Showing posts with label பயணம்.. Show all posts
Showing posts with label பயணம்.. Show all posts

Monday, September 17, 2018

பர்வதி மலைக்கு ஒரு சிற்றுலா.



பூனாவிற்கு வந்து முதன்முறையாக வெளியே சென்றேன்.

பர்வதி மலை என்பது அதன் பெயர். பேஷ்வாக்களின் தர்பார் நிகழ்ந்த பகுதி அது. ஒரு சிறு குன்றாக உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட படிக்கட்டுகளைக் கொண்டது. மேலே சென்றால் சில கோயில்களும், தர்பாரும், ஒரு அரும்பொருட்காட்சியகமும் உள்ளன.

ஒரு சனிக்கிழமை அங்கே சென்று வரலாம் என்று முடிவெடுத்துக் கிளம்பினேன். அங்கே தான் தவறு நிகழ்ந்தது.முந்தின வெள்ளி இரவு தான் கடைசியாகச் சாப்பிட்டது. சனிக்கிழமை விரதம் என்று இருந்து விட்டேன். எனவே அன்று மாலை நான்கு மணிக்கு அறையிலிருந்து கிளம்பும் போது, நான் சாப்பிட்டு இருபது மணி நேரங்கள் ஆகி விட்டிருந்தன.

ஹடப்ஸரிலிருந்து ஆட்டோ பிடித்தேன். (ஏனெனில் பேருந்துகள் இன்னும் பிடிபடவில்லை). கிளம்பி ஸ்வர்கேட் வழியாகச் சென்று பர்வதி மலை அடிவாரத்தில் நிறுத்திய போது மீட்டர் 120 எனக் காட்டியது. இங்கெல்லாம் மீட்டர் மட்டுமே கேட்கிறார்கள்.

அடிவாரத்தில் பூ, மாலை, தேங்காய்க் கடைகளுடன் சின்ன உணவுப்பொருட்களும் விற்றார்கள். வியப்பாகப் பார்த்தேன். பிறகு புரிந்தது ஏன் என்று. மலையேறத் தொடங்கினேன். அகலமான படிக்கட்டுகள் தான். ஆடுகள் தாவித்தாவி ஓடின. அங்கேயே வாழும் சிறுவர்கள் பம்பரம் சுழற்றிப் பறக்க விட்டனர். பாறைக் குழுமமே மலை என்றாயிற்று.

கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்கச் சாப்பிடாதது, எக்கச்சக்கமாய் ஊதிப்போயிருந்த உடல் எல்லாம் சேர்ந்து.. ஆம், அதே தான். பத்து, பதினைந்து படிக்கட்டுகள் ஏறுவதற்குள்ளாகவே புஸ்..புஸ்ஸென்று மூச்சு வாங்கியது. உடலின் அனல் ஊற்று கிளம்பி வந்தது. ஓரக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றேன். கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. எப்போதும் மலையேறுகையில் தோன்றும் அதே நினைப்பு. ‘ஆகா.. சாகப் போகிறோம். மொழி தெரியாத ஊரில் செத்து இங்கேயே ஆவியாக ஆலைய வேண்டுமா? ஆவியானாலும் சொந்த ஊரில் ஆவியாவேன்..’ என்று உறுதி கொண்டு, கொண்டு வந்திருந்த நீர் பாட்டிலில் நீரருந்தி தாகம் தணிவித்தேன்.

இந்த நிலையில் எந்த பெருமிதமும் பார்க்கக் கூடாது என்று, படிக்கட்டிலேயே அமர்ந்து கொண்டேன். மூச்சு சீரடையும் வரை எழுந்திருக்கவே கூடாது. அதற்கு அரை நாள் ஆனாலும் சரி என்று. பிறகு, நான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் அமர்ந்து அமர்ந்து தான் மேலேறுவதைக் கண்டு ஓர் அல்ப சந்தோஷம் வந்தது. இப்படியே சென்று, ஒரு வளைவு திரும்பியதும், ஒரு சின்ன மண்டபம் போல ஓரத்தில் இருந்தது. அங்கும் ஒரு சிறு அமரல். அதை ஒட்டி, ஒரு கல் திட்டில் ஒரு பெண்மணி சிறு குழந்தையுடன் அமர்ந்திருந்தார். மறு ஓரத்தில் அமர்ந்து மீண்டும் நீர். பசி மயக்கம் வேறு. மண்டபத்திலிருந்து உச்சி வரை சின்னப் பையன்களும் பெண்களும் ஏறி, இறங்கி ஓடிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். பயிற்சியாளர் விசிலடித்துக் கொண்டு அவர்களை கவனித்தார். விசுக்..விசுக்கென்று மின்மினிப் பூச்சிகளைப் போல பறந்த இளையோர்களைப் பார்க்கையில் எழும் பெருமிதமும் பெருமூச்சும்.

கடும் பசி. தண்ணீர் மட்டுமே குடித்துக் குடித்து அனலவிக்கையில், உச்சியில் இடது புறமாக ஒரு உணவகம். தெய்வமே நேரில் தோன்றியது போல். ‘ஒரு ப்ளேட் போகா’ என்றேன். அது வருவதற்குச் சற்று நேரமாகும் என்பது போல் தோன்ற, காத்திருக்க இயலாது என்று ஒரு லெமன் சர்பத். உப்பும் எலுமிச்சையும் கலந்த அக்குளிர்ந்த நீர் நா தீண்டி உள்ளே இறங்குகையில் தான் எத்தனை குளிர்ச்சி..! கண்களில் ஒளி வந்தது. காதுகள் திறந்து கொண்டன. உலகம் எனக்குள் நுழைந்தது.

கீழே நகரின் வாகனங்களின், மக்களின், பாடல்களின், வீசும் காற்றின், பறவைகளின் அத்தனை ஓசைகளும் கேட்கத் தொடங்கின. வந்த பாதையை விட மற்றுமொரு கடும்பாதையும் அருகில் இருந்தது. அங்கே அவ்வளவாக மக்கள் வராததால், ஆம்... காதல் இணைகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். காத்திருந்து வந்த போகாவையும் உண்டு விட்டு தெம்பாக, மதிலுக்குக் கீழே எட்டிப் பார்த்தேன். குழந்தைகளும் சிறார்களும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மேலேறினேன்.

நுழைவாயிலுக்கு நேராய் பாண்டுரங்கர் கோயில். அதை ஒட்டி இடது புறத்தில் அருங்காட்சியகம். அதையும் தாண்டிச் சென்றால், தர்பாரும், முருகன் கோயிலும் விஷ்ணு கோயிலும் வருகின்றன. இரு கோயில்களுக்கு நடுவில் ஒரு வெட்ட வெளி. அதன் நடுவில் வட்டமாய்க் கூரையிட்டு, தியானம் செய்யலாம் என்று போர்ட் இருந்தது. மக்கள் அங்கே தான் சிதறிச் சிதறி அமர்ந்திருந்தனர்.

நான் முதலில் விஷ்ணு கோயிலுக்குச் சென்றேன். சரியாக நான் உள்ளே நுழைவதற்குள், பூசகர் வெளியே வந்து கதவுகளைப் பூட்டினார். கதவுகளில் தெரிந்த இடைவெளியில் கும்பிட்டு விட்டு, முன் நின்ற கருடரையும் தொழுதேன். இந்தக் கோயில்களின் கோபுரம் வங்கக் கோயில்கள் போல் தாமரை மொட்டுகள் போல் கூம்பிக் கூம்பிச் சென்று அமைகின்றன. கோயிலைச் சுற்றுகையில் மராத்தியர்கள் கட்டி வைத்த கோட்டைச் சுவர்களில், வீரர்கள் நின்று தொலைதூரத்தை நோக்கும் இடைவெளிகளில் எல்லாம், இன்றைய காதலர்கள் அப்பியிருந்தனர்.

வெளியே வந்து, அந்த தியான வெளிக்குச் சென்றேன். அதை ஒட்டி மலை விளிம்புக்குச் சுவர் கட்டி வைத்திருக்க, அந்தக் கொஞ்சம் சரிந்த பகுதியில் பலர் நின்று தற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மாலை வேகமாக மங்கிக் கொண்டே வந்தது. தூரத்தில் தெரிந்த சஹ்யாத்ரி மலை மடிப்புகள் மஞ்சள் காற்றில் மிதந்தன. காலடியின் கீழ் நகரின் ஒரு பகுதி வீடுகளாலும், வாகனங்களாலும் இயங்கிக் கொண்டிருக்க ஸீவேஜ் போர்டு கேம்பஸை ஒட்டி ஒரு சிறு நதி புகுந்து நுழைந்து எங்கோ சென்றது. அபார்ட்மெண்டுகள் நின்றெழுந்து வானைத் தீண்டின. தெருக்கள் நாய்களாலும் வானம் பறவைகளாலும் இரைச்சல் கொண்டிருந்தன.

வெளி வந்து மேடேறி, கார்த்திகேயன் ஸந்நிதிக்குச் சென்றேன். நம் அழகன் இங்கெ கரிய  திருமேனியில் மின்னினான். வேண்டி விட்டு, சுற்றி வருகையில் ஆறுமுகனின் அவதாரமும் ஆற்றிய வினையும் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. அதில் முருகன் என்றும் அவன் சொல்லப்ப்ட்டிருக்க, சிலிர்த்தேன். முருகு என்றால் அழகு என்று தமிழ் கூறும். கேரளத்தில் கூட அவனை ‘ஸூப்ரம்ண்யன் ஸந்நிதி’ என்றே சொல்கிறார்கள். மராட்டிய மண்ணில் இவர்கள் ஆட்சி நிகழ்ந்த  பகுதியில், குமரனை முருகன் என்று சொல்லியிருப்பது கண்டு உளமகிழ்ந்தேன். தஞ்சையை ஆண்ட போது இது வந்திருக்கலாம் என்று ஓர் எண்ணம்.தொடர் படங்களில் கார்த்திகைப் பொய்கை இல்லை, ஆனால் கங்கையில் பிறந்ததாகச் சொல்கின்றனர். சூரபத்மனைக் கொல்லும் வரை படங்கள் இருந்தன. சுற்றி விட்டு, மேல் காற்று திரண்டு பாய்ந்த சூழ்ந்த அம்மதில் சுவர்கள் பல நூற்றாண்டுகளைக் கண்டிருந்தன.

முருகன் கோயிலை ஒட்டி பேஷ்வாக்களின் தர்பார். அவர்களின் படங்கள், முகலாயர் காலத்திலும் அதற்குப் பின்பும் மராத்திய சாம்ராஜ்யத்தின் பரப்பளவு, மன்னர் வருகை, போர்கள் முதலியன வரையப்பட்டிருந்தன. பார்த்து விட்டு, வாசலைக் காத்து நின்ற ஊமைச் சிறு பீரங்கிகளைத் தடவி விட்டு, முன்னே வந்தேன். அருங்காட்சியகத்திற்கு அப்புறம் போகலாம் என்று பாண்டுரங்கர் கோயிலுக்குப் போனேன். கரிய திருமேனிகள். பளபளப்பாய் இருந்தனர்.

இன்னும் கொஞ்சம் மேலே படியேறிப் போனால், மயக்கும் இரு விழிகளோடு மோகினியர் வாயிலைக் காக்க, ஆலவாயன் இறைவன் கோயில், குடும்பத்தினருடன். லிங்க ரூப நாயகன் கோயிலில் ஒரு பெண் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். வணங்கி விட்டு இடதுபுறம் பிள்ளையார், சுற்றி வருகையில் பவானி மாதா, முன்புறம் பெருமாள் சிற்றாலயங்கள். வணங்கி விட்டு, ஒட்டியிருந்த சிறு திண்ணைப் பகுதியில் அமர்ந்து சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். வெளிவந்து அருங்காட்சியகம் சென்றேன். நுழைவுக் கட்டணம் 10 ரூ.

தரைத்தளமும் முதல் தளத்திலுமாக இருந்தது. கீழே மையத்தில் பெரும்பல்லக்கும், மத்தளங்களும், பெரும் சாமான்களும் இருக்க, சுற்றிலும் கண்ணாடி பத்திரங்களுக்குள் அரசர்கள் பயன்படுத்திக் கிடைத்தவை வைக்கப்பட்டிருந்தன. சமையல் பாத்திரங்கள், வாட்கள், ஆயுதங்கள், நகைகள், நாணயங்கள், புகைப்படங்கள், ஆடைகள், தலைப்பாகைகள், ஓவியங்கள், மினியேச்சர் பொம்மைகள். வரலாறு எனும் பெரும் நதியைச் சல்லடைகள் வழியாக அள்ளிப் பார்ப்பது போல் இருந்தது. கைக்குக் கிடைத்த இந்தச் சின்னத் துளிகளைக் கொண்டு அந்த நதியை நாம் நிரப்பிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. இடையில் நமது அழுக்குகளையும் கலந்து விட்டால், கலங்கிய நதி ஆழத்தில் எதையும் காண விடாது, குழைசலை மட்டுமே காட்டுகின்றது.

‘தொடாதீர்’ என்று எழுதப்பட்டிருந்த மத்தளங்களைச் சிறுவர்கள் அடித்தனர். குறு வாட்களை ஆண்கள் நுண்ணிப்பாகப் பார்த்தனர். அவர்களின் கண்களுக்குள் போர் நிகழ்ந்து அவை குருதி சொட்டிக் கொண்டிருக்கும். கிளுகிளுத்த குரலில் மங்கையர் நகைகளையும் அவற்றின் பெட்டிகளையும் ஆடைச் சுருக்கங்களையும் பார்வையால் நீவினர்.

வெளியே வந்து மலையிறங்கத் தொடங்கினேன். மண்டபத்து வளைவில் இறங்குகையில் ஒரு தம்பதி சினத்துடன் ஆனால் உரத்த ஒலியின்றி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர் ஒரு செல்போனை ஓங்கி வீசி எறிந்தார். யாருடையது என்று தெரியவில்லை. அது கல் படிக்கட்டுகளில் விழுந்து அதிர்ந்து உருண்டு மோதி உடைந்து இறங்கிக் கொண்டிருந்த என் கால்களைக் கடந்து சிதறியது. ஒரேயொரு கணம் நின்று விட்டு தொடர்ந்தேன்.

அடிவாரத்தில் ஒரு குளிர்நீர்பானக் கடைக்குப் போய் லஸ்ஸி கேட்டால், அப்போது தான் தீர்ந்தது என்றார். எதிரேயிருந்த அனுமார் கோயிலுக்குச் சென்றேன். எண்ணெயும் பூக்களும் வாங்கி சனீஸ்வரருக்கு எண்ணெய் சாத்தி, அனுமனை வேண்டிக் கொண்டு வெளிவந்தால், பொங்கல் பிரசாதம் போய்க் கொண்டிருந்தது. சுடச்சுட வாங்கி கிடைக்காத லஸ்ஸியை மறந்து கிடைத்த பொங்கலைச் சுவைத்து கைகழுவினேன்.

அப்புறம் ஒரு மாதிரி பல திசைகளில் நடந்து, பஞ்சமி என்ற உணவகம் இருக்கும் காரணத்தாலே ‘பஞ்சமி நிறுத்தம்’ என்று பெயர் பெற்று விட்டிருந்த புள்ளியை அடைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹடப்ஸர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்து வெறும் சிவாஜி நகர் ரயில் நிலையம் செல்லும் வண்டிகளாகவே பார்த்து வெறுத்துப் போய், பின் வந்த வேனில் ஏறி பதினைந்து ரூபாய்க்கு ஹடப்ஸர் வந்தடைந்தேன். மணி 10:15 இரவு.












Wednesday, December 20, 2017

விஷ்ணுபுரம் விருது விழா - 2017 - ஒரு பயணம்.


ருக்குச் செல்லாமல் நேரடியாகவே கோவைக்குச் செல்லும் திட்டம் என்பதால், தாமதமாகவே 10:30 மணி அளவில் தான் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். பெங்களூரு கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர் கொள்ளத் தொடங்கியிருந்தது. மேம்பாலத்தடி சிக்னலில் இரவு வாகனங்கள் சிவப்புக்குக் கொஞ்சமாய்த் தான் தேங்கி நின்றன. சில்க் போர்ட் செல்லும் பேருந்து இனிமேல் வருமா என்று எண்ணிக் கொண்டிருக்கையில், ஆம்னி வேன் வந்து ‘மாரத்தஹள்ளி..?’ என்றது.  இங்கிருந்து காத்திருப்பதைக் காட்டிலும் ஹள்ளி சென்றால், பேருந்தோ ஐ.டி.பி.எல்.லிலிருந்து வரும் வேன்களோ நிறைய என்பதால், ஏறிக் கொண்டேன். டின் பாக்டரிக்கு இறங்கிக் கொள்வதாகச் சொன்னவர்கள் இடப்புற ஜன்னல் அமர்ந்து, என்னை அப்புறம் ஒதுக்கினர். கழுத்துக்குப் பின்புறம் கன்னட ஹாடுகள். சிமெண்ட் சாலைகள் மற்றும் புது மேம்பாலப் பணிகள் (வரும் வருடம் தேர்தல்!) காரணமாக ஊர்ந்து நகர்ந்த வண்டி, கிருஷ்ணராஜபுரம் தொடர்வண்டி நிலையம் கடந்து வேகமெடுத்தது. ஓட்டுனருடன் கன்னடத்திலேயே கதைத்துக் கொண்டு வந்ததில் இருவருக்கும் சிறு திருப்தி. மாரத்தஹள்ளியில் இறங்கிக் கொண்டு, வேறொரு வேன் பிடித்து சில்க் போர்ட் அடைந்தேன். ஏனோ கூட்டம் வழக்கத்தை விடக் குறைவு தான். தனியார் சொகுசுப் பேருந்தில் கோவைக்குக் கூவிக்கூடி அழைத்தனர். தவிர்த்துப் பின் நடந்து மேலே சென்றால், அதிசயத்திலும் அதிசயமாக சேலம் பேருந்துகள் நான்கு தொடர்ந்து வந்தன, பாதி மட்டுமே நிரம்பியனவாக. ஒன்றைத் தெரிவு செய்து வசதியாக அமர்ந்து கொண்ட பின் தெரிந்தது, அது சுற்றிச் செல்லும் வண்டி என்று.

எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தை விட்டு, கீழேயே சென்று, அத்தனை ஊர்ப் பேருந்து நிலையங்களிலும் இளைப்பாறி, சுங்கச் சாவடிகளைக் கடந்தவுடனே ஓரமாய் நிறுத்தி, காணாமல் போய், வெகு நேரம் கழித்து வந்து சேலம் மத்தியப் பேருந்து நிலையத்தை அடைகையில் விடிந்தும் விடியாமலுமான 04:30 எட்டியிருந்தது. கோவை செல்லும் இடை நில்லாப் பேருந்தை எட்டிப் பார்த்தால் நிரம்பியிருந்தது. வேறு வழியின்றி தடமெங்கும் கால் பதிக்கும் மற்றொன்றில் அடைக்கலம் புகுந்தேன். சேலத்திலிருந்து கிளம்புகையில் 04:45. சீட்டெடுத்து விட்டு, செவிகளை மீண்டும் புதிதாய் வாங்கிய சீனா ஹெட்போனில் புதைந்தேன்.

ஊர் வாசமோ அன்றி நீர் வாசமோ தெரியவில்லை, காவிரிப் பாலத்தில் கண் விழித்தேன். கோயில் மின் ஒளிப் பிம்பங்கள் நிறைந்த நீரலைகளில் படிந்தலைந்தன. மீண்டும் உறக்கம். இறுதி வரிசையில் அமர்ந்ததால் தொடர்ந்து தழுவிய காலடிக்குளிர், குறைந்து குறைந்து செல்கையில் காலைப் பொன்னொளி ஜன்னல் அழுக்குகளை மின்ன வைத்தது. கருமத்தம்பட்டி கடந்து செல்கையில், கண்களில் தூக்கம் அப்பிய களைப்போடு காண்கையில் பேருந்துள்ளே புது மலர்களென நின்றிருந்த இளையோரைக் கண்ணுற்று மகிழ்வு எய்தினேன். வெளியே ஊர்கள் மற்றொரு நாளுக்குப் புலர்ந்திருந்தன.

அசிங்கமாக முழுக்க முழுக்கப் பச்சை நிறத்தால் பூசப்பட்டிருந்த மேம்பாலம் கண்களைக் கூச காந்திபுரம் வந்தது. இங்கே, பெங்களூருவில் மகாத்மா காந்தி சாலை மெட்ரோ பாலத்தூண்களில் வெர்டிகல் கார்டனிங் எனும் முறைப்படி பசுஞ்செடிகளைப் படர விட்டிருக்கிறார்கள். இயற்கைப் பசுமை. கடந்த சில ஆண்டுகளாக கோவை இழந்து வரும் பல்லாயிரம் மரங்களின் ஆத்மாக்கள் இப்பாலத்தில் அடை பிடித்து கிடக்கின்றன போலும்.

மத்திய நிலையத்திலிருந்து பொங்கல், இட்லிக்கென அழைக்கும் டிபன் கடைகளையும், சாலை விளிம்புகளில் வணிகம் விரித்திருக்கும் தள்ளுவண்டிகளையும் கடந்து சென்று சிறு எல்.ஈ.டி. குமிழ்களால் மருந்து விற்கும் குறுவீதி நுழைந்து பார்ப்பதற்கு எளிய விடுதி ஒன்றை அடைந்தால், ஆளில்லை. நாற்காலியை அடைத்து குன்றிய குஜராத்தைக் கைவிட்டு ஆர்.கே.நகர் என்று அலறிக் கொண்டிருந்த நாளிதழ்களைப் புரட்டுகையில், வந்தார். நூறு ரூபாய்க்குப் பேரம் படிந்தது. முதல் மாடியில் ஒற்றை அறை. தொங்கலைத் தாங்க இயலாதவாறு குட்டி மின்விசிறி; உயரமும் போதாது. குளித்துக் கிளம்பி சூடாய்ப் பொங்கலும், இரு வடைகளும் கொண்ட பின் ஏழாம் எண் நகரப் பேருந்தில் ‘பாதமலர் புட்வேர்’ போன்ற அழகிய கடைகள் அமைந்த சாலை வழி ஆர்.எஸ்.புரம் வந்தடைந்தேன்.

நவீன கோவையை வடிவமைத்த சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியார் என்பவர் பெயரால் அமைந்த (விக்கி!) ஆர்.எஸ்.புரத்தில், ராஜஸ்தான் விற்பனைப் பொருட்கள் சந்தை விரித்திருந்த கூடாரத்தருகில் ராஜஸ்தான் ஸங் என்ற சங்கத்தினரால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் தான் ‘இவ்வருட விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாமதமாக வந்து விட்டிருப்பதால், மின் தூக்கி வழி இரண்டாம் தளத்தை அடைந்து ஒரு வரிசையில் அமர்கையில், மேடையில் தூயனும் அசோக்குமாரும் பதிலளித்துக் கொண்டிருந்தனர். கொஞ்சமும் அறிமுகம் இல்லாமலிருந்ததால் செவி வழி உள்வாங்கி மட்டும் கொண்டிருந்தேன்.

தேநீர் இடைவேளையில் ஈரோடு பாரதி பதிப்பகத்தாருடன் ஓர் எளிய அறிமுகம் செய்து கொண்டேன். (”கொங்கு வரலாறு கிடைக்குமா சார்..?” “கண்டிப்பா..”) பின்பு அவர் பெட்டி கட்டிக் கொண்டு வந்திருந்த புது நூல்களை கடை பரப்பி, கிடைத்த மேடைகள் மேல் அடுக்கடுக்காக அடுக்கி ஒரு மாதிரி அத்தனையையும் நிரப்பி விட்டு, தேநீர் எடுத்துக் கொண்டு உள் நுழைய, ஆர்.அபிலாஷின் அமர்வு பாதி தாண்டியிருந்தது. குளிர்மையும் காற்றும் உலவும் ஓர் இனிய புள்ளியில் அமர்ந்து கொண்டு அவர் கூறியவற்றைக் கேட்டேன். அதன்பின் சுரேஷ்பிரதீப் மற்றும் விஷால்ராஜாவின் அமர்வு.

எதையும் உண்பவன், திருப்பிச்செய்ய வேண்டியன இரண்டு என்று என் தலைவன் பீமன் உணர்ந்திருப்பதை வெண்முரசுவில் ஜெ சொல்கிறார். சமைத்தல் மற்றும் பரிமாறுதல். இங்கே சமைக்கும் பணி இல்லை என்பதால், பரிமாறும் பணியில் இணைந்து கொண்டேன். கிடைத்த வாய்ப்புகளில் வாளிகளில் உணவள்ளிப் பரிமாறும் போது, கிடைக்கும் திருப்தி வேறெதிலும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை அறிய முடிந்தது. இரு நாட்களும் பந்தி பரிமாறலில் பங்கெடுத்துக் கொண்டேன். ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வந்த மனிதருக்கெல்லாம்’ என்று விருந்தோம்பிய விஷ்ணுபுரத்தினருக்கு பெருவயிறார்ந்த நன்றிகள்.

சனி மதியம் உணவு இடைவேளைக்குப் பின் போகனின் அரங்கு. உண்ட களைப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வந்த கலகலப்பான அரங்கு. தொடர்ந்து கவிஞர் வெய்யிலின் அரங்கு. கவிதை என்பதுமே களைப்பு பறந்து, அரங்கமே உற்சாக வெறியடைந்தது. நிறைய கேள்விகள் இதில் தான். எல்லா பந்துகளையும் திசைகளுக்குப் பறக்க விட்டார் வெய்யில்.  பின்பு மலேசிய வருகையாளர்களுடனான அரங்கு. மென்மையும் அமைதியுமாகப் பேசிய ஷண்முகசிவா, எப்போதும் புன்னகையுடனே இருந்த சுவாமி, இளமைச் சுடர் எரிந்த நவீன், கம்மென்று அமர்ந்திருப்பினும் சமயம் கிடைக்கையில் தெளிவாகப் பேசிய விஜயலக்‌ஷ்மி மற்றும் தயாஜி என ஐவர். இங்கே பத்திரமாக இருந்து கொண்டு, அயல் நிலத்தை எட்டிப் பார்த்து அங்கே நிகழ்வதை அறிந்து கொள்ள உதவினர்.

இரவுணவுக்குப் பின் நடந்த வினாடி-வினா நிகழ்வு எவ்வளவு நிரட்சரகுட்சியாக இருக்கிறேன் என்று தெரியவந்தது. நல்லவேளை, அனந்தபுரத்தில் குப்பை கொட்டிய சிலகாலத்தில் கிடைத்த அறிமுகத்தால், நீல.பத்மனாபன் அவர்கள் குறித்த கேள்விக்கு ஒரு பதில் அளித்து பறந்து கொண்டிருந்த மானத்தைக் கொஞ்சமாவது கீழிழுக்க முடிந்தது. அமைந்த அணியில் அனைவருக்கும் நூல் பரிசு கிடைக்க, பதில்களைப் பகிர்ந்து கொண்டதில் ஒரு நிறைவு.

இரு அறைத்துணைவர்களுடன் சேட் செமயாகக் கட்டி வைத்திருந்த சொகுசான அறையில் பொருட்களைப் பத்திரப்படுத்தி விட்டு, காலாற சிறு நடை சென்றோம். குளிர் குறைந்த கோவையைப் புலம்பி விட்டு, வெண்முரசுவைப் பற்றிக் கொஞ்சம், படித்த நூல்களைப் பற்றிச் சிறிது பேசி விட்டு, மூன்று நாற்சந்திமுனைகளைத் தாண்டி, ‘இப்போதைக்கு மூடுவதாயில்லை’ என்று இயங்கிக் கொண்டிருந்த கடையில் முதலிரவுக்குத் தயாராவது போல் பாதாம் பாலும், செவ்வாழையும் உண்டு விட்டு, விடுதிக்குத் திரும்பினோம். ஒருவர் விரைவில் சென்று உறங்கிவிட, ஜெ நடத்திய சபைக்குள் ஐக்கியமானேன். பல மொழிகளில் பல்லாண்டுகளாக மெளனமாக இருந்த கவியோகியைப் பற்றியும் மேலும் பல விஷயங்களையும் தெரிந்து கொண்டு, இரண்டு மணிக்கருகே சென்று படுத்துக் கொண்டேன்.

புது இடம்; மனமெங்கும் சொல்வெளி; தயங்கித் தயங்கித் தான் வந்த தூக்கத்தில் மூழ்குகையில் கனவில் இரு பாதமலர்கள்.

ஞாயிறு புலர்ந்தது. காலைநடையைத் தவற விட்டு, தேநீர்க் குடுவையருகே நிகழ்ந்து கொண்டிருந்த சிரிப்பான குறுங்கூட்டத்தை மேலிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டு விட்டு தயாராகி, மீண்டும் அரங்கிற்கே வந்தேன். காலையொளி கழுவிக் கொண்டிருந்த கருஞ்சாலையைப் பார்த்துக் கொண்டிருந்த மலேசியருடன் ஓர் அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, சில கருத்துச் சிதறல்களைச் சிதற விட்டு, முதல் அரங்கிற்கு வந்தேன். பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடனான அமர்வு.  சுவாரஸ்யமாகவும் ஆர்வத்துடனும் சென்றது. மருத்துவம் குறித்த திசைக்குச் செல்லும் முன் ஜெ இலக்கியத்திற்கு இழுத்துக் கொண்டு வந்தார். பின், பரிசு வாங்கப்போகும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள். பெரும் அனுபவங்களையும் வாழ்வையும் மீண்டும் நாங்களும் வாழ்ந்தறிந்தோம். இறுதி அமர்வாக, மேகாலயா எழுத்தாளர் ஜெனிஸ் பரியத் அவர்களுடனான ஓர் இனிய அமர்வு. வழுக்கிக் கொண்டு சென்ற ஆங்கிலம், உற்சாகமான எழுத்தாளர். மற்றுமொரு உற்சாகமாக மணி சாருடைய வியத்தலும், வாழ்த்தும்.

கொஞ்சம் பெரிய இடைவெளிக்குப் பின், பரிசு வழங்கும் நிகழ்வு. அறையை காலி செய்து விட்டு, ஐந்தரைக்கு அரங்கிற்கு வந்தேன். செல்வேந்திரனின் ஆற்றொழுக்காகத் தொகுத்து வழங்கினார். மகிழ்மலர் இனிய குரலில் கிராதநாயகனைப் பாடினார். நகலிசைக் கலைஞர் ஜான்சுந்தர் தன் குழுவினருடன் வந்து சங்கை முழக்கினார். அவர் குரலே அவ்வளவு கணீரென இருக்கையில், சங்கொலி சற்று சுதி குறைவாகத் தான் இருந்தது. சீ. முத்துசாமி அவர்களுக்கு அரங்கிலிருந்த ஜெ, ’இளைய தளபதி’ நவீன், பி.ஏ.கிருஷ்ணன், ஜெனிஸ், ராஜகோபாலன் சூழ 2017-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுர விருது வழங்கப்பட்டது. அனைவரும் பேசிப்பேசி முடிக்க, முத்துசாமி அவர்கள் ஒரு நீண்ட ஏற்புரை நிகழ்த்தினார். தன் நீண்ட வாழ்வின் ஒளிரும் பொன் மணிகளில் ஒன்றாக இந்நிகழ்வை அவர் என்றும் நினைவில் வைத்திருப்பார் என்பதை அவருடைய உணர்ச்சி வயப்பட்ட உரை சொன்னது. பேசியது முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மீண்டும் ஓர் இரவு உணவு. முதலிலேயே உண்டு விட்டு, பொறுப்பாளரான விஜய்சூரியனிடம் மட்டும் விடைபெற்றேன்.

அரங்கை விட்டு வெளிவந்து, நிறுத்தத்தில் ஏழைப் பிடித்து, காந்திபுரம் மைய நிலையத்தில் சேலம் விரைவுப்பேருந்தில் ஓரிடத்தில் நிலைத்து மீண்டும் எனக்குத் திரும்பினேன்.

நன்றி ஜெ மற்றும் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தினருக்கு.

நொறுக்கு:

* ஜெ ‘வளர்ந்து வரும் எழுத்தாளர்’ என்று சொல்லி பி.ஏ.கிருஷ்ணன் அவர்களிடம் சொன்னது, ஓர் ஜில்கட்டி கொடுத்தது.

* பாரதிமணி சாரிடம் நினைவுபடுத்திக் கொண்டதும், மீண்டும் மீண்டும் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தார். பெருமகிழ்வு.

* நாஞ்சிலாரிடம் சிறிது நேரம் பேசியது ஒரு மனநிறைவு.

* முத்துசாமி அவர்களின் அமர்வில், சாரு போல் இருப்பதையும், 100 டிகிரி எழுதச் சொல்லி மணி சார் கேட்டதும் அதற்கு அவர் அளித்த பதிலும் ‘வயசானாலும் உம்ம குறும்பு போகலியே’ என்று தோன்றியது.

* அரங்கிலேயே இளைஞரான மணிசார் தான் ‘நீங்கள் ஓர் அழகிய பொம்மை’ போல் இருக்கிறீர்கள் என்று மற்றவர் சொல்ல மறந்த புகழுரையை ஜெனிஸ் பரியத்திடம் சொன்னார். ரசிகமணி.

* அமர்வுகள் அலைபாய்கையிலோ உறைந்து நின்று விட்ட போதுகளிலோ ஜெ தன் கேள்விகளாலும் கமெண்டுகளாலும் முன்னகர்த்திக் கொண்டிருந்தார்.

* வரிசையில் வண்ணதாசன், நாஞ்சில், கண்மணி, கோவை ஞானி என்று பலபேரை மொத்தமாகக் காண்பது கொடுத்த கிளர்வு, தனி.


Tuesday, January 27, 2015

மன்த்லி பாஸ்.

பெங்களூருவில் மன்த்லி பாஸ் வாங்கினேன்.

மாநகரின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு தொலைவுப் பகுதிக்கு மாற்றி இருக்கிறார்கள். நான் தங்கியிருக்கும் ஊரோ திப்பு காலத்தில் பெங்களூரு கோட்டைக்கு அசலூராக இருந்திருக்கும். அவ்வளவு தொலைவு. இறக்கைகளின் ஒரு நுனியிலிருந்து மறு நுனிக்குப் பயணிக்கையில் தலைமேல் சிறு இளைப்பாறல் கொள்ளும் சிற்றெறும்பைப் போல், இரு பேருந்துகள் மாற்றிப் போக வேண்டும். கணக்கிட்டுப் பார்க்க சுளையாக ஒரு நூறு தினம் செலவாகி விடும் போல் தோன்றியது. எனவே மாதப் பயணச்சீட்டு எடுத்து விடல் உசிதமாகப் பட்டது.

இன்று சனிக்கிழமையை முற்பகலை அதற்காக ஒதுக்கினேன்.

மேக மூட்டைகளை நிரப்பிய கூடையைக் கவிழ்த்துப் போட்டது போல் வானம் திரும்பியிருந்தது. எப்போதும் திறந்து கொள்வேன் என்று பயம் காட்டிக் கொண்டிருந்தது. நேற்று இரவின் மழை மிச்சங்கள் ஓரங்களில் பழத்தோல்கள், கிழிந்த டிக்கெட்டுகள், பேனா மூடி, ட்ரான்ஸ்பார்மரின் தலைகீழ் பிம்பங்களைச் சுமந்தது. ஆட்டோக்கள் வரிசை கலைந்து டிராவல்ஸ் வாசல்களில் பெட்டியர்களை அள்ளிக் கொள்ள நின்றன.

செய்ண்ட் ஜான்ஸ் சிக்னல் மாநகரின் எல்லா சிக்னல்களையும் போலே காத்திருப்போரின் பொறுமைகளை விழுங்கிக் கொண்டே மடை மாற்றியது. மெஜஸ்டிக் செல்லும் பேருந்துக்காகக் காத்திருக்கையில் வழக்கம் போல் ஏ.ஸி. தாங்கிகளே வந்தன; நின்றன; சென்றன.

பத்து நிமிடங்களுக்குப் பின் 360 வந்தது. அழுக்கடைந்த கண்ணாடிக் கதவுகள் முனகிக் கொண்டே திறக்க, அடைந்த கூட்டத்தை அடைந்து அடைந்தேன். மூக்கு மேல் நுனியில் குங்குமம் வைத்த ஸ்ரீனிவாசன் 20 ரூபாய் வாங்கிக் கொண்டு டிக்கெட்டுகளை (14+6) கிழித்துக் கொடுத்தார். ஷாந்தி நகருக்குப் போய்க் கொஞ்சம் பேரை உதிர்த்து விட்டு இன்னும் கொஞ்சம் பேரை உள்வாங்கிக் கொண்டு போஸ்டர்கள் தின்ற சுவர்களின் இடையே புகுந்து புகுந்து மெஜஸ்டிக் வந்து சேர்ந்தது. வழியில் கொஞ்சம் போல் தூறி விட்டு, வைப்பர்கள் இயங்குவதற்குள் காணாமல் போயின.

மெஜஸ்டிக் இன்னும் குளிர்வாய் இருந்தது. குளிர்பானக் கடை ஒன்றின் அருகே திருத்தமான அழகான முகம் கொண்டிருந்த இள நங்கை காத்திருந்தாள். அவள் போக வேண்டிய பேருந்து இன்னும் வாராதிருந்திருக்கலாம்; அவள் தந்தையோ தம்பியோ கழிப்பறைக்குச் சென்றிருந்திருக்கலாம்; அவள் சும்மா பேருந்துகளின் இயக்கங்களைப் பார்ப்பதற்காகவும் வந்திருக்கலாம்.

கர்நாடகா வங்கியின் ஏ.டி.எம் கூண்டுக்குள் பணம் எடுத்துக் கொண்டு பி.எம்.டி.சி. அலுவலகம் சென்றால், அங்கே கவுன்ட்டர்கள் டிக்கெட் வரிசையில் அமைந்திருந்தன.

ஏ.சி. அற்ற பேருந்துகள் என்றால் மாதம் 1050. அன்றேல் 2100. விண்ணப்பப் படிவம் வாங்கி நிரப்பி, கொஞ்சம் தள்ளி வேப்ப மரத்தடியில் இருந்த பெஞ்சில் சிந்தியும் சிதறியும் வழிந்தும் காய்ந்தும் குழம்பியும் நிரம்பியும் இருந்த பசை டப்பாவை ஒரு குச்சி வைத்துக் கலக்கி எடுத்து நம் புகைப்படத்தின் வெண் முதுகில் பூசி அப்பினால், வாங்கிக் கொள்கிறர்கள். கூட பணத்தையும். பாஸ் எண்ணைக் குறித்துக் கொண்டு அட்டையைத் தந்து விடுகிறார்கள். மேலே முதல் மாடிக்குக் கொண்டு சென்றால், லேமினேஷன் அடித்துப் பத்திரம் செய்கிறார்கள்.

நிறைய கல்லூரியர்கள். மாதத் துவக்கம் என்பதால் புதுப்பித்தல்கள் நடந்தன. விரல்கள் மறைத்த சிரிப்பில் பெண்கள் தங்களுக்குள் எதையோ மறைவாகப் பேசிக் கொல்கிறார்கள். வரிசை பட்டுப்பூச்சி பறவை ஆதல் போல் மெல்ல மெல்ல நகர்கின்றது. அக்குளில் கைப்பை வைத்த அந்தப் பெரியவர் புதிதாக மாத அட்டை வாங்கி என்ன செய்யப் போகிறார்? சந்தனப் பொட்டு துளியூண்டு வைத்த இரு மூத்த பெண்கள் படிக்கட்டுகளை எண்ணி எண்ணி இறங்குகின்றனர்.

Wednesday, June 05, 2013

விளிம்பெல்லாம் வளையல்கள்.



னிக்கிழமை மதியம் மெஸ்ஸில் உண்டு கொண்டிருந்த போது சட்டென “நாளைக்கு எங்காவது வெளியே போகலாமா?” என்று அறை நண்பனைக் கேட்டேன். பருப்பில் இருந்து தலை நீட்டியவன் “நாளைக்கென்ன நாளை, இன்னிக்கே போலாமே?” என்றான். தீர்ந்தது. ஹைதைக்கு வந்து இன்னும் சார்மினார் பார்க்கவில்லை. வாழ்நாளில் ஒருதரம் கூட இங்கே வராதவர்கள் எல்லாம் சார்மினாரை பாக்கெட் பாக்கெட்டாகக் கொளுத்தும் போது அவ்வப்போதைய வெடிகுண்டு மிரட்டல்களுக்கு இடையே ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரிஜினல் சார்மினாரைப் பார்க்காதது நரகத்தில் நா வறளும் சோகத்தைக் கொடுத்தது. உடனே கை கழுவி விட்டு எழுந்தோட....முடியாமல் இரண்டு விஷயங்கள் தடுத்தன. அ. உணவு. ஆ. கிரிக்கெட்.

சாம்பியன்ஸ் ட்ராபியின் முதல் சூடுபடுத்திக் கொள்ளும் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே அன்று மதியம். சஞ்சய் ‘வானம் வெளுப்பாக இருக்கிறது; நேற்று மழை வந்தது; இன்று வெயில். sunny climate..' என்றெல்லாம் மைக்கை நனைத்துக் கொண்டிருந்தார். டாம் மூடி தன் பலமான ஆகிருதியுடன் காமிரா முன் வந்து மற்றுமொரு பலமான ஆகிருதியில் சிரித்தார். மைதானத்தில் பச்சை. வரிசைகளில் ரிலாக்ஸான வெள்ளையர்கள். மூவர்ணக் கொடியை முண்டாசாக்கி நம்மாட்கள் சிலரும் கையசைத்தனர். சிங்வாலாக்கள். டாஸ் வென்ற தோனி பவுலிங் என்றார், மெனக்கெட்டுப் போட்டுக் கொண்டு வந்த கோட்டைக் கழற்றி அம்பயரிடம் கொடுத்து விட்டு இர்பான் முதல் ஓவரைத் துவக்கினார். அண்டை நாட்டவர்களைத் தொலை தூரத் தேசத்தில் அம்போவென்று விட்டு விட்டுத் தொலைக்காட்சியை அணைத்தேன்.

மூன்றரை மணிக்கு மாதாப்பூர் பெட்ரோல் பங்க் பேருந்து நிறுத்தத்தில் நின்றோம். வழக்கமாக மே விடை பெற்றுப் போகும் போது அடம் பிடிக்கும் குழந்தையைத் தாய் போல் வெயிலையும் தரதரவென இழுத்துச் சென்று விடும். இங்கு இன்னும் சரிவரப் போகவில்லை. வெயில் காயவில்லை ஆனாலும் ஓயவில்லை, இங்கிருந்து சார்மினாருக்கு நேர்ப் பேருந்துகள் இல்லை. இருக்கும் மாற்று வழிகளில் இலகுவான வழி செகந்திராபாத் சென்று அங்கு பஸ் மாறுவது. மூர் விதிப்படி கோட்டிக்குச் செல்லும் பேருந்துகளே (127K) வந்தன. கால் மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின் ’இன்னும் மூன்று பஸ்கள் பார்ப்பது; செக்.குக்கு வராவிட்டால் இங்கிலாந்துக்குப் போய் விட வேண்டியது தான்’ என்று முடிவு செய்ய, மூன்றாவது பேருந்து 10H.

ஒரு நாள் பயணச் சீட்டு எடுத்துக் கொண்டேன். 60ரூ. ஸெகந்திராபாத் இங்கிருந்து ஒன்றேகால் முதல் ஒன்றரை மணி நேர தூரத்தில் உள்ளது. பெத்தம்மா கோயில், பஞ்சாரா ஹில்ஸ் செக் போஸ்ட், அமீர்பேட் வந்தது. அமீர்பேட்டை என்பது இன்று முழுக்க முழுக்க கணிணித் தொழில்நுட்ப கோர்ஸ்களுக்கான கற்பித்தல் மையங்களால் நிரம்பியுள்ளது. சுவர்களில் கட்டண விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தரைகளில் பிட் நோட்டீஸ்கள். விதவிதமான ஆங்கில எழுத்துக்களின் கூட்டுகளில் பலவர்ண போர்டுகள். விலகி சர்தார் படேல் சாலையில் மேம்பாலங்கள் அரை ஸைன் அலை போல் எழும்பி அடங்கி எழும்பி அடங்கிய போது ஸெக் வந்திருந்தது.

செகந்திராபாத் இரயில்வே நிலையத்தின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டோம். ஓரமாய் வெட்கப்பட்டு நிற்பது போன்று ஒரு சுவரோரம் 8A காலியாகக் காத்திருந்தது. அஃப்ஸல் கஞ்ச் செல்லும் பேருந்து. ஏறி அமர்ந்து கொண்டோம். வெயிலில் ஒரு சதுரக் கண்ணாடிக் குவளையைப் போல் மினுங்கியது. சுமாராய்க் கூட்டம் சேர்ந்த பின் எங்கிருந்தோ முளைத்த ஓட்டு மற்றும் நடத்துனர்கள் 8A -வை நெரிசலிலிருந்து இன்னும் அதிக நெரிசலுக்கு நகர்த்தினர். பெயர் அறியாத நிறுத்தங்கள் ரஸ்தாக்கள் வழியாகச் சென்று கொண்டேயிருந்தோம். ஹுஸைன் சாகர் ஏரிக் கரை வந்தது. செய்த மேனிக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் புத்தர் நடு ஏரியில் நின்று கொண்டிருந்தார். மோட்டார் படகுகள் விர் விர்ரென்று கரைக்கும் புத்தர் காலுக்கும் இடையே விரைந்தன. கொஞ்சம் கிடைத்த இடத்தில் பையன்கள் நீரில் மறையும் கதிரின் தங்கக் கரைசலில் மூழ்கி எழுந்தனர். சுற்றிக் கொண்டு ஒரே சமயத்தில் சந்துகள் போலவும் சாலைகள் போலவும் தோற்றமளிக்கும் பாதைகள் வழியாகச் சென்றோம். நிறைய வேகத் தடைகள். முழுக்கவே இஸ்லாமியர் ஏரியா. கறிக்கடைகள். மோட்டார் சரி பார்ப்பிக் கடைகள். மரச் சாமான்கள். மசூதி. அசைந்து கொண்டிருக்கும் கண்ணாடிச் சரங்கள். பர்தா பெண்கள்.

அஃப்ஸல் கஞ்ச் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். இடது பக்கம் சார்மினார். சார் என்றால் இந்தியில் நான்கு, மினார் என்றால் தூண். (குதுப்மினார்? குதுப்ஷா மன்னர்களால் கட்டப்பட்ட தூண்) நான்கு தூண்களைக் கட்டி இணைத்து மேலே தொழுகை செய்யும் இடமும் உள்ளது. அருகே போன போது தான் தெரிந்தது. மேலே ஏறிச் சென்று பார்க்க நேரம் கடந்து விட்டது. மாலை ஐந்து மணி வரை தானாம். நாங்கள் வந்து சேர்ந்தது ஐந்தரைக்கு. ‘பரவாயில்லை’ (வேறு என்ன சொல்வது?) என்று சுற்றி வந்து செல்லில் படங்கள் சேர்த்துக் கொண்டேன். தூணை ஒட்டியே ஒரு அம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் காவலுக்கு நாலு காக்கியர். குண்டு பரிசோதனைக்குக் கருவி. சமீபத்திய குண்டு வெடிப்பிற்குப் பின் இன்னும் பலமான ரோந்து.

நீர்த்தாரை வழிந்து ஓடு வழியின் கரைகளில் ஓதம் படர்ந்திருப்பது போல, சாலையின் விளிம்புகளில் தள்ளு வண்டிகளில் வளையல்கள் சரம் சரமாய்த் தொங்கின. ப்ளாஸ்டிக் குறும்பெட்டிகளில் கவரிங் நகைகள். பின்னலுக்கு வைக்கும் பின்னிலிருந்து நங்கையருக்குத் தேவையான அனைத்தும் இங்கே சல்லிய விலையில் கிடைக்கின்றன, பேரம் பேசத் தெரிந்தால். எடுத்த எடுப்பிலேயே இமயத்தில் சென்று அமர்கின்ற கடைக்காரர்களை இழுத்துக் கொண்டே வந்து தரையில் அமுக்கத் தெரிந்தால், இந்த சாலையில் மட்டும் அல்ல எந்த சாலையிலும் நீங்கள் பணம் மிச்சப்படுத்தலாம்.

உள்ளே பிரிந்து செல்லும் சந்துகளில் அதே நகைகளைக் குண்டு பல்பின் மஞ்சள் பூச்சின் கீழ் வைத்து முலாமடித்து நிலவுக்குச் சென்று அமர்ந்து விற்கிறார்கள். சேலைக் கடைகளில் மீப் பெரும்பாலும் ஜிலுஜிலு புடவைகளே உள்ளன. எம்ப்ராய்டரி செய்தவை, ஜரிகை நெய்தவை, கல் வைத்தவை, கண்ணாடி தைத்தவை போன்ற கோஷ்டிகளுக்கு நடுவே ’ப்ளைன் ஸாரி’ என்று கேட்டால் ’நோ’ என்கிறார்கள். வாசனைச் சாம்பிராணிகள், நாவற்பழ சைஸ் பாட்டில்களில் அத்தர், மல்லிகை மற்றும் செயற்கை மணங்கள் சிற்சில கடைகளில் விற்க உள்ளன. வகைக்கு ஒன்றாக எடுத்து கைகளில் தடவிக் கொண்டு நகர்ந்தேன்.

இரவு கவிழத் தொடங்க, ஜெனரேட்டர் பல்புகளில் விற்பனை ஜொலித்தது. ஹோட்டல்கள், பூக்கடைகள், பேக்கரிகள் எல்லாம் தயாராயின. மீண்டு அஃப்சல் கஞ்ச் பேருந்து நிலையத்திலேயே 8A பிடித்து ஸெகந்திராபாத் வந்தோம். அங்கேயே ஒரு குட்டி ஹோட்டலில் இட்லிகளை எடுத்துக் கொண்டு மாதாப்பூருக்குத் திரும்பும் போது ராத்திரி பத்தரை. வந்தது நித்திரை.

Saturday, July 24, 2010

My Name ISKCON.



மிதந்து கொண்டிருந்த குளிர் மேகங்களை ஊடுறுவி வெண் பட்டுப் போன்ற கதிர்க் கோடுகள் பெங்களூர் வானில் ஒளியை பரவ விட்டுக் கொண்டிருந்தன. நகரம் சனிக்கிழமையும் ஓய்வுறாத சாலைகளில் இயங்கிக் கொண்டிருந்தது. இன்ஸெப்ஷனுக்கும் தில்லாலங்கிடிக்கும் உதிரிக் கூட்டங்கள் தியேட்டர்களுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க, கெம்பகெளடா பேருந்து நிலையத்தில் நண்பகல் பனிரெண்டு காலுக்கு இறங்கிக் கொண்டேன்.

80 இலக்கமிட்ட பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டு, "இஸ்கான்..!" என்று வாங்கிக் கொண்டேன்.

ண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் க்ருஷ்ணா கான்ஷியஸ் என்ற பெயரின் சுருக்கமே இஸ்கான். பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பு இது. பகவான் கிருஷ்ணனையே முழுமுதற்கடவுளாக கொண்டு இயங்குகின்றது. வெளியே பிரபலமாக 'ஹரே கிருஷ்ணா' இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. உலகெங்கும் பரவியுள்ள இந்த அமைப்பின் பெங்களூர்க் கிளை ராஜாஜி நகர் அருகே இஸ்கான் ஹில் என்றே பெயரிடப்படுள்ள சிறு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை ராதாகிருஷ்ண மந்திர் என்றும் சொல்கிறார்கள்.

மிகத் தெளிவான வரையறுக்கப்பட்ட பாதை இருக்கின்றது. எண்ட்ரியிலிருந்து எக்ஸிட் வரை ஆங்காங்கே அம்புக் குறிகள் நடப்பட்டிருக்கும் பாதை எவர்சில்வர் தண்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தொலைந்து போகும் வாய்ப்பேயில்லை.

கொஞ்சம் மலை ஏறியதும் பாதக் காலணிகள் வைக்கும் இடம் உள்ளது. வரிசையாக அடுக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெயர்கள் A, B, C என்று துவங்கி Z தாண்டிப் பின் AA, AB என்று நீள்கின்றது. நெற்றியில் நாமமும், சின்னக் குடுமியும் வெண்ணிற ஜிப்பாவும் அணிந்த இளம்பையன்கள் சிமெண்ட் சுமந்த பாலிதீன் மூட்டையை எடுத்துக் கொடுக்க நாம் நம் செருப்புகளை அதிலே போட்டுக் கொடுத்தால், அவர்கள் காலியாக இருக்கும் அடுக்கில் வைத்து விட்டு நமக்கு டோக்கன் கொடுக்கிறார்கள்.

கொஞ்சம் மேலே ஏறினால், கைகளை கழுவிக் கொள்வதற்குத் தண்ணீர் பைப்புகள். கால்களைக் கழுவிக் கொள்ள பாதையிலேயே ஒரு கிடைமட்ட பைப் வைத்து அதில் சில பொத்தல்கள் இருக்க, குளிர் நீர் கசிந்து படிக்கட்டை முழுக்க நனைத்துக் கொண்டிருக்க, நாம் அந்தச் சிறு நீர்ப்பரப்பில் நனைத்துக் கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் தூரம் வழியிலேயே சென்றால், கம்பித் தடுப்புகள் முடிந்து ஓர் அகன்ற வெளி வருகின்றது. அங்கே நின்று பார்த்தால், நமக்கு முன்னே கோயில் பெரிதாக நின்று கொண்டிருக்கின்றது. ஸ்பீக்கர்கள் 'ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே;' என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றன. பதிவு செய்யப்பட்டதா அல்லது ஒருவர் மைக் முன் அமர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.

முதலில் வருவது நரசிம்மர் கோயில். இரணியனைக் கொல்லும் அதே கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். வரிசையாகச் சென்று பார்த்து வணங்கினேன். மஞ்சள் வெளிச்சத்தின் நடுவில் அத்தனை நகைகளுடன் தெரிந்தார்.

வெளியே வந்து கொஞ்சம் படியேறினால் வெங்கடாசலபதி நிற்கிறார். சொல்ல வேண்டுமா? தகதகதகவென ஜொலிக்கிறார். உண்டியலும் இருந்தது.

சங்கர் தயாள் சர்மா அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது திறந்து வைத்த கோயிலாம். கல்வெட்டு சொல்கின்றது.

இன்னும் கொஞ்சம் படிக்கட்டுகள் வழியேறினால் ராதாக்ருஷ்ணர் கோயில்.

மிகப் பெரியதாக இருக்கின்றது. கூம்பு வடிவ உச்சி நம்மைச் சட்டென மிகச் சிறியவனாக உணரச் செய்யும் உயரம். அதன் உடலெங்கும் கண்ணன் ஓவியங்கள். மையத்தில் பிரம்மாண்டமான ஷாண்ட்லியர் மின் விளக்கு ஒன்று தொங்குகின்றது. உயரமான மாடங்களில் எண்ணெய் விளக்குகள். அவை ஏற்றப்படவில்லை. திருவிழாக்களில் திரிபடலாம். டைல்ஸ் தரை. முன்னே பார்த்தால் தங்கக் கோபுரங்களின் கீழே மூன்று பகுதிகள். வலப்புறம் கண்ணன், பலராமன். இடப்புறம் நித்ய கெளரங்கா. கெளரங்கா என்ற பெயர் ஸ்ரீ சைதன்ய மகாப்ரபுவையும், நித்ய என்ற பெயர் அவரது பிரதான சீடரான நித்யானந்த பிரபுவையும் குறிக்கின்றது. மையத்தில் ராதையுடன் கண்ணன். சிலைகளைப் பார்த்தால் வட இந்தியப் பாணி தெரிகின்றது. பூரியில் இருக்கும் பாண்டுரங்கனைப் போன்ற அடையாள உற்சவர்கள்.

இவை பஞ்ச லோகச் சிலைகள் (தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் இரும்பு). இவை கும்பகோணம் அருகில் உள்ள ஸ்வாமி மலையில் தேவஸ்தான ஸ்தபதி மற்றும் அவரது மகனான இராதாகிருஷ்ண ஸ்தபதிகளால் உருவாக்கப்பட்டதாக வலை சொல்கிறது.


நன்றி:: http://api.ning.com/files/7juhZFLXQaSOma8VHkiLhYw06RkJ3QvzFtIrog0bciiaSdWaGz24R6gKDpLiw**MR812kBvA6VcBAEju4kL4N9HM4g8W*x4h/DSCN2682.jpg

தங்கக் கோயில்களை நாம் நெருங்க முடியாது. தர்மதரிசனத்தில் கொஞ்சம் தொலைவிலிருந்து பார்க்கலாம். சிறப்பு தரிசனமும் இருக்கின்றது. வணங்கி விட்டு இடப்புறத்தில் புத்தகக் கடைகள் துவங்குகின்றன. ஆங்கிலம், இந்தி, வங்காளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா ஏன் சைனீஸிலும் புத்தகங்கள் உள்ளன. இரண்டு குறும் நூல்கள் வாங்கினேன். தமிழில் தான்.

சுற்றி வந்தால் தீர்த்தம் தருகிறார்கள். இதற்கென்றே டிசைன் செய்யப்படுகின்ற தீக்குச்சிக் கரண்டிகள். திரும்பினால் பிரபுபாதா அவர்களின் சிலை இருக்கின்றது. அவருக்கு முன்னே அமர்ந்து தியானம் செய்யத் தளம் இருக்கின்றது. இசைக்கருவிகள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகில் அமர்ந்து கண்ணனைப் பார்த்தேன்.


நன்றி::http://www.iskconbangalore.org/panihati-chida-dahi-festival-2010

'உனக்கு எதற்கு இத்தனை பிரம்மாண்டம்? பசுக்கள் மேய்த்துக் கொண்டிருந்த கரும்பயலே உனக்கு எதற்குத் தங்கக் கோபுரங்கள்? இந்தப் பொன் வர்ணப் பாவாடையும் ஜொலிக்கின்ற புல்லாங்குழலும், மின்னுகின்ற மகுடங்களும் உன்னைக் களைப்படையச் செய்யவில்லையா? இப்படி மஞ்சள் தூண்களுக்குள் உன்னை வைத்துக் கொண்டு என்னிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ள நீ என் கண்ணன் தானா? இருக்கவே முடியாது. இங்கே உன்னை மஹா செல்வந்தனாக நினைத்துக் கொண்டு அதையும் இதையும் கொடு என்று வேண்டிச் செல்கிறார்களே, இவர்கள் அறிவார்களா நீ ஒவ்வொருவரிடத்திலும் இருப்பதை? நீ வேண்டி இறைஞ்சி நிற்பதெல்லாம் உன் மேலான காதலையும், ஒவ்வோர் உயிரிடத்தும் அன்பையும் கருணையும் அல்லவா? உன்னிடம் எதை வேண்டிக் கொள்வது? நீயே சிறை பிறந்த கள்ளன் அல்லவா? உன்னைத் தெய்வமாக்கி அபிஷேகம் செய்து, குளிப்பாட்டி, அலங்கரித்து மாலை சூட்டிப் பூஜை செய்து எங்கள் மனதிலிருக்கும் ஒரு மாயக் குழந்தையை மறக்கச் செய்ய முடியுமா?'

இராதாக்ருஷ்ணர் கோயிலின் கதவுகளில் மேலிருந்து கீழாகத் தசாவதாரச் சிலைகள். அவற்றின் இரு புறமும் நாரதர், அழகுப் பெண்கள், யானைகள், பறவைகள். யாரும் கவனிப்பதாக இல்லை.

அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு தளமாக இறங்க இறங்க மனதிற்குள் கசப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. எங்கெங்கு காணினும் வணிகக் கடைகள். சிலைகளும், மாலைகளும், ப்ளாஸ்டிக் பூக்களும், போஸ்டர்களும், காலண்டர்களும், டைரிகளும், மின் அலங்காரங்களும். இல்லை இது என் கண்ணன் கோயில் இல்லை; ஒரு வணிக வளாகம் என்று சொல்லிக் கொண்டே வந்தேன்.

உணவும் விற்கிறார்கள். புளியோதரையும், சிறு மீல்ஸும், மசாலா இட்லி போலிருந்த மராட்டிய இட்லிகளையும் உண்டு விட்டுக் கீழே இறங்கினால் பருப்புச் சாதத்தை அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயும் இரண்டு குப்பிகள் தின்றேன்.

பச்சையாய்க் குளம் ஒன்று காற்றில் அசைந்தாடுகின்றது. வானில் நீர்ப் பொதிகள் உருண்டு கொண்டிருந்தன. எதிரே நகரின் அடுக்குமாடிக் கட்டிடங்களும், கண்ணாடி அலுவலகங்களும் தெரிகின்றன.

கீழே இறங்கி வந்து செருப்பு வாங்கிக் கொண்டு வெளியேறும் போது நான்கு மணி தரிசனத்திற்காகக் கூட்டம் காத்திருந்தது. வெளியேறும் போது தான் பார்த்தேன் எதிரே குருவாயூரப்பன் கோயில் ஒன்று சாத்தியிருந்தது. அங்கே தான் என் கண்ணன் நின்று கொண்டிருப்பான் என்று தோன்றியது. திரும்பிப் பார்த்தால், அலங்காரத் திருக்கோயிலின் கோபுர உச்சியில் நடுங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கொடி காற்றில் 'வாரல் என்பது போல் மறித்துக் கைகாட்டியது' என்று உணர்ந்தேன்.









Saturday, July 03, 2010

ஒரு சனிக்கிழமையில்...பெங்களூர்ச் சாலைகளில்..!

நீலவானத்தின் ஒரு சதுரத்துண்டு சீலிங்கில் செதுக்கியிருந்த கண்ணாடி வழியே கசடுகளோடு தெரிந்தது. விழித்தேன். நேரம் காலை எட்டு. சனிக்கிழமை. ஜே.கே. ஒரு போர்வைக்குள் மடங்கியிருந்தான். எங்கிருந்தோ சமஸ்கிருதம் கேட்டது. தொலைக்காட்சியின் சின்னச் சிவப்புக் கண் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முந்தைய இரவின் ப்ரேசில் கொடுத்த அதிர்ச்சி இன்னும் கலைந்திருக்கவில்லை. பாயைச் சுருட்டி விட்டு அடைத்திருந்த ஜன்னலைத் திறந்தால், ஜில் காற்று காத்திருந்தாற்போல் உள் பாய்ந்தது. பக்கத்து மாரியம்மன் கோயில் வாசலில் கோலம். கதவைத் திறந்து வெளிவந்து பால்கனியில் நின்று வீசிக் கொண்டிருந்த குளிரை நீண்டதாக உள் இழுத்துக் கொண்டேன்.

இந்திரா நகர் எய்ட்டி ஃபீட் சாலையில் கார்களும், பேருந்துகளும் கடந்து கொண்டிருந்தன. தெருவுக்குள் நாய் ஒன்று நடந்து வந்தது. முனையில் ஓர் அயர்ன் செய்பவர் சுறுசுறுப்பாய் இருந்தார். மூன்றாவது மொட்டை மாடியில் துணிகள் காய்ந்தன. கோயிலை ஒட்டிய கரையற்ற குளத்தில் ரோஸ் தாமரைகள் மொட்டாய் மலராய் நடுங்கின.

தமிழ்ப்பறவைக்கு கால் செய்தேன். கிளம்பிக் கொண்டிருந்தார். திப்பசந்த்ரா ஸ்வப்னா புத்தக நிலையத்திற்கு ஒரு விசிட் அடிப்பதாகத் திட்டம். அங்கே தமிழ் நூல்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டிருந்தார். பிறகு நண்பர்களிடம் விசாரித்துக் கொன்டு தமிழ்நூல்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து விட, வேறோர் பிரபலப் பிரதேசம் செல்வதாக முடிவு செய்தோம். "ஒன்பதரைக்கு வந்து விடுவேன்..!" என்றார். கிளம்பத் தொடங்கினேன்.

று வருடங்களுக்கு முன் லீலா பேலஸின் பின் மதிலுக்கு அருகே இரண்டாம் மாடி வீட்டில் தங்கியிருந்தேன். இரவெல்லாம் கேட்கும் ஆம்புலன்ஸ் ஒலிகளும், ஏஸி உறுமல்களும் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது அரண்மனையின் எதிரே நிறைய மரங்கள் நின்று கொண்டிருக்கும். ஃபவுண்டனில் அரை ஸைன் போல் செய்றகையாய் நீர் பொங்கி விழுந்துச் சிதறிக் காணாமல் போய் மீண்டும் உற்சாகமாய் எழும்பும். செல்வந்தக் கார்கள் நுழையும் தனி வழியில் சல்யூட் வைப்பவர் பெரிய மீசை வைத்திருப்பார். கண்ணாடி வாசல் 'வா..' என்று திறக்கும். மாடங்களில் பூச்செடிகள் மாறி மாறி பூத்துக் கொண்டிருப்பதும் உள்ளே திறந்தவெளியில் நாற்காலிக் குழுக்களில் திரவங்களை அருந்திக் கொண்டிருப்பதும் இப்போதும் பெரிதாக மாறியிருக்கவில்லை, ஒன்றைத் தவிர.

உள்ளே நுழையும் முன்பாக மெட்டல் டிடெக்டர் நம்மைக் கவ்வித் துப்புகின்றது. பளிச்சென சுத்தம் செய்யப்பட்ட பாதுகாவல் அதிகாரி மற்றொரு முறை கருவியால் நம்மைத் தடவி அனுமதிக்கிறார். நானும் பரணியும் வழவழ பளிங்கின் மேல் நடந்து தளக் குறிப்பைப் பார்த்தோம்.

பரணி சில வருடங்களுக்கு முன் பார்த்தது போலவே இருந்தார். முடி வெட்டியிருந்தார். தோளில் ஒரு பயணப் பை. அதில் சில சமாச்சாரங்கள். அதே புன்னகை. அதே பேச்சு. அதே எஸ்.ரா. ஆதர்சம்.

பேலஸின் கீழ்த்தளத்திற்குத் தானியங்கிப் படிக்கட்டுகளில் நின்று இறங்கினோம். ஏஸி செய்யப்பட்டிருந்தது. க்ராஃப்ட் ஷாப்பில் புத்தர் சிலை. சேலைகள் சுருள் சுருளாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. ட்ராவல் ஏஜென்ஸியில் சிலர் காத்திருந்தனர். இடது பக்கம் வெட்டினால் ஓர் செயற்கை நீர்வீழ்ச்சி படர்ந்து விழுந்து கொண்டிருந்தது. அதன் முன்புற டைல்ஸ் கரைக்குளத்தில் ரோஜாப்பூவிதழ்கள் தூவப்பட்டிருக்க, அங்கிருந்து நிர்வாண மங்கை ஒருத்தி எழுந்திருக்க விரும்பினேன். நடக்கவில்லை.



ஆக்ஸ்போர்ட் நூல் விறபனையகத்தைக் கண்டுபிடுத்து வாசலை அடைந்தோம். பரணி, "புத்தகத்தைப் பிரிப்பது போல் திறக்க வேண்டும்..!" என்று கைப்பிடிகளைப் பிடித்து திறக்க அத்தனை புத்தகங்கள் எங்களுக்காக ஆர்வமாய்க் காத்திருந்த சொர்க்கத்திற்குள் நுழைந்தோம். ஏஸி இருந்த மாதிரி தெரியவில்லை. பரணி கொண்டு வந்த பையை முன்னே கொடுத்து விட்டு டோக்கன் வாங்கிக் கொண்டார். ஹாட் விற்பனை புத்தகங்கள் சுழல் அடுக்கில் இருந்தன.

காமசூத்ராவும், பியானோ கற்றுக் கொள்ளலும், இண்டியன் பெய்ண்டிங்கும், கொட்டேஷன்ஸும் அருகருகே காத்திருக்க, ஸ்பீக்கர்களில் இந்துஸ்தானி ஃப்யூஷன் பாடல்கள் பெருகிக் கொண்டிருந்தன. குழந்தைகளுக்கான வரிசைகளில் அமர்சித்ரகதா இருந்தது. பிக்ஷன், நான் பிக்ஷன், லிட்ரேச்சர், சமையல், ஆர்ட், யோகா, ரிலீஜன் என்று புத்தகங்களும் பிரிந்திருந்தன. காஃபி ஷாப்பும் உள்ளேயே இருக்க, அங்கே அமர்ந்தவர்கள் பொன் பழுப்பாய்க் குடித்துக் கொண்டிருந்தது காஃபி தான் என்று நம்ப விரும்பினோம். பேனா, நோட்டுகள், கீசெய்ன் எல்லா இருந்தன. சந்தித்ததன் நினைவாக பரணி ஒரு புத்தகம் பரிசளித்தார்.Days of Raj - Life and Leisure in British India - Pramod K.Nayar - Penguin - Rs.350/-. வெளியேறினோம்.

கோடிஹள்ளியின் அருகில் இருந்த தலை-மேல்-சாலை-கடத்தியை நீங்கிப் பேருந்து நிறுத்தத்திற்குப் போனோம். விளிம்பில் அமைந்த எஸ்.டி.டி. பூத்தில் 'சிட்டி மார்க்கெட்' செல்லும் பேருந்தை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே வந்து விட்டது பஸ். மற்றுமொரு முறை ஓட்டுநரிடமும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு (மார்க்கெட் ஹோகுதல்லே..? மல்லு வாசம் இன்னும் போகவில்லை!) கடைசிச் சீட்டில் அமர்ந்து கொண்டோம்.

ஏறி இறங்கும் வளையும் நீளும் பெங்களூர்ச் சாலைகளெங்கும் வினைல் போர்டுகளும், ஃப்ளக்ஸ் ஷீட்டுகளும் பூத்திருந்தன. வெயில் குறைந்தபாடில்லை. முகத்திற்கு நேராக அடிக்கின்றது. பள்ளிப் பூக்கள் பல வர்ணச் சீருடைகளில் கலைந்து நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு சிக்னலிலும் மூவர்ண எல்.ஈ.டிச் சுழிகள் இயக்கத்தை ஒழுங்குபடுத்தின. தூரத்து வானில் மேகங்கள் கூட்டம் திரட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. கார்ப்பரேஷன் சர்க்கிளிலிருந்து விடுபட்டு எஞ்சின் சுமக்கும் எறும்புகள் போல் மிதந்து மார்க்கெட்டை அடைந்ததை சந்தை இரைச்சல்களும் ஜூம்மா மசூதிப் புறாக்களும் குழிந்த பாலச் சாலையும் அறிவித்தன.

கும்பலாய் ஊர்வலம் கிளம்பிய கருமேகங்கள் சிதறிப் பெருமழையாய்ப் பெய்து எங்களை ஓரம் கட்டின. மீண்டும் சூரியன் எட்டிப் பார்ப்பதற்குள் அரைமணி ஆகியிருந்தது.

ப்ரெளனியன் இயக்கத்திற்கே சவால் விடும் வகையில் அத்தனை திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள், கம்பிச் சரங்களை ஒட்டிச் சின்னச் சின்னக் கடைகள், குடையைக் கவிழ்த்துப் பூட்டு சாவி விற்பவர்கள், பானிபூரி ஊற்றுபவர்கள், நின்று கொண்டே உண்ணும் சாஹர் ஓட்டல்கள், பொம்மை விற்பவர்கள், பழக்கடைகள், நீலக் கோடணிந்த அரசுப் பேருந்து வரிசைகள், டிப்போ, சப்வே, பச்சைத் தூரிகை மரங்கள், பலபாஷை கூச்சலிடல்கள் இவர்களுக்கிடையே தேடினால் கிடைக்கின்றது பெங்களூர்க் கோட்டை.



விஜயநகரப் பேரரசில் இப்பகுதியின் குறுநில மன்னராக இருந்த கெம்ப கெளடா அவர்களால் மண் கோட்டையாக எழுப்பப்பட்டு கி.பி.1761-ல் ஹைதர் அலியால் கற்கோட்டையாக மாற்றப்பட்டது. கி.பி.1791-ல் மூன்றாம் மைசூர்ப் போரில் லார்ட் காரன்வாலிஸால் கைப்பற்றப்படும் வரை திப்பு சுல்தான் வசம் இருந்த கோட்டையை நாங்கள் அடைந்த போது மிஞ்சியிருக்கின்ற டெல்லி வாசலில் சட்டை திறந்த ஒருவர் பீடி பிடித்துக் கொண்டிருந்தார்.

தொல்பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நவீனக் கல்வெட்டு ஒன்று மழையில் சொட்டிக்கொண்டே தெரிவித்தது. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளின் முன்னே கிராதிக் கம்பிக் கதவு தாழிடப்பட்டிருக்க, பிரதான வாசலின் மரக்கதவு பிரம்மாண்டமாய் வரவேற்றது. எத்தனை பெரியது..! எதற்கு இத்தனை உயரம்..? யார் நுழைவிற்கு என்று தோன்றியது. அதன் கீழேயே கொஞ்சம் குனிந்தாலே சென்று விடும் அளவுக்கு இடைவெளி இருந்தது. சென்றோம்.

முதலில் ஒரு கோயில் எதிர்ப்பட்டது. முகப்பில் பிள்ளையார் சிலை. ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. கதவு தாழ் போடப்பட்டிருக்க, உள்ளே எட்டிப் பார்த்தால் கருகும். இடதுபுறம் திரும்பி நடந்தால் ஒரு வெற்று வெளி. கோட்டைச் சுவர் சற்று வெளிப்புறமாக்ச் சாய்ந்திருக்க, தமிழ்ப்பறவை " எதிரிகள் வரும் போது சறுக்கிக் கொள்ள வேண்டும் என்று செய்திருக்கிறார்கள் போலிருக்கின்றது..!" என்றார். வெளியெங்கும் பச்சை அடிவாரம். கற்சுவர்களில் கவனிப்பாரற்று சில சிற்பங்கள்.

முன்னூறு ஆண்டுகளாக வேல், அம்புகள், ராக்கெட்டுகள், பீரங்கிகளுக்கும் அஞ்சாமல் உறுதியாய் நின்று கொண்டிருக்கும் பெரும் பாறைகளுக்கு இடையிலே பசிய இளந்தளிர்கள் முளைத்திருக்கின்றன.

ஒரு சுற்று சுற்றி விட்டு, மீண்டும் வந்த வழியே வெளியேறுகையில் உயரமான ஒரு பாறையில் கலவிச் சிற்பம் ஒன்றைக் கண்டு உய்ந்தோம்.













கோட்டையிலிருந்து சினிமா போஸ்டர்களையும், சிறுநீர்க் கழிப்பிடங்களையும், விக்டோரியா ஆஸ்பத்திரியையும், சிக்னலையும் நீங்கினால் திப்புவின் பெங்களூர் தர்பார் வருகின்றது.

மரங்களாலும், காரைகளாலும், ஓவியம் வேய்ந்த கூரைகளாலும் அழகமைய கட்டப்பட்டுள்ள இம்மண்டபம் திப்பு ராஜாவின் மக்கள் குறைதீர் ஸ்தலமாய் இருந்திருக்க வேண்டும். தொல்பொருள் இலாகா உள்நாட்டவர்க்குத் தலைக்கு ஐந்து ரூபாயும், வெளியார்க்குத் தலைக்கு நூறு ரூபாயும் கட்டணமாய்ப் பெற்றுக் கொண்டு திவ்யமாய்ப் பராமரிக்கிறார்கள்.

சுல்தானின் அரண்மனைக்கு அருகே வெங்கடநாராயணர் கோயில். வாசலில் பொங்கல் வாழ்த்து பத்து ரூபாய்க்குக் கிடைக்கின்றது. பாதையின் இருமருங்கிலும் பச்சைப் பதியன்கள். உயரமான தூண்கள். சுற்றி வரப் பூங்கா. இடது ஓரத்தில் ரெஸ்ட் ரூம். அலுவலகர் அறை.













பிறகு மார்க்கெட் பேருந்து நிலையத்திற்கு வந்து அவரவர் வழியில் சென்றோம்.