Monday, January 19, 2015

கோட்டையின் கூரை மேல்.

(சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் கண் திறக்கப்பட்ட ஒரு கடிதம்.)

ன்புள்ள அலெக்ஸ்,

தற்கொலை செய்வதைப் போன்ற ஓர் இனிய நினைவு வேறில்லை. அது உடனடியாக மனதில் ஓர் இலகுவை ஏற்படுத்தி விடுகின்றது. வாழ்வின் உவப்பான நேரமாக அது எப்படியோ மாறி விடுகின்றது. பின் இனி நிகழும் எதுவும் இழப்பில்லை என்று தோன்றி விடுகின்றது. இனி எதுவும் துயராக நிகழப் போவதில்லை என்று மகிழ்வு ஏற்படுகின்றது.

இன்று இரவு மற்றுமொரு முறை அதை நினைத்துக் கொண்டேன். உருகி நிறைந்து படிந்த பனி மலைகளைப் போல மெழுகுகள் எரிந்து கொண்டிருந்தன. சின்னச் சுடர் ஒன்று இன்னும் சில மணிகளில் தற்கொலை செய்து கொள்வதை அறியாது ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதன் மென்மையான மஞ்சள் மடியில் நீல தகிப்பு. பாதம் பற்றி எழுந்த பரு உடல் நுனியில் கூர்மை கொண்டு, ஜன்னல் வழியே கசிந்து வந்த குளிர்க்காற்றுக்குத் துடித்து கொண்டிருந்தது.

என் ஜன்னல்களுக்கு வெளியே இந்த டிசம்பர் மாதம் இத்தனை பனிக்கு உள்ளே இந்த நகரம் எப்படித் தான் இயங்குகின்றது என்று ஒவ்வொரு நாளும் வியந்து கொண்டிருப்பேன். பொருக்கு பொருக்கான துகள்களை உதறிக் கொண்டு இளம்பெண்கள் நடந்து செல்வார்கள். மன்னரின் இலச்சினையைப் பதிந்து கொண்ட தோல் தொப்பியை அவ்வப்போது தலைகீழாக்கி அந்த பற்கள் எடுப்பான ட்ரம்பெட் இசைக் கலைஞன் மூன்று மாதங்களுக்குப் பின்னான வசந்தத்தை இப்போதே இசையால் உருக்கிக் கொண்டு அழைத்து வருகின்றான். நீல மணிகளாலான மாலைகள் சிலவற்றை அணிந்து கொண்டு இள நங்கையர் பனியால் மங்கலான தெரு விளக்குகளின் கீழே நின்று, அன்றைய வயிற்றுக்காக மேல் சட்டையின் இரு பொத்தான்களைத் திறந்து வைத்து, ஈரம் படியும் மென்மார்புகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாரட் ஒன்று வருகின்றது. இறுக்கப் போர்த்திய கண்ணாடிக் கூண்டுக்குள் கோழிக்குஞ்சுகளைப் போல் ஒரு சிறுவனும் சிறுமியும் கண்ணாடிகளில் முகங்கள் பதிய சாலையை வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்கள் தெற்குப் பிரதேசத்திலிருந்து வந்திருக்க வேண்டும். பழுக்கத் துவங்கியிருந்த சுருண்ட மயிர்கள் அவர்களுடைய களங்கமற்ற முகத்தில் இன்னும் களங்கமற்ற சிரிப்புடன் நிறைந்திருந்தன.

மதுச்சாலையில் மூன்று பேர் இன்னும் தங்களை மூழ்கடிக்காத திரவத்தின் முன் இறைஞ்சி கொண்டிருந்தார்கள். இழுத்துக் கட்டிய பூட்சு கால்களைக் கவ்வி பிடித்திழுக்கத் தங்களை இன்னும் பூமியிலேயே தக்க வைக்க வேண்டி, ஒருவரையொருவர் கைகோர்த்துக் கொண்டு போலன்ஸ்கியின் பாடலை உரக்கப் பாடினார்கள்.

போலன்ஸ்கியை நீ அறிவாய் தானே? நம் பள்ளிக் காலத்தில் கட்டாய ராணுவப் பயிற்சியில் இரவுகளில் எரியும் தீ முன் வட்டமாய் அமர்ந்து சேர்ந்து பாடுவோம் அவன் பாடல்களை. அவனுடைய தேசப் பாடல்களை.

"கூறுவோம் நம் தேசமே..
யாவிலும் பெரிதென்றே.."

என்று தொடங்கும் அவனுடைய பிரபலமான பாடல் பயிற்சியின் ஒவ்வொரு இரவிலும் இறுதிப் பாடலாக ஒலிக்கும்.

அவனுடைய பிரபலமான பாடல், "ஆதலினால் நாமெல்லாம் வாழ்த்துவோம் மன்னரையே..!" என்று முடியும்.

நம் கண்காணிப்பாளர், ரகசியமாகக் கிடைத்த வோட்காவைப் போன்ற பானத்தை அருந்தி விட்டு களிவெறியில் மிதக்கத் துவங்குகையில், நாம் போலன்ஸ்கியின் காதல் பாடல்களைப் பாடுவோம். உண்மையில் அவை காதல் பாடல்கள் தானா? தன் சிறுவயதில் முகத்தில் பிசிறடித்த பருக்கள் பதிந்த காலங்களில் அவன் கண்டு உடனே தொலைத்த ஒரு பெண்ணைப் பற்றி அல்லவா அவன் வாழ்நாளெல்லாம் பாடி அலைந்தான். அவளுக்கு இவனைப் பார்த்த ஞாபகமே இருந்திருக்காது. செயிண்ட் பால் தேவாலயத்தில் ஒரு சீமாட்டி போல் மனமகிழ்வோடு வந்திறங்கிய ஒரு பெண் அவள். இவன் கண்ட நொடிநுனியிலேயே விழுந்தான். அவன் இதயத்திலே முதல் முதலாக ஒரு தனி உணர்வு எழுந்து படர்ந்தது.

"பைன் மரங்களின் வரிசைகள் தொலைவினிலே..
பனி நிறை முகடுகள் தொலைவினிலே...

மழை சுமக்கும் முகில்களின் சூல்போலே
எல்லோராலும் விரும்பப்படுபவள் வந்தாளே..

சைபீரிய மான்களின் தோல்போலே
முழுதுமணிந்த உடைகளாலே...

எல்லாம் மறைந்து கிடந்தனவே...
புன்னகை மறைக்க மறந்தனவே..

அவள் கண்கள் நதியில் சுழல்போலே
தொட எண்ணி நினைத்தும் பயந்தனரே..

அவள் கரம் இரவில் துயர்போலே
அனைவரும் அறிவரே, பகிர முடியாதே...!"

எத்தனை பாடல்கள்..! எத்தனை தருணங்கள்..! அத்தனையிலும் அவன் அவளைத்தானே நினைத்துக் கொண்டான்!

நீல வானம் வெகு தொலைவில் எங்கோ நின்று கொண்டிருக்கும். ஆங்காங்கே வைரத்தை தொட்டு வைத்தது போல் சுடர்ந்து சுடர்ந்து அடங்கும் நட்சத்திரங்கள். கருநீலமோ கருப்பே தானோ பேதம் தெரியாத மலைச் சிகரங்களும் மலைத்தொடர் மடிப்புகளும் திசைகளெங்கும் நம்மைச் சூழ்ந்திருக்கும். கனத்த போர்வைகளுக்குள் நம்மை அமிழ்த்திக் கொள்ளும் முன் நாம் எல்லோரும் போலன்ஸ்கியின் அதே துயரத்தை நம் நெஞ்சில் தாங்கிக் கொண்டு, கண்ணீர் விட்டு அழுதவாறே கலைவோம்.

போலன்ஸ்கியும் தற்கொலை தானே செய்து கொண்டான். குதிரைகளைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக் கூடத்தில் கருஞ் சோளக்கதிர்கள் போன்ற சிகைகள் பறக்க விரைந்து ஓடிய கறுப்புக் குதிரை ஒன்றைத் தழுவ முயன்று, அது பிடிப்பின்றி அவன் மேலேயே சரிந்து, உயிரை விட்டான். அவனுடைய காதலும் அப்படித்தானே அவன் மேல் அவன் வாழ்வெல்லாம் சரிந்து கிடந்தது. குதிரைக்கு இணையாக ஓடும் முன் அவன் உரக்கக் கூவினான். "அவள் வந்து விட்டாள்... வந்து விட்டாள்..."

மதுச்சாலையின் அந்த மூன்று மனிதர்களும் கைகோர்த்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வரும் போது தங்களை போலன்ஸ்கியாக நினைத்துக் கொள்வதைக் காண்கிறேன். அவர்களில் ஒருவன் பாடி அழுது கொண்டிருந்தான். ஒருவன் பாடி சிரித்து கொண்டிருந்தான். இறுதியானவன் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்து கொண்டே பாடிக் கொண்டிருந்தான். "வானிலே தேவனும் அவன் மடியில் பிள்ளைகளும்" என்ற போலன்ஸ்கியின் பாடலை அவர்கள் பாடியதைக் கேட்க முடிந்தது.

இன்று இரவு நானும் அவனைப் போல தற்கொலை செய்து கொண்டு, கிளம்பி விடுவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். முடிவெடுத்தவுடனே வாழ்க்கை இனிப்பாகி விட்டது போல் தோன்றுகின்றது. இனி ஒவ்வொரு நொடியும் விதிகள் எதுவும் எனக்கில்லை. மலையடிவார இடுக்கில் தன்னைக் கொண்டே துளைத்துத் துளைத்துத் தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்ளும் புழுக்களைப் போலே, தம் விதிகளை உருவாக்கிக் கொண்டு அவற்றின் மூலமே தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் மானுட வாழ்வு, இனி எனக்கு இந்த இரவில் மட்டுமே என்று எண்ணுகையில் பெருமகிழ்வு மனதில் பிறக்கின்றது.

இனி இடுங்கிக் கொண்டு செல்லும் வாழ்வு எனக்கில்லை; சொதசொதவென ஈரம் முயங்கும் துக்கங்களும் எனக்கில்லை; சங்கிலிக் கணுக்களின் கூர்நுனிகள் செருகி திசைகளெங்கும் இழுபட்டு குருதி கசிந்தொழுகும் கண்ணீரும் எனக்கில்லை. அனைத்திலிருந்தும் விடுதலை; அனைவரிடமிருந்தும் விடுதலை;