Friday, February 01, 2013

பேரன்புடையவன்

பிரபஞ்சத்தின் மெளனம் இரவின் மேல் படர்கிறது. தெளிந்த இந்த வானம் எத்தனை எத்தனை அற்புதங்களை இந்த அற்ப மனிதன் மேல் மிதக்க விடுகிறது. தெய்வீகத்தைச் சென்றடைய கோடானு கோடி விண்மீன்கள் வழியாக ஒளி ஏணிகளைச் சரம் சரமாகத் தொங்க விட்ட அந்த எல்லையற்றவன் எங்கே?

மல்லிகைக் கொத்துகளை விதைத்துப் பூக்க வைக்கின்ற மதுநிலா அள்ளியள்ளிப் பருகினாலும் தீராத போதை ஊற்று அல்லவா?

மோகன மணத்தைப் பரப்புகின்ற இந்த இரவின் படுக்கை மேல் விரிந்திருக்கும் கனவுகள் தாம் எத்தனை?

ரோஜா இதழ்களைப் போன்ற வாசமும் நிறமும் செழித்த காற்றில் அவன் சொல்லியனுப்புகிற சொற்கள் தாம் எத்தனை இனியன!

பன்னீர் அருவியைப் பொழிய வைத்த பெருங்கருணையுடைவனின் ஒரு பார்வை, பாவங்களின் பெரும் மூட்டையைக் கொஞ்சம் இளைப்பாற்றி வைக்காதா?

துயரத்தின் கரும் நிழல் தீண்டி நீல விஷம் மேனியெங்கும் பேரார்வத்துடன் ஊடுறுவுகையில், அவனது நு னி விரல் ஸ்பரிசம் ஆனந்தப் பேரலையாக வந்து மூடாதா?

அந்த அளவற்ற அன்புடையவன் ஒரு பேரரசனைப் போல, பொன்னாலான சிம்மாசனத்திலா அமர்ந்திருப்பான்? கிடையாது.

கடையனுக்கும் கடையனாய், மிகப் பழைய உடைகளுடன், யுக யுகங்களாய்க் கிழிந்த மேல் ஆடையும், எத்தனை எத்தனையோ கவிஞ்சர்களின், பக்தர்களின், நம்பிக்கையாளர்களின் வேண்டுதல்களும் தொழுகைகளும் அழுகைகளும் கதறல்களும் நெய்த போர்வையுமாய் அவன் அங்கே நமக்காகக் காத்திருக்கிறான்.

இந்த அகிலத்தின் அதிபன் யாருடைய தூய மனம் கரைந்தழும் தொழுகைக்குச் செவி திறப்பான்?

இங்கே நிகழ்வதேல்லாமே அவனுடைய அளவிலா விளையாட்டு என்றால், நெஞ்சுருகி அவன் பாதத்தையேக் கடைசியாய்ச் சரணடைபவர்களின் துக்கங்க்களைத் தன தோள் மேல் ஏற்றிக் கொண்டு எங்கே செல்வான்?

பகலெல்லாம் ஒளியாய் ஜொலிப்பது அவனுடைய வார்த்தைகள் தானே ! இரவில் குளிராய் வந்திறங்குவது அவனுடைய மெளனம் தானே!

கரையில் திரண்டிருக்கும் வெண்சங்க்கின் மடிப்புகளில் பெரும் சமுத்திரத்தின் பேரொலியை ஒளித்து வைத்தவன் எவனோ, அலை நுரைகளில் உப்பு மலைகளைக் கரைத்து வைத்தவன் எவனோ , பாலை மணலிலும் காற்றுத் தூரிகைகளால் மர்மங்களால் ஆன பாதைகளைப் பதித்து வைப்பவன் எவனோ, எவன் இறுதியில் ஒரே ஒரு மிஞ்சிய காப்பானோ அவன் இடை நுனியில் முடிச்சிட்டிருக்கும் நூலாடையின் ஒற்றைப பிசிறு கிடைத்தாலே போதும்.

அன்புள்ள மரணத்திற்கு

ன்புள்ள மரணத்திற்கு,

நீ இருப்பது உண்மையா? உன்னைக் கண்டடைவதில் நான் உவப்புறுவேன்.

பாய்ந்து கொண்டேயிருக்கும் குளிர்ந்த நீருக்குள் ஒரு நிர்வாண மீன் நீந்திக் கொண்டேயிருப்பது போல் நான் வாழ்வில் நனைந்து கொண்டிருக்கிறேன். முட்கள் நிரம்பிய ஒரு தூண்டில் கண் முன் தோன்றித் தோன்றி மறைகிறது. கவ்விக் கொள்ளப் பாய்வதற்குள் வெள்ளம் தள்ளிச் சென்று விடுகின்றது. மீண்டும் நடுக்கம்..!! எத்தனை தொலைவுக்கு நீர் என்னை இழுத்துச் சென்று விட்டாலும் தூண்டில் மட்டும் துரத்துவதை நிறுத்துவதில்லை. வசீகரமான அத் தூண்டிலின் கூர்முனையை ஒரு மர்மமான கணத்தில் என் சிறு வாய் திறந்து மேல் அண்ணத்தில் குத்தும் போது ஒரு கணத்தில் மரிப்பதில்லை. அது துளைத்துத் துளைத்து மூளையை முட்டிச் செருகி அள்ளும் போது சூடான செந்நிறத் திரவம், புயல் காற்றுக்கு வெண் முகில்கள் போல் விலகிப் பரவும்.

உனக்கு மட்டும் தான் எத்தனை ப்ரியம் மனிதர்கள் மீது? ஒரு தேவதூதனைப் போல மனிதர்களின் அத்தனை துயர்களையும் உன் கருணையால் உன் ஒரு பார்வையால் காணாமல் போக்கி விடுகின்றாய். ஒரு மஞ்சள் வெயில் படிவது போல் உன் சாயல் படிகையில் முகங்கள் தான் எத்தனை திருப்தி கொள்கின்றன! ஒரு பேரருவியை மென்மையான தீண்டலால் பகல் ஆவியாக்கி விடுவது போல் அத்தனை உணர்வுகளையும் நீ சமனப்படுத்தி விடுகிறாய்.

நீ எப்படி இருப்பாய்? உன் வயது என்ன? உன் நிறம் என்ன? நீ என்ன ஆடைகளை அணிவாய்?

குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக் கதை சொல்லித் தூங்க வைக்கும் தளர்ந்த ஒரு மூத்த தாத்தா போல் வந்து எங்களை உன் பொன்னுலகத்திற்கு அழைத்துச் செல்வாயா? பனி இறங்கிக் கொண்டிருக்கும் பின்னிரவில் தெரு விளக்குகளை ஏற்றி வைப்பதற்காக வரும் அந்த சுருட்டு பிடிப்பவனைப் போல் கோட் அணிந்து வருவாயா? சந்தையில் வாத்துக்களை விற்று விட்டுச் சிணுங்கும் சில்லறைகள் காதில் அறைய மெல்ல எட்டு வைத்துப் போகும் ஒரு கிழவியைப் போல் முணுமுணுத்துக் கொண்டு போவாயா?

உன் வயது என்ன?

நாங்கள் காலம் என்பதைக் கண்டுபிடிக்கும் முன்பாக எங்கே ஒளிந்திருந்தாய்? பால் வெளி பண்டலத்தில் நாங்கள் காணவே இயலாத ஏதோ ஒரு கிரகத்தில், ஒற்றை லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டு தலையில் தொப்பியுடன் பனிக் குவியலில் கால்கள் புதையப் புருவங்கள் மேல் கை வைத்து தொலைவைப் பார்த்துத் தொலைந்து போன பேரனைப் தேடி நடக்கும் ஒரு கிழவனைப் போல் நீ நடந்து கொண்டிருக்கும் காட்சி சமீப காலங்களில் என் கனவுகளில் வந்து கொண்டிருக்கின்றது. உன் பழுப்பேறிய தாடியிலும் மீசையிலும் பனித் துகள்கள் படர்ந்து கிடக்கின்றன. உன் சட்டைப் பைக்குள் கணக்குச் சீட்டுகள், எங்களுக்கு என்றுமே புரியாத கணக்கீடுகளுடன்!

உன் உள்ளங்கையில் தான் எத்தனை ரேகைகள்! தானாகப் போகும் பாதையில் ஓடுகின்ற நதிகளைப் போல், அவற்றில் எத்தனை ரத்த நதிகள்! நாங்கள் இறைஞ்சிக் கொண்டே இருக்கிறோம். சில சமயங்களில், உன் வரவிற்காகத் தங்க ஜாடியில் நூற்றாண்டுகள் பழைய புளித்த ஒயினைப் பாதுகாக்க விழித்திருக்கும் கஞ்சனைப் போல் கூர்மையான கவனத்துடன் காத்திருப்போம். சில சமயங்களில், பள்ளிப் பாடம் செய்யாத மாணவன் ஆசிரியரின் வரவின்மையை விரும்புவது போல் உன் வாராமையை வேண்டுவோம்.

ஆனால், என்று நீ எங்கள் பிரார்த்தனைக்குப் பதில் சொல்லியிருக்கிறாய்? குடை இல்லாமல் பாலையைக் கடக்கும் போது மழையைப் போல் வருகிறாய். தாகத்தில் தவிப்பவனுக்கு அது இனிமை. காலையில் ஜன்னலைத் திறக்கும் போது, கூரையின் மேல் இரவெல்லாம் குளிர்ந்திருந்த பழுப்பு நிறச் சருகு கீழே விழுவது போல் சுழன்று சுழன்று வருகிறாய். நகரத்தின் ஆலைச் சங்கொலி கேட்க ஆரம்பிக்கும் போது, குயிலின் துயர்க் குரல் கரைந்து விடுவது போல் உன் வரவின் காலடிச் சத்தம் செவியில் விழத் துவங்குகையில், வாழ்வை எங்கோ தொலைவில் விட்டு விட்டு கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் கடிகாரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டு தூரத்தில் வானோடு இணைகின்ற தண்டவாளத்தின் அதிர்வை எதிர்நோக்கும் குருட்டுப் பிச்சைக்காரனாய் நாங்கள் ஆகி விடுகின்றோம்.

உன் வீடு எதனால் ஆனது? கூரைகளில் என்றும் தீராத கண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருக்குமா? புகை போக்கி வழியாக எத்தனை குரல்களை நீ அனுப்புவாய்? பூட் அணிந்து நீ நடமாடும் சமையலறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியின் நடுங்கும் சுடர் உன் முகத்தின் கொடூரத்தையோ அன்பையோ உன் நிழலில் எதிரொளிக்கையில், மூச்சுக் காற்றற்ற முகங்களின் கண்கள் இறுக்க மூடிக் கொள்கின்றனவா?

***

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரிஷ் கவிஞர் டபிள்யூ.ஆர்.வில்லியம் ப்ரை என்பவருடைய தலைப்பு அறியப்படாத கவிதையின் கிடைத்த பகுதி.