Friday, February 29, 2008

சுஜாதா - அஞ்சலி 2.



சுஜாதாவின் குரல் கேட்க.

ர் எழுத்தாளரின் மறைவுக்கு இவ்வளவு வருத்தம் ஏற்படுமா என்பது எனக்கே வியப்பாக இருக்கின்றது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். சக பதிவர்களின் பதிவுகளைப் படிக்கையில் கண்களில் நீர் துளிர்க்கின்றது. அனைவரும் எந்தளவிற்கு துக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது விளங்குகின்றது.

ரு படைப்பை அனுபவிக்கும் போது நமது உணர்வுகள் அந்த படைப்பின் வழி பயணம் செய்கின்றன. ஆனால் எந்த அளவிற்கு அவ்வுணர்வுகளோடு அப்படைப்பு பின்னிப் பிணைகின்றது என்பதைப் பொறுத்து தான், அதன் விளைவுகளோ/ பாதிப்புகளோ நம்மில் விளைகின்றது.

ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது, அதன் வழி நாமும் பயணிக்கிறோம். ஆனால் அதன் பாதிப்பு அவ்வளவு அற்புதமாக வருவதற்கு பலருடைய உழைப்பு தேவைப்படுகின்றது. அருமையான காட்சியைச் சிந்திக்கும் இயக்குநர், மனதின் அடியாழத்தோடு ஊடுறுவும் வகையில் இசையமைக்கின்ற இசையமைப்பாளர், காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவாளர் என் பலர் தேவைப்படுகின்றனர். இவற்றுள் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தால், அதன் பாதிப்பு தக்கன அமையும்.

ஆனால் எழுத்தின் வழி பயணிப்பதற்கு எழுத்தாளரின் கற்பனை வளம் மட்டுமே போதுமானது. மிகச் சுலபமாக நம்மை தனது தளத்திற்கு இழுத்துச் செல்லாமல், அழைத்துச் செல்கின்ற நடை இருக்கும் போது நமது பயணம் என்றும் மறவாமல் இருக்கச் செய்கின்றது.

ஒரு கதை படிக்கும் போது, நமக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நம்மை நாம் உருவகப்படுத்திக் கொள்கிறோம். பெரும்பாலும் கதாநாயகன். அவனது எண்ணங்களில் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அவனது வாழ்க்கை நிகழ்வுகள், சம்பவங்களில் நம்மை நாம் காணும் போதோ, நாம் செய்ய விரும்புகின்ற செயல்களை அவன் செய்யும் போதோ நாம் மிகச் சுலபமாக கதையோடு நம்மை ஐக்கியப் படுத்திக் கொள்ள முடிகின்றது.

அத்தகைய பெரும்பான்மையான கதைகளை எழுதியவர் சுஜாதா என்பதில் மறுப்பில்லை.

துப்பறியும் நாவல்களின் கணேஷ் - வசந்தாகவோ, தேஜஸ்வினியில் தேஜஸ்வினியாகவோ, அவளது தகப்பனாகவோ, 'மாஞ்சு'வில் மாஞ்சுவாகவோ, அவனது தம்பியாகவோ, அவர்களது அம்மாவாகவோ, ஆராவமுதனாகவோ, 'பிரிவோம் சந்திப்போம்'ல் மதுமிதாவாகவோ, 'ஆ'வில் அந்த நோய் வந்து தவிக்கின்ற நாயகனாகவோ, 'ரங்கத்து தேவதைகளில்' கிச்சாவாகவோ, பாச்சுவாகவோ, டீக்கடை வைத்திருக்கும் நாயராகவோ, லால்குடி பாஸஞ்சரில் பயணிக்கும் ரங்கத்து சிறுவனாகவோ தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் அந்தச் சூழலோடு தம்மை இணைத்துக் கொண்டவர்கள், சுஜாதாவை மறக்க முடியாது.

படைப்பாளிகளுக்கு மரணம் என்று இருக்க முடியுமா என்ன? கம்பனுக்கும், மகாகவி பாரதிக்கும் மரணம் வந்து விட்டதா என்ன? அது போல் சுஜாதாவின் எழுத்துக்கள் இருக்கும் வரை அவர் மரணித்து விட்டதாக கூற முடியுமா?

பாரதிக்கும், புதுமைப்பித்தனுக்கும் பிறகு தமிழ் உரைநடையில் ஒரு பெரும் புரட்சியும், மாற்றமும் கொண்டு வந்தவர் சுஜாதா என்பது பிற பதிவுகளைப் படிக்கையில் தெரிகின்றது.

அவரது இயல்பான மாறுபட்ட களங்களை இணைக்கின்ற திறமை அதில் முக்கியமான ஒன்றாகப் படுகின்றது.

காஷ்மீர் தீவிரவாதம் பற்றி, சுந்தரபாண்டியபுரத்தின் சின்னப்பெண் மூலம் சொல்ல வைக்கும் போதும், இலங்கைப் பிரச்னையைப் பற்றிச் சொல்ல முயல்கையில் சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் மூலமாகக் கூற வைக்கும் போதும், ஒரு தீவிரமான மனதுக்குள் குரல் கேட்கும் வியாதியை, திருச்சியில் ஒரு காலத்தில் நடந்த கள்ளக் காதலுடன் இணைக்கும் போதும் (ஆ..!), 'ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி' யை திருவல்லிக்கேணியின் பிராமண சாது இளைஞனின் மனதுக்குள் வைத்து பிராண்ட வைக்கும் போதும், அரசு இயந்திரத்த்கின் செயல்களை, ஒரு சாதாரண டி.வி.காமிராமேனின் வாழ்வின் நிகழ்வுகளைக் கொண்டு சொல்லும் போதும், புரியாத நோய் ஒன்றை கிராமத்துப் பெண்ணின் மனதைக் கொண்டு சொன்ன விதமும் (மதுரை), எளிய சொற்கள் மூலம் கணிப்பொறியியலை அறிமுகம் செய்து வைக்கும் போதும் வாசகனின்/ ரசிகனின் மனதுக்கு கொஞ்சம் இளைப்பாற்றல் தருகிறார்.

'கொஞ்சம் புரியாதது போல் இருக்கிறதே' என்று மனம் கொஞ்சம் சலிக்கும் போது, சடாரென வாசகனின் மனதுக்கு நெருக்கமான சூழலைக் கொண்டு வந்து சேர்க்கும் போது, அவனது மனம் மீண்டும் ஆர்வத்தைப் பற்றுகிறது. மீண்டும் கதைப்பயணம் தொடர்கிறது. சுஜாதாவின் வெற்றிக்கும், அவர் இத்தனை பெரும் வாசகர்களைப் பெற்றிருப்பதற்கும் (பெற்றிருந்ததற்கும்... ;-( ) அவர் எந்தப்புள்ளியில் இந்த தள மாற்றம் செய்ய வேண்டும் என்பது உணர்ந்திருப்பது தான். (உணர்ந்திருந்தது..;-( ) (கடந்த காலத்தில் எழுதவே வர மாட்டேன் என்கிறது. இன்னும் அவர் இறந்து போனார் என்பது எட்டவே இல்லை. 'கற்றதும் பெற்றதும்' இல்லாத விகடனைக் காணும் போதும், 'சுஜாதா பதில்கள் ' இல்லாத குங்குமம் காணும் போது தான் அந்த வெற்றிடம் புரியும் என்று தோன்றுகிறது.) அந்த இரு தளங்கள் எவையெவையாக இருக்க வேண்டும், அதன் கூட்டிணைவு எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்ற மிகச் சரியான விகிதாச்சாரம் தெரிந்து வைத்திருந்ததும், அவற்றை மிகச் சரியாகக் கூர்மையாக செய்ததும் தான்.

அவரது இந்த இயல்பே, தொழில்நுட்பத்தையும், பழந்தமிழையும் இணைக்க வைத்தது என்றும், அதற்கு அவரது பிராமண திருவரங்கக் குடும்பப் புலமும், தொழில் நுட்பத்தின் பொறியியல் பின்புலமும் தளமாக அமைந்தது எனலாம். அந்த Mentality, பலதரப்பட்ட மாறுபட்ட களங்களை சேர்த்து வைத்து கதைகளை, திரைக்கதைகளை அமைக்க வைத்தது எனலாம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையும், ஆழ்வார்களையும் ஒப்பிட்டுப் பார்த்து அதனை தமிழில் பொழிவதற்கு அவருக்கு தமிழின் மீதிருந்த ஆர்வமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

சுஜாதா என்ற மிகப்பெரும் எழுத்தாளரை, விஞ்ஞானியை, எளிய முறையில் அணுக முடிந்த மனிதரை, நடைமுறையின் கதைகளை எழுதிய கற்பனைச் சுரங்கத்தை அளவிட்டுப் பார்ர்க எழுந்த முயற்சி அல்ல. அதற்கான தகுதியும், வயதும் இல்லாதவன் நான் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். எனினும் எனக்குத் தோன்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இதை எழுதுகிறேன்.

அவரது பல்துறைத் திறமும், ஆர்வமும் அவர் ஒரு யுக மனிதர் எனச் சொல்ல வைக்கின்றது. அவரது பலதுறை நடைமுறை வசனங்கள் பல துறைகளின் தின வாழ்வைக் காட்டுகின்றன. முக்கியமாக கணேஷ் - வசந்த் மூலம் நீதிமன்றங்களில் என்ன நடக்கின்றது, அதன் தின வசனங்கள் எப்படி இருக்கும் என்பதை எனக்குத் தெரிய வைத்தது.

பல கதை எழுத்தாளர்களின் கதைகள் காலப்போக்கில் பிடிக்காமல் போய் விட, இன்னும் தொடர்ந்து வருகின்றது சுஜாதாவின் எழுத்து என்பதில் அவரது திறன் புலனாகின்றது. காலத்திற்கேற்ப மாற்றம் கொண்ட கதை உலகமும், தீராத, குறையாத கற்பனை வளமும் அவரது தொடர் வெற்றிகளுக்கு காரணம்.

யா, நாம் ஒருபோதும் நேரில் கண்டதில்லை என்ற போதும் உங்களது கதைகள், கட்டுரைகள், பேட்டிகள் வழியாக இது நாள் வரை உங்களோடு தொடர்பு வைத்திருந்தோம். இனிமேல் உங்களது ஸ்தூல உடல் இங்கு இருக்கப் போவதில்லை எனினும், எழுத்துக்கள் வழி நீங்கள் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கத் தான் போகிறீர்கள் என்பதிலும் இனிவரும் எத்தனையோ தலைமுறைகளோடும் உங்களது உரையாடல்கள் காலங் காலமாக உரையாடிக் கொண்டே இருக்கும் என்பதிலும், சந்தேகமென்ன?

நீர் எங்களுக்குச் சொல்லுவதற்கென எத்தனையோ கதைகளைப் புதைத்து வைத்து வாடுகின்றன திருவரங்கத்தின் காவிரிக் கரையும், வானியலின் செவ்வாய்க் கிரகமும்..! கண்களில் பொங்குகின்ற கண்ணீர் மறைக்கின்றது எழுத்துக்களை..! செழுந்தமிழ் மகனே சென்று வாரும்..! நீர் சொல்வதைக் கேட்பதற்கென திறந்த காதுகளைக் கொண்டு காத்திருக்கும் தமிழ்த் தலைமுறைகள் என்றென்றைக்கும்...!

Thursday, February 28, 2008

சுஜாதா - பெயர் தந்த படைப்பாளி.



ரு பிரபலமான எழுத்தாளர் என்பதையும் தாண்டி தனிப்பட நெருக்கம் கொள்ள எத்தனை காரணங்கள் உள்ளன எனக்கு!!

பையன் பிறந்த பின் என்ன பெயர் வைக்க என்று குழம்பாமல், சுஜாதாவின் 'வசந்த்' போல் வர வேண்டும் என்று பெயர் வைத்தார்கள். அப்படி எனக்கு பெயர் தந்த படைப்பாளி அல்லவா அவர்?

நேற்று இந்த பதிவை எழுதி விட்டு, இன்று காலையில் ஹிந்துவைப் புரட்டினால், அதிர்ச்சி. ஒன்றுமே ஓடவில்லை. அலுவலகத்தில் சென்று சேர்ந்து, ஒரு வேலையும் நடக்கவில்லை. 'வயிற்று வலி' என்று சொல்லி விட்டேன். உண்மையில் வலி தானே..!!!

ள்ளியில் படிக்கும் போது 'நவீன தமிழ்ச் சிறுகதைகள்' என்று ஒரு புத்தகம் பரிசாகக் கொடுத்தார்கள். அதில் படித்த சுஜாதாவின் 'நகரம்' என்ற சிறுகதை அத் தொகுப்பில் படித்த பல சிறுகதைகளில் வித்தியாசப்பட்டு இருந்தது.

அறிமுக பாராவில் மதுரையைப் பற்றிக் கூறும் போது, அவரது எழுத்து எங்கெங்கோ சென்று பறந்து, பின் நடைமுறைக் காலத்திற்கு வந்து நிற்கும். அக்கதை அவரைப் பற்றிய ஓர் இரகசிய வாசலைத் திறந்து வைத்தது என்றால் மிகையில்லை. அதற்கு முன்பே அவரது கதைகள் படித்திருக்கலாம். சரியாக நினைவில்லை.

ஆனால் அவரது கதைகள் பிறரது கதைகளில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பது புரிந்தது. சின்னச் சின்ன வாக்கியங்கள், அலட்சியமாகப் பேசும் கதாபாத்திரங்கள், சட் சட்டென தாவும் சூழ்நிலைகள் என்று அவரது கதைகளின் வழி அவரது திறன் புரியலானது.

தூர்தர்ஷனில் 'என் இனிய இயந்திரா' காணும் போது பிரமிப்பாய் இருந்தது. '90களில் இப்படி ஒரு சிந்தனை எத்தனை பேருக்கு இருந்திருக்கும்? பெரும்பாலோர் காதலையும், குடும்பச் சிக்கல்களையும் பொட்டு அவிழ்த்துக் கொண்டிருக்கையில் வளரும் சிறுவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டன சாகசக் கதைகள் மூலம் அவரது எழுத்துக்கள்.

விகடனும், குமுதமும் தொடர்ச்சியாக வாங்கத் தொடங்கிய பின் படித்த 'பிரிவோம் சந்திப்போம்', கற்றதும் பெற்றதும் முதல் பாகம் அவரின் பிரம்மாண்டத்தை அனுபவங்கள் வழி அலசிப் போடும் இலாவகம் எல்லாம் அவரது திறமையையும் தீராத தேடலையும் படம் போட்டுக் காட்டின.

குமுதத்தில் வந்த 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' என்னை மிகவும் பெருமை கொள்ளச் செய்தது என்பதில் எனக்கு மகிழ்வே!

சுஜாதாவின் கதைகளில் மிளிரும் இளமையும், கவர்ச்சியும், துள்ளலும் எத்தனை பரவசத்தை அளிக்குமோ அதற்குச் சிறிதும் சளைக்காது கவர்ச்சி தூக்கலாக படம் வரைந்த ஓவியர் ஜெ., கதைகளின் போக்கிற்கெ வாசகனைக் கொண்டு வந்து விடுவர். சுஜாதா - ஜெ காம்பினேஷன் எத்தனை கதைகளில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன...!

குமுதம் ஆசிரியரான காலத்தில், ஒரு வருடம், குமுதத்தின் முகத்தையே மாற்றி வைத்தார். இரவில் பூக்கும் குமுத மலரை அடையாளமாகக் கொண்டிருந்த குமுதத்திற்கு இளமையைக் கொண்டு வந்தார். ஆனால் எழுத்தாளர் ஒருவர் ஒரு கூட்டுக்குள் அடைய வேண்டி வந்ததன் இழப்புகள் அவரை மீண்டும் சிறகடித்துப் பறக்கும் பறவையாக்கின.

குமுதத்தில் எழுதிய 'படித்தவர்க்கும் பாமரர்க்கும் கணிப்பொறி', கணிப்பொறியே அறியாத இக் கிராமத்துச் சிறுவனுக்கு சிலிக்கான் சில்லுகள் பற்றிய ஓர் எளிய அறிமுகத்தைக் கொடுத்தது.

ஜூ. வி. -ல் வந்த 'ஏன்? எதற்கு? எப்படி?' என்ன ஓர் அற்புதத் தொகுப்பு! சிக்கலான கேள்விகள் மூலமும், எளிய வினாக்கள் மூலமும் மதனின் கைவண்ணத்தில் Googling இல்லாத காலகட்டத்தில் அறிவியலின் கையைப் பிடித்து தமிழ் உலகத்திற்குச் சுற்றிக் காட்டினார் எனலாம்.

'ஆழ்வார்கள் -ஓர் எளிய அறிமுகம்' மூலம் அவரது பன்முகத் திறமைகளில் பலவற்றை அறிய முடிந்தது.

'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' மூலம் ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தினார். கிச்சா, பாச்சு, மாஞ்சு எல்லோரையும், மாட வீதிகளையும், தெற்கு கோபுரத்தையும், அம்மா மண்டபத்தையும் வடக்குவிளையான் கிரிக்கெட் அணியையும் அமெரிக்க அம்பிகளையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன? முக்கியமாக அரங்கத்து தேவதைகளையும், அரஸ்-ன் தூரிகைக் கன்னிகளாய் அவர்கள் வெளிப்பட்ட அழகையும்...!

இப்போது அந்த நண்பர்களைத் தேடி சென்றுள்ளார் போலும்! மீண்டு வந்து மற்றுமொரு 'கற்றதும் பெற்றதும்' எழுதுவார்.

ல்லூரியில் சேர்ந்த போது, கணிப்பொறியே தெரியாத காலகட்டத்தில் தமிழ் எழுத்துக்களை கண்ணியில் காண்கையில் எத்தனை மகிழ்வாய் இருக்கும்? ஒரு தெரியாத தேசத்தில் நண்பனைக் கண்ட மகிழ்வு அது. அது அம்பலம்.

அவர் எழுதிய இணையம் பற்றிய தமிழ்ப் புத்தகமும், அதில் குறிப்பிட்டிருந்த பல இணைய முகவரிகளும் அந்த ஆரம்ப காலகட்டத்தில் அத்துணை துணையாக இருந்தது.

கரையெல்லாம் செண்பகப்பூ படமாகப் பார்த்த கட்டத்தில் தான் அந்நாவல் வடிவம் மிகவும் பிடித்துப் போனது.

அறிவியல், நடைமுறைக் கதைகள் , பழந்தமிழ் இலக்கியம், ஆழ்வார்கள், இளவயது நினைவுகள் என்று கலந்த் கட்டி எழுதி தான் ஒரு பல் துறை நிபுணன் என்பதை நிரூபித்தார்.

இன்று பிழைக்க ஓர் ஊர் சென்றாலும் மொழி உணர்வை விடாது பதிவுகளிலும், எழுத்துலகிலும் எழுதி வரும் எத்தனையோ பேரின் முன்னோடி சுஜாதா, அறிவியல் துறையில் இருந்தாலும் அது பிழைப்புக்கு, மகிழ்ச்சிக்கு தம் எழுத்து என்று வாழ்ந்து காட்டியதன் மூலம்!

செந்தமிழ் மொழி பெரும்பாக்கியம் பெற்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழைப் பெருமை படுத்த தோன்றி கொண்டே இருக்கிறார்கள். இக்கால கட்டத்தில் அறிவியல் பாய்ச்சல் போடும் போது, தமிழும், தமிழனும் தேங்கி விட்டு காணாமல் போய் விடக் கூடாது என்று பிறந்தவர் தான் இவர்.

எளிய தமிழில் அறிவியலை அறிமுகப்படுத்துவதில் இருந்து, சங்கத் தமிழை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவது வரை ஒரு தொடர்ச் சங்கிலியின் இன்றியமையாத கண்ணியாக இருந்தார் எனில் அதில் மிகையில்லை.

ப்போது அவரது மரணம் தமிழ்க் குடும்பங்களுக்கு, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வலியை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் தான் அந்த ஓர் எழுத்தாளராய் அம்மனிதரின் வாழ்வின் வெற்றி அடங்கி இருக்கின்றது. ஒரு பரிபூரண வாழ்வை வாழ்ந்த அந்த மாமனிதர் அமைதியில் நிறைவு கொண்டு அங்கேயே இருந்து விட மாட்டார்..!

ஒரு பயணம் சென்றிருப்பது போல் அரங்கனின் அடி காண சென்றிருக்கிறார். கொஞ்ச நாள் கழித்து வந்து தம் பயண அனுபவங்களைக் கண்டிப்பாக எழுதுவார்.

அது வரை கணேஷ் - வசந்தையும், மதுமிதாவையும், தேவதைகளையும், மாஞ்சுவையும், திருவரங்கத்தையும் பார்த்துப் பார்த்து நம்மை அமைதிப்படுத்திக் கொள்வோம்...!

Wednesday, February 27, 2008

மகாகவி - ஒரு சித்தன்.



காகவியை ஒரு தேசபக்திக் கவிஞனாக, புரட்சிக் காரனாக, போராளியாக, சமூக சீர்திருத்தவாதியாக, துணிச்சல்காரனாக (காந்திக்காககூட காத்திருக்க மாட்டேன் என்றானாமே), பெண் விடுதலை வீரனாகக் காட்டிய பாடல்கள் ஆயிரம். பேச்சுப் போட்டிகளுக்கும், கட்டுரைப் போட்டிகளுக்கும் பாடல்கள் தந்து உதவிய பாட்டுக்காரனாக நினைவில் இருத்திக் கொண்டிருக்கையில், 'நானும் ஒரு சித்தனாக வந்தேனப்பா' என்று அறிவித்தானே, அதற்கான பாடல் இது!

பாரதியை 'அவர், இவர்' என்று போலித்தனமான மரியாதை தந்து குறிப்பிடுவோர் மிகக் குறைவு என்று நினைக்கிறேன்.



பெருந்தீக்கு எதற்கு பொன்னாடை?

யோகிகளும், முனிவர்களும், சித்தர்களும் நடமாடிய காலத்தில் பிறக்க வேண்டியவன் தப்பித் தவறி இந்தக் காலத்தில் பிறந்து விட்டான். நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் தேச விடுதலைக்காக பாட வேண்டியனானான். இருந்தும் அவனது சித்த மனம் சொல்லத் துடித்த வரிகளும் அவ்வப்போது தம்மை வெளிப்படுத்திக் கொண்டன.

மற்றுமொரு நல்ல உதாரணம் 'நல்லதொரு வீணை செய்தே'.

பிறந்ததில் இருந்து உடல் மாறிக் கொண்டிருக்கின்றது. மனம் மட்டும் அதே போல் இருக்கின்றது. இன்று உடல் பருமனாக இருக்கின்ற மனிதன், ஒரு மாதம் உணவே உண்ணாமல் இருந்தால், உடல் வற்றி மிக இளைத்தவன் ஆகின்றான். அப்போது அவன் அவன் இல்லையா? அவனை அடையாளம் கண்டு கொள்ள மாட்டோமா? அப்போதும் அவன் அவன் தானே! அப்படியானால் இந்த உடல் என்பது அவன் இல்லை.

பிறகு ஏன் உடல் முற்றும் இல்லாது போன நிலையில் அவனை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை? அந்த மனம், ஆன்மா அது தான் அவனா?

பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் ஒரு துளியினும் துளியாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில், வாழ்க்கை நடத்த என்ன காரணம்?

நாம் வருவதற்கு என்ன காரணம்? நம் வாழ்வே யாரோ ஒருவருடைய கனவோ? அவன் கனவு கலைந்து விழித்தால் நான் தொலைந்து விடுவேனா?

எரிகின்ற விளக்கை ஊதினால், அந்த நெருப்பு எங்கு சென்று விடுகின்றது? அது போல் இந்த நினைவும், எண்ணங்களும் எங்கு செல்லும், பின்? ஒரு பானை நிறைய நீர் வைத்து, ஒரு துளையிட்டால் நீர் முழுதும் ஓடி விட்டு பானை காலியாகி விடுகின்றதே. இந்த மண்பாண்ட மனித உடலில் இருந்து எதுவும் சென்று விடுவதில்லையே, ஏன்?

இந்த மூளையும், எலும்பும், வெறும் புரதங்களாலும், அமினோ அமிலங்களாலும், டி.என்.ஏக்களாலும் தான் ஆனதோ? உயிரியல் ஆய்வகத்தில் தொங்கும் எலும்புக் கூடு தான் நானுமோ?

அடுத்த நாள் இளங்காலையில் சாம்பலில் இருந்து தேடி ஒரு எலும்பை எடுத்துக் காட்டி 'இது தான் உன் பாட்டி' என்றார்களே, அந்த கணத்தில் புரிந்த மாயை எக்கணத்தில் மனதை விட்டு மறையும்? அதற்குப் பின் பார்க்கின்ற மனிதர்கள் எல்லாம் அவ்வப்போது, அடையாளங்கள் அற்ற 'என்பு தோல் போர்த்த உடம்பு' என்று உணர்கின்ற போது எந்த உணர்வும் அற்ற வெற்று வெள்ளைத் திரையாய் மனம் மாறுகின்றதே, அது எதனால்?


Get Your Own Hindi Songs Player at Music Plugin

'நானும் ஓர் கனவோ - இந்த ஞாலமும் பொய் தானோ'..?

Monday, February 25, 2008

வாய்க்கா வரப்போரம்...



கெழக்க மொளச்ச கதிரும் மேக்க மறஞ்சாச்சு!
வெளக்க ஏத்தி வெக்க, வேதனயும் சேந்தாச்சு!
பாத வழியப் பாத்து பூத்த கண்ணும்
வேத்து வேத்து தண்ணி பொழிஞ்சாச்சு!

ஈர வெறகு மேல சேந்த ஈசலு போல
கூரக் கீத்து மேல தூத்துன தூறலு போல
பாற மேல பூத்த பச்சல போல்
ஊறிப்புட்டீரு உள் மனசுல..!

வெள்ளாம வெளஞ்சு நிக்க
வெள்ளாடு மேயாம காத்து நிக்க
கை கொள்ளாம கொண்டு போக
வெள்ளன வருவிகளோ, வராம போவீகளோ?

ஆத்தோரம் நடக்கயில, அல வந்து அடிக்கயில
சேத்து சேத்து நடக்க, சேத்து வெச்ச காலுல
சேத்து தடம் பதியப் பதிய
பாத்து பாத்து நடந்த பழய நெனப்பும்,

வாக்கா வரப்போரம் வக்கணயா ஒக்காந்து
எக்காளமா எசமானமா எட்டி எட்டிப் பறிச்சு
நிக்காம கொள்ளாம ஒடிப் போயி
பக்கா பக்காவா தின்ன மாங்காவும்,

அய்யனாரு சாமி அருவா பாத்து பயந்ததும்,
பொய்யா மீச வரஞ்சு மெரள வெச்சதும்,
அய்யா அம்மானு அலறியடிச்சு ஓடுனதும்,
மெய்யா நெனப்பில்லயா மச்சான் நெஞ்சுக்குள்ள..?

திருவிழாவுல சீனிமுட்டா வாங்கித் தந்து
தெருமுச்சூடும் திமிரா காட்டுனதும்,
உருமா மாமன் கையில மாட்டி, ஓடி
பெருமா கோயிலுல பதுங்குனதும்,

ஏதேதோ பேசிப் பேசி ஏரிக்கர வர
போதம் ஏறிய கரயோரம் நின்னு
வாதம் விவாதம் பண்ணி உள்ள குதிச்ச
பாத தடமெல்லாம் பதராப் போச்சா?

Get this widget | Track details | eSnips Social DNA


தொடர்புடைய மற்றும் சில பாடல்கள் :

பாடுகிறேன்...!


அசத்திப்புட்ட புள்ள...!

போறவளே பொன்னுத்தாயி...!