Tuesday, September 19, 2017

திருக்குறுங்குடி.



துளி கொஞ்சம் தாராயோ - வெண்ணெய்த்
துளி கொஞ்சம் தாராயோ..
எலியுடனே காத்திருக்கும் எங்கள்மேல்
அளிகொண்டு கண்ணாநீ...
(துளிகொஞ்சம்)


ஆவினங்கள் அடிசேர ஆனந்த
ஆயர்பாடி குடிசேர மாமலை
கோவர்த்தன கிரி தாங்கி தன்
கோகுலம் காத்த விரலளவு
(துளிகொஞ்சம்)


அடைந்திருக்கும் விழிதிறக்க
அடைந்திருக்கும் வழிதிறக்க
அடைந்திருக்கும் செருக்கழிய
முடைந்திருக்கும் மணமொழிய
கடைந்தெடுத்த ஞான நறுநெய்யில்
(துளிகொஞ்சம்)

அழைப்பாயா?


மோகன மதுபாலா..! மேக வர்ணா..! மோக யதுகிரிநாதா..! மதுரநாதப்ரபு..! வா வா..! எனை அழைக்க! பிரிவிலுழல்கிறேனே, காணவில்லையா? எரிநெய்யாய் எரிகிறேனே, சுடவிலையா? நீயும் நானுமென ஒரு பறவைக்கூட்டில் அமர்ந்து குழலிசைக்க மடிமேல் துயிலக் கூறாயா?

பண்டரிநாதா..! அழகே..! அமுதே..! குழல் குமுகா..! தழல் தழுவிப் புகைகிறேனே? எங்கே சென்றாய்? நீலத்திருமேனி தவழக் கைகளில் அள்ளி அணைத்திடவே ஆசை பெருகுதடா..! ஷ்யாமா! சாரதகுரு! குசேலநண்ப! குருகோவிந்தா! குன்றேறிக் குலம் காத்த கருமணியே! ரதிவிஹாரி..! ரதிபரோபகாரி..! ரதிசாரதி..! ரதிரதிரதி..! அன்னதாதா..! அமுதபாதா! மதுசூதனா! கிரிதரா..! கிருஷ்ணதேவரே...!

பாண்டுரங்கா! பாரதராஜா! மங்கை மணாளா! மீராப்ரேமா! ஆண்டாள் ஆனந்தா! மயில்பீலி மதுரா மன்னா! ப்ருந்தாவனப்ரபு! ராமா! ராதாநாதா..! அய்யா! அம்மா! அண்ணா..! நீயே எல்லாம்..! நீயே எங்கும்..! காணுமிடமெலாம் கண் காணும் கார்முகிலே! நீரும் நீயே! அனலும் நீயே! அங்கும் நீயே! இங்கும் நீயே! எங்கும் நீயே! நானும் நீயே..!

மலர் சொரிந்து நிறைக்கிறேன்! மரெங்கும் சந்தனம் பூசுகிறேன்! மாலே! மதுரையம்பதி அன்னை அண்ணா!  பாற்கடல் பரந்தாமா..! கோவிந்தா! ரங்கா! காவேரி மைந்தா! வா..! வா..! முதற்கரிச்சான் கூவும் முதற்சொல்லே! வானெங்கும் நிறைந்த ஓங்காரமே! முத்தமிட்டுக் கொஞ்சக் கூறாயா? அச்சுதா! தாமோதரா! நாராயணா! அனந்தா! பத்மநாபா! மோகினிரூபா!

தேனே! தென்னனலே! நூறாயிரம் ரூபம் காட்டும் மாயவா! துவாரகையே! பாஞ்சன்யமே! பாலே! கொழு நெய்யே! செழுநுரையே! நிறைமணமே! வல்லபா! தீராப் பெயர்களில் உனை அழைக்க அழைக்க நாவினிமை சொல்லினிமை தமிழினிமை கோடி மடங்கு!

யசோதபுத்ர! பலராம சோதரா! நந்த மைந்த! கோகுலப்ரிய! ஆயர்பாடி ஆவே! வில்லிபுத்தூர் மருகா! ஸ்ரீ ரங்கராஜா! திவ்யபுருஷா! மாலை சூடி அழகேற்றியவளைக் கொண்டு சென்ற ராஜமன்னாரே! போதை தெளியவிலையே! யாதும் தெளிவில்லையே! யாதவ கோவே! கோபாலா! கோபாலா! ஆலிலை அமர்ந்த அன்பே! வாமனா! வா! வா! கேடில் விழுச்செல்வமே! கரி காக்க கருடனேறி வந்த கருணையே!

காதலா! காதலா! கோபியர் கொஞ்சும் ரமணா! கொஞ்சம் வாராயா? கொஞ்ச வாராயா? தஞ்சம் தாராயா? துஞ்சப் பாராயா?

சுதாகரா! சுலோக்‌ஷணா! சுத்தப்ரம்மா! சகல்லோக சத்வமே! சத்யனே! சமுத்ரதேவ! சுகராகா! ஸ்ருதிபாவா! உனுள் எனை உள்ளிழுத்துக் கொள்ள மாட்டாயா? பரிதி மேலெழு கதிரே! பனியென உறிஞ்சிக் கொள்ளாயா? குயிலே! குறும்பே! 

Monday, September 18, 2017

நீலாம்பல் நெடுமலர்.20

காற்றில்
குளிர் கனத்திருக்கும்
உன் மாநகரில்
செம்பொளி
பொழிந்து
மௌனித்திருக்கும்
உன் வீதியில்
பனிசூடிய மலர்கள்சூழ்
உன் வீட்டில்
உன் மூச்சுக்காற்று
வட்டமிடும்
உன் அறையில்
வெண்ணுரை மெத்தை
இட்ட
உன் படுக்கை மேல்
கடல் நீலத்தில்
பூக்கள் வரைந்த
உன் போர்வைக்குள்
கதகதப்பாய்
உறங்குகிறாய்.

மேகங்கள்
விரைந்து நகரும்
இருள் விடிகாலை
வான் கீழ்
தனித்திருக்கிறேன்.
***

உன் வீடு
உன் இருப்பால்
உன் இன்மையால்
உன் சொற்களால்
உன் மௌனங்களால்
உன் சிரிப்புகளால்
உன் கண்ணீரால்
நிரம்பியுள்ளது.

நான்
உன்னால்
நிரப்பப்பட்டுள்ளேன்.
***

இம்மொழியிலா
நீ
வெளிப்பட்டாய்?

இச்சொற்களிலா
உனைப்
பேசினாய்?

உன்
இதழ்வழி
கசியும்
பேறுற்ற
மதுர பாவனைகள்
இவ்வார்த்தைகள் தாமா?

கனி மேலமர்ந்த
பழஈ போல்
நானும்
சுவைத்தினிக்கிறேன்.
***