Showing posts with label வழுவிச் செல்லும் பேனா.. Show all posts
Showing posts with label வழுவிச் செல்லும் பேனா.. Show all posts

Tuesday, September 11, 2018

பூனைகள் நடக்கின்ற இரவுகளில்...

முன் மதியம் ஒன்றில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ கைப்பிடித்து வைத்த செம்மண் கொத்துகள் இறுகிக் கெட்டிப்பட்டு மலைகளாகச் சூழ்ந்த வெளுத்த  நிலப்பரப்பில் யாருமே இல்லை. வானுக்கும் மேலே பிசிறு மேகமும் இன்றி கூசச்செய்யும் ஒளி நீலம். முகடுகளில் கழுகுகளும் வல்லூறுகளும் அனல் நதியில் உருகி வழிந்து விழும் பிணங்களை, வியர்வை படர்ந்த அவர்களின் மேல் கோட்டுகளில், கலைந்த தாடியில்,புழுதி படிந்த தொப்பிகளில், மண் ஊறிய தோல் காலணிகளில் தளர்ந்து விழுகின்ற ஜீவனை, அங்கே உச்சிகளில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கும். இன்று அவைகளும் இல்லை. காற்றில் அடர்ந்து அசைந்து கொண்டிருக்கின்ற காய்ந்த புதர்களின் அடியே வளை தோண்டி பதுக்கி வைத்திருக்கும் கொட்டைகள், பூக்கள், களி மண் உருண்டைகள் உடைந்து, வெடித்து சிலந்திப் பூச்சிகள் தின்னக் கொடுத்து எங்கோ தப்பித்துப் போய் விட்டன மலை எலிகள். சபிக்கப்பட்ட இச்சாலையில் தலைக்கு மேலே பல லட்சம் கொடும் வாட்களுடன் தணல் அலைகளைப் பரப்பி வியாபித்துள்ளான் பாலை அரசன். கானல் பிழைகள் மினுங்கும் மேடு பள்ளங்களில் வெக்கை புழுங்கிக் கொண்டிருந்தது. எங்கோ தொடங்கி எங்கோ செல்லும் இக்கறுப்பாற்றில் தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்தேன்.

இவ்வழியே முன்பு பல காலங்களாய், பல தலைமுறைகளாய்ப் பலர் நடந்து சென்றிருக்கிறார்கள். பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சுகளை முதுகில் கட்டிக் கொண்ட அன்னையர், முதுமையடைந்து, உடலோடு குடலும் எலும்புகளும் ஒட்டிப் போன பெரிய கண்கள் தளர்ந்து போய், ஒவ்வொரு காலாய் எடுத்து வைப்பதற்குத் தடுமாறித் தடுமாறி நடை குலைந்து நடக்கும் வயதான குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்து நடக்கும் கிழவர்கள், அவர்களுடைய தோல் பாக்கெட்டுகளில் மனக் கட்டுப்பாட்டுடன் சேகரித்து வைத்த வேர்க்கடலைகள், வழியில் சந்திக்க நேரும் பாம்புகளை எதிர்க்கத் துப்பாக்கிகள், பழைய காலணிகள், சுருக்கங்கள் நிறைந்த கிழவிகள். மின்னும் கூர்நுனிகள் கொண்ட வேல்களை இறுக்கமாகப் பிடித்துப் பழுப்புக் குதிரைகள் மேல் அமர்ந்து படை படையாய் வரிசைகள்.

இப்பாதையைப் பற்றிய நாடோடிப் பாடல் ஒன்று உள்ளது.

இன்னும் நெடுங்காலத்துக்கு முன்பு ஓர் அக்காவும் ஒரு தம்பியும் இப்பாதை வழியே நடந்திருக்கிறார்கள். அவள் பெயர் மினா என்றும் அவன் பெயர் மிசி என்றும் நாடோடிப் பாடல் ஒன்று சொல்கின்றது. உயிர்களே அற்றுப் போன வெளியானாலும் காற்று இருக்கும் வரை எவனோ ஒருவன் பாடி வைத்த பாடல்கள் இங்கே உலவிக் கொண்டேயிருக்கின்றன. மினாவும் மிசியும் ஒரே ஒரு குடைக்குள்ளே ஒண்டிக் கொண்டே வெயில் தளும்பிய வேளையொன்றில் நடந்திருக்கின்றார்கள்.  மினா பனிரெண்டு வயதிலும் மிசி எட்டு வயதிலும் ஊரில் மவுண்ட் என்ற துறவி கொடுத்த வெண்ணிறக் குடை ஒன்றில் அடைந்து வந்தார்கள். வறண்ட பாறைகள் மட்டுமே விழுந்து கிடந்த மண்பாதையில் அவர்கள் ஒன்றும் பேசாமல் நடந்தார்கள். மிசிக்கு கேட்பதற்குக் கேள்விகள் நிறைந்திருந்தன. ஏன் இங்கே யாருமே இல்லை? ஏன் வானம் இவ்வளவு அமைதியாய் இருக்கின்றது? ஏன் காற்றில் இத்தனை புழுக்கம்? ஏன் நம் எதிரே யாருமே வரவில்லை? கேள்விகள் நிரம்பித் தளும்பும் சிறு மூளை கொண்டவனாய் நடந்தான். மினாவுக்குச் சொல்வதற்கு பதில்கள் ஒன்றும் இல்லை. அவளுடைய மனம் அங்கே நீலவெளியில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அங்கே எண்ணங்களே இல்லை. மதியத்தில் வீசிய காற்றில் இதழ்கள் உதிர்ந்து போய் காலியான ஒரு மலரைப் போல அவள் நடந்தாள்.

அவளுடைய சிறு விரல்களில் எப்போதோ பறித்த மஞ்சள் பூக்கள் கொத்தாக சரிந்திருந்தன.

வெகுதூரம் அவர்கள் நடந்து வந்த பின்பு ஒரு இறுகித் தாளிடப்பட்ட பழைய வீடு ஒன்றை முள்வேலி சூழப் பார்த்தார்கள். வேலி மேலெல்லாம் புழுதி அப்பியிருந்தது. வீட்டின் வாசலில் தூக்கில் ஏற்றப்பட்ட எலிக்குஞ்சைப் போன்ற ஒரு விளக்கு தொங்கியது. அதன் திரி கருகியிருந்தது. கூரையின் மேல் புகைக்கூண்டிலிருந்து கரும்புகை ஒரு துணி உதறலைப் போல வெளிவந்தது. உள்ளே யாரோ இருக்கிறார்கள். மினி வேலியின் கதவை மெல்லத் தள்ள, அவர்கள் நுழைந்தார்கள். வேலிக்கதவு சாத்திக் கொண்டது. மண் படர்ந்த மரப் படிக்கட்டுகளில் தாவி மேலே சென்று கதவைத் தட்டினார்கள். 

Saturday, February 18, 2017

ராத்திரியின் பயணி.


தேங்கிய நீரோடையின் கரையில் ஒரு பாறை யுக யுகமாய்க் காத்திருக்கின்றது, ராத்திரியில் மட்டும் வரும் ஒரு பயணிக்காக.

தனிமையில் இருளில் நிழல் கூட அறியாது வருகின்ற அந்த ஒரு பயணிக்காக மட்டும், இறுகிய பாறையின் உள்ளிடுக்குகளுக்கு இடையிலே ஊறிக் கொண்டிருக்கும் வெந்நீர்த் துளிகளுக்காக, மேற்கே உலர்பாலைப் பெருநிலத்திலிருந்து கசங்கிய குடையை விரித்து, புழுதியில் அலைந்த சிக்கெடுத்த தாடியைச் சிதற விட்டுக் கொண்டு வருகின்ற அந்த ஒரு பயணிக்காக.

சூரியன் தினம் சிந்தும் துளி விந்துவைத் தேக்கிக் கொண்டு அழுகின்ற நிலவைத் தலையில் தாங்கிக் கொண்டு கால்களைத் தேய்த்துத் தேய்த்து இழுத்துக் கொண்டு வருகின்ற, உருளும் கண்களில் கரை கட்டியிருக்கும் நீர்த்தேக்கத்தில் பிம்பங்களைப் பதிக்கும் மணல் பாதையின் முடிவில் அமர்ந்து ஓய்வெடுக்கின்ற வயதான அந்த பயணிக்காக.

முட்புதர்களுக்குள் பதுங்கிய எலிகளுக்கும் ஏதேனும் கொண்டு வருகின்ற பயணியின் ராத்திரிக் கதைகளில் ஏதேனும் மிஞ்சியிருக்குமா முந்தைய ஊரின் நிழல்கள்?

(PIC: http://farm3.static.flickr.com/2017/2116909026_f90dba8d16.jpg)

Saturday, May 30, 2015

தமிழ்த் திரையின் நவீன பேய்ப் படங்கள் - ஒரு பார்வை.

டந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரை பல பேய்ப் படங்களை உற்பத்தி செய்து தள்ளுகின்றது. எப்போதும் மாறி மாறி வருகின்ற வரிசையில் இப்போது பேய்ப்படங்களின் முறை.

சுஜாதாவின் ‘சசி காத்திருக்கிறாள்’ என்பது குமுதத்தில் பிரசுரமாகிய அவருடைய முதல் கதை. அதில் கணவன் வருகைக்காக மனைவி வீட்டில் காத்திருப்பாள். கணவன் சாலையில் விபத்தில் அடிபட்ட ஒருவனுக்கு உதவி செய்து கொண்டிருப்பான். கதைப் போக்கு, விபத்தில் கணவன் அடிபட்டிருப்பது போன்ரும் மனைவி அது தெரியாமல் வீட்டில் பதற்றத்துடன் காத்திருப்பது போலும் எழுதப்பட்டிருக்கும். கடைசியில் கணவன் பத்திரமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் தான் படிக்கும் நமக்கும் இந்த உண்மை தெரிய வரும். சில வருடங்களுக்கு முன் நடந்த ஒன்று விட்ட அக்கா ஒருவருடைய திருமணத்தில் சந்தித்த போது, சுஜாதாவுடைய தீவிர வாசகரான மாமா ஒருவர் சொன்னார், “இந்த கதையை இப்ப எழுத முடியாது..” “ஏன் மாமா..?” “இப்ப ஒரே ஒரு போன் கால் பண்ணி ‘இங்க, இப்படி இருக்கேன். வர லேட்டாகும்...’னு அவன் சொல்லிட்டா, பிரச்னை முடிஞ்சது..” என்றார். இப்போது வாட்ஸ் அப்பில் ஒரு வரி போதும்.

நவீன கருவிகளின் வருகை நம் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் மாறுதல்கள் பல தளங்களில் ஆய்விற்குட்படுத்தப்படக் கூடியவை. ஆயிரமாண்டுகளாக இருந்து வந்த விவசாய யுகத்தின் மேல் நிகழ்ந்த தொழில் (இரும்பு!) யுகத்தின் தாக்கம் மற்றும் பாதிப்புகள் சென்ற நூற்றாண்டில் நிறைந்திருந்தன. சோவியத் புரட்சியே மண் மீது கனரகத் தொழில் வந்து மோதிய நிகழ்வு எனலாம். தற்போதைய மின்னணு மற்றும் கணினிக் கருவிகளின் நுழைவு, இரும்பு யுகத்தினை விடப் பரவலாகவும் வீச்சுடனும் நிகழும் ஒன்று. காரணம், இரும்பு யுகக் கருவிகளை விடவும் மின் கருவிகளின் பயன்பாடு பெருத்த எண்ணிக்கையில் நிகழ்கின்றது. மற்றும், இரும்பு எந்திரங்களை அமைக்க, பயன்படுத்த, தொழிலில் இயக்க பெரும் மூலதனமும் அதைவிடப் பெரும் எண்ணிக்கையிலான மனித வளமும் தேவை. ஆனால் மின் கருவிகளுக்கு அப்படி அல்ல.

நிகழ் உலகில் நவீன கருவிகளின் தொடர் மற்றும் பெரும் அளவிலான பயன்பாடு, படைப்புலகிலும் பெரும் மாறுதல்களைக் கோருகின்றது. மெய் நிகர் உலகை நிர்மாணிக்கும் இலக்கியம் மற்றும் திரையுலகில் அவற்றைப் பற்றிய பிரக்ஞை இன்றி உருவாக்கப்படும் படைப்புகள் நிகழ் உலகைச் சரியாகப் பிரதிபலிக்காது. இது ஒருபுறம்.

பாறை மடிப்புகளிலும் மரங்களின் இடுக்குகளிலும் வாழ்ந்த காலம் முதல் இருள் என்பது பயம். இருட்டில் அல்லது இருட்டுக்குப் பின் என்ன என்ற கற்பனை ஆதி நிலையிலிருந்து இன்று வரை நம்மைத் தொடரும் மனச் சரடு. தனிமையில் இருக்கையில் அந்த பயம் பிரம்மாண்ட உருவம் கொள்கின்றது. மின் விளக்குகள் வந்த காலத்தில் இருள் பற்றிய அச்சம் விலகியிருக்கும், கொஞ்ச காலத்திற்கு. ஆனால் மனித மனம் அப்படி எளிதில் ஒத்துக் கொள்வதில்லை. ஒளிரும் மின் விளக்கின் பின்னே செறிந்திருக்கும் கரும் இருள் இன்னும் பயம் தருகின்றது. அந்த இருளிலிருந்து விளைந்த கனி தான் பேய். மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு ஒரு திட்டவட்டமான பரிசோதித்துப் பார்க்கக் கூடிய அறிவு கிட்டும் வரும் இந்த பேய்கள் நம் மனப் பிராந்தியத்தில் உலவிக் கொண்டு தான் இருக்கும். எனவே வாழ்வைப் பிரதிபலிக்கும் படைப்புகளிலும் அவை இருந்து கொண்டேயிருக்கும். இது மறுபுறம்.

நவீனத் தொடர்புக் கருவிகள் நம்மை மேலும் மேலும் இறுக்கமாகிக் கொண்டிருக்கின்றன. எவரும் எப்போதும் எவருடனும் தொடர்பில் இருக்க முடியும். தனித்த நிலை கிட்டத்தட்ட பழமையாகிக் கொண்டிருக்கின்றது. அப்படியெனில் இன்றைய காலகட்டத்தில் பேய்கள் எங்கு இருக்கும், அவற்றைப் பற்றிய பயம் எப்படியான மாற்றங்களைப் பெற்றிருக்கும். நகரின் வங்கி வாசல் படிக்கட்டுகளில் பசுமாடு ஒன்று வெறும் வாயை அசை போட்டுக் கொண்டு படுத்திருந்தது. ஒரு காலத்தில் பசிய வயல்கள் பொலிந்த பிரதேசம் அது. மேய்ந்த நினைவில் அம்மாடு இப்போது சிமெண்ட் திண்ணையில் கழுத்தைச் சரித்துக் கண் மூடியிருந்தது. அது போல பேய்கள் பற்றிய அச்சங்கள், ஆர்வங்கள், பதற்றங்கள், பயங்கள் இன்றைய ’என்றும் தொடர்பு’ தினங்களில் எப்படி இருக்கும் என்பது படைப்பாளியின் சவால். அதைத் திறம்பட எதிர் கொள்பவன் வெற்றியாளனாகின்றான்.

Tuesday, January 13, 2015

தனித்து ஒரு பாடல்.

ழை நகர்ந்த பின் வந்த மாலையில் அவன் மட்டும் பூங்காவில் அமர்ந்திருந்தான். விளையாடிய பையன்கள் வீடு திரும்பியிருந்தனர். அவர்களுடைய சின்னஞ்சிறு கூச்சல்கள் மட்டும் இன்னும் சுற்றி வந்தன. நகரம் செயற்கை ஜொலிஜொலிப்புகளால் போர்த்தப்பட்டிருந்தது. இருண்டு கொண்டு வந்த வானத்திற்கு மேலே அகண்டாகாரமான இருள்வெளி மெளனமாய் உறைந்திருந்தது. மேலிருந்து ஒரு தேவன் பார்த்தாலும் தனித்துத் தெரியுமளவுக்கு பூங்காவில் கழுவப்பட்டிருந்த பசிய இலைகளின் நடுவே, சேற்றுமணம் நிரம்பிய காட்டுக்குள் தனித்திருந்தான்.

சின்னச் சின்னப் பூச்சிகள் கிளம்பி, அந்தக் குளிர் இரவை நிரப்பத் தொடங்கியபின் அவன் சட்டைப்பையில் கொண்டிருந்த மவுத் ஆர்கனை வாய்க்குச் சூடினான். அவன் நெஞ்சில் கெட்டிப்பட்டிருந்த சோகக் கதுப்புகளை, மூச்சின் வெப்பத்தால் கரைத்து, உருக்கிக் கரைத்து, மென்னீராக்கி, இன்னும் வெப்பம் கொடுத்து ஆவியாக்கி, வெளித்தள்ளிய அனல்காற்றின் ஜதி, ஆர்கன் வழியாக மென்சூட்டில் துயரப்பாடல்களாகி வெளிவந்தன.

"மரங்களோ புதர்களோ பறவைகளோ பூக்களோ
மறந்திடாதீர் என்னையே...

பனிகளோ குளிர்களோ தளிர்களோ இலைகளோ
புதைத்திடாதீர் என்னையே..."

என்று அவன் பாடிக் கொண்டே பூங்காவை விட்டு வெளியேறினான். இனி அவன் அங்கு திரும்பப் போவதில்லை.

நகரம் தன் விருப்பங்களை மர்மங்களின் மேடையின் படுதாவுக்குள் நிகழ்த்தி இரவின் புதைகுழிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்க, மஞ்சள் தெரு விளக்குகள் கவிழ்ந்த நீர்த் தேக்கங்களைக் கலைக்காமல் அவன் செல்லத் துவங்கினான்.

அவனை அந்நகரம் அறிந்ததில்லை. அல்லது, அவனைப் போன்ற பல்லாயிரம் பேரை அது அறிந்திருந்தது; அழித்திருந்தது; மறந்திருந்தது. அவன் இருமை சரிந்திருக்கும் குறுக்குச் சந்துகளிலும், மேம்பாலங்களின் திரட்சியான பாதங்களிலும் சாய்ந்து நிற்கவில்லை. அவன் பாதை அவன்முன் செல்கின்றது. அவன் தன் வாத்தியத்தையும், வாத்தியமான உடலையும் சுமந்து கொண்டு நகரின் இரா வீதிகளில் இறுதி உயிராய் உலா சென்றான்.

அவனை யாரும் தடுப்பதில்லை; அவனால் யாருக்கும் தொல்லையுமில்லை. அவன் தன் பாட்டுக்குப் பாடுகின்றான். பனி வந்து போர்த்திக் கொண்டபின் அடைக்கப்பட்ட ஜன்னல்களுக்குள், சாத்தப்பட்ட கதவுகளுக்குள், மூடப்பட்ட கூரைகளுக்குள் அணைப்பின் சூட்டுக்குள் சுருண்டு கொள்ளும் நகரத்தில் அவன் பாடலை யாரும் கேட்பதுமில்லை. அவன் கேளாக் காதுகளை நம்பி நிறுத்தவுமில்லை. அவனுக்குத் திறந்திருக்கும் சாலைகளையும் காலியான தெருக்களையும் கொடுத்து விட்டு, நகரம் ஒதுங்கி வழிவிட்டபின், அவன் யாரையும் நினைத்துக் கொள்ளாமல் தன் பாடலை இசைத்துக் கொண்டு வெளிரிய வீதிகளில் சென்றான்.

மழையில் ஊறிப் போன காகிதங்கள் நகரத்தின் சுவர்களில் அழுக்காய் ஒட்டிக் கொண்டிருந்தன. கருப்புநதிச் சாலைகள் குளிர்ந்திருந்தன. பெருநகரத்தில் எங்கோ ஓரிடத்தில் பாதாளம் செல்லும் வழியைக் காவல் காத்திருக்கும் மூடி ஒன்று யாராலோ திறக்கப்பட்டிருக்கும். அவன் அதை நோக்கியே தான் பாடலைப் பாடிக் கொண்டு சென்றான். கீழ்மையின் அத்தனை அழுக்குகளும், கழிவுகளும் கொடும் நாற்றத்துடன் சீறிப் பாய்ந்து ஆக்ரோஷமாய் அடித்து ஓடும். அந்த பாதாள அனல்நதியின் படித்துறையில் அவன் தன் பாடலுடன் இறங்கினான். அடியாழத்தில் அவன் மூழ்கிப் போனான். அவனுடைய பாடல் மட்டும் நறுமண சுகந்தத்துடன், அந்த இருள் பாதையில் தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.

Monday, January 12, 2015

மரணத்தின் பனிமலர்.

தியொன்றின் இடைவிடாப் பெருக்கில் மூழ்கியே இருக்கும் வழுவழுப்பான வடிவமற்ற கல்லொன்றை எடுத்து முகர்ந்து பார்த்தது போன்ற வாசத்தில் மரணம் என் அருகிலேயே அமர்ந்திருக்கின்றது. துயரையும் கண்ணீரையும் போல் என்னைப் பிரியாது என்னுடனே அலைகின்றது. சுவர்க்குருவியின் நள்ளிரவுக் கூவலைப் போல, யாரும் எதிர்பாராத கணமொன்றுக்காகக் காத்திருக்கின்றது, என்னைத் தொட. அதன் குளிர் ஸ்பரிசம் தோல் மேலே பனிக்கட்டியின் பாரம் போல் மெல்ல ஊடுறுவும். வெளியே கரைந்து கொண்டே இருந்து, உள்ளே ஒரு கூர்நுனி ஊசி போல் இறங்கிக் கொண்டே நரம்புகளில் படர்ந்து உள்ளுருக்கும்.

சுருண்ட இலைச் சருகுகள் மிதக்கும் நதி உடல் மேலே. அடியாழத்தில் காலத்தின் கூழாங்கற்களைப் போல அசைவிலாது அமிழ்ந்திருக்கும் மரணத்தின் காலடிச் சுவடுகள். ஈரமான மண்ணில் பிடித்து வைத்த உருவங்களை அக்காலச் சுழல் தன்னுள் கரைத்துக் கொள்ள அனுப்பும் நுரையிதழ்களே இறப்பின் கண்ணிகள்.

கரைகளில் படியும் குளிரின் பொழுதுகளில் கால்களைச் சுருக்கிக் கொண்டு அமர்ந்து நதி போகும் பாதையைப் பார்த்திருக்கிறேன். நிறைந்த பெருங்காமத்தில் நிரம்பி வழிந்த மதுரம் போல பெரும் ஆவேசத்துடனும் பெரும் வியப்புடனும் பேரிரைச்சலுடனும் நீராழி பொங்கிப் பிரவாகித்து ஓடும் பேராறு அடங்காப் புரவிகளின் கட்டற்ற கூட்டத்தின் தழுவல்களாகவே எனக்குத் தோன்றுகின்றது. பிடரிமயிர் சிலிர்க்கப் புணரும் நீலக் குதிரைகள் பீய்ச்சும் வெண்ணுரைகள் கரைகளெங்கும் படிந்து படிந்து ஓதம் பரப்பும் மணல்வெளிகளில் மரணம் தன் விஷக்கைகளில் வலை ஒன்றைப் பின்னிப் பின்னி வைத்துக் கொண்டிருக்கின்றது.

நதியின் மேலே நடனமிடும் பொற்கதிரின் புலரிக் கணங்கள் வானெங்கும் பிரகாசிக்கும் கோடி கோடி பொன்னூசிகளால் நதியைத் துளித்துளிகளாக உறிஞ்சி உறிஞ்சி தன்னை நிரப்பிக் கொண்டு மாலைகளில் உதிரமுகில்களாக விட்டுச் செல்கின்றன. கருஞ்சிமிழைத் திறந்து வெளிவரும் வெள்ளித்துளி நறுவாடை புனைந்து நகரந்து செல்லும் இரா நேரங்களில் குளிர் வரும் தெருவில் முக்காடு போட்டுக் கொண்டு அவன் காத்திருக்கிறான்.

Friday, May 23, 2014

இருப்பிலிருந்து இன்மைக்கு.

நேற்று ஜெயநகர் நான்காம் பகுதிக்குப் போயிருந்த போது ஒரு கோல விரிப்பைப் பார்த்தேன். அழகழகான பரிபூர்ண வடிவங்கள். இது போன்ற கோலங்களை ஒருவர் விரலெடுத்து வரைய வேண்டுமெனில், அக்கரங்கள் வருடக்கணக்கான பயிற்சியும் விரல் நுனிகளில் துல்லியமும் கைக்கொண்டிருக்க வேண்டும். இங்கே சிறு வடிவத் தட்டுகள் அப்பணியை நொடிகளில் செய்து விடுகின்றன. கோலமாவை அள்ளிப் பரப்பத்தெரிந்தால் போதும்.

கைகளால் கோலம் போடுகையில் இன்மையிலிருந்து ஓர் இருப்பை - கோலம் என்ற இருப்பை - உண்டாக்குகின்றோம். இத்தட்டுகள் இந்த தடத்தின் தலைகீழியைத் தம் நுட்பமாகக் கொண்டுள்ளன. தட்டு முழுதும் நிரம்பி, வர வேண்டிய வடிவப் பகுதி மட்டும் இன்மையாகத் துளைகளால் உள்ளது. இந்த சார்ந்த இன்மை வழியாக மூலப்பொருள் இடப்பட்டு ஓர் இருப்பு உண்டாகின்றது.

பிரபஞ்சத்தின் ஓர் உண்மை எளிமையாக இங்கே.

லட்சக்கணக்கில் வீடு கட்டுகிறோம். அங்கே பயன்படுத்துவது என்னவோ, உள்ளிருக்கும் காலி இடத்தைத் தான். தங்கச் செம்பில் அள்ளிப் பால் அருந்துகிறோம், உள்ளே இருக்கும் வெற்றிடத்தில் நிரப்பி.

இன்மையும் இருப்பும் தனக்குள் தன்னை நிரப்பிக் கொண்டுள்ளன. இரண்டு நிலைகளிலிருந்தும் நழுவிக் கொண்டிருப்பதாக நாம் நினைப்பதெல்லாம் மற்றொரு நிலையில் தான் சென்று சேர்கின்றது.

Thursday, January 21, 2010

ஒரு குரலும் மற்றொரு மழைத்துளியும்!

லகப்புகழ் பெற்ற ஓவியத்தில் இருந்து ஒரு குரல் பிரிந்து, திசைகள் பற்றிய பிரக்ஞையின்றித் திரிந்தது. ஒரு செயற்கைக்கோளின் மேல் இடித்துக் கொண்ட சின்ன மேகத்தின் விளிம்பில் இருந்து வழுக்கி விழுந்த மழைத்துளி ஒன்றோடு அதற்குச் சிநேகம் உண்டானது.

ஒரு பியானோவின் இடுப்பில் நெருக்கமாய்த் திணிக்கப்பட்டிருந்த வெளுத்த மற்றும் கருத்த கட்டைகளின் இடைவெளிகளில் அவை இரண்டும் துரத்திப் பிடித்து விளையாடிய போது, செழித்து வந்த சிம்பொனியை ரகம் பிரிக்க முடியாமல், ராகக் குறிப்புக் காகிதம் குழம்பியது.

வெப்பம் வெளியேற்றும் குளிர்ப்பெட்டியின் முன் நின்று தற்கொலை செய்து கொள்ளத் தயாரான துளியைக் குரல் கவ்விச் சென்று, அதற்குச் செந்திரவம் வாங்கிக் கொடுத்தது.

வரப்பு ஒன்றில் ஊர்ந்து கொண்டிருந்த மண்புழு, பாய்ந்து வந்த வெள்ளத்திற்கு அஞ்சி, மடங்கி மடங்கி நகர்ந்து செல்வதைக் கண்டு உறைந்த குரலைக் குருவிக் கூடுகளில் உறங்கிய துளி கிளப்பிக் கொண்டு வரப் பெரும்பாடு பட்டது.

மின்சாரம் அற்றுப் போன ஒரு முன்னிரவில், தொலைக்காட்சி முக்காட்டின் மேல் நின்று கழிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் அருகில் தலை எரிந்த சில தீக்குச்சிகளைக் கண்டு, குரல் பேச்சற்றுப் போன போது, மழைத்துளி, சுருண்ட பூக்களால் கோர்க்கப்பட்டிருந்த மாலை தொங்கிய ஒரு புகைப்படத்தின் கண்ணாடியில் தன் பிம்பத்தைக் கண்டு பிரமித்துக் கொண்டது.

வானம் நோக்கித் திறந்திருந்த குழாய்களிலிருந்து சுருள் சுருளாய் மனிதர்கள், கழுத்துப் பட்டைகளோடு வரிசையாக நகர்ந்து கொண்டிருப்பதை, மழைத்துளி சொல்லிய போது, சாக்கடையின் நுரைகளில் முகம கிழிந்திருந்த ஒரு புகைப்படம் மிதந்து வந்ததைப் பார்த்தது குரல்.

ஊமையள் ஒருத்தி, தன் முதுகில் ஊர்ந்த காட்டெருமையைத் தள்ளி விட்டுத் தான் எழுதும் சிறுகதையைத் தொடர்ந்தாள். அவளது திரண்ட மார்புகளின் வெண்மை, குரலை மயக்கம் கொள்ளச் செய்த போது, துண்டான எருமையின் கொம்பு மேல் சொகுசாய்த் துளி உட்கார்ந்து கொண்டு, சொட்டிய ரத்தங்களை எண்ணியது.

உதடுகளைக் கடித்துக் கொண்டு, தன் அழுகையை அடக்கும் சிறுமியின் விரல்களை அடிக்கும் ஆசிரியையின் வலது கையை ஒரு கொசு கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ந்த மழைத்துளியைக் குரல் உறிந்து விட, ஓவியத்தில் இருந்த மர்மப் புன்னகைப் பெண் ஒரு முறை தும்மியதை, வரலாற்று ஆய்வாளர்கள் குறித்துக் கொள்ளத் தவறினர்.

Wednesday, December 23, 2009

உருகி ஊற்றட்டும்.



ந்தச் சிவந்த ரோஜாக்கள், பறக்கின்ற தேவதைகளாகி, அழகின் வருகையை அறிவிக்கட்டும். கூரிய அம்பெனப் பரந்து நிரப்பும் கதிர்க் கூச்சல்கள், தாயைப் போல் இந்த பூமியைத் தழுவட்டும். பொழிகின்ற பனித்துளிகள், எப்போதுமான பச்சையைக் காலையின் இலைகளிலிருந்து கழுவட்டும். யுக, யுகங்களாய் நிமிர்ந்து நிற்கின்ற மாமலைகள் சத்தியத்தின் பழமையைச் சொல்லட்டும். நுரை ததும்ப ஓடும் பெருநதிகள், இயற்கையின் என்றும் நில்லா இயக்கத்தை விளம்பட்டும்.

அந்தரத்தில் மிதக்கின்ற கருங்கொண்டல்கள் நம் எல்லோருக்குமான தாகத்தைச் சுமக்கட்டும். கோடானு கோடி வைரப் பூச்சிகளால் நிறைந்திருக்கும் இரவு ஆகாயமே, பாதரசக் துளிகளைச் சொட்டிச் சொட்டி ஊசிக் குளிரால் துளைக்கட்டும். வெள்ளித் தகடுகளாய்ச் சரியும் வெயில் பாளங்கள் , முத்தெனத் துளிர்க்கும் மெல்லிய முடிகள் வருடும் சிறு செடிகளைக் குடிக்கட்டும். ரகசியமாய் நனைகின்ற கடுமழைக் காலங்களில் கவிந்த இருள் காடுகளின் பேரமைதியைச் சில்வண்டுகளின் ரீங்காரங்கள் சுவைக்கட்டும்.

பெருத்த மெளனம் பூசிய பிரபஞ்சத்தின் மற்றொரு மூலையில் ஓர் இராக்காலக் குயில் சோகத்தைச் செருகிய ஒற்றைக் குரலில் கூவும் போது, மதுரமான ஒரு மாலையின் பொன் கீதம் என்னில் படர்ந்து பருகும் போதும், உருகி ஊற்றட்டும் என் உடல்.

Thursday, December 17, 2009

சுட்டாலும் மேன்மக்கள்...

வெயில் பட்டையில்
எச்சில் துப்பினேன்.
வானவில் காட்டியது.

Saturday, December 12, 2009

ஆயிரமாயிரம் துளிகள்...!!!

ல்லிகை முத்துக்கள் வெண்ணிற விளக்குச் சுடர்களின் தலைகீழாய் நின்றன. ஒன்றன் பின் ஒன்றாய்ப் பனிச் சுழிகள் மெல்ல நகர்ந்து கொடிகளின் மென்மையான பசிய உடல்களை நனைத்து தீர்ந்தன. துல்லியப் பனிச் சரகம் ஒன்று மதுக் குப்பி மணம் போல விரவிக் கொண்டிருந்தது. உள்ளார்ந்த மடிப்புகளோடு வளைந்து சரிந்த மலை முகடுகளின் நிழல் ஒதுங்கிய ரகசிய ப்ரதேசங்களில் கனவுகள் தாழிடப்பட்டிருந்தன. மிதக்கும் ஈரக் கொத்துக் கொண்டல்கள் தம் நுரை தேகங்களில் குளிர் பதுக்கிச் சிலிர்த்தன. இன்னும் நீலம் கரைந்திராத பிரபஞ்ச வானம் ஒன்றின் தனித்த நிலவு, அதன் மேனிக்குள் பொதிந்து வைத்திருந்த பால் நுரைகளைத் ததும்பத் ததும்ப பொழிந்து கொண்டிருந்தது.

வனத்தின் மேற்கேயிருந்த மூலைகளில் இருந்து பெயர் தெரியாத நுணுக்க ஓசைகள் கிளம்பி வந்தன. புகையும் ஒரு குளிரின் மரகத ஆடைகள் தம் ஜரிகைகளில் எழுதிக் கொள்ள தூரத்துச் சிகரங்களின் விளிம்புகளில் கோடிட்டிருந்த மஞ்சள் ரசத்தைத் வழித்து எடுத்துக் கொண்டன. ஓடும் மழை மேல் வானிலிருந்து ஒரு நதி செங்குத்தாய்ப் பாய்ந்து கொண்டிருக்கையில், ஆயிரமாயிரம் நீர்ச்சிலந்திகள் எங்கெங்கும் ஜனித்து உடனே கரைந்தன.

கொத்துக் கொத்தாய்த் தலைக்கு மேல் திரண்டு விட்டிருந்த முகில்கள் தமக்குள் முத்தமிட்டுக் கொள்கையில் நனைந்த பூமியின் ஒரு மேலாடை செம்பழுப்பாய்க் கரைந்து ஓடியது. திசைகளில் சொல்ல முடியாத நேரங்களில் இடிகளின் ஆவர்த்தனங்களில் காட்டின் பூக்கள் நடுங்கின. மரங்களின் இடுக்குகளில் கனிந்த இருள் பச்சை நிறத்தோடு நனைந்தது. மாலை நேரத்தின் மந்தகாச மரணம் மெல்ல மெல்ல மலர்ந்து கொண்டிருக்க, கருமை தடவிய இரவின் பிறப்பு மழை சொல்லும் வார்த்தைகளோடு இரைச்சலாய் நிகழ்ந்தது.

தாரை தாரையாய் ஊற்றும் நேர்க் கோடுகளில் சலசலக்கின்றது இம்மாமழை. பெய்யும் போதும், பெரு மரங்களின் பட்டைகளைப் பறித்துக் கொண்டு பாய்கின்றது. சின்னஞ்சிறு செடிகளைச் சுற்றி வட்டம் போட்டுக் கரைத்து ஓடுகின்றது. மண் மேடுகளின் மேனி தழுவி, அணைத்து, தன்னோடு உள்ளிழுத்து, பாறைகளின் மேல் 'ஹோ'வென மோதி, கோடானு கோடி நுரைகளாய்த் தெறிக்கின்ற போது, அத்தனைத் துளிகளிலும் ஆயிரம் மழைப் பிம்பங்கள் பதிகின்றன.



***

இவன்..!

மழை ரகளை.

ஒரு மழை நாளின் இரவில்.

மழை பொழிந்த வானமும், மனதில் கிளர்ந்த கானமும்..!

மழை பெய்தலினால்...!

தூறல் போடும் மேகங்கள்.

பனி விழும் மலர்வனம்...

Monday, February 16, 2009

ஒரு பன்னீர் மரமும், சில வெள்ளித்துளிகளும்..!

லசலவென குளிர் இறங்கிக் கொண்டிருக்கின்றது. மலையின் சரிவுகளில் என்னோடு சேர்ந்து நடந்து வந்த காற்றை நிறுத்திக் கேட்டேன். ' எங்கே நீ வருகிறாய்..?'

காட்டாறு வேகவேகமாய் உருண்டுத் திரண்டு, நுரையோடு தரையோடு கிடைத்த பாதைகளில் எல்லாம் புகுந்துப் புறப்பட்டு பாய்ந்து வருகின்றது. நெடுமரங்களின் வரைய முடியாக் கோணங்களில் கிளைத்திருந்த கிளைகளில் இருந்து விழுந்த சருகுகள் மிதந்தோடுகின்றன. உச்சிகள் அடிவாரங்களுக்கு அனுப்பும் பூக்களும், பச்சை இலைகளும், செம்மண் கரைசல்களும் கொழித்துச் செழித்து பளபளத்துக் குதூகலமாய் புரண்டு வரும் ஒரு காட்டாற்றின் கரையில் நின்று கைகள் கழுவிக் கொண்டேன். காற்றும் என்னோடு சேர்ந்து கொஞ்சம் குளிர் ஏற்றிக் கொண்டது.

நடக்கத் தொடங்கினேன். எங்கோ சென்று தன்னந்தனியாகக் கேட்க காதுகள் அற்று வனத்தின் இருளான பிரதேசங்களில் அலைந்து கொண்டிருந்த குயிலோசைகளையும், குழலோசைகளையும் சுமந்து வந்து வாசித்துக் கொண்டே கூட நடந்தது, காற்று.

தனக்கொரு நண்பனையும் இழுத்துக் கொண்டது.

வைகறைப் பொழுதுகளில் வானின் போர்வைக்குள் இருந்து விலகி, அடுக்குகள் வழியாக அணிவகுத்து, சிவந்த ரோஜா இதழ்களை நிரப்புமே அதிகாலை சுகந்த வாசம், அதைத் தான்!

கீச்சுகீச்சென ரீங்காரங்கள் இட்டு கும்பல் கும்பலாய் ஆகாயத்தின் அந்தப்புரம் வரை சென்று அலசிவிட்டு தலை சுற்றும் வரை பறந்துக் களித்தாடும் சிட்டுக் குருவிகளின் கூட்டம் ஒன்றைக் கண்டேன். ஆஹா..! என்ன அழகு..! கைகளில் இருந்து வாரிச் சரித்த முத்துப் பரல்கள் இறக்கை முளைத்து, சிடுக்குகளில் நுழைந்து, வானின் இடுக்குகளில் உட்புகுந்து சந்தோஷக் கூச்சலிடும் சின்னஞ்சிறு அழகிகள் அவர்கள்.

மைனாக்களை மட்டும் குறை சொல்ல முடியுமா..? 'முடியாது தான்..' என்றது காற்று.

கறுப்புக் குயில்களோடு அவை கூட்டணி கொண்டு, ஒரு ராக ஆலாபனை அல்லவா செய்கின்றன..? சோக இழைகளைக் கொண்டு நெய்யும் இனிய ஸ்வரங்களை அள்ளி அள்ளி, ஒரு பட்டுப் பாட்டை அவை வடிவமைத்து வாயசைக்கும் போது கருங்கல்லால் செய்த கண்களில் இருந்து கசிகின்ற கண்ணீருக்குள்ளும் இறங்கும் ஒரு குளிர்..!

எத்தனை எத்தனை நிறங்களில் மலர்கள் இங்கே படர்ந்திருக்கின்றன..! சொல்லி முடிப்பதற்குள் என்னை விட்டு ஓடோடி தன் ஆயிரமாயிரம் கரங்களால் அத்தனை பூக்களையும் அள்ளி அள்ளி முத்தமிட்டது காற்று! தலையாட்டி, புன்னகை முகம் காட்டி, சரசரவென ஆனந்த சொற்களை வாரி இறைத்து சிரித்தன அவை..!

ஜ்வால நெருப்பாக ஜொலிக்கும் சூரியகாந்திப் பூக்கள் எத்தனை..! அடிவானச் சிவப்பை அள்ளிப் பூசிக் கொண்ட ரோஜாக்கள் எத்தனை..! பால் நிலவின் பொழிவின் போது மெல்லத் திருடிக் கொண்டு பகல் பொழுதில் பந்தி விரிக்கும் மண மல்லிகள் எத்தனை..! முதல் பரு முளைக்கும் பெண்ணின் கன்னம் கனியும் மஞ்சள் வர்ணத்தில் மலர்ந்திருக்கும் நந்தியாவட்டைகள் எத்தனை..! இன்னும் பெயர் சூட்டிக் கொள்ளாத, ஜாதி மாட்டிக் கொள்ளாத லட்சக்கணக்கான வாசனை வசந்த அழகு மலர்கள் எத்தனை...!

இங்கேயே அமர்ந்து இந்த தெவீக எழிலில் மனம் தோய்ந்து களித்திருக்கலாமே என்றேன். 'கூடவே கூடாது. சென்றே ஆக வேண்டும்..' கட்டாயமிட்டது காற்று.

முன்னொரு காலத்தில் மெல்லிய சிற்றோடை ஒன்று ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த சரளைக்கற்கள் நிரம்பிய ஒற்றையடிப் பாதையில் கால்களை அழுந்தி அழுந்தி இறங்கிக் கொண்டு இருந்தேன். கால்கள் அற்ற காற்று தன் காண இயலா உருவால் வழியில் இருந்த புன்னை மரங்களையும், அசோக மரங்களையும், ஆலங்களையும், வேலங்களையும், அரசனையும், மல்பெரி, ஆப்பிள், சந்தன மரங்களையும் இன்னும் சரித்திரம் சந்தித்திராத பெருமரங்களின் பெயர்களை எனக்கு மட்டும் சொல்லிச் சொல்லித் தடவித் தடவித் தழுவிக் கொண்டே வந்தது.

எங்கோ உடல் இருக்க, எங்கோ கிளைகள் வளர்ந்திருக்க, எங்கெங்கோ வேர்கள் படர்ந்திருக்க... நகரா அதிசயங்கள் இந்த மரங்கள். சூடான வெயிலை உறிந்து கொண்டு, குளிரான நீரை கவர்ந்து கொண்டு, வாசமான மலர்களைச் சொறிந்து, வளமான கனிகளைக் கொடுத்து வெயில் தடுத்த நிழல் ஈந்து, லட்சோபலட்சம் லட்சோபலட்சம் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தாயான தயாபர தருக்களே..!

இதந்தரும் பதந்தரும் சுகம் தரும் பல விதம் தரும் அமுத ஆபரணங்கள் சூட்டிய மகாராணிகளும் உனக்கு ஈடாக முடியுமா..? 'ஆமாம்.. முடியவே முடியாது..' என்று ஆமோதித்தது காற்று.

பஞ்சுப் பொதிகளை எங்கிருந்தோ விரட்டிக் கொண்டு வந்தது மற்றொரு காற்று. அவை அயல் தேசத்து மேகங்கள். கடத்திக் கொண்டு வந்து, கவின் மலை உச்சிகளோடு 'தடாலென' மோதி சாரல் மழைகளைப் பொழிய வைக்க குளிர் சுமக்கும் முகில்களைத் தள்ளிக் கொண்டு வந்திருந்தது அது. இரு காற்றுகளும் சந்தித்துக் கொண்டன. சுழல் பூமியில் முத்தமிட்டுக் கொண்டன. என்னோடு வந்தது ஆண் புயல்; எதிரில் வந்தது பெண் தென்றல்.

ஒன்றையொன்று சுற்றிச் சுழன்று அன்பு ததும்ப சருகுகளையும், பூக்களையும் தம்மோடு இணைத்து ஆவேச ஆராதனைகளில் ஆழ்ந்தன. இடையூறு செய்யாது, தனித்து விடப்பட்ட வெண் மேகங்களை காணத் தொடங்கினேன்.

ஏகாந்தப் பெருவெளியில் ஏகதேசம் கடந்து எங்கோ சென்று கொண்டிருக்கும் மழை மூட்டைகளே..! கொஞ்சம் என் மேலும் சில துளிகளை எச்சமிடக் கூடாதா..? புத்தொளிர் புது மண நீர்த் துளிகளால் என்னை நனைத்துக் கொள்வேனே..!! சுருள் சுருளான வலைப் பின்னல்களில் உருவம் இல்லாத, வடிவம் கெட்ட அருமை மேகங்களே..! அந்தி மாலைகளில் அள்ளிப் பூசிக் கொள்ளும் ஆதவனின் மயக்க மஞ்சள் நிறத்திற்குப் பதிலாக நீங்கள் தரும் பதிலென்ன..? மெல்ல அவனை மூடி எதை மறைக்கிறீர்...? நீல வான நிறை நாட்களில் நீங்கள் எங்கே சென்று விடுகிறீர்கள்..? அதோ அங்கே ஓடும் சிற்றோடையைத் தந்த மேகம் எங்கே..? நீரே நீராக, நீரே சேறாக, சேறே ஆறாக, யாவும் நீங்கள் ஆடும் ஆனந்தத் தாண்டவ வடிவங்களோ...?

பதில் சொல்வதற்குள் என்னை முறைத்துக் கொண்டு, என் கேள்விக் கொக்கிகளில் இருந்து பறித்துக் கொண்டு அவற்றை அள்ளிக் கொண்டு பறந்து சென்றது தென்றல். 'போகலாமா..?' கேட்டேன். களைப்பும், களிப்பும் ஒன்றிணைந்த போதையில் தலையாட்டியது காற்று.

வனத்தின் எல்லை வரை என்னை உருட்டிக் கொண்டு வந்து விட்டது. அதைத் தாண்டி குழப்பக் காட்சிகள் தெரிய, 'இனி நான் எப்போது மீண்டும் வருவது?' கேட்டேன்.

சில வெள்ளித் துளிகளை எடுத்துக் கொடுத்து, என் கைகளில் அழுத்தி வைத்தது. 'இந்தத் துளிகள் இறுகி மீண்டும் பொலிகின்ற வெண் காசுகளாய் கலகலக்கும் பொழுதில் உன்னை அழைத்துக் கொள்வேன். இப்போது சென்று வா!' என்றது காற்று. தன் வலுக் கரங்களால் முடிவின் புள்ளியில் வாய் திறந்து வளர்ந்திருந்த ஒரு பன்னீர் மரத்திற்குள் அழுத்தி அனுப்பி வைத்தது.

குளிர்ப் பண்ணையில் குவித்திருந்த இலைச்சரங்களை எடுத்து வரிசை கட்டிய மாலைகளின் ஸ்பரிசம் பட்டதும் விழித்துக் கொண்டேன்.

Tuesday, February 10, 2009

ரத்ன ராத்ரியில் ஒரு பயணம்!

வைரத் திரிகளாய் வானில் பொறிந்து கொண்டிருந்தன விண்மீன்கள். பெரும் கருந்திரை கவிழ்த்த பூமியின் முகத்தை மறைத்த இரவெனும் இராஜ்யத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்த மஹா பெளர்ணமி ராவில் மெல்ல நடந்து கொண்டிருந்தேன்.

பாதைகள் அற்ற ஒரு மலைப்பரப்பு அது. அங்கே நீல நிறத்திடை மிதந்து கொண்டிருந்த பேரழகிப் பதுமையாய் வெண்ணிலா. அந்த மந்திர மாயமோகினியின் மயக்கும் பாலமுதுப் பொழிவிலே குளிரக் குளிர நனைந்து கொண்டிருந்தேன். அவள் மகராணியா..? இல்லை பொலிவின் மணம் வீசும் இளவரசியா..?

மோகனமே மெல்லென உருவெடுத்து வந்து முகம் காட்டும் மாசறு நல்லெழிலா..? மனம் வருடும் சுந்தர மதுர கானத்தைத் திரட்டி, கட்டி செய்து வைத்த பிரம்மாண்ட வெண்முத்தா..?

மென் மஸ்லின் துணி முகமறைப்புகளென சாம்பல் மேகங்களை அள்ளி அள்ளி அவள் போர்த்திக் கொள்ளக் காரணம் அவள் அகத்தில் மறைந்திருக்கும் வெட்கமா..? தென்றல் காற்றைக் கைக் கொண்ட அவள் அவ்வப்போது திரை விலக்கிச் சிரிக்கின்றாள். அந்த முழு வெண்மையின் பரவச ஒளித் தழுவலில் சொட்ட சொட்ட நனைந்து கொண்டிருந்தேன்.

பச்சை வர்ணங்களின் மேலெல்லாம் இருள் கலந்த மரக்காட்டின் மத்தியிலே தளும்பிக் கொண்டிருந்தது ஒரு குளிர்க்குளம். அதன் கரைகளில் வந்து மோதிக் கொண்டிருந்த அலைகளின் நுரைகள் திரண்டிருந்த வெண் சாற்றை அணிந்து கொண்டிருந்தன. ஆஹா..! அந்த நீர்ப்பூம்யின் மேல் ஒற்றைக்கால் நர்த்தனம் ஆடும் அல்லி மலர்களின் அழகைத் தான் எப்படிச் சொல்வது...?

மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு மாலை நேரத்தில் ஜன்னலோரத்தில் இள நங்கை அமர்ந்திருப்பாள். அவள் கண்கள் யாரையோ தேடித் தேடிக் களைத்திருக்கும். சற்று பொழுதில் அவளது கள்ளமற்ற மனம் கவர்ந்த கள்வன் வருவான். அவனது உருவம் கண்டதும் நங்கையின் விழிகள் எத்தனை பரபரப்படையும்...! அவனைக் காணவும் வேண்டும்; அவனைக் காண்பதை ஊரார் காணாதிருக்கவும் வேண்டும்; அவன் அறிவானோ, அறியானோ.. அந்த உள்ளத் தவிப்பையும், இருதயத் துடிப்பையும் அந்த பெண்ணை அன்றி யார் தான் முழுதாக அறிய முடியும்..?

அல்லி மலர்களின் நிலையும் அவளை ஒத்திருந்தது. ஜன்னல் கம்பிகளைப் போல், அசைந்து கொண்டிருந்த தென்னை இளங் கீற்றுகள் நீண்டு கிளைத்திருந்தன. அவற்றின் இடைவெளிகளில் அந்த அழகுச் சந்திரனின் வெண்ணிறத் திருவுருவத்தின் ஒளி வருகிறது. அதன் சில்லிப்பு பட்ட உடனே அல்லி மலர்கள் மெல்ல மெல்ல தம் மொட்டவிழ்த்து, இதழ் திறக்கின்றன. மதுரமான மகரந்த சுகந்தம் காற்றின் மேலெல்லாம் கலந்து, கரைந்து எனக்குள் கிளர்வூற்றுகின்றன; அவற்றின் காதல் நாடகத்தை மேலும் கண்டு வெண்ணிற அல்லிகளின் மேல் வெட்கச் சாயம் பூச விரும்பாமல் நடந்தேன்.

வெகு தூரத்திலே மலைத் தொடர்கள் தென்பட்டன. அவற்றின் விளிம்புகள் தான் எத்தனை வளைவு..? மேகம் மோதி மோதி மோகம் அலையலையாய்ப் பரவி, தன் ஆயுள் ஊற்றைத் திறந்து பெய்யும் மழையால் நனைத்துக் கொண்டிருந்தன. எங்கோ பெய்யும் அதன் வாசம் இங்கே அடித்தது.

சலசலவென ஈரம் கவிந்த குளிர் அணுக்களை நிரப்பிக் கொண்டு குதூகலமாய்க் கும்மாளமிட்டு, ஓடி வந்து என்னுள் நிரம்பி, என்னை நிரப்பி, என்னைக் கடந்து சென்று கொண்டேயிருந்தது காற்று. எத்தனை குஷி அதற்கு..? கேட்க யாருமற்ற சிறு பிள்ளை போல், கவனிக்க என்னைத் தவிர வேறொருவரும் இல்லாத இந்த மழை இரவில் இதன் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்..?

ஒரு நேரம் அமைதியாய் வந்தது; உடனே அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த மரங்களின் இடையில் எல்லாம் புகுந்து கிச்சுகிச்சு மூட்டியது; இலைகளை எல்லாம் சலசலக்கப் பண்ணியது; பனி விழுந்து நனைந்து, கவிழ்ந்து கொண்டிருந்த மஞ்சள் பூக்களுக்கு எல்லாம் முகம் துவட்டி விட்டது; துளை விழுந்திருந்த மூங்கில் உடல்களின் உட்புகுந்து இரவின் மெளன ராகத்தைக் கட்டி எழுப்பியது; மகாராஜா வரு முன் வரும் கட்டியக்காரன் போல், மழையரசன் வருகின்றான்; மழையரசன் வருகின்றான்' என்று முழங்கிக் கொண்டே என்னைத் தாண்டி சென்றது இளங் காற்று.

Monday, December 01, 2008

சுவை எறும்புகள்.

ங்கிருந்தாலும்
மூக்குகள் வேர்த்து
விடுகின்றன!

கடையில் இருந்து
வாங்கி வந்து,
கவர் பிரித்து,
ஒரே ஒரு
பிஸ்கெட்
சாப்பிட்டு,
மாடிக்குச் சென்று
வருவதற்குள்...

மூக்கு வேர்த்த
எட்டுக்கால்
எறும்பு வீரர்கள்
சுறுசுறுப்பாய்,
பரபரப்பாய்...!

பள்ளங்களிலும்
மேடுகளிலும்,
ஏறியும்,
இறங்கியும்..

வளைவுகளில்
வளைந்தும்,
நேர்கோடுகளில்
மிடுக்கான வரிசைகளிலும்
செல்கின்றன.

எதிர்வரும்
நண்பர்களை
முத்தமிட்டு,
முகமன் கூறி,
செய்தி சொல்லி,
வேக நடை
போடுகின்றன.

வெண்ணை தடவிய
வாசம்
முகர்ந்து,
ஜாம் மினுக்கும்
இனிப்பை நுகர்ந்து...

கூட்டம் கூட்டமாக
விறுவிறுவென
மேய்ந்து,
இனிப்பின்
போதையில்
மயங்கிக் கிறக்கத்தில்
ஆழும்
இந்த எறும்புகளின்
பெயர்கள் என்னவென்று
அறியாத
என்னைப்
போல் இன்றி,
என் பெயரை
அவை
அறிந்து
கொள்ளட்டும்
Chaoxiang
என்பதை..!

Sunday, November 30, 2008

மழை ரகளை.








காலையில் கொளுத்திய பதினொரு மணி வெள்ளை வெயிலில் முகம் கருக்க, கைகள் கருக்க விளையாடி விட்டு, களாத்து அறைக்கு வந்து, பொத்தென்று விழுந்து, படுத்து கனவுகளில் உலாப் போய்க் கொண்டிருந்தவனை திடுக்கென எழுப்பின சப்தங்கள்..!

செமத்தியான மழை..!

வானின் விரல் நீட்ட முடியாத திசைகளில் இருந்து எல்லாம் மின்னல்கள்...! காற்றின் அணுக்களின் மீதெல்லாம் அவசர (330 மீ./வி.) வேகத்தில் பிரயாணித்து, செவிப்பறைகளை மோதி மோதித் திறந்த இடியோசைகள்..! ஆகாயக் கரும் பஞ்சுப் பொதிகள் கரைந்து, கிளர்ந்து, நொறுங்கி, நுரைத்து, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான துளிகளாய், ஈரக் கம்பிகளாய் விழுந்து கொண்டே இருக்கின்றன.

எத்தனை கவிஞர்களின் கவிதைக் குழந்தைகள் பிறக்க, நீல வானப் பனிக்குடம் உடைந்ததோ இன்று..?

சூடு சுமந்து வெந்திருந்த வீட்டுக் கூரைகளில் இருந்து புகையாய்ப் பெருகி ஓடுகின்றது... உஷ்ணப் பெருமூச்சுகள்.

தோட்டத்தின் மணல் முகடுகள் கரைந்து காணாமல் போயிருக்கின்றன.

மரங்களின் இடுக்குகளில் இருந்தெல்லாம் ஆனந்தக் கூச்சலிடல்கள்...! உடலோடும், வேரோடும் ஒழுகும் நீர்ப் பிரவாகத்தில் தலை சிலிர்த்து, நூற்றுக்கணக்கான பச்சை இலைகளைப் புதுப்பித்து, மரங்கள் குளித்துக் கொண்டே இருக்கின்றன.

நாகரீகம் துப்பிய செம்மண் புழுதிகளைக் கழுவிச் சிற்றோடைகள், சாலைகளின் முனைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஜன்னல்கள் திரையிட்டுக் கொண்ட பின்னும், நீர்த் தாரைகள் மேலெங்கும் விழும் அதிர்வுகளைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன தகர.. நகர அரசுப் பேருந்துகள். யாரும் பார்க்கா நேரத்திலும், கம்பிகளின் துளிகள் அழகான வரிசையாய், நகர்ந்து... நகர்ந்து.. ஒற்றைப் பெருந் துளியாகி.. சொட்... சொட்...!

சாலைகளின் குழிகளில் மழை நிரம்பி, நீக்குப் போக்கற்ற சமதளம் பரப்பிக் காண்பிக்க, ஒல்லி சைக்கிள்கள் அறியாது, குழிகளில் விழுந்து, எழுந்து போகின்றன.

சாக்கு முக்காடு போட்டவர்கள், லுங்கி கட்டியவர்கள், வற்றிய உடலர்கள், பெட்ரோல் உறிஞ்சி வண்டியர்கள்... அத்தனை பேரையும் உச்ச வியாபாரம் கொள்ள டீக்கடைகளிலும், எண்ணெய் கொதிக்கும் பஜ்ஜிக் குமிழ்களிலும் கவனம் செலுத்தச் செய்து, நகரையே தனதாக்கிக் கொண்டு இராஜ நர்த்தனம் புரிந்து கொண்டிருக்கின்றது, இம்மாமழை!

பல வர்ணக் குடைகள், பல வடிவ ப்ளாஸ்டிக் கவர்கள் மேல் அணிந்தவர்கள் மேல் தாமரை இலைத் தண்ணீர் போல் மழை நீர் தழுவி, நழுவிச் செல்கின்றது. அண்ணாந்து பார்த்தால், ஏழு நிறங்களில் வானவில்..!

வானத்தின் வில்..!

என்ன ஓர் ஒத்திசைவு...!

யார் சறுக்கி விளையாட இந்த வளைவு..? கால் வட்ட அழகில், யார் கால் வைத்து ஏறி, இறங்க..? ஒவ்வொரு வர்ணத்திலும் விரல்கள் பதித்து அவற்றைக் கொஞ்சம், கொஞ்சம் களவாடி, என் வீட்டுக் க்ண்ணாடியில் பொட்டு வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

கோடுகளில் சாயம் தெளிக்கும் எழில் பூத்த இந்த நிறங்கள் எத்தனைப் பூக்களில் இருந்து ரசனை பார்த்து வரையப்பட்டிருக்கும்..?

யாருடைய எழு கண்ணாடி வளையல்களை உடைத்து, இந்த வானவில் அவசரமாக இப்படி கதிரின் எதிர்த் திசையில் ஒட்டப்பட்டிருக்கும்..? வளையல் உடைந்த சப்த கன்னியரின் கண்ணீர் தான் இந்த மழையா..? ஆஹா..! பகலில் மட்டும் தானே அவர்களின் வர்ணத் துயர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன..? இரவில் மழை பெய்தால், எந்த திசையில் தெரியும் இந்த வானவில்..? யாரோடும் சொல்லாத, ஊரோடும் இல்லாத அவர்களின் கண்ணீர், மேகங்கள் வழியே ஊற்றுகின்றதா..?

ஒருவேளை இந்த வானவில் துண்டுகள், அவர்களின் வளையல் மிச்சங்களா இல்லை இடையின் ஒட்டியாண ஒழுங்குகளா..? புகை புகையாய் அசைந்து கொண்டே நகர்ந்து கொண்டே இருக்கும் வெண் மேகங்களே, கேட்டுச் சொல்வீர்களா..?

ன்று எனக்கென்னவோ, இந்த மழை நேரத்தில் மனதின் பெரும் பரப்பெங்கும் ஈரம் ஊறிக் கொண்டேயிருக்க கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது, இப்பாடலை...!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

***

மழை பெய்தலினால்...!

ஒரு மழை நாளின் இரவில்.

இவன்..!

தூறல் போடும் மேகங்கள்.

Thursday, November 27, 2008

ஒரு க. ஒரு ஹை.

வள்
புருவங்கள்
நெருக்கமாக,
அடர்த்தியாக
இருந்தன.

அவற்றின்
நுனிகள்
அவள்
கண்களில் இருந்து
கூர்மையைக்,
கடன்
வாங்கியிருக்கலாம்!

ஓர் இரவில்
அதி நெருக்கத்தில்
பார்த்தேன்.

பதற்றப்
பரவசத்தில்
வியர்வைத் துகள்கள்
துளிர்த்திருந்தன.

இன்னும் நெருக்கம்.

ஓரங்களில் இருந்து
மெல்ல எழும்பி,
மத்தியில்
உச்சத்திற்கு
உயர்ந்து,
மறு எல்லையில்
சரிகின்றன.

அவற்றுக்கிடையே
மீக் குறைந்த
இடைவெளியே
இருந்தது.

அவளின்
Cleavage
போலவே!

இது
அவள்
புருவங்களைப்
பற்றிய
கவிதையாகவும்
இருக்கலாம்...!

***

ண்கள் குளிப்பிடம்.
ஷவர் கைப்பிடி மேல்
ஒரு பொட்டு!

Wednesday, October 22, 2008

மழை பெய்தலினால்...!

பெய்கின்ற
பெரு மழைக்குப்
பயந்து,
இறுக்கச் சாத்திய
ஜன்னலின்
இடுக்கு வழி
நுழைந்து,
ஒற்றை அறைக்குள்
சுற்றிச் சுற்றி
அலைந்து,
'சொத்'தென
அடிக்கப்பட்டு
இறந்தது
தடி புத்தகத்தால்
ஒரு பூச்சி!

***

மழை நின்ற
நிமிடங்களுக்குப் பின்
அடியில் நின்ற
அனைவரையும்
நனைத்து,
மரம் பெய்தது.

***

எண்ணெய் வழியும்
சாலை,
குரல் கொடுக்கும்
தகரக்கூரை,
நிறைத்துப் பாயும்
சாக்கடை,
தூசு நீங்கும்
கறுப்புக் குடை,
ஆவி பறக்கும்
மயானம்...
இல்லாத ஒன்றை
எடுத்துக் காட்டுகிறது,
திடுமென பொழியும்
மாமழை!

***

ஒரு கையில்
மழை பிடித்தேன்.
மறு கையில்
காகிதக் கப்பல்.
பார்த்தால்,
மழைக்கு
உள்ளும் கப்பல்.
வெளியும் கப்பல்.

***

வானம் அழுகிறது
என்கிறார்கள்.
தேவாசுரப் போர்
என்கிறார்கள்.
வருண பகவான்
வருகிறார்
என்கிறார்கள்.
பகல் மழையில்
நரிக்கு கல்யாணம்
என்கிறார்கள்.
மேகம் மோதும்
மின்சாரம்
என்கிறார்கள்.
அம்மோனியா தூவினால்
அமோகப் பலன்
என்கிறார்கள்.

பாயும் குதிரை,
கோமாளி,
அரக்க முகம்,
பூந்திப் பொட்டலம்,
யானை,
ரோஜாப் பூ,
தேர்,
அப்பா முகம்...

என்னென்னவோ
வடிவங்கள் காட்டினாலும்,
பூக்குடையைப் பிடித்து
வீதியில் நடக்கும்
அந்தச் சிறுமியை
நனைக்காது
எல்லா மேகமும்
ஒரே
மழையாய்ப்
பெய்கின்றன.

***

மற்றும் சில ::

ஒரு மழை நாளின் இரவில்.

இவன்..!

தூறல் போடும் மேகங்கள்.

Tuesday, October 07, 2008

வெண்பா முயற்சிகள் - 4.

ந்திரத்தால் மாங்காய் விழும் என்ற ஈற்றடிக்காக ::

மாமரக்கீழ் சீட்டாடி மண்டபத்தில் சாய்ந்துறங்கி
மாலைவரை காதைபேசும் மந்தமான மாந்தரவர்
எந்தவேலை யுஞ்செயாதோர் என்றென்றும் நம்புவர்
'மந்திரத்தால் மாங்காய் விழும்'.

கருவிழி இல்லாத கண் என்ற ஈற்றடிக்காக ::

முன்னம் அவரது முந்தானைப் பற்றியலைந்(து)
பின்னம் அவரது பேரன்பை! - அன்னை
அருகாமை இன்றி அலைகின்ற பிள்ளை
கருவிழி இல்லாத கண்.

Housing Bank Loan பற்றி முயன்ற வெண்பா ::

ஆதாரம் ஓரில்லம். ஆசையாய்க் கட்டபணம்
போதாமல் யோசிப்போர் தம்மால்மா தாமாதம்
வட்டியோட சற்கட்டும் வாய்ப்பு உறுதியெனில்
கிட்டிடும் வங்கிக் கடன்.

Monday, September 22, 2008

வெண்பா முயற்சிகள் - 3.

'தீயிற் கொடியதோ தீ' என்ற் ஈற்றடிக்கு மீண்டும் முயன்றதில், மேலும் சில வெண்பாக்கள் கிடைத்தன. ::

உணவுண்ணத் தோன்றா உடுப்பணிய எண்ணா
கனவிலுங் கூடலின்பங் கவ்வும் - தினமிரா
பாயிற் படுத்திளைக்கப் பற்றும் பசலைநோய்த்
தீயிற் கொடியதோ தீ!

"கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால், இலங்கையின்
கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ
தீஇல் கொடி!...அதோ தீ...!"

'சோம்புவதால் உய்வுண்டோ சொல்' என்ற ஈற்றடிக்கு எழுத முயன்றதில் ::

சும்மா இருந்திட்டால் சோறு வருமாநீ
கம்மாக் கரையில் கடிதுழை - நம்மபூமி
சொம்பு நிறையுமாறு சொர்ணரி தந்திடுவாள்
சோம்புவதால் உய்வுண்டா சொல்?

ஈரத்தில் ஓர்விறகாய்ச் சும்மாயி ருந்தவன்மேல்
பாரமாய்ப் பாய்ந்தவள் கேட்டாள் - "விரகத்தில்
காம்பும் கனியும்! கசங்காப் படுக்கையில்
சோம்புவதால் உய்வுண்டா சொல்?

கிராமத்து வெண்பா எழுத முயன்றதில் ::

ஆத்துதண்ணி அய்ரமீனு அத்தமவ அள்ளிவந்து
சோத்துமேல சூடாச் செவச்செவன்னு - ஊத்திவிட்டா!
மென்னுதின்னு கிட்டபோயி முத்தம்வைக் கப்பார்த்தா
பொண்ணொதடே துள்ளுதுமீ னாட்டம்!

***

சேர்க்கப்பட்டது ::

இங்கு குறிப்பிட்டிருக்கும் வெண்பாக்களில் எக்கச்சக்கத் தவறுகள் இருப்பதாக ஆசிரியர் சொல்லி இருக்கிறார். மேல் விவரங்களுக்கு காண்க, கமெண்ட் செக்ஷன் ஆஃப் உயர்வு நவிற்சியணி!

***
வெண்பா முயற்சிகள் - 2.

வெண்பா முயற்சிகள் - 1.

Monday, September 15, 2008

வெண்பா முயற்சிகள் - 2.

'ச்சமடம் நாணம் பயிர்ப்பு' என்று ஈற்று அடி வருமாறு வெண்பாக்கள் எழுத முயன்றதில்,

காற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை
நேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - "நற்றமிழின்
எச்சமீதி ஏதேனும்?" "ஏனில்லை?" சிந்தித்து
"அச்சமடம் நாணம் பயிர்ப்பு".

இது பொருள் முற்றுப் பெறாமல் இருப்பதாகக் கருதிய அகரம்.அமுதா அவர்கள் சற்று மாற்றி எழுத,

காற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை
நேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - "நற்றமிழர்
எச்சமெதும் உண்டோதான்?" "உண்"டென்று சிந்திநின்றாள்
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!

மற்றொன்று ::

காதலியே காலையில்தான் கைப்பிடித்தோம் மேடைதனில்
ஆதலினால் ஆதுரமாய் அன்பிலணை - போதவிலை
இச்சமயம் இன்பத்தில் இச்இச்தா நீமற
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!

இதே போல் 'தீயிற் கொடியதோ தீ!' என்று ஈற்றடி வருமாறு வெண்பா எழுத முயன்றதில்,

மாலைகோர்க்க கூடையொடு சோலைதேடிச் சென்றநாட்சில்
மாலைவேளை, கண்ணன் மறைந்து நல் - வேலையென்று
வாயிற்முத் தங்கொடுத்தான். வாட்டுகின்ற என்விரகத்
தீயிற் கொடியதோ தீ!

யமுனைநதித் தீரத்தில் யெளவனப்போ தில்நான்
அமுதெனக்கு ழல்நாதம் கேட்டேன் - குமுதந்தான்
சாயுங்கா லக்குளிர்ச் சந்திர வெண்ணொளித்
தீயிற் கொடியதோ தீ!

Saturday, August 30, 2008

வெண்பா முயற்சிகள்.

ண்பர் அகரம் அமுதா அவர்களின் 'வெண்பா எழுதலாம் வாங்க' என்ற பதிவின் பெயரைக் கண்டதும், மிக்ஸி, குக்கர் செலவில் பல வகை வீட்டு இனிப்புகளையும், காரங்களையும் ஒருவாய் பார்க்கின்ற வசந்த் அன் கோவின் 'சாப்பிட வாங்க' நினைவுக்கு வந்தது.

உடனே சென்று பார்த்து மிகச்சிறு ஓரளவு கற்றுக் கொண்டேன் என்று நினைக்கிறேன். அங்கு எழுதிய சில வெண்பாக்கள் கீழே!

எதையெழுத யென்றெண்ணி யேதுந்தோன் றாமல்
உதையேதும் வந்துவிழு தற்குமுங்க தையேதும்
நான்குவரி சொல்லிவைப்போம் நையுமன மேவருந்தா
நாளை நமதென்று நம்பு!

இயந்திரங்கள் வந்துமிங் கேயுரங்க ளிட்டுந்தம்
வயமிருந்த தேசெல்ல லேதுமோ? - ஓய்ந்த
பழகிய மாடுசர்வை வற்கஞ்சிக் கூறும்
உழவின்றி உய்யா(து) உலகு.

வெறுமனே எதுவும் இறுதிப்புள்ளி இல்லாமல் எழுதுவதை விட, நமது வழக்கமான சிறுகதையைச் சொல்லலாம் என்று இரு சம்பவக் கதைகளை வெண்பா வடிவில் எழுத முயன்றதில்,

இருபத்தொன் றொன்றுகிண்டி பேருந்து இஸ்டாப்பி
லூரும் நிலையிலெம்பிப் பாய்ந்து, முருகன்
கபாலென பர்சடித்து(த) பாலென வீழவங்க
பாலமுன் வேகக் கார்.

நான்காம்மா டிச்சுவர் வேதனைத்து நின்றவன்முன்
நன்குகற்கும் புத்திரந கைசிந்தித்(து) - வேண்டாங்
கடம்போக் கமுயல்வோங் காற்றடித்து நகர
விடறியது வேர்வையீரக் கால்.

நமக்கு என்றுமே அவ்வளவாக கைவராத காமெடியை முயலலாம் என்று முயன்றதில்,

குரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின்
அரங்கை நிறைத்ததுகை தட்டல டங்கியபின்
எல்லாம் அறிவேன் எழுந்தொருவர் சொல்லிய
தில்லாளால் முன்பேயே யான்!

கொஞ்சூண்டு நாஸ்டால்ஜியாவாக,

ஏரோப்ளேன் ஏர்பஸ் எடுத்துச் சரித்த
பீரோபோன் மின்வண்டி பந்தாவாய்க் காரெனினும்
கைக்கிளைக் காதலியைக் கண்போற் சுமந்தெனது
சைக்கிளை எண்ணுகிறேன் நான்!

நிரல் படுத்தும் வெண்பா என்று ஒன்று உள்ளது. அதைக் கொணர முயல்கையில்,

சிமற்றும் சிபிபியும் ஜாவா பிஎச்பிபே
சிக்ஜே டுஈஈ டிசிஎல்பெர்ல் சிப்பில்
கொசகொசகூட் டங்கள னைத்திற்கும் அன்னை
அசம்ப்ளியே என்ப தறி.

போன ராஜா வருகை கதையில் உபயோகப்படுத்திய வெண்பாக்கள் அனைத்திற்கும் குரு அகரம் அமுதா தான். அங்கு கற்ற பாடங்கள் கொண்டு தான் ,கதைப் போக்கிற்கு உதவிய வெண்பாக்களை எழுத முடிந்தது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் மிக எளிதாக வெண்பா கற்றுக் கொள்ளலாம். அவ்வளவு எளிமையாகச் சொல்லித் தருகிறார். எத்தகைய சிறிய கேள்வியானாலும் அழகாகத் தீர்த்து வைக்கிறார். அருமையான வாய்ப்பு இது! ஆர்வமுளோர் வாருங்கள்.

நன்றி அகரம் அமுதா...!