
மெளனமாய்க் காத்துக் கொண்டிருக்கின்றேன்.
இறுக்கிப் பெய்கின்ற பெருந்துளிகள் நனைக்கின்றன என் குடையை. நகரத்தின் ஊடாக நகர்கின்ற சிறுநதி போல் சாலைகளின் குறுக்கே சக்கரங்கள் மேய்வதற்கென இடப்பட்டிருக்கின்றது இருப்புப் பாதை.
ஓராயிரம் வெண்ணோடைகளின் இழைகளில் இருந்து பிரிந்து சிதறிய பஞ்சுத் துகள்கள் ஒளிதின்னும் மாலை நேரம்.
நனைந்த பெண்ணைப் பார்ர்க்கும் பார்வைகள் என்னைப் பற்றி எனக்கே காட்டுவது போல், மழைத்துணி புனைந்த ஈரநிலம் காட்டுகிறது மயக்கத்தின் மேல் புரண்டு கிடக்கும் என்னையே...!
போகிறதென்று தள்ளி விட்ட பொழுதுகளின் வெளிச்ச நிறங்களை உறிந்து கொண்டு சிதறுகின்றது சாலை விளக்குகளின் வழி, நிறமாலையின் சலசலக்கும் வர்ணக் கோவைகள்.
பனி தூவும் முன்னிரவுக் காலங்களில் நிழல் உண்ணும் இருட்டின் துணை கொண்டு நடக்கையில், கைப்பிடித்தபடி வருகின்றது இரு விளக்கொளி, தூர இரயிலின் முன் பற்களாய் நீட்டிக் கொண்டு..!
நன்றி : http://www.artwing.com/images/Prints/EveningRain.jpg