Tuesday, December 05, 2017

நீலாம்பல் நெடுமலர்.27.

ருங்கால் வேங்கை உகு மலர்
பாறை புலிக் குருளை ஆக்கல்
போல்
இலையெலாம் பூத்த கொன்றை
இவள் மேல் பொன் குமிழ் சொட்ட
நான் அகற்றும் நாளே!

குன்றெரி குறும்பூ செம்மை போல்
கன்றோட்டிக் கட்டும் சிறுகை
விளி நீள்விரல்,
குறுகு மாலை பூசிய
விழுகதிர் எச்சம் எனப்படும்.

பொல்லா உடையவன்,
பசலை அறியாச் சிறுபெண்
ஈதென்று காட்டிய பெருமகள்
பெருவழி கடந்த பின் குழம்பிய  அவளை
உணரச் செய்தனன் அவனே.

கவனம் உடையேம் யாம்,
கதிரள்ளும் குருவி துரத்தி
பசுமை உண்ணும் பல விரட்டி
நிலமூரும் அரவகற்றிக் கொண்ட துணிபை
சோழன் பரிசில் மாயமாக்கும் வறுமை போல்
இல்லாதாக்கின அவன் கண்.

வளப்பமுடை காவிரி நீர் அள்ளி உமிழ்ந்து
ஆடுகையில் அறியார் காண்கை
நாணத்தை விட,
மயில் தோகை இலைகள் விரிந்த
பசுமைக் கீழ் கைப்பிடித்து
உறுதிகண்ட போதடைந்த நாணம்
குறைந்தன்று.

குழல் மேலிட்ட குறும்பூக்கள் மலர்ந்து வாடி விழும் மாலை நேரத்தில், தூரத்தில் கேட்கின்ற ஒற்றைக் குதிரைக்காலடி, தலைவர் வந்து கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்கின்றது.

தேன்பூசிய கூர் அம்புகள் கொண்டு பேசும் இப்பெண் விழிகள் துளைத்திடும் இரு மார்புகள், பின் பெறற்கரிய பகைவர்களின் புது வேல்களையும் தாங்கி வளைக்கும் திண்மை உடைத்து.

வெள் அருவி வீழ் பாறையடியில், தூறல்கள் மட்டும் அணிந்த அவருடைக் கரிய உடலை என் கண்கள் வேறுபட்டு அறிய ஒண்ணாது, விரல்களின் துணையை நாடின.

பூத்தற்கரிய குறிஞ்சி போன்ற இவள் சொற்கள், கேட்கப்படினும் உண்ணத்தக்கதாய் இருப்பதை, கருங்குயில் மட்டும் கண்டு கொண்டிருந்த அடர்வனத்து புங்கை மரத்தடி வெளிப்படுமுன் உண்டறிந்தேன்.