத் தொலைக்காட்சியில்
முதன்முறை
என்ன படம் என்பதை,
நினைவூட்டாததால்,
வேகமாகப் பாடப்படுகிறது,
ஜனகணமண!

வாங்குகின்ற
ஆரஞ்சு மிட்டாயிலும்
தெரியவில்லை,
கொடியின் ஒரு வண்ணம்!

வெள்ளிப் பனிமலையின்
மீதுலாவும்
வீரர்தம்
கல்லறைப் பெட்டியில்
கறையாய்
இரத்தம் அல்ல,
ஊழல்!

பிறந்த நாள் என்று
மூடிய கதவுகளைத்
தட்டித் தட்டி
ஓய்கிறது,
வீரம் விளைந்த மண்ணின்
மைந்தர் கை!

குடி கெடுக்கும் குடியை
ஊற்றிக் கொடுக்கும்,
அரசாங்கத்தின்
அதிகாரக் கை!

கள்ளக் காதல்,
விபத்து ஒழித்த
பத்திரிக்கைப் பக்கங்களை
நிரப்பும்,
முன்னாள்,
இன்னாள்
ஆட்சியாளர்களின் அறிக்கை!

வாங்கிய விடுதலை
வீரியம்
இழந்து போனது,
சகோதரனுக்கு
தண்ணீர் தராத போது.

ஓடிப்போ
உன் மாநிலத்துக்கு
என்ற போது.

இனி
பொஞ்சாதி என்றபோதும்,
உஞ்சாதி இல்லை
எனப் பிரித்த போது.

கொள்கையென்றொன்றின்றி
குரங்குகளாய்க்
கூட்டணி தாவிய போது.

எத்தனையோ இல்லாத போதும்,
தென் சுனாமிக்கு
சூரத்திலிருந்து
நீண்ட கைகளின்
வழி கசிந்தது,
வாங்கிய விடுதலையின்
மூச்சு ஓயவில்லை
என்ற நம்பிக்கை.

இசுலாமிய முதல் குடிமகனின்
வழிகாட்டலில்,
கிருத்துவப் பெண்
விரலசைவில்,
சீக்கிய மூளையின்
சீரிய தலைமையில்,
இயங்குகின்றது
இந்துப் பெரும்பான்மை நாடு
என்று நினைக்கையில்,

வாங்கிய விடுதலை
வீண்
போகவில்லை...!

வந்தே மாதரம்.

(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

தேக விடுதலை. - பாகம் - 1

"டேய் கண்ணையா..! எங்கடா இன்னிக்கு ரொம்ப நேரமா வர்றாப்ல இருக்கு..?" ஜமீந்தார் வீட்டுக் கணக்குப் பிள்ளை கேட்டார்.

"சாமி, மன்னிச்சுக்கணும். ஆத்தாக்கு பெரியம்ம போட்டிருக்குங்க. அதான் காலங்காத்தாலயே குருவம்மாகிட்ட காட்டிட்டு, மூலிகை பறிச்சுட்டு வர, கொஞ்சம் பொளுதாயிடுச்சுங்க. சாமி மன்னிச்சுக்கணும்.." கண்ணையன் கூனிக்குறுகி சொன்னான்.

"சரி.. போ.. பெரியாடு ஒண்ணு செனையா இருக்கு. அதக் கொஞ்சம் என்னனு பாத்துட்டுப் போ."

"அதாங்க.. இன்னிக்கு நான் கருப்பாட்ட பாத்துக்கறேங்க. சின்னசாமிய இன்னிக்கு மேச்சலுக்கு அனுப்பலாம்னு இருக்கனுங்க.."

"ஏண்டா, அவன் ஒளுங்கா மேச்சுக்கிட்டு வருவானா.? ஆடெல்லாம் பத்திரமா வரணும். ஒண்ணு கொறஞ்சாலும், உன் தோலு பிரிஞ்சுரும். தெரியும்ல..?"

"இல்லிங்கய்யா.. ஏதும் பிரச்ன வராம பாத்துக்கறேங்க. அப்ப உத்தரவு வாங்கிக்கறேங்க"

"ம்...ம்.."என்றபடி கணக்குப் பிள்ளை மாளிகைக்கு உள்ளே சென்றார்.

கண்ணையன் மாளிகைக்கு தெற்கே போகத் தொடங்கினான். நேத்தே, இந்தக் கருப்பாடு ரொம்ப வலியாத் துடிச்சிட்டு இருந்துச்சு. அனேகமா இன்னிக்கு பிரசவம் ஆகிடும் போல.தென் மூலையில் இருந்த ஆட்டுக் கொட்டாயை நெருங்கினான்.

"டேய் சின்னச்சாமி.." குரல் கொடுத்தான்.

"தா.. இங்க இருக்கண்ணா.." என்றபடி ஒரு சிறுவன் கொட்டாயில் இருந்து வெளியே வந்தான். தலையில் ஒரு நைந்த துண்டு. இடுப்பில், ஒரு வெள்ளைக் கோவணம் தொங்கிக் கொண்டிருந்தது.

"என்னடா பண்ணிட்டு இருக்க?"

"யண்ணே.. இந்த கருப்பாடு வயிறு இந்த பெருசா இருக்கல்ல.. அத என்னனு பாத்துக்கிட்டு இருக்கேன்..."

"போடா பொளப்பத்தவனே.. அடுத்த வேளை கஞ்சிக்கு அரிசி இல்ல. அரண்மனைக்கு பொண்ணு பாக்க போனானாம்.. போய் பொளப்ப பாருடா.. இந்தா எல்லா ஆடுகளையும் களத்தி வுடு.. கருப்பாடு இங்கனயே இருக்கட்டும்.. நான் பாத்துக்கறேன். இன்னக்கு நீ போயி மேச்சுக்கிட்டு வா.."

"சரிங்கண்ணே.. கருப்பாடை நல்லா பாத்துக்கங்கண்ணே.. பாவம் வவுறு ரொம்ப நோகும் போல. நான் வேணா குருவம்மாவ கூட்டிக்கிட்டு வரட்டுமா.."

பாருடா, இந்தப் பயலுக்குப் பாசத்த.. நானும் இப்புடித் தான் இருந்தன்.. அப்புறம் ஆச, ஆசயா வளக்குற ஆடுங்க எல்லாம், உள்ள, கறி சோறா போகுதுனு தெரிஞ்சப்புறம், மனசே வுட்டுப் போச்சு. இவுனுக்கும் கொஞ்ச நாள்ள உலகம் புரிஞ்சப்புறம், பளகிப் பூடும்.

"எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ பத்திரமா அல்லாத்தையும் பாத்துக்கடா.."

சரிங்கண்ணே.." என்றபடி, எல்லா ஆடுகளையும், கயிறு பிரித்து விட்டு,
சின்னச்சாமி ஓட்டிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான்.அவன் கையில், அவன் ஆத்தா கொடுத்து விட்ட போசியில் பழைய சாதமும், காய்ந்த ஊறுகாயும் இருந்தன.

ருமாத்துப்பட்டி, தென்மேற்குத் தொடர்மலைகளின் அடிவாரத்தில் இருந்த குக்கிராமம். இன்றைக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஜமீந்தார்கள் ஆண்டு கொண்டிருந்த காலகட்டமது. வெள்ளைக்காரன் கொடுத்த அயல் மதுவுக்கும், வெள்லைத் தோல் மாதுகளுக்கும் மயங்கி, ஜமீந்தார்கள சொக்கிக் கிடந்த காலகட்டம். கறுமாத்துப்பட்டியில், நெல்லை சரகத்துக்கு உட்பட்ட ஒரு குட்டி ஜமீந்தாரின் பழைய பங்களா இருந்தது. ஜமீந்தார், எப்போதாவது ஒருமுறை தான் அங்கே வருவதால், அவரது கணக்குப் பிள்ளை, அதை தனக்கு உரிமைப்படுத்தி, உபயோகப்படுத்தினார்.

Wednesday, October 04, 2006

குடிமகன்.

"மாமி.. இந்த தீபாவளிக்கு எங்க ஸாரி எடுக்கப் போறீங்க..? போத்தீஸா.. சென்னை சில்க்ஸா இல்ல ஆர்.எம்.கே.வி.யா..? சொல்லுங்க மாமி..?""

கோடம்பாக்கத்தில் ஏறியதில் இருந்து, இதே கேள்வி தான். கெளசியைப் பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பியது, சரி தான். ஆனால் இந்த அனு கண்ணில் படாமல் கிளம்பியிருக்க வேண்டும். காலாண்டு லீவ் விட்டு விட்டார்கள், நானும் கெளசி அக்காவைப் பார்த்து விட்டு வருவேன் என்று என்னுடன் கிளம்பி விட்டாள். கெளசியை இங்கே தான் கோடம்பாக்கத்தில் குடுத்திருக்கிறோம். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. இப்போது முழுகாமல் இருக்கிறாள். மாப்பிள்ளை ஆறு மாதம் US போகிறாராம். வந்து ஒத்தாசை பண்ணம்மா என்று கூப்பிட்டு இருந்தாள்.

பஸ் தி. நகர் பஸ் ஸ்டேண்டில் வந்து நின்றது.

திடீரென்று பின்னால் ஒரே சத்தம்.

"டேய்.. எறங்குடா.."

"டிக்கெட் எடுக்க காசு வெச்சிருக்கியாடா..?"

"பாரு.. செருப்பை வேற கையில வெச்சுண்டு... ஏண்டி செத்த ஜன்னலோரம் நகந்து ஒக்காந்துக்கோ.. சனியன், மேல விழ மாதிரியே வர்றான்..."

"பகல்லயே குடிச்சிட்டு வர்றான்.. இவனையெல்லாம் போலீஸ்ல புடிச்சுக் குடுக்கணும் சார்.."

"டேய்... கீழ எறங்கறயா.. இல்லயா..?"

"என்ன சார்.. குடிகாரன்கிட்ட பேச்சு.. தூக்கி வெளிய போடுங்க சார்.."

" நீங்க சொல்லீட்டு அடுத்த ஸ்டாப்ல எறங்கிப் போயிடுவீங்க.. நான் தூக்கிப் போட்டுட்டு, அவன் கீழ எங்கயாவது விழுந்து, செத்து, கித்து தொலைச்சான்னா.. எனக்கு எதுக்கு சார் பொல்லாப்பு..?"

என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக நானும், அனுவும் திரும்பினோம். அப்பா..! ஒடம்பு என்னமாய் பெருத்திருச்சு. கொஞ்சம் திரும்பிப் பார்க்கறதுக்குள்ள கழுத்தில 'சுரீர்'னு ஒரு வலி, மின்னல் மாதிரி வந்திட்டுது. கஷ்டப்பட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

40 - 45 வயதான ஒரு ஆள். தலையெல்லாம் கலைந்து போய், சட்டை பட்டன்கள் இரண்டு தெறித்து போய், வேட்டி அவிழ்ந்தும், அவிழாமலும், தடுமாறிக் கொண்டிருந்தான். நன்றாக குடித்திருப்பான் போல. அவனை எப்படி வெளியேற்றுவது என்பது தான் அங்கே நடந்து கொண்டிருந்த டிஸ்கஸன் என்று தெளிவானது.

பஸ் மெல்ல நகரத் தொடங்கியது.

கண்டக்டர் நீளமாக ஒரு விசில் அடித்தார்.

"மாணிக்கண்ணே.. கொஞ்சம் இங்க வாங்க.." கண்டக்டர் தான்.

பஸ் சடன் ப்ரேக் போட்டு நின்றது. ஓட்டுனர் 'தடார்..புடார்' என்று எழுந்து பின்பக்கம் போனார். அவனை வெறுப்பான ஒரு பார்வை பார்த்தார். 'திடீர்' என்று குனிந்து, அவன் கால்களைப் பிடித்தார். 'தர..தர..'வென இழுத்து, வெளியே கொண்டு வந்து போட்டார்.கேவலமான ஒரு வார்த்தை சொல்லி விட்டு, இருக்கைகு வந்து, கீர் போட்டார்.

சலசலப்பான ஓர் ஆரவாரம் எழும்பியது. நானும், அனுவும் மெல்லத் திரும்பினோம்.

"சொல்லுங்க மாமி. தீபாவளிக்கு எங்க துணி எடுக்கப் போறீங்க..?"

எனக்கு 'சீ' என்றாகி விட்டது. என்ன பெண் இவள்? ஒரு மனிதனைத் தூக்கி எறிந்து விட்டு, இவர்கள் அடுத்த வேலை பார்க்கிறார்கள். இந்தப் பெண், அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட்டதாகவோ, அட்லீஸ்ட் நினைத்ததாகவோ தெரியவில்லை. நிஜமாகவே சின்னப் பெண்ணா.. இல்லை என்னைக் கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது என்று வேறு பேச்சு பேசுகிறாளா..? இல்லை, இது போன்ற மனிதர்களை நினைத்துப் பார்க்கவே கூடாது என்று இவள் பெற்றோர், சொல்லித் தந்திருப்பார்களோ..?

எனக்குக் கொஞ்சம் தலை வலித்தது.

ஏனோ, மதியம் பாத்திரம் விளக்கும் போது, குடிகாரக் கணவன் பற்றி, புலம்பிக் கொண்டே அழுகின்ற சரசுவின் ஞாபகம் வந்தது.

பஸ் சீராக ஓடத் தொடங்கியது.

விடுதலைத் திரு நாளில்...

"இந்த சுதந்திர நன்னாளில்..."

பிரதமர் பேசிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வருஷமும் இதையே தான் சொல்றாங்க. நானும் மூணு வருஷமா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். வருஷா வருஷம் எங்க இருந்தாலும் புடிச்சிட்டு கொண்டு வந்திடுவாங்க. நானும் எங்க போகப் போறேன்? இதே டெல்லியிலேயே தான் சுத்திக்கிட்டு இருப்பேன். ஜும்மா மசூதி, கன்னாட் ப்ளேஸ்னு இங்க தான் இருப்பேன்.

வருஷா வருஷம் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாகிட்டே வருது. விடுதலை வாங்கிட்டமானே புரியல. பிரதமர் கண்ணாடிக் கூண்டுக்குள்ள நின்னு பேசறார். பத்தடிக்குப் பத்தடியில போலீஸ்காரர் துப்பாக்கியோட போற, வர்றவனையெல்லாம் சந்தேகத்தோட தான் பார்க்கறாங்க.

என்னமோ போங்க. இப்படித்தான் போன வருஷம், ஜூம்மா மசூதி பக்கமா போய்க்கிட்டு இருந்தேன். கப்புனு வந்து புடிச்சிட்டாங்க. அதுக்கு முந்தின வருஷம் பார்லிமெண்ட் கிட்டக்க. இப்ப எல்லாம் எனக்கு இது பழகிப் போச்சுங்க. அவங்களும் தான் பாவம், என்ன செய்வாங்க..? ஒவ்வொரு விடுதலை நாளுக்கும், கொஞ்சம் பேரை விடுதலை பண்ணனுமாம். ஜெயில்ல புடிச்சு வெச்சிருக்கவென் எல்லாம், விடுதலை பண்றவன் மாதிரியா இருக்கான்? வுட்டா, பார்லிமெண்ட்டுக்கே குண்டு வெச்சிருவானுங்கள்ள, அவனுங்களை எல்லாம் எவ்ளோ கஷ்டப்பட்டு புடிச்சிருப்பாங்க. அவனுங்களை எல்லாம் வெளிய வுட்டா, நெலமை என்னாகிறது? அதனால நம்மள மாதிரி அப்பாவிகளை ஒவ்வொரு வருஷமும், நான் எங்க இருந்தாலும் புடிச்சிட்டு வந்து, கொஞ்ச நாள் உள்ள வெச்சிருந்து, விடுதலை நாளுக்கு வெளிய விட்டிடுவாங்க.

"பாகிஸ்தானை எச்சரிக்கிறோம். தாக்குதல்கள் தொடர்ந்தால், பேச்சுவார்த்தை.."

இதையே தான் ரொம்ப வருஷமா பேசிக்கிட்டு இருக்காங்க. என்னத்த பேச்சுவார்த்தை நடத்தி..? போன வருஷம் சாணக்யபுரியில இருந்து ஒருத்தன் வந்திருந்தான். அவனை இந்த வருஷம் காணோம். இருக்கானா இல்லை துப்பாக்கியில சுட்டுக் கொன்னுட்டாங்களா, என்கவுண்டர்னு? சரி விடுங்க.. ரொம்ப நேரமாச்சு போல. இதோ கூப்பிடறாங்க.

"பிரதமர் இப்போது அமைதிப் புறாக்களைப் பறக்க விடுவார்.."

நேரு காலத்திலிருந்து இதே வேலையாப் போச்சு. ஓ.கே. அடுத்த வருஷம் பார்க்கலாம். அதுவரைக்கும் எவனும் என்னைச் சுட்டு சாப்பிடாம இருந்தா!


(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

Tuesday, October 03, 2006

தேன்கூடு போட்டிக்கான விதிகள் - ஒரு பதிவு.

இரண்டு பதிவுகளை அக்டோபர் - 06 போட்டிக்காக அனுப்பி வைத்து விட்டு, பிறகு தான் விதிமுறைகளில் மாற்றங்கள் இருப்பதைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி எனக்குத் தோன்றியதைக் கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

போட்டிக்கான ஆக்கங்கள் அந்தந்த மாதத்தின் 18ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

திடீரென்று கடைசித் தேதி 18 என்று ஆனது ஏன் என்று தெரியவில்லை. இந்த மற்றத்தால் இன்னும் அதிக படைப்புகள் வருமா, குறையுமா என்று இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

ஒருவர் எத்தனை ஆக்கங்களை வேண்டுமானாலும் போட்டிக்காகப் பதிவு செய்யலாம். ஒரே படைப்பிலக்கியத்தின் கூறினைக் கொண்ட (உதா: கவிதை) மூன்றிற்க்கு மேற்பட்ட ஆக்கங்களையும், தொடர் ஆக்கங்களையும் தவிர்த்தல் சிறப்பு.

இந்த நிபந்தனை கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. ஒருவர் சிறுகதையில் வல்லவராய் இருக்கலாம். ஒருவர் கவிதை கலக்கலாய் எழுதலாம். சிறுகதை சிறப்பாய் எழுதுபவர், எடுத்துக் கொண்ட கருவை சம்பவங்களால் நிரப்புவார். கவிதயைக் கவினுற அமைப்பவர், வார்த்தைகளால் வர்ணஜாலம் காட்டுவார். ஒரே படைப்பிலக்கிய கூறில் மூன்று படைப்புகளுக்கு மேல், ஒருவருக்குத் தோன்றி, இந்த நிபந்தனையின் காரணமாக, அவற்றை போட்டிக்கு அனுப்பாமல் போனால், இழப்பு யாருக்கு? பதிவு நுகர்வோனுக்குத் தானே? 'தவிர்த்தல் சிறப்பு' என்று சொல்லப்பட்டிருப்பது நிபந்தனை ஆகாது எனினும், அது ஒரு நிரடலாய் இருப்பதை விதி அமைப்போர் கவனம் கொளல் நலம்.

போட்டிக்கான ஆக்கங்களும், தலைப்பும் தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இது ஏற்கனவே இருந்த நிபந்தனை தான் எனினும், இதைப் பற்றியும் இங்கே கொஞ்சம் சொல்லிவிடுவது நன்று எனக் கொள்கிறேன். தமிழ் வலைப் பதிவு இடுபவர்கள் அனைவருக்கும் தமிழ் மேல் கொண்ட காதலில் தான் தமிழில் எழுதுகிறார்கள். அனைவரும் முடிந்த அளவு, பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து தான் எழுத முயல்கிறார்கள். இருப்பினும், கதை நடை, கதையின் போக்கு, கதை சொல்லி போன்ற பல காரணிகளைப் பொறுத்து, வார்த்தைப் பிரயோகங்கள் மாறுபடுகின்ற சூழல் ஏற்பட்டு விடுகின்றது.

அப்படித் தூய தமிழில் மாற்றி எழுதினால், ஆசிரியர் உணர்த்த வரும் உணர்வை நுகர்வோர் அடைதல் சற்று சிரமமாகின்றது. 'அப்படி பிற மொழி வார்த்தைகளில் எழுதி தான் தமிழர்கள் உணர்வுப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டுமெனில், அப்படியொரு, உணர்வே எம் தமிழருக்குத் தேவையில்லை' என்று கூறாதீர்கள். கிணற்றுத் தவளையாய் இருக்க வேண்டாமே..! மேலும், இது போன்ற மிகக் குறைந்த பிற மொழி வார்த்தைப் பிரயோகங்களால் நம் தமிழ் அன்னைக்குப் பங்கம் வராது. தான் ஊட்டிய 'பப்பு மம்மம்' உண்டு வளர்ந்த குழந்தை இன்று 'சப்பாத்தியும், சென்னா மசாலாவும்' சுவைத்து மகிழ்ந்தால், எந்தத் தாயும் கவலையுறாள். வேறு என்ன உண்டாலும், அவன் தமிழ்மகன் என்பது மறவாது, மறையாது. அது போலத் தான், இதுவும்.

எதற்கு இந்த விளக்கம் என்றால், செப் - 06 போட்டிக்கு வந்த தலைப்பை ('கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?') சிலர் விமர்சித்திருந்தது தான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆசிரியர் சொல்ல வந்த கருத்தை, வேறு எந்த வார்த்தைகளில் சொல முடியும்?

'கொஞ்சம் உய்ர்த்தி விடுகிறீர்களா?'

'கொஞ்சம் தூக்கி விடுகிறீர்களா?'

'கொஞ்சம் முன்னேற்றி விடுகிறீர்களா?'

....
பல்பொருள் வார்த்தையாய் 'லிப்ட்' அமைந்ததால், பல பரிமாணப் படைப்புகள் சாத்தியமாயிற்று. எனவே தலைப்பில் தமிழ் இருக்கிறதா, படைப்பில் தமிழ் மட்டுமே இருக்கிறதா என்று ஆராயாமல், படைத்த தமிழ்மகன், தமிழாய் சொல்லியிருக்கிறானா என்று பார்ப்பது, பரவலான தளப் படைப்புகளுக்கு வழிவகுக்கும் என்பது, என் எண்ணம்.

வாசம்.

வாங்க சார்..! இப்ப எங்க வீட்டுல நடந்த நிகழ்ச்சி ஒண்ணு சொல்வேன். நீங்க நம்பணும், என்ன..?

வாசனை நிந்திக்காது வாணாளெலாம் சிந்தி
யோசனை ஏதுமின்றி மும்முறை மொழிய - ராசனை
அடைந்த செல்வமெலாம் அழிந்து போம்
உடைந்த மண்பானை போல் உருப்படாமல்.

"டாடி..மம்மி. இதை வந்து பாருங்க.."

பழைய மஞ்சள் பை ஒன்றைக் குடைந்து கொண்டிருந்த நானும், என்னவளும் திரும்பினோம். அருணும், அனுவும் தாத்தாவின் பழைய ட்ரங்க் பெட்டியின் அருகில் அமர்ந்து, எங்களைக் கூப்பிட்டனர். நாங்கள் இருவரும் அவர்கள் அருகில் சென்று, அமர்ந்தோம்.

"என்னடா கையில வெச்சிருக்க..?" அனுவைத் தூக்கி மடியில் உட்கார வைத்தபடி கேட்டேன்.

"டாடி.. பெரிய தாத்தாவோட பெட்டியை எடுத்து சுத்தம் பண்ணச் சொன்னீங்கல்ல.. இந்த பெட்டியில இந்த ஓலைச்சுவடியெல்லம் இருக்கு..இதில என்னமோ எழுதியிருக்கு... நீங்களே பாருங்க.." என்றபடி அந்த உடைந்து நொறுங்கி விழும் நிலையில் இருந்த ஓலைச் சுவடியை என்னிடம் கொடுத்தான்.

ன் தாத்தா ஒரு பெரிய பக்திமான். யோகம், தியானம், உபாசகம் இப்படி நிறைய செய்வார். ஜோதிடம், ஜாதகம், கைரேகை இதிலெல்லாம் கூட அவருக்கு பெரிய ஆர்வமுண்டு. பழைய பஞ்சாங்கம், நாட்காட்டி இதையெல்லாம் வைத்துக் கொண்டு எப்போதும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார் என்று, என் பாட்டி சொல்லியிருக்கிறார். பழைய ஓலைச் சுவடிகள், தமிழ் செய்யுள்கள், பழைய இலக்கியங்கள் என்று தேடித் தேடிப் படிப்பார்.

இப்படிப்பட்ட மகா பக்தருக்கு வந்து ஒரே பிள்ளையாக பிறந்தவர் தான் என் அப்பா. ஆரம்பத்தில் அவரும் தாத்தாவைப் போல் தான் இருந்திருக்கிறார். பின் வளரும் பருவத்தில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் பால் அப்பா, பெரும் ஆர்வம் காட்ட, தாத்தாவின் கோபத்திற்கு ஆளானார்.

அப்புறம் பாட்டி இருந்தவரை, பாட்டியின் சமாளிப்புத் திறமையால், பெரிய அளவில் இருவருக்கும் மோதல்கள் இல்லாமல் நாட்கள் ஓடின. பாட்டி இறந்த பின்பு, தாத்தா அவரது மொட்டை மாடி அறையிலேயே, ஒடுங்கிக் கொண்டார். என் அம்மா தான் அவருடன் பேசுவது, பழகுவது எல்லாம். நானும் போவேன். ஆனால் அப்பாக்குத் தெரியாமல் தான். தெரிந்தால் சண்டை தான் வரும். தாத்தா என்ன படிக்கிறார் என்று அடிக்கடி போய்க் கேட்பேன். எதுவும் சொல்ல மாட்டார். பிறகு நானும் வளர்ந்து, மணமாகி ரெண்டு பிள்ளைகளையும் பெற்றாயிற்று.

போன வாரம் தாத்தா, காலமாகி விட்டார். இப்போது அப்பாவும் அம்மாவும் எங்கோ வெளியே சென்றிருப்பதால், நாங்கள் தாத்தாவின் அறையைச் சுத்தம் செய்யும் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு குடைந்து கொண்டிருக்கிறோம். அப்பத் தான் இந்த ஓலைச் சுவடி கிடைத்தது.

ஏதோ செய்யுள் மாதிரி தெரிந்தது. ஒன்றும் புரியவில்லை. அவளிடம் கொடுத்தேன்.

"உனக்கு ஏதாவது புரியுதானு பாரு.."

என்னை விட அவளுக்கு கொஞ்சம் அறிவு அதிகம் என்பதை, இவ்வளவாண்டு அனுபவத்தில் கண்டிருந்தேன். கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். நாங்கள் மூன்று பேரும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

"கண்டுபிடிச்சிட்டேன். 'வாசனை'..வாசன்....சீனிவாசன்....பெருமாள். பெருமாளை திட்டாமல், எப்பவும் சிந்திக்கணும். அப்படி இல்லாம, அவரைப் பத்தி தப்பா பேசினா, மூணு தடவை மன்னிப்பார். அதுக்கு மேலயும் போச்சுன்னா, அவருக்கு கோபம் வந்து, அவர் கொடுத்த பணமெல்லாத்தையும் பறிச்சுக்குவார். இது தான் இந்தப் பாட்டுனு நெனைக்கிறேன்.ஏங்க.. உங்க அப்பா நாத்திகர் தான..? அவருக்கு புத்தி சொல்றதுக்காக உங்க தாத்தா எழுதி வெச்சிருப்பார்னு தோணுதுங்க" என்றாள்.

என் தங்கக் கட்டி..! எவ்ளோ அறிவாளி பாருங்க.

குழந்தைகள் இருவரும் ஆச்சரியமடைந்து, அவளைக் கட்டிக் கொண்டு, ஆளுக்கொரு கன்னத்தில் முத்தம் கொடுத்தனர். 'என் கோட்டாவை இரவு தருகிறேன்' என்று கண்களாலேயே சொல்லி விட்டு பெட்டியைப் பார்த்தேன்.

பெட்டியில் இன்னும் கொஞ்சம் ஓலைச் சுவடிகளும், பட்டுக் கயிறுகளும் இருந்தன. ஒரு மூலையில், பழைய காமாட்சி விளக்கு ஒன்று இருந்தது. அருண் அதை எடுத்துப் பார்த்தான். ரொம்ப காலத்து அழுக்கு. பழைய துணியெடுத்து, அதைத் துடைத்தான்.

பளீர்.....

மின்னல் வெட்டியது போல, விளக்கு பிரகாசித்தது. எல்லோரும் கண்களை மூடிக் கொண்டோம். கொஞ்ச நேரம் கழித்துக் கண்களைத் திறந்து பார்த்தோம். விளக்கின் திரி முனையில் இருந்து, குபுகுபுவென வெண்புகை வந்து கொண்டிருந்தது. எனக்கு 'பட்டணத்தில் பூதம்', 'அலாவுதீனும் அற்புதவிளக்கும்' ஞாபகங்கள் வர ஆரம்பித்தது. அருணும், அனுவும் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டனர்.

திரி முனையில் இருந்து, மண்புழு போல் ஓர் உருவம் குதித்தது. மெல்ல, மெல்ல வளர்ந்து ஓர் ஆள் வடிவத்திற்கு வந்தது. என்னைப் பார்த்து வணங்கிக் கொண்டே பேச ஆரம்பித்தது.

"என் எஜமானரே..! வணக்கம். தாங்கள் எனக்கு விடுதலை கொடுத்துள்ளீர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே நான் கிடைப்பேன். பல்லாயிரம் ஆண்டுகளாக நான் இந்த விளக்கிலேயே சிறையிலிருந்தேன். நீங்கள் எது கேட்டாலும் நான் கொண்டு வந்து தருவேன். தாங்கள் அந்த ஓலைச் சுவடியில் இருந்ததைப் படித்துப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா..?"

ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த நான், சுய நினைவுக்குத் திரும்பினேன்.

"புரிந்தது.." என் செம்மொழி எனக்கே வியப்பளித்தது.

"நன்று ! ஓலைச்சுவடியில் இருப்பதை மீறாதது வரை, நான் உங்களுடன் இருப்பேன். மீறினால் நானும் மறைவேன். நான் உங்களுக்குக் கொடுத்தனவும் மறைந்து போகும்..! தங்களுக்கு என்ன வேண்டும்?" பணிவோடு கேட்டது.

இதற்குள் பயம் தெளிந்து போயிருந்த என் குழந்தைகள் என்னைக் கெஞ்ச ஆரம்பித்தார்கள்.

"அப்பா..! அப்பா..! வினோத்துக்கு அவங்கப்பா டர்போ சைக்கிள் வாங்கிக் குடுத்திருக்காருப்பா.. அதையே கேளுஙப்பா.." இது அருண்.

"போடா..! அதையெல்லாம் நீ சீக்கிரம் உடைச்சிடுவே.! அப்பா..! வர்ஷினி பிங்க் கலர்ல ஒரு பாவாடை, சட்டை எடுத்திருக்காப்பா..! அதே மாதிரி எனக்கும் கேளுங்கப்பா..!" இது அனு.

"ஏங்க..! தீபாவளிக்கு ஆலுக்காஸ்ல எடுக்கலாம்னு, ரெண்டு டிசைன் பார்த்து வெச்சிருந்தேங்க..! அதைக் கேளுங்க.." இது என் சகதர்மிணி.

ஆகா..! எல்லாரும் இவ்ளோ ப்ளான் போட்டு வெச்சிருக்காங்களா..?

அப்புறம் ஆளாளுக்கு அவர்கள் விரும்பிக் கேட்டது எல்லாம் அந்தப் பூதம் (பூதம்னே சொல்லலாம்) கொடுத்தது.

அருண் : ஐய்ய..! என்ன இந்தப் பூதம் ரொம்ப நாளா குளிக்கவே இல்ல பொல. இந்த நாற்றம் அடிக்குது.

அனு : இந்த பிங்க் பாவாடை, உங்க ராஜா, ராணி காலத்துல யூஸ் பண்ணினதா? இந்த நாற்றம் அடிக்குது.

இவள் : இந்த நெக்லஸ் கூட, ரொம்ப பழசு போல..

நான் : ஏன், அதுவும் நாற்றம் அடிக்குதா..?

பளீர்..

மற்படியும் வெண்புகை. பூதம் மறைந்தது. அது கொடுத்த எல்லா பொருட்களும் மறைந்தன. நாங்கள் திக்பிரமை அடைந்து போனோம்.

பிறகு, உட்கார்ந்து யோசித்து, ஓலையை மீண்டும் படித்துப் பார்க்கையில், தான் புரிந்தது. செம்மொழியில் ' நாற்றம்' என்றால் வாசனை என்று பொருள். வாசனை என்று தான் மும்முறை சொல்லக் கூடாது. சொன்னால், பூதத்திற்கு, அது வாசம் செய்யும் இடம் ஞாபகம் வந்து, மீண்டும் விளக்கிற்குள்ளேயே போய் விட்டது.


இப்ப சொல்லுங்க..? இந்த நிகழ்ச்சியை நம்பறீங்களா..? என்ன கதை விடறேனா..? தேன்கூடு போட்டிக்கு எழுதிப் போட்டா, பரிசாவது கிடைக்குமா..? அட, போங்க சார், நீங்க வேற..!

(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

விடுதலை எதற்கு?

மெல்லியதாகத் தூறல் தூறிக் கொண்டிருந்தது.

அய்யனார் கோயிலின் தெற்கே இருந்த ஆலமரத்தின் அடிவாரத்தில் ஊரே கூடியிருந்தது. லாந்தர் விளக்குகள் மினுக்கிக் கொண்டிருந்தன. ஆன்கள் எல்லாம் தலைக்கு முண்டாசு கட்டியிருக்க, பெண்கள் கூடைகளைக் கவிழ்த்து உட்கர்ந்திருந்தனர்.

பெருந்தனக்காரர் எழுந்து நின்று பேசத் தொடங்கினார்.

"இப்ப, இங்க கூடியிருக்கர நெல்லிக்காரன்பட்டி சனங்களுக்கு வணக்கம். கொஞ்ச நாளா நமக்கும், பக்கத்தில இருக்கற தோப்பனூர்பாளையத்துக்கும் வாய்க்கா தகரறு இருக்குனு எல்லார்க்கும் தெரியும். டேம்ல இருந்து வர்ற தண்ணிய அவங்க வயலுக்குப் பயன்படுத்திக்கிட்டு, நமக்குத் தராம, வீரபாண்டி ஏரிக்குத் திருப்பி விட்டர்றாங்க. இதப் பத்தி அவங்க பஞ்சாயத்துக்குத் தெரிவிச்சும், அவங்க எதுவும் பண்னல. கலெக்டர் வரைக்கும் போய் சொல்லியும் ஒண்ணும் வேலையாகல. இதுக்கு மேல என்ன பண்ணணுங்கறத பத்திப் பேசத் தான் நாம கூடியிருக்கோம்..!"

"இன்னும் என்னத்த போயி பேசறது? நாலு பேர வெட்டிட்டு வந்தா கம்முனு இருப்பாங்க.." சேகர் சீறினான். பொழுது போகாமல் சுடுகாட்டுக்கு அருகில் உட்கார்ந்து, பகலெல்லாம் சீட்டாடி வெட்டியாய்ப் பொழுது ஓட்டுகின்ற கும்பலில் ஒருவன். 'சும்மா இருந்த குரங்குக்கு சொறி பிடித்தது போல' இவனுக்கு இந்த பிரச்னை கிடைத்து விட்டது. இதை வைத்து ஊரில் நல்ல பேர் எடுக்க முடியுமா என்று திட்டமிட்டிருந்தான். பின்ன, நாளப்பின்ன ஊருக்குள்ள பொண்ணு கிடைக்க வேண்டாமா?

"எலே.. சும்மா உட்காருடா.. வெட்டப் போறானாம். வெட்டிட்டு வந்தா வெவெகாரம் தீந்துடுமா? இப்ப நாம ஊருக்குள்ள பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க இது மாதிரி எசகுபிசகா ஏதாவது பண்ணினீங்கன்னா அப்புறம் போலீசு கேசாகிடும். அப்புறம் காலாகாலத்துக்கும் ரெண்டு ஊருக்கும் பிரச்னையாத் தான் இருக்கும்.." ஜேசுப் பிள்ளை பேசினார்.

ஜேசுப் பிள்ளை ஊரில் மரியாதையோடு பார்க்கப்படும் பெரிய மனிதர்களில் ஒருவர். சுபாஷின் ஐ.என்.ஏ-வில் பணியாற்றியவர்.

ஜேசுப் பிள்ளை தொடர்ந்தார்.

"ஏண்டா.. இப்படி ஊருக்கு ஊரு அடிச்சிக்கறதுக்காடா நாங்க வெள்ளைக்காரன்கிட்ட அடிபட்டு, மிதிபட்டு விடுதலை வாங்கிக் குடுத்தோம்? பேச வந்துட்டான். நீ போயி நாலு பேர வெட்டிட்டு வா. அவன் வந்து நாலு பேரை வெட்டுவான். இப்படியே, எல்லரும் வெட்டிக்கிட்டு போனப்புறம், ரெண்டு ஊரிலயும் யாருமே இருக்க மாட்டீங்க. அப்புறம் யாருக்குடா தண்ணி வேணும்..?

இந்த வேலையைத் தான்டா வெள்ளைக்காரன் பண்ணிட்டு போனான். அன்னிக்கு அடிச்சுக்க ஆரம்பிச்ச இந்துக்களும், இசுலாமியர்களும் இன்னும் நல்லா ஒட்ட முடியாம, தள்ளி தள்ளி தான்டா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அவன் பண்ணிட்டு போன அதே வேலையை நீங்க தொடரப் போறீங்களா..?"

"அப்ப, இதுக்கு என்ன தான் முடிவு..?" கேட்டான் சுருளி. அவனும் சுடுகாடு கும்பலில் ஒருவன்.

"நம்ம அய்யனார் கோயில் பண்டிகைக்கு அவங்களும் பாத்தியப்பட்ட ஊரு தான். அதனால, பண்டிகையில அவ்ங்க ஊரு கடைங்களுக்கு எல்லாம், கொஞ்சம் தள்ளுபடி காண்டிராக்ட் விலை நிர்ணயம் செய்வோம்.." ஜேசுப் பிள்ளை கூறினார்.

சேகர் வெகுண்டான்.

"என்னங்க இது..? சுத்த கிறுக்குத் தனமா இருக்கு. நமக்குத் தண்ணி குடுக்க மாட்டேங்கறாங்க. அவனுங்களுக்கு, கொறைஞ்ச விலைக்கு காண்டிராக்டா..? உங்களுக்கு என்ன பைத்தியம் ஏதாவது பிடிச்சிருச்சா..?"

"டேய்..! நாக்கை அளந்து பேசுடா..! யாருட்ட பேசிக்கிட்டு இருக்கனு தெரியுதில்ல..?" பெரிய தனக்காரர் கத்தினார்.

"இதப் பாருங்க! அவங்களுக்கு அவங்க பண்ற தப்ப உணர்த்தணும். அவ்வளவு தான் வேல. அதை விட்டுட்டு, அவங்களை பழிஎடுக்கிறேன்னு கிளம்பறது, தப்பு. அவங்களுக்கு தப்பை புரிய வெச்சா, அவங்களா வந்து, தப்பை புரிஞ்சுக்கிட்டு, நமக்குத் தண்ணி குடுப்பாங்க. அதுதான் ரெண்டு ஊருக்கும் நல்லது. இதப் பத்தி பேச நாளைக்கு, நம்ம ஊருல இருந்து கொஞ்சம் பேரு, அங்க போயி பேசுவோம். அதை விட்டுட்டு எவனாவது வெட்டறேன், குத்தறேன்னு கிளம்பனீங்கனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நாட்டுக்காக ஊரையே எதிர்த்திட்டு, ஆர்மியில போய் சேர்ந்தவன் நான். வெள்ளைக்காரன் கிட்டயே, ஜெயில்ல அடி வாங்கினவன். இப்ப ஊர் நன்மைக்காக, நாலு பேரைச் சுட்டுட்டு ஜெயிலுக்குப் போக தயங்க மாட்டேன்..." மிரட்டி விட்டார் ஜேசுப் பிள்ளை.

"ஆமா.. அதுதான். நாளைக்கு பஞ்சாயத்துல இருந்து, நாலு பேரு போவோம். ஐயா சொன்னது ஞாபகம் இருக்கட்டும். இப்ப எல்லாரும் கலைஞ்சு போங்க. மழை பெருசா வர்ற மாதிரி இருக்கு.." பெரிய தனக்காரர் முடித்தார்.
ஊர் கலைந்து போனது.

கிழக்குத் திசையில் இருந்து பளீரென்று, மின்னல் பாய்ந்தது.

(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

Thursday, September 28, 2006

கொஞ்சம்...! (A)



ஒளியுமிழ் வெண்பந்தின் பாதையெங்கும் பரவி நிற்கின்ற கருமேகங்கள் கலைந்து செல்கின்ற பேரிருள் பொழுது! மோனத் திருக்கோலமாய் ஆரோகணிக்கும், பிம்ப மரங்களின் இடைவெளியெங்கும் வழிந்து கொண்டிருக்கிறது வெண்ணொளி! மினுக் மினுக்கென்று மின்னிக் கொண்டிருக்கும் வெண்பொரித் துகள்கள் பதிந்திருக்கும் பெருவெளியெங்கும் விரவியிருக்கும் இருள் மாயம்!

இருந்தும் இல்லாத பனித்துகள்கள் பெய்யும் முன்னிலாக் காலம்! காற்றின் ஈரப்பதம் கொஞ்சம் கூடிப் போயிருக்கும் நேரம்!

நாம் இருவர் மட்டும் அமர்ந்திருக்கிறோம்.

வெண்முலாம் பூசிய நதியின் அலைகள் வந்து, நனைத்து விட்டு நகர்கின்ற, ஈரக் கரையோரம் நாம்! சில்வண்டுகளின் ரீங்காரம், கரகரத் தவளைகளின் குரல், பிசுபிசுப்பில் நனைந்த காற்று, தூரத்து ஒற்றை மின்விளக்கின் கண் சிமிட்டல் ஒளி சுமந்த தென்றல், சலசலத்த நாணல் புதரிலிருந்து எட்டிப் பார்க்கும் பாம்பு, இவற்றோடு நாமும்!

கண்களுக்குள் நம்மைத் தேடிப் பார்த்துவிட்டு, ஓய்ந்த நேரம், நம் கைகள் தம் பயணத்தைத் துவக்குகின்றன. வெண் போர்வையாய் நிலவொளியைப் போர்த்திக் கொண்ட நாம், பொங்கிய வேர்வைத் துளிகளை, நனைந்த புல்வெளிக்கு, நொறுங்கிய மண்துகள்களுக்கு நன்றியாய் தெரிவிக்கிறோம்.

மூடல் மறந்த நிலையில், துவங்கிய ஒரு பயணத்தின் தேடல், கூடலில் நிறைந்த பின் ஒரு பாடலை மெல்லியதாய் நீ முணுமுணுக்கிறாய்.

இந்த குளிர் இரவின் வாசம் எங்கும் நாம் வசியம் செய்திருக்கிறோம். அயர்ந்து விலகிய பின், பெருமூச்சுகள் செறிந்த பின்னிரவுப் பொழுதில், உன் விழிகளைப் பார்க்கிறேன்.

இருதுளிகள் பூத்த கண்கள் நிறைந்து வழியும் பால்கிண்ணத்தில் மிதக்கும் திராட்சைப் பழங்களாய் தோன்றும்.

தனிமை நடை!


மாலையின்
நீள நிழல்கள்
படிகின்ற சாலையில்
நடக்கின்றேன்,
தனிமையில்!

உன் நினைவுகளைக்
கைத்தடியாக
ஊன்றிக் கொண்டு,
நிலத்தைத் தட்டுகையில்,
உடைகின்றன
என் கனவுகள்!

மெல்ல
போர்வையாய்ப் போர்த்துகின்ற
மஞ்சள் வெயில்,
நிரப்புகின்றது
வெம்மை சூழ்ந்த
சில நினைவுகளை!

பருவத்தின் பாதையில்
பூத்த
நம் மலர்களைப்
ப்றித்தது,
வலுவான
வாடைக் காற்று!

கைகோர்த்து நடந்த
நாட்களின்
உறைந்த கனம்
தாங்காமல்,
தவிக்கும்
இன்றைய தினம்!

பனி பெய்கின்ற
மெல்லிரவில்,
ஏதோ ஒரு
படுக்கையின் மேல்,
கரைந்து போய்க்
கொண்டேயிருக்கின்றன
நம் சத்தியங்கள்...!

அஞ்சலி.

அந்த அழகிய ஆத்மா வானத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

நீலப்போர்வையாய் ஈரத்துளிகள் வந்து மூடியவாறு, உருண்டோடுகின்ற, பூமிப்பந்தை திரும்பிப் பார்த்தது. பகையும், வெறுப்பும், கோபமும், சின்னச்சின்ன சந்தோஷங்களும், மலை போன்ற துக்கங்களும் நிர்ம்பிய பூமி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இனி இங்கு வர வேண்டாம் என்று, நினைக்கையில் ஏனோ ஒரு துக்கம் வந்தது. மெல்ல மேல் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

திடீரென வழியில் இரு தேவமங்கைகள் வந்து வணங்கினர்.

"அம்மா.. தங்களை தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம்." என்றனர்.

ஆம்.. தேவலோகத்தைக் காண்பதில் இனிமையாகத் தான் இருக்கும். நறுமணம் வீசுகின்ற தேவதாரு மரங்கள். தெள்ளிய நீரோடை பாய்கின்ற தோட்டங்கள். குளிர் தென்றல் பவனி வருகின்ற அருவி பொழிகின்ற வனங்கள், என்றெல்லாம் தேவலோகம் இருக்கும் என்று தான் படித்திருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால், தான் பெரும் விருப்புடன், விரைந்து கொண்டிருப்பது இவற்றைக் காணவா..? அன்று. என் உளம் கவர்ந்த கள்வரை அல்லவா..? அவரைப் பற்றி நினைத்தாலே இந்த பாழ்மனம் கலங்கி விடுகின்றதே.

ஆத்மா அந்த தேவமங்கையரை வணங்கியது.

"தெய்வப் பெண்களே..! தங்கள் தரிசனம் கிடைத்ததில் பெரும் பேறு பெற்றேன். தேவலோகத்தைக் காண்பதில் நான் பேரார்வம் கொண்டுள்ளேன் என்பது உண்மையே! ஆயினும் என் உள் மனதில், யாரைக் காண நான் விரைந்து சென்று கொண்டிருக்கின்றேன் என்பதை தாங்கள் அறியமாட்டீரா? என்னைத் தயை புரிந்து அவரிடத்தில் அழைத்துச் செல்லுங்கள்.." என்று வேண்டிக் கொண்டது, அந்த ஆத்மா.

தேவகன்னியர் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தனர்.

"வாருங்கள். தங்களை அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம். அவரும் உங்களைக் காண காத்துக் கொண்டிருக்கிறார்" என்றார் ஒரு தேவகன்னிகை.

என்ன..? அவர் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறாரா?

ஏன் இந்தக் கால்கள் இவ்வளவு மெதுவாகச் செல்கின்றன? இந்தப் பெண்கள் இன்னும் சற்று வேகமாக சென்றால் தான் என்ன? இன்னும் எவ்வளவு தூரம் தான் செல்ல வேண்டுமோ..?

மூவரும் விரைந்து சென்றனர்.

ச்சைப் பசேல் என்ற தோட்டம். மினிமினுத்துக் கொண்டிருந்த லக்ஷோப லக்ஷ நட்சத்திரங்களுக்கு நடுவே அமைந்திருந்தது. எங்கிருந்தோ வந்து, மனதை மயக்கிக் கொண்டிருந்தது மென் குழலோசை. சிலுசிலுவென தென்றல் வீசிக் கொண்டிருந்தது.

"தாங்கள் காண வேண்டியவர், இங்கு தான் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் வருகிறோம்." விடைபெற்று மறைந்தனர் தேவகன்னியர்.

என்ன..? அவர் இங்கு தான் காத்துக் கொண்டிருக்கிறாரா..? மெல்ல, மெல்ல உள்ளே நுழைந்தது, அந்த ஆத்மா.

அவர் தான்..! அங்கே நின்று கொண்டிருப்பவர் அவரே தான்.! எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.

"அன்பரே..!"

அந்தக் கம்பீர திருவுருவம் திரும்பியது. மறைகையில் இருந்த வயதான தோற்றம் இல்லை. குழந்தை தோற்றம். கொழு, கொழுவென இருந்த தேகம். கள்ளம் கபடமற்ற முகம்.

ஏன், என் கண்கள் தாமாகவே சுரக்கின்றன? அவரது உருவம் கூட மறைக்கிறதே..!

" நலம் தானா.. நலம் தானா.. உடலும் உள்ளமும் நலம் தானா.." ஆத்மா பாடியது.

"அன்பே..வந்து விட்டாயா..?"

"வந்து விட்டேன்.."

"இப்படி, அருகில் வந்து அமர்.."

"இங்கே வேண்டாம்.."

"இங்கே பார்! நம்மைப் பிரிப்பதற்கு எதுவுமில்லை. எந்த வேறுபாடுமில்லை. நான் தமிழன், நீ கேரளம் என்ற பேதமில்லை. நான் வேறு ஜாதி, நீ வேறு இனம் என்ற பிரிவு இல்லை. எந்தச் சமூகத்திற்காகவும் நாம் பயப்படத் தேவையில்லை. நமது தேகம் குறித்த எண்ணம் இல்லை. அத்தனை குப்பைகளையும் நாம் பூலோகத்திலேயே, புதைத்தும், எரிக்த்தும் வந்து விட்டோம். இங்கே இருப்பதெல்லாம் தூய்மையான அன்பு. நாம் எந்தக் கவலையும் இல்லாமல் பூரண அன்பு பூண்டிருந்த காலம், திரும்பியுள்ளது. இனி காலம் என்ற ஒன்றும் இல்லை.இனி என்றென்றும் இணைந்தே இருப்போம். தூய அன்பு. பரிசுத்தமான பாசம். இனி எந்தச் சக்தியும் நம்மை பிரிக்க முடியாது.."

திரைப்படங்களில் பக்கம் பக்கமாய்ப் பேசிய, அதே திருவுருவம் தான் இப்படி பொழிந்தது. இது பிறவிக்குணமா..? இல்லையில்லை, பிறவிகள் எல்லாம் தாண்டி வந்த பின்னும், இன்னும் இப்படிப் பேசுகிறார் என்றால், இது அதையும் தாண்டியது.

இவர் தெய்வமகனே தான்.

அருகில் அமர்ந்தனர்.

"எனக்காக நமது பாடலைப் பாடுவாயா..?"

"உங்களுக்கில்லாத்தா..?"

"மறந்திருந்து பார்க்கும் மர்மமென்ன..."

ஆனந்தத் தேன் துளிகள் சொரியச் சொரிய அந்த அழகுத் திருவுருவம் சுழன்றாடத் தொடங்கியது. அந்த தெய்வமகனோ, மறைந்திருந்து பார்க்க வேண்டிய அவசியமின்றி, முன்னால் அமர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

நன்றி.

நன்றி.. நன்றி...!!!

எனக்கு வாக்களித்த நல்ல உள்ளங்களே.. வாக்களிக்காமல் வந்து படித்து விட்டு மட்டும் போனவர்களே.. வாக்களிக்கலாமா, வேண்டாமா என்று தயக்கத்திலேயே வாக்களிக்க மறந்தவர்களே...!

அனைவருக்கும் என் நன்றிகள்.

பதிவு துவங்கிய முதல் மாதப் போட்டியிலேயே களம் கண்ட எனதருமை கண்மணிகள் பத்து வேட்பாளர்களும், ஆளுக்கு குறைந்தது 13 ஓட்டுக்கள் பெற்று வந்துள்ளனர் என்பதைக் காண்கையில், என் நெஞ்சம் எல்லாம் பூரிக்கின்றது. என் கண்களில் இருந்து ஆனத்தக் கண்ணீர் வழிகின்றது.

தோற்றோம் என்று கூறுவதை விட, வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று மார் நிமிர்த்தி கூறுகிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் என்றும் முதலில் நிற்க வேண்டும் என்பது தான், நான் பயின்று வந்த பாசறை கற்றுக் கொடுத்தது.

முதல் மூன்று வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றிய ஆசாத் ஐயா அவர்களுக்கும், ராசுக்குட்டி அவர்களுக்கும் மற்றும் யோசிப்பவர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போ போறேன்... நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

வாக்குப்பதிவு நிலவரம் : ( கொஞ்சம் கலவரம் தான்..)

அன்புத் தோழி, திவ்யா..! - 9.1% (16)

கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..? 8.5% (15)

விரல் பிடிப்பாயா..? 8.5% (15)

மம்மி..மம்மி.. 8% (14)

அண்ணே..லிப்ட் அண்ணே..! - 8% (14)

லிப்டாக இருக்கிறேனே..! 8% (14)

மெளனம் கலைந்தே ஓட.. 8% (14)

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? 7.4% (13)

இன்னா சார்? 7.4% (13)

லாந்தர் விளக்கு. 7.4% (13)

நன்றி.. நன்றி...!!!

Tuesday, September 26, 2006

மீண்டும் ஒரு நிலாச்சாரல்!

வானம் இருட்டிக் கொண்டிருந்தது. விடிந்து ஏழு மணி ஆகிவிட்டது என்பதாகத் தோன்றவில்லை. மேற்கிலும், கிழக்கிலும் கருமையான மேகங்கள் திரண்டிருந்தன. விரைவில் வானம் பொத்துக் கொள்ளும் போல் இருந்தது.

ரங்கசாமி சலிப்பாகத் திண்ணையில் அமர்ந்தார்.

வயதானவர் தான். ஊரிலேயே சற்று மரியாதையான மனிதர். கொஞ்ச காலம் ஊர்ப் ப்ரெசிடெண்ட் ஆக இருந்தவர். கிராமத்துக்கே உரிய கருத்த தேகக் கட்டு. முறுக்கிய தலைப்பாகை. மெல்ல வலதுகையை நெத்தியில் வைத்து, கண்களைச் சுருக்கி தூரத்தில் பார்த்தார். வெள்ளை நாரைக் கூட்டம் பறந்து புள்ளியாய் மறைந்தது.

"பாவாயி..பாவாயி.."

"வர்றேனுங்க.." என்றபடி ஓடி வந்தார் அந்த அம்மாள்.

Monday, September 25, 2006

பயணங்கள்...!

அப்பாடா...! ஒரு வழியா இந்த மாசத்துக்கான தேன்கூடு போட்டிக்கு, முடிஞ்சளவு படைப்புகள் எல்லாம் அனுப்பியாச்சு. பரிசு கெடைக்குதோ, இல்லயோ நல்லாயிருக்குனு நாலு பேரு சொன்னாங்க. அது போதும். கொஞ்ச நாளைக்கு வேற ஏதாவது பத்தி பதிவுகள் போடலாம்னு தோணுச்சு. ஏற்கனவே கொஞ்சம் ஊர்ப் புராணம் பேசியிருக்கோம். அதக் கொஞ்சம் கண்டின்யூ பண்ணுவோம். அங்கங்க கெடைக்கற எடத்துல நம்ம புராணத்தையும் போட்டு வெப்போம். அப்படியே ஒரு பெரிய கதை சொல்லலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க.?

வாழ்க்கையே ஒரு நெடும் பயணம் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் பெரியவர்கள் கூறியிருப்பார்கள். நாமும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படியெல்லாம் நான் 'ஜல்லியடிச்சு'(உபயம் யாரு? சுஜாதா சாரா..?) பேசப் போறதில்லங்க. நாமளும் இந்தா இருக்கற சூரியன 25 வருஷம் சுத்தி முடிச்சிட்டோம் . எத்தனையோ பயணங்கள் போயிருக்கோம். அதைப் பத்தியெல்லாம் கொஞ்சம் நெனப்புல நிக்கறதெல்லாம் எழுதி வெப்போம். பாக்கறவங்க, படிக்கறவங்க அவங்களும் அவங்க மனசுல இருக்கற அவங்கவங்க பயண நெனப்புகள அள்ளித் தெளிச்சாங்கன்னா, நல்லா இருக்கும்னு தோணுச்சுங்க. ஏன் இப்ப திடீர்னு கேட்டீங்கன்னா, அதில பாருங்க, நாம ஊர்கோலம் போன பல வாகனங்கள் நம்ம பசங்க காலத்துல இருக்குமான்னு தோணுச்சு. அதான், சர்தான் கழுத, ஒரு பதிவு அதப் பத்தி போட்டு வெப்போம்னு...!

குதிரை வண்டி:
எங்க ஊர்ப் பெருமையில கொஞ்சம் இங்க அள்ளி விட்ருக்கோம். காவிரி ஆத்தங்கரையில மேக்கால எங்க ஊரு இருக்குது. கெழக்கால 'கொமாரபாளையம்'னு ஒரு ஊரு இருக்குது. அது முந்தி சேலம் மாவட்டத்துல இருந்தது. இப்ப நாமக்கல் மாவட்டமா மாத்திட்டாங்க. நம்ம ஊரு எப்பவும் ஈரோடு மாவட்டம். நம்ம சொந்தக்காரங்க கொஞ்சம் பேரு அங்க இருந்தாங்க. நாங்க இங்க இருந்து போகணும்னா, ஆத்தைத் தாண்டித் தான் போகணும். 'தாண்டி'னா அனுமார் மாதிரியானுலாம் கேட்கக் கூடாது.

ஆத்தத் தாண்டிப் போக மூணு பாலம் இருக்கு. ஒண்ணாவது கோயமுத்தூர்ல இருந்து, சேலம் போற NH. அது எங்க ஊர்ல இருந்து கொஞ்சம் தூரம்கறதனால நாங்க அது வழியா போக மாட்டோம்.பண்டிகைக்கு வீட்டுப் பொண்ணுங்களுக்கு நகை வாங்கித் தருவோம். ரெண்டு கை நெறைய வளையல்கள் எலாம் போட்டுட்டு கலகலனு சுத்தி வருவாங்க. ஒரு தோடோ, ஒரு கை வளையலோ உடைங்சோ, தொலைஞ்சோ போச்சுன்னா அதுங்க மொகமே களையிழந்து போயிருங்க. அது மாதிரி பாலம் திறந்த புதுசுல, சும்மா ரெண்டு பக்கமும் சோடியம் லைட் போட்டு, ஜெகஜ்ஜோதியா இருந்துச்சுங்க. இப்போ ஒரு பக்க லைட் மட்டும் தான் இருக்கு. பாலமே சோபை இல்லாம போயிடுச்சுங்க.

மூணாவது இப்ப ரொம்ப புதுசா திறக்கப்பட்ட புதுப்பாலம். இது எங்க புது பஸ் ஸ்டேண்ட்ல இருந்து, எடப்பாடி போகறதுக்காக கட்டுனது.

ரெண்டாவதா வர்ற பாலம் வெள்ளக்காரன் கட்டுனதா சொல்வாங்க. பாலமும் அப்படித்தான் இருக்கும். ரொம்ப பழசா இருக்கும்னு நெனச்சுக்காதீங்க. சும்மா கிண்ணுனு 'கில்லி' மாதிரி இன்னிக்கும் நிக்குது. இதுல தான் நாங்க போவோம். பழைய பாலங்கறதுனால லாரி, பஸ்ஸுக்கெலாம் இங்க அனுமதியில்ல. சைக்கிள், பைக், கால் நடை (அட, நடந்து போறவங்கள சொல்றேங்க..) இப்படித் தான் இதுல போக முடியும்.

நாங்க கைப்புள்ளைங்களா (அம்மாவோ, அப்பாவோ கையில தூக்கிட்டு.. அப்புறம் அவங்க கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்கறப்போ நாம கைப்புள்ளைங்க தானுங்களே..) இருந்தப்போ, அந்தப் பாலத்து வழியா இன்னொரு வண்டியும் போய்ட்டு, வந்திட்டு இருந்துச்சுங்க. அதான் குதிரை வண்டி.

இந்த ரெண்டாவது பாலத்தோட ரெண்டு எல்லைகளிலும் குதிரை வண்டிகள் இருக்குங்க. மூணு பேர் உட்கார்ற மாதிரி பெட்டி மாதிரி பாடி, கட்டை சக்கரங்கள். இப்படித்தான் வண்டிகள் இருக்கும். குதிரை எல்லாம் ரொம்ப நொந்து போய், பார்க்கவே பாவமா இருக்கும். அதுங்க வழியில பார்க்கக் கூடாதுங்கற மாதிரி கண்கள்க்கு சைடுல மறைச்சிடுவாங்க. வாயைச் சுத்தி ஒரு பையில புல் (இது நிஜமாலும் புல்.. நீங்க வேற ஏதும் நெனச்சுக்காதீங்க..) நிரப்பி மாட்டி விட்டுடுவாங்க. வண்டியோட கீழ ஒரு சாக்கு மூட்டையை நாலு பக்கமும் இழுத்துக் கட்டி, அதுல இன்னும் நிறைய புல் வெச்சிருப்பாங்க. இந்த குதிரை வண்டியில தான் நாங்க ஆத்தைத் தாண்டி போறது, வர்றது எல்லாம்.

இப்ப இந்த மாதிரி வண்டிகள் எல்லாம் இல்ல. முடிஞ்சவங்க கார் வாங்க, சொல்லப் போனா எல்லாரும் டூ வீலர் வாங்க, குதிரை வண்டிக்காரங்க ஆட்டோ வாங்க, சாக்கடை நீர் காவிரியில கலக்கற இடத்துல வளர்ற கோரப்புல்லை மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு, குதிரைங்க..!

Saturday, September 23, 2006

தோண்றது...!

தேன்கூடு செப் '06 மாதப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட தமிழ்க் குழந்தைகளை வாழ்த்தி வணங்குகிறேன். எனது பதிவுவலைப் பக்கங்களை நிரப்புவதற்கு போட்டி அறிவித்த தேன்கூட்டிற்கு நன்றிகள். கொஞ்சம் வித்தியாசமாக தலைப்பு கொடுத்து, சோம்பிக்கிடந்த நியூரான்களுக்குத் தார்க்குச்சி போட்ட 'கொங்குராசா'வுக்கு நன்றி. 'மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது' சுடச்சுட விமர்சனங்களை அளித்த 'சோம்பேறிப் பையனு'க்கு நன்றி. அலுவலகத்தில் இந்த மாதம் கொஞ்சம் ஓய்வளித்த செயல்முறைத் திட்ட மேலாளருக்கு சிறப்பு நன்றி(?!).

படைப்புகளைப் பற்றி எனக்கு தோன்றுகிறதை இங்குப் பதிவிடுகிறேன்.

1.சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - தேன்கூடு போட்டி
சிமுலேஷன்
கொஞ்சம் கடியாக இருந்தாலும், படிக்க வைத்தது.

2.லிப்ட்
சிறில் அலெக்ஸ்
இலக்கிய வர்ணனைகள் முலாம் பூசிய, நிதர்சன நிஜ நிகழ்வு.

3.போட்டிக்காக - வெண்பா
அபுல் கலாம் ஆசாத்
வெண்(பா ) பொங்கல்.

4.தவிப்பு
நெல்லை சிவா
இறுதியில் கொண்டை ஊசி வளைவு முடிவு.

5.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? புதிர்
பினாத்தல் சுரேஷ்
இலக்கியர்களை அவதானித்து அவர்கள் மொழியில் பொழிந்த வார்த்தைகளின் வரிசை.

6.ஐந்து வெண்பாக்கள் - போட்டிக்காக
அபுல் கலாம் ஆசாத்
தமிழ் வெண்(பா) பொங்கல்.

7.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா
சேவியர்
காற்றில் கரைகின்ற லிப்ட் கேட்பவர்களின் குரல்கள்.

8.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
demigod
க்ரைம் த்ரில்லர்.

9.கொஞ்சம் தூக்கி விடலாம்!
யதா
பயன்பட பயன்படுத்திக் கொள்ள.

10.லிஃப்டாவது கிடைக்குமே! / தேன்கூடு போட்டி
ஜி.கௌதம்
நியாயம் தேடும் சிறுகதை. முடிவில் மட்டும் போட்டிச் சங்கிலிக்கான கண்ணி.

11.லூர்து - சிறுகதை - போட்டிக்காக
அபுல் கலாம் ஆசாத்
நல்ல மொழி நடையில் வித்தியாசமான கொஞ்சம் பெரிய கதை. வெண்பா எழுதியவரே பெருங்கதை எழுதிவிட்டார்.

12.'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?'
Krishnaraj.S
பள்ளி நினைவு.

13.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

14.லிஃப்ட் குடுக்கலியோ லிஃப்ட்
சனியன்
பரபரப்பான இளமைக்கான அறிவுரை.

15.இன்னா சார்?
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

16.சின்னதாக ஒரு லிப்ட்
யதா
ஆசிரியர் தினத்திற்கான படைப்பு.

17.லிஃப்ட்
மகேந்திரன்.பெ
கொஞ்சம் கடி தான்.

18.கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..?
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

19.அன்புத் தோழி, திவ்யா..!
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

20,25,30,32,40.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1 ,2,3,4,5
ராசுக்குட்டி
கல்லூரி கலாட்டா.

21.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
இளா
வெண் சேலையை வண்ணமாக்கிய புகைப்படங்கள் பதிந்த கவிதை.

22.சாந்தியக்கா
பாலபாரதி
கலங்க வைத்தாலும்...

23.இதுவேறுலகம்
நடராஜன் ஸ்ரீனிவாசன்
கண்ணொளி கிடைக்காதவர்களின் உயர் உள்ளம்.

24.நிலா நிலா ஓடி வா!
luckylook
வானத்தில் பறக்க வைக்கிறது.

26.சில்லென்று ஒரு காதல்
நெல்லை சிவா
நெஞ்சை அள்ளிக் கொண்ட காதல்(?) கதை.

27,46,67,76.எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 1,2,3,4
யோசிப்பவர்
படைத்தவரின் பெயரைக் காப்பாற்றிய அறிவியல் குழந்தை.

28.மம்மி..மம்மி..
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

29.லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு
kappiguy
வலை மொக்கராசு.

31.முனி அடி (தேன்கூடு போட்டி)
செந்தில் குமார்
கிராம வாழ்முறை.

33.விரல் பிடிப்பாயா..?
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

34.அண்ணே..லிப்ட் அண்ணே..!
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

35.முன்னாவும் ,சில்பாவும்.
umakarthick
கல்லூரிக் கதை.

36.சபலம்
saran
மனத்தின் பலவீனம்.

37.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
Udhayakumar
பயத்தின் மறைப்பு.

38.konjam lift kidaikkuma??
Rajalukshmi
சின்னச் சின்ன வார்த்தைகளில் லிப்ட்.

39.லாந்தர் விளக்கு.
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

41.ஆனா ஆவன்னா... / தேன்கூடு போட்டிக்காக
ஜி.கௌதம்
உருக்கமான ஆசிரியர் கவிதை.

42.சோம்பேறி பையன் (தேன்கூடு போட்டி) !
கோவி.கண்ணன்
இல்லாளின் பெருமை.

43.லிப்ட் ப்ளீஸ்!!!
வெட்டிப்பயல்
க்ரைம் தொடர்.

44.கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா
pavanitha
அப்பா-மகன் பாசம்.

45.லிப்ட் கிடைக்குமா? (தேன்கூடு போட்டி)
madhumitha
லிப்ட் ஆபரேட்டர் கதை.

47.காடனேரி விளக்கு (சிறுகதை)
MSV Muthu
உள்ளூர் த்ரில்.

48.கண்டிப்பாடா செல்லம்...
ramkumarn
மற்றுமோர் கல்லூரி காதல் கதை.

49.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
மாதங்கி
எதிர்பாராத முடிவில் நிற்கின்ற சிறுகதை.

50.நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
முரட்டுக்காளை
அறிவியல் கலந்தடித்த மற்றுமொரு விண்ணியல் கதை.

51.சர்தார்ஜி ஜோக் ஒன்று.... கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
ramkumarn
யப்பா.. கடி தாங்காமல்...

52.லிப்டாக இருக்கிறேனே..!
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

53.அவன் கண்விடல்
குந்தவை வந்தியத்தேவன்
குறள் குரல்.

54.கடவுள் கேட்ட லிஃப்ட்
சேவியர்
மனிதன் வெட்கித் தலைகுனிய கடவுளின் சொற்கள்.

55.அவள்
நிர்மல்
என்ன சொல்ல...

56.எங்க வீட்டு ராமாயணம்
சிதம்பரகுமாரி
சுட்டிப் பெண் பார்வையில்.

57.பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - என் அனுபவம்!
உமா கதிர்
பயணத்தில் சில கருத்துக்கள்.

58.போட்டி: பதிவுக்கு மேய்க்கி
bsubra786
கிண்டலோ கிண்டல்.

59.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
வலைஞன்
நம்பிகை வரிகள்.

60.தேன்கூடு போட்டிக்கு
வலைஞன்
படித்து முடித்த பின் விளைவுகளை சிந்திக்கத் துண்டும் சின்னஞ்சிறுகதை.

61.லிஃப்ட் கொடுத்தவர்கள்
அஹமது சுபைர்
நன்றி மறக்காத அனுபவம்.

62.ஒரு தலைப்புச் செய்தி
நடராஜன் ஸ்ரீனிவாசன்
பரபரப்பான ஓட்டம்.

63.லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு?
barath
சமுதாயச் சிந்தனை.

64.மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் - தமிழில்
சரவ்.
மற்றுமொரு முறை படிகத் துண்டும் நடை.

65.மொழிபெயர்ப்பு
நடராஜன் ஸ்ரீனிவாசன்
சமூக நினைவில் முடிகின்ற த்ரில்லர் துவக்கக் கதை.

66.தூக்குங்கள் தூக்குங்கள்
Ilackia
(எனக்கு இந்தப் பதிவு தென்படவில்லை.)

68.தூக்கல் வாழ்க்கை
நடராஜன் ஸ்ரீனிவாசன்
தமிழ்த் தேன்.

69.தீயினால் சுட்ட புண்!!!
வெட்டிப்பயல்
இளமைச் சிறுகதை.

70.அவசரமாய் போய்கொண்டிருந்தேன்...
தொட்டராயசுவாமி
திகில் திருப்பம்.

71.மெளனம் கலைந்தே ஓட..
வசந்த்
உங்கள் கருத்து தான் தேவை.

72.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா- தேன்கூடு போட்டி
anamika
மழைக் கற்பனை.

73.அல்லக்கை - தேன்கூடு போட்டி சிறுகதை
இன்பா
அரசியல்.

74.மனசில் லிப்ட் கிடைக்குமா
சேவியர்
ரொம்ப ஆசை தான்.

75.“அய்யா!, கொஞ்சம் கருணைகாட்டுங்கய்யா!!”, (தேன் கூடு போட்டிச் சிறுகதை)
kalaimarthandam
கருணைக் கிழங்கு.

Friday, September 22, 2006

இறுதி இரு படைப்புகளுக்கான விமர்சனங்கள்.

நண்பர் சோம்பேறிப் பையன் (இப்படி சொல்வதற்கே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. அப்படி அசுர உழைப்பு..!) அவர்களுக்கு மிக்க நன்றி. தனது கடின பணி நேரங்களுக்கு இடையிலும், ஒவ்வொரு படைப்பையும் 'அணுகி, ஆராய்ந்து, அலசி' தனது விமர்சனங்களை கொடுத்துள்ளார்.

அவருக்கொரு சிறப்பு நன்றி. கடைசி (படைப்புகள் பதிவதற்கான காலம் முடிந்து விட்டதால்) இரு படைப்புகளுக்கான விமர்சனங்களை என்னை அளிக்கச் சொல்லியுள்ளார். அவர் சொல்லி, இரு நாட்கள் கழித்து, இப்போது தான் நான் பார்க்கின்றேன். அதற்குள் நிறைய மக்கள் வந்து பார்த்து விட்டு, என்னை வாயாற வாழ்த்தி விட்டு சென்றதை, விருந்தினர் எண்ணிக்கை காட்டி விட்டது. வெற்றிகரமாக இரு இலக்க எண்ணிக்கை கொண்டுவர உதவிய சோ.பையனுக்கு நன்றி.

இந்த விமர்சனங்களுக்கு நான் மதிப்பெண் கொடுக்கப் போவதில்லை. எனது படைப்புகளும் இம்மாத போட்டியில் கலந்து கொண்டிருப்பதால், மதிப்பெண் கொடுப்பது முறையல்ல எனக் கருதுகிறேன்.

அய்யா!, கொஞ்சம் கருணை காட்டுங்கய்யா!!”, (தேன் கூடு போட்டிச் சிறுகதை)

+:
மாமியாரை வழியனுப்ப வருகின்றவர், உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று நினைக்கின்ற மூதாட்டியை, பிச்சைக்காரர் என்று தவறுதலாய் நினைத்து, பின் உண்மையை உணர்கிறார். தவறுதலாக நினைக்கையில் வெறுப்பும், பின் உண்மை அறிகையில், முன்பு தவறுதலான நினைப்பிற்கான பரிகாரமாக பரிதாபம் கொள்கின்ற இயல்பான மனித மன நிலையை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

'கண்ணால் காண்பது பொய், தீர விசாரிப்பதே மெய்' என்பதை உணர்ந்து, நாயகன் ஒரு நிலையிலிருந்து, அடுத்த நிலைக்கு உயர்கிறான் என்று, போட்டித் தலைப்புக்கு கொண்டு வருகிறார், ஆசிரியர். நல்ல படைப்பு.

-(என்று நான் நினைப்பது):

'ஒரு தீர்மானத்தோடு இரயில் நிலையம் விட்டு புறப்பட்டேன்'

நாயகன் அப்படியென்ன தீர்மானத்திற்கு வந்தார் என்பதைக் கூறவில்லையே...! ஒரு வேளை பதிவு நுகர்வோர் கருத்துக்கே விட்டுவிட்டார் போலும். (எனக்குத் தான் புரியவில்லையோ.. ;-))

போட்டிக்கான கால அவகாசம் வெகு வேகமாக குறைந்து வருவதை உணர்ந்தோ, என்னவோ ஆங்காங்கே சிற்சில எழுத்துப் பிழைகள். அவை கதை குறிக்க வந்த கருத்தில் மாற்றம் ஏற்படுத்தாதலால், மன்னிக்கக் கூடியனவே.

'அ.கொ.க.கா' : கருணைக் கிழங்கு.


எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?

நம்ம ஊர்ப் பக்கத்தில் 'பேரைக் காப்பாற்றும் பிள்ளை' என்பார்கள். அப்பா பேரையோ, அப்பா வைத்த பேரையோ பிள்ளை காப்பாற்றினால், அப்படிச் சொல்வார்கள். 'யோசிப்பவர்' அப்படிப்பட்ட பிள்ளை போல. தானே வைத்துக் கொண்ட பேரானாலும், நம்மையும் அப்படி சொல்ல வைத்து உள்ளார்.எல்லாரும் கார், பைக், சைக்கிள், எருமை மாடு (தம்பட்டம்..?) என்றெல்லாம் லிப்ட் கேட்டுக் கொண்டிருக்க, கால இயந்திரத்திற்கே லிப்ட் கேட்டுள்ளார் நாயகன்.

கதைச்சுருக்கம் வேண்டாம். போய்ப் படித்துப் பாருங்கள். வித்தியாசமான சிந்தனை. லாஜிக்கலான திருப்பங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின்(?) இறுதியிலும் லிப்ட் கேட்பது போல் முடித்திருப்பது ஒன்றே, நமக்கு இது 'லிப்ட்'க்கான கதை என்று நினைவுபடுத்துகிறது. அருமையான சிந்தனை.

'எ.மீ.கொ.லி.கி': படைத்தவரின் பெயரைக் காப்பாற்றிய அறிவியல் குழந்தை.

Tuesday, September 19, 2006

மெளனம் கலைந்தே ஓட..

சில்லென்று மழைத் தூறல் அடித்துக் கொண்டிருந்தது. துளிகள் பாதையோர சின்னச் சின்னச் செடிகளில் இருந்து சொட்டிக் கொண்டிருந்தன. மஞ்சள் வண்ணப் பூக்கள் வீசுகின்ற மென் தென்றலுக்கு லேசாக ஆடிக் கொண்டிருந்தன..

ஒவ்வொரு முறையும் மழையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் காத்திருக்கையில் நான் இப்படி நினைப்பதுண்டு. ஆனால் இங்கு மழை ஒருபோதும் இப்படி பெய்ததில்லை.

திறந்திருக்கும் பாதாள சாக்கடை மூடிகளைத் தாண்டி வழிந்து ஓடும். ரோட்டோரங்களில் தேங்கி எண்ணெய் நிறங்களைக் காட்டும். அடித்த வெயிலைக் கிளப்பி விட்டு, நச நசவென இருக்குமாறு செய்யும்.

சென்னை மழை.

ஒரு செப்டம்பர் மாத மழை நாள்.

நான் அருண். டைடலில் வெட்டி, ஒட்டிக் கொண்டிருக்கிறேன். இன்று மதியம் ராம்கோ வரை வந்தேன். அங்கே என் கல்லூரி நண்பன் ஆனந்தைப் பார்த்து, அருகில் இருக்கும் ஆந்திரா மெஸ்ஸில் மதிய உணவை முடித்து வருகையில், மழை தூற ஆரம்பித்தது.

TVS விக்டர் சர்வீஸுக்கு விட்டு விட்டேன். ஆனந்த் ட்ராப் செய்வதாகச் சொன்னதால், நம்பி வந்தேன். சாப்பிட்டு விட்டு வந்தால் கிளையண்ட் மீட்டிங் என்று கழண்டு விட்டான். அவனை....

நல்ல வேலை, அவனது புராஜெக்ட் மேட் ஒருவரிடம் லிப்ட் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறான். அவருக்கும் டைடலில் ஏதோ வேலை இருக்கிறதாம். அவருடன் வந்ததில், மத்திய கைலாஷ் சிக்னலில் மாட்டிக் கொண்டோம்.

ஆனந்த் அவன் ஜெர்கின் குடுத்திருந்தான். அதைத் தான் இப்பப் போட்டுக்கிட்டு இருக்கேன்.

மழை சரியாகப் பிடித்துக் கொண்டது. ஆனந்த் ஜெர்கினும் நனைந்து விட்டது. நாளைக்குத் திருப்பிக் கொடுக்கணுமாம். போடானு சொல்லிட்டேன். வேணும்னா வீட்டுக்கு வந்து வாங்கிக்கட்டும். மதியம் 2.30க்கு சென்னையில் இப்படி ஒரு மழையில் மாட்டிக் கொண்டேன் என்று ஊரில் சொன்னால் நம்புவார்களா..? ஆர்த்தி நம்புவாளா..? ஆர்த்தி யார்னு கேக்கறீங்களா? வர்ற சனிக்கிழமை பொண்ணு பார்க்கப் போறோம். எனக்குத் தான். இன்னும் அம்மாகிட்ட சனிக்கிழமை போகலாம்னு சொல்லல. இன்னிக்கு நைட் தான் சொல்லப் போறேன்.

இங்க சிக்னல் போட மாட்டேங்கறான். மழையில நின்னுக்கிட்டு இருக்கோம். லிப்ட் குடுத்தார்ல,அவரு ரொம்ப ஜாலி டைப் போல. ராம்கோல ஏறுனதுல இருந்து ரொம்ப கலகலப்பாகப் பேசிக் கொண்டு வந்தார்.

இதோ.. சிக்னல் போட்டுட்டான். நல்ல மழை பெய்யறதால, எல்லாரும் பாய்ஞ்சு முன்னாடிப் போகப் பாக்கறாங்க. எங்க பைக் திருப்பத்துல திரும்பியது. எதிர்பார்க்காத நேரத்தில, எதிர் வரிசையில இருந்து, ஒரு பைக்காரன் எங்க பக்கம் வேகமா வந்தான். நாங்க சடன் ப்ரேக் போட்டோம். வண்டி பயங்கரமா ஸ்லிப் ஆகுது. நான் அப்படியே வழுக்கி விழுந்து, தரையைத் தேச்சுக்கிட்டே போறேன்.

"ணங்..."

தலை எதிலயோ பயங்கரமா மோதியிருக்குனு புரியுது. கண்ணு வேகமா இருட்டுது. அப்படியே தலையைப் பிடிச்சுக்கிட்டே சுருண்டு போறேன்.

"எப்பத்தான் இந்த இரும்பு உருளையெல்லாம் எடுப்பாங்களோ, தெரியல. இந்த பறக்கும் ரயில் வந்தாலும் வந்தது. மாசத்துக்கு ரெண்டு ஆக்சிடென்ட் நடந்துக்கிட்டே இருக்கு.."

யாரோ சொல்றது லேசா காது விழுது. அம்மா, அப்பா, புவனா எல்லாரும் கண்ணுல வர்றாங்க. ஆர்த்தி.. எனக்கு அடிபட்டதுனு தெரிஞ்சா அழுவாளா..? மயக்கம் வர்ற மாதிரி இரு....

12.Sep.2006
செவ்வாய்.


ன்னிக்கு டைரியில என்ன எழுதலாம்? தினமும் எனக்கு என்ன தோணுதோ அதை எழுதுவேன். இன்னிக்கு தோணறது எல்லாம் எழுதினா, அவ்வளவு தான். நாளப்பின்ன யாராவது கைக்குப் போய், படிச்சுப் பார்த்தாங்கன்னா, மானமே போயிடும். ஒண்னும் பெருசா நினைக்கல. கொஞ்ச நாள்ல என்னைப் பொண்ணு பார்க்க வர்றதா சொல்லியிருக்காங்கனு தரகர் அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தாரு. போட்டோ நாளைக்குத் தர்றாராம். 'அவர்' எப்படி இருப்பாருனு நினைச்சுப் பார்த்துட்டு இருந்தேன். வேறொண்ணுமில்ல.

எப்படி இருப்பாரு? அஜீத் மாதிரி சிவப்பா.... விஜய் மாதிரி ஸ்டைலா இருப்பாரா? இல்ல பழைய கமல் மாதிரி ஸ்லிம்மா இருப்பாரா..? ஆமா.. இப்படி எல்லாம் இருந்தாருனா, அவரு ஏன் சொந்த ஊருல இருக்கிற என்னைத் தான் கட்டிக்கணும்னு இருக்கணும்? என் மூஞ்சியைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னாராம். அவர் வேலை பார்க்கிற சென்னையில இல்லாத அழகுராணிங்களா? எப்படியோ நல்லவரா இருந்தா சரி. ராணிக்காவை அடிச்சுத் துரத்தின அவங்க புருஷன் மாதிரி இல்லாம எப்பவும், என் கூடவே அன்பா இருந்தா அது போதும்.

அம்மா 'ஆர்த்தி..ஆர்த்தி'னு கூப்பிடற மாதிரி இருக்கு. அம்மாக்கு இதே வேலையா போச்சு. இவ்ளோ வருஷமா தெரிஞ்சுக்காத சமையலை இந்த ஒரு வாரத்துல கத்துக் குடுக்கணும்னு நினைக்கிறாங்க.சரி, அவங்க கவலை அவங்களுக்கு. இதோட இன்னிக்கு முடிச்சுக்கிறேன். குட் நைட் டைரி.

லை 'கிண்ணு கிண்ணு'னு வலிக்கிற மாதிரி இருக்கு. எங்க இருக்கேன்னு தெரியல. தலைல யாரோ பெரிய சுத்திய வெச்சு அடிக்கிற மாதிரி இருக்கு. கை, கால்ல எல்லாம் எரியற மாதிரி இருக்கு. மெல்ல கண்ணைக் கசக்கி நினவுக்குத் திரும்பறேன். என்ன நடந்தது? ஒண்ணும் ஞாபகம் வரலை.டெட்டால் வாசனை வருது. ஆஸ்பிடலா தான் இருக்கணும். வீட்டுக்குச் சொல்லியிருப்பாங்களா? பக்கத்து வார்டுல இருந்து லேசா, ரொம்ப லேசா பாட்டு மட்டும் கேக்குது. FM-ஆ இருக்கணும்.

ஆர்த்திக்கு தெரியுமா..? அய்யய்யோ.. எவ்ளோ நாளா இப்படி இருக்கேன்னு தெரியலயே.

மெல்ல கண்ணைத் திறக்க முயற்சி பண்றேன். முடியல. ரெண்டு இமைகள்லயும், பாறாங்கல்லு வெச்சுக் கட்டுன மாதிரி இருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டுத் திறக்கறேன். அம்மா பக்கத்து சேர்ல உட்கார்ந்திட்டு தூங்கறாங்க. அப்பா பக்கத்திலயே உட்கார்ந்திட்டு இருக்கார். நான் 'அப்பா'னு கூப்பிட முயற்சி பண்றேன். பாத்திட்டார். ஏதோ சொல்லிட்டே கிட்ட வந்தார். மறுபடியும் மயக்கம் வர்ற மாதிரி இருக்கு.

15.Sep.2006
வெள்ளி.

ரெண்டு நாளா அம்மாகூட இருந்து கொஞ்சம் சமைக்கக் கத்துக்கிட்டதனால உன்கிட்ட எதுவும் சொல்ல முடியாமப் போயிடுச்சு. ஸாரி, என்ன?

நேத்து தான் தரகர் 'அவர்' போட்டோ கொண்டு வந்தார். எல்லார் கைக்கும் போய்ட்டு, அப்புறம் தான் என் கைக்கு வந்துச்சு. அதைத் தர்றதுக்குள்ள மீனா பண்ண அழிச்சாட்டியம் இருக்கே.. அப்பப்பா. இருக்கட்டும், அவ கல்யாண சமயத்துல நானும் இந்த மாதிரி போட்டோவை தராம இழுத்தடிச்சிடறேன். ஆமா.. அப்ப நான் இந்த மாதிரி சின்னபுள்ள மாதிரி விளையாடுவனா என்ன? என் குழந்தைங்க தான் விளையாடும்.

பொண்ணே பார்க்க வரல. இவ பாரு, குழந்தைங்க வரைக்கும் போய்ட்டானு நீ நினைக்கிறது புரியுது.

இதெல்லாம் உன்கிட்ட தான் சொல்ல முடியும். என் பிரண்ட்ஸ்கிட்ட சொன்னா, அவ்வளவு தான். என்னை ஓட்டிக் கிழிச்சுத் தோரணம் கட்டித் தொங்க விட்டிடுவாங்க. 'அவர்' பத்திச் சொல்லுங்கிறயா..? சரி சொல்றேன். உனக்கும் இவ்ளோ ஆர்வமா?

நல்லா தான் இருக்காரு. என்ன, கொஞ்சம் என்னை விட கலர் கம்மி. ஆமா, என்னை மாதிரி 'காலேஜ் முடிச்சு வீடுக்கு வந்தமா, கல்யாணத்துக்கு நாள் குறிச்சமா'னா ஆம்பளைங்க இருக்க முடியும்? நாலு இடத்துக்கு அலையணும். அதனால கொஞ்சம் கலர் கம்மியா இருக்கார்.

அதனால என்ன, கல்யாணம் ஆகட்டும். சிகப்பாக்கிட மாட்டேன்..?

ஓ.கே. அம்மா மறுபடியும் கூப்பிடறாங்க... குட் நைட், டைரி.

மெல்ல கண் விழிச்சுப் பார்த்தேன். அம்மா, அப்பா,புவனா கூட இருக்கா. அழுது, அழுது கண் எல்லாம் சிவந்திருக்கு. பக்கத்துல டாக்டர்ஸ் எல்லாம் இருக்காங்க.

"இப்ப, ஒண்ணும் பிராப்ளம் இல்ல. ரெண்டு ஆபரேஷன் பண்ணியிருக்கோம். பிழைச்சுக்கிட்டார். அருண், நான் சொல்றதை உங்களால கவனிக்க முடியுதா..? Can you hear me..?"

டாக்டர் தான் கேட்கிறார். மெதுவாகத் தலையசைத்தேன். எழுந்து உட்கார்ந்தேன். வழக்கமான அழுகையெல்லாம் முடிந்து, ஜூஸ் குடிக்க ஆரம்பித்த போது, கதவு திறந்தது. போலிஸ் உடுப்பில் ஒருவர் வந்தார். இன்ஸ்பெக்டர்னு நினைக்கிறேன்.

"ஆர் யூ ஆல் ரைட்,மிஸ்டர்.அருண்..?" கேட்டுக் கொண்டே அருகில் இருந்த சேரில் அமர்ந்தார்.

"கொஞ்சம் நல்ல இருக்கேன் சார்"

"ஓ.கே. ஒரு சின்ன விசாரணை, இந்த விபத்தைப் பற்றி.."

விபத்துனு சொன்னப்புறம் தான் எனக்கு 'சுரீர்'னு ஆச்சு. எனக்கு லிப்ட் குடுத்தவர் என்ன ஆனார்? அவர் பேர் கூட எனக்கு ஞாபகம் வர மாட்டேங்குது. யோசிக்கிறேன். ரேடியோல யாரோ பேசற குரல் கேட்குது.

'..இந்த நேயர்கள் விருப்பத்திற்கானப் பாடலைப் பாடுபவர்கள் எஸ்.பி.பி மற்றும்..'

எஸ்.பி.பி...

பாலசுப்ரமணியம்.

ஆமா.. ஆனந்த் இருவரையும் அறிமுகப்படுத்துறப்போ, இந்தப் பேர் தான் சொன்னான். திடுக்கிட்டு அமர்ந்தேன்.

"சார்.. என்கூட வண்டியில வந்தவர் என்ன ஆனார்..?"

"ரியலி வெரி ஸாரி டு சே திஸ். உங்க கூட விபத்தில அவருக்கும் பலமான அடிபட்டு, தலை அங்கேயே உடைஞ்சு, ஏகப்பட்ட ப்ளட் லாஸ். ஸ்பாட் டெத். அவரைப் பத்தி விசாரிக்கத் தான் இந்த சின்ன விசாரணை.."

எனக்குத் தலையைச் சுற்றியது.

நிறைய பேசிக் கொண்டு வந்தார். அடுத்த வாரம் பெண் பார்க்கப் போவதாகச் சொன்னாரே..

மெல்ல கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன்.

16.Sep.2006
சனிக்கிழமை.

எல்லாரும் இப்பெல்லாம் நான் சரியா யார்கூடயும் பேச மாட்டேங்கறேனு அம்மாகிட்ட புகார் சொல்றாங்க. பேசினா ஏதாவது கிண்டலா ஓட்டுவாங்க. அதனால நான் மெளனமா இருக்கேன். 'அவர்' வரட்டும். அவர்கிட்ட மட்டும் தான் பேசுவேன். நீ கவலைப்படாத. உன்கிட்ட மட்டும் எப்பவும் போல பேசறேன், சரியா?

அவர் பேர் என்னனு கேக்கறியா? 'சீ போ! எனக்கு வெட்கமா இருக்கு'னு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனாலும் கொஞ்சம் ஒருமாதிரியாத் தான் இருக்கு. க்ளூ சொல்றேன். நீயே தெரிஞ்சுக்கோ. எஸ்.பி.பி. இன்னும் புரியலயா? முழுப் பேர் சொல்ல மாட்டேன். நானா வெச்சுக் கூப்பிடப் போற செல்லப் பேர் மட்டும் சொல்றேன். யார்கிட்டயும் சொல்லிடாத.

'பாலு'.

நல்லாயிருக்கா? நல்லாயில்லாம இருக்குமா என்ன?

இன்னும் பொண்ணு பார்க்க வரலை. வந்தா கண்டிப்பா உனக்கு அவரைக் காட்டறேன். சரி, அப்பா 'ஆர்த்தி, ஆர்த்தி'னு கூப்பிடறா மாதிரி இருக்கு. குரல் உடைஞ்சு போயிருக்கு. கேட்டு வந்துட்டு என்னனு சொல்றேன். குட் நைட், டைரி.

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)