Wednesday, April 01, 2009

சில பதிவுகள்.

. சாரு நிவேதிதாவின் வலைமனையில், மலாவியில் இருந்து ஆனந்த் என்பவர் எழுதி இருக்கிறார். அழகான நடை. நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே வந்து, கடைசி பத்தியில் அவரது சொந்த அனுபவத்தையும் பளிச்சென்று சொல்லி விடுகிறார். ஜில்லென்றது. கவிதைகள் இரண்டும் எழுதி வைத்துக் காட்டுகிறார். நன்றாகவெ இருந்தன.

சாரு புனை பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். நான் சிபாரிசு செய்வது, 'மலாவி மன்னன்' (அ) 'மலாவி மைந்தன்'.

கண்ணி.

ஆ. எஸ்.ராமகிருஷ்ணனின் வலைமனையில் இன்று படித்த 'ரயிலோடும் தூரம்' பதிவைப் படித்த போது சிலிர்த்துப் போனேன்.

இரவு ரயிலில் கூட அத்தனை பேருடன் பயணிக்கும் போது, குறிப்பாக ரிசர்வேஷன் பெட்டியில் நாம் தனிமையாகவே பயணிப்போம். கூட நமக்குத் துணையாக வருவது ஒற்றையாய்க் காயும் நிலாவே! இருள் தின்னும் பெட்டிக்குள் ஜன்னல் கம்பிகளோடு கன்ன்ம் ஒட்டி, ஏதோ ஒரு வளைவில் அந்தரத்தில் தொங்கும் நிலா சட்டென்று பின் தங்கி விடுவதை ஏக்கத்தோடு பார்த்திருக்கிறேன்.

கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, கைகளால் இரு பக்கக் கம்பிகளைப் பிடித்து, முழு உடலையும் வெளியே எறிந்து மோதும் பேய்க் காற்றில் மிதப்பதை எத்தனை முறை செய்திருக்கிறேன்!

சேலத்தில் இருந்து முதன் முறையாக பெங்களூர் ரயில் பயணத்தில் நடு இரவில் சென்ற போது, பெளர்ணமி இரவு அது! அப்படியே பனிப்புகையின் உள்ளெல்லாம் பாவு நூலாக வெண்ணொளி அமுதத் துளிகள் கரைந்து நிறைந்திருந்தன.

கவிஞனுக்கு மழையும், ரயிலும், நிலவும், காற்றும் வாரி இறைக்க இறைக்க வற்றாத ஜீவ சுரப்பிகள். அவனது அடி மனதில் ஊறிக் கிடக்கும் வரிகளை அவையே திரட்டி மேலெழுப்புகின்றன.

நன்கு மழை பெய்து கொண்டிருக்கும் ஓர் இரவுப் பெளர்ணமி நேரத்தில் வேகமாக கிராமத்தில் காடுகளுக்குள் செல்லும் ரயிலின் இருள் கவ்விய பெட்டியொன்றின் பக்கவாட்டுப் படுக்கையில் சாய்ந்து படுத்து, அந்த தடதடப்பு ரிதத்தில் மெளனமாக இயற்கையோடு கரைவது என்பது எத்தனை சுகமானது....!!!!

PS: தினமும் பார்க்கும் ஓவியத் தளத்தில் இன்று பார்த்த போது டேவிட் காக்ஸ்ஸின் படம் பட்டது..! என்ன ஓர் ஆச்சர்ய ஒற்றுமை!

படத்தின் பெயர் : இரவு ரயில்.



இ. தி.க.சிவசங்கரன் அவர்கள் பற்றிய ஜெயமோகன் பதிவு அவர் எழுதியது தானா என்ற சந்தேகம் படிக்கத் துவங்கிய போதிலிருந்து இருந்தது. அவ்வளவு நகைச்சுவையாக எழுதி இருக்கிறார். வழக்கமாக அவர் 'நகைச்சுவை' என்று லேபிள் குத்தும் பதிவுகளில் சொல்லி விட்டாரே என்பதற்காக ' நகைச்சு வை'க்க முயலலாம். இப்பதிவில் இயல்பான நடைப் புன்னகை இருக்கின்றது.

பொங்கல் & வடை - தூக்க மருந்து.

முதலில் பொங்கல் அறிமுகமானது பொங்கல் திருநாளில் மட்டும். கருப்பான கரும்பு கணுக்களில் விரல்கள் கிழிபடும். அரிவாளால் ஆங்காங்கே வெட்டி, பற்களால் இழுத்து, உரித்து கடித்துக் கசக்கி உறியும் போது எத்தனை இனிப்பாய் சாறு உள்ளிறங்கும்! அந்த இயற்கை இனிப்புக்கு கொஞ்சம் மாற்று கம்மியாக பொங்கல் செய்யப்படும்.

சர்க்கரைப் பொங்கல் தனி ஜாதி.

வெல்லக்கட்டிகளை எடுத்துக் கொள்வோம். பழைய நாளிதழ் பேப்பரை எடுத்து, அதன் மேல் வைத்து, பேப்பரால் வெல்லத்தை மறைத்து, ஊதுகுழாயோ, பூட்டோ, கல்லோ எடுத்து, 'மடார்.. மடார்' என போட்டு அடித்து உடைத்து, நொறுக்கி, பொங்கும் அரிசிச் சாதத்தில் போட்டுக் கிளறுவோம். அதுவரை சும்மா இருக்காமல், செமத்தியாக அடி வாங்கிய பேப்பரில் ஒட்டியிருக்கும் வெல்லத் துணுக்குகளைச் சுரண்டி நக்கிப் பார்க்க, சுர்ரென்று இனிப்பு மொட்டுகள் சிலிர்க்கும்.

நெய்யூற்றி அதில் வெண் முந்திரி, திராட்சை போட்டுக் கொஞ்சம் சூடாகக் கிளறி, பொங்கலில் அத்தனையையும் சேர்த்து, கிளறினால்.... இனிப்புப் பொங்கல் தயார்.

சூடு கொஞ்சம் ஆறியவுடன், தேங்காய்ச் சட்னியுடன் கரண்டியால் கொட்டப்பட்ட பொங்கலில் கை வைத்து, ஒரு விள்ளல் எடுத்து, விழுங்கினால்... தொண்டையில் இருந்து, நெஞ்சு வழியாக சூடாக 'கபகப'வென புகையுடன், இனிப்பும், நெய் வாசமும் உடல் முழுதும் பரவுமே... கண் செருகி திளைக்கும் சுவை அது...!

வெண் பொங்கல் வேறு வர்க்கம்.

தினமும் கிடைக்கும். ஹோட்டல் சென்று 'பொங்கல்' கேட்டால் கிடைக்கும் வஸ்து. கீழ்த் 'தட்டு' உணவுப் பண்டம்.

போரூர் செல்லும் வழியில், எல் & டி அருகே , எம்.ஜி.ஆர். தோட்டத்தின் எதிரில் ராமாவரத்தில் பசங்களோடு தங்கி இருந்த போது, நான் கொஞ்ச நாள் ஈ ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது கற்றுக் கொண்ட வித்தை வெண் பொங்கல் வைக்கக் கற்றுக் கொண்டது.

அரிசியைக் கழுவி குக்கரில் கொதிக்க வைக்க வேண்டும். அரிசி அளவுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்ற வேண்டி இருக்கும். அது பாட்டுக்கு அங்கே வெந்து கொண்டிருக்கும் போது, நாம் சும்மா நின்று கொண்டிருக்கக் கூடாது. இன்னும் சில வேலைகள் இருக்கின்றன.

வாணலியில் மிளகு, நெய், (மாதக் கடைசியில் நல்லெண்ணெய்!) ஊற்றி அடியில் பற்ற வைக்க வேண்டும். ஓரிடத்தில் சும்மா இருந்த மிளகு, சூடு ஏற ஏற அங்கே இங்கே 'டபார்...டிபீர்' என்று குதிக்கும் போது, நெய் வாசம் கிளம்பும். முடிந்தால் இங்கேயும் முந்திரி, திராட்சை சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி நன்றாக வெந்தவுடன் எடுத்து, அதில் நெய் கூட்டணியை ஊற்றி/போட்டு நன்றாக கிளறினால், அந்த வெப்பத்தின் மென் புகையுடன் கலந்து நெய் மணம் சேர்ந்து வரும் பாருங்கள், முகர்ந்தாலே சொர்க்கம் நிச்சயம். மறக்காமல் வேண்டும் எனில் உப்பு சேர்த்துக் கிளற வேண்டும்.

அலுவலகம் செல்லும் நண்பர்கள் தட்டில் எடுத்துப் போட்டு உண்டவுடன், நன்றாக இல்லையென்றாலும் அந்த நெய் வாசம் இழுத்து சொல்ல வைத்து விடும்."சூப்பர் டா...!"

இதைத் தவிர ஹோட்டல்களில் கிடைக்கும் வெண் பொங்கல் வேறு வகையாக இருக்கும்.

காலை எட்டு, எட்டரை மணிக்கு சட்னி, சாம்பாரோடு, உளுந்த வடை சேர்த்து மென்று தின்று அலுவலகம் சென்று.....உணவு செரித்து, சக்தி எல்லாம் சதை, எலும்புகள், நரம்புகள் வழியாக ஊடுறுவிப் பரவும் பதினொரு மணி சுமாருக்கு விளைவு தெரிய ஆரம்பிக்கும்.

மூளையின் உச்சியில் ஒரு கிளுகிளு மெல்ல உருவாகும். அப்படியே அருவி போல் அங்கிருந்து வழிந்து சரிந்து தலையெங்கும் கரையும். காதுகள் மென்மையாகும்; கண்கள் தான் முக்கிய டார்கெட்.

இமைகள் மெல்ல ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளும்; பிறகு இரண்டு முறை; மூன்று முறை; நான்கு... ஐந்து.. ஆறு...

படபட...படபட.....

தலையைச் சட்டென்று ஒரு உதறு உதற வேண்டும். தூக்கப் போர்வை சற்று விலகும். கொஞ்ச நேரம்...

மீண்டும் மேலிமை சரியும்...!

எழுந்து போய் முகம் கழுவி விட்டு வந்தாலே தெரிந்து விடும், பையன் தூக்க மருந்து ஒரு ப்ளேட் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்பது!

அந்த சுக போதைத் தூக்கத்தில் இன்புற்று கிறங்கிக் கிடந்தால் போச்சு! தலை சில ஆட்டம் போட்டு, தடாரென டெஸ்க்டாப்பில் மோதும். 'சடாரென' அந்த நிலை போய் விடும். கொஞ்ச நேரம் சுற்று முற்றும் பார்த்து, யாரும் கவனிக்கவில்லை என்ற அற்ப சந்தோஷத்தை அடைந்து, நாளின் நார்மல் வேலைகளில் கவனம் சென்று விடும்.

இனிமேல் ஆபீஸுக்குப் போகும் போது பொங்கல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற பலகீன உறுதி எடுத்துக் கொண்டு, அடுத்த நாள் ஹோட்டலுக்குப் போனால்...

இட்லியைப் போல் ஸ்ட்ரிக்ட்டாக இல்லாமல், தோசையைப் போல் ஒல்லிக்குச்சி ஃப்ளாட் உடைசலாக இல்லாமல், எண்ணெயில் மூழ்கி முத்தெடுத்த பூரி, வறட்டியை நினைவூட்டும் சப்பாத்தி போன்ற சங்கதிகள் போல் இல்லாமல்,

அந்தக் குழைவும், கை வைத்தாலே புதையும் மென்மையும், அசைந்தாடிக் கொண்டே புகையும் புகையும், பழுப்பு சாம்பார், வெள்ளை சட்னி, மென் பழுப்பு உளுந்து வடையுடன், ஒரு அல்வா போல் வாய்க்குள் இட்டவுடனே கரைந்து, கலந்து, நாவின் சுவை அரும்புகளுக்கு செழுமையாகப் புரிந்து, லேசாக அவ்வப்போது இடறும் மிளகு கிளப்பும் கார நெடியும்....

"மூனாம் நம்பர் டேபிளுக்கு பொங்கல் ஒரு செட்டேய்....!!"

Tuesday, March 31, 2009

தலைவர் விளையாடல்கள் - 2.

லைவர் ஒரு முறை பஸ்ஸில் பயணம் செய்தார். பஸ் சென்ற பாதை வளைந்து வளைந்து, மேடேறி இறங்கிச் சென்று கொண்டிருந்தது.

ரோடு வலது புறமாக திரும்பும் போது, எல்லோரும் இடது புறம் சரிந்தனர். நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் இடது புறமாக சாய்ந்து தம் கைகளை பஸ்ஸின் சைடுவாக்கில் அழுத்தி, தம் உடல் பேலன்ஸ் செய்து நின்றனர். தலைவருக்கு அன்று அதிர்ஷ்டவசமாக சீட் கிடைக்கவில்லை.

பின்னொரு நாள் இதைப் பற்றிப் பேசும் போது தலைவர் சொன்னார்.

"நான் நின்னுட்டு தான் வந்தேன். நானும் பஸ் வளையும் போதெல்லாம் அதே பக்கமா சாஞ்சு பேலன்ஸ் பண்ணினேன். அதில ஒரு ஆச்சரியம்..."

"என்ன, சொல்லுங்க தலைவரே...!!!"

"பஸ் ரைட்ல திரும்பும் போது, எல்லோரும் லெப்ட் சைட் சாயறாங்க. நிக்கறவங்க எல்லாம் லெப்ட் சைட்லயே சாஞ்சு கையை ஊன்றி அந்த ஃபோர்ஸ்ல அவங்க உடம்பை ரைட் சைடுக்குத் தள்ளி பேலன்ஸ் பண்ணிக்கறாங்க. அப்போ நியூட்டன் தேர்ட் லாபடி அவங்க கைல இருந்து சமமான ஃபோர்ஸ் போய் பஸ்ஸை இன்னும் லெப்ட் சைடுக்குத் தள்ளும். அப்போ பஸ் இன்னும் லெப்ட் சைட்ல சாயும். நிக்கறவங்க இன்னும் பேலன்ஸ் பண்றதுக்காக கைக்கு இன்னும் ஃபோர்ஸ் கொடுப்பாங்க...! இந்த சைக்ளிக் ஏக்ஷன்ஸோட முடிவு தான் என்ன...?"

யாரும் ஒன்றும் பேசவில்லை.

ட்ரான்ஸ்மிஷன் லைன்ஸ் அண்ட் நெட்வொர்க்ஸ் (TLN) என்ற தியரி பேப்பர். அதில் ஓர் அசைன்மெண்ட்டுக்குப் பதிலாக ஒன் மார்க் கேள்விகள் கொண்ட தேர்வு வைக்கப்பட்டது. எல்லோரும் ரோல் நம்பர் படி அமர்ந்தோம். தலைவருக்கு மிக்க மகிழ்ச்சி. காரணம் அவருக்குப் பின் அமர்ந்திருந்தது ஒரு டாப்பர். (யோகா..?)

ஆனால் மேடம் அடுத்தடுத்த மாணவர்களுக்கு கேள்விகளை ஜம்பிள் செய்து கொஸ்டீன் பேப்பர் தயார் செய்திருந்தது தலைவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

சில கேள்விகளுக்குத் தலைவர் தானாகவே பதில் எழுதினார். ஒரு கேள்விக்கு (இந்த சர்க்யூட்டில் யூஸ் செய்ய வேண்டியது சீரிஸ் கனெக்ஷனா இல்லை ஷண்ட் கனெக்ஷனா?) என்ன பதிலென்று தெரியாமல் பின்னால் கேட்க, அவன் "(2n + 1) / lamda" என்று சொல்ல, அதை எழுதி விட்டு வந்தார்.

தலைவர் நினைத்துக் கொண்டார் : 'சீரிஸா இல்லை ஷண்ட்டா என்று கேட்டு என்னை ஃபூல் செய்யப் பார்க்கிறார்களா..? அது தான் முடியாது. என்னையா எமாற்ற முடியும்..? (2n + 1) / lamda தான் சரி'.

Monday, March 30, 2009

தலைவர் விளையாடல்கள்.

லைவர் ஒருமுறை ஒரு கடைக்குப் போனார். அங்கே ஆறு ரூபாய் எம்.ஆர்.பி. உள்ள ஒரு சாக்லேட் பட்டையை வாங்க முயற்சித்தார். கடைக்கார அம்மாவிடம் பத்து நிமிடம் பேரம் பேசினார். அவருக்கு தலைவரைப் பற்றி நான்கு வருடங்களாக நன்றாகத் தெரிந்திருந்ததால், அமைதியாக நின்றார். களைத்துப் போன தலைவர், 'சந்தர்ப்பம் கிடைக்கட்டும், பழி வாங்குகிறேன்..' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டு, பத்து ரூபாய் நோட்டை நீட்டி அந்தப் பட்டையை வாங்கிக் கொண்டார்.

அந்த அம்மா சில்லரைப் பெட்டியைக் கொஞ்ச நேரம் புரட்டிப் பார்த்து விட்டு, 'ஏப்பா, ஒரு ருபா இருந்தாக் குடு' என்று கேட்டார். தலைவர் பாக்கெட்டில் இருபது பைசாவில் இருந்து ஐநூறு ரூபாய் வரை எப்போதும் இருக்கும். ஆனால் வேண்டுமென்றே, 'ஒரு ருபா இல்லையே..' என்று சோகமாகச் சொன்னார்.

அந்த அம்மா பிறகு சில்லறைப் பெட்டியைத் திரட்டி, நான்கு ஒரு ரூபா காயின்களைக் கொடுத்தார். வந்ததே கோபம் தலைவருக்கு..!

'ஏங்க...! அதான் உங்ககிட்டயே இவ்ளோ ஒரு ரூபா காயின் இருக்கே..! என்கிட்ட ஏன் கேட்டீங்க..!' என்று கோபமாகச் சொல்லி விட்டு திரும்பி நடந்தார்.

அந்த அம்மா திகைத்துப் போய் நின்றார்.

Welcome to Thalaivar's Comedy Ground - EZoo...!!!!

லைவர் எங்களுடன் நான்காண்டுகள் கல்லூரியில் படித்தார். அல்லது அவருடன் நாங்கள் நான்காண்டுகள் இருந்தோம். தலைவரின் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது, திணறிப் போயிருக்கிறோம். தலைவர் செய்யும் பல% காரியங்கள் மெகா காமெடியாக இருக்கும். ஆனால் அவர் அவற்றை வெகு சீரியஸாகச் செய்வார்.

தலைவருக்கு நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்; நன்கு படிக்க வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் எப்போதும் இருந்தது. நாங்களும் தலைவரை கலாய்க்கவே கூடாது என்று முடிவு செய்து ஒரு நாளைத் துவக்கினால், தலைவர் அன்றைக்கு நான்கு பேரிடமாவது வாய் விட்டு மாட்டிக் கொள்வார்.

தலைவரைக் கலாய்த்தலை நாங்களே செய்ததை விட, ஒரு ப்ரொஃபஸர் செய்ததைச் சொல்லி, தலைவரின் திருவிளையாடல்களை அவ்வப்போது பார்ப்போம்.

லைவர் காலேஜ் முடித்து விட்டு, கனடாவிற்குச் சென்று எம்.எஸ். எம்.பி.ஏ., (updated) செய்வது என்ற சீரிய முடிவிற்கு வந்தார். கனடா பல்கலைகழகங்கள் மட்டுமே அந்தத் தகுதியைப் பெற்றுள்ளன என்பது தலைவரின் உறுதியான, இறுதியான அபிப்ராயம். நன்றாகப் படித்து, மிக அதிக சி.ஜி.பி.ஏ., எடுத்து ஜி.ஆர்.இ., டோஃபல் போன்ற கொடுமைகளை எல்லாம் சந்தித்து, பின் ப்ரொஃபஸர்களிடம் ரெக்கோவிற்காக மக்கள் அலைவதைக் கண்டு, தலைவர் யோசித்து, பிள்ளையார் போல் முதலில் ரெக்கோ ஒன்று வாங்கி வைத்துக் கொள்வோம்; எக்ஸாம்களை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ரொம்ப நாட்கள் சிந்தித்து ஒரு ப்ரொஃபஸரைப் 'போக்கிரி'யுடன் சென்று சந்தித்தார்.

ரெக்கோவை இவர்களே தயார் செய்து விட்டார்கள். அதில் அவர் சைன் மட்டும் போட்டால் போதும். அடுத்த ஃப்ளைட் பிடித்து விடலாம்.

ப்ரொஃபஸர் தலைவரின் ரெக்கோ ஷீட்டை வாங்கிப் படித்துப் பார்த்தார். அதில் தலைவர் மானாவாரியாகப் புகுந்து விளையாடி இருந்தார்.

'மேற்கண்ட மாணவன் நல்லவன்; வல்லவன்; நாலும் தெரிந்தவன்; வகுப்பு மணியடிப்பதற்கு முன் பெஞ்சில் இருப்பான்; டிப்பார்ட்மெண்ட் மெயின் கேட் சாவி ஒரு டூப்ளிகேட் இவனிடம் இருக்கும்; லேபில் முதல் ரிசல்ட் இவன் தான் காட்டுவான்; ராத்திரி ரொம்ப நேரம் ஆன பின்னாலும் போன் செய்து சந்தேகம் கேட்பான்; அஸைன்மெண்டுகளை சொன்ன தேதியில் முதலில் சப்மிட் செய்வான்; இவனுக்கு ஆராய்ச்சியில் மிக ஆர்வம்; வெர்னியர் ஸ்கேலை வைத்து வெப்பம் அளக்க முடியுமா என்று ஒரு நாள் ஆராய்ந்தான்; மொத்தத்தில் தலைவர் ஒரு சூப்பர் மாணவர்; எனவே To whomsoever it may concern' என்று ஆரம்பித்து தலைவரைச் சேர்த்துக் கொண்டால் உங்கள் பல்கலைக்கழகம் எங்கேயோ போய் விடும்; தலைவரைச் சேர்த்துக் கொள்வது நீங்கள் போன பல ஜென்மங்களில் செய்த புண்ணியம்' என்று முடித்திருந்தது.

ப்ரொபஸர் முழு பக்கத்தையும் படித்து விட்டு, தலைவரைப் பார்த்தார். தலைவர் வெகு ஆர்வமாய் அவர் முகத்தையே பார்த்தார்.

ப்ரொபஸர் மீண்டும் அந்தப் பக்கத்தைப் படித்து விட்டு, பேப்பரை முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தார். தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்ன சார் தேடறீங்க..?"

"இல்ல... எல்லாம் எழுதி இருக்கு..! ஒரு வரி மிஸ் ஆகுதே..!"

தலைவருக்குப் புல்லரித்தது. ஆஹா..! இவ்வளவு அக்கறையா நம் மேல் என்று எண்ணிக் கொண்டு,

"என்ன லைன் சார்..?"

அப்போது ஜெயம் படம் வந்து வெகு ஹிட்!

"கடைசியா இதுவரை 'விட்டதெல்லாம் ரீலு..' ங்கற லைனைக் காணோமே..!" என்று கேட்டார்.

லைவர் இருக்கின்றார்...!!!!!!