Showing posts with label நானும் கொஞ்ச புத்தகங்களும்.. Show all posts
Showing posts with label நானும் கொஞ்ச புத்தகங்களும்.. Show all posts

Wednesday, March 25, 2015

புத்தகம் - சில எண்ணங்கள்.

BookBozz என்ற இணைய வழி நூல் விற்பனையகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் புத்தகம் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். அங்கே எழுதியதை இங்கே ஒரு பிரதி எடுத்து வைக்கின்றேன்.

***

புத்தகம்.

சமீபத்தில் மொழி தொடர்பான இரு செய்திகளை அறிய நேர்ந்தது.
தமிழ்த் திரையிசைப் பாடல் இயற்றுனரான மதன் கார்க்கி, தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் சில சீரமைப்பு முயற்சிகளைச் செய்து வருவதாகப் படித்தேன். தற்காலப் பயன்பாட்டில் இருக்கும் எழுத்துக்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், நவீன கால மற்றும் வருங்கால மாற்றங்களுக்கு ஏற்ப நம் மொழியைத் தகவமைக்க அவருடைய யோசனைகள் பயன்படலாம் என்பது அவருடைய நோக்கம்.
மற்றொன்று, படுக மொழிக்கான தனித்துவ எழுத்து வடிவங்களை மற்றும் இலக்கணத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை படுக சமூகத்தினரிடையே எழுந்து வருக்கின்ற செய்தி. நீலகிரி வனப் பகுதியைச் சேர்ந்த பல பழங்குடியினரில் ஒரு குடி இம்மக்கள். நாடு விடுதலைக்குப் பின், அரசு அளித்த பற்பல சலுகைகளைப் பயன்படுத்தியும் தம் ஆர்வம் மற்றும் முயற்சிகளாலும் முன்னேறி வருகின்றனர். தம் நடைமுறை வாழ்வுக்குப் பெரும்பாலும் கர்நாடக வனப்பகுதியில் வாழ்ந்து வருவதால், இயல்பாகவே படுக மொழி கன்னட எழுத்துக்களையும் இலக்கணத்தையுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இன்று எழுந்து வரும் புதிய தலைமுறையினர் தமக்கான தனித்த வடிவத்தைத் தம் மொழி கொண்டிருக்க வேண்டும் என்ற இயல்பான விருப்பத்தைச் செயலாக்க முயல்கின்றனர்.
ஒரு மொழி என்பது அடிப்படையில் எண்ணப் பரிமாற்றத்திற்கான ஒரு கருவி. மொழி உருவாகத் தொடங்கிய காலத்தில் இந்த வரையறை பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த எளிமையான தேவை மட்டும் ஒரு மொழியின் இருப்புக்கான நோக்கமாகக் கருதப்படுவதில்லை. ஒரு மொழி வளர வளர, அதன் பயன்பாட்டுத் தளங்கள் விரிய விரிய, அம்மொழியைப் பயன்படுத்தும் சமூகம் பெருகப் பெருக, பிற சமூகங்களுடன் அச்சமூகம் கொள்ளும் நெடுங்கால உறவுகள் அம்மொழியை வளப்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்நிலையில் ஒரு மொழி, அச்சமூகத்தின் இறந்தகாலத்தின் பண்பாடு திரண்ட சாற்றைச் சுமக்கின்ற பெருங்குவளையாகவும், நிகழ்காலத்தின் உயிர்த்துடிப்பான கலந்துரையாடலுக்கான ரசவாத பானமாகவும், எதிர்காலத்தின் கனவுகளைப் புனைகின்ற கருவியாகவும் உள்ளது.
”நம்பிப் பணம் கொடுத்தேன்... இப்ப கேட்டா இல்லவே இல்லைங்கிறான்... நல்லா காது குத்திட்டான்...”. இந்த வாக்கியத்தில் இருக்கும் ‘காது குத்தல்’ என்ற சொற்பிரயோகம், ஒரு பண்பாட்டுச் செயலைக் குறிக்கின்றது. முற்காலத்தில் யாரிடமும் பொன் இருக்கின்றதோ, அவர்களே காது குத்திக் கொண்டு தம்மை ஆபரணங்களால் அலங்காரம் செய்து கொள்வார்கள். எனவே திருட்டுத் தொழில் செய்தவர்கள், காது குத்துபவர்கள் போல் வேடமிட்டுக் கொண்டு, பகலில் ஊருக்குள் யாரெல்லாம் தம்மை அழைக்கிறார்கள் என்று கவனித்து அவர்களுடைய வீடுகளைக் குறித்துக் கொண்டு போய் விடுவார்கள். பின்பு, இரவில் அந்த வீடுகளில் கன்னமிட்டுக் கொள்ளை அடித்து மறைந்து விடுவர். இதனாலேயே ஏமாற்றுதல் என்பதற்கு நம் மொழியில் காது குத்தல் என்ற மறைபொருள் சொல் வந்து சேர்ந்தது. எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ என்ற புதினத்தில் இது தொடர்பான அதிகத் தகவல்களைப் படிக்கலாம்.
ஒரு மொழி நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்பதை அறிவதற்கான ஒரு வழி, அதன் எளிமை. ஒரு வாகனத்தை ஓட்டப் பழகுகையில், விரைவே நம் இலக்காக இருக்கும். வாகனத்தின் இயக்கம் முழுக்க நமக்குப் புலப்பட்டு நம் கைகளுக்குப் பழகிய பின், விரைவு அல்ல, நிதானமான ஓட்டமே இயல்பான இயக்கமாக இருக்கும். அது போல, பழங்கால மொழி, பற்பல தலைமுறையினரால் செம்மைப் படுத்தப்பட்டு, செழுமை செய்யப்பட்டு, எளிமையாக இருக்கும். திருமணமான புதிதில் துணைவருக்கு நம் கருத்தைப் புரிய வைக்க, நம் மனநிலையைப் பகிர சில மணிநேரங்கள் எடுத்துக் கொள்ள நேரிடும். பல்லாண்டுகளுக்குப் பின் ஒரு சிறு செறுமலோ, புருவம் உயர்த்தலோ, உதடு பிரியாப் புன்னகையே போதுமானது, அல்லவா?
காற்றில் உலவும் ஓசையின் புற வடிவம் எழுத்து. எழுத்துக்களின் கூட்டிணைவு சொல். அவ்விணைவு, அச்சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு பொருளைத் தாங்கி நிற்கின்றது. சொற்களின்தொடர் சொற்றொடர் அல்லது வாக்கியம். வாக்கியங்களின் வரிசை பத்தி. பத்திகளின் தொகுப்பு புத்தகம். ஒரு புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் கூர்மையான நுனி கொண்ட ஒரு குறுவாள். ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலம், நம் மூளையின் மேல் அவ்வாட்களால் கீறிக் கொள்கிறோம் எனலாம். நவீன நரம்பியல், மனித மூளையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகக் கீறல்கள் இருக்கின்றனவோ, அவ்வளவு இயக்கமும் அறிவும் கொண்டதாக அம்மூளை விளங்கும் என்கின்றனர்.
நிறைய புத்தகங்களைப் படிப்பது நிறைய நிகர் வாழ்க்கைகளை வாழச் செய்கின்றது. காலத்தாலும் இடத்தாலும் ஒரு புள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் நம் உடல் மற்றும் எண்ணங்கள் இவ்வாழ்வை மீறிச் செல்ல இயலாது. ஆனால் நன்கு சொல்லப்பட்ட ஒரு புனைகதை மாற்று வாழ்க்கை ஒன்றில் நம்மை நிறுத்தும்.

நூல்கள், என்றும் விலகா நண்பர்கள். அவர்களை நிறைய சேர்த்துக் கொள்வோம்; வாழ்வை வண்ணமாக்குவோம்.





***





https://www.facebook.com/bookbozz/posts/812687202134759?pnref=story

Monday, November 22, 2010

குஜிலி!



பெருநிலக்கிழார்களையும், குறுநில மன்னர்களையும், பிரபுக்களையும் பாடிக் கொண்டிருந்த தமிழ்ப்புலவர்களின் வரிசையில் கடைசிக் கண்ணியாய் வந்தமைந்த பாரதியார், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்க் கவிதைகளை பொது மக்களின் புறம் திருப்பினார். மரபார்ந்த வடிவங்களில் கவிதைகள் தத்தம் பாடுபொருட்களை அரசவைகளில் இருந்து அரச மரத்தடிக்கு மாற்றிக் கொண்டன. சுதந்திரம் கிடைத்த பின் பெருகிய கல்விப் பரப்பின் அடியில் துளிர்த்த சமூகத்தின் பசியைத் தணிக்க 'தினத்தந்தி' முனைந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்புச் சங்கிலி போல் அமைந்தவை தாம், படிக்கவும், எழுதவும் கற்றிராத ஆனால் மெல்ல மெல்லத் தம்மைப் பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொள்ளத் துவங்கிய தமிழ்ச் சமுதாயத்தின் சந்து முனைகளில் வழங்கப்பட்ட முச்சந்தி இலக்கியம், பெரிய எழுத்துப் புத்தகம், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், தெருப் பாடல்கள் என்றெல்லாம் வழங்கப்பட்ட 'குஜிலி இலக்கியம்'.

பேராசிரியர் டாக்டர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் வெகுசிரமம் மேற்கொண்டு பற்பல பழைய நூல்களையும், பத்திரிக்கைகளையும் தெருப் புத்தகங்களையும் படித்து அநேக மேற்கோள்கள் இட்டு இந்நூலை எழுதியிருக்கிறார் என்பது ஸ்பஷ்டம்.

பொதுவாக சிந்து என்ற வகையிலேயே எளிதாகப் பாடும் வகையில் தெரு முனையில் நின்று இச்சிறு நூல்களை விற்போர் பாடுவதால், பாரதியாரும் 'காவடிச் சிந்து' வகையில் பாடல்கள் பாடியிருக்கிறார். அதனாலேயே 'சந்திலே சிந்து' என்ற இன்றைக்கும் ஜனப்பிரயோக வார்த்தை வந்திருக்கும் என்பது ஊகம்.

குஜிலி என்ற பெயர் தோன்றிய முறையிலிருந்து இவ்வகைப் பாடல்கள் வளர்ந்த விதம், பாடுபொருட்கள், பாடியோர், விற்பனை முறைகள், வாசகர்கள், தேய்வும் வீழ்ச்சியும் என்று அனைத்தையும் குறைவின்றி ஆய்ந்து சுவாரஸ்யமாகவும் விளக்கமாகவும் சொல்லியிருக்கின்றார்.

அக்காலத்தில் நடந்த ஜனங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடிய அத்தனை விஷயங்களையும் இந்த தெருமுனைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். அம்ஸவல்லிகேஸு, மடராஸ் ரெயில் கலகம், கள்ளப்புருஷன் ஆசையால் பிள்ளையைக் கொன்ற கனகம்மாள் துயரம், கிண்டிரேஸ் பாட்டு, சிலோன் கலகச் சிந்து, விளக்கெண்ணைக்கும் கிருஸ்னாயிலென்ற மண்ணெண்ணைக்கும் சண்டையின் கும்மி நல்லெண்ணெய் சமாதானப்படுத்துதல் போன்று பல விஷயங்களிலும் பாட்டுக்கள் எழுதியிருக்கிறார்கள். கோர்ட்டில் ஏதேனும் பிரபலமான கேஸ் நடந்து கொண்டிருக்கும் போது அன்றைன்றைக்குச் சாயந்திரமே தெருக் கவிஞர்கள் அன்றைய விபரத்தைப் பாடலாக்கி விற்றிருக்கிறார்கள்.

வழக்கம் போல் மேல்தட்டு ஜீவிகளால் 'துர்பாட்டுகள்' என்று ஒதுக்கப்பட்ட இவ்விலக்கிய வகைப் பாடல்கள் தேசியம் நோக்கித் திரும்பியதும் தேசநலன் விரும்பிகளால் வியந்தோதப்பட்டன. காந்திச் சிந்து, பகத்சிங் சிந்து, மாப்ளாக் கலவரச் சிந்து என்று பாடுகிறார்கள். வந்தது வினை. ஆங்கில அரசின் கவனம் இவற்றின் மேல் திரும்ப, பல்லாயிரம் குஜிலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்டதில் கணிசமானவை அழிந்தன.

மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்து இப்போது மிக மிக அரிதாக மாறி விட்ட குஜிலி இலக்கியத்தைப் பற்றி ஒரு வரலாற்றுப் பார்வைக்கு இந்நூல் மிக உபயோகமான பதிவு.

உதாரணத்திற்கு ஒரு பாடல்.

ஸ்ரீ வேணுகோபாலன் திருவடிகளே சரணம்

30 - 7 - 22க்கு ஆடி மீ 15உ பாளையங்கோட்டை பெரிய ஜெயிலிலிருந்து செம்புலிங்க நாடார் ஓடிப்போன பாட்டு

இஃது பாளையங்கோட்டை மில்டெரி லயன் புஸ்தக வியாபாரம் S.A.அளகிரிசாமி பாகவதர் பாடியது
பாளையங்கோட்டை செளராஷ்ட சபையார் பொருளுதவி செய்தது
திருநெல்வேலிப்பாலம் ஸ்ரீ காந்திமதி விலாஸம் பிரஸில், அச்சிடப்பட்டது
காப்பி முதற்பதிப்பு 2000
இதன்விலை 1922 அணா1
விருத்தம்

செம்புலிங்க நாடார்மேல் ஜெகமதில் பாட்டுரைக்க அம்புவியோர் இதைக் கேட்டு ஆனந்தமாய் மகிழ நம்பி எனும் வேலனுக்குத் தமையனாம் கணபதியை தும்பிக்கயுடையோனைத் துரிதமுடன் நமஸ்கரித்தேன்.
ஆல்ரெடி சொவுசுக்காரி - என்ற மெட்டு

செம்புலிங்கம் ஓடினசங்கதி சொல்லவேண்டாமா
அதைப்பாட வேண்டாமா
ஊரில்கேள்க வேண்டாமா
மனங்கொள்ள வேண்டாமா

அணாக்கொடுத்து புஸ்தகம்வாங்கிப் பார்க்க வேண்டாமா
பார்த்துநல்ல குற்றங்குரை தெரிய வேண்டாமா

புஸ்தகத்தை வாங்கிப்பார்த்தால் புலன்வெளியாகும்
கவலைகள் தோணும்
யோஜனை உண்டாகும்
புத்தி தடுமாடும்

செம்புலிங்கம் செய்த விஷயம் செவ்வையாய்த் தோணும்
வம்புவந்த வகையதுவும் தென்புடன் காணும்

பாளையங்கோட்டை பட்டாளம் லயன் அளகிரிசாமி
பாடினேன் இதை
தேடியும் நீங்கள்
நாடியுங் கேட்டு

பாடிப்பாடி நாடுகளில் கூடிப்பேசிடுவீர்
ஆடி ஓடிய செம்புலிங்கத்தைத் தேடிக்கண்டிடுவீர்
நொண்டிச் சிந்து

கொள்ளை செய்த குற்றத்துக்காக- மெத்த சள்ளையில்லாமலிருக்க செம்புலிங்கத்தை- சரியான தென்டனை செய்து- சர்க்கார் அடிதண்டாவைக் காலில்மாட்டி- பக்குவமாய்ப் பாளையங்கோட்டை- புது ஜெயில் தன்னிலல்லோ அடைத்து வைத்து- பந்தோபஸ்துகள் செய்து- அவரைப் பகலும் இரவுமல்லோ பாறாவில் வைத்து- சிலகாலம் பார்த்து வந்து அண்ணே- இந்த விதம் நாள்களித்து வரும்போது- எவ்வித காரணத்தாலோ- அங்கு ஜூலை மீ முப்பதாந்தெய்தி யன்று- ஞாயிற்றுக் கிழமை இரவில்- இந்த செம்புலிங்க நாடாரும் காசிநாடாரும்- தேவமார் ரெண்டு பேரும்- அந்த ஜெயிலுக்குள்ளேயிருந்து வெளியேரி- தந்திரமாய் ஓட்டிவிட்டார்- இந்த நல்ல விவரத்தை முன்பக்கத்தில்-அனைவோர்களும் தெரிய யான் செப்பியிருக்கிறேன் அளகர்சாமி தந்திதை தந்தினனா.

***

புத்தகம் : முச்சந்தி இலக்கியம்

புத்தக வகை : கட்டுரைத் தொகுப்பு.

ஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி

கிடைக்குமிடம் : நூற்கடைகள்.

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்.

விலை : 140 ரூ.

***

Pic Courtesy :: http://upload.wikimedia.org/wikipedia/commons/3/36/Indra_deva.jpg

Wednesday, November 10, 2010

பின் தொடரும் நிழலின் குரல்.



சென்ற ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டுக்கு, கைக்குப் பொருந்தாத வளையல் மாற்ற ப.செ.பார்க்குக்குச் சென்றார். கூடப் போயிருந்தேன். மழை வரும் போல் காற்று சில்லிட்டது. தீவாளி மயக்கம் தீராத கட்டில் கடைகள் ஏறக்கட்டப்பட்டிருந்தன. நேரம் எட்டைத் தொட்டது. வேலா புத்தக நிலையம் சாத்தியிருந்தது. வளையல் கடைக்கு அவர் சென்று விட, வேலாவுக்கு எதிரில் இருந்த மற்றொரு சிறு நூற்கடையில் நான் ஒதுங்கி கண்ணாடிக் கூண்டுகளுக்குள் காகிதங்களை விசாரித்தேன்.

பெரும்பாலும் கிழக்கின் நூல்கள். கொஞ்சம் ப்ராடிகி. கோலம் கோர்ப்பதையும் ஜோசியம் பார்ப்பதையும் தோசை வார்ப்பதையும் சொல்லிக் கொடுக்கும் என்றும் பச்சை ஒல்லி நூல்களுக்கு இடையில் 'பின் தொடரும் நிழ்லின் குரல்' கேட்டது. வாங்கிக் கொண்டேன். 290 ரூ. தமிழினி பதிப்பகம். கூட அம்பானி வாழ்வுச் சுருக்கும்.

ஞாயிறு இரவில் துவங்கி நள்ளிரவு இரண்டரை வரை படித்துப் பின் திங்கள் முழுதும் படித்து நேற்று கடைசி கொஞ்சம் பக்கங்களையும் இரவில் படித்து விட்டு இன்று எழுதுகிறேன். இப்பதிவு நாவலைப் பற்றிய எவ்வித மதிப்புரையோ, விமர்சனமோ அல்ல. படித்து முடித்து யோசிக்கும் போது தோன்றிய எண்ணங்கள் மட்டுமே.

லைப்பின் பொருள் என்ன? நம்மைப் பின் தொடர்ந்து வருகின்ற நிழலின் குரல். அந்த நிழல் என்ன? ஓர் ஒளியின் முன் நாம் நிற்கையில் நம் பின்னே உற்பத்தியாகின்ற நம் வடிவ எல்லை. உண்மையில் ஆசிரியர் குறிப்பிடும் நிழல் அது தானா? நாவலுக்குள் செல்லச் செல்ல வேறு அர்த்தங்களுக்கும் நம்மைக் காட்டுகின்றது.

கம்யூனிசம் என்ற ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்காப்படுகின்ற சோவியத் யூனியன் வீழும் போது, (சிலர் ருஷ்யாவில் அமலாக்கப்பட்டது மார்க்ஸ் சொல்லிய கம்யூனிசமே இல்லை என்று சொல்கின்றார்கள்) அச்சித்தாந்த ஆட்சிக் காலத்தில் அதைச் சொல்லி நடத்தப்பட்ட பேரழிவுகளுக்கு என்ன பொருள்? அதில் வாழ்விழந்த மக்கள் பெருங்கூட்டங்களுக்கு என்ன பதில்? என்ற அடிப்படைக் கேள்விக்கு ஆசிரியர் இந்திய அளவில் பொதுவுடைமை இயக்கம் இயங்கும் விதம் மற்றும் காலப்போக்கில் அது ஜனநாயக வழிக்குத் திரும்ப முற்படும் காலகட்டத்தைக் கொண்டு எழுதியிருக்கும் நாவல் இது.

கம்யூனிசம் பற்றியும் ருஷ்யாவில் நிகழ்ந்தன பற்றியும் எதுவும் தெரியாது என்பதால், அவற்றுக்குள் செல்லாமல் ஒரு படைப்பு என்ற ரீதியில் மட்டும் இதை அணுகுகிறேன். ஆனால் நாவல் அரசியல் பேசுவதால் அதைப் பற்றியும் வரும்.

பொதுவான நாவல் என்ற கட்டமைப்புக்குள் இதைப் பார்க்க முடியவில்லை. ஒரு சீரான கட்டுக்கோப்புக்குள் பயணப்படும் கதை மாந்தர்கள், அவர்களது மனநிலைகள் என்று துவங்கி முடியும் நாவல்களுக்குள் இது ஒரு மாறுபட்ட வடிவம் கொண்டது. கதைப் போக்கின் ஊடாக நாடகங்கள் வருகின்றன; கவிதைகள் வருகின்றன; கடிதங்கள், உரையாடல்கள் என்று பல (உத்திகள் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை.) உருவுகளில் கதை நகர்கின்றது.

அருணாசலம் என்ற தொழிற்சங்கவாதியிடம் வீரபத்திரப் பிள்ளை என்ற இயக்கத்திலிருந்து துரத்தப்பட்ட, இயக்கப் பதிவுகளில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்ட குடிக்குத் தன்னை இழந்து சக்கடையில் மரிக்கும் ஒரு முன்னாள் தோழரின் கைப்பதிவுகள் கிடைக்கின்றன. அவையே மேற்சொன்ன புனைவுகளாக நாவலில் அமைகின்றன.

வீரபத்திரப் பிள்ளையைப் பற்றித் தேடிப் போகையில் அருணாசலம் சந்திக்கின்ற நிகழ்வுகள் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மனப்பிறழ்வுக்கு ஆளாக்குகின்றன.

ஸ்டாலின் புகழ் பாடிக் கொண்டிருந்த அக்காலத்தில் பிள்ளைக்கு சைபீரியப் படுகொலைகள் பற்றியும் புகாரின் என்ற ருஷ்யப் புரட்சியாளரைப் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன. அதனைக் கொண்டு கேள்வி கேட்டதால் இயக்கம் அவர் மீது புழுதி வாரித் தூற்றி வெளியே எறிகின்றது. இது காலம் காலமாய் நடப்பது தான் என்பது போல் கெ.கெ.எம். பிள்ளைக்குச் செய்ய, கெ.கெ.எம்.மிற்கு நாராயணன் செய்கிறார்.

நாவலில் வரும் தர்க்க விவாதங்கள் தெளிவாக உள்ளன. ரப்பர் தொழிற்சங்கத்தை உருவாக்கிய கெ.கெ.எம். இறுதியில் கிருஷ்ண பக்தராவதும் (அவர் கடைசியில் வந்து சேரும் வயதான காதலி கிறித்துவராய் இருப்பினும்), அருணாச்சலம் பலிபூஜைக்கு வருவதும் ஆசிரியரின், மரபின் மேலான ஆர்வத்தைக் காட்டுகிறது.

வீரபத்திரப் பிள்ளை எழுதியதாக வரும் சிறுகதைகள் ருஷ்யப் பனிநிலத்திற்கே கூட்டிச் சென்று விடுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அருணாச்சலம் மனநலவிடுதியில் படித்து உள்ளேயே விழுந்து விடுகின்ற நாடகம், ஆசிரியருக்கு மிக எளிதாகக் கைவசப்பெறும் அங்கத வகையில் எழுதப்பட்டிருப்பது அபாரம். ஜெயமோகன் என்ற இளம் எழுத்தாளரும் அருணாசலத்திற்கு எரிச்சலைக் கொடுத்துக் கொண்டு நாவலில் வருகின்றார்.

இறுதியில் மனுஷகுமாரன் வருகின்ற சிறுகதையில் அவனது வாசகங்களாக வருபவை, நாவல் மண்ணில் ஊன்றி நிற்கின்ற ஆணிவேரைச் சொல்கின்றன.

நாவலை முடிக்கும் போது தலைப்பின் கலைடாஸ்கோப் பரிமாணங்கள் தெரிகின்றன.

வீரபத்திரப் பிள்ளையைப் பின் தொடர்ந்தது ஒரு நிழலின் குரல். அது, ட்ராட்ஸ்கியை ஒழித்த அதே ஆயுதத்தால் ஒழிக்கப்பட்ட, சைபீரிய ரயில் நிலையத்தில் கொத்துக் கொத்தாய்க் கும்பல் கும்பலாய்க் கொல்லப்பட்டுக் கிடத்தப்பட்ட எளிய மக்களின் பிணக் குவியல்களில் தேவகுமாரனைக் கண்ட புகாரினின் குரல். அருணாசலத்தைப் பின் தொடர்வது மற்றொரு நிழலின் குரல். அது, ஐம்பது வருடங்களாய் இரும்புத்திரையின் பின் நிகழ்ந்த உண்மைகளை மறைத்து மேடைகளிலும் எழுத்துக்களிலும் முழங்கி வந்த சொந்த இயக்கத்தவரை எதிர்த்து அறம் தேடிய வீரபத்திரப் பிள்ளையின் குரல். அருணாசலத்தின் மனப்பிறழ்வுக் காலத்தில் பின் தொடர்ந்தது ஒரு நிழலின் குரல். அது மனைவி நாகம்மையின் குரல். ருஷ்யக் கனவுகளிலும், பிள்ளையின் புனைவுகளிலும் கரைந்து தறிகெட்டுத் திக்கெட்டும் சிதறிப் போய்த் தன் மாய நினைவுகளில் தொலைந்திருந்த மனதை மீட்டுக் கொணர்ந்த காமத்தின் தீராக் குரல்.

அறம் என்பதன் பொருள் என்ன? மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்ற சித்தாந்தங்களுக்கு ஏற்படுகின்ற வெற்றி தோல்விகளைக் கொண்டு அறத்தை நிர்ணயிக்க முடியுமா? நீதிக்கான இன்றைய பொருள் நாளை செல்லுபடியாகுமா? என்றென்றைக்குமான அறம் என்று ஏதேனும் உள்ளதா? தியாகத்தின் மதிப்பு என்பது எதைச் சார்ந்தது? போன்ற கேள்விகளின் மேலே நின்று செதுக்கப்பட்ட ஒரு பெரும்புனைவு இந்நூல்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டுத் தாங்க முடியாமல் மக்கள் குமுறி அழும் கண்ணீரே அந்த ஆட்சியை அடியோடு அழிக்கும் ஆயுதமாகும்.

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்.

இக்குறட்பாக்களின் சாரத்தில் மிளிர்கின்றது ஜெயமோகர் காட்டுகின்ற தரிசனம்.

***

புத்தகம் : பின் தொடரும் நிழலின் குரல்

புத்தக வகை : நாவல்.

ஆசிரியர் : ஜெயமோகன்

கிடைக்குமிடம் : நூற்கடைகள்.

பதிப்பகம் : தமிழினி பதிப்பகம்.

விலை : 290 ரூ.

Wednesday, April 21, 2010

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.



சென்னையில் தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் ஏப்ரல் 30 வெள்ளி மாலை 5:45 மணிக்குத் திரிசக்தி பதிப்பகத்தினரால் பனிரெண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக என் சிறுகதைத் தொகுப்பான 'கிளி முற்றம்' வருகின்றது.

எனவே, சென்னையில் அந்நன்னாளில் இருக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் குறித்து வைத்துக் கொண்டு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமாய் வரவேற்கிறேன். சென்னையில் இருக்க வாய்ப்பில்லாதவர்கள், எப்படியாவது முயன்று நிகழ்ச்சிக்கு வரப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இடம் :: தேவநேயப் பாவாணர் அரங்கம், சென்னை - 2.

நாள் :: 30.ஏப்ரல்.2010.

நேரம் :: மாலை 5:45.

Friday, April 02, 2010

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - நிலாரசிகன்.



சென்ற முறை சென்னை சென்றிருந்த போது, நிலாரசிகனை ஒரு சனிக்கிழமைப் பகல் பொழுதில் சந்தித்தேன். நிறைய புத்தகங்களைச் சிபாரிசித்து வாங்கச் செய்தார். அவற்றுள் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பாகிய 'யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகளை'ப் படித்து என் கருத்துக்களை மின்னஞ்சலில் செலுத்தினேன். பதிவு செய்து கொள்வதற்காக இங்கேயும் ஏற்றுகிறேன். அனுப்பியது மார்ச் 24.

பி.கு. :: தனி அஞ்சலில் எழுதிய போது செதுக்கிய சில நிர்வாணக் கருத்துகளைக் கொஞ்சம் போர்த்தியே இங்கே காட்டுகிறேன்.

***

அன்பு நிலாரசிகன்,

'யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகளை' இன்றுடன் மூன்றாவது முறையாகப்
படித்து முடிக்கிறேன். முதன்முறை சென்னையில் வாங்கிய அந்த சனிக்கிழமை
இரவு மேற்கு மாம்பலத்தில். இரண்டாம் முறை பவானியில் மொட்டை மாடியில்
படுத்து, நிலா பார்த்துக் கொண்டு. மூன்றாவது இன்று அதிகாலை செவ்வாய்
கழன்று புதன் பூத்த போது.

இது போன்ற உப காரணங்களை மீறி, ஒவ்வொரு கதையும் எனக்குள் சொன்ன சொற்களைக்
கீழே இறைக்கிறேன்.

தலைப்புக் கதை:

ஒரு சோகக் கதை. மும்பையின் டைரி திருவல்லிக்கேணி ப்ளாட்பாரத்திற்கு வந்த விதத்தையும் சொல்லியிருக்கலாம். இரண்டு பெண்களும் ஒருவர்தானா என்ற கேள்வியை வாசகரிடமே விட்டிருக்கலாம். டைரி எழுதும் பழக்கம் கொண்ட பெண் குழந்தை வறுமைக் குடும்பத்தில் இருக்குமா என்று என் பொதுப் புத்தி கேட்கிறது.

சங்கமித்திரை:

அழகான பேர். கிராமத் தினக்கூலிக் குடும்பத்தில் இப்படி ஒரு பெயர்? குழாய் பேண்ட் ஹீரோ 'மயிலுவின் டாக்டரை' நினைவுபடுத்துகிறான். இத்தனை பழைய ப்ளாட் வேண்டுமா? முடிவு எனக்கு விளங்கவில்லை. நாயகன் மித்திரை 'ஆன்ட்டியை'க் கூடவே கூட்டிச் சென்று வைத்துக் கொள்ளப் போகிறானா? மஞ்சள் சூரிய வெளிச்சத்தில் லாங் ஷாட்டில் காதலனும் காதலியும் நடந்து போவதைக் காட்டிக் கும்பிடும் படத்துக்கு ஒத்து வரலாம். நிஜத்திற்கு?

வேட்கையின் நிறங்கள்:

மிகப் பிடித்த கதை. எளிதில் தொடத் தயங்கும் கரு. இன்னும் கொஞ்சம் வலுவாகச் சொல்லியிருக்கலாம். இன்னும் துல்லிய விவரணைகள் சேர்த்திருந்தால், இன்னும் கொஞ்சம் பாராட்டியிருப்பேன்.

வேலியோர பொம்மை முகம்:

ஈழக் குழந்தை என்று உடனே புரிகின்றது. பாகுபாடு காட்டாத பிள்ளை மனம் என்பதில் கதை நிற்கிறது.

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்:

கதையின் நிகழ்வுகளைக் கால வரிசையில் சொல்லாமல், கலைத்துப் போட்டதின் மூலமாக ஆசிரியர் மேலதிகமான என்ன எதிர்பார்க்கிறார் என்று கேட்க வைக்கிறது.

ப்ரியாக்குட்டி:

ட்ரமடிc.

சேமியா ஐஸ்:

சித்தி கொடுமை. இன்னும் ஏன் இந்த கரு?

வால்பாண்டி சரித்திரம்:

இதுதான் இயல்பாக இருக்கின்றது. ரொம்பப் பிடித்திருக்கிறது.

சைக்கிள்:

மறுபடியும் சோகம். கூடவே நொச்டல்கிc.

தனலட்சுமி டாக்கீஸ்:

Cஇனெம Pஅரடிசொ..? சோகம் தான்.

தாய்மை :

இது எனக்குப் பிடித்திருக்கிறது. சிறுகதையின் முக்கிய விதியான 'கதையின் கடைசித் திருப்பத்தைத் தலைப்பில் சொல்லாதீர்கள்' மீறல்.

பட்டாணி:

நன்றாக இருந்தது. ஆனால் பண்ணையார், மனைவி சோரம் போதல், அப்பாவி மாட்டிக் கொள்ளுதல், சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஆலம்:

நன்று. வெகு வேகமான கால ஓட்டம்.

தூவல் :

பேனா வாழ்வில் வெவ்வேறு தருணங்களில் ஊடுறுவி வருவது, பிடித்திருக்கின்றது.

சம்யுக்தை:

மற்றுமொரு மரணக் கதை. திகட்டுகிறது சோகம்.

அப்பா சொன்ன நரிக்கதை:

குழந்தைப் பாலியல் வன்முறை. இன்னும் வலுவாகச் சொல்லியிருக்கலாம்.

மை லிட்டில் ஏலியன் ப்ரெண்ட்:

ரொம்பப் பிடித்த கதை இது தான்.

***

அன்பு நிலாரசிகன்,

நீங்கள் இந்தக் கதைகளை எழுதிய காலத்திலிருந்து இப்போது வெகுவாக முன்னகர்ந்திருப்பீர்கள். உங்களுக்கே இப்போது இவற்றைப் படிக்கும் போது 'ஒரு போதாமையை' உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒட்டு மொத்தமாகத் தொகுப்பைப் படிக்கும் போது, தோன்றியதை இங்கே சேர்க்கிறேன்.

அ. ஏன் எல்லாக் கதைகளும் சோகத்தைப் பிரதானப்படுத்துகின்றன? மீதி எட்டு ரசங்களையும் தொட்டு எழுதலாமே.

ஆ. கிராமம் என்றால் சோகம். நகரம் என்றால் துரோகம். இப்படி ஒரு மனப்பதிவு எப்படி உங்களுக்கு வந்தது என்று தெரியவில்லை. கிராமத்திலும் சந்தோஷம்,
நகரத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள் என்று நம்பலாமே.

இ. குழந்தைகள் பேசுவதாக நிறைய கதைகள் இருந்தன. ஆனால் வாக்கியங்கள் குழந்தை சொல்வது போல் இல்லை. நிலாரசிகன் சொல்வது போல் அத்தனை மெச்சூர்டாக இருக்கின்றன. இயல்பே போய் விடுகின்றது, அதனால்.

ஈ. துல்லிய விவரங்கள் எதிலும் இல்லை. படிப்பவர்களை உள்ளே உணரச் செய்யும் தகவல்கள் அநேகமாக எதிலுமே இல்லை.

உ. இக்கதைகளி எழுதும் போது, நீங்கள் கவிதை மனநிலையிலிருந்து கதைக்கு நகார்ந்து கொண்டிருக்கும் ட்ரான்சிஷன் பாதையில் இருந்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது. சம்பவங்கள் நிறைந்த கதையாகவும் இல்லாமல், அழகான கவிதையாகவும் இல்லாமல், கவிதை முலாம் பூசிய சுருக் கதைகளாக இருக்கின்றன.

ஊ. நீங்கள் ஒரு கதை'சொல்லி'யாகக் காட்சியளிக்கிறீர்கள். நான் விரும்புவது கதை'காட்டியை'.

எ. ஒரு கதைக்கு உயிர் கொடுப்பதே வசனங்கள் தான். அவற்றை மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறீர்கள். அவை இல்லாமயால், எனக்கும் கதைக்கும் நடுவே ஒரு திரை போல் உணர்கிறேன்.

ஏ. ஏன் எல்லாக் கதைகளும் தன்மை நிலையில் இருக்கின்றன? மாற்றலாமே!

ஐ. பேச்சுத்தமிழா, எழுத்துத்தமிழா என்றா குழப்பம் கடைசி வரை விலகவேயில்லை போல் தோன்றுகிறது.

இறுதியாக,

இப்போது நீங்கள் கதைகள் எழுதினால் (உதாரணம், சமீப உங்களது மாய யதார்த்த முயற்சி) டைரிக் குறிப்புகளின் எந்தக் கதையையும் விட பெட்டர் என்று சொல்வேன்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.

பி.கு. அடுத்த முறை சென்னை வரும் போது, அடி வாங்காமல் தப்பிப்பேனா..? :)

***

புத்தகம் : யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

புத்தக வகை : சிறுகதைகள்.

ஆசிரியர் : நிலாரசிகன்

கிடைக்குமிடம் : நூற்கடைகள்., EZeeBookshop

பதிப்பகம் : திரிசக்தி பதிப்பகம்.

விலை : 70 ரூ.

Wednesday, September 02, 2009

காமக் கடும்புனல். (A)



வ்வருட ஈரோடு நூல் அழகத்தில் வாங்கிய ஒன்று மகுடேசுவரனின் 'காமக் கடும்புனல்'. திருப்பூரில் பின்னலாடைத் தொழில் துறையில் ஏற்றுமதி ஆலோசகராகப் பணியாற்றுவதாகப் பின்னட்டை மடிப்பு சொல்கிறது. நாஞ்சில்நாடன் முன்னுரை எழுதியிருக்கிறார்.

காமஞ் சான்ற பெருமகன் அல்லன்

அதன் நுண்ணியல் கலைகளில்
வல்லானும் அல்லன்

தனித்திருக்கும் எளிய கோழை
இக்கவிதைகளின் ஆசிரியன்

என்று சொல்லித் தப்பித்து துவங்குகின்ற இந்நூலின் அத்தனை கவிதைகளும் பாடுவது காமம் என்ற மெல்லிய ஓர் உணர்வு பற்றி. அது ஆக்ரமிக்கும் தனித்திருப்பவனின் மனதின், உடலின் வெக்கைகள் பற்றி; அது எழும் போது கட்டவிழ்த்துப் பாயும் பெரும் திராவக வெறி பற்றி; அது படர்வதில் துடிக்கின்ற இளமை பற்றி; அது மெல்ல மெல்ல விழித்து, கை கால்கள் நீட்டி, ஊளை இட்டு, கூச்சல் போடத் துவங்கி, வேகம் உணர்ந்து எழுந்து, துடித்து, கர்ஜித்து சக்தியையெல்லாம் திசையெங்கும் வெள்ளமென விசிறியடித்துப் பிறகு தளர்ந்து, அடங்கி, சுருண்டு அப்புறம் மெல்ல தூங்கப் போகும் அடிப்படை முயங்கலைச் சொல்கின்றன.

காமக் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்
தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான்
நீணாக நறுத்தண்டார் தயங்கப்பாய்த் தருளினாற்
பூணாக முறந்தழீஇப் போததற்கான் அக கைலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என் தோழி
அருமழை தரல் வேண்டில் தருகிற்கும் பெருமையளே
அவனுந்தான், ஏனல் இதணத் தகிற்புகை பிண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரின் அவ்வரைத்
தேனின் இருலென ஏணி இழைத்திருக்குங்
கானகல் நாடன் மகன்!

என்ற குறிஞ்சிக் கலி 36-வது பாடலின் தலை வார்த்தையைத் தலைப்பாகக் கொண்டுள்ள இந்நூல் இத்தனை சிரமமாக இல்லாமல் எளிமையாகக் கேட்கிறது ::

வாய்யா வா
வரலாற்றறிஞரே வா

சரித்திரத்தின்
பழுப்புத்தாள் புரட்டிச் சொல்லு

போர்க்களத்தில் வென்ற படை
தோற்ற தேசத்து மகளிரை
என்ன செய்தது?

*

ஒவ்வொரு முறையும்
வெளியேற்றப்படுகிறாய்
வைபவத்திற்கு முன்பாகவே

தளரா நம்பிக்கையில்
மீண்டும் மீண்டும் நுழைகிறாய்
விசேஷ அமுதைப் பருகும் வெறியில்

முன்னதாகப் போய்விடுகிறாய்
அல்லது தாமதித்துவிடுகிறாய்

எப்படியாவது
ராஜாவைக் கண்டுவிடு

அன்று
ராஜபோஜனம்தான்

சில, சமூக வழக்கில் வெகு பச்சையென சொல்லப்படும், ஆனால் அந்தரங்கத்தில் மிக மிக நெருக்கமானச் சிலவற்றைச் சொல்கின்றன.

மாணவர் விடுதி
திரைப் பெண்டிர் சுவரொட்டி

மங்கையர் விடுதி
வெள்ளரி முள்ளங்கி கத்தரி

*

மகளுக்குச் சிறு வயது
வந்திருப்பதும் தகுதி குறைந்த வரன்

மணம் முடித்துவிடவே
தீர்மானிக்கிறாள் தாய்

இரவில் உறங்காது புரளும் மகள்
போர்வைக்குள்
விரலால் நிரடிக் கொண்டிருப்பது
தெரிந்த பிறகு

*

பிரம்மச்சரிய அறை
மிட்நைட் மசாலா

எழுகுறி நோக்கிக்
கடிது விரையுது
உடையவர் கை

*

வியர்த்துப் போன முகங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள, அவ்வப்போது தரையிறங்குகிறார்.

ஆருலே அது
என்ற காட்டுல உட்கார்றவ

சொக்கியா
செரிசெரி
பொறவு
சோளக்கொல்லைப் பக்கம்
வா

அவ்வப்போது கவிஞனுக்கேயுரிய சமூகக் கோபங்கள் தவிர்க்கவேயியலாமல் வந்து விடுவது எதிர்பார்க்காத முத்தங்கள்.

கவனித்திருக்கிறேன்

பெண்ணாசையால்
மிதமிஞ்சி ஆடியவர்கள்

பெண்தயவில்
மலஜலம் கழிக்க நேர்ந்ததை.

கோபம் வரச் செய்தது ஒரே ஒரு கவிதை.

பொதுத் தொலைபேசியகம்

அமர்ந்திருந்தவள்
பொது மகள் போலிருந்தாள்

அணுகி
'எவ்வளவு?' என்றேன்

'ஒரு தடவை பண்ணா
ஒண்ணே கால் ரூபா'

மிக மலிவாகத் தோன்றியது
எனக்கு

கடைசிக் கவிதை ஒன்றில் சரணடைந்து விடுகிறார்.

ஆசனத்தில்
சீழ் வடியும் புண்களுடன்
படுத்த படுக்கையாய் இருந்தேன்

செவிலிப்பெண் ஒருத்தியின்
கண் துஞ்சாத
கழிவு கண்டு முகம் சுளியாத
சேவகத்தால் நலமுற்றேன்

பெண்மையின் உயர்பொருளை
அன்று புரிந்துணர்ந்தேன்

இக்கவிதைகளை
அவளிடம் மறைக்க விரும்புகிறேன்.

களிப்பேருவகை(A)யில் பதுங்கிப் பதுங்கி எழுதும் எனக்கு, காமக் கடும்புனலின் துளிகள் பாக்கெட்டில் கல்கண்டுகள் போல் இனிக்கின்றன.

புத்தகம் : காமக் கடும்புனல்

புத்தக வகை : கவிதைகள்.

ஆசிரியர் : மகுடேசுவரன்.

கிடைக்குமிடம் : United Writers, 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை 86.

பதிப்பகம் : United Writers.

விலை : 100 ரூ.

Saturday, April 25, 2009

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்.

ழுதும்போது எந்த அளவு தற்செயல்களை நம்பியிருக்கிறோம் என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் வியப்பு தருவதாகும். அத்தனை எழுத்தாளர்களும் படைப்புத் தொழிலை மிகவும் மர்மமானதும், மிகவும் புனிதமானதும் மிகவும் அபூர்வமானதுமான ஒரு நிகழ்வு என்று கருதுவதும் இதனால்தான்.

(பக்கம் 68.)


புரியாத வார்த்தைகளில், விளங்காத எழுத்துக்கள், 'மனச்சோர்வு' என்ற வார்த்தை இல்லாமல் கதைகள் இருக்காது, அலுப்பு, சலிப்பு, சோகம், துயரம் போன்ற பொதுப்புத்தி அமங்கல வார்த்தைகள் புழங்கும் தமிழின் மற்றொரு தளத்தில் இயங்கும் எழுத்துக்கள் பற்றி மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகளைக் களைய எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் இப்புத்தகம், நாளை எழுதத் துவங்கும் முன் இன்று எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்றாக நினைக்கிறேன். அவை மட்டுமின்றி பொதுவாக வாசித்தல், அதிலிருந்து சாறுகளை உறிஞ்சி கொள்ளுதல் பற்றியும் எழுதியிருக்கிறார்.

அறிமுகம், அடிப்படைகள், வரலாறு, இலக்கிய இயக்கங்கள் என்ற நான்கு பகுப்புகளில் தமிழில் நவீன எழுத்திலக்கியம் பற்றி சொல்கிறார்.

எப்படிப் படிக்க வேண்டும், யாரெல்லாம் முடிசூடி ஆண்டார்கள், கண்டுகொள்ளப்படாத சக்ரவர்த்திகள், வணிக எழுத்து, இலக்கியத்தின் அவசியம் தான் என்ன, அழகியல் இயக்கப் பெயர்கள் (நவீனத்துவம், பி.ந., etc..), போலிகள், தலைமுறை தலைமுறையாகத் தாவி வரும், மாறி வரும் எழுதும் முறைகள் பற்றியெல்லாம் எளிதாக சொல்லிச் செல்கிறார்.

ஒரு விமர்சகராக சிபாரிசு செய்கின்ற சிறுகதை, நாவல், கவிதைகள், பொழுதுபோக்கு படைப்புகள் ஆகியவற்றை ஒரு முறை படிப்பது, எப்படி எழுத வேண்டும், யார் யார் எப்படி எழுதி இருக்கிறார்கள், ஒவ்வொருவரின் தனித்திறமை என்பது எது, சொல்லும் முறை எப்படி, எப்படி கவனத்தைக் கவர்வது, எழுதுபவர்களின் சூழல் அவர்களை எந்தளவில் பாதிக்கிறது என்பவற்றைப் புரிந்து கொள்ள அவசியம் என்று படுகின்றது.

பின்னிணைப்பாக கொடுத்துள்ள கலைச்சொற்கள் இலக்கிய ஊடகங்களில் இலங்கும் வார்த்தைகளை அறிமுகம் செய்து கொள்ள உதவுகின்றன.

இதுவரை நமக்கு முன் இருந்தவர்கள், இருப்பவர்கள் செய்தது என்ன என்பதை ஓரளவாவது (இது எனக்காக!) தெரிந்து கொண்டு எழுத உட்கார்வது, ஒரு தெளிவு கிடைக்க உதவும் என்பது உறுதி.

***

புத்தகம் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

புத்தக வகை : கட்டுரைகள்.

ஆசிரியர் : ஜெயமோகன்.

கிடைக்குமிடம் : உயிர்மை பதிப்பகம்.

பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம். நூற்கடைகள்.

விலை : 175 ரூ.

Thursday, March 19, 2009

இரு நூல்கள்.

ப்போது சமீபமாக இரண்டு ஈ-நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்... இல்லை, அப்படி சொல்வதை விட செம்மையாக ரசித்து ருசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம். நாற்கரச் சாலைகளில் செல்வதைப் போல் சும்மா ஜிவ்வென்று பறக்கின்றன. துவங்கினால் முடிக்கும் வரை மூச்சு விடவும், மூச்சா விடவும் மறந்து கதைக்குள்ளேயே கலந்து விடுகிறோம்...அதாவது நாம் கலந்து விடுகிறோம்.

அ. Brother and Sister.



1920-ல் வெளிவந்த நாவல் என்று சொன்னால் சத்தியமாக நம்பமாட்டீர்கள். எனென்றால் 1921-ல் தான் வெளிவந்தது.

ஜோஸஃபின் லாரன்ஸ் என்ற அம்மணி எழுதி இருக்கிறார். ஏழு குழந்தைகள் இருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கடைசி இரு குழந்தைகளான ரோட்ஸ் மற்றும் பெட்டியைச் சுற்றி நகரும் புனைவு இது. ரோட்ஸின் ஆறாவது பிறந்த நாளுக்கான கொண்டாட்ட ஏற்பாடுகளில் துவங்கி அவர்கள் இருவரும் பள்ளிக்குச் செல்லத் துவங்கும் வரையான கதை. ஓர் பெண்ணால் மட்டுமே எழுத முடிகின்ற குழந்தைகளைப் பற்றிய சரளமான எழுத்து இது. ஹாலிவுட் படங்களைப் போல் அவர்கள் பள்ளிக்குச் சென்றதைப் பற்றி மற்றொரு நாவல் எழுதி இருக்கிறார்.

இந்தப் புத்தகம் எழுபத்தாறு பக்கங்கள் கொண்டது என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனெனில் இது 76 பக்கங்கள் மட்டுமே கொண்டது!

இங்கே பெறலாம்...!!!


ஆ. Yellow on the Outside, Shame on the Inside



அன்சான் சி என்பவர் எழுதியிருந்தாலும் 'ச்சீ...' என்று சொல்லும் வகையில் இன்றி, 'ச்சோ.... ச்வீட்', என்று சொல்லும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் கி.பி.2008-ல் தான் வெளியிடப்பட்டது. தன்னுடைய தளத்திலேயே இலவசமாக இறக்கிக் கொள்ளச் சொல்லும் இவர் ஆர்வமாக நமது கமெண்ட்டுகளை அனுப்பக் கேட்டு, லைலா போல் 'இப்டி..இப்டி..' சிரிக்கிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் ஆசியக் குடும்பங்களின் போலி அலங்காரங்களை, ஆசியத்தன்மையை அறுத்தெறிந்து விட்டு, அமெரிக்கத்தன்மையை அணிந்து கொள்வதில் அரங்கேற்றும் அபத்தங்களை அழகாக அவிழ்க்கிறார்.

இன்னும் படித்து முடிக்கவில்லை. ஆனால் படித்துக் கொண்டிருக்கும் போதே, புன்னகைத்துப் புன்னகைத்து முகம் மேல் முக்கால் இஞ்சுக்கு சிரிப்பு செருகிக் கொள்கிறது. ஆசியர்கள் என்று பொதுவாகச் சொல்லி இருந்தாலும், 'மஞ்சள் மேனிப் பாவைகள்... தங்கம் மின்னும் அங்கங்கள்...' தேசத்தவரான தென் கிழக்காசிய வியட்நாம், லாவோ, ஜப்பான், தைவான், கொரியா நாட்டினரை வாரிக் கவிழ்த்து தூக்கி வீசுகிறார்.

படித்தவரையிலுமே 'சூப்பர்..!' என்பதால், முடிக்கும் முன்னமே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

இங்கே கிடைக்கும்!

ஆசிரியரின் தளம்.

Friday, February 13, 2009

சென்னையின் கதை.

நாட்டுக் கோட்டை செட்டியார்களுக்கும், யூதர்களுக்கும் இன்னா லிங்..?

மூர் மார்க்கெட்.... - மூர் யார்..?

சிந்தாதிரிப் பேட்டை - இன்னா பேருப்பா இது..?

வண்ணாரப் பேட்டைன்னா இன்னா தொவைக்கற ஏரியாவா..?

வால் டேக்ஸ் ரோடு....?

Persewacca.... எந்த பேட்ட தெர்யுதா..?


சென்னைக்கு முதல் வருகை நன்றாக நினைவிருக்கிறது.

உறவினர் குடும்பத்துடன், மதுரையில் பாண்டியனில் ஏறி, பயண இரவு முழுதும் தூங்காமல் வந்ததும், நுங்கம்பாக்கம் ரெயில்வே க்வார்ட்டர்ஸில் தங்கியதும், ஏர்போர்ட் சென்று முதல் சென்ட்ரலைஸ்ட் கட்டிடத்திற்குள் குளிர்ந்ததும், தி.நகர் சரவண பவனில் 25 ரூ.க்கு முழு தட்டைத் துடைத்ததும், ஆட்டோவின் சீட்டுக்குப் பின் இருக்கும் இடுக்கில் ஒடுங்கிக் கொண்டு பின்னாடியே வந்த அப்போதைய பிரபல ஒல்லி பஜாஜ் Sunnyயைப் படித்துப் படித்துச் சிரித்ததும், ஒரு கல்யாண மண்டபத்தில் ரோஸ் மில்க் குடித்ததும், இரவில் தாலி கட்டிய வாழைமர சேட்டு கல்யாணத்தில் மூன்று முறை ரசகுல்லாவையே மொக்கியதையும் மறக்க முடியாது.

அடுத்தது +2வில். இன்பச் சுற்றுலா.

மெரினாவில் அவசரமாக பாத்ரூம் வர, ஒதுங்க இடமின்றி, கடலுக்கு இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்தோம். அடையாரில் கொஞ்ச நேரம் நிற்கையில் சாக்கடை மேலேயே குடிநீர் டெப் திறந்திருந்ததைப் பார்த்தோம். பாட்டில் நீர் பைசா அதிகம் என்று, கோகோ கோலா வாங்கி, அதை அடுத்தவர் குடித்து விடக் கூடாதென்று, விழித்துக் கொண்டே வந்து மகாபலிபுரம் போகும் சாலையில் இரவில் விரைகையில், கார் மிரண்டு திரும்பி நின்று கொண்டிருக்கையில் தனியாக கழன்று விழுந்திருந்த தலை ஒன்றைப் பார்த்தோம். எழும்பூர் ம்யூஸியத்தில் மகா திமிங்கில எலும்புக்கூடு பார்த்து பயந்தோம்.

பின் மற்றுமொரு முறை கொட்டித் தீர்த்த மாமழையில் சாக்கடை புரண்டோடிய பாரிமுனையில் கால் பதித்து நடந்து சென்றேன் அப்பாவுடன்!

சின்னச் சின்ன சம்பவங்களை மறைக்க கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சென்னையிலேயே வாசம்.

சொந்தக் கதையைச் சொல்வதை விட, இந்த நகரத்தின் கதையைச் சொன்னாலாவது நல்லது என்ற நினைப்பால், இத்துடன் நிறுத்தி விட்டு மேலே செல்கிறேன்.

கி.பி. 1921-ல் எழுதப்பட்ட ஒரு சிறு நூல். எழுதியவர் Glyn Barlow. ஐம்பது பக்கங்கள் தான் வந்திருக்கிறது. 1639-ல் பூந்தமல்லி நாயக்கரிடம் இருந்து திரு. ப்ரான்சிஸ் டேவால் வாங்கப்பட்ட 'மதராஸ்' என்ற ஒரு குக்கிராமத்தின் கதையைச் சொல்கிறது இந்நூல். முழுக்கதையையும் அல்ல. சில சம்பவங்கள். சில சண்டைகள். சில கட்டிடங்கள். சில சர்ச்சுகள். அத்துடன் சென்னையின் பல பெயர்க்காரணங்களை விளக்கிச் சொல்கிறது.

அசோகமித்திரன் அவர்களின் சென்னை பற்றிய நூலையோ, நரசய்யா அவர்களின் 'மதராஸ்பட்டின'த்தையோ படிக்காததால் இந்நூல் எனக்குப் பிடித்திருக்கிறது.

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் இதில் இருக்கின்றன. எழுத்து நடை பிரமாதம். சலிப்பு ஏற்படுத்தவேயில்லை. இன்று அலுவலகத்தில் யதேச்சையாகத் துழாவும் போது பார்க்கக் கிடைத்து, வீட்டிற்கு வந்து ஒரே மூச்சாகப் படித்து, இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்.

ஒரே ஒரு மொழிபெயர்ப்பைச் சொல்கிறேன்.

சாந்தோமின் வரலாறு தெரியுமா உங்களுக்கு...? கீழே படியுங்கள்.

பழைய மெரினா ::



சுனாமி மெரினா ::



சாந்தோம் கம்பெனியரால் 1749-ல் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கதை வெகு சுவாரஸ்யமானது.

இந்நாட்களில் சாந்தோம் மற்றும் மைலாப்பூர் இரண்டு பெயர்களும் ஒரே பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால அந்நாட்களில் இப்பெயர்கள் இரண்டும் இரண்டு வித்தியாசமான இடங்களைக் குறிப்பிடும். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே இலங்கி வரும் ஊராகக் கருதப்படும் மைலாப்பூர், மிகப் பழமையான இந்திய ஊர். சாந்தோம் பதினேழாம் நூற்றாண்டு போர்த்துக்கீசிய அமைவிடம். செயிண்ட் தாமஸ் தி அபோஸ்டல் மயிலையில் தான் புதைக்கப்பட்டதாக ஒரு நம்பிக்கை இருந்தது. போர்த்க்துக்கீசியர்கள் முதலில் இந்தியா வந்த போது, அவர்களுள் சிலர் மயிலைக்கு அவரது மிச்சங்களைப் பார்க்க வந்தனர்.

அவர்கள் சில பாழடைந்த கிறித்துவ ஆலயங்களையும், செய்ண்ட் தாமஸ் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தையும் கண்டனர்.

விரைவில் அந்த இடத்தில் ஒரு வழிபாட்டிடம் எழுப்பப்பட்டது. அதனைச் சுற்றிலும் ஒரு போர்த்துக்கீசிய நகரம் வளர்ந்தது. காலப்போக்கில் அந்த நகரம் ஒரு வணிபப் பகுதியாக மாற, கோட்டை மதிலால் சூழப்பட்டு, இந்திய நகரமான மயிலாப்பூருக்கு இணையாக மாறியது.

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியா வந்த ஒரு இத்தாலிய வணிகர், சாந்தோமைப் பற்றி 'நிலத்தின் மேல் தான் கண்டவற்றுள் அழகிய நகரம்' போல் இருந்ததாகவும், மயிலாப்பூர் களிமண் சுவரால் சூழப்பட்ட ஒரு இந்திய நகரமாகவும் குறிப்பிடுகிறார்.

ஆகாவே மயிலாப்பூர் சாந்தோமின் கறுப்புப் பகுதியாக இருந்தது. ஆனால் பின்னாட்களில் இரண்டும் ஒன்றிணைந்தன.

ப்ரிட்டிஷார் செய்ண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்த போதே, போர்த்துக்கீசியரின் பலம் குன்றத் தொடங்கி இருந்தது; மற்றும் அவர்களது செல்வாக்கு வளர வளர, போர்த்துக்கீசியரின் ஆதிக்கம் சாந்தோமில் மேலும் குறையக் காரணமாக இருந்தது.; அதன் இயல்பான பின் நிகழ்வாக மயிலாப்பூரை உள்ளடக்கிய சாந்தோம் அவர்களது ஆக்ரமிப்பிற்கு ஆளாகியது.

சாந்தோமின் முதல் வெற்றியாளர் மண்ணின் அரசரான கோல்கொண்டாவின் இஸ்லாமிய மன்னர்.அடுத்து ப்ரெஞ்சுக்காரர்கள் அதனை கோல்கொண்டாவிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்; இரண்டு வருடங்களுக்குப் பின் கோல்கொண்டா, டச்சுக்காரர்களின் துணையுடன் ப்ரெஞ்சுக்காரர்களிடம் இருந்து மீண்டும் தன்வசப்படுத்தினர். டச்சுக்காரர்கள் தங்களது உதவிக்கு கிடைத்த பரிசோடு திருப்திப்பட்டுக் கொண்டதால், சாந்தோமை கோல்கொண்டாவின் ஆதிக்கத்திற்கே விட்டு விட்டார்கள். ப்ரிட்டிஷாரின் சுய அறிவுரையின் பேரில் கோல்கொண்டா அங்கிருந்த கோட்டைகளை அழித்தது. பின் அந்நகரத்தை விற்பனை செய்வதாக அறிவித்தது. கிழக்கிந்தியக் கம்பெனியார் அதனை வாங்கத் தயாராயினர்; போர்த்துக்கீசியரும். ஆனால் ஒரு பணக்கார முஸ்லீம் கோல்கொண்டாவின் முஸ்லீம் அதிகாரிகளுக்காக சாந்தோமை குறைந்த கால குத்தகைக்கு எடுத்தார். அடுத்து 'பூந்தமல்லி இந்து கவர்னருக்கு' லீஸுக்கு விடப்பட்டது. பிறகு ஒரு பெரும் விலைக்கு மீண்டும் போர்த்துக்கீசியரின் கைகளுக்கே சென்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் முகலாயப் பேரரசரான ஒளரங்கசீப் கோல்கொண்டா ராஜ்யத்தைக் கைப்பற்றியதால், போர்த்துக்கீசியர் சாந்தோமை விட்டு வெளியேறா விட்டாலும், அப்பகுதி முகலாய சாம்ராஜ்யத்தின் ஓர் அங்கமாக மாறி, முகலாய ஆட்சியின் கீழ் வந்தது. ஒளரங்கசீப்பின் மறைவிற்குப் பின் பேரரசு உடைய, ஆற்காட்டு நவாப் தம்மை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டு, சாந்தோமை தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

கி.பி.1749-ல் ப்ரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றியிருந்த மதராஸை மீண்டும் ப்ரிட்டிஷாரிடமே கொடுத்து விட வேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் ப்ரான்சுக்கிடையே, பாரீஸில் உடன்படிக்கை கையெழுத்தானது. அதனால் மனம் நொந்து போன புதுச்சேரியின் துய்ப்ளேக்ஸ் மதராஸை இழந்ததற்கு ஈடாக சாந்தோமை கைப்பற்றிக் கொள்ள திட்டங்கள் தீட்டினார். செய்ண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த ப்ரிட்டிஷாருக்கு இந்த விவரங்கள் தெரிந்து போய், ப்ரெஞ்சுக்காரர்கள் போன்ற தீவிர எதிரியை இவ்வளவு அருகில் பக்கத்து ஊர்க்காரனாக வைத்திருக்கத் துளியும் விரும்பாமல், துய்ப்ளேக்ஸை முந்திக் கொண்டு ஆற்காட்டு நவாப்புடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். அதாவது, 'மயிலாப்பூர் மற்றும் சாந்தோமை' நவாப் கம்பெனியாருக்குக் கொடுத்து விட வேண்டியது. கம்பெனி அதற்கு இணையாக நவாப்பிற்கு பணமும், ஆட்களும் அவர் கேட்கும் போதெல்லாம் கொடுத்து உதவும். இப்படியாக சாந்தோம் ப்ரிட்டிஷாரின் ஆளுகைக்குள் வந்தது. இடையில் சில காலம் Count Lally தலைமையில் ப்ரெஞ்சுக்காரர் வசமும், மைசூரின் ஹைதர் அலியிடமும் சென்றாலும், ப்ரிட்டிஷாரிடமே அது தொடர்ந்து இருந்து வந்தது.

டுத்த முறை பட்டினப்பாக்கத்தில் இருந்து, சாந்தோம் சர்ச் குறுகிய வளைவில் நுழைந்து பீச் ரோட்டுக்குப் போகும் போது, நினைத்துப் பாருங்கள்.

ரு சுய தம்பட்டம் :

அ. சென்னையைப் பற்றிய வாழ்த்துக் கவிதை ::

ஆகஸ்ட் 22 - சென்னை மாநகரின் 369-வது (3 + 6 = 9!) பிறந்த நாள். ஆகவே கொண்டாட ஒரு கவிதை...!

ஐஸு ஹவுஸு ட்ராக்காண்ட நிக்குற ஃபிகரு கில்மா வய்ஸு!
பாக்க சொல்ல பளக சொல்ல அது பாடி ரொம்ப நைஸு!

டாவடிக்குற பொண்ணுக்கெல்லாம் டைசன் மாரி அப்பன்! அது
பாவம் போல பாக்க சொல்ல பத்திக்குறானே குப்பன்!

தள்ளினு வர பொண்ணிருந்தா ஜில்லுங்குது பீச்சு வெயிலு!
அள்ளினு போ ஆத்து தண்ணினு அசத்துது அந்த குயிலு!

ஈ.ஸி.ஆரு தோப்புக்குள்ள ஒதுங்கும் ஜோடி வேஸ்டு!
ஏ.ஸி. போட்ட தேட்டருக்குள்ள இருக்குது நம்ம டேஸ்டு!

ஸ்பென்ஸரு, சிட்டி சென்டருக்குள்ள லுங்கி கட்டினு போனா,
பாக்கறதில்ல, பாயா ஊத்தற ஆயா போலி ருக்கற மீனா!

கோயம்பேட்டுக்கு போனதால கொறயுது கார்னர் மவுஸு!
கோலி தண்டு காலந் தொட்டு கொறயல எங்க ரவுஸு!

ட்ரிப்ளிகேன் மெட்ரோ ட்ரூப்பு, ஐலண்ட் குப்பம் கானா க்ரூப்பு மோதிக்கிட்டா வாடா!
க்ரிப்பில்லாம பாட சொல்லோ காது கிளிஞ்சு போனா, எறியலான்டா சோடா!

மோதிப் புட்ச்ச கறுத்த மீன வறுத்து விக்கப் பாத்தா,
பாதி வெலைக்கு கேக்க றான்டா, சொல்லு 'போடாங் ***'!

ரிச்சா, ஆட்டோ, டாக்ஸி, ட்ரெயினு எத்து வேணா உண்டு!
ரிச்சா போக ஆசப்பட்டா இருக்கு ஏர்போர்ட் ரெண்டு!

கானா, டிஸ்கோ, பாப்பு, ராப்பு, சல்ஸா, ஜிம்மு, தாச்சி,
போனா ஃபிட்டாகும், அல்லாம் துட்டாகும், பர்ஸு பணமா காச்சி!

கூவமிருக்கு கோட்டயிருக்கு தில்லிருந்தா போலாம் மன்சா!
பாவம் செய்ய பயமில்லனா எப்பயும் வாளலாம் குன்ஸா!

சப்பாத்தி எட்த்து சால்னா தொட்டு நாஷ்டா துன்னா போதும்!
அப்பால பாக்கலாம், டயர்டானேன், ஹாயா தூங்கப் போணும்!

Advanced Birthday Wishes, Chennai...!!!


ஆ. எழுதிய கதையில் இருந்து சில வரிகள் ::

....

இருவருக்கும் கிடைக்கின்ற லீவுகளில் மெரினா பீச், சமாதிகள், செத்த ம்யூஸியம், உயிருள்ள ம்யூஸியம், மயிலை கோயில், பறக்கும் ரயில், அஷ்டலட்சுமி கோயில், எலியட்ஸ் பீச், கிண்டி ரேஸ் கோர்ஸ் (7-ம் நம்பர் இன்னிக்கு கெலிச்சிடுச்சு சார்!), மின்சார ரயில் (கள்ளழகர் வைகையில் எறங்கும் போது, இருக்கற கூட்டம் மாதிரி இல்ல இருக்கு!), 21G, 12B, கோயம்பேடு, மால்கள், சென்ட்ரல், மவுண்ட் ரோடு ஹிக்கின் பாதம்ஸ், பர்மா பஜார் (சார்! சி.டி., டி.வி.டி., எல்லாம் போதுமா சார்? நம்ம கையுல நல்ல குட்டிங்க இருக்குது! சுத்தம். எந்த நோயும் இருக்காது! எல்லாம் டீஸ்ண்டான கேள்ஸ்! அவருக்கு 100 ரூபா தான். வர்றியா சார்?), ஹை கோர்ட், மண்ணடி லாரி ஆபீஸ்கள், ஹார்பர், தி.நகர் எறும்பு மனிதர்கள், கடைகள், புரசை துணிக் கடை.. இல்லை. துணிக் கடல்கள், திருவல்லிக்கேணி பாதசாரி புத்தக கடைகள், லஸ் கார்னர் ஆழ்வார் புத்தக விரிப்பு, சாந்தோம் சர்ச், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் (அப்பாடா! இது ஒண்ணு தான் எங்க ஊர்ல இருக்கற மாதிரி இருக்கு!), L.I.C., The One and Only கூவம்.....

தருமமிகு சென்னையின் பெருமைகளைக் கிராமத்து Migrantக்கு காட்டவேண்டியது, தலைமுறை சென்னைவாசியின் தார்மீகக் கடமை என்றே உறுதியாக நம்பினேன்.

....


ழைய மதராஸின் சில படங்கள் ::

பழம் சென்னை - 1

பழம் சென்னை - 2

***

புத்தகம் : The Story of Madras.

புத்தக வகை : வரலாறு.

ஆசிரியர் : Glyn Barlow.

கிடைக்குமிடம் : இணையம்.

பதிப்பகம் : http://www.manybooks.net/

விலை : இலவசமுங்கோ....!!!!

Wednesday, February 04, 2009

ஆகாயப் பந்தல் - கடக்கும் நூற்றாண்டின் காலடிகள்.

சென்ற முறை திருச்சியில் இருந்து 'திரிச்சி' வரும் போது, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில், ஒரு குப்பைத் தொட்டியின் அருகே அமர்ந்தவாறு பேசிக் கொண்டிருந்த போது, நண்பர் தமிழ்ப்பறவை சில புத்தகங்கள் கொடுத்தார். அவற்றுள் ஒன்று இந்நூல் - ஆகாயப்பந்தல்.

முப்பது எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாகத் தந்துள்ளார் எஸ்.ஷங்கரநாராயணன்.

டாக்டர் சு.வேங்கடராமன் ஐந்தாம் பக்கத்தில் ஆரம்பித்து சிறுகதையைப் பற்றியும், அதன் இலக்கிய இலக்கணங்களைப் பற்றியும் எடுத்துக் கூறி விட்டு, எல்லோரையும் போல் புதுமைப்பித்தன், கு.ப.ரா.வில் துவங்கி மெளனி. சிட்டி, மணிக்கொடி காலங்கள், லா.ச.ரா, கல்கி, தி.ஜா., கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், சு.ரா., வரை சொல்லி விட்டு, யாரையாவது சொல்லாமல் விட்டு விட்டோமோ என்று கவலைப்பட்டு விட்டு, 'மேலே நான் காட்டியவர்கள் மட்டுமே சாதனைக்காரர்கள் என்று முடிவுகட்டி விடக் கூடாது.' என்று தப்பித்து விடுகிறார். பின், ஓவ்வொருவர் எழுதிய கதைகளையும் முழுதாகச் சொல்லி (இப்படி செய்யவே கூடாது என்பது என் தாழ் எண்ணம்..!) விளக்கி, இருபத்தெட்டாம் பக்கத்தில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் சொல்லி முடிக்கிறார்.

பொழுது விடியட்டும் (கண்ணன் மகேஷ்), ஒளியற்ற பிரதேசத்தில் (மோகனன்), தம்பி (கெளதம சித்தார்த்தன்), மத்தேயு 11:28 (அ.எக்பர்ட் சச்சிதானந்தன்), நனையத் தோன்றுகிறவர்கள் (கார்த்திகா ராஜ்குமார்), ரசிகர் (கர்ணன்), ஒட்டடைத் தாத்தா (ஞானசூரியன்), கை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள் (சுப்ர பாரதிமணியன்), பேசுதல் (பாவண்ணன்) ஆகிய கதைகள் எனக்கு இரண்டு வேலை நாட்களுக்குப் பிறகும் நினைத்திருந்தன.

முதல் பரிசைக் கொடுப்பாயா என்று கேட்டால், 'இரண்டாய்த் தருவீர்களா?' என்று கேட்டு விட்டு, எக்பர்ட்டுக்கும் கார்த்திகாவுக்கும் கொடுப்பேன்.

வடிவத்தில் கொஞ்சம் வித்தியாசம் கதையாக, ஜோசப் லூயிஸின் 'அம்மா சொல்லியிருக்கக் கூடிய கதை' (ஒவ்வொரு பக்கத்திற்கும் சில பத்திகளில் ஒரு வார்த்தைக்கு எண் குறிப்பு இட்டு, கீழே parallel story தனியாக ஓடுகின்றது. )மற்றும் allegoriel story ஆக வரும் ஜெயடேவியின் 'எறும்புகள்' கதையும் இருந்தன.

புத்தகம் : ஆகாயப் பந்தல் - கடக்கும் நூற்றாண்டின் காலடிகள்.

புத்தக வகை : சிறுகதைத் தொகுப்பு.

ஆசிரியர் : எஸ்.ஷங்கரநாராயணன் (தொகுப்பு).

கிடைக்குமிடம் : உதயகண்ணன்,
புதிய எண் : 10, கல்யாணசுந்தரம் வீதி,
பெரம்பூர், சென்னை - 21.

பதிப்பகம் : உதயகண்ணன்,
புதிய எண் : 10, கல்யாணசுந்தரம் வீதி,
பெரம்பூர், சென்னை - 21.

விலை : 125 ரூ.

Friday, January 23, 2009

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா.

நெல்லையில் இருக்கும் நண்பனின் தங்கை திருமணம் பாபநாசம் கோயிலின் அருகே நடந்தது. அதற்காக அதிகாலையில் வீட்டில் இருந்து கிளம்பி, வேனில் கொஞ்சம் தூக்கத்தோடு மிதந்து, பாய்கின்ற ஆற்றங்கரையில் திருமணத்திற்கு கலந்து கொள்வதற்கு முன் நினைவுகள் பறந்தன.

பாபநாசம்... அப்பர் டேம்... அம்பை... ரகுபதி... மதுமிதா... ரத்னா... சுஜாதா...பிரிவோம், சந்திப்போம்..!

சிறுவனாக இருந்த போது அத்தை வீட்டில் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்த்துக் கேட்டுக் கொண்டே படித்த ஞாபகங்கள்.

விசா பப்ளிகேஷன்ஸ்ஸில் இருந்து வாங்கிய இரண்டு பாகங்களையும் இந்த வருட சென்னை நூல அழகத்தில் வாங்கிப் படித்த போது, அத்தனை இனிமை..!

இளமை துள்ளத் துள்ள ஒரு சூப்பர் காதல் கதை..! நமக்கு ஆச்சரியம் தருகின்ற எழுத்துக்கள். தொடர்கதையாக வந்த படியால், அத்தியாயக் கடைசி வரிகள் கொக்கி போடுகின்றன.

ஆனந்த விகடனில் இவருக்கு அண்ணா சாலையில் பெரிய கட் அவுட் வைக்கப்பட்டது. 'அமெரிக்க சென்று வந்து எழுதுங்கள்' என்று எஸ்.பாலசுப்ரமணியன் அனுப்பி வைத்து இரண்டாம் பாகம் முளைத்து வந்தது.

இப்போது படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். பயமாக இருக்கின்றது!

புத்துணர்ச்சி பெற படிக்க வேண்டிய நாவல், Fresh வாத்தியாரின் எழுத்துக்களில்..!

புத்தகம் : பிரிவோம்... ...சந்திப்போம் 1 & 2

புத்தக வகை : நாவல்.

ஆசிரியர் : சுஜாதா.

கிடைக்குமிடம் : விசா பப்ளிகேஷன்ஸ்.

பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்.

விலை : 65 & 115 ரூ.

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - எஸ்.ரா.

ப்போது நான் மெட்ரிக்கில் படித்துக் கொண்டிருந்தேன். தெளிவான கிறித்துவப் பள்ளி. டை, இன் செய்த ஷர்ட், ட்ராயர் என்று ஒரு மாதிரி துரைத்தன ஆடைகள் அணிந்திருக்க வேண்டும். மூன்றாம் வகுப்பிலோ, நான்காம் வகுப்பிலோ, பேச்சுப் போட்டி என்று நினைக்கிறேன். முதல் பரிசாக ஒரு புத்தகம் கொடுத்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கின்றது. காரணம், புத்தகம் சாரதா தேவி பற்றியது. இராமகிருஷ்ண மடத்தின் ஒரு முப்பது பக்க ஜூ.வி. சைஸ் புத்தகம்.

பக்கம் முழுதும் ஒரு ஓவியப்படம் இருக்கும். கிடைத்த இடைவெளியில் அந்த சம்பவம் கலந்த கதை சொல்லப்பட்டிருக்கும். இர்ண்டாம் பக்கத்திலேயே கூமார்புகூர் கிராமத்தின் ஓவியம் வரையப்பட்டு, திண்ணையில் சாரதாவின் தந்தை பூணூல் அணிந்த, தொந்தி கொண்ட, ஹுக்கா பிடிக்கும் பிராமணராகவும் அவரது மனைவி இழுத்துப் போர்த்தி உள்ளே நின்று கொண்டிருக்க, திண்ணையில் அமர்ந்து வழிப்போக்கருடன் பேசுவதாக இருக்கும். பின்புலத்தில் வரையப்பட்டிருந்த கிராமப் படம் ஒரு வித சிலிர்ப்பான நிலையைத் தந்தது.

ஆங்காங்கே ஒற்றைப் பனை மரங்கள்; சணல் வயல்; வானில் பறக்கும் நாரைக் கூட்டப் புள்ளிகள்; மஞ்சள் தீற்றல் அடிவானம்.

இன்றும் அப்படி ஒரு பரவச நிலையைத் தருகின்றது அந்த ஓவியம்.

பக்கங்களைப் புரட்டிப் படிக்கையில், சிறு வயது சாரதா புடவையைக் கட்டிக் கொண்டு மாதா வழிபாடு செய்வதும், இள பரமஹம்ஸரையே கணவராகக் கை காட்டுவதும், நோய் வாய்ப்படும் போது நீலக்காளி மாதா அவளை ஆதுரமாய்க் கோதுவதும், முதலையை மிதித்து விடுவதும், பஞ்சம் என வந்தவர்க்கு உணவிடும் காட்சியும் நினைக்க நினைக்க பூர்வ வங்காளத்திற்கே போய் விடுவது போல் தோன்றும்.

பதேர் பாஞ்சாலியில் சிறுமி துர்காவை அதே போன்ற புடவையில் காணும் போதும், தீம் இசையைக் கேட்கும் போது மீண்டும் மீண்டும் அதே வங்காள நினைவுகள் காரணமின்றி என்னுள் தூண்டப்படுகின்றன.

சில வாரங்களுக்கு முன் பீமப்பள்ளியில் சி.டி. கடைகளுக்குச் சென்று சில உலக சினிமாக்கள் வாங்கி வந்தேன். City of God, Irreversible, Pather Panjali, The Color of Paradise மற்றும் சில.

ரே எடுத்திருக்கும் முதல் படமான பதேர் பாஞ்சாலி (சாலையின் பாடல்) ஓர் அழகான படம். வங்காள கிராமத்தின் ஒரு குடும்ப வாழ்க்கையைச் சொல்கிறது. துர்கா மற்றும் அபுவின் பரிசுத்த அன்பின் மேல் அவர்களது நிலைமையைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் படம் எஸ். ராமகிருஷ்ணனைப் பலமாகப் பாதித்திருக்கின்றது. படத்தின் பல கூறுகளை அனுபவித்து எழுதி இருக்கிறார் இந்நூலில்!

படத்தில் எனக்குப் பிடித்தது எல்லோரையும் போல் இரயில் காட்சி! பிறகு துர்காவுக்கும் அவளது பாட்டிக்கும் இடையிலேயான குழந்தமை உறவு, அபுவின் அக்கா மேலான காட்சிகள்...!

கண்டிப்பாக எல்லோரும், ஓர் உன்னத அனுபவம் பெற இப்படம் பார்க்க வேண்டும். பின் மறக்காமல் எஸ்.இராமகிருஷ்ணனின் இப்புத்தகத்தைப் படித்து மீண்டும் அந்த அனுபவம் பெற வேண்டும்.

Train Sequence ::



Theme Music ::



புத்தகம் : பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்.

புத்தக வகை : அனுபவக் குறிப்புகள்.

ஆசிரியர் : எஸ்.இராமகிருஷ்ணன்.

கிடைக்குமிடம் : உயிர்மை பதிப்பகம்.

பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்.

விலை : 90 ரூ.

சாயாவனம் - சா.கந்தசாமி.

ரில் எங்களது பழைய வீட்டில் கொஞ்சமாய் ஒரு வெற்றிடம் இருந்தது. மூன்று தறிகள் போட்டிருந்தோம். காஞ்சிபுரத்தில் நெய்வது போல் கைகளால் செய்யப்படுவது இல்லை. கால்களால் கட்டைகளை மாறி மாறி அடித்து, கோர்த்த நூலை பாவின் வழியாக ஒவ்வொரு முறையும் எதிரெதிர் திசைகளில் செலுத்திக் கொஞ்சம் கொஞ்சமாக ஜமுக்காளங்கள் வடிவம் பெறும்.

வீட்டிற்கும் தறிகளுக்கும் இடையில் இருந்த பிரதேசத்தில் நாங்கள் ஒரு காய்கறித் தோட்டம் அமைத்திருந்தோம். கிணற்றில் இருந்து சகடை போட்டு சேந்திச் சேந்தி நீர் எடுத்து வார்த்து ஒரு மாதிரி குட்டித் தோட்டம் அது.

பழுத்த தக்காளியைப் பிழிந்து போட்டு, தண்ணீர் ஊற்றினால், இரண்டு நாட்களில் பூனை முடிகளோடு தக்காளிச் செடிகள் பிறக்கும். நான்கு குச்சிகளை நட்டு வைத்து அவரைக் கொடி போட்டது இன்னும் நினைவிருக்கிறது. வெங்காயச் செடிகள். கீரைகள். பாம்பே கொத்தினாலும் ஒன்றும் ஆகாமல் 'சூ..சூ..' என்று உதறி விட்டுச் செல்லும் வலு தரும் கீழாநெல்லிச் செடி. இலைகள் நூறு வேப்ப இலைகளுக்குச் சமம். அத்தனை கசப்பு. இன்னும் முட்டைத் தோல்களைக் கவிழ்த்துப் போட்டு, மாட்டுச் சாணிகளை மருதாணி போல் மொட்டை முனைகளில் பிடித்து வைக்க, ஐந்து இலைகளா, ஏழு இலைகளா என்று எண்ணிப் பார்த்து, முதல் பூ மொட்டை ஒவ்வொரு நாளும் பள்ளி விட்டதும் பையைக் கழட்டி எறிந்து விட்டு, அருகில் போய் 'பூத்து விட்டதா...பூத்து விட்டதா' என்று ஆவலாய் எட்டிப் பார்த்து, ரோஸ் நிறத்தில் பூத்திருந்த ரோஜாப் பூவை ஆசையாய்த் தடவும் போது முள் குத்தி துளி இரத்தம் பூத்தது.

இன்று அந்த இடங்களில் பெட் ரூமோ, பூஜை ரூமோ இருக்கும். சகடைகளும், ஓர் இரவு முழுதும் கத்திக் கொண்டே இருந்த பூனைக்குட்டியை வெளியே எடுத்துப் போட உதவிய பாதாளக் கரண்டியும் ரிட்டையராகிப் போய், மோட்டார் செருகிக் கொண்டு, கிணறு இழுத்து மூடப்பட்டுள்ளது.

அந்த வீட்டிற்குப் பிறகு, உள்ளூரிலேயே சில பத்துக்குப் பத்து ஜோசியக் கூண்டுகள் மாறி, சென்னை ஹாஸ்டலில் நான்காண்டுகள் வாழ்ந்து, கோட்டூர்புரம், கோடிஹள்ளி, வேளச்சேரி, கேளம்பாக்கம், லால்பாக், இந்திராநகர், கழக்குட்டம், ஸ்ரீகார்யம் என்று வசித்தாலும் இன்றும் மூச்சு வாங்கி வேர்த்து திடுக்கிட்டெழும் கனவுகளின் களனாக இருப்பது, தோட்டமும், கிணறும், பச்சை நிற வெயில் ஊடுறுவும் தண்ணீர்த் தொட்டியும், ஓட்டுப் பட்டாசலையும், ஓரங்களில் பூ பொறித்த சிவப்புத் திண்ணையும் கொண்ட பாட்டி வீடு தான்!

இன்று பாட்டியும் இல்லை..! வீடும் இல்லை..!

ஆசையாய் வளர்த்த தோட்டம் அழிக்கப்பட்ட வலி இன்னும் அடியாழத்தில் இருக்கின்றது.

காலச்சுவடின் க்ளாஸிக் வரிசையில் வெளியிடப்பட்டிருக்கும் சா.கந்தசாமியின் சாயாவனம் நூல், காவிரிக் கரையில் ஒரு காடு அழிக்கப்பட்டு சர்க்கரை ஆலை கட்டப்படுவதின் நிகழ்வுகளைச் சொல்கிறது.

சிதம்பரம், சிவனாண்டிப் பிள்ளை, குஞ்சம்மா, பாப்பா, பஞ்சவர்ணம், ஊர்ப்பெரியவர்கள், பழனியாண்டி, கலியபெருமாள் மற்றும் பலர் கதாபாத்திரங்கள் வழியாக ஒரு திருமணச் சடங்கு, காடு அழிப்பு, இலேசான சாதி நிலவரம் என்று வ.உ.சி. காலகட்டத்தை எடுத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இது! மெல்ல மெல்ல பண்டமாற்று மாறி பண வியாபாரம் சிதம்பரத்தால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. சாயாவனத்தில் இருந்த புளியந்தோப்பில் இருந்து வருடாவருடம் எல்லோரும் பறித்துக் கொண்டிருந்த நிலை மாறி வில்லியனூரில் இருந்தும் மேலூரில் இருந்தும் புளியங்காய்கள் கொண்டு வரப்படும் நிலை வருகின்றது. ஆற்றங்கரைப் பிள்ளையார் கோயிலில் கிழவி புளியின் சுவை மாறியதைச் சொல்லி சலித்துக் கொண்டு போவதோடு கதை முடிகின்றது.

முன்னுரை பாவண்ணனால் எழுதப்பட்டிருக்கின்றது. காலங்காலமாக நின்றிருக்கும் காட்டின் அழிவும், அங்கு ஆலை கொண்டு வரப்பட்டு இயந்திரங்கள் மூலம் மனித சக்திக்கு வலுவான மாற்று அறிமுகம் செய்யப்படும் காலகட்டம் வெறும் கதை அல்லை; தேசத்தின் நிலை மாறி வருவதின் குறியீடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறார்.

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நம் கண் முன்னும் தெளிவாகத் தெரிகின்றது.

ஒவ்வொரு முறை ஊருக்குச் சென்று வரும் போதும், பால்யத்தில் கண்ட அடையாளங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன. ஊருக்கே சின்னங்கள் என்று நான் நினைத்திருந்த கடைகள் காணாமல் போய் அங்கே பேக்கரியும், எஸ்.டி.டி. பூத் இணைந்த பொரி கடலைக் கடையும் வந்திருக்கின்றன. சாலையை அகலப்படுத்தும் முயற்சிகளில் ஒல்லியான கட்டிடங்கள் உயரமாக மாறி இருக்கின்றன. டவுசர் போட்டு பின் குத்தியிருந்த பையன் இன்று பெருவயிறும் லுங்கியுமாக டி.வி.எஸ்ஸில் வந்து இறங்கி, நான் கண்டிராத காளான் சூப் கடையில் இரண்டு ப்ளேட் வாங்குகிறான். ட்யூப் லைட்கள் மினுக்கின கம்பங்களில் மஞ்சள் பூசப்பட்ட சோடியம் வேப்பர் குளிர்க்கின்றது. ஆகாயத் தாமரைகள் மிதக்கும் பவானியாறும், பாறைகள் இடுக்கில் பாயும் காவிரி நீரும், கூடல் புள்ளியில் அமைதியில் உறைந்திருக்கும் கோயிலும், சரிந்திருக்கும் இலந்தை மரமும், மதில்கள் உயர்த்தப்பட்ட ஸ்கூல் காம்பவுண்ட்டும், தவிர்த்து ஊர் மாறிக் கொண்டே தான் வருகின்றது.

மாற்றங்களை ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டி இருக்கின்றது, பிடித்தாலும், இல்லா விட்டாலும்!

புத்தகம் : சாயாவனம்.

புத்தக வகை : நாவல்.

ஆசிரியர் : சா.கந்தசாமி.

கிடைக்குமிடம் : காலச்சுவடு பதிப்பகம்.

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்.

விலை : 150 ரூ.

Thursday, January 22, 2009

இரு மலர்கள் - முன்ஷி பிரேம்சந்த்.

சென்னையில் இருந்த ஒரு காலகட்டத்தில் ஒருமுறை எழும்பூர் சென்றிருந்தேன். எம்.எம்.சி.யின் பெண்கள் விடுதி அங்கே இருக்கின்றது. அங்கே தங்கி படித்துக் கொண்டிருந்த ஒரு தோழியைக் காணச் சென்றிருந்தேன். அவள் இன்னும் வரவில்லை; தாமதமாகும் என்று தெரிய வந்ததில், அப்படியே கால் போன போக்கில் நடந்து பாந்தியன் சாலைக்கு வந்து, மேம்பாலம் மறைக்கும் ம்யூசியத்துக்குள் நுழைந்தேன். பலமுறை பார்த்து இருந்ததால், இம்முறை அருகில் இருந்த செங்கல் கட்டிடமான கன்னிமரா பொது நூலகத்திற்குச் சென்று விட்டேன்.

பல பிரிவுகளில் எத்தனையோ புத்தகங்களில் தலை நுழைத்து, பலர் இருக்க, அட்மினிஸ்ட்ரேஷன் பதவிகளுக்குத் தயார் செய்யும் தனிப்பிரிவின் எதிரில் இருக்கும் ஒரு பகுதியில் கைக்கு கிடைத்த ஒரு ஒல்லி புத்தகத்தை எடுத்து, மூட்டைப்பூச்சி ராஜ்யமான ஒரு நாற்காலியில் அமர்ந்து, புரட்டினால் அது ப்ரேம்சந்தின் ஒரு சிறுகதைத் தொகுப்பு.

அப்போது தான் முதன்முறையாக இப்படி ஒரு ஆளைக் கேள்விப்படுகிறேன். அவரது சில இந்தி கதைகள், சில உருது கதைகளின் தமிழாக்கங்கள். யார் செய்தது என்று மறந்து விட்டது. அதில் ஒரே ஒரு கதை, தீபாவளி சம்பந்தமாக, ஒரு சிறுவனைப் பற்றிய கதை. நினைவில் இருக்கின்றது.

மென்மையான நடை. ஒரு டெர்மினல் பாய்ண்ட்டை வைத்துக் கொண்டு, அதை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும் வரிகள். மூல இந்தியிலேயே படித்தால் இன்னும் சுகமாக இருக்கும் என்று தோன்றியது.

ந்தியில் இருந்து கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள் மொழிபெயர்த்து, 2006-ல் அல்லயன்ஸ் வெளியீடாக வந்த இருமலர்கள் என்ற அவரது இரண்டு சிறுகதைகள் என்று சொல்லலாமா, அல்லது குறுநாவல்..? சின்ன சின்னதாக பத்து சேப்டர்கள் கொண்ட இரு கதைகள். ஆனால் உண்மை சம்பவங்கள் போல் தெரிகின்றது.

ஒளரங்கசீப் காலத்துக் கதை ஒன்று. சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத் துவங்கிய காலகட்டத்தில், பல தென்னிந்திய அரசுகள் சுதந்திரப் போர் நடத்திய போது, 'ராணி ஸாரந்தா' நடத்திய ஒரு தேச மானப் போராட்டம் முதல் கதை.

கொடூரனாக வரலாறெங்கும் வர்ணிக்கப்பட்டிருக்கும் தைமூரின் மனதிலும் அன்பை ஊறச் செய்து, கொன்று குவிப்பதல்ல இஸ்லாம் காட்டும் வழி என்று தைரியமாகச் சொல்லி அவன் படையெடுப்புகளை மென்மைப்படுத்திய, ஆண் வேடமிட்ட உமத்துல் ஹபீப் என்ற பெண்ணின் கதை 'தைமூரின் உள்ளம்'. பின் அவள் அவனது உள்ளத்திற்கும் இராணி ஆகின்றாள்.

இரு குறுங்கதைகளும் எளிமையாகப் பாய்கின்றன. அரை மணி நேரத்தில் முடிந்து விட்டன. எனினும் தெளிவான நடை நம்மை மேலும் அவரது எழுத்துக்களைத் தேடச் செய்கின்றது.

புத்தகம் : இரு மலர்கள்.

புத்தக வகை : குறுங்கதைகள்.

ஆசிரியர் : முன்ஷி பிரேம்சந்த் (தமிழில் : கா.ஸ்ரீ.ஸ்ரீ.)

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம் (srinivasan@alliancebook.com)

விலை : 20 ரூ.

Tuesday, August 05, 2008

5. someone.

நேற்று கொஞ்சம் உடல் நலம் சரியில்லை. லைட்டாக ஃபீவர் போல் இருந்தது. எனவே அவ்வளவாக இணையத்தில் சுற்றாமல், மெயில் மட்டும் படித்து விட்டு படுத்துக் கொண்டேன். ஆனால் வழக்கமாக தூங்கும் நேரம் இரவு 10 மணி இல்லையாதலால், என்ன செய்வது என்று கொஞ்சம் போல் குழம்பினேன்.

ஒரு மாதமாக அறிவியல் கதைப் போட்டிக்காக சிந்தித்துக் கொண்டேயும் (?) எழுதிக் கொண்டேயும் இருந்ததால், வாங்கி வைத்திருந்த புத்தகங்கள் புத்தம் புதிதாக தூசி படிந்து இருந்தன.

எனவே இன்று இரவு படிக்க என்று முடிவு செய்து, கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்தேன்.

five point someone from chetan bhagat.

இரண்டு நாட்களின் இரவைப் பங்கு போட்டுக் கொண்டது புத்தகம்.

ர்யான், ஹரி, அலோக் என்ற மூன்று நண்பர்களின் IIT வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்ற இப்புத்தகம் என் கல்லூரி வாழ்க்கையை நினைவூட்டியது.

வழுக்கிச் செல்லும் நகைச்சுவையோடு நாவல் பறக்கின்றது. முதல் நாளின் நிர்வாண ரேக்கிங்கில் துவங்கி, கடைசி நாள் கான்வகேஷன் செரமனி வரை சீரான வேகத்தில் ஃப்ளோவில் ஓடுகின்றது.

I reccommend this one to everyone, especially who dreamt IIT in their school days.

புத்தகம் : five point someone.

புத்தக வகை : புனை கதை.

ஆசிரியர் : சேதன் பகத்.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : Rupa.

விலை : 95 ரூ.

Thursday, May 01, 2008

வ.வா.வின் வா.வ.

சென்ற வாரம் ஊருக்குச் சென்ற போது நடைபெறத் துவங்கிய நூல் அழகத்தில் இருந்து சில புத்தகங்கள் வாங்கி வந்தேன். அவற்றுள் இரண்டு புத்தகங்கள் பற்றி.

ஒரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும் நாங்கள் பார்த்து வந்த போது ஞாயிறு என்றாலே பரவசமாக இருக்கும். சுவையான சாப்பாடு, விடுமுறை, மதியம் ஏதாவது ஒரு மாநில மொழித் திரைப்படம், மாலை ஏதேனும் ஒரு தமிழ்ப் படம் என்று பொழுது பறந்து போகும். படம் பார்த்து முடிந்ததும் இரவு உணவு முடித்து விட்டு உறங்கப் போகலாம் என்று முடிவுக்கு வரும் போது ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

அமுல் சுரபி.



சித்தார்த் ரே மற்றும் ரேணுகா சஹானே (ஆஹா! என்னவொரு வாய் கொள்ளாத சிரிப்பு இவருக்கு!) இருவரின் கலந்துரையாடலில் நிகழ்ச்சி இனிமையாக இருக்கும். சித்தப்பா , பெண் போல் இருவரும் விடாமல் பேசிக் கொண்டும், அவ்வப்போது பலப்பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதுமாக நல்லதொரு நிகழ்ச்சி.

அமுல் ப்ராண்டின் ஒரு விளம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது. 'Utterly Butterly Delicious' என்ற வாசகம் ஞாயிறின் இரவுகளோடு ஒன்றிப் போனது.

குஜராத்தின் ஒரு மூலையில் இருந்த ஆனந்த் என்ற கிராமத்தை இந்திய பால் வளத்தின் மையப்புள்ளியாக்கி அமுல் ப்ராண்டை நாடெங்கும் அறிமுகப்படுத்தி, ஒரு சிறந்த கூட்டுறவு உற்பத்திப் பொருளாக ஆக்கிய திரு.வர்கீஸ் குரியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் தான் முதலாவதாகப் படித்தது.



கேரளாவின் கள்ளிக்கோட்டையில் '21ல் பிறந்து வில் பணியாற்றி, அமெரிக்காவில் மெட்டாலஜி மற்றும் அடாமிக் ஃபிஸிக்ஸில் முதுநிலைப் பட்டம் பெற ஆசைபட்டு, பால்வளப் பொறியியலுக்கே அரசு உதவித் தொகை கிடைக்கப் பெற்று, ஆனந்தில் கைரா கூட்டுறவு பால் நிறுவனம் அமைத்து, 'விவசாயிகளே உரிமையாளர்கள்' என்ற உண்மையான கூட்டுறவுக் கொள்கையை அமல்படுத்திய ஒரு இந்தியாவில் ஓர் அரிய மனிதரின் வாழ்க்கையைக் கூறுகின்றது இந்நூல்.

ஓர் எளிய மனிதர் எவ்வாறு அரசின் இறுகிய கொள்கைகளுக்கு மத்தியிலும் ஒரு நிறுவனத்தின் சக்தியைக் கைக் கொண்டு, இலட்சக்கணக்கான ஏழைக் குடியானவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க முடிந்தது என்ற இக்கதை நாம் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாறு.



புத்தகம் : எனக்கும் ஒரு கனவு (I TOO HAD A DREAM)

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : வர்கீஸ் குரியன்

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்.

விலை : 150 ரூ.

டுத்ததாக வின்சென்ட்.

இந்த ஓவியரின் ஓவியங்கள் அவர் இருந்த காலகட்டத்தில் யாரும் சீந்தாமல் இருந்தன. இவரது மறைவிற்குப் பிறகு அவை இன்று உலகமெங்கும் ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களின் வரவேற்பறைகளிலும், பணக்காரர்களின் ஹால்களிலும் அலங்கரிப்புக்காக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவரது 'உருளைக்கிழங்கு உண்பவர்கள்' மற்றும் 'சூரியகாந்திப் பூ' என்ற ஓவியங்கள் இன்றும் அவரது பாண்டித்யமையை இன்றும் கூறி வருகின்றன.

அவரது குடும்பப் பெயரைச் சொன்னால் போதும். எல்லோர்க்கும் தெரியும்.

வான்கா.



வான்கா கேலரி.

இர்விங் ஸ்டோன் எழுதிய 'Lust For Life' என்ற வான்காவின் வாழ்க்கை வரலாற்றை சுரா மொழிபெயர்த்து வந்த வரலாற்று நூல். பிறந்த நாள், இடம், பெற்றோர் யார் என்பன போன்ற அந்த வரிகளோடு கண்ணையும், கவனத்தையும் கடந்து போகின்ற தகவல்களால் நிரப்பப்படவில்லை. மாறாக அவரது வாழ்வின் நிலைகளோடு நாமும் பயணப்படும் வகையில் நகர்ந்து கொண்டே இருக்கிறது, நூல்.

கலை வடிவத்தின் ஏதாவது ஒரு கூறோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாழ விரும்புகிற வாழ்வை, இயற்கையை, அதன் கடைசிச் சொட்டு வரை ருசித்துக் குடித்த ஓவியன், அவன்.

நூலில் இருந்து சில என்னைக் கவர்ந்த பகுதிகள்.

***

"அப்பா... ஒரு வேளை நீங்க சொல்றது சரியாக இருக்கலாம்.ஆனா, ஆரம்பத்துல இயற்கை ஒரு கலைஞனையோ, ஓவியனையோ எதிர்க்கத்தான் செய்யும்" - பென்சிலைக் கையில் பிடித்தவாறு வின்சென்ட் சொன்னான்: "இயற்கையோட எதிர்ப்பை ஒரு பொருட்டா நினைக்காம பலத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாச் சேர்த்துக்கிட்டு அதை எதிர்த்துப் போராடினா மட்டுமே ஒருவனால் கடைசில வெற்றி பெற முடியும்."

***

"வின்சென்ட், நான் சொல்றதை நம்பு. ஒரு கலைஞன் தான் அடைய வேண்டிய இடத்தை மிகவும் சீக்கிரமாகவே போய் அடைஞ்சான்னு வச்சுக்கோ. அவனோட கலை அதே மாதிரி சீக்கிரமே அழிஞ்சிடும். தற்காலிக வசதிக்ககவும் - புகழுக்காகவும் முயற்சி பண்ரவனோட கலை, தற்காலிகமா மட்டுமே அவன்கிட்ட இருக்கும். உண்மையிலேயே ஒரு கலைஞனுக்கு அவசியம் வேண்டியது என்ன தெரியுமா? உண்மை, நேர்மை, மனசாட்சிக்கு விரோதமில்லால நடத்தல். நாலு பேரோட கை தட்டலையும், பாராட்டையும் பெறணும்ன்றதுக்கக சாலையில் போற கண்ட புழு, பூச்சி பின்னாடி எல்லாம் ஓடாம, ஒழுங்கா கத்துக்க வேண்டிய விஷயங்களைக் கத்து உன்னோட கலை பற்றிய அறிவை வளர்த்துக்கிறதுக்கு வழியைப் பாரு."

***

'உள்ளதை அப்படியே பார்த்து வரைவதாக இருந்தால், அது வீண். அது தோல்வியில் தான் முடியும். உள் மனதிலிருந்து புறப்பட்டு வரும் உணர்ச்சிகள் அமைதியாக, மெதுவாக படைப்பின் மீது இறங்க வேண்டும். அப்படி நடந்தால், இயற்கை தானே படைப்பிற்குப் பின்னால் வந்து நிற்கும்' - பீட்டர்ஸென் சொன்ன வார்த்தைகள் வின்சென்ட்டின் ஞாபகத்தில் வந்தன. தன் முன் மாடல் அமர்ந்திருந்தது, தன் பார்வையை திசை திருப்பியிருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். இயற்கையின் பிடிக்குள் தன்னையே உருக்கி அர்ப்பணித்தான் வின்சென்ட். இதுவரை இயற்கையை உருக்கி தன் பிடிக்குள் கொண்டு வர முயற்சித்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியம் என்று அவன் மனமே உணர்ந்தது.

***

வின்சென்டிற்கு கிடைத்தது போன்ற ஒரு தம்பி (தியோ) கிடைத்தால், கலை ஆர்வம் பெருக்கெடுத்து கட்டுகளில் இருந்து விடுபட்டு ஓடத் துடிக்கும் ஒருவனின் வாழ்க்கை தான் எத்தனை அதிர்ஷ்டவசமானது! ஆனால் வின்சென்ட் அப்படி ஒன்றும் அதிர்ஷ்டக்காரனாகத் தன் வாழ்வை வாழவில்லையே...

புத்தகம் : வான்கா

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : இர்விங் ஸ்டோன் (தமிழில் : சுரா)

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : புதுமைப்பித்தன் பதிப்பகம் (piththan@yahoo.com)

விலை : 100 ரூ.


வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Tuesday, April 22, 2008

கடைசிப் பக்கங்கள்.

பி.கே.பி. தளத்தில் இருந்து இன்று சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கங்களை இறக்கிப் படித்தேன்.

அனலாக் டிவைசஸ் ஷார்க் ப்ராசஸர் டேட்டா ஷீட்டையும், விஷூவல் ஆடியோவில் கஸ்டம் ஃப்ரேம்வொர்க் இன்டக்ரேஷன் ஷீட்டையும் திறந்து வைத்து, அவற்றின் பின்புலத்தில் படிக்க ஆரம்பித்து, முழுதும் முடிக்க 17:25 ஆனது. ப்ரிண்டருக்கு அருகிலேயே இருக்கை இருப்பதால், அவ்வப்போது ப்ரிண்ட் எடுக்க வருபவர்களுக்காக மற்ற ஷீட்டுகளைப் பார்ப்பது போல் நடித்து, ஜப்பான் கஸ்டமர் கொடுத்த கார் வடிவ சவசவ சாக்லேட்டுகளை மென்று தின்று கொண்டே படித்து முடித்தேன்.

தமிழ், பாவண்ணன், வண்ணதாசன், சாகித்ய அகாடமி, பம்பாய், ஜப்பான், டெல்லி, லெமூரியா, சென்னை, நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ் சினிமா, கன்னட நாடகங்கள், சத்யஜித் ரே, கமலஹாஸன், திராவிடம், மொழி, குமுதம், கணையாழி, சிறு பத்திரிக்கைகள், எலெக்ட்ரானிக்ஸ், தொல்காப்பியம், ஹைக்கூ, புறநானூறு, தமிழ்ச்சங்கம், ரோபோட், கழிநெடிலடி வெண்பா....

என்ன தான் இல்லை..? அவரது பரந்துபட்ட ஆர்வங்களும், அவற்றை அவர் எழுதி நம்முடன் பேசுவது போல் வழுவிச் செல்லும் பாங்கும்... தொகுப்பை முழுதும் படிக்க வைக்கின்றன என்று சொன்னால், அது அவர் பாணியில்... வாசகனின் ஆதார உற்சாகம்.

குறிப்பாக ஒன்றே ஒன்று..! அக்காலச் ('72) சினிமா பாடல்க்ளைச் சொல்லும் போதும், அரசியலாரைப் புகழ்ந்து கவிஞர்கள் பாடுவதும் பற்றி ஒரு வார்த்தை கூறுகிறார்... 'அவை ராஜவேர்வை..!'.

ராஜவேர்வை - அட்டகாசமான வார்த்தை.

க்ளிக்.

Thursday, March 27, 2008

ஒரு யோகியின் சுயசரிதம்.



சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மயிலை சிட்டி சென்டருக்குச் சுற்றுலா சென்றிருந்த போது வாங்கிய ஒரு புத்தகம் தான் 'ஒரு யோகியின் சுயசரிதம்'. பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு இந்நூல்.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில் இருந்து இது போன்ற இளந்துறவிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் இருந்து வந்தது. இந்நூல் யோகானந்தராலேயே இயற்றப்பட்டு இருப்பதால் அவருடனே வாழ்ந்து நாமும் வளர்வதாக உணர முடிகின்றது.

மஹா அவதார் பாபாஜி பற்றி முதன்முதலில் எழுத்து வடிவில் இவர் தான் முதலில் வெளிக் கொணர்ந்தவர் என்கின்றனர். பாபாஜி, லாஹிரி மஹாஸயர், குரு யுக்தேஸ்வரர் மற்றும் பல சாதுக்களையும் சன்னியாசிகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களது வாழ்வின் அற்புதங்கள் நம்மை திகைப்பின் எல்லைக்குள் இழுத்துச் செல்கின்றன.

வாழ்வின் நிலை, இறப்பிற்குப் பிறகான வாழ்க்கை, இந்த வாழ்வின் அர்த்தம் என்ன, எதற்காக நாம் இங்கு வந்திருக்கின்றோம் என்ற ஆதிகால கேள்விகளுக்கு எல்லாம் யோகானந்தர் எளிமையாக கூறும் பதில்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

ரஜினி அனைவர்க்கும் படிக்க சிபாரிசு செய்யும் இரண்டு புத்தகங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று The Himalayan Masters.

மேலும் இந்நூலைப் பற்றிய மதிப்புரை எழுத என்னால் இயலாது.

நீங்களே படித்துப் பாருங்களேன்.

*****

புத்தகம் : ஒரு யோகியின் சுயசரிதம்.

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : பரமஹம்ஸ யோகானந்தர்.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : யோகதா சத்சங்க இயக்கம், ராஞ்சி.

இணையம் : Autobiography of a Yogi .

Tuesday, October 23, 2007

எனது சுய சரிதை.



சிடி சென்டரில் வாங்கிய மற்றுமொரு புத்தகம், 'எனது சுய சரிதை'. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு.

எங்கள் தந்தையும் அவரது நண்பர்களும் அக்காலத்திலேயே 'சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்' என்ற பெயரில், மன்றம் அமைத்து பல பணிகள் செய்துள்ளனர். திருச்சியில் ஒரு முறை நடந்த இரசிகர் மன்ற மாநாட்டில் கலந்து கொண்டு சிவாஜி அவர்களுடன் அருகில் நின்று புகைப்படம் எடுத்த போது, அவர் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே..!

அவர் தொகுத்த அப்போது வெளியான பாடல் புத்தகங்கள், புகைப்படத் தொகுப்பு ஆகியவற்றை இன்னும் நான் பத்திரமாக வைத்துள்ளேன்.

நாங்களும் அவருக்கு சிறிதும் சலிக்காமல், ரஜினியின் ஒரு பிறந்த நாளுக்கு தெருவெங்கும் மிட்டாய் கொடுத்து தூள் பரப்பினோம். அது அந்தக் காலம்...!

இந்தக் காரணங்களாலும், இயல்பாகவே சிவாஜி அவர்களது நடிப்பால் கவர்ந்திழுக்கப் பட்டதாலும், இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இன்னும் நினைவு இருக்கின்றது 'தங்கைக்காக' என்ற படத்தைப் பார்த்து விட்டு கொஞ்ச நேரம் அழுது கொண்டு இருந்தது...!

இது வரை படித்த வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் போல் இல்லாமல், இது வேறு மாதிரியாக எழுதப் பட்டு இருக்கின்றது.

டி.எஸ்.நாராயணசாமி என்ற எழுத்தாளர் அவரைப் பேட்டி கண்டு அதன் தொகுப்பாக இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது.

சிவாஜி அவர்களே, இந்நூலைப் பற்றி தன் கருத்தாக கூறியிருப்பது :

"என்னுடைய வாழ்க்கை ஒரு பரந்த கடல் போல. என்னுடைய கலையுலக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், நான் எத்தனையோ கலைஞர்களையும் பெரியோர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் வரிசைப்படுத்தி, இந்த 'சுயசரிதையில்' குறிப்பிடுவது கடினம். எனக்கு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவங்களையும், என்னைப் பாதித்து, வியக்க வைத்த சில மறக்க முடியாத கலைஞர்களையும், பெரியோர்களையும் மட்டுமே, நினைவில் கொண்டு குறிப்பிட்டுள்ளேன். இதில் விட்டுப் போனவர்கள் எல்லோரும் என் நினைவில் வராவிட்டாலும், என் இதயத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருப்பவர்கள் என்பதைக் கூறிக்கொள்கிறேன்."

புத்தகம் : எனது சுய சரிதை

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : திரு.டி.எஸ்.நாராயணசாமி.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

விலை : ரூ.70.

பதிப்பகம் : Sivaji Prabhu Charities Trust, Royapettah, Ch - 14.

Sunday, October 14, 2007

சித்தர் பூமி சதுரகிரி.

நேற்று மயிலையில் உள்ள சென்னை சிடி சென்டருக்குச் சென்றிருந்தோம். வழமை போல் கால்கள் தாமாகவே லேண்ட்மார்க்குக்கு அழைத்துச் சென்று விட்டன. கொண்டு போயிருந்த பைசா கொஞ்சம் செலவழித்து நான்கு புத்தகங்கள் வாங்கினேன். அவற்றுள் ஒரு புத்தகம் தான் 'சித்தர் பூமி சதுரகிரி'.

பேருந்தில் வரும் போதும், வீடு திரும்பிய பின்னும் அமர்ந்து படித்து முடித்தேன். அதைப் பற்றி சில குறிப்புகள்.

திருவில்லிப்புத்தூரின் அருகில் உள்ள சதுரகிரி ஒரு சித்த பூமி. பதிணெண் சித்தர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் இங்கு சென்று இருக்கிறார்கள். நூலாசிரியர் திரு.கே.ஆர்.சீனிவாச ராகவன் அவர்கள் தம் பயணக் கட்டுரை நூலாக இப் புத்தகத்தை எழுதியுள்ளார்கள். நாமும் கூடவே பயணிப்பது போல் உள்ளது.

மனிதன் கைபடாத வனப் பகுதிகள். சித்தர்கள் இன்னும் அரூபமாக நடமாடும் குகைகள். காட்டு விலங்குகள். பட்டப் பகலிலும் இருள் சூழ்ந்த காட்டுப் பகுதிகள். என்று பல பகுதிகளை தன்னுள் அடக்கியிருக்கும் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்த சதுரகிரிக்கு ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது, இந்நூல்.

ஆன்மீக யாத்திரையாகவோ, மலையேறும் பயணமாகவோ குழுவாக ஒரு வழியறித் துணையுடன் (கைடு) என்று வர அற்புத அனுபவங்கள் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள :

http://www.sathuragiri.com/index1.html

புத்தகம் : சித்தர் பூமி சதுரகிரி.

புத்தக வகை : ஆன்மீகம், பயணக் கட்டுரை.

ஆசிரியர் : திரு.கே.ஆர்.சீனிவாச ராகவன

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

விலை : ரூ.70.

பதிப்பகம் : www.nhm.in