Showing posts with label காவிரிப் பையனின் கதை.. Show all posts
Showing posts with label காவிரிப் பையனின் கதை.. Show all posts

Wednesday, October 13, 2010

திருமண அழைப்பிதழ்.

நாள் :: 20-அக்டோபர்-2010, ஐப்பசி 3

நேரம் :: காலை 6 மணி முதல் 7 மணிக்குள்

இடம் :: ஸ்ரீ ராஜேஸ்வரி திருமண மண்டபம், கொமாரபாளையம்.

அனைவரையும் அழைக்கிறேன்.

Monday, June 28, 2010

மீண்டும்..!


சில்க் போர்டில் சோளத் தோல்கள் அலைபாய்கின்றன. மதுக்கோப்பைகளை வரிசையாக நட்டு வைத்தது போன்ற தூண்களின் மேல் மேம்பாலங்கள் சறுக்குகின்றன. ஆட்டோ ஸ்டாண்டுகளிலும், தெருமுனைகளிலும் கண்ணாடித் தள்ளுவண்டிகளில் பானிபூரிகள் நொறுக்கப்படத் தயாராய் இருக்கின்றன. கண்ணாடி ஜன்னல் வழியே பார்க்க, மரங்கள் குறைந்து கொண்டிருக்கும் நகரின் இயக்கம் மெளனமாய்த் தெரிகின்றது.

மீண்டும் பெங்களூருக்கு வந்திருக்கிறேன்.

முதன்முறை 2003-ல் வந்தேன். லால்பாக் அருகே கஸின் வீட்டில். பனீர்கட்டா சாலையில் ஆரக்கிள், ஐ.பி.எம். துவங்கி, கோரமங்களா முழுக்கச் சுற்றி, இன்னர் ரிங் சாலை முழுக்க நடந்தேன். அப்போது பேருந்து நிறுத்தம் எதுவும் கிடையாது என்று தெரியாததால், நடந்து கொண்டே சென்று ஆர்மி பயிற்சிகளைப் பார்த்தேன். தொம்லூர் சிக்னலைத் தொட்டபின் தான் மறுபடியும் ஊருக்குள் வந்தது போல் இருந்தது.

பெங்களூரிலேயே பல இடங்களில் தங்கியிருக்கிறேன். கோடிஹள்ளி, லால்பாக், இந்திராநகர், திப்பசந்திரா. இப்போது கக்கதாசபுரா ரெயில்வே கேட் அருகே.

இரண்டாம் முறை 2006-ல். குறைந்த காலமே இருக்க முடிந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்வாக அப்போது தான் வலைப்பதிவு எழுதத் தொடங்கினேன். பிறகு சென்னைப் பயணம், திருவனந்தபுரத்தில் இரண்டரை ஆண்டுகளைக் கழித்து விட்டு, இப்போது மீண்டும் பெங்களூருக்கே திரும்பியிருக்கிறேன்.

இந்த தடவை பெங்களூரையும், கர்நாடகத்தையும் சுற்றலாம் என்ற ஐடியா இருக்கின்றது. போதாக்குறைக்கு நிறைய நண்பர்களும் இப்போது இங்கே இருக்கிறார்கள். நீண்ட நெடுங்காலம் இந்தூரில் பாவ்பாஜி, சப்பாத்திகளூக்கிடையே வாழ்ந்த தமிழ்ப்பறவை சிறகு விரித்துப் பறந்து, இப்போது வெல்லச் சாம்பார் இட்லியும், புதினாச் சட்னியும் கொள்ள ஐ.டி.பி.எல்.லை அடைந்திருக்கின்றது.

இனி பயணப் பதிவுகள் பெங்களூர் மற்றும் சுற்றுப்புறங்கள் சார்ந்து வரலாம்.

***

Image Courtesy :: http://phanimitra.files.wordpress.com/2007/07/bangalore-techie.jpg

Thursday, February 04, 2010

என் வாழ்வில் மர்மமான சில சம்பவங்கள்.



'கடவுள் இருக்கிறாரா?' என்ற மின்னூலைப் படித்தேன். வாத்தியாருடையது.

நூல் இரண்டு பகுதிகளாக இருக்கின்றது. முதல் பகுதி 'கடவுளின் இருப்பைப்' பற்றி இயற்பியல், நம்மாழ்வார், கேனோபதேசம், ஷ்ரோடிங்கர் என்று வாத்தியார் கலந்து கட்டி எழுதி, முடிக்கும் போது, 'அறிவியலின் பதில் 'இருக்கலாம்'; ஆன்மீகத்தின் பதில் 'இருக்கிறார். என் பதில், 'இட் டிபெண்ட்ஸ்' என்று சொல்கிறார்.

இந்தப் பதிவை நான் எழுதுவதற்கான காரணம் இரண்டாம் பகுதியில் உள்ளது. 'என்ன ஆச்சரியம்' என்ற தலைப்பில் உலகில் நடந்த ஆச்சர்யச் சம்பவங்களைச் சொல்லி வியப்பில் சிந்திக்க வைக்கிறார். கொத்திலிருந்து ஒரு கனியை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

......

கடைசியாக இந்த சம்பவத்தைப் பாருங்கள்.

ஜோசப் எய்கனர் என்பவர் ஒரு சித்திரக்காரர். தன் 18-ம் வயதில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். இது வியன்னாவில் 1836ம் ஆண்டில் நடந்தது. அந்த தற்கொலை முயற்சியை கடைசி கணத்தில் காப்புச்சின் இயக்கத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் வந்து தடுத்தார். எய்கனர் நான்கு வருஷம் கழித்து புடாபெஸ்ட் நகரில் மறுபடி தற்கொலை முயற்சி செய்தபோது அதே சாமியார் வந்து தடுத்தார். எட்டு வருஷம் கழித்து எய்கனர் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். கடைசி சமயத்தில் ஒரு சாமியார் சொல்லி தூக்குமேடையிலிருந்து காப்பாற்றப்பட்டார்.

அதே கப்புச்சின் சாமியார்! இறுதியில் 68 வயதில் எய்கனர் தன் விருப்பப்படியே துப்பாக்கியில் தன்னைச் சுட்டுக்கொண்டு உயிர் துறந்தார். அவருடைய அந்திமக் கிரியைகளை நடத்திக் கொடுத்தவர்? ஒரு சாமியார்... அதே சாமியார்தான்! அவருடைய பெயரை எய்கனர் இறுதிவரை தெரிந்துகொள்ளவே இல்லை. வந்துபோனது சாமியாரா... இல்லை ஏதோ ஒரு தேவ தூதரா? இந்தக் கதை ரிப்ளியின் 'நம்பினால் நம்புங்கள்' புத்தகத்தில் உள்ளது.


......

இப்போது எனது 'நான் கடவுள்' என்ற கதையைப் படித்துப் பாருங்கள்.

ஆச்சரியம் என்னவென்றால் அந்தக் கதையை எழுதியது ஜனவரி 4, 2008. அந்த வருட தீபாவளிக்குச் சென்னை போய் வீட்டுக் கணிணியில் மின்னுல்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, மேற்சொன்ன சம்பவத்தைப் படித்து ரொம்பவே ஆச்சரியப்பட்டுப் போனேன்.

எனக்கு நன்றாகத் தெரிந்த வரையில் மின்னூலை தீபாவளி சமயத்தில் தான் முதன் முதல் படிக்கிறேன். எனில், அதே போன்ற சம்பவத்தை எப்படி ஒரு கதையில் எழுதியிருக்க முடியும்..? சம்திங் ஸ்ட்ரேஞ்ச்.

***

இதுவரையான இருபத்தெட்டு ஆண்டு வாழ்க்கையில் என்னால் மறக்கவே முடியாத மற்றொரு மர்மச் சம்பவம் என் அப்பா இறந்தது. இறப்பில் மர்மம் இல்லை. அந்த விஷயம் எனக்குத் தெரிய வந்த விதத்தில் இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தான் வீட்டில் இருந்து கால் செய்து பேசினோம். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அதைச் சொல்ல வேண்டாம் என்று அப்பா சொல்லி விட்டதால், அம்மா சொல்லவில்லை.

அடுத்த நாள் திங்கட்கிழமை. ஏப்ரல் 10, 2000. காலையில் நோட்டுகளை எடுத்துக் கொண்டு வகுப்புக்குச் சென்று விட்டேன். செகண்ட் செம். காலையில் இருந்தே ஏதோ ஓர் உறுத்தலாகவே இருந்தது என்று பொய் சொல்லவில்லை. சாதாரணமாகவே இருந்தேன். இயற்பியல் வகுப்பு. ரீசஸுக்கு முந்தைய க்ளாஸ். சபரிநாதன் சார் நடத்திக் கொண்டிருக்கிறார். சுரேஷ் வந்து வாசலில் நின்று, 'எக்ஸ்க்யூஸ் மீ சார்' என்கிறான்.

சுரேஷ் அறைத் தோழன். மெக்கானிக்கல் துறை. மொத்த வகுப்பும் பாடம் கவனிக்கிறது. அவன் வந்து நின்றவுடனே எனக்கு ஏதோ தோன்றி விட்டது. என்னைத் தான் கூப்பிட வந்திருக்கிறான் என்று. லாஜிக்கலாக ரீஸன் இருக்கலாம். என் அறைத் தோழன். ஆனால் என் மற்றொரு ரூம்மேட், அதே எலெக்ட்ரானிக்ஸ் துறை சண்முகமும் என் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தான். அவனைக் கூப்பிட வந்திருக்கலாம் அல்லவா?

அவன் வந்து நின்றவுடனே 'நான் கிளம்பியாக வேண்டும்' என்ற எண்ணம் வந்து விட்டது. எங்கிருந்து வந்தது..? தெரியாது. எல்லா புத்தகங்களையும் நோட்டுகளையும் அடுக்கி வைத்துக் கொண்டு அவன் என்னை அழைக்கப் போகும் அந்த விநாடிக்குத் தயாராகி விட்டேன். எது என்னை அப்படி ஒரு முடிவுக்கு அத்தனை உறுதியாகக் கொண்டு வந்தது..? தெரியாது.

அத்தனையையும் விட 'அப்பா இறந்து விட்டார்' என்பதைச் சொல்லத் தான் வந்திருக்கிறான் என்பது எப்படி 'அவனைப் பார்த்தவுடனே' என் மனதில் தோன்றியது என்பதை இந்த நொடி வரை என்னால் கணிக்க முடியவில்லை.

'என்ன..?'

'வசந்த் கூட பேசணும்..!'

அவன் முடிக்கும் முன்பாகவே எழுந்து விட்டேன். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் வகுப்பிலேயே மற்றொரு 'ஆர்.வசந்த குமார்' இருந்தான். God Forbid, ஏன் அந்தச் செய்தி அவனுக்காக இருக்கக் கூடாது என்று எனக்கு ஏன் தோன்றவில்லை. புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

தனியாகக் கூட்டிப் போய், 'உங்க அப்பா செத்துட்டாராம். வரச் சொல்லி போன் வந்துச்சு.' என்றான்.

தனியாக அறைக்குச் செல்லும் வரை ஒன்றும் புரியவில்லை. தனியாய்க் கட்டிலில் உட்கார்ந்து ஒருபாட்டம் அழுது முடித்துக் கையில் கிடைத்த துணிகளை அள்ளி பையில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டேன்.

பாதி வழியில் ஈ.ஈ.ஈ. நிஷாந்த் பார்த்து, 'என்னடா ஊருக்கு போறியா..? ஹேப்பி ஜர்னி!' என்று சிரிப்பாய்ச் சொன்னான். பதிலுக்குப் புன்னகைத்து அவனைக் கடந்தேன்.

சென்னைக்கு வந்து அரை வர்டம் தான் ஆகியிருந்தது. ரயில் நேரங்கள் தெரியாது. ரயிலில் அவ்வளவாகப் போனதில்லை அதுவரை. பஸ் மட்டும் தான் தெரியும். பாரீஸுக்குப் போனேன். சேலம் பஸ் ஒன்று காலியாக இருந்தது. ஏறி உட்கார்ந்ததும், எதனாலோ அத்தனை களைப்பு! நீள் வரிசைச் சீட்டில் படுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை அழுகை.

கண்டக்டர் வந்து பார்த்து, 'படுக்க எல்லாம் கூடாது..' என்று சொல்லி விட்டுப் போனார். பயந்து உட்கார்ந்து கொண்டேன்.

மர்மம் இத்துடன் முடியவில்லை. இன்னும் இருக்கின்றது.

அந்த பஸ்ஸை என் வாழ்க்கையிலேயே மறக்க மாட்டேன். மன்னிக்கவும், ..த்தா... பாடு பஸ் அது..!

வண்டியை அரைமணி நேரம் கழித்து எடுத்தான். அஞ்சு மணிக்கெல்லாம் சேலம் போய்டும் என்றார்.

செங்கல்பட்டு தாண்டி கேசட் போட்டு ஒலிக்கிறது 'சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்...' மறக்கவே மாட்டேன்.

மலைகளைத் தாண்டிய பிறகு, ஒரு நீள ட்ராஃபிக் ஜாம். கேட்டால், எங்கோ முன்னாடி லாரி ஒன்று கவிழ்ந்து ரோடு ப்ளாக்காம். அந்த கணமே மனதுக்குள் ஏதோ தோன்றி விட்டது. இன்றைய சம்பவங்கள் ஏதோ ஒருவிதத்தில் மறக்க முடியாமல் இருக்கப் போகின்றன என்று..! யோசித்துக் கொண்டே, பாக்கெட்டில் வைத்திருந்த அப்பாவின் இளம் வயது போட்டோவைப் பார்த்துப் பார்த்து தவணை முறையில் அழுது கொண்டே வருகிறேன்.

கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு, வண்டியைத் திருப்பி ஒரு காட்டுக்குள் செலுத்தினார்கள்.

உத்திரமேரூர் வழியாகப் போய் ஏதோ ஓர் ஊரை நெருங்கும் போது (வாயில வர்ற எல்லா வார்த்தைகளையும் சொல்லிக் கொள்கிறேன் இங்கே) டயர் பஞ்சர்..!

ஒன்றரை மணி நேரம் நோண்டி நோண்டி எடுத்து அப்புறம் வண்டி கிளம்புகிறது. நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தேன்.

ஏன் அன்றைக்கு ஒரு ட்ராபிக் ஜாம் ஆக வேண்டும்..? அதில் ஏன் அந்த வண்டி சிக்கியிருக்க வேண்டும்..? ஏன் மாற்றுப் பாதையில் செல்லும் ஐடியா வந்திருக்க வேண்டும்..? அங்கேயும் ஏன் பஞ்சராய்த் தொலைக்க வேண்டும்..? தெரியவில்லை.

பிறகு விழுப்புரம் மோட்டலில் அரை மணி நேரம் ஹால்ட். சாப்பிடவே தோன்றவில்லை. இருந்த பூத்தில் சித்தப்பா வீட்டுக்கு கால் செய்தால், அக்கா எடுத்து, 'ஒண்ணும் இல்லை. நீ வா சீக்கிரம்..! இன்னும் என்ன பண்ணிட்டிருக்க அங்க..?' என்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அது என்ன ஊர் என்றே தெரியவில்லை. 'வந்துட்டே இருக்கேன்' என்று சொன்னேன்.

அந்த பாடாவதி ******* *** ******** ** **** பஸ் சேலத்துக்கு எத்தனை மணிக்கு வந்து சேர்ந்தது தெரியுமா..? ராத்திரி பத்து ஐம்பதுக்கு!

பதினோரு மணிக்கு சேலத்திலிருந்து பவானிக்கு கடைசி பஸ். நல்லவேளை, அது கிளம்பிக் கொண்டிருந்தது. அதில் தொற்றிக் கொண்டேன். பவானியை அடையும் போது நடு இரவு 12.30.

ஊரே இருட்டாய் இருந்தது. கரண்ட் கட்.

மயானத்திற்குப் போய் விட்டார். பஸ் அந்தியூர் முனையில் நிற்கும் போது, லூனாவில் ஒரு சொந்தக்காரர் பார்த்து அங்கேயே என்னை இறக்கி நேராக மயானம் கூட்டிச் சென்று விட்டார். அதற்கு மேல் வேண்டாம்.

ஏன் அன்றைய சம்பவங்கள் அப்படி நடக்க வேண்டும்..?

இல்லை, ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் ட்ராபிக் ஜாம் ஆவது எதிர்பார்க்கக் கூடியது தான். ஒரு துணைச் சாலையில் போகும் போது பஞ்சர் ஆவது சாத்தியமான ஒன்று தான். ஆனால் சுரேஷ் வந்து சொல்லும் போதே எனக்கு உறுதியாகத் தோன்ற ஆரம்பித்து, அந்தச் சம்பவங்கள் அனைத்தும் தனித்தனியாக நிகழ்ந்து, அத்தனை நிகழ்ச்சிகளிலும் பொதுவான ஓர் ஆசாமியான என்னால் அவற்றைக் கோர்க்க முடிகின்றதோ..?

பாரீஸில் இருந்து என்னோடு வந்து, ட்ராபிக் ஜாமில் சிக்கி, வண்டி பஞ்சரில் எரிச்சலடைந்த விழுப்புரத்தில் இறங்க வேண்டிய ஒருவருக்கு, இந்தச் சம்பவங்கள்... இவற்றில் இருக்கும் மர்மக் கேள்வியான 'ஏன் அன்று..?' என்பதற்கான தாக்கம் என் அளவுக்கு இருக்காதோ...?

நடப்பதற்கான கோடிக்கணக்கான வாய்ப்புகளில் நிகழ்வுகள் எங்கெங்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றின் ஊடாக 'நான்' என்ற ஓர் ஆகிருதி இணைத்துக் இணைத்து நடந்து அந்தத் தொகுப்புக்கு உள்ளே இருக்கலாம் என்ற ஒரு மர்மத்தைத் தேடும் ஆதிவாசியாக இன்னும் இருக்கிறோமோ..?

எண்ணங்கள் என்ற ஒரு சின்ன புத்தகம். எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதியது. அக்கா படித்த கல்லூரிகளில் பாடப் புத்தகமாகவும் இருந்தது. ஆறாவது படிக்கும் போதே அதைப் படித்திருக்கிறேன். எண்ணங்களின் வலிமையைப் பற்றி அதில் சொல்லி இருப்பார்.

பெரியப்பா இறந்த செய்தியை எனக்குச் சொல்லவில்லை. அடுத்த முறை வீட்டுக்குப் போன போது மெதுவாக அம்மா சொன்ன போது, உடனே நான் நினைத்தது தான் நினைவுக்கு வந்தது. கூடவே 'எண்ணங்கள்'.

அன்றிலிருந்து முடிந்த அளவுக்கு நல்லதையே நினைக்க முயற்சிக்கிறேன். யாராவது ஏதாவது செய்தால் கூட 'நல்லா இருங்க' என்று சொல்லித் தவிர்க்கவே முயல்கிறேன்.

***

பிப்ரவரி 27, 2008. இரவு ஒன்பது மணிக்கு மேல்.

மகாகவி பாரதி பற்றி ஒரு பதிவு எழுதி விட்டு, அதில் கீழ்க்காணும் வரிகளை எழுதியிருந்தேன்.

**
பிறந்ததில் இருந்து உடல் மாறிக் கொண்டிருக்கின்றது. மனம் மட்டும் அதே போல் இருக்கின்றது. இன்று உடல் பருமனாக இருக்கின்ற மனிதன், ஒரு மாதம் உணவே உண்ணாமல் இருந்தால், உடல் வற்றி மிக இளைத்தவன் ஆகின்றான். அப்போது அவன் அவன் இல்லையா? அவனை அடையாளம் கண்டு கொள்ள மாட்டோமா? அப்போதும் அவன் அவன் தானே! அப்படியானால் இந்த உடல் என்பது அவன் இல்லை.

பிறகு ஏன் உடல் முற்றும் இல்லாது போன நிலையில் அவனை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை? அந்த மனம், ஆன்மா அது தான் அவனா?

பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் ஒரு துளியினும் துளியாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில், வாழ்க்கை நடத்த என்ன காரணம்?

நாம் வருவதற்கு என்ன காரணம்? நம் வாழ்வே யாரோ ஒருவருடைய கனவோ? அவன் கனவு கலைந்து விழித்தால் நான் தொலைந்து விடுவேனா?

எரிகின்ற விளக்கை ஊதினால், அந்த நெருப்பு எங்கு சென்று விடுகின்றது? அது போல் இந்த நினைவும், எண்ணங்களும் எங்கு செல்லும், பின்? ஒரு பானை நிறைய நீர் வைத்து, ஒரு துளையிட்டால் நீர் முழுதும் ஓடி விட்டு பானை காலியாகி விடுகின்றதே. இந்த மண்பாண்ட மனித உடலில் இருந்து எதுவும் சென்று விடுவதில்லையே, ஏன்?

இந்த மூளையும், எலும்பும், வெறும் புரதங்களாலும், அமினோ அமிலங்களாலும், டி.என்.ஏக்களாலும் தான் ஆனதோ? உயிரியல் ஆய்வகத்தில் தொங்கும் எலும்புக் கூடு தான் நானுமோ?

அடுத்த நாள் இளங்காலையில் சாம்பலில் இருந்து தேடி ஒரு எலும்பை எடுத்துக் காட்டி 'இது தான் உன் பாட்டி' என்றார்களே, அந்த கணத்தில் புரிந்த மாயை எக்கணத்தில் மனதை விட்டு மறையும்? அதற்குப் பின் பார்க்கின்ற மனிதர்கள் எல்லாம் அவ்வப்போது, அடையாளங்கள் அற்ற 'என்பு தோல் போர்த்த உடம்பு' என்று உணர்கின்ற போது எந்த உணர்வும் அற்ற வெற்று வெள்ளைத் திரையாய் மனம் மாறுகின்றதே, அது எதனால்?

**

பதிவை எழுதி முடித்து விட்டு, ஜிமெய்ல் உரையாடியில் அப்போது வுஹானில் இருந்த அனீஸிடம் பேசினேன். அதில் பேசியவை இந்தப் பதிவில் இருக்கின்றன.

அதிலும் பெரும்பாலும் மரணம், துக்கம் என்பது பற்றியே பேசினோம்.

அடுத்த நாள் காலை. அலுவலகத்திற்குக் கிள்மபிக் கொண்டிருந்து விட்டு, ஹிந்துவைப் புரட்டினால், உள்ளே 'Eminent Tamil Writer Sujatha was no more'. நேரம் நாங்கள் சோகம் பேசிக் கொண்டிருந்த அதே ஒன்பதரை மணி.

என்னவென்றே புரியவில்லை.

Tuesday, May 05, 2009

ஏக் டவுன் மே(ங்) ஏக் மோக்ளி ஹிந்தி படித்தான் ஹை!



செய்ண்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் இருந்து மாற்றப்பட்டு ஏழ்மையான மற்றொரு கிறித்துவப் பள்ளிக்கு மாற்றப்பட்டதில் காணாமல் போனது இந்திப்பாடம். சனிக்கிழமை மாலைகளிலும், திங்கள், புதன் முன்னிரவுகளிலும் சித்ரஹார், சித்ரமாலா வகையறாக்களால் கொஞ்சம் கொஞ்சம் புரிந்தாலும் அகாடமிக்காக படிக்க முடியாமல் போனதை ஈடுகட்ட வெளியே வகுப்புகளுக்கு அனுப்பினார்கள்.

மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்திற்குச் செல்லும் வழியில் ஒரு டீச்சர் வகுப்பு எடுத்தார்கள். ஏற்கனவே மெட்ரிக்கில் எழுத்துக்களைப் பிய்த்துப் பிய்த்துப் போட்டு எழுதிப் பழகியதால், முதலில் கற்றுக் கொள்ளும் பெயரை எழுதினேன். பின் வரிசையாக நாடுகளின் பெயர்கள் என்றெல்லாம் எழுதி அவரை ஒரேடியாக அசத்தி விடுவது என்று முடிவெடுத்துச் செயல்பட்டுக் காட்டினால், அதை வாங்கி ஓரமாக வைத்து விட்டு, மீண்டும் அ, ஆ-வில் அ..ஆரம்பித்தார். வெறுத்துப் போனேன். பிறகு தான் தெரிந்தது, அதுவரை நான் எழுதியதெல்லாம் எழுத்தல்ல; பார்த்திபன் கவிதைகள் என்று!

பிறகு மெய்ன் ரோட்டில் ப்ரகாஷ் ஸ்டோர்ஸுக்கு கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு ஹிந்தி சார் வீட்டில் கற்றுக் கொள்ள அனுப்பப்பட்டேன். சார் வீடு கொஞ்சம் பழைய காலத்தது. ரோட்டில் இருந்து நான்கு படிக்கட்டுகள் ஏறினால் வீடு திறந்து, நீளமான பாதை காட்டும். அதில் போனால், முற்றம் வரும். மேலே கம்பிகள் வேயப்பட்டிருக்கும். அதன் வழி வெய்யிலும், அவ்வப்போது மழையும் வரும். (இப்போதைய கவிதைகளுக்கு முற்றம் வரும் போதெல்லாம் கற்பனை செய்வது இதையே!). பின் பெரிய பட்டாசாலை, உள்ளே ரெண்டு ரூம்கள். வந்த வழியே இடது புறம் திரும்பினால், படிக்கட்டுகள் மேலேறும். கூடவே நாமும் ஏறினால், பால்கனி வரும். அங்கே ஒரு ரூம் இருக்கும். பால்கனியில் ஒரு டேபிள், நாற்காலி போட்டிருப்பார்கள். ஓர் அக்காவும் இருப்பார்.

சாருக்கு ரெண்டு பெண்கள். ஒரே பையன். எனக்கு அவர்கள் ரெண்டு அக்காக்களும், ஒரு பையனும் ஆனார்கள். சார் கொஞ்சம் கண்டிப்பு. கொஞ்சம் கொஞ்சம் ஏ.எம்.ராஜா போல் இருப்பார். அடியெல்லாம் விழும். சார் வெளியே போயிருக்கும் சமயங்களில் சொல்லி விட்டுப் போவார். பெரிய அக்கா தான் பாடம் நடத்துவார். டெஸ்ட் வைப்பார். சாரிடமிருந்து கஷ்டப்பட்டு பெயர்க்க வேண்டிய 'good' அக்காவிடமிருந்து பூ மாதிரி உதிரும்.

அந்தப் பையன் இருக்கிறானே... செம வாலு!

அப்போது உருவம் படம் வந்திருந்தது. மோகன் தியேட்டரில் மோகன் படம். மேக்கப் இல்லாமலேயே அவர் நடித்திருப்பதாக வதந்தி. அப்படம் பற்றிய அனுபவம் பின்னர்!

நானே படம் பார்த்து பயந்து போயிருந்தேன். ஒரு நாள் மின்சாரம் காணாமல் போயிருந்தது. க்ளாஸுக்குப் போயிருந்தேன். அக்கா கீழே ஏதோ வேலையாக இருந்தார்கள். புக்ஸை எல்லாம் எடுத்துக் கொண்டு மாடியில் இரு, வருகிறேன் என்றார்கள். 'பயமாக இருக்கு..' என்று முனகிக் கொண்டே, ஒவ்வொரு படியாகத் திக்திக்காக ஏறிச் சென்று விட்டேன். மேலே ஏதோ ஒரு டானிக் பாட்டில் மூடியில் சின்ன திரி நீட்டி, சீமெண்ணையில் நடுங்கிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்து, கொலுசு சத்தம் முன்னால் செல்ல, அக்கா வந்தார். நான் பயத்துடன் அருகிலேயே அமர்ந்து, அந்த வெளிச்சத்திலும் 'யஹ் கலம் ஹை' சொல்லிக் கொண்டிருக்க, திடீரென வாசலில் இருந்து... ஒரு 'பேஏஏஏஏ...'!!

'உருவம்' மோகன் போல் முகமெல்லாம் கொப்புளங்களோடு ஒரு மூஞ்சி..! அவ்வளவு தான். கத்திக் கொண்டே கைகளால் முகம் மூடிக் கொண்டு அக்கா மடியில் விழுந்து விட்டேன். உலுக்கி எழுப்பினார்கள்.'நாயே..! கழுதையே..!' என்றெல்லாம் திட்டு. அந்த உருவத்தைத் தான்!. வெண்டைக்காய் காம்புகளையெல்லாம் ஒட்டிக் கொண்டு அலற வைத்திருக்கிறான் அந்த பாவி...!!! அக்காவின் தம்பி.

சார் புண்ணியத்தில் முதல் பரிட்சையான 'ப்ராத்மிக்' எழுதி பாஸுக்கு கொஞ்சம் மேலே வாங்கியதில் திருப்தி.

இப்போது அந்த வீடு மட்டும் அங்கே இருக்கின்றது என்று நினைக்கிறேன்.

நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்து, அடுத்த படையெடுப்பு நடந்தது ஒன்பதாவதில்! ஃபயர் ஸ்டேஷனுக்கு எதிரில், ஒரு டீச்சர் இருந்தார்கள். அவர்கள் நன்றாகவே எடுத்தார்கள். அடுத்த பரிட்சைக்கு பேர் 'மத்யமா'வாம்! மதியமா படிப்பாங்க போல!

நானும் இப்போது கூடவே தம்பியும் வந்தான். அவன் ப்ராத்மிக். நான் மத்யமா. சத்தமாக படிக்கச் சொல்வார்கள். படிப்போம். அந்தியூரில் இருந்து ஒரு சகோதரர்கள் வருவார்கள். அண்ணன் பேர் மட்டும் நினைவிருக்கிறது. காமேஸ்வரன். பையனும் நல்லா சிகப்பாகவே இருப்பான். ஆனால் தம்பி கருப்பாக! டீச்சருக்கு ஒரு நாள் ஆச்சரியம். 'அதெப்படி..? வழக்கமா தம்பி தான சிகப்பா இருப்பாங்க..?' என்று கேட்டார்கள். 'அதானே..?' என்று நானும் கேட்டேன் கடுப்பாய்!

கஷ்டப்பட்டு தட்டுத் தடுமாறி எங்களை ஒப்பேற்றினார்கள். மல்டி ஷிப்டுகளில் பாடங்கள் எடுத்தாலும், எந்த வகுப்பிலும் எந்த பிரிவினர் சென்று கேட்டாலும் சொல்லித் தருவார். சில சமயம் சிரிப்பாய் இருக்கும். தடிமாடுகள் போன்ற, கை நெஞ்செல்லாம் சுருள் சுருளாய் முடி கலைந்த அண்ணன்கள் எல்லாம் ஒல்லியாய் இருந்த டீச்சரிடம் பயந்து நிற்பதைப் பார்க்கவே, நாங்கள் போய், 'டீச்சர் இது கலமா, கமலா..?' என கேட்போம். டீச்சர் பேர் கமலா இல்லை என்பதறிக!

திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில், தெப்பக்குளத்து ஒரு கரையில் மேற்கு பார்த்து இருக்கும் அகஸ்தியர் புக் ஸ்டால் ஒவ்வொரு பரிட்சைக்கும் பாட புத்தகங்கள், கேள்வி பதில்கள் எல்லாம் அச்சடித்து வெளியிடுவார்கள். ஹிந்தி தேர்வு எழுதுபவர்களுக்கெல்லாம் அவை தான் தெய்வம் தொழாத் துணை! டீச்சரே ஆர்டர் செய்து வாங்கித் தருவார்கள். பழைய கேள்வித்தாள்கள், விடைகள், டெஸ்டுகள், அடித்தல், இம்போஸிஷன், திருத்தல்கள் என்று அவரும் எத்தனையோ பாடுபட்டும், அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எழுதிய தேர்வில், ப்ராத்மிக்கில் வாங்கிய அதே மார்க் வாங்கி பாஸ் செய்தேன்.

என்ன, ப்ராத்மிக் நூற்றுக்கு! மத்யமா இருநூற்றுக்கு! :)

அப்புறம் +2, காலேஜ், வேலை என்று திசை மாறிப் போனதில் ஹிந்தி நழுவிப் போனது.

ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் ஒவ்வொரு பரீட்சை எழுதி ஆயிற்று. இரண்டு வருடங்களுக்கு முன்பு 'இராஷ்ட்ரபாஷா' என்ற மூன்றாவது தேர்வுக்குத் தயாராகலாமா என்று அகஸ்தியரை எல்லாம் வாங்கி வைத்தேன். கைபடாமல் இருக்கிறார்.

இப்போது நிஹோங்கோ, டாய்ஸ்ச் என்றெல்லாம் எல்லை தாண்டிய மென்முறையில் சீன் காட்ட முயலும் போது, அன்று ஹிந்தி படித்த நாட்கள் எல்லாம் என் முன் நடந்து வந்து, 'நீயெல்லாம்...?' என்று வெவ்வெவ்வே காட்டுகின்றன.

***

1987-ல் Salt-n-pepaவின் Push It.



ஐஸ் ஐஸ் பேபி..வேர்ல்பூல்...வேர்ல்பூல் என்று ஒரு டக்கர் ஃபிகர் ஃபேமிலியோடு ஆடுவது தோன்றுகிறது.

Friday, April 10, 2009

அப்பாவிற்கு முத்தம் கொடுத்ததே இல்லை.



ப்பா சின்ன வயதில் குண்டம்மா பள்ளியில் படித்த போது எப்போதும் ஃபர்ஸ்ட் ரேங்க் தான் வாங்குவார். எட்டாவது படிக்கும் போது, அவரது அப்பா இறந்து விட, பள்ளிப் படிப்புக்கு விழுந்தது ஒரு பெரிய முற்றுப்புள்ளி. அதற்குப் பின் அப்பா அவரது அக்கா வீட்டுக்காரர் கடையிலேயே வேலைக்குச் சேர்ந்தார். ஜமக்காளம் எடுத்து வைப்பவராகவும், தபால் நிலையத்திற்கு கொண்டு சென்று போஸ்டல் அனுப்புபவராகவும், பார்சல் கட்டுபவராகவும் இருந்தார்.

அப்பா நன்றாக கவிதை எழுதுவார். தாத்தா இறந்த போது இருந்த குடும்ப நிலைமையைப் பற்றி அழகாக ஒரு எண்பது பக்க நோட் முழுக்க எழுதி இருந்தார். அது எப்படியோ தொலைந்து போய் விட்டது.

அப்பா ஒருமுறை ஆற்றுக்கு குளிக்க எங்களை கூட்டிப் போனார். நதிப்பெருக்கில் நான் அடித்துச் செல்லப்பட்ட போது, யாரோ ஒருவர் முடி பற்றி இழுத்து காப்பாற்றினார். அதிலிருந்து ஆற்றுப்பக்கம் அம்மா எங்களை அனுமதித்ததேயில்லை. இரண்டு பக்கம் ஆறுகள் பாய்ந்தும், ஆற்று நீச்சல் தெரியாதவானாகவே வளர்ந்தேன்.

அப்பாவுடைய சைக்கிள் அவரைப் போலவே அருமையாக இருக்கும். ஓட்டுவதற்கு மென்மையாகவும், ஒரு வித ஃப்ளெக்ஸ்ப்ளிட்டியுடனும் இருக்கும். பத்தாவது லீவில் தான் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அதற்குப் பின் மழை தீபாவளிக் காலம் ஒன்றில் குமாரபாளையத்தில் இருந்து வந்த போது, பழைய பாலத்தில் பவானிக்குத் திரும்பும் போது, சறுக்கிட்டு அரை மீட்டர் தள்ளி விழுந்தேன். சைக்கிளை ஒரு தேய் தேய்த்திருந்தேன். அப்பா மன்னித்து விட்டார்.

பின்னால் என்னையும், முன்னால் தம்பியையும் உட்கார வைத்து செய்ண்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு கூடிப் போவார். ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கும் போதெல்லாம் கையெழுத்து போடும் போது மகிழ்ந்து மகிழ்ந்து, பின் அதுவே இயல்பாக சைன் பண்ணுவார்.

பவானி, காமாட்சியம்மன் கோயில் தெருவில் 'சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் நற்பணி மன்றம்' துவங்கி அதில் செயலாளராக இருந்தார். அப்பா கொஞ்சம் பார்க்க சிவாஜி போலவே இருப்பதாக எனக்குத் தோன்றும். அவரைப் போலவே அலை அலையாக தலை சீவுவார். திருச்சியில் ஒருமுறை ரசிகர் மன்ற மாநாடு நடந்த போது, சிவாஜிக்கு மாலை போடும் போது எடுத்த போட்டோவில் அப்பாவின் சந்தோஷப் பரவச மகிழ்ச்சி அழகாகப் பதிவாகி இருக்கின்றது. பக்கத்தில் சின்ன அண்ணாமலை நின்று கொண்டிருந்தார்.ஒருமுறை வீட்டுக்கு நடந்து வரும் போது, 'ரஜினி' பற்றி ஏதோ குறை சொல்லிக் கொண்டே வர (அவன் ஒரு கிறுக்கன், etc..) எனக்கு கோபம் வந்து சொன்னேன். 'நான் ரஜினி ரசிகன் தான். ஆனால் ரசிகர் மன்றம் எல்லாம் வைக்கவில்லை' என்று. அப்பா கப்சிப்.

காமாட்சியம்மன் கோயில் சின்னதாக இருந்த போது நாங்கள் மூன்று பேரும் சொம்புகளில் தண்ணீர் கொண்டு செல்வோம். எங்கள் வீட்டுக் கிணற்றில் இருந்தே நாங்களே சேந்தி எடுத்து, சொம்புகளில் ஊற்றி, கோயிலுக்கு கொண்டு செல்வோம். அய்யர் பிள்ளையார் சிலைக்கும், முருகன், அம்மன் சிலைக்கும் ஊற்றி விட்டுத் தருவார்.

சில சமயம் குளிக்கும் போது அப்பா என்னைக் கூப்பிடுவார். நான் தான் அப்பாவுக்கு முதுகு தேய்த்து விடுவேன். தோளில் இருந்து முதுகு முழுவதும் கைகளை கரடி போல் வைத்துக் கொண்டு நகங்களால் நன்றாக அழுத்தி தேய்ப்பேன். 'அழுக்கு போயிடுச்சா?' என்று அவ்வப்போது கேட்பார்.

அப்போது வீட்டில் ஒரே ஒரு கயிற்றுக் கட்டில் தான் இருந்தது. அதைக் கவிழ்த்துப் போட்டு, செவ்வகக் கட்டிலின் நீள இரண்டு கால்களிலும் கயிறு கட்டி, இருபக்கமும் ஜமக்காளங்கள் இறுக்க வைத்து, ஒரு பக்கம் அம்மாவும், மறு பக்கம் அப்பாவும் உட்கார்ந்து எழுத்து தைப்பார்கள். நான் நடுவில் கட்டிலுக்குள் அமர்ந்து கொண்டு, பாடங்களை ஒப்பிப்பேன். மிஸ்டேக் விட்டால் தோசைக்கரண்டி தான்... மத்து தான். கை விரல்கள் ஒடிந்து விடும். அம்மா தான் அடிப்பார். அப்பா அந்தளவு அடிக்க மாட்டார்.

ஒருமுறை ஐம்பது ரூபாய்க்கு சில்லறை மாற்றி விட்டு வர சொல்ல, அதை கிறுக்குத் தனமாய் டீ-ஷர்ட்டின் இரு பட்டன்களுக்கு இடையில் செருகி விட்டு மேரி ஸ்டோர்ஸுக்கு ஓடினேன். அங்கு சென்று பார்த்தால், ரூபாயைக் காணோம். திக்கென்று ஆகி வேர்த்து விட்டது. வழியெல்லாம் தேடிப் பார்த்து விட்டு வந்து சொல்ல, செம திட்டு. அப்போது அப்பாவுக்கு வாரச் சம்பளம் இருநூறு ரூபாய்.

சனிக்கிழமை இரவு அப்பா சம்பளம் வாங்கி வருவார். சி.எஸ்.ஐ. பள்ளிக்கு அருகில் இருக்கும் பேக்கரியில் ஜாம்பன் வாங்கி வருவார். ஒரு வட்ட பன்னை நான்காக கீறி, உள்ளே ஒரு பக்கம் வெண்ணையும், மறுபக்கம் ஜாமும் வைத்து தருவார்கள். வீட்டில் சரியாக ஜெய் ஹனுமான் ஆரம்பிக்கும் போது வந்து விடுவார். அனுமார் ஜாம்பன்னோடு எங்களுக்குள் கலந்து போனார். தம்பி அப்பாவுக்கும், நான் அம்மாவுக்கும் பங்கு தர வேண்டும். அம்மா வழக்கம் போல், 'எனக்குத் தந்தது தானே. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்று தம்பியை சமாளித்து விட்டு, அவர் பங்கையும் எனக்கே தந்து விடுவார். அப்பா பங்கிலும் ஒரு பாதி எனக்கு வந்து விடும். அப்போது நினைத்துக் கொள்வேன், 'அப்பா பங்கை வாங்கி சாப்பிடுவதில் ஒன்றும் தவறில்லை. பிற்காலத்தில் அப்பாவுக்கு நான் தானே முதலில் சம்பாதித்து சாப்பாடு போடுவேன்' என்று!

டி.வி.யில் எம்.ஜி.ஆர் படம் போட்டால் படம் முடியும் வரை பொறுமை காக்கும் அப்பாவிடம் இருந்து, முடிந்தவுடன் சிவாஜி ரசிகன் வெளியே வந்து சொல்லுவார். 'ஆமா.. இவரு அசோகன்ட்ட இருந்து சரோஜா தேவியைக் காப்பாத்திட்டு, அப்புறம் இவரும் கெடுக்கத் தான் போறாரு'. அம்மா அதட்டுவார். அப்பாவின் அந்த ஓபன் விமர்சனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ரொம்ப வருஷங்களாய் வீட்டில் ஒரே ஒரு சைக்கிள் தான் இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி.யில் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டுக்காக ஒரு குட்டி சைக்கிள் 1500ரூ-ல் வாங்கினார். என்னை ஓட்டவே விடவில்லை. கோயில் தெருவில் அவரே முதல் சில ரவுண்டுகள் ஓட்டினார். அப்பாவின் அந்த என்றும் மாறாமல் இருந்த குழந்தைத்தனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்பாவின் சுற்றுலா என்பதுஒன்றே ஒன்று தான். வருடம் தவறாமல் ஒவ்வொரு முறையும் குற்றாலம் டூர் போய் வருவார். அதற்கென்று ஒரு ஜமா இருந்தது. ஏதோ ஒரு.... சங்கம் என்று பெயர். ஒரு வாரம் சென்று வருவார்கள். வரும் போது நெல்லை அல்வாவும், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவும் வாங்கி வருவார்கள். காலையில் விழித்துப் பார்க்கும் போது, லேட் நைட் அப்பா வந்திருந்தார் என்றால், சமையற்கட்டில் அல்வாவும், பால்கோவாவும் இருக்கும் என்பது உறுதி. ஒரு வாரத்திற்கு பள்ளியில் இருந்து வந்தவுடனே ரெண்டு ஸ்பூன் உள்ளே இறங்கும்.

குற்றாலம் குழுவில் அப்பா ஒருவர் தான் தண்ணியடிக்காமலும், புகை பிடிக்காமலும் இருப்பார். எப்படியோ அப்பாவிற்கு இந்தப் பழக்கங்கள் வரவே இல்லை. எனக்கு அந்த ஆச்சரியம் விலகவேயில்லை. இன்றும் புத்தாணு பார்ட்டிகளுக்கு செல்லும் போதோ, ஆபீஸ் டூர் போகும் போதோ, என்னால் வெறும் கோக்கையும், வறுத்த பட்டாணி, கடலைகளையும், சிப்ஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற பழுப்புத் திராவகங்களையும், வெளுப்பு குச்சிகளையும் ஒரு பொருட்டாக மதிக்கத் தோன்றாமல் இருப்பது அப்பாவிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். இன்று எனது முகமும், தமிழும் கூட அப்பா தந்தது தான்.

கவுன்சிலிங் முடிந்து வீட்டுக்கு வந்த போது, எல்லோரும் சி.எஸ். விட்டு விட்டு ஈ.சி.ஈ. எடுத்திருக்கிறாயே என்று அங்கலாய்த்த போது, அப்பா மட்டும் தான், 'உனக்கு பிடித்த ஈ.சி.ஈ.யே கிடைத்து விட்டது தானே?' என்று கேட்டார்.

+2 முடித்து கவுன்சிலிங்குக்காக காத்திருந்த காலங்களில் தான் அப்பாவுடன் நான் இன்னும் நெருக்கமானேன். ஒரு நாள் மதியம் அப்பா கடையில் இருந்து லஞ்சுக்காக வந்து, சாப்பிட்டு விட்டு, 'எத்தனை மனிதர்கள்' பார்த்துக் கொண்டிருந்தார். ஐஸ் போகும் சைக்கிள் சத்தம் கேட்டது. 'அப்பா ஐஸ் வாங்கலாமா..?' என்று கேட்டேன். 'சரி.. எடுத்துக் கொள்' என்றார். 'அட, ஆச்சர்யமாக இருக்கிறதே..' என்றேன். அப்பா ஒரு கவிழ்ந்த பார்வை பார்த்தார். அந்தப் பார்வை இன்னும் என் மனதை அவ்வப்போது அறுக்கின்றது.

இன்று அப்பா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று அவ்வப்போது நினைத்துப் பார்ப்பேன். என் கவிதைகளையும், கதைகளையும் அப்பா படித்தால் என்ன சொல்லுவார்? என் 'களிப்பேறுவகை' படித்தால், 'பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான்' என்று நினைப்பாரா..? அப்பாவை வேலைக்கெல்லாம் இனி போக வேண்டாம் என்று சொல்லி விட்டு, 'அப்பா... உங்களுக்கு பிடித்த புக்கெல்லாம் சொல்லுங்கப்பா. வாங்கித் தர்றேன். நிறைய கவிதை எழுதுங்கப்பா... நல்லா ரெஸ்ட் எடுங்க' என்று சொல்லியிருப்பேனா? அப்பாவிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக் கூடிய விஷயங்களைப் பேசியிருப்பேனா? எம்.ஜி.ஆர் ரேப் செய்வதைப் பற்றியெல்லாம் எட்டாவது படிக்கும் பையனிடம் பேசியவரிடம் ஒரு நல்ல நண்பனாக இப்போது இருப்பேன் என்று நினைக்கிறேன்.

கேரளா பெண்கள் பற்றி, படித்த புத்தகங்கள் பற்றி, பார்த்த சினிமாக்கள் பற்றி, வாக்கிங் பற்றி, ஹாக்கிங் பற்றி, கம்ப்யூட்டர் பற்றி, டி.எஸ்.பி. பற்றி... அப்பாவை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

சேலத்தில் பிடித்த கடைசி பஸ்ஸில் பின்னிரவு பதினொன்றரை மணிக்கு பவானியில் வந்து இறங்கி, கரண்ட்டும் செத்துப் போயிருந்த அந்த நடுநிசியில், சுடுகாட்டுக் குழியில் புதைக்கப்படக் காத்திருந்த அப்பாவின் கால்களைப் பிடித்து கதறி, பின்னால் திரும்பிப் பார்க்காமல் என்னை நடக்க வைத்து, தோள்களில் சாய்த்துக் கொண்டு வந்த கார்த்தியிடம், 'இனி எனக்கு ஜாம்பன் யார் கார்த்தி வாங்கித் தருவாங்க..?' என்று கேட்டு, இன்றோடு சரியாக ஒன்பது வருடங்கள் ஆகின்றன.

Thursday, March 19, 2009

ஃப்ளாப்பி என்றொரு கனவு!



+2 முடிந்து நுழைவுத்தேர்வும் எழுதி விட்டு, இதோ ரிசல்ட் இப்ப வரும், நாளைக்கு வந்திடும் என்று சொல்லிச் சொல்லியே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று மாதங்கள் ஓடி, ஆற்றுக் குளியல், கிரிக்கெட், ஊர் சுற்றல் என்றெல்லாம் சேர்ந்து சுற்றிய ஜமா மெல்ல மெல்ல கழண்டு அடுத்த வகுப்புகளுக்கு நகர்ந்து, மற்ற பிரிவினரும் ஆர்ட்ஸ் கல்லூரிகளில் செட்டிலாகி விட, என்ன செய்வதென்றே தெரியாமல், பொழுது போவதற்கு ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்று 'பாலாஜி கம்ப்யூட்டர் சென்டரில்' சேர்ந்த போது, பார்த்த கம்ப்யூட்டரில் முதலில் விளையாடிய கேம் 'டேவ்'.

டாஸ் ப்ராம்ப்ட்டில் 'எடிட்' சென்று, எப்படி கட், காப்பி, பேஸ்ட் செய்வது என்ற பால பாடத்தைச் சொல்லிக் கொடுத்து விட்டு ஹையர் க்ளாஸ்களுக்கு விசுவல் பேசிக் கற்பிக்க நகர்ந்து விட்டார் சென்டரின் உரிமையாளரும், ஆபரேட் செய்யத் தெரிந்த ஒரே ஒருவருமான பாலாஜி. பார்க்க 'ரோஜா' அ.சு. மாதிரியே இருப்பார். கம்ப்யூட்டர் ஆசாமிகள் எல்லாம் அப்படித் தான் இருப்பார்கள் என்று நினைத்தேன். சிறுத்தை ஒன்று பாய்வதற்குத் தயாராக ஒரு கல் மேல் நிற்கும் போஸிலான டெஸ்க்டாப் பிக்சர் இருந்தது.

வாங்கிய நோட்டில் முதலில் எழுதிப் பார்க்கும் பெயர் போல, ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி பெயரை முதலில் டைப் செய்தேன். டெலிட்டுக்கும், பேக் ஸ்பேசுக்கும் வித்தியாசம் தெரியாமல், மாறிய எழுத்தைத் திருத்த முயல்கையில், நியூமராலஜிஸ்ட்கள் கையில் சிக்கியது போல் பெயர் குதறப்பட்டது.

எப்படியோ அல்ட் கீகளைக் கற்றுக் கொஞ்சம் கொஞ்சம் தேறுவதற்குள், பக்கத்து டெர்மினலில் ஒருவன் 'டேவ்' விளையாடிக் கொண்டிருந்தான். That was enough. வெளியேற வழி தெரியாமல், ஆல்ட்களை அழுத்தி, அவனது நோட்ஸை எடுத்துப் பார்த்து, எக்ஸிட்க்கு கஷ்டப்பட்டு கண்ட்ரோலைக் கொண்டு வந்து, எண்டர் அடித்து, கெஞ்சிக் கேட்டு, மாஸ்டருக்குத் தெரியாமல் இருக்க சத்தியம் செய்து, நானும் டேவ்க்குள் நுழைந்தேன்.

'ஜிவ்...ஜிவ்..' என்ற சத்தங்களோடு, நெருப்புகளையும், பூச்சிகளையும் கொன்று, ராக்கெட்டை எடுத்துக் கொண்டு சக்தி தீர்வதற்குள் அடுத்த லெவல் கதவுக்குள் நுழைய முற்படுகையில், மாஸ்டர் வரும் அரவம் கேட்க, நல்லவன் நண்பன், ரீசெட் பட்டனை அழுத்தி விட்டு அப்பாவி போல் அமர்ந்து விட்டான். அப்போது தான் டி.வி. பெட்டியைத் தவிர, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பீரோவையும் கவனித்தேன்.

மாஸ்டர் எப்போதும் சில ப்ளாப்பிகளோடு வருவார். அதில் எம்ப்ட்டி ஒன்றைக் கொடுத்து, எதையோ காப்பி செய்யச் சொல்ல, எனக்கு அதனுடைய காது பிடித்திருந்தது. அதைப் பிடித்து இழுத்து இழுத்து விளையாடலாம். சமர்த்தாக அதனுடைய இடத்தில் சென்று அமர்ந்து கொள்ளும். பூட்டிய பூட்டு, பிளந்த பூட்டு என்ற இரு சிம்பல்களில் ப்ளாப்பியின் வெகு பத்திரமான துளை இருந்தது. என்ன ஒரு சேஃப்ட்டி..!

மாஸ்டர் கொடுத்த நோட்ஸ்களை எல்லாம் கசடறக் கற்று, ஒரு மாத முடிவில் டேவ் நிலைகளோடு, டாஸ் நிலைகளையும் கற்று, வைத்த எக்ஸாமில் 80% மதிப்பெண்கள் எடுத்தேன். கொஞ்சம் கெட்டியான அட்டையில், 'This is to certify Mr./Ms./Mrs R.Vasantha Kumar passed The Basic Compluter Application Course conducted in Sri Balaji Computer Center, Bhavani. என்று இருந்தது. அதில் பாலாஜி என்று கிறுக்கலாக கையெழுத்து போட்டிருந்தார். வாங்கி விட்டுச் செல்லும் போது, 'நல்ல மார்க் வாங்கியிருக்க. அடுத்த லெவலுக்கும் வா. இன்னும் நிறைய கத்துக்கலாம். ஆயிரம் ரூபா தான் பீஸ்' என்று அனுப்பி வைத்தார். 'அடுத்த லெவல் வீட்ல கேட்டிருக்கேன் சார். சொல்றேன்னு சொல்லி இருக்காங்க' என்று சொல்லிச் சொல்லியே, மேரியோ, ரோட்ரேஷ் எல்லாம் விளையாடிப் பார்த்து விட்டு, ரிசல்ட் வந்தவுடன், சென்னைக்கு வந்து விட்டேன்.

கல்லூரிக் கம்ப்யூட்டர் கதைகளைத் தனியாக எழுத உத்தேசம் என்பதால் அவை பிறகு!

முதல் இரண்டு ஆண்டுகளில் ப்ளாப்பி என்ற அந்த ஏறத்தாழச் சதுர வஸ்து தான் பிரபல்யம். டாக்குமெண்ட்கள் ப்ரிண்ட் எடுக்க, படங்கள் காப்பி செய்ய, ரகசியமாக வைத்திருக்க ப்ரொடெக்ஷன் பூட்டு மூடித் திறந்து, கீறல் விழாமலிருக்க காதை இழுக்காமல்... எத்தனை பத்திரமாக வைத்திருந்தாலும் வேண்டிக் கொண்டு வந்தது போல், நான்கு முறைக்குப் பின் பல்லைக் காட்டி, 'ஃபார்மட் செய்யவா..?' என்று விண்டோஸ் கேட்கும்.

கொஞ்ச நாட்களில் வைரஸ் பரவுதாம் என்று காலரா பரவுவது போல் பீதி பரப்பப்பட, லேப் கம்ப்யூட்டர்களில் ப்ளாப்பி தடை செய்யப்பட, ப்ரவ்ஸிங் சென்டர்களில் இருந்து படங்கள் கடத்தி வரப்பட்டு, ஹாஸ்டலில் எல்லோரும் பார்த்து இன்புறும் வகையில் ஒரே ஒருவன் வைத்திருக்கும் கம்ப்யூட்டரில் ஏற்றப்படும். சில ரூம்களில் புத்தகங்கள் திறந்ததை விட, சி.பி.யூ. பேனட்கள் திறக்கப்பட்டது அதிகம்; ஓ.எஸ். ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டது மிக அதிகம்.

சீனியர்களின் அறைகளில் கம்ப்யூட்டர்கள் இருக்கும். அறைக்குள் இருக்கும் குப்பைகளை விட, சி.பி.யூக்குள் அத்தனை குப்பைகள் இருக்கும். அவற்றை விடவும், ஹார்ட் டிஸ்க்குக்குள் அத்தனை குப்பை 'மேட்டர்'கள் இருக்கும்.ரூம் ஃபேனை விட, கம்ப்யூட்டர் ஃபேன் நன்றாகவே ஓடி, நல்ல காற்று வரும்.

இரண்டு வருடங்களாக அந்த 1.44 MB க்குள் உலகமே இருந்தது.

சடசடவென கொஞ்ச நாட்களில் டெக்னாலஜி மாறி, சுகமாய்த் தூங்கும் பாற்கடல் நாராயணன் கை சக்கரத்தாழ்வார் போல், ஆளாளுக்கு கையில் சிடி.க்கள் சுற்றிக் கொண்டு வர, ப்ளாப்பி மோனோபாலி ராஜாங்கம் ஓய ஆரம்பித்தது. பிக்சர்களில் இருந்து மூவி(ங்) படங்கள் என அறிவும் அடுத்த நிலைக்கு முன்னேறியது. சில சிடி.க்களில் கீறல் விழுந்து விழுந்து கேங் ரேப்பப்பட்ட பெண் போல் காட்சி தரும். சாகாவர வீடியோக்கள், படங்கள், ரெண்டு நிமிடம் மட்டுமே ஓடும் ஹாலிவுட் காட்சிகள் பொறுப்பாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கைமாறிக் கொண்டே இருக்கும்.

பின் சில நாட்களில் சி.டிக்களை வைத்துக் கொண்டு எத்தனை முறை தான் ஒரு ஹாஸ்டல் ப்ளாக்கில் இருந்து மற்றொன்றுக்கு நடந்து கொண்டே இருப்பது என்று ஹார்ட் டிஸ்க் டு ஹார்ட் டிஸ்க் என்று மொத்த சொத்தே பரிமாறப்பட்டது.

மழையில் நனைந்த கோழிக் குஞ்சுகள் போல் ப்ளாப்பிகள் நடுங்கிக் கொண்டே போய், கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கி இன்று பயன்பாடுகளில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போயிருக்கின்றன.

இப்போது யூ.எஸ்.பி, ப்ளூடூத், வை.ஃபை என்று பல இணைப்பு முறைகள் வந்து விட்டாலும், இன்றைக்கும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள்களில், 'சேமி', 'இப்படி சேமி' என்ற கட்டளை ஐகான்களாக பதிக்கப்பட்டு, 'மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவாக' (நன்றி : மதன்) மாறி ப்ளாப்பிகள் அமரத்துவம் பெற்று உறைந்து விட்டிருக்கின்றன.

எனக்கென்னவோ அதன் பெயரிலேயே பிரச்னை இருக்குமோ என்று தோன்றுகிறது. பின்னே, 'ப்ளாப்'பி என்று இருக்கிறதே! அதான் ஊற்றிக் கொண்டு விட்டது என்று நினைத்துக் கொள்வேன். நியூமராலஜிஸ்ட்களிடம் பெயர் சூட்டும் பொறுப்பைக் கொடுத்திருக்க வேண்டும்.

PS: இந்தப் பதிவுக்காக விக்கியில் ப்ளாப்பி பற்றி படித்துப் பார்த்தால், கடைசியாக அதிலும் Metaphor மேட்டர் எழுதப்பட்டிருக்கின்றது. ஒண்ணை சொந்தமா யோசிக்க விட மாட்டாங்க போலிருக்கு. அதுக்குள்ள எழுதிடறாங்க..!!

Wednesday, April 30, 2008

ஃப்ளாஷ்பேக்...!

நேற் றுரை என்னுடனே நீ இருந்தாயே
சேற்றுத்தா மரை போலே சேர்ந்திருந்தாயே
காற்றனல் தனில் கற்பூரம் நீ கரைந்தாயே
தேற்றுவர் எனையாரோ தேமாவே!

- அழுகையுடன் இரா.வசந்த குமார்.

இப்பாடல் புதுமையான இரட்டுற மொழிதல் வகையைச் சேர்ந்தது.

1. சென்ற நாள் வரை என்னுடன் நீ இருந்தாயே; நெல்லும், துவரையும் (நெல் + துவரை = நேற்றுவரை; நெல் ஆதி நீடல் எனும் பண்பிற்கேற்ப நேற் என ஆனது) போன்ற உணவுப் பொருட்கள் ஒரு நாள் மட்டுமே உடலில் தங்கியிருக்கும் எனக் காட்டி எந்தவொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையே இருக்கும் என்ற தத்துவத்தை உணர்த்திச் சென்றாயே.

2.சேற்றில் மலர்ந்த தாமரை சேற்றுடன் சேர்வது போலச் சேர்ந்திருந்தாயே. நீ என்னிடம்; சகதியான சேற்றில் தாவும் மான் சிக்கி, அங்கேயே மாண்டு மண்ணாவது போல் என்னிடம் நீ இருந்தாயே;

3.சிறிதளவு வெப்பம் கொண்ட காற்றிலேயே கற்பூரம் கரைந்து விடுமா? (விடாது). ஆனால் ஒரு மிகச்சிறு தட்டலுக்கே என்னாசை அட்டையே நீ உடைந்தது ஏனோ?

4.உன்னைப் பிரிந்து வருத்தத்தில் இருக்கும் என்னைத் தேற்றுபவர் யாரோ தேமாவே (அட்டை = அட் + டை = நேர் நேர் = தேமா);


தேனையும் மாவையும் கலந்து இனிப்புப் பண்டங்கள் செய்து, உண்பது போ டால் என்ன இனிப்பு இருக்குமோ, அத்தனை போன்ற சொற்சுவையுடைய, பொருட்க...


தேனையும் மாவையும் கலந்துப் பண்டம் செய்துண்டால் தரும் இனிப்புச் சுவை போன்று இனிமையுள்ள சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட தீந்தமிழ் வார்த்தைகள் தன் மேல் எழுதக்கண்டு பேருவகை கொண்ட உனைக் கண்டு மனமகிழ்வு உற்ற என்னை உனைப் பிரிந்ததனால் ஆறுதல் கூறித் தேற்றுவர் எவருமில்லையே?

(16.11.95 மதியம் நிகழ்ந்த கைகலப்பில் உடைந்த அட்டையைக் (Pade) குறித்துப் பாடிய இரங்கற்பா)

***

சென்ற வாரம் வீட்டுக்குச் சென்று பழைய புத்தகங்களைக் கிளறிக் கொண்டு இருந்த போது, '94-ம் வருட அறிவொளி இயக்க டைரி கிடைத்தது. தும்மல்களுக்கு இடையே புரட்டிப் பார்த்த போது, இந்தக் கவிதை(?) கிடைத்தது.

துளியும் சென்ஸார் செய்யாமல் மேலே கொடுத்துள்ளேன்.

பத்தாம் வகுப்பு ட்யூஷனில் நடந்த ஒரு சின்ன சண்டையில் L.K.G. முதல் எக்ஸாம்க்கு என்று வைத்திருந்த பரிட்சை அட்டை உடைந்தது. அதை அவ்வளவு ராசியாக கருதி இருந்தேன். மிகவும் மனம் வருந்திப் போனேன். அப்போது எழுதிய கவிதை இது.

அந்தத் துக்கத்திலும் சிலேடை (அதாங்க டபுள் மீனிங்) வகையில் எழுதி இருக்கிறேன் என்பதும், அதை டைரியில் எழுதி வைத்து, விளக்கம் வேறு கொடுத்து, கூட என்ன காரணத்திற்காக, என்று எழுதப்பட்டது என்றும் குறித்து வைத்திருப்பதை எண்ணிப் பார்க்கையில், மனித மூளையின் செயல்பாட்டைப் பற்றி வியப்பு தான் வருகிறது.

God doesn't play dice என்று தலைவர் சொன்னது உண்மையாக இருக்கலாமோ?

PS: (L.K.G.க்கு நீ ஸ்லேட்டு உபயோகப்படுத்தாமல், பேப்பர் வெச்சு எழுதினியா? என்ன கதை விடுற? என்று கேட்கும் டவுட் பேர்வழிகளுக்கு ஒரு கதை சொல்லப்படும் பின் ஒரு பதிவில். ஆமாங்க, அதுக்கும் ஒரு ஸ்டோரி இருக்கு.)

Sunday, April 13, 2008

மோக்ளி - Dramatic Life.

ரம்ப காலத்தில் ஒரு டேப் ரிக்கார்டர் வீட்டில் இருந்து வந்தது. அதில் தான் 'உயிரே உனக்காக' மற்றும் 'நானும் ஒரு தொழிலாளி' என்ற காம்பினேஷன் கேஸட் (TDK) கேட்ட நினைவு இருக்கிறது. ஒரு முரை அதில் ஏதோ ரிப்பேர் ஆகி விட , அதைச் சரி செய்யக் கொடுத்த கடையில் ஸ்வாஹா செய்து விட்டு கொஞ்சம் பைசா கொடுத்தார்கள்.

அத்தோடு பாடல்கள் கேட்கும் பழக்கம் வானொலி (His Master's Voice) மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அதுவும் ஒரு பழைய காலத்து வஸ்து. பெரிய செவ்வகப் பெட்டி. முகத்தின் அடிப்பக்கம் இரு குமிழ்கள். சட்டை பட்டன் பெரிய சைஸ் போல் இருக்கும். ஒன்று ஆன் செய்து, வால்யூம் கூட்ட, குறைக்க உதவும். மற்றொன்று ட்யூன் செய்ய.

முகத்தின் மேல்பாகம் 80% பட்டை பட்டையாய் இருக்கும். அதன் வழியாகத் தான் ஒலி கேட்கும். குமிழ்கள் அருகில் ஸ்கேல் போல் பல எண்கள். எஃப்.எம். ஏ.எம் என்று பின்பு தான் புரிந்தது. வானொலி ஆன் செய்ததன் அடையாளம் ஒரு ரேடியம் நிற ஒளி அந்த அளவுஸ்கேலின் உடலெங்கும் பரவும். குமிழைத் திருப்பிக் கொண்டே பாடல்கள் , நாடகங்கள் கேட்போம்.

வானொலியின் முக்கிய பங்கு நேரம் அறிவதற்காகத் தான் இருந்து வந்தது. காலை 8 மணிக்கு பள்ளிக்கு பேருந்து இருக்கின்றது. 7:30க்கு திருச்சி வானொலியில் பாடல்கள் வைக்க ஆரம்பிப்பார்கள். அதிகமில்லை ஜென்டில்மேன், மூன்றே பாடல்கள் தான். முதலில் புதுப்பாடல். இரண்டாவதாக மீடியம் கால பாடல். மூன்றாவதாக பழைய பாடல். இந்த வரிசையும், வகைப்பாடும் மாறுவதே இல்லை. சரியாக இரண்டாம் பாடல் முடிந்தவுடன் கிளம்பி விடுவோம். அப்போது தான் பஸ் ஸ்டாப்பிற்குச் செல்ல கரெக்டாக இருக்கும்.

8 மணிக்கு பாடல்கள் முடிந்தவுடன் டெல்லிக்கு அலைவரிசை மாற்றப்படும். முதல் கால் மணிநேரம் இந்தியிலும், பின் அடுத்த கால் மணி நேரத்திற்கு ஆங்கிலத்திலுமாக செய்திகள் சொல்லப்பட, 08:30 ஆகி இருக்கும்.

சனிக் கிழமைகளில் மட்டுமே அவற்றை கேட்க முடியும். கோவை வானொலியில் 08:30க்கு நாடகம் போடுவார்கள். அற்புதமாக இருக்கும். சில சமயம் கொங்கு வட்டார வழக்கில் நாடகங்கள் இருக்கும். கேட்க கேட்க இனிமை...!

அப்படி ஒரு சனிக்கிழமையில் கேட்ட ஒரு நாடகம் நினைவுக்கு வருகின்றது. சகுனி ஏன் கொளரவர்களுக்கு கூட இருந்தே குழி பறித்து, பாண்டவ மற்றும் கெளரவ வம்சங்கள் பகை கொள்ள காரணமாய் இருந்தார்? அவரது வாழ்வில் இவர்களால் ஏற்பட்ட பிரச்னை என்ன? என்பதை சொல்லி இருந்தார்கள். நன்றாய் இருந்தது.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இன்றைக்கும் 'ஒரே நாள் உனை நான்..' பாடலைக் கேட்டால் திருச்சி வானொலி தான் நினைவுக்கு வருகின்றது.

ஒன்பதாம் வகுப்பின் பாதியில் ஒரு டேப் ரிக்கார்டர் வந்தது. மாடர்னாக வானொலி, டேப், ரிக்கார்டர் எல்லாம் இருந்தன.

அதில் தான் எல்லா சித்து விளையாட்டுகளும் விளையாடி, எக்கச்சக்க அடிகள் வாங்கிய்து நடந்தது.

பாடல் கேஸ்ட்களை எல்லாம் உருவிப் போட்டது, புதிது புதிதாக பாடல்கள் ரெக்கார்டிங் செய்வது, அதிலேயே சொந்தக் குரலில் பாடுவது (கரோக்கி), பேசுவது, பழைய கேஸட்டுகளை குரல் அழிப்பு... என்று பல விதங்களில் இன்று PodCasting செய்வது போல் பல வேலைகள் செய்தோம்.

பிறகு தான் அறிமுகம் ஆயினர் எஸ்.வி.சேகர் மற்றும் கிரேஸி மோஹன் நாடகங்கள்.

ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி இராமமூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன், ஆர்.எஸ்.மனோகர் என்று பல ஜாம்பவான்கள் நாடகங்கள் இருந்தாலும் இவர்கள் இருவரின் நாடகங்கள் தான் மிகவும் கவர்ந்தனவாக இருந்தன.

அவற்றில் கிரேஸியின் நாடகங்கள் கொஞ்சம் பிராமண டச் இருந்து கொண்டே இருக்கும். இன்று வரை அந்த நிழல் படிவதை அவரும் விலக்க முயற்சி செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. அதை அவர் விரும்பியே செய்வது போலவும் இருக்கிறது. சேகர் திறமையாக அது போன்ற தவற்றைச் செய்யாமல், பொதுத் தமிழை பயன்படுத்தியதால் எல்லோரையும் எளிதாக ரீச் செய்ய முடிந்தது.

சேகரின் நாடகங்களில் அவரைச் சுற்றியே கதை இருக்கும். செய்வது போலவும் இருக்கும். கிரேஸி அப்படி எல்லாம் செய்யாமல், எல்லோர்க்கும் சம வாய்ப்பு கொடுப்பது போல் இருக்கும்.

சேகரின் நாடகங்களில் வண்ணக் கோலங்கள், அதிர்ஷ்டக்காரன், பெரியதம்பி, 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி, காட்டுல மழை, காதுல பூ, மகாபரதத்தில் மங்காத்தா ஆகியனவும், கிரேஸியின் நாடகங்களில் மீசை ஆனாலும் மனைவி, சாட்டிலைட் சாமியார், ரிடர்ன் ஆஃப் கிரேஸி தீவ்ஸ் ஆகியனவும் மிகவும் பிடித்தனவாக இருக்கின்றன.

அமுல் மில்க் பவுடர், ஹார்லிக்ஸ், மாஸ்,கிஸான் ஜாம்.... இவற்றுக்கும், இப்பதிவுக்கும் என்ன தொடர்பு என்று குழம்ப வேண்டாம். சனிக்கிழமை பகல்களில் சும்மா இருக்கையில் இந்த நாடகங்களை டேப் ரிக்கார்டர்ல் ஓட விட்டு, இவற்றை எல்லாம் ஸ்பூனால் எடுத்து 'இது தான் லாஸ்ட் ஸ்பூன்' என்று சொல்லிக் கொண்டே பூரா பாட்டிலையும் காலி செய்து விட்டு, சுவை பழகி, நாடகம் கலந்து... இப்போது நாடகங்களைக் கேட்கும் போது அவற்றின் சுவை நினைவுக்கு வந்து, இவற்றைச் சாப்பிடும் போது நாடக வசனன்களும், அச்சூழலும் நினைவுக்கு வந்து, Pavlov's Dog Experiment-ஐ ருசுப்படுத்துகின்றன.

இன்று வரையில் பாடல்கள் கேட்கப் போரடிக்கையில் அமைதியாக ஏதேனும் ஒரு நாடகத்தை ஓட விட்டு (இப்போது கணிணியில்..!) கேட்டுக் கொண்டே வேலைகள் செய்வதிலும், இன்றி படுத்துக் கொண்டு கழுத்து வரை போர்த்திக் கொண்டு சும்மா படுத்திருப்பதிலும் சுகம் இருக்கத் தான் செய்கின்றது.

Thursday, March 20, 2008

மோக்ளி Labs - Intriguing Innovations.

மேனிலை வகுப்புகள் முடிக்கும் வரை ஆய்வகங்கள் பக்கம் செல்லும் வேலையே இல்லை. எப்போதாவது ஆசிரியர் வரவில்லையானால், சென்று அங்கு அவர் இருக்கிறாரா என்று பார்த்து வர வேண்டும். அவ்வளவு தான்.

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்காக பள்ளியிலேயே இரவு தங்கிப் படிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்த போது தான் நின்று அவ்வப்போது ஆய்வகங்களை கவனித்தோம். ஆணியில் கழுத்தை மாடித் தொங்க விட்டிருக்கும் எலும்புக்கூடு, கலர் கலர் புகை பூக்கும் வேதியியல் கூடம், இரவு முழுதும் எரிய விட்டு மஞ்சள் ஒளியைப் பொழிந்து கொண்டே இருக்கும் சோடியம் லைட் (அப்போது எங்கள் ஊருக்கு சோடியம் வேப்பர் சாலை விளக்குகள் வந்திருக்கவில்லை..!)இயற்பியல் கூடம் என்று விசித்திரமாய் இருந்தது.

பதினொன்றாம் வகுப்பு வந்த பின்பு தான் ஆய்வுச்சாலைகளில் நேரடி படையெடுப்பு நிகழ்ந்தது. ஆங்கிலம், தமிழ் செய்முறைப் பயிற்சிகளும் இருந்தன. ஆங்கிலத்திற்கு ஏதேனும் பாராவைப் படித்துக் காட்ட வேண்டும். அதற்கே மூச்சு வாங்கி விடும். தமிழுக்கு மற்றுமொரு விளையாட்டு. திருக்குறள் முழுவதையும் படிக்க வேண்டும், மனதிற்குள்! வழக்கம் போல் பொண்ணுங்க மட்டும் முழுதும் மூச்சு முட்ட படித்துக் கொண்டிருக்க, நாங்கள் எல்லாம் ஸ்ட்ரெய்ட்டாக மூன்றாம் பாலுக்கு ஜம்ப். அட..அட.. வள்ளுவர் என்னமா ரசிச்சி, அனுபவிச்சு எழுதி இருக்கிறார் என்று புரிந்தது. அதில் ஒன்று மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. தலைவி சொல்றாப்ல, 'இந்த கண்கள் ரொம்ப பாவம். தலைவனைப் பிரிஞ்சா அந்தக் கவலையிலேயே தூங்க மாட்டேங்குது. தலைவன் இருந்தாலோ அவன் தூங்க விடறதில்லை. ரொம்ப பாவம்ல?' என்று ஃபீல் பண்ணுவது போன்ற குறள்! என்ன ஒரு ரொமாண்டிக் வரிகள் இல்லை..?

அப்புறம் பொண்ணுங்க 'முடிச்சுட்டேன் ஐயா' என்று சொல்லி கொஞ்ச நேரம் கழிச்சு நாங்களும் 'ஆங்..! ஆச்சு சார்!' என்று மூடி வைத்தோம்.

இயற்பியல் கூடத்தில் இந்த ஸ்பெக்ட்ராமீட்டர் ஓர் ஆட்டம் காட்டும். அந்த மஞ்சள் ஒளித் துணுக்கை கண்ணில் கொண்டு வந்து பார்ப்பதற்குள், மூச்சு முட்டி விடும்.

அது தவிர எத்தனை முறை விலங்கியல் ஆய்வேடு பக்கங்கள் கிழித்தெறியப் பட்டிருக்கின்றன என்பதற்கு கணக்கே இல்லை.

வேதியியல் ஆய்வுக் கூடத்தில், கையில் கிடைத்த பொடிகளை, பேர் தெரியாத, புரியாத கரைசல்களோடு கலக்கி புகை புகையாய் வருவதையும், கலர் கலராய் வருவதையும் வேடிக்கை பார்ப்போம். ஒருமுறை அது போல் எதையெதையோ கலக்கி, சும்மா இராமல் அடியில் சூடு வைக்க, கொஞ்ச நேரத்தில் கலவை டுபுக்கென மேலே பொங்கி உயரே சீறிப் பறந்து, சாரலாய் சுற்றி இருந்த எல்லோர் மேலும் கொட்ட... யப்பா செம கப்பு! சட்டையெல்லாம் கறுப்பு கறுப்பாய் புள்ளிகள்.

என்ன தான் நன்றாகப் படித்திருந்தாலும், பரீட்சை என்று வரும் போது எப்படியும் கை நடுங்கி, ரிசல்ட் சரியாக காட்டி வெளி வருவதற்குள் திக்கித் திணறித் தான் போவோம். வேதியியல் இறுதித் தேர்வுக்கு ஆய்வக உதவியாளரிடம் 'சால்ட் என்னங்ணா ' என்று கேட்டு மஞ்சள் பேப்பரில் கட்டியது 'சோடியம் குளோரைடு', வெள்ளை பேப்பரில் ' சோடியம்-பை-கார்பனேட்' என்று இரகசியக் குறிப்புகள் பெற்று, கொஞ்சம் அதற்கேற்றார் போல் சோதனைகள் செய்து, 'முடிச்சாச்சு சார்' என்று சொல்லி, ரிசல்ட் அளவுகள் எழுதும் போது, தவறாய் எழுதி விட, அழிப்பான் கூட இல்லாமல் பரிதாபமாக நிற்க, எதிரில் இருந்த ஒப்ரு பெண் எச்சி தொட்டு அழி (?) என்று சொல்ல, அது படி கேட்டுச் செய்ய, பேப்பரே கிழிந்து வர (உனக்கெங்கடா அறிவு போச்சு, அது என்ன ஸ்லேட்டா..?)... ஒரு மாதிரி தான் +2 இறுதித் தேர்வு முடித்து வந்தேன்.



இயற்பியலில் எதிர்பார்த்தது போலவே ஸ்பெக்ட்ரோமீட்டர் தான். அதிலும் இல்லாத தடங்கலகள் (ஒண்ணுமில்லைங்க.. கொஞ்ச நேரம் கரண்ட் போயிடுச்சு..! சோடியம் லைட் மீண்டும் ஃபுல் ஃபார்மிற்கு வர அரை மணி நேரம் ஆகும்.) ஏற்பட்டு, அப்புறம் மஞ்சள் துணுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை, 'ஒரு மாதிரி வெளிச்சம் மட்டும் கொண்டு வா' என்று சொல்லப்பட, 'ஒரு ஆரஞ்சு புள்ளி தெரியுது பாருங்க' என்று எதையோ காட்ட, அது எதிரே நின்று வேறொரு ஆய்வு செய்து கொண்டிருந்த சக மாணவியின் வளையல் மேல் சூரிய ஒளி பட்டு தெறித்தது என்று தெரிந்து எக்ஸ்டர்னல் சூப்பர்வைஸர் டென்ஷனாகி, அப்புறம் ஸ்பெக்ட்ராமீட்டரின் ரெண்டு கைகளையும் கால்களாய் நினைத்துக் கொள்கிறேன் என்று கும்பிட்டு அப்படி, இப்படி என்று திருப்பி, மஞ்சள் ஒளியைக் கொண்டு வந்து காட்டி, 'தப்பித்தேன். பிழைத்தேன்' என்று தலை தெறிக்க ஓடி வெளியே வந்து விழுந்தேன். சுற்றி என்ன நடந்தது என்று கேட்டவர்களிடம், 'ஜூஜூபிடா எக்ஸ்ப்ரிமெண்ட்ஸ்! என்ன தான் காட்டினாலும் இது அந்த லைட் இல்லைனு டார்ச்சர் பண்ணிட்டார்! அவருக்கு கண்ல ஏதோ ப்ராப்ளம்னு நினைக்கிறேன்' என்று சொன்னேன். உடனே 'நான் சொன்னேன்ல, அவர் கண் ப்ராப்ளம்னு' என்று ஒரு சக மாணவன், தன்னருகில் நின்ற பெண்ணிடம் அறுவடையை ஆரம்பித்தான். நான் கடுப்பாகி 'உனக்கும் ஸ்பெக்ட்ராமீட்டரா?' என்று கேட்டேன். சைலண்டாக அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

தாவரவியலுக்காக மட்டும் தான் ரொம்ப மெனக்கெடவில்லை. பள்ளி கிராமப் புறத்தில் இருந்ததால் 'ஹெர்பேரியத்திற்கு' அலைய வேண்டிய தேவையே வரவில்லை. இறுதித் தேர்வில், 'இது என்ன செடி', 'இதுக்கு லத்தீன்ல என்ன பேரு' என்று திருப்பித் திருப்பி மூன்று செடிகளை மட்டும் காட்டி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நாம தான் எப்பவுமே கடைசி பேட்ச். (என்ன செய்ய ! பேர் ராசி அப்படி!) முன்பே களம் கண்டு வாகை சூடி வந்த வீரர்களிடம் தகவல் பெற்று, சரியாகச் செய்து விட்டு வந்தேன்.

விலங்கியலுக்கும் இதே போல் ஏதோ கூத்து நடந்தது. சுத்தமாக நினைவில்லை.

ஆனால், எங்களுக்கு மொத்த கடுப்பும் இந்த கணிப்பொறியியல் மாணவர்கள் மீது தான். மாங்கு மாங்கென்று காடு, கழனி, வயல் வரப்பென்று அலைந்து செடிகளை ஒட்டி, அக்காக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி உயிரியல் படங்களை வரைந்து ஆய்வேடு தயாரித்து ( இதில் ரஃப் காப்பி, ஃபேர் காபி என்று 2 வகை வேறு! ரஃப் காபி உயிரியல் ஆசிரியர் கிழித்தெறிய, ஃபேர் காபி எக்ஸ்டர்னல் வாத்தி காறித் துப்ப..! ) என்று அவனவன் உயிரைக் கொடுத்து உழைக்க, அந்தப் பசங்க மட்டும் 1 + 2 = 3? என்ற கஷ்டமான சந்தேகத்தை ஸால்வ் செய்ய வட்டம், சதுரம், சாய்ந்த கட்டம் என்று சும்மா ஸ்கேலாலேயே கிறுக்கி விட்டு (அதையெல்லாம் படம் என்றே எந்த தன்மானம் உள்ள உயிரியல் மாணவனும் சொல்ல மாட்டான்..!) full mark எடுத்துச் செல்வார்கள்.

இப்படிப்பட்ட திருப்பணிகளால் ஆய்வகங்களை முடித்து விட்டு, கல்லூரியில் கால் வைத்தேன்.

ள்ளியிலேயே பிராணனை பிய்த்து எடுத்த விதி, கல்லூரியில் கை, கால்களை வைத்து சும்மா இருக்குமா என்ன?

கல்லூரியில் சேர்ந்து விடுதி அறை எல்லாம் பிடித்தது புதன்கிழமை. நன்றாக நினைவு இருக்கிறது. அன்று சூரிய கிரகணம். வெள்ளிக் கிழமையில் இருந்து வகுப்புகள் துவங்கும் என தெரிய வந்தது. 'ஆஹா நல்ல நாள் பார்த்து தான் ஆரம்பக்கிறார்கள்' என்று மகிழ்வாகிற்று. நடுவில் வியாழக்கிழமை என்று சும்மா இருப்பானேன் என்று கல்லூரியில் சேர்ந்து முதல் வேலையை நல்லபடியாக ஆரம்பிப்போம் என்று முடிவு செய்து ஒரு மூன்று பேர் படத்திற்கு கிளம்பினோம். வியாழன் ஃபர்ஸ்ட் ஷோ! சத்யம். படம் ஏதோ கப்பல் பற்றிய படம். பெயர் மறந்து விட்டது.

அது தான் முதன்முறையாக DOLBY எஃபெக்டில் படம் பார்க்கிறோம். திரையின் இடது ஓரத்தில் கப்பலின் கதவு திறக்கிறது. (படம் பேர் : THE VIRUS ). தியேட்டரின் இடது ஸ்பீக்கர்களில் மட்டும் அந்த சத்தம் கேட்கிறது. சொல்வதற்கே வெட்கமாய் இருக்கிறது. அம்மாம் பெரிய தியேட்டரில், நாங்கள் மூன்று பேர் மட்டும் 'யார்ராது படம் ஓடிக்கிட்டு இருக்கும் போது, உள்ள வர்றது' என்று இடது பக்கம் திரும்பிப் பார்க்கிறோம். நினைத்துப் பாருங்கள். எல்லா தலைகளும் ஸ்ட்ரெய்ட்டாக திரையைப் பார்த்து இருக்க, நடு தியேட்டரில் மூன்று தலைகள் மட்டும் , டென்னிஸ் நடுவர் போல் இடது பக்கம் திரும்பினால் எப்படி இருக்கும்? என்ன செய்ய? அது அறியாத வயசு! புரியாத மனசு! (சுவாரஸ்யம் என்னவெனில் அந்த மூன்று பேரில் நானும் மற்றொருவனும் 3D Surround Audio துறையில் தான் இப்போது பணி ஆற்றுகிறோம். மற்றொருவன் Bio Tech Ph.D., செய்ய US பறந்து விட்டான்.)

மங்களகரமாய் வெள்ளிக்கிழமை பொழுது விடிந்தது. அதற்குள் வகுப்பு கால அட்டவணை கொடுத்து விட்டிருந்தார்கள். முதல் வகுப்பு என்ன என்று பார்க்க, எங்கள் பேட்சிற்கு லேப் என்று இருந்தது. கொஞ்சம் திக் என்று இருந்தது. அதுவும் நம்ம பேர் ராசிக்கு செகண்ட் பேட்சின் செகண்ட் க்ரூப்புக்கு என்ன என்று பார்க்க 'இயற்பியல் லேப்'. பயந்து கொண்டே ஆய்வகத்திற்குள் நுழைய, சரியாக, மிகச் சரியாக எனக்கு அன்று கொடுக்கப்பட்ட பரிசோதனை.. அதே தாங்க.. ஸ்பெக்ட்ரோமீட்டர் ! 'என்ன தம்பி எப்படி இருக்கற? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு?' என்று விஷமமாக அது கேட்க, 'ம்ஹூம்... ம்ஹூம்ம்' என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டே , வேறு வழியே இல்லை, அதன் கைகளையும் கால்களாக்கிக் கொண்டேன்.

'எல்லோரும் பள்ளியிலேயே செய்திருப்பீர்கள். 50 மார்க் வாங்கி இருப்பீர்களே! நீங்களே செய்யுங்கள்' என்று சொல்லி விட்டார் லேப் ஆசிரியர். 'நாம எந்த ரேஞ்சில் வந்திருக்கோம்' என்று நமக்குத் தானே தெரியும். வழக்கம் போல் மஞ்சல் ஒளி..ம்ஹூம்.. கிடைக்கவேயில்லை. ஆனால் மற்றொன்று கிடைத்தது. 'காதல் கொண்டேனில்' டெஸ்டரை முகத்தில் எறிந்து சரமாரியாக பொழிவாரே ப்ரொபஸர், அது போல் வார்த்தை விளையாட்டு விளையாடினார் அந்த லேப் ஆசிரியர். 'சரி தான்! ஆரம்பத்திலேயே வாங்கிக் கட்டிக்க ஆரம்பிச்சாச்சா..! உருப்புட்டாப்ல தான்' என்று முடிவுக்கே வந்து விட்டேன். கொஞ்ச நாட்களில் 'இவங்க எப்பவுமே இப்படி தான்! சும்மா திட்டிக்கிட்டே இருப்பாங்க! நமக்கு இதெல்லாம் பழகினது தானே! விடுங்க பாஸ்' என்று மனசாட்சி சொல்லி விட அப்புறம் என்ன, திட்டுகள் எல்லாம் பூமாரியாய் தோன்ற ஆரம்பித்தது.

வேதியியல் லேபில் ஏதும் சொல்லிக் கொள்வது போல் நடக்கவில்லை. வழக்கம் போல் கலர் கொண்டு வந்தோமா, அளவு கொண்டு வந்தோமா என்றே ஓடியது.

கணிப்பொறி லேபில் ஆதிகால மெஷின்களில் Lotus123, Foxpro எல்லாம் கற்று தெய்வீக நிலைக்கு உயர்ந்தோம். பசங்க அதிலேயே சில சித்து விளையாட்டுகள் விளையாடி, 'படம்' பார்க்க ஆரம்பிக்க, விடுதி மாணவர்கள் இரவெல்லாம் கணிப்பொறி லேபிலேயே குடியிருக்க ஆரம்பித்தார்கள்.(சரி.. சரி..! மக்களே கோபிச்சுக்காதீங்க.! 'குடியிருக்க ஆரம்பித்தோம்'. இப்ப ஓ.கே.வா?)

மெக்கனிக்கல் லேபில் தான் ஒரிஜினல் இஞ்சினியர்கள் போல் 'வெட்டு, குத்து, கண்ணே, காதலி' என்று பி.கே.பி. நாவல் தலைப்பு கணக்காக சத்தம் வரும் அளவிற்கு வேலை நடக்கும். அங்கு ஒரு துணைப் பிரிவில், மெட்டல் உருக்குவதற்கு, ஈர மண்ணைக் குவித்து, அதில் இடை இடையே இருக்கும் காற்று இடைவெளியை நீக்க, குச்சிகளை வைத்து குத்திக் கொண்டே இருப்பார்கள் என்று செய்து காட்ட, 'சார்! அப்ப பெரிய பெரிய மெட்டல் பாடிகளை செய்ய ஏக்கர் கணக்கில் மண் கொட்டி, அதில் இருக்கும் காற்று இடைவெளிகளை நீக்க, எல்லோரும் அதற்குள் இறங்கி ஜங், ஜங் என்று குதிப்பார்களா சார்?' என்று கேட்டு அவரின் கடுப்பைச் சம்பாதித்துக் கொண்ட நண்பன் இன்று Entrepreneur ஆக இருக்கிறான்.

முதல் செமஸ்டரின் இறுதித் தேர்வு வந்தது.

'கடவுளே! தயவு செய்து ஸ்பெக்ட்ரோமீட்டர் மட்டும் வரவே கூடாது' என்று வேண்டிக் கொண்டே செல்ல, நல்ல வேளையாக அது வரவில்லை. மாறாக வெர்னியர் ஸ்கேல் மூலம் ஊசல் எண்ணிக்கை அளக்கும் ஓர் ஆய்வு வந்தது. 'சரி! சப்பையான ஆய்வு ' என்று சந்தோஷமாக அங்கு போய் ஊசல் எல்லாம் சரியாக ஆட்டி, எண்ணிக்கை எல்லாம் கணக்கிட்டு, கடைசியாக ஊசல் குண்டு தொங்க விட்டிருக்கும் மெல்லிய நூலின் ஆரம் (radius) கண்டு பிடிக்க வேண்டும், வெர்னியர் ஸ்கேல் கொண்டு!

அங்கு ஆரம்பித்தது சிக்கல்!

வெர்னியர் ஸ்கேல் மூலம் நாம் பார்ப்பது ஆரமா, இல்லை வேறெதாவது அளவீடா என்று சந்தேகம் வந்து விட்டது. அந்த மெல்லிய கம்பியை வெர்னியரில் வைத்து அளவு பார்க்க, அது எப்படியும் மில்லிமீட்டருக்கும் குறைவாகத் தான் காட்டும். அது எதைச் சுட்டுகிறது என்று எப்படித் தெரிந்து கொள்வது? ஸ்பெக்ட்ரோமீட்டர் பயத்தில் அதை மட்டும் நன்றாக படித்துச் சென்றதில், கோட்டை விட்ட மற்ற ஆய்வு இது. வேர்க்க ஆரம்பித்து விட்டது.

யோசி! யோசி!

கொஞ்ச நேரத்தில் செம ஐடியா வந்தது.

பள்ளியை விட்டு சென்ற முதல் செமஸ்டர் என்பதால், இன்னும் நான் இங்க் பென் தான் உபயோகப் படுத்திக் கொண்டிருந்தேன். அதுவும் சும்மா சாதாரணமாக ஒல்லிப்பிச்சான் போல் எழுதும் ஹீரோ பேனாக்கள் மீது எனக்கு என்றுமே நாட்டம் இருந்ததில்லை. எழுத்து சும்மா பட்டை அடிக்க வேண்டும். அப்படி ஒரு குண்டு பேனா வைத்திருந்தேன் , அப்போது!

திருவாதிரைத் திருநாளில் அள்ளி அள்ளி மாவைத் தின்று விட்டு, கையை நீட்டினால் மஞ்சள் பூசிய கயிறு கட்டி விடுவார்கள் வீட்டில்! அதுவும் 'புள்ள மெட்ராஸில் படிக்கப் போறான்ல' என்று, கட்டி விட்டதில், வலது கையில் கலர் கலராய் கயிறுகள்!

ஒரு கயிரைப் பிய்த்து எடுத்தேன். குண்டு பேனாவை ஒரு வட்டமாய்ச் சுற்றினேன். நூலின் அந்த நீளத்தை ஸ்கேலால் அளவிட்டேன். அந்த அளவு நூலின் நீளம் என்பது வட்டமான குண்டு பென்னின் சுற்றளவு (circumference) தானே? அந்த நீளம் = 2 * (22 / 7) * r தானே! அதிலிருந்து r குறித்துக் கொண்டேன். பின் அதே குண்டு பேனாவை வெர்னியரின் இரு முனைகளுக்கும் இடையில் வைத்து, வெர்னியர் காட்டும் அளவைக் குறித்துக் கொண்டேன்.

இந்த இரண்டு அளவுகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்ததில், என்ன ஆச்சரியம்! வெர்னியர் அளவு, முந்தைய அளவை விட சற்றேறக் குறைய இரண்டு மடங்கு இருந்த்து. பிறகென்ன? வெர்னியர் காட்டுவது விட்டம் (diameter) என்று தெள்ளத்தெளிவாக புரிந்தது.

ச்சும்மா கடகடவென அளவுகள் எடுத்து, ஆய்வை வெற்றிகரமாய முடித்து, சந்தோஷமாய் வெளியே வந்து நண்பர்களிடம் நம்ம சிந்தனையைச் சொல்ல, 'அட அற்பப் பதரே' என்பது போல் பார்த்தார்கள். 'ஏண்டா நாயே! ஆறாவதில் இருந்து வெர்னியர் ஸ்கேல் பற்றி படித்துக் கொண்டு வருகிறோம். அது diameter அளக்க பயன்படும் என்பது கொஞ்சம் கூட ஞாபகம் வரவில்லையா' என்று கேட்க... டன் கணக்கில் அசடு....!

கெமிஸ்ட்ரி லேபில் அப்படியே அருகில் இருந்த நண்பனைப் பார்த்து அடி காப்பி! பின்ன என்னங்க, எல்லாம் ஆங்கிலத்திலேயே எழுத என்றால், எவ்ளோ கஷ்டம்.

கணிப்பொறி லேபில் அவுட்புட் காட்ட கோல்மால்கள் பல!

மெக்கானிக்கல் லேபில், நம்ம அதிர்ஷ்டம் மணல் குத்து விளையாட்டு தான் வந்தது. 'குத்தடி குத்தடி சைலக்கா! குனிஞ்சு குத்தடி சைலக்கா' என்று விளையாடியதில், அதுவும் ஜாலியாகவே போனது.

இன்னும் அடுத்த எழு செமஸ்டர்களிலும் இது போல் டப்பா டான்ஸ் ஆடியும், கம்பீரமாகவும் ரிசல்ட்கள் காட்டி ஒரு மாதிரி நானும் எஞ்சினியர் ஆனேன்.

லேப்கள் பற்றி மட்டும் சொல்ல இன்னும் பலப் பல கதைகள் உள்ளன என்பதால், அவை பின்பொரு முறை நினைவு கூறப்படும். இப்போது சில துணுக்குச் செய்திகள் மட்டும்!



* Wien Bridge என்று ஒன்று உள்ளது. அதில் சரியாக ரெஸிஸ்டரும், கெப்பாஸிட்டரும் வைத்து, எந்த ஒரு பகுதியிலும் வோல்டேஜ் zero என்று காட்ட வேண்டும். அதற்கேற்றாற் போல் வைக்க வேண்டும். ஒரு நண்பன் அது போல் சரியாக கணக்கு எல்லாம் போட்டு, சர்க்யூட் செட் செய்து விட்டு, இண்டர்னல் எக்ஸாமினரைக் கூட்டி வந்து காட்டினான். வோல்ட்மீட்டரை ஒவ்வொரு armமிலும் வைத்து 'நல்லா பார்த்துக்கோ சார்! அப்பாலிக்கு ராங்கு காட்டக் கூடாது. இன்னா புரிஞ்சுதா? இக்கட சூடு. நோ வோல்டேஜ். இங்க பாரு. நோ வோல்டேஜ்' என்று எல்லா பக்கமும் காட்டி விட்டு, சந்தோஷமாய் அவர் முகம் பார்த்து 'இன்னா ஓ.கே தான?' என்றான். அவர் மிக அமைதியாக் 'எல்லாம் சரி தான்! முதலில் பவர் ON பண்ணுப்பா! பவரே இல்லாட்டி எல்லா armஸ்லயும் zero வோல்டேஜ் தான் காட்டும்' என்று சொன்னாரே பார்க்க வேண்டும்.

தலைவர் என்று எங்கள் துறையில் ஒரு மாணவர் இருந்தார். அவருடைய பராக்கிரமங்களை எழுத மட்டும் 500 ப்ளாக்போஸ்ட் வேண்டும். சாம்பிளுக்கு அவருடைய சில லேப் சித்து விளையாட்டுகள். ( தலைவரே மன்னிச்சிடுங்க...! கண்ட்ரோல் பண்ண முடியல.! )

* ஓர் எலக்ட்ரானிக்ஸ் லேப் வைவா. ப்ரொபஸர் கேட்கிறார். "From this circuit, how can you get the output?". தலைவர் அசரவே இல்லை. பதில் கொடுத்தார் பாருங்கள். "Sir, If you give input, output will come..!". ப்ரொபஸர் அப்படியே பேஸ்தடித்துப் போய் விட்டார். அவரது 30 வருட பொது வாழ்க்கையில் இப்படி ஒரு பதிலை அவர் கேட்டதே இல்லை. இனிமேல் கேட்க என்ன இருக்கிறது? "O.K. Your viva is over. Please you can go..!". விட்டால் அழுதே விடுவார் போல் இருந்தது. தலைவருக்கு ரொம்ப சந்தோஷம். 'ஒரே கேள்வியோடு முடித்து விட்டாரே என்று!'

* Communications Lab Viva. "Can you draw the block diagram of the Amplitude Modulation Process?" Professor asked. Thalaivar never got worry about this type of questions. He took the pen and put it on the paper. He started to draw a transistor and started to explain, " Sir! This is PNP transistor...". "Stop! Stop! Your viva is over! Please go..!" the shocked professor.

தலைவரின் லேப் சரித்திரத்திலேயே பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நிகழ்வு இப்போது கூறப் போவது.

ஆறாம் செமஸ்டரில் Bio Medical Lab மற்றும் Instrumentation Lab என்று இரண்டு லேப்கள் ஒரே நேரத்தில் வரும். பேட்ச்கள் பிரித்துக் கொண்டு செல்ல வேண்டும். செமஸ்டர் இறுதித் தேர்வு. சீட்டு குலுக்கப்பட்டு விட்டது. 'B' என்று வந்தால் Bio Medical லேபிற்கும், 'I' என்று வந்தால் Instrumentation லேபிற்கும் செல்ல வேண்டும். எல்லோரும் 'I' தான் வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு எடுத்தோம். ஏனெனில் அது கொஞ்சம் ஜாலியாக இருக்கும். Bio Medical Lab என்றால் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருக்கும். தலைவரும் சீட்டு எடுத்துப் பார்த்துக் கொண்டார். ' 'B' வந்தவர்கள் எல்லோரும் இடது புறமும், 'I' வந்தவர்கள் எல்லோரும் வலது புறமும் நிற்கவும்' என்று சொல்லப்பட எல்லோரும் அது போல் நின்றோம்.

தலைவர் இரண்டு புறமும் நிற்காமல், நடுவில் நின்றார். 'என்னடா, தலைவர் ஒண்ணு இடது பக்கம் நிற்க வேண்டும். இல்லையெனில் வலது பக்கம் நிற்க வேண்டும். வித்தியாசமாக நடுவில் நிற்கிறாரே' என்று எல்லோர்க்கும் குழப்பம் வந்து விட்டது. 'உனக்கு என்னப்பா வந்திருக்கு?' என்று லேப் ப்ரொபஸர் கேட்க, தலைவர் கூறிய பதிலில் ஆய்வகமே அதிர்ந்தது.

"மேடம் எனக்கு 'H' வந்திருக்கு. இப்ப நான் என்ன செய்ய?' என்று பரிதாபமாக கேட்டார்.

புரிந்திருக்கும்...! தலைவர் 'I' என்பதைத் தான் குறுக்காக வைத்துக் கொண்டு 'H' என்று குழம்பிக் கொண்டு இருந்தார்.

தலைவர்....! தலைவர்....!

Sunday, March 16, 2008

மோக்ளி in uniform.

சீருடைகளில் மோக்ளியின் அனுபவங்கள் எத்தகையன?

4-ஆம் வகுப்பு படிக்கையில் சிண்ட்ரெல்லா நாடகம் பள்ளியின் ஆண்டு விழாவில் நடத்தப்பட்டது. அவள் நடன மேடையில் விட்டு விட்டு வீட்டிற்குத் திரும்புகிறாள். இளவரசன் அந்த ஒற்றைச் செருப்பை வைத்து சிண்ட்ரெல்லாவைக் கண்டு பிடிக்க முயல்கிறான். கண்டு பிடித்து விடுகிறான். அவனும், அவனது பாதுகாப்பு வீரர்களும் அவளது சித்தி வீட்டில் இருக்கும் அவளைக் கண்டுபிடித்து மணந்து கொள்கிறான். They lived happily thereafter.

இதில் இளவரசனோடு போகின்ற பாதுகாப்பு வீரர்களில் இரண்டாவது வரிசையில் இடது மூலையில் அந்த ஒற்றைச் செருப்பைப் பிடித்துக் கொண்டு வந்தான் மோக்ளி. அது ஒன்றும் பெரிய செருப்பு இல்லை. பள்ளியில் அணிகின்ற கருப்பு லேஸ் ஷூ.துவைக்காத சாக்ஸின் கப்புடன் அதைக் கையில் பிடித்து பாதுகாப்பு கூட்டத்தின் தலைவனின் பின்னால் வந்தது தான் மோக்ளியின் முதல் சீருடை அனுபவம்.

பச்சை நிறத்தில் மேலே ரெண்டு, கீழே ரெண்டு என்று நான்கு பாக்கெட்டுகள். தோள் பட்டைகளில் வெள்ளை நட்சத்திரங்கள் மூன்று. இடது தோள் பட்டையின் இடையில் புகுந்து, பாக்கெட்டின் வழியாகச் சுற்றி ஒரு முடிச்சு போட்டு, பாக்கெட்டிலேயே செருகிக் கொள்கின்ற விசில். அதே பச்சை நிறத்தில் பேண்ட். டைட்டான பெல்ட். போதுமா? அனைத்திற்கும் மகுடம் போல் அதே பச்சை நிறத் தொப்பி. அதில் ஏதோ பேட்ச் வேறு இருந்தது.

இப்படி ஒரு கெட்டப்புடன் கையில் அழுக்கடைந்த ப்ளாக் ஷூவைப் பிடித்துக் கொண்டிருக்கும் சிறுவனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா? அது தான் அன்றைய இரவில் மோக்ளியின் நிலை.

இதில் இத்தனை கெட்டப்புடன் லெப்ட் - ரைட் வேறு போட்டுக் கொண்டு வர வேண்டும். எப்படி?

பின் அதே சீருடையில் ஆண்டு விழாவின் பரிசுகளைப் பெற்று நடு இரவில் பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினோம். பள்ளியை இரவில் பார்க்கின்ற அனுபவம் எப்போதும் நினைவில் நிற்கின்ற ஒன்று அல்லவா?

யர்நிலைப் பள்ளியில் சேர்ந்த போது ஸ்கெளட் - ல் சேர்த்துக் கொண்டார்கள். அங்கு நடந்த கதைகள் வேறு விதமானவை.

இங்கு ஒரு தொப்பி. அதை மறக்காமல் இடது பக்கம் இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும். வலது புருவத்தில் இருந்து மூன்று விரல் தொலைவில் தான் தொப்பி வர வேண்டும். வலது விழிக்கு மேல் பேட்ச் வர வேண்டும். இறுக்கமான சாம்பல் நீலக் கலரில் சட்டை. பெல்ட். ஹூம்... இங்கே டிராயர் போட வைத்து விட்டார்கள். அது வேறு இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும். இப்படி ஒரு சீருடை.

இதில் தான் பயிற்சிகள் எல்லாம்.

என்ன பெரிய பயிற்சி?

சின்னச் சின்னப் பசங்களின் விளையாட்டு வகுப்பில் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். யாராவது பெரிய மனிதர்கள் வந்தார்கள் எனில் வரிசையில் நின்று சல்யூட் வைக்க வேண்டும். குடியரசு தினம், சுதந்திர தினம் வந்தால், நாங்க தான் முன்னால் நின்று எல்லாம் செய்ய வேண்டும்.

பள்ளிச் சீருடையில் இருந்து, ஸ்கெளட் சீருடைக்கு மாற வேண்டும், அவசர அவசரமாக! வீட்டில் இருந்து பள்ளிச் சீருடையில் வந்து, வகுப்பறையில் நுழைந்து, யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே அந்த உடைக்கு மாற வேண்டும்.

அதுவும் ட்ராயருக்கு ஜிப் வைக்க மாட்டார்கள். பட்டன்கள் தான். அது எப்போது பிய்ந்து போகும் என்று யாருக்கும் தெரியாது. அவ்வளவு டைட்டாக இருக்கும்.

அப்போது தான் ஒரு கேம்ப் இருக்கிறது என்று கூட்டிச் சென்றார்கள். கேம்ப் கோபி 'வைரவிழா மேனிலைப் பள்ளிக்கு'.

அது தான் முதன்முதலாக வீட்டை விட்டு வெளியே தங்குவது. Home Sick. பின் அதிலேயும் சில நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். நேர அட்டவணைப்படி தான் எல்லாம் நடக்க வேண்டும்.காலையில் வகுப்புகள் சரியாக 9 மணிக்கு ஆரம்பித்து விடும். நோட்ஸ் எடுக்க வேண்டும்.கஞ்சி மாதிரி ஏதோ தருவார்கள். மதியம் உணவு. அது முடிந்ததும் அவுட்டோர் வேலைகள்.

சீக்கிரம் எப்படி கூடாரம் கட்டுவது? முடிச்சுகளின் வகைகள். ஓடுதல், விளையாடுதல் என்று பல களப்பணிகள் இருந்தன.

காலை ஆறு மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்படும். அதற்குள் எல்லோரும் குளித்து மைதானத்தில் அசெம்பிள் ஆகி விட வேண்டும். மாலை சரியாக ஆறு மணிக்கு கொடி இறக்கப்படும். அப்போது யார் எங்கு என்ன செய்து கொண்டிருந்தாலும், அப்படியே நிறுத்தி விட்டு எழுந்து நிற்க வேண்டும். இதைக் கேள்விப்பட்டு எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஆனால் யாரிடமும் அதைக் கேட்டுத் தொலைக்கவில்லை. ;-)

கடைசி நாள் தான் ஒரு காமெடியாகி விட்டது.

பிரிவு நாள் என்பதால், ஆளாளுக்கு கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகபட்சம் எட்டு மணிக்குள் காலை உணவு உண்ட பழக்கம் அப்போது இருந்தது. (இப்போது ஹூம்..!) அந்த அசெம்பிள் கூட்டம் போய்க் கொண்டே இருந்ததில் காலை 9:30 ஆகி விட்டிருந்தது.

'தடால்'.

கண்களில் ஒரே இருட்டு. எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை. முகத்தில் தண்ணீர் அடிக்கப்பட்டது புரிந்தது. கஷ்டப்பட்டு விழித்துப் பார்க்க மைதானத்தின் ஓர் ஓரத் தூணில் சாய்ந்து கிடக்கிறேன். மயக்கமாகி விழுந்து விட்டதும், அரிகில் இருந்தவர்கள் தூக்கி இங்கு கொண்டு வந்ததும் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் வெட்கமாகிப் போய் விட்டது.

பின் காலை உணவு உண்டு விட்டு அவசர அவசரமாக மூட்டை கட்டி, பேருந்து நிலையத்தில் 21 பிடித்து ஊருக்கு வந்து வீட்டில் சாப்பாடு சாப்பிட்டதில் தான் வீட்டுச் சாப்பாட்டின் அருமை புரிந்தது.

ல்லூரியில் சேரும் போது NCC, NSS, NSO இம்மூன்றில் ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக சேர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். ஏற்கனவே நாங்க எல்லாம் மிலிட்டிரி ரேஞ்சில் இருந்தவர்கள் என்ற நினைப்பில் NCC தேர்வு செய்தான். அதிலும் இரண்டு வகை NCC ARMY, NCC NAVY. சரி தான் கழுத, NCC ARMY எடுப்போம் என்று எடுத்தான். அங்கே தான் ஆரம்பித்தது வினை.

ஒவ்வொரு சனிக்கிழமையும் பரேடு நடக்கும் அரை நாளிற்கு. பளிச்சென்ற ஷேவ் முகத்தோடு வர வேண்டும். தடவிப் பார்த்தால் சொர சொரப்பாக இருக்கக் கூடாது. தலை முடியை ஒண்ட வெட்டி விட்டு வர வேண்டும். அதே தாங்க, மிலிட்டிரி கட்டிங். பிடரியைப் பிடிக்கவே முடியாது. என்னவோ இப்போதே டெம்போவில் ஏற்றி, வாகா தாண்டி போஸ்டிங் செய்யப் போவது போல், யூனிஃபார்ம் விறைப்பாக இருக்க வேண்டும். கசங்கி இருக்கவே கூடாது.

வேறு வழி இல்லை. மெக்கானிக்கல் லேபிற்கு வாங்கி வைத்திருந்த காக்கி சட்டை, காக்கி பேண்ட் தான் சீருடையானது கொஞ்ச நாளைக்கு! பிறகு அவர்களே அளவெடுத்து, தைத்துக் கொடுத்தார்கள். கண்கள் பிதுங்கி வெளியே வந்து விட்டது. அந்தளவிற்கு இறுக்கம்.

சட்டையில் மூன்று பொத்தான்களுக்கு மேல் வெளியே தெரியக் கூடாது. பெயர் பேட்J, ரிச்சி ஸ்ட்ரீட்டில் செய்யப்பட்டு வந்தது. ஆங்கிலத்திலும், இந்தியிலும்.

பரேடு சரியாக நடக்கவில்லை என்றால், தவளை குதி தான் (Frog Jump). குதித்தபடியே அலுவலகத்திலிருந்து, EEE துறை வழியாக, மெக்கானிக்கல் துறையை அடைந்து, கெமிஸ்ட்ரி துறையைக் கடந்து, மீண்டும் அலுவலகம் வர வேண்டும். ஒரே ஒரு முறை தான் அதில் செமத்தியாக மாட்டினான்.

இதில் மற்ற பிரிவு தேர்வு செய்தவர்கள் செய்யும் எஞ்சாய்மெண்ட் பார்த்து பார்த்து ஆர்மிக்காரர்களுக்கு புகை புகையாய் வரும்.

NSS என்றால் குப்பை கூட்டுவது, களை பிடுங்குவது என்று சமூக சேவையைச் செய்து கொண்டு தங்கள் கடலை சாகுபடியையும் குறைவே இல்லாமல் முப்போகமும் விளைவித்து அறுவடை காட்டுவார்கள். NSO என்றால் விளையாட்டு மட்டுமே! கேட்கவும் வேண்டுமா? மைதானத்தைச் சுற்றி வர வேண்டியது. தாகசாந்தி செய்து கொள்ள வேண்டியது. ஓரமாக உட்கார்ந்து மொக்கை போட வேண்டியது. இதில் இந்த மெக்கானிக்கல் மாணவர்கள் பண்ணும் அழும்பு தான் ரொம்ப ஓவராக இருக்கும்.

மொத்த வகுப்பிற்கும் ஒரே ஒரு மாணவி மட்டுமே இருந்ததால், 'இருக்கறவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு டோட்டல் தமிழ்நாடு' என்ற நினைப்பில் கண்ணில் பட்ட, கூட ஓடி வரும், களைப்பாக ஓரமாய் உட்காரும் புள்ளைகள் என்று மானாவாரியாக தீயத் தீய வறுத்தெடுப்பார்கள்.

எங்கள் அளவிற்கு இல்லாவிடினும் கொஞ்சம் கடினமாக பயிற்சி செய்பவர்கள் NCC NAVYக்காரர்கள். ஆனால் அங்கே வேறு ஒரு அனுகூலம் இருந்தது. அட வேற ஒண்ணும் இல்லைங்க! கொஞ்சம் பொண்ணுங்க இருந்துட்டாங்க அங்க. அவ்வளவு தான்!

ஆர்மினாலே ஆம்பளப் பசங்க இராஜ்ஜியம் தானே! அது வேற மாதிரி ஜாலி! ரொம்ப ரீஜண்ட்டா எல்லாம் இருக்க வேண்டியதில்லை. நம்ம இஷ்டத்துக்கு சாஞ்சுக்கலாம். தண்டனை ஏதாவது கிடைச்சுட்டா கவலையே பட வேண்டியதே இல்லை. வெட்கப்படவும் வேண்டியதில்லை. அதையே அட்வென்சரா எடுத்துக் கொண்டு சின்சியரா அதை செய்யலாம்.

இங்கு கற்றது தான் ரைஃபிள் ஷூட்டிங்! அது இப்போது தென்மலா டூரில் 4/5 டார்கெட் அடிப்பது வரை துணையாய் இருந்திருக்கிறது என்பது எனக்கே வியப்பாக இருக்கிறது.

முதல் வருஷக் கடைசியில் கேம்ப் அழைத்துப் போனார்கள். எங்கே? காஞ்சிபுரம் போகும் வழியில், செங்கல்பட்டு செல்லும் இரயில்வே தடத்தில் 'சிங்கப் பெருமாள் கோயில்' நிறுத்தத்தில் இறங்கி வடக்குப்பட்டு என்ற இடத்தில் இருந்த 'திரிவேணி அகாடமி' என்ற ரெஷிடெண்ட்ஷியல் ஸ்கூல்!

'சிங்கப் பெருமாள் கோயில்' நிறுத்தத்தில் இறங்கும் போதே முந்தின (வேறு கல்லூரி) பேட்ச் ஒன்று திரும்பி வந்து கொண்டு நின்றிருந்தது. எப்படி? தவளைக் குதி செய்து கொண்டு! எங்களுக்கு அப்படியே எல்லாம் ஆடி விட்டது. 'ஆஹா! என்னடா இது ! ஆரம்பமே சரி இல்லையே! திரும்பி போகும் போதும் பரேடு பழுக்குதே! அப்ப, உள்ள என்ன ரேஞ்சில இருக்கும்' என்று பயம் வந்தது.

ஆனால் அப்படியே தலைகீழ்!

வந்த அன்றைக்கே ஒருவன் 'படி தடுக்குச்சு! பதறி விழுந்தேன்! கால் உடைஞ்சிடுச்சு! காவலா இருக்கேன்!'னு ஒரு பிட்டைப் போட்டு, அங்கிருந்த 15 நாளும் எங்கள் மூட்டைகளுக்கு காவலாய் படுத்துக் கொண்டான். அப்படி என்ன அதில் பொக்கிஷமா இருந்தது? துணி மூட்டை தான்!

முதல் இரண்டு நாட்கள் மட்டுமே கண்டிப்பு இருந்தது. அப்புறம் செம ஜாலி! பரேடெல்லாம் சும்மா வெயில் பறக்கும், முற்பகல் நேரம்! பிறகு 'பிற்பகல் முழுதும் விளையாடு பாப்பா' என்று விளையாடித் தீர்க்க, புழுதி தான் நம்ம சட்டை ஆக்கும்.

அவ்வப்போது மீட்டிங், கதைகள், அரட்டை என்று நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் டைம் மிகச் சரியாக மெய்ண்டைன் செய்தோம். சரியாக ஆறு மணிக்கு எழுந்து, இரவு பத்து மணிக்கு படுத்து விட வேண்டும். அது போலவே இன்று வரையும் கடைப் பிடித்து வந்திருந்தால், வாழ்க்கையே வேறு மாதிரி போயிருக்கும். ஹூம்....!

பத்து மணிக்கு சொன்னாலும், சொல்லா விட்டாலும் தூக்கம் சொக்கி வந்து விடும். கண்ட்ரோல் செய்யவே முடியாது. அப்படி ஒரு உழைப்பில் உடல் வாடிப் போய் இருக்கும். அது தாங்க உழைப்பு.! இப்ப ஏன் நேரங்கெட்ட நேரத்துல படுத்தாலும் தூக்கமே வர மாட்டேங்குதுனு புரியுது.

ஒரு முறை எங்கள் சிறு குழுவின் மேற்பார்வையில் உணவு பரிமாறுதல். அன்றைக்குப் பார்த்து இட்லி வந்து விட்டது. அதை ஆளாளுக்குச் சண்டை போட்டு பிய்த்து காலி செய்து விட, கடைசியில் எங்களுக்கு வெறும் மாவுத் துணுக்குகள் தான் மிஞ்சி இருந்தன. விடவில்லையே அதையும்!

எல்லோரும் சொல்வது தான். இருந்தாலும் சொல்கிறேன். காலையில் கொளுத்தும் (மே மாதம் தான் கேம்ப் நடக்கும். சென்னையின் மே மாத வெயில்! எப்படி இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்!) வெயிலில் பரேடு நடத்தி விட்டு கால் மணி நேர இடைவெளியில் மதிய உணவு முடித்து வர வேண்டும் என்ற அவசர கதியில் உண்ணும் அந்த உணவிற்கு, சத்தியமாகச் சொல்கிறேன், ஈடு இணையே இல்லை. அவ்வளவு ருசியாக இருக்கும். மற்ற நேரங்களில் அதை வாயில் வைக்க முடியாதபடி இருக்கும்.

ஓர் 5 நாட்களில் பள்ளி மாணவர்கள் வேறு வந்து விடுவார்கள். அவர்களை மேய்ப்பதும் ஓர் எக்ஸ்ட்ரா வேலையாகச் சேர்ந்து விட்டது. வெறும் பசங்க மட்டும் என்பதால், அடித்த கூத்துக்கு அளவே இல்லை.

இப்படியே 15 நாட்கள் போன பின், மிக்க வருத்தத்தோடு தான் எல்லோரும் பிரிந்தோம். யாரும் எதிர்பார்க்கவேயில்லை, NCC Army கேம்ப் இந்த அளவிற்கு எஞ்சாய்மெண்ட் ஆக இருக்கும் என்று!

ப்போது வெறும் ப்ளெய்ன் அல்லது லைன் அல்லது செக்கர் ஷர்ட், டார்க் பேண்ட், சம்பந்தமே இல்லாத டை, ப்ளாக் ஷூ என்று வேறு மாதிரி ஒரு ஆடைக்கு பழக்கப் படுத்திக் கொண்டாலும், அந்த சீருடைகளின் உழைப்பு இல்லை என்பதில் இன்றைய ஆடைகளை நான் 'யூனிஃபார்ம்' என்ற கேட்டகிரியிலேயே சேர்ப்பதில்லை.

இன்னும் போலீஸ் யூனிஃபார்ம் தான் மாட்டிப் பார்க்கவில்லை. அலுவலக கலைக் குழுவில் எப்படியாவது ட்ராமாவில் போலீஸ் வேஷங் கட்டிட வேண்டியது தான்.

அப்போ மலையாளத்துல சம்ஸாரிக்கணுமே..! பேசாம சிரிப்பு போலீஸ் ஆகிட வேண்டியது தான். என்ன சொல்றீங்க..?

Saturday, February 23, 2008

மோக்ளியின் ஷா - இன் -ஷா.



றடிக்குக் கொஞ்சம் குறைவான உயரம். கறுப்பு நிறம். காற்றில் பரபரக்கின்ற முடி. சின்னச் சின்னதாய் இரு கண்கள். பார்ப்பவர்களை அப்படியே வசீகரித்துக் கொள்கின்ற முகராசி.

இந்த மனிதரிடம் அப்படி என்ன ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்று மோக்ளி மயங்கினான்?

முதலில் இது போன்ற எந்த திரை நடிகர்க்கும் இரசிகனாய் இல்லாமல் தான் இருந்தான். அவன் திரைப்படங்கள் பார்ப்பதே மிகவும் அரிது என்பதால், இதில் விசிறியாய் இருப்பதெற்கெல்லாம் அவனுக்குத் தெரியாமல் இருந்தது.



அவ்வப்போது செல்லும் உறவினர் வீடுகளில் இருக்கும் அவன் வயதையொத்த சிறுவர்கள் பைத்தியமாய் இருப்பதைக் கண்டு தான் அவனும் மயக்கம் கொள்ள ஆரம்பித்தான்.

அவனுக்குக் கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த காலங்களில் வீடியோ, டெக், கேசட் எடுத்துப் பார்த்த ராஜாதி ராஜா தான் அவனை முழுதும் அவர் பக்கம் திரும்ப வைத்தது எனலாம். எல்லோரும் கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' தான் முழுமையான கமர்ஷியல் படம் என்று சொல்லிக் கொள்வார்கள். அது எந்த அளவுகோலில் என்று அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை 'ராஜாதி ராஜா' தான் சரியான கமர்ஷியல் படம்.

நாகரீக இளைஞன், கிராமத்து இளைஞன் (ஏ சென்டர், பி & சி சென்டர் இரண்டையும் கவர் செய்தல்), ஏமாற்றி விட்ட சொந்தக்காரர்களிடம் இருந்து சொத்தை மீட்க வேஷம் போட்டு வெற்றி பெறும் என்றும் பசுமை எம்.ஜி.ஆர். பார்முலா (நடுத்தர வர்க்கம் கவர்தல்), கோழையான இளைஞன் மாமா பெண்ணால் வீரனாய் மாறுவது (உள்ளிருக்கும் வீரத்தை உசுப்பி விடுதல் என்ற வகையில் இளைஞர்களையும், துறுதுறுவென இருக்கும் நதியாவால் பெண்களையும்..) எல்லவற்றிற்கும் மேலாக படம் முழுதும் இருக்கும் நகைச்சுவைக் காட்சிகளால் எல்லாரையும் ஈர்க்கும் வகையில் வந்த இப்படம் தான் அவனை பரம விசிறியாக்கச் செய்தது.

இது வளர்ந்து திருவிழாக் காலங்களில், கேசட் எடுத்துப் பார்க்கையில், தியேட்டருக்குச் செல்கையில் என்று தேடித் தேடிப் பார்த்த ராஜா சின்ன ரோஜா, மனிதன், பணக்காரன், மாப்பிள்ளை, பில்லா, ரங்கா, குரு சிஷ்யன், தர்மதுரை, தர்மத்தின் தலைவன், கொடி பறக்குது, மாவீரன், படிக்காதவன், போக்கிரி ராஜா, தில்லு முல்லு, வேலைக்காரன், தம்பிக்கு எந்த ஊரு எல்லாம் அவனையும் அந்தப் பைத்தியங்களின் கூட்டத்தில் ஓர் உறுப்பினர் ஆக்கியது.

பக்கத்து வீடுகளில் பார்க்கச் செல்லும் ஒளியும் ஒலியும் முடியும் வரை அவன் காத்திருக்க வேண்டியதானது. ஏனெனில் கடைசியாகத் தான் அவர் பாடல் ஒளிபரப்புவார்கள். நிகழ்வு தொடங்கும் போது இருக்கும் உற்சாகம் போகப் போகத் தேய்ந்து போனாலும் அவர் பாடலின் இசை தொடங்கினால் போதும், அவனது கண்களில் ஒளி பிறந்து விடும். அவ்வீட்டுப் பெரியவர்கள் கடுப்பாகி, 'இவன் ஒரு நடிகன் என்று இந்தப் பசங்க ஏன் தான் பைத்தியமாக இருக்கிறார்களோ' என்று கூறுவதுடன், இன்னும் நிறைய சொல்லுவார்கள்.

அதெல்லாம் வேண்டாம். (பிறகு இது ஒரு ஜெயமோகன் கட்டுரையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது.) எனக்கு என்ன வேண்டும்? அவரது படங்கள் எனக்குப் பரவசம் அளிக்கிறது. அது போதும். மற்றபடி அவரது தனி வாழ்வில் என்னவாய் இருந்தாலோ, என்ன செய்தாலோ எனக்கு என்ன வந்தது? இந்தப் பெரியவர்கள் எல்லாம் ரஜினியைத் தூஷிப்பதற்கு மனரீதியில் ஒரு காரணம் கண்டுபிடித்து வைத்துள்ளேன். அது பிறகு.

ஞாயிறு அவர் படம் போட்டால், ஏழு மணிக்கு ஒரு பத்து நிமிடம் இடைவேளை விடுவார்கள், தலைப்புச் செய்திகளுக்காக. அந்த குறுகிய இடைவெளியில் அவன் சென்று 500 மீட்டர் தொலைவில் இருக்கும் பொரி கடலைக் கடைக்குச் சென்று, கேட்டு, பொட்டலம் கட்டி, பணப் பட்டுவாடா முடிந்து வீட்டிற்கு வர வேண்டும். அவனது ஓட்டம் அன்று மட்டும் தான் ஊர் பார்க்கும்.

அவ்வப்போது பார்க்கும் பழைய படங்களில் அவரது நடிப்புத் திறமையும் அவனை ஈர்த்துக் கொண்டே போனது. மிகச் சரியான உதாரணம் ஜானி.



அவருக்கே பிடித்த படம் என்று அவர் கூறிக் கொள்வது 'முள்ளும் மலரும்' என்றாலும், இவனுக்குப் பிடித்து அவர் நடிப்பின், ஆளுமையின் உச்சம் ஜானி என்று தான் கூறுவான்.

ஏன் என்று சொல்லத் தெரியாது. ராஜாவின் இசை மழையா, ஸ்ரிதேவியின் அமைதியான நடிப்பா (கமல் படங்களில் கெட்ட ஆட்டம் (குரு)), அற்புதமான ஒளிப்பதிவா , இரு வேடங்களில் வெளுத்து வாங்கி இருக்கும் ரஜினியின் நடிப்பா என்று பிரிக்கத் தெரியாது. ஆனாலும் அவனுக்கு மிகப் பிடித்த அவரது படங்களில் ஜானியும் ஒன்று. இப்போதும் எப்போதாவது இரவு நேரங்களில் இப்படம் போட்டால், சானல் மாற்றுவதே இல்லை இவன்.





பிறகு தொடங்கியது தான் மற்றொரு வரிசைப் படங்கள்.

தீபாவளிக்கு தளபதி, பொங்கலுக்கு மன்னன், தமிழ்ப் புத்தாண்டுக்கு அண்ணாமலை, அடுத்த பொங்கலுக்கு எஜமான் என்று வரிசையாகத் திருவிழாக்களை அவன் கொண்டாடத் தொடங்கினான்.





தீபாவளிக்கு வந்த தளபதியின் முன்னால் குணா ஊற்றிக் கொண்டது அறிந்து அவன் அவ்வளவு சந்தோஷப் பட்டான். அப்போது 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்று விஜயகாந்த் படமும் வந்தது. அது வந்த இழுப்பிலேயே மூச்சை நிறுத்திக் கொண்டது. அதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்பட்டது கிடையாது. தலைவர் படம் ஓடுகின்றது எல்லா படங்களையும் தூக்கி உடைப்பில் போட்டு, அது போதும்.

பின் பொங்கலுக்கு வந்த மன்னனைத் தாண்டி 'சின்னக் கவுண்டர்' ஓடியதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், தமிழ்ப் புத்தாண்டுக்கு வந்த அண்ணாமலை கூட வந்த சிங்கார வேலனையும், ரோஜாவையும் மீறி ஓடியதில் மகிழ்ந்து தான் போனான். பிறகு பார்க்கும் போது 'ரோஜா' ஓட வேண்டிய படம் தான் என்று புரிந்து கொண்டான். ஆனாலும் 'சிங்கார வேலனை' ஏற்றுக் கொள்ளவில்லை அவனது அன்றைய மனம்.

பின் தலைவரது பயணம் கொஞ்சம் கொஞ்சமாய் அரசியலின் திசையில் மாறத் தொடங்கியதும், படங்களும் அந்த நோக்கிலேயே வரத் தொடங்கியதும், அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவம் வரத் தொடங்கியதும் கொஞ்சம் குறையத் தொடங்கியது, அவனது வெறித்தனமான இரசிப்பு.

வீரா அளவுக்கு அருணாச்சலம் அவனுக்குப் பிடிக்கவில்லை. தலைவரும் கொஞ்சம் படங்களை நிறுத்திக் கொண்டதில் பிற நடிகர்களின் நல்ல படங்களையும் பார்க்கத் தொடங்கினான். முக்கியமாக கமலின் பல படங்கள். ஆனாலும் தலைவர் என்று ஒருவர் தான் இருக்க முடியும்.

பத்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு படம் கூட பார்க்கக் கூடாது என்று உறுதியோடு இருந்ததில் இருந்து அவன் விதிவிலக்கு எடுத்துக் கொண்டது ஒரே ஒரு படம் பார்ப்பதற்கு மட்டும் தான். அது 'முத்து'.

பின் வந்த பாட்ஷா, படையப்பா, பாபா, சந்திரமுகி எதுவும் அவன் தியேட்டரில் சென்று பார்க்கவில்லை. தொலைக்காட்சியில் பார்த்தது தான் படையப்பா. அதற்கு முன் கல்லூரி விடுதியில் தான் முதல் முறையாகப் பார்த்தான். விடுதியில் எல்லா வகைப் படங்களும் எல்லோருடைய ஹார்டு டிஸ்குகளுக்கும் வராது. சிலர் பார்ப்பார்கள், சிலர் பார்க்க மாட்டார்கள். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் படங்கள் அழிக்கப்படும். ஆனால் ஒரு வருடம் வரை கல்லூரி விடுதியில் சுற்றிக் கொண்டே இருந்தது 'படையப்பா' சி.டி. அப்போது தான் புரிந்தது நம்மைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது.

சந்திரமுகி பார்க்கையில் இந்தச் சிங்கத்தின் பார்வையில் இருக்கும் தீ அவ்வளவு சீக்கிரம் அணையக் கூடியதில்லை என்று புரிந்தது. என்ன ஒரு வில்லத்தனம்!!

பாபா பிறகு பார்க்கும் போது அது ஒன்றும் அப்படி மோசமான படம் இல்லை என்று அவனது இரசிக மனத்திற்குப் பட்டது.

மோக்ளியின் மனத்திற்கு இன்னும் புரிபடாமல் இருக்கும் ஒரு விஷயம், இன்னும் அவன் ஏன் 'சிவாஜி - THE BOSS' பார்க்கவில்லை என்பதும், அதை விட முக்கியம் அவன் பார்க்காதிருப்பதை ஏன் அவன் சீரியஸாக எடுத்துக் கொள்ளவிலை என்பதும் தான்.

ன்று சின்னச் சின்னப் பசங்கள் எல்லாம் 'இளைய தளபதி', சின்னத் தளபதி', 'புரட்சித் தளபதி', 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்றெல்லாம் போட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது அவனுக்குச் சிரிப்பு தான் வருகிறது.

ஏண்டா, உங்களுக்கே இதெல்லாம் ஓவராகத் தெரியவில்லை? எருமை மாட்டு மேல் சாக்பீஸால் 'மகாராஜா' என்று எழுதிக் கொண்டால் அது மன்னன் ஆகி விட முடியுமா? இப்படி வெட்கமே இல்லாமல் காப்பி அடிக்கிறோமே என்ற வெட்கம் கொஞ்சம் கூட இல்லை?

தலைவர் வரும் போது, இருந்த எந்த நடிகரைப் பார்த்து ஸ்டைல் செய்தார்? அவர் அவரது தனி இராஜபாட்டையில் செல்லவில்லையா? உங்களிடம் சொந்த சரக்கு என்று ஏதும் இல்லை போல். அதனால் தான் அவரது பாதையில் போக முயற்சிக்கிறீர்கள். உங்களுக்கே தெரிய வேண்டும்.

ஒருவரது நல்ல பண்புகளைப் பிரதியெடுத்துக் கொள்வது தவறில்லை. தலைவரது பெருந்தன்மை, எளிமை, பரோபகாரக் குணம், வேகம், ஆன்மீகம், இவ்வளவு பெரிய நிலையை அடைந்த பின்னும் இருக்கும் அடக்கம் (கன்னட திரை உலகில் இராஜ்குமார் மற்றும் குடும்பத்தினரின் திரை அரசியல் இங்கு இவர் செய்கிறாரா?) இதையெல்லாம் யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஏன் நானும் நீங்களும் கூட கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் அவரிடம் உள்ளன.

ஆனால் அந்த உயர் பண்புகளை கற்றுக் கொண்டு நமக்கான நம் பாதையில் செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு அவரது பாதையிலேயே போக முயல்வது, யானை அவிழ்த்துக் காயப் போட்டிருக்கும் அண்டர்வேரில் எலிக்குஞ்சு நுழைய முயல்வது போல். எவ்வளவு முயன்றாலும் உங்களால் அதைப் போட்டுக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல கீழே விழுந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.

போங்கடாங்க.......!!!







நன்றிகள் : http://www.rajinifans.com மற்றும் YouTube ரசிகக் கண்மணிகளுக்கு.

Wednesday, February 20, 2008

அந்த மோக்ளி என்ன ஆனான்...?

டந்த கால் நூற்றாண்டு மனித வரலாற்றிலோ, மானுட சகாப்தத்திலோ வியக்கத்தக்க மாறுதல்களை கொண்டு வந்ததோ என்னவோ, எனக்கு ஒரு முக்கியமான காலகட்டம் தான். அட, நான் பிறந்து வளர்ந்த குழந்தைப் பருவமும், சிறுவன் காலமும் எனக்கு மிக முக்கியம் இல்லையா? அதைத் தான் கூறினேன்.

எத்தனை எத்தனை சம்பவங்கள்...! எத்தனை எத்தனை நிகழ்வுகள்..! எல்லாவற்றையும் காலக் கரையான் அரித்துக் கரைக்கும் முன் ஓரளவாவது நினைவுக்குக் கொண்டு வந்து பதிவு செய்வது, 'பின்னாடி வர்ற சந்ததிகள் பார்த்து தெளிவா புரிஞ்சு நடந்துக்குவாங்க' என்ற அக்கறையில் என்று இங்கு அவ்வப்போது எழுத நினைக்கிறேன்.

'ஆமா, இவரு பெரிய இவரு.. இவர் சொந்தக் கதை எல்லார்க்கும் தெரியணுமாக்கும்' என்று நினைப்பவர்கள் அப்படியே ஓடி விடவும். யாருக்குத் தெரியும், பிற்காலத்தில் 'உங்கள் வாழக்கை வரலாறு எழுத வேண்டும்' என்று ஏதேனும் சிறு பெண், மைக், காமிராவுடன் வந்து, சாய் நாற்காலியில் சாய்ந்து, பேரன், பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் என்னை வந்து கேட்டால், அவளிடம் சொல்வதற்கும் எனக்கு ஞாபகம் இருக்குமா என்ன? அதற்காக என்று வைத்துக் கொள்ளலாமே!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனையெத்தனையோ நடந்திருக்கும். அவை அப்படியப்படியே மனதின் அடியாழத்தில் புதைந்து கொண்டிருக்கும். இன்றைய தினப்படி நாட்களில் நாளின் பெரும்பாலான காலம் கணிப்பொறியின் முகத்தைப் பார்த்தே கழிந்து கொண்டிருக்கின்றது. 'நான் இப்படி இருந்தவன் இல்லையே' என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம், ' வால் பையனாக' சுற்றிக் கொண்டிருந்த காலங்கள் கண் முன் நிழலாடுகின்றன.

பெரும்பாலும் யாருடைய பெயரையும், அடையாளத்தையும் மறைத்தே சொல்ல விழைகிறேன். எதற்கு வீணாகப் பொல்லாப்பு? என்னைத் தெரியாதவர்களுக்கு அவர்கள் முகம் தெரியாத மனிதர்கள். என்னை அறிந்தவர்களுக்கு அவர்கள் யாரென்று தெரியும். எனவே தான்..!

மற்றபடி உங்கள் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை சுவாரஸ்யமான, சோகமான, கோபமான, நெகிழத்தக்க அத்தனையும் என் நாட்களிலும் நிகழ்ந்துள்ளன. அவற்றைப் பகிர்தலே இதன் நோக்கம். மறைக்க வேண்டிய அத்தனை விஷயங்களும் கண்டிப்பாக மறைக்கப்படும். நான் ஒன்றும் காந்தி இல்லை. சுவாரஸ்யமான 'பகிர்ந்து கொள்ளலாம், தற்/பிற் காலங்களில் எனக்கும், யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது' என்று நான் நம்பும் விஷயங்கள் மட்டும் வெளி வரும்.

எவ்விதமான காலக் கணக்கும் வைத்துக் கொள்ளாமல், ஒரு வரிசை இல்லாமல் நினைவுக்கு வரும் போது வரிசைப்படுத்தலே சுவாரஸ்யமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

காவிரிக் கரையோரம் ஒரு வளப்பமான டவுனில், பிறந்து வளர்ந்த அந்தச் சிறுவன் அவ்வப்போது வந்து அவன் கதையைக் கூறுவான். நானும் ஓரமாய் அமர்ந்து உங்களோடு அவன் கதையைக் கேட்கிறேன்.

த்தாவது வரைக்கும் எங்க வீட்டில டி.வி. இல்லை. ஏதாச்சு பாக்கணும்னா பக்கத்தில இருக்கற சித்தப்பா வீட்டுக்கோ, இல்ல ரேவதிக்கா வீட்டுக்கோ தான் போகணும். தீவாளி, பொங்கல் சமயமுன்னா அத்த வீட்டுக்குப் போய்க் கறிக் கொழம்போட இல்லனா கரும்பு ஒடச்சுத் தின்னுகிட்டு பட்டிமன்றம், பேட்டினு பாத்துட்டு வீட்டுக்கு வர வேண்டியது.

சனிக்கெழமயினா பக்கத்துல கொமாரபாளயத்துக்கு எங்க பெரீமா வீட்டுக்குப் போய்ட்டு ஞாயித்துக் கிழமை சாயந்திரம் படம் முடிஞ்சு தான் வீட்டுக்கு வருவோம். அவங்க வீட்டுல தான் Dyanora டி.வி.இருக்குதே. சனிக்கெழம சாயங்காலம் இந்திப் படம் பாப்போம். அப்புறம் அடுத்தா நா காலயில ராகிக் கஞ்சி குடிக்க (எங்கக்கா நல்லா செய்வாங்க. எங்கம்மா அந்த மாரி செஞ்சு தர மாட்டேங்கறாங்க.)

காலைய்ல ஏழு மணிக்கு கரெக்டா ஜங்கிள் புக் பாப்போம். எப்படியாவது எழுந்திருச்சு பாத்திடுவோம். மோக்லி தான் எங்க ஹீரோ. அப்புறம் மத்தியானம் க்ரெக்டா சாப்புடப் போகும் போது மாநில மொழித் திரைப்படம்னு ஏதாவது ஒரு பாஷையில படம் போடுவாங்க. கீழயே இங்கிலீஷ்ல வேற எழுத்து ஓடிக்கிட்டு இருக்கும். படமும் புரியாது. எழுத்தும் மண்டையில ஏறாது. இருந்தாலும் சாப்புடற வரைக்கும் அதை தான் பாப்போம். அப்புறம் தூங்கிடுவோம்.

சாயந்திரம் எழுந்திருச்சா காபி இல்லனா டீ மிக்சரோட படம் பாத்துட்டு ஏழு இல்ல எட்டு மணிக்கு வீட்டுக்கு சைக்கிளலயோ இல்ல பஸ்ஸுலயோ காவிரி ஆத்த தாண்டி வந்திடுவோம். சோகமா படுத்து தூங்குவோம். அடுத்தா நா ஸ்கூலுக்குப் போகணுமே!

அப்புறம் தலைவர் ஃபேன் ஆனதுக்கப்புறம், வெள்ளிக் கெழம சாயங்காலம் எப்படா தலைவர் பாட்டு போடுவாங்கனு பாத்துக்கிட்டே இருப்பேன். சில சமயம் போடுவாங்க. சில சமயம் இருக்காது. கமல் பாட்டு போடுவாங்க. எந்திரிச்சு வெளிய போயிடுவம்ல..!

சில நாள்ல திடீர்னு ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க. அப்பல்லாம் என்ன பாக்கறதுனே தெரியாது. டி.வி.ல ஏதாவது இந்தியில பேசிக்கிட்டே இருப்பாங்க. அதயே பாக்க வேண்டியது தான்.

தளபதி படத்துல தலைவர் திரும்புறாப்ல ஒரு போஸ் குடுப்பார்ல. அத பொங்கல் வாழ்த்தா வாங்கறதுக்குள்ள செம ரகளையாகிப் போச்சு. எல்லா படமும் சீக்கிரமே வித்துப் போயிடும். மத்தவங்க பொங்கல் வாழ்த்தெல்லாம் அப்படியே இருக்கும். ஆர்.எஸ்.பி. பக்கத்துல ஒரு கட்டில் கடயில தான் கடசியில கெடச்சுது. யாருக்கும் அனுப்ப மாட்டேன். வாங்கி வாங்கி நானே வெச்சுக்குவேன்.