Thursday, February 06, 2014

மின் குடுவையில் மிதக்கும் கடல்.

ற்றையாய்த் தனிமையில் உறங்கத் தொடங்கியது சில காலங்களுக்கு முன் தான் கழண்டு விழுந்த ஒரு மின் குடுவை. அதன் ஒரு காலத்திய மெல்லிடை பெருத்துப் போன பின், அடைக்கலம் தேடி வந்த மாகடல் ஒன்றை அதனுள் அடக்கிக் கொண்டது. வெண்மையான நுரைகளைக் கிழித்துக் கொண்டு வந்த காட்டுமரக் கட்டுமரம் ஒன்றின் நுனியில் சிறகு குவித்திருந்த ஊர் தெரியாக் கூர்நாசி நாரை, கண்ணாடித் திரை மேல் முட்டிக் கொண்டது. வேருக்குத் தெரியாமல் மரத்தை விட்டு ஓடி வந்த இளம் இலைகள் இரண்டு, நூறாயிரம் லட்சோபலட்சம் கோடானுகோடி துளிகளால் அலைந்து அலைந்து நனைந்து நனைந்து பாதரசம் கரைந்து உருவாகியிருந்த ஒரு சிறு தீவில் ஒதுங்கிச் சருகாகும் நொடிக்குக் காக்கத் தொடங்கின.

கடல் தின்று செரித்திருந்த உயிர்கள் தம்முள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கரைக்கு அனுப்பத் தீர்மானித்தன. அறிவிலும் புத்தியிலும் நடைமுறை ஞானத்திலும் சாமர்த்தியத்திலும் தந்திரத்திலும் சிறந்த முயலை அனுப்பலாம் என்றது பசியோடு காத்திருந்த புலி ஒன்று. அறிவிலும் புத்தியிலும் நடைமுறை ஞானத்திலும் சாமர்த்தியத்திலும் தந்திரத்திலும் சிறந்த, முயலை அனுப்பலாம் என்றது பசியோடு காத்திருந்த புலி ஒன்று. சரம் சரமாய்த் தொங்க விடப்பட்டிருந்த மின்மினிப் பூச்சிகள் ஒன்றையொன்று அடையாளம் கண்டு கொண்டு முத்தமிட்டுக் கொண்ட போது, ரேடியம் ஒளிக் கீற்றுகள் புறப்பட்டு, உடனே ஈரமாகி, பவளப் பாறை ஒன்றின் பின்னால் பதுங்கிய போது செம்பிழம்பு போல் ஒளிர்ந்தது பாறை.

மாவாக் கொத்து ஒன்று யாராலோ உமிழப்பட்டு உருண்டு வழிந்து சென்றது. தீர்மானம் இன்றி நீர்மானம் காக்க சரியான சேர்மானம் கொண்ட இரு தனிமங்கள் தொட்டுக் கொண்ட போது, பிரளயப் பெரு வெடிப்பு நிகழ்ந்து, எல்லோரும் தரையில் குதித்தார்கள்.

உறக்கம் கலைந்த பல்பு புரண்ட போது மஞ்சள் வெளிச்சம் அதன் வளைந்த வெளியெங்கும் சுயம்பிரகாசமாய்ச் சுடர் விட்டு எழுந்தது.

கங்கைக் கரையில் அற்ப மானிடர்கள் 'அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:' என்று விழுந்து கும்பிட்டார்கள்.