Friday, October 10, 2008

Chaos Theory b4 2 decades.

ருபது வருடங்களுக்கு முன்பே கமல் சிம்பிளாக விளக்கி காட்டிய Chaos Theory!.

Thursday, October 09, 2008

ARR - இளம் பேட்டி.

முல் சுரபியின் கலெக்ஷனில் ஏ.ஆர்.ரஹ்மானின் இளம் பேட்டி.



மற்றும் சில வீடியோஸ் ::

கெட்ட பையன் சார், அவன்!



Thalaivar cries!!!



ஏன் அப்டியெல்லாம் பேசிட்டீங்க?



...இன்னொரு கையால அவங்கம்மா வாயையும் மூடும்!



இவ ஆத்தாளுக்கு தாவணி!



அய்யம்பேட்டே அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்த்ரன்!

Tuesday, October 07, 2008

வெண்பா முயற்சிகள் - 4.

ந்திரத்தால் மாங்காய் விழும் என்ற ஈற்றடிக்காக ::

மாமரக்கீழ் சீட்டாடி மண்டபத்தில் சாய்ந்துறங்கி
மாலைவரை காதைபேசும் மந்தமான மாந்தரவர்
எந்தவேலை யுஞ்செயாதோர் என்றென்றும் நம்புவர்
'மந்திரத்தால் மாங்காய் விழும்'.

கருவிழி இல்லாத கண் என்ற ஈற்றடிக்காக ::

முன்னம் அவரது முந்தானைப் பற்றியலைந்(து)
பின்னம் அவரது பேரன்பை! - அன்னை
அருகாமை இன்றி அலைகின்ற பிள்ளை
கருவிழி இல்லாத கண்.

Housing Bank Loan பற்றி முயன்ற வெண்பா ::

ஆதாரம் ஓரில்லம். ஆசையாய்க் கட்டபணம்
போதாமல் யோசிப்போர் தம்மால்மா தாமாதம்
வட்டியோட சற்கட்டும் வாய்ப்பு உறுதியெனில்
கிட்டிடும் வங்கிக் கடன்.

ஐந்து நாள் அனுபவங்கள்.

*புதன் கிழமை ஈரோடு ப.செ.பார்க்கின் பின்புறம் முதல் வலது திருப்பத்தில் இருக்கும் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தின் எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி அமைந்துள்ள பாரதி பதிப்பக நூல் நிலையத்தில் இருந்து மூன்று புத்தகங்கள் வாங்கினேன்.

இந்திரா பார்த்தசாரதி அவர்களின் 'குருதிப்புனல்', சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்களின் 'ஜமீலா', அரு.பாலசுப்ரமணியன் அவர்களின் 'பிள்ளையார் அரசியல்'.

நண்பன் கோபாலைத் தேடி திருவாரூர் பேருந்துக்குக் காத்திருக்கும் தில்லி பல்கலை மாணவன் சிவாவில் துவங்கும் கதை, கீழவெண்மணியில் தலித் குடும்பங்கள் ஒரே குடிசையில் கொளுத்தப்பட்டதில் பொங்கிப் பெருகும் இரத்தம் நிறைந்த வாய்க்காலில் இறங்கி சபதம் ஏற்கும் கோபாலில் நிறைகிறது. கோபால், சிவா, கண்ணைய நாயுடு, வடிவேலு, பளநி, பங்கஜம், டாக்டர்.கனகசபை போன்றோர் மூலமாக நகர்கின்ற புனைகதை மனத்தின் வக்கிரங்கள் ஏற்படுத்தும் விளைவுகளில் சமூகம் அடையும் மாற்றங்களைச் சொல்கிறது. சாகித்ய அகாதெமி விருது பெற்றது.

தெருக்கோடியில் இருக்கும் சாணிப் பிள்ளையார், எப்படி ஏ.கே.47 ஏந்திய ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிரம்மாண்டமாய் திருவல்லிக்கேணி தெருக்களில் நகர்த்தப்படுகிறார் என்பதைச் சொல்லும் ஒல்லி நூல், பிள்ளையார் அரசியல். வடக்கில் இருக்கும் இராமர் பேரிலான பேரலையை ஓட்டுக்களாகப் பதிக்கும் அரசியல், தென்னகத்தில் நிலவும் பல தெய்வ வழிபாடுகளால் அத்தகைய ஒற்றைச் சக்தியை முன்னிறுத்தும் முயற்சி பலிக்காது என உணர்ந்து, அனைவரும் தொழுகின்ற பிள்ளையாரை முதன்மைப்படுத்தும் உள்ளரசியல் சொல்லப்பட்டுள்ளது.

ஜமீலாவை இன்னும் முடிக்காததால் ஒன்றும் சொல்வதற்கில்லை. பின்.

* லக்ஷ்மி நகர் வழியாக சித்தோடு சென்று இடது கட் அடித்து, ஈரோடு சென்று, திரும்பும் போது அக்ரகாரம் வழியாக மீண்டும் லக்ஷ்மி நகர் வந்து குமாரபாளையம் சென்று மீண்டும் ஊர் வந்து.. ஒரு மாதிரி 'g'வடிவில் பயணம் செய்தேன்.

ஜீவா டிப்போவில் இருந்து சேலம் செல்லும் புதுப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால், கோவை - சேலம் நெடுஞ்சாலை சில இடங்களில் 'Take Diversion' போர்டுகளோடும், Reflection Sticker அம்புகளோடும், தெறித்த ஜல்லிகளோடும் இருந்தது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்த காரை போடும் பணிகள் முடிந்து, இன்னும் கலக்கலாகக் காட்சி அளிக்கிறது. மாநகராட்சி ஆகி விட்டதன் அடையாளங்கள் தெரிகின்றன. ட்ராஃபிக் அதிகம் ஆகி இருக்கின்றது. கமிஷனர், மாநகர மேயர் என போஸ்டர்கள் ஆங்காங்கே! எல்லைகளில் ஸ்பீட் ப்ரேக்கர்கள், சினிமா போஸ்டர்கள், மஞ்சள் தூள் வாசனை, வீரப்பன் சத்திரம் பாரதி தியேட்டர், பார்க்கின் நடுவில் தேர் வடிவ ட்ராஃபிக் காவலரின் கையசைத்தல்களில் நகரும் நகரின் இயக்கம், கூட்டம் அப்பும் ஷாப்பிங் சந்துகள், கட்டில் கடை ஷர்ட்கள், கவிழ்த்த குடையில் பனியன், ஜட்டிகள், செயற்கை மலையில் கீழிருந்து மேலேறும் ரொட்டேஷனல் அருவிகள், பெரிய மாரியம்மன், கஸ்தூரிநாதர் கோயில்கள், எதிரெதிர் முகம் காட்டும் செங்குந்தர், கலைமகள் பள்ளிகள், கோவை ரூட்டை ஒற்றை விரலில் காட்டும் தங்க முலாம் எம்.ஜி.ஆர்.... பெரியாரின் ஊர் வளர்ந்து கொண்டிருக்கிறது,வேகமாக!

* ஃபேக்டரிகள் இருப்பதால் காற்றில் கெமிக்கல் நாற்றம் விளாசும் பி.பி.அக்ரஹாரம் ரம்ஜான் கொண்டாட்டங்களில் இருந்தது. பி.பி. என்றால் பிராமண பெரிய என்ற விளக்கம். அக்ரஹாரத்தில் எப்படி இஸ்லாம் மக்களின் குடியிருப்பு என்பது எப்போதும் அந்த வழியில் பயணிக்கையில் எழும் கேள்வி. அம்மக்களிடையே எக்குழப்பமும் இல்லை. மசூதியும் உண்டு; மாரியம்மன் கோயிலும் உண்டு. எல்லோர்க்கும் பொதுவாக மாமிசக் கடைகளும் உள்ளன.

* காவிரியிலும், பவானியிலும், காளிங்கராயன் வாய்க்காலிலும் நிரம்பி நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பேரேஜில் வடிகட்டப்படுவதால் காவிரி சுத்தமாக ஓடிக் கொண்டிருக்க, பவானி ஆகாயத் தாமரைகளின் ஆக்ரமிப்பில் திணறுகிறது.

*வியாழக்கிழமை கூடுதுறைக் கோயிலுக்குச் சென்றிருந்தோம். சங்கமப் பகுதியில் கூட்டம். செவ்வாய் தோஷப் பரிகாரங்கள் நிறைய நடந்து கொண்டிருந்தன. கம்பிகளால் பாதுகாப்பிற்கு விடப்பட்டிருந்த பகுதியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நீராடிக் கொண்டனர். ஆற்றில் நீர் நிரம்பி ஓடிக் கொண்டிருந்ததால், படிக்கட்டுகள் கொஞ்சம் மூழ்கி, பச்சையாகி இருந்தன. விடுமுறை என்பதால் சிறுவர்கள் கூட்டம் நிறைய இருந்தது. கன்னடம், இந்தி, தெலுங்குகளில் டூரிஸ்டுகள் வந்திறங்கி இருந்ததால் பல குரல்கள் கேட்டன.

பரிகாரப் பகுதியில் உன்னிப்பாகக் கேட்டதில், கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, தபதி பெயர்களெல்லாம் காவிரிக் கரையில் சொல்லப்படுகின்றன. மந்திரம் சொன்னவர்கள் அந்த நதிகளை எல்லாம் ஒருமுறையாவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே! இந்த நாடு மீண்டும் சமஸ்தானங்களாய்ப் பிரியாமல் ஒன்று படுத்தும் பல முக்கியமான பந்தங்களில் நமது பாரம்பரியம் ஒன்று என்பது மீண்டும் மீண்டும் உறுதியானது. திருவல்லம் பரிகாரத் தலத்திலும் இதே நதிகள் பெயர் சொல்லப்பட்டது நினைவுக்கு வந்தது.

வேதநாயகி அம்மன் கோயிலின் தூண்களில் சில உன்னத சிற்பங்கள் இருப்பதை, கால் நூற்றாண்டு வாழ்வில் இப்போது தான் காண்கிறேன். சில ::





















* மதியம் கொஞ்சம் வெயில் தணிந்த பின் படித்த பள்ளிக்கு ஒரு பயணம் சென்றோம். கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகள் கழித்து!

எத்தனை அனுபவங்கள்! எத்தனை நண்பர்கள்! எத்தனை கனவுகள்! எத்தனை கற்பனைகள்! எத்தனை எத்தனை நிகழ்வுகள்! மழை பெய்ததும் பதுங்கலில் இருந்து எட்டிப் பார்க்கும் வர்ணம் மாறும் பச்சோந்தியாய் மனக் கடலி ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் அலையடித்தன. நிழல் மேடையில் உருவங்கள் நடமாடின. பிய்த்தெறிந்த காலத்தின் பெருங்கரத்தில் இருந்து விடுபட்டு வேக வேகமாய் வயது குறைந்து போனது.

சிறு வயதில் கண்ட அன்னைக்கும், இப்போது காணும் அன்னைக்கும் உருவ வித்தியாசங்கள் இருப்பினும் அவரது அன்பில் மாறுதல் இருப்பதுண்டோ?

புதுக் கட்டிடங்கள் எழும்பி இருந்தன. எல்லைகள் விஸ்தாரிக்கப்பட்டிருந்தன. சில வகுப்புகள் முகம் மாறி இருந்தன. சில கட்டிடங்கள் காணாமல் போயிருந்தன. கடவுளே!!!

ஈர மண் பறித்து விதைத்து வைத்து, கம்பி வேலிக்குள் காத்து வைத்திருந்த வேப்பஞ் செடிகள் மட்டுமே இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நம்மைச் சுகமாய்த் தாலாட்டுகையில், கண்களில் வந்ததோ இல்லையோ, நெஞ்சினில் கண்ணீர் கசிந்திறங்கியது.

த.ஆசிரியராகி விட்டிருந்த கணித ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மட்டும் அந்த விடுமுறை நாளிலும் வந்திருந்து பள்ளி குறித்த அவரது ஆசைகளைப் பகிர்ந்து கொண்டார்.











* பள்ளியில் இருந்து கிளம்பி அத்தாணி சென்று, அங்கிருந்து கோபி சென்று கிழக்காகத் திரும்பி ஈரோடு செல்லும் வழியில் வந்து கவுந்தப்பாடி வழியாக, காளிங்கராயன்பாளையத்தைக் கடந்து நகருக்குள் நுழைவதாகத் திட்டம்.

அருமையான வயல்கள். விதவிதமான பச்சை நிறங்கள். இளம் பச்சை, நிமிர்ந்த பச்சை, முதிர்ந்த பச்சை என! பின்புலமாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் லேயர் லேயராக ஒன்றுக்குள் ஒன்றாக விழுந்து படர்ந்திருந்தன. வாய்க்கால்களில் நீர் சுழித்துக் கொண்டு ஓடியது. மஞ்சள் வெயில் கதிர்கள் அடிவானெங்கும் சிவக்கப் படுத்தி இருந்தது.

மனம் முழுதும் ஒரு பாடல் தனக்குத் தானே ஒலிபரப்பி எதிரொலித்துக் கொண்டே வந்தது. வெகு காலங்களுக்கு முன்னால் இவ்வழியே ஒரு நாளின் மீ அதிகாலையில் சென்ற போது பதிந்த பாடல் அது!

'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு!
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு!
என் கண்ணோடு!'

வளைந்து வளைந்து செல்லும் தார்ச் சாலைகள். அவ்வப்போது எதிர்ப்படும் கிராமங்கள். பழைய ரஜினி, விஜயகாந்த ரசிகர் மன்ற போர்டுகள்.

பாரியூர் தாண்டியவுடன் ரிஸர்வில் விழுந்த வண்டியை 60. கி.மீ. வேகத்துக்கு முறுக்கியதில், கோபியை நெருங்கும் போது ஒரு பங்க் வரை ஓட்டி வந்து விட்டோம்.







* வெள்ளிக் கிழமை காலையில் ஈரோடு சென்று திருச்செங்கோடு வழியாக ராசிபுரம், சேலம் செல்லும் பேருந்தில் ஏறி மல்லசமுத்திரம் செல்வதாக ப்ளான்.

பொன்னி நதி பிரிக்கின்ற கொங்கு மண்டலத்தின் இரு பெரும் பிரிவுகளின் நில, வாழ்வு முறை, வெயில் வேறுபாடுகள் தெள்ளெனத் தெரிகின்றன.

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், சத்தி, கோபி, பவானி, ஈரோடு, கரூர் என்பன ஒரு குழு. காவேரி, பவானி, நொய்யல், சிறுவாணி, அமராவதி நதிகள் பாயும் வளப் பிரதேசம். மேற்கு மலைத் தொடர்கள் எல்லைகளாக இருப்பதால், காற்றில் குளிர் கரைந்திருக்கும். நெல், மஞ்சள், கரும்பு, பருத்தி, தென்னை வயற் பயிர்கள். மேட்டூர், பவானிசாகர் அணைக்கட்டுகள்.

சேலம், நாமக்கல், சங்ககிரி, ராசிபுரம், திருச்செங்கோடு, வீரபாண்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி வரை மற்றொரு குழு. அனலடிக்கும் வெயில். மேட்டூர் அணையில் இருந்து வரும் காவேரி நீர் மட்டுமே நீராதாரம். இன்றேல், நிலத்தடி நீர். விவசாயத்தை விடவும் விசைத்தறிகள், கைத்தறிகள் அதிகமான தொழில் வாய்ப்புகள். காற்றில் எப்போதும் ஒரு பஞ்சு வாசம். வறண்ட மொட்டை சிமெண்ட் மலைகள்.

பேச்சுத் தமிழிலும் எளிதாக வேறுபாடுகளைக் கண்டு கொள்ளலாம்.











* எங்கள் பகுதியில் காலை 9 முதல் 12 மணி வரை முதல் ஸ்லாட். அலுவலக நேரத்தில் அரை நாள் காலி! பின் மாலை 6 டு 7. கடைசி ஸ்லாட் நள்ளிரவு 1 முதல் 2 வரை!

இது தீபாவளிக் காலமாம்! பொட்டுத் துளி மழை வரவில்லை. பட்டாசு சத்தங்கள் கேட்கவில்லை. இதுவா மழைக்காலம்? தமிழகத்தில் வெயில்காலம், குளிர்காலம், மழைக்காலம், வசந்தகாலம் எல்லாம் மாறிப் போய் ஒரே கொளுத்தும் அனல் பொழுதுகள் மட்டுமே அவதரித்துள்ளன.

இருள் வந்து கவ்விய பின் பிறை நிலா நில்லாது உருண்டு ஓடிக் கொண்டிருந்தது. தொப்பியைப் போல் கருப்பு எங்கும் கவிழ்த்திருந்தது.



* தீராக் கொசு ரீங்காரத்திலும், நசநசக்கும் வேர்வையிலும், கரும்புகை கொப்புளிக்கும் சீமெண்ணெய் சீசா விளக்கின் நுனி நடனமிடும் நெருப்பின் ஒளியில், இரட்டை வரித் தாட்களில், அ, ஆ, இ, ஈ எழுதும் குட்டிச் சிறுமி, அந்த விளக்கைப் போல் எதிர்காலத்தின் மேல் ஒரு ஒளியைப் பாய்ச்சுகிறாள்.



* னிக்கிழமை கதைகள் பேசிக் கொண்டிருந்ததன் வாயிலாக மனவெளியில் காலத் தடை தாண்டி எங்கெங்கோ பயணம் சென்று கொண்டிருந்தேன். அடுத்த நாள் மூட்டை முடிச்சுகளோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கொல்லம் வழியாகத் திருவனந்தபுரம் செல்லக் கிளம்பினேன்.