Showing posts with label சிறுகதை.. Show all posts
Showing posts with label சிறுகதை.. Show all posts

Monday, January 12, 2015

அவர்கள் இருக்கிறார்கள்.


வர்கள் நம் தலைகளுக்கு மேலேயே அடர்ந்திருக்கிறார்கள். உறங்கும் போது மெல்ல கைதூக்கினால் தொட்டு விடலாம். ஆனால் அவர்கள் உறங்குவதேயில்லை. அவர்கள் இமைப்பதுமில்லை. அவர்களுடைய உடல்கள் ’உடல்கள்’ என்ற நம் வரையறைக்குள்ளேயே வருவதில்லை. மிக மெல்லிய நூல்களைப் பிரித்துச் சேர்த்தவர்கள் போல அல்லது ஒளிக்கம்பிகள் போல பிரகாசமாய் மென்மையாய், இதுவரை பூமிப்பிரதேசத்தின் மீது விழுந்து வாழ்ந்திறந்த அத்தனை கோடானுகோடி லட்சம் கோடி ஜீவன்களும் ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டு அங்கே தான் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். நமக்கென்று அந்தரங்கம் என்று ஒன்றையும் அவர்கள் விட்டு வைப்பதாயில்லை. நாம் கழிவிறக்குவதிலிருந்து காமமிறக்குவது வரை நம் இடது கழுத்தின் மிக அருகிலிருந்து, அவர்களுடைய குளிர்ந்த கைகள் நம்மைத் தொட்டு விடும் அருகாமையில் நின்று கொண்டு கவலையுடன் பார்க்கிறார்கள்.

ஒரு பொதுவான வகைப்பாட்டில் அவர்களை தன் விருப்பில், தன் விருப்பின்றி வந்தவர்கள் என்று வகைப்படுத்தலாம். தன் விருப்பில் என்பதன் கீழ் நோய்த் தீவிரம் தாங்க இயலாமல் போய் நீங்குவதை விரும்பி வந்தவர்கள், துயரம் நிறைந்த நினைவின் உச்சத்தில் நீங்கியவர்கள் என்று மேலும் சில வகைகள். தன் விருப்பின்றி என்பதன் கீழ் வாழ விரும்பியும் நோய் தின்றவர்கள், எதிர்பாரா விபத்தை எதிர்கொண்டவர்கள் என்று மேலும் சில வகைகள்.

அவர்களுடைய முகங்கள் வெண் மெழுகைப் போல் வழுவழுவென்றிருக்கின்றன. பிற உடல் முழுதும் சாம்பல் நிறத்தில் சன்னமான நிலாக்கிரணங்கள் போல மிதக்கின்றன. அவர்களுக்கு பசிப்பது இல்லை; தாகம் எடுப்பது இல்லை; வேறெந்த உடல் தேவைகளும் அவர்களை மயக்குவதும் இல்லை.

நிலாக்கால இரவுகளில் தொலைதூர மலை முகடுகளில் அமர்ந்து கொண்டு நட்சத்திரங்களின் பனி ஒளியின் கீழே தங்கள் பொன் நாட்களை நினைவு கூர முயல்கிறார்கள். ஆனால் பிரேதத்துடன் நினைவுகளும் நீங்கி விடுவதால், அவர்கள் தம்மைப் பற்றி மீட்டுக் கொண்டு வரத் திணறித் தவிக்கிறார்கள். பின்னிரவில் பிரயாணம் செய்வோர் ஒவ்வொருவரையும் நிலா, மேகத் தடாகத்திலிருந்து ஈரமாய் எழுந்து மறைந்து தொடர்ந்து வந்து பார்ப்பது போல், அவர்கள் தம் வாரிசுகள் அத்தனை பேரையும் ஒரே சமயத்தில் பார்க்கிறார்கள். அப்படிக் கூர்ந்து பார்ப்பதன் மூலம் தம்மை மீண்டும் நிகழ்த்திக் கொள்ளும் விழைவை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

இராக்காலப் பொந்துகளில் நெருப்பை மட்டும் தின்று வந்த பழமூதாதையருக்கு இளமூதாதையர் சக்கரங்களைச் சொல்லிச் சொல்லி விளங்க வைக்கப் பார்த்தும் முடியாமல் திகைக்கிறார்கள். இவர்களுக்கு கற்கருவிகளை அடுத்த இளமூதாதையர் விளங்கச் சொல்லத் தோற்கிறார்கள். அவர்கள் இறந்த கால வரிசையில் நிரப்பப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் ஒதுக்கப்பட்ட புள்ளிகளில் வசிப்பதில்லை. திரிந்து கொண்டேயிருக்கிறார்கள். என்றாலும் நம்மைப் பார்ப்பதை அவர்கள் விடுவதேயில்லை.

நான்கு வகைக் கனவுகளைத் தினம் காண்கின்றவர்களை அவர்களுக்கு மிகப் பிடிக்கின்றது. ஒவ்வொன்றிலும் அவர்கள் ஒரு பாத்திரமாகி விடப் பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் அதன் நிகழ் மணித்துளிகள் குறைவு என்று அவர்கள் குறை பட்டுக் கொண்டாலும் கிடைத்தவரை தம்மை அந்த மனங்களில் நிகழ்த்திக் கொள்கிறார்கள். விழித்தெழுந்து சில நிமிடங்கள் நாம் குழம்பி, மன ஆடி அசைந்து சமநிலைக்கு வரும் போது அவர்கள் மெல்ல வெளியேறித் தலைக்கு மேலே இடித்துப் பிடித்து நின்று விட்டு குனிந்து பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்.

நம் வன்மங்களை, துரோகங்களை, சிரிப்புகளை, முகமூடிகளை, நாடகங்களை வேறெவரையும் விட அவர்கள் நன்கறிவார்கள். நம் தெய்வங்களை எல்லாம் நாம் நீக்கி விட்டு அங்கே அமர்த்தி வைத்து விட்ட நம் தர்க்கக் கருவிகளைத் தவிர்த்து இறுதி தினங்களில் நாம் பொய் சொல்லித் தப்பிக்கவே முடியாமல் நேர்கொண்டு பார்க்கவே இயலாத கண்கள் கொண்டவர்கள் அவர்கள்.

அவர்கள் இருக்கிறார்கள், நம்மைப் பார்த்துக் கொண்டு.

பணிமையச் சேவகன்,
ழழ. மிக்.

பெருமரியாதைக்கு உரிய உயர்நிலைப் பனிரெண்டாம் அடுக்கு முன்னவருக்கு,

அயல் தளத் தொடர்பு வளர்ச்சிகளுக்கான ஆராய்ச்சித் திட்டத்தின்படி இறந்துபட்ட ஆத்மாக்களின் உலகுக்குச் சென்று வந்த ‘தொடர்பியல், உள்வாங்கல் மற்றும் நீக்கல்’ பணிமையச் சேவகர் ழழ.மிக் கொடுத்த குறிப்புக் கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். தங்கள் பணிச்சுமைகளின் கனத்துக்கிடையில் இதை ஒரு பார்வை பார்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: கவிதைகளில் ஆர்வம் கொண்ட தேசாசேவகர்களைத் தகவல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு அனுப்புவதைப் பற்றி மற்றுமொரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ழஸ. மன்.
துணை நிர்வாகர்,
தொடர்பியல், உள்வாங்கல் மற்றும் நீக்கல் பணிமையம்,
மிஸை துணைநகரம், ழான்.

(சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தது.)

Monday, December 07, 2009

Indianness.

டெல் கணிணி நிறுவனத்தார் ஒரு விர்ச்சுவல் ஸ்டுடியோ நிர்மாணித்து, அதில் 1. வரைகலை, 2.நிழற்படக்கலை, 3.எழுத்துக்கலை ஆகியவற்றில் தேசம் எங்குமிருந்தும் படைப்புகளை வரவேற்றார்கள். கஸின் பாலாஜி சொல்லித் தான் இப்படி ஒன்று நடப்பதாக அறிய வந்தேன். உடனே எங்கோ சுறுசுறுவென்றது. ஆங்கிலத்தில் எழுதும் ஒரு வாய்ப்பு என்பதாலும் முதல் இரண்டிலும் இப்போதைக்கு எனக்கு போதை இல்லை என்பதாலும், மூன்றாவதில் இறங்க முடிவெடுத்து, சில வகைகளில் எழுதலாம் என்று சார்ட் போட்டு வைக்க, மடிக்கணிணியின் திடீர் உறக்கத்தில் அத்தனையும் எழுத முடியாமல் போனது. மூன்றே மூன்று மட்டும் எழுதிக் கோர்த்திருந்தேன்.

அதில் ஒன்றான Indianness என்ற இச்சிறுகதையைக் கீழே படிக்கலாம். வழக்கம் போல் இலக்கணக் கற்களைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுங்கள்; இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று வருகின்றேன்.

The following was what happened, during my last visit to India. It was my first visit too.

Hai, I am John. I run a medium level computer company at Westbourne. Apart from looking excel sheets and worrying about the shares, I have one more activity which boosts my spirit. Travel. I love traveling. I visited enough countries where euro gets accepted with a smile. I experienced a lot in the lands. Once I was in Congo and swam over the waves of Nile, I was a bit escaped from a gun shot. At Afghan, I met a wonderful friend named Mr.Rasoul. Even now, he sent mails frequently.

The idea of visiting India came from one of my off-shore partner Mr.Dinesh Chawla. He runs a small software developing company with less than thirty employees at Gurgaon. After some casual chats, we came to a plan that I have to visit his company and design our strategies for the next year. And I could travel as per my wish.

My preference was Kanpur. Surprised..?

The very first thing, which I came to know about India, was neither Mahatma Gandhi nor TajMahal. It was the 1857 Indian Mutiny. My mother told me about that very long back. I never forget her lines, "Honey..! This picture was my grandpa Mr.William Atkinson. Your great grandpa. There was a country named India. Once it was under East Indian Company rule. He was a soldier in an army troop at Kanpur, a small town then. On 1857 there was a mutiny happened. At that time he was killed by an Indian chepoy." He was sitting on a chair in that old picture. His eyes showed the power.

Clearly, the story of my ancestor getting killed in India didn't make me to think about my decision twice. I tried to learn some Hindi words. I searched some websites to know about India. And, I traveled to Delhi last July.

The conveyer belt in Delhi International Airport, sucked. It didn’t roll for a long time. I turned around and found my package and took all my travel accessories. After getting out of the security checkups, I called Dinesh. He was waiting for me at the lounge. After greeted ourselves, we walked out of the centralized AC building. Immediately I was caught under the hard and hot hands of Mr. Sun. Suddenly I thought about my g.grandpa who worked under the same sun, one and half centuries back.

After two days of official meetings, I started to travel towards Kanpur. Dinesh could not come with me, since his mother was serious at that time. One of his office mates Mr.Varun Malhotra accompanied me. He was a young man. We traveled by a tourist cab. He talked a lot. And slowly he delved into sleep. I was awakening. I stopped the cab often, to take enough good snaps of the sceneries around us.

Agra was on the way. But I was more interested on a well which succumbed enough of British dead bodies of ladies and children than a huge building for a single queen. So I skipped it. Now the well wasn’t there at Kanpur. Instead there was an 'all souls church'. I wished to pray there for my ancestors.

When we reached Akbarpur, the cab broke down, unexpectedly. The A/C was getting off. Varun got up and he himself getting sweated immediately. No need to tell about me. He enquired the status of the cab and the driver replied. From what Varun told, I came to know that the cab won’t move within two hours. Damn..!

I got out of the car. The town was getting fried. And a foreigner is always an attractive specimen. The children, the walkers, cyclists and the old men who sat idle in the shops looked me. The driver dived into the engine. Varun checked his mobile to arrange another cab or scolding the cab owner, I didn’t know. It was dead. He went to search for a PCO box. At that time, a cyclist stopped his cycle near to me and stared me closely. Was I looked to him as an actress..?

"Hai..! I am Nandalal. I am a school teacher. If you can’t bear the Indian heat, you can come to my home for some time to take a little rest..!"

"Hai..! I am John from England!" I replied. We shaked our hands. His English was broken. Yet I understood that. I couldn't refuse the offer for two reasons. First thing, as he told I couldn’t stand under this raging sun. Second, the traveler inside me instructed, to meet different people. I looked for Varun. He wasn't nearby. I joined him. I took my camera and sat the back of the cycle. Oh..! my back..!!

His house was a far outer from the NH91. Three cows were standing there sleepily inside their own kettle. By seeing us, within a second a small crowd came and surrounded his home. Isn't a rare scene that a Whiteman was sitting behind a bicycle and their neighbor riding it?

We entered his home. The windows were open and filled with faces enough to block all the sunlight and flies, tried to come inside. His wife and children were standing and staring me with a shy.

"Sorry..!" He told to me and told something to the neighbors in Hindi. The crowd slowly vanished. I started to look the house.

A TV stand was there. Some dance was running in the TV. Some books were present. Some goddesses were hanging on the walls. A tube light was blinking. A fan was trying to revolve but failed considerably. "Low voltage..!" he told. And, I saw a lengthy knife was framed and kept on high.

I looked that with interest. He came with a plate of sweets and glass tumbler of water. He noticed my looking and told, "It was one of our ornaments from the past. My ancestors used it during the wars in ancient times. Lastly it was used by my great grand father during...! Please take the sweets...” he sat in a nearby chair.

I got that he didn’t complete the sentence. I asked," Can you tell me where it was used lastly..?"

He was silent for some time and told. "During the 1857 mutiny at Kanpur..!"

Now it was my turn to be silent. Then I told, "Dear Nandalal..! Do you know one thing..? My name is John Atkinson. My great grandpa was a soldier in a British army troop during that time. He was killed then..!"

Nandalal was shocked. "Are you related with Atkinson..?” I nodded. "This knife was getting bathed with a river of blood on that fateful day. It might touch your grandpa too..!"

Uneasiness surrounded us. The situation was so dramatic. The third generation of two enemies fought for their own kingdoms, met in a dry July month. From somewhere, the sound of a crow flying came. The dusk was approaching.

"Mr.Atkinson. I have a gift for you!" He told and went inside of a room. I saw the nearby one. One of his children smiled. I called him. He looked his mother's face for approval. She nodded. The boy ran towards me. I wondered how the children in India respect their parents.

I took him and kept on my lap.

"naam kya..?" I learnt some words before starting to India.

"Krishna...” the voice was so powerless.

Nandalal came with a box. It was very old. Layer after layers of dust were present on it. He opened it slowly. The noise itself told that inside of the box got fresh air after so many years. He took a small box. He opened it. A small ring was present there.

"Mr. John Atkinson! This ring was your grandfather's. The name 'Atkinson' was present on it. My grand father robbed enough of prosperity that day. I suspect he had stolen from your grandpa after killing him. It was a sin carrying this with us. Now today is the day which our sin gets vanished. Please take this..!"

I was dumb struck.

This was their property. My countrymen came here to do business and then captured the entire nation. They robbed India for more than two centuries. The entire wealth ness generated here was taken to England’s wellness. But this poor school teacher tried to return what his grandpa looted from mine long ago.

Is this the one which makes this country sustain for her entire history..? Does this humanity of her children make her alive under all her invaders? Is this Indianness, the world has to learn?

Yes, here the mobile didn’t work. The land was as hot as the sun attacked directly. The roads were damaged. The poverty was high. But the humans are there. The real humans, who respect the other men, lived there. I read about Gandhi. But, no way could I see him. There, I have seen the ideology of Mahatma in Nandalal. If India was filled with Mahatmas, who will win this country..?

I felt, my eyes were wet.

I told, “Dear lovable Nandalal..! I was grateful to get this ring from you. You really proved, you are a real son of this country. I respect that. But I can’t take this ring. It must be yours..!"

"No John..! This was stolen one. After I found the owner, how can I keep it further? Please take..!"

I thought for a moment. Then I took it. "Nandalal..! Now its mine. So I can use it as my wish, right..?"

"Yes John..!"

I took his son Krishna and opened his right hand fingers and kept the ring. Then I closed his fingers. "Now I gave my property as per my wish..!"

Nandalal was silent. Small tears rolled on his cheeks.

After half-an-hour, I reached the same place where I left NH91. Varun was searching me. And then he was happy after seeing me. We entered into the cab. I waved my hands to Nandalal.

"Ok..! Driver, please go fast to Kanpur, so that we can reach it before night..!"

I told peacefully, "Varun..! Let’s return to Delhi. Now, there is no necessity to see churches. I have seen the godness here itself...!"

He stared me with enough confusion.

படித்துப் பார்த்துக் கருத்து சொன்ன தமிழ்ப்பறவை, 'நாடகீயம் அதிகமாக இருக்கின்றது' என்றார். சில சமயம் சம்பவங்களில் நாடகத் தன்மை இருக்க வேண்டியது அவசியம் என்றே நான் நினைக்கிறேன். இல்லாவிட்டால், இதன் எந்திர இறுக்கம் நம்மை அழுத்தி விடும். மனதளவில் ஃப்ரிக்ஷனைக் குறைக்கச் சில எமோஷனல் நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன.

Sunday, November 15, 2009

Blackhole..!

ன் உடைமைகள் அனைத்தும் க்ரஷ் செய்யப்படுகின்றன.

அதிகமில்லை, இந்த சிட்டி கவுன்ஸில் அனுமதிக்கும் அளவிற்கு மேல் ஒரு தனி மனிதன் வைத்துக் கொள்வது இயலாத காரியம். நகரம் முழுதும், தெருக்களில் எங்கும், வீடுகளின் அத்தனை அறைகளிலும் ஃபைபர் நரம்புகளின் பேட்டரிக் கண்கள் எங்களைத் துரத்திக் கொண்டேயிருக்கும்.

என்னிடமும் அத்தனை பொருட்கள் இல்லை. சில மெமரி ஸ்டிக்குகள், ஒரு படுக்கை, பூமி நினைவாகச் சில புத்தகங்கள் (ஆர்க்கியாலஜி சொஸைட்டியிடம் இவற்றுக்கு இன்றைய மதிப்பு அரை லிட்டர் சூடான நீர்!), ஒரு மேகத் தலையணை மற்றும் இப்போது நான் அமர்ந்திருக்கும் லேசர் சுழலி.

எனக்கு நேற்றோடு இருநூற்றைந்து வயதாகின்றது. ஜி.௭.8.1.45ல் வாழ்ந்தது போதும் என்றாகி விட்டது. இதன் வசதிகள், வளமைகள், காற்றில் மிதக்கும் களிப்புகள், இங்கு கொஞ்சிய சிமுலேட்டட் கன்னிகள் அத்தனையும் அலுத்துப் போய் விட்டன. பூமிக்குத் திருபி விடலாமா என்று சில நாட்களாக தோன்றிக் கொண்டேயிருந்தது. மனித உரிமைக் குழுவிற்கு விண்ணப்பித்ததில், இன்று அனுப்பி வைக்கிறார்கள்.

"இன்னும் ஏழு நிலா மணிகளில் நான் ரிப்போர்ட் செய்தாக வேண்டும். இந்த வயதில் பூமிக்குப் போக வேண்டும் என்று என்ன அடம்..!" என் உத்தம புத்திரன் மகி தான்.

ப்ளேனட்டின் ஸிந்தட்டிக் வெயில் ஜெனரேட்டரின் க்ரூப் வைஸ் ஹெட். பிறக்கும் போதே, இவன் இதற்குத் தான் என்று வகைப்படுத்தப்பட்டு, அதற்கான டெக்னிக்கல் தகவல்கள் ஸிரப்புகளாகத் தரப்பட்டு... எதற்கு உங்களுக்கு டெக்னிக்கல் ஜார்கன்கள்..? அவன் அதற்கானவன்.

"பாவம் மாமாவுக்கு என்ன ஆசையோ..! கொஞ்ச காலம் போய்ட்டுத் தான் வரட்டுமே..!" என்றாள் என் மருமகள் நிசி. அவளுக்கு என் மேல் எப்போதும் கொஞ்சம் பிரியம் அதிகம். என் மகனுக்காக என் நண்பனின் மகளான இவளைத் தேர்ந்தெடுத்தது நான் தானே!

நான் அமைதியாகவே இருந்தேன். சுழலியை நகர்த்தி, வெளியே வந்து பார்த்தேன். வானம் அதிக வெண்மையாக இருந்தது. இன்று நிறைய ஐஸ் கட்டிகள் நிரம்பியிருந்தன. எங்கேயோ ஓர் எரிமலை இருமுவதை லேசான வெம்மைக் காற்று (வென்றல்!) வீசிச் சொல்லியது. இன்னும் ஐந்து பூமிநொடிகள் தான் இருக்கின்றன. என்னைக் கூட்டிச் செல்லும் வாகனம் வந்து விடும். ஒரு சிறப்பு ஆப்ஷனாக எம்.ஆர்.1432 கேட்டிருந்தேன். காரணம், அது எனக்குப் பிடித்தது. என் மகன் பிறந்த போதும், கவுன்ஸிலுக்கு அதுவே கூட்டிச் சென்றது.

என் இரட்டைப் பேரன்கள் மிது1, மிது2 இருவரும் வி.ஆர். விளையாட்டுகளில் கிலோபைட் எதிரிகளாகி, வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னைக் கவனிக்க நேரமில்லை. நானும் அப்படித் தானே இருந்தேன். பூமியிலிருந்து இந்த துணைக் கிரகத்தில் காலனி அமைப்பதற்காகக் கிளம்பும் போது, அப்பா அழுதார். இதன் செல்வங்கள், அற்புத வாழ்க்கைக்கான வாய்ப்புகள் அவரை மறைத்தன.

எம்.ஆர். 1432 வந்து விட்டது. நான் என் சொத்துகளோடு பின்புறம் ஏறிக் கொண்டேன். மகன் முன்புறம் அமர்ந்து கொண்டான். மையக் கட்டுப்பாட்டு அறை மூலம் இயக்கப்படும் இந்த வாகனத்தில் இருவரும் அமர்ந்து கொள்ள, கிளம்பி விட்டது. ஒரே ஓர் ஐஸ்கட்டி பக்கத்தில் விழுந்தது.

ன்னல்கள் வழியாகப் பார்த்துக் கொண்டே வந்தேன். காலம் தான் எத்தனை வேகமாக மாறிக் கொண்டே வருகின்றது..! முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு முதன் முறையாக வந்த போது, கே.ஓ. 187, ரி.ஜெ.65-டி, போ.ஜி.09௩எ அத்தனையும் பனிக் காடுகள். முழுக்க முழுக்க பனிப் போர்வையால் மூடப்பட்டிருந்தன.

"எஸ் நிரு..! நீங்கள் வரும் போது அப்படித் தான் இருந்தன. இன்று நீங்கள் பார்ப்பது நமது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு சிறு கூறு! இவற்றைச் சூழ்ந்திருந்த பனிப்பாளங்கள் உடைக்கப்பட்டு, செயற்கை வெயில் ரிஸீவர் ஆண்டெனாக்கள் நடப்பட்டு, நமது கிரகத்திலிருந்து வெப்பக் கற்றைகள் ட்ரான்ஸ்மிட் செய்யப்பட்டு... அத்தனை 'பட்டு'க்களின் பயனாக இப்போது சில கரப்பன்பூச்சிகளைச் சில பல்லிகளைச் சோதனைக்காகப் பூமிலிருந்து கொண்டு வந்திருக்கிறோம். அவற்றால் வாழ முடிகின்றதா என்ற சோதனைக்காக..!" புன்னகைத்தது ஸ்பீக்கர்.

என் எண்ணங்கள் உடனடியாகச் சோதனை செய்யப்பட்டு, ஆச்சரியங்களுக்கான விடை உடனடியாக எனக்குத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தனை கிரகங்களிலும் ஒளித்தூறல்கள்..! எத்தனை வர்ணங்கள்..! எத்தனை குதூகலங்கள்..! பால்வீதி முழுதும் விழாக் கொண்டாட்டங்கள். எத்தனை ஜ்வலிப்பு..! எத்தனை பிரகாசம்..!சில நட்சத்திரங்கள் சாகின்றன; சில பிறக்கின்றன; சில வெள்ளைக் குள்ளர்களாகி அழுகின்றன; சில சிவப்பு ராட்சதர்களாகிப் பயமுறுத்துகின்றன.

சலார்...புலார் என்று வாகனங்கள் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆங்காங்கே காந்தப் புலக் கட்டுப்பாடுகளுக்காக ஆட்டோமேட்டிக் திசை திருப்பான்கள் திருப்பி விடுகின்றன. ஐ.ஆர். சாலைகள் நேர்க்கோட்டில் போடப்பட்டுள்ளதால், கிரகங்களுக்குத் திரும்பாமல், நேராகச் செல்ல முடிகின்றது. ஜி.ஈ. (ஜி டு எர்த் வரை) நெடுஞ்சாலை வழுக்கிக் கொண்டு செல்கின்றது. அதில் தான் சென்று கொண்டிருந்தோம்.

"பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! சாலையில் தற்போது ஒரு கருந்துளை புதிதாக ஏற்பட்டுள்ளதால், இருபத்தேழு ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு வளைந்து செல்ல வேண்டியுள்ளது..! தயாராக இருக்கவும்..! நன்றி..!" ஸ்பீக்கர் கரகரப்பின் பின் எனக்கு ஆர்வமாக இருந்தது.

நான் இதுவரை கருந்துளைகளைப் பார்த்தில்லை. மகி காது நோண்டிக் கொண்டிருந்தான்.

"மகி..! நீ ப்ளாக்ஹோல்ஸ் பார்த்திருக்கியா..?"

"பல தடவை..! என் பயணங்களில் பலமுறை அவற்றைக் கடந்து போயிருக்கிறேன்..!"

"அதுல என்ன இருக்கும்..?"

"இதுவரை தெரியல..! நாம நிறைய வளர்ந்திருக்கோம். பல கிரகங்களை ஆக்குபை பண்ணி, அங்கே எல்லாம் சுக வாழ்விற்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கிறோம்..! பட், இன்னும் ப்ளாக்ஹோல் பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்க முடியல..! வர வர நாங்களும் அதைப் பற்றி ஒண்ணும் கண்டுக்கறதில்லை. நம்மைத் தொந்தரவு பண்ணாம அதுபாட்டுக்கு ஒரு மூலையில இருந்தாச் சரின்னு விட்டாச்சு..!"

நான் சிரித்துக் கொண்டேன்.

"கருந்துளை அருகில்..! மாற்றுப் பாதையில் செல்லவும்..!" லேஸர் போர்டு மிதந்து திசை காட்டியது.

சாலை அங்கே கொஞ்சம் வளைந்து, சுற்றிச் சென்றது. கருப்பாய்த் தெரிந்தது. ஒரு பெரும் கறுப்பு வட்டம். அது ஒரு குழியாய் இருக்குமா, சமதளமா ஒன்றும் தெரியவில்லை.

திடீரென நெஞ்சு வலி போல் உணர்ந்தேன். குப்பென்று வியர்த்து விட்டது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. "பயணி எண் 2 இறந்து கொண்டிருக்கி..." அவ்வளவுதான் என்னால் கேட்க முடிந்தது. அப்படியே சரிந்தேன். மகி ஏதோ கத்த, என் அருகின் ஜன்னல் விலகி விட, அப்படியே கருந்துளைக்கு மேல் விழுந்தேன்.

விழித்த போது இருட்டாய் இருந்தது. சுத்தமான கறுப்பு. கொஞ்சம் தொலைவில் ஓர் ஒளிப்புள்ளி தெரிந்தது. அதை நோக்கி நடந்தேன். மிதப்பது போல் இருந்தது. அருகில் செல்லும் போது, அந்த ஒளி ஃபோட்டான்களை ஒரு கை பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. தொட்டி மீன்கள் போல் அந்த ஒளித் துகள்கள் அந்தக் கைகளுக்குள் நீந்திக் கொண்டிருந்தன. யாருடைய கை என்று தெரியவில்லை.

"நான் எங்கே இருக்கிறேன்..?" கேட்டேன்.

மிக மென்மையான குரல் அங்கிருந்து வந்தது.

"relax..!
We are programmed to receive.
You can checkout any time you like,
But you can never leave!"

மெல்ல அந்த ஒளிகளை கை விசிறியடிக்க, அந்தப் பிரதேசம் தெரிய, அவன் தெரிந்தான். தலையில் கொம்புள்ள க்ரீடமும், பெரிய மீசையும் தெரிய அவன் புன்னகைத்த போது, எங்கோ எண்ணெய் கொதிக்கின்ற வாசம் வந்தது.

***

(சர்வேசன் 'நச்' சிறுகதைப் போட்டி - 2009க்கு எழுதியது.)

ஆங்கிலம் நன்றி :: Hotel California - Eagles.

Wednesday, September 16, 2009

ஓர் உரையாடல்.

ரையாடல் சிறுகதைப் போட்டியில் அறிவித்திருந்த நிபந்தனையின் காரணமாக ஒரு சிறுகதையை மற்றொரு வலைத்தளத்தில் பதிந்திருந்தேன். அதனை இங்கே இப்போது நகர்த்தி வைத்து விடுகிறேன். (உழக்கிற்குள் கிழக்கு மேற்கு..!!)


"ரொம்ப வலிக்குமா..?"

"நாட் தட் மச். ஒரே வலி தான். மொத்த வலியும் அந்த ஒத்த வலிதான். ஆனா, கால்கள் மட்டும் கொஞ்ச நேரம் துடிச்சிட்டு இருக்கும்.."

"கேட்கும் போதே பயமா இருக்கு. இதுல இருந்து தப்பிச்சுப் போயிட முடியாதானு இருக்கு..!"

"இம்பாஸிபிள். எங்க போனாலும் இது தான் உனக்கு. இது உன் விதி. மாற்ற முடியாது..! இருக்கும் இன்னும் கொஞ்ச நேரத்திற்கு உன் சந்தோஷக் கணங்கள் எதையாவது நினைத்துக் கொள்ளேன். பச்சைப் புல்வெளி, பாயும் அருவிநீர், விடியல் வெளி, காற்றில் அலையும் தாடி...! இப்படி எதையாவது. நான் சந்திப்பவர்களிடம் இப்படித் தான் சொல்வேன்.."

"ம்ம்..! அப்படி எனக்கு எதுவும் ஞாபகத்திற்கு வரலை. வந்தாலும், இந்த மரண பயம் ஒரு சல்லாத் துணி மாதிரி வந்து போர்த்திடுது..! ஒரு துக்கம் கவிந்த கடைசி நொடி இவ்வளவு பக்கத்திலன்னு நினைக்கும் போது முழுக்க சிலிர்ப்பா இருக்கு..!"

"அது எல்லார்க்கும் இருக்கு..! உனக்கு, எனக்கு, அந்த மரத்திற்கு, இந்த புழுவுக்கு, சூரியனுக்கு... எல்லார்க்கும்..! கால அளவுகள்ல தான் மாற்றம். எல்லோரும் ஒரே வேலையைத் தான் செய்றோம். பட், ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு செயல்கள் நீட்சியா இருக்கு. இந்த ஈசலைப் பாரு. மழை பேஞ்சா பிறக்குது. பறவோ பறன்னு பறக்குது. சில மணிகள்ல செத்துப் போய்டுது. அதே தான எல்லோரும் செய்றோம்...! உனக்கு ஒரு அனுமதிக்கப்பட்ட காலம். எனக்கு வேறு ஒன்று..! கடைசியில, அற்பமா காணாம போயிடறோம்..!"

"அது எல்லார்க்கும் இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற வாய்ப்பு அவரவர்க்குத் தானே இருக்கணும்..? என் கடைசியை முடிவு செய்யும் அதிகாரம் இவனுக்கு எப்படி வந்தது..? யார் கொடுத்தது..?"

"சிலர் கடவுள்னு சொல்றாங்க. சிலர் இயற்கை. சிலர் எவால்யுஷன். எனக்கு என்ன தோணுதுன்னா, நத்திங். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. உடல் முழுக்க எலெக்ட்ரிக் கரண்ட்கள் பொட்டுப் பொட்டா துடிச்சுக்கிட்டு ஓடிட்டு இருக்கு. அதெல்லாம் அதிர்ந்து போகற மாதிரி நிகழும் போது எல்லாம் முடிஞ்சிடுது. ஒரு ஸ்விட்ச் போடறாங்க; லைட் எரியுது; ஸ்விட்ச் அணைக்கறாங்க; லைட் அணைஞ்சிடுது; எங்கிருந்து ஒளி வந்திச்சு? எங்க ஒளி போச்சு? தெரியாது. இது என்ன வகையான ஸ்ட்ரக்சர்ல அமைக்கப்பட விதிகள்? தெரியாது. தெரிஞ்சுக்காம இருக்கறதுல தான் நமது மின்னல் துளி வாழ்க்கையோட இருப்பு இருக்குன்னு எனக்குத் தோணுது. ஒன்ஸ் தெரிஞ்சுக்கிட்டோம்னா, அந்த வாழ்க்கையே மறைஞ்சுடும்னு நினைக்கறேன். மனிதர்கள் முட்டி மோதித் தெரிஞ்சுக்கத் துடிக்கற கடைசி பூட்டு இந்த ரகசியமாத் தான் இருக்கணும். ஏதேதோ சாவி போட்டு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்காங்க. எப்பவாவது திறந்து பார்த்தாங்கன்னா என்ன இருக்கும்? வெறும் வெட்ட வெளி தான் இருக்குங்கறது என் அனுமானம்..."

"இவ்ளோ தத்துவங்கள் எனக்கு வேணாம். என்னை இன்னும் குழப்புது. நான் ரொம்ப எளிய ஆசாமி..! அந்த நொடிகள்ல என்ன நினைச்சுக்கலாம்? வலி குறைய. வலி மறைய. ஏதாவது சொல்லேன்."

"புரியுது. உன் வாழ்க்கையில் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகின்ற ஏதாவது ஒன்றை நினைத்துக் கொள்ளப் பார். உன் காதலிகள், கயிறு இறுக்கும் முடிச்சுகள், அம்மாவிடம் முட்டிப் பால் குடித்தது, சகோதரர்களுடன் சண்டைகள், இப்படி...!"

"நீ நிறைய பேரைப் பார்த்திருக்கியா..?"

"நிறைய..! வெகு நிறைய..! பல பேர் உன்னை மாதிரி தான் நடுங்குவாங்க.."

"நான் நடுங்கலை..!"

"பொய். உன் குரலே வேர்த்திருக்கு. கால்களைப் பார்க்கிறேன். இப்படியும் அப்படியுமா தடுமாறுது. பெரும்பாலும் இப்படித் தான். அவங்களைக் கொஞ்ச நேரம் இந்த மரணத்திற்காக காத்திருக்கும் துளி நொடிகள்ல சந்திச்சுப் பேசுவேன். ஆசுவாசப்படுத்துவேன். அப்படி ஒண்ணும் நடுங்கக் கூடிய அனுபவம் அல்ல. நாம் இல்லாம போற அந்த நொடி உங்க எல்லாருக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒண்ணா இருக்கு. வொய் நாட்? எனக்கும் அப்படித் தான் இருக்கும். தேங்க் காட், நான் மேடைக்கு இந்தப்புறம் இருக்கேன். என் வேஷம் வேற. உங்களிடமிருந்து மாறுபட்டது. எனக்கான முடிவு வேறு ஏதாவது வகையில் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும். எல்லோரும் அந்த முடிவுக் கணத்தை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.."

"இன்னும் எனக்கு முன்னாடி எத்தனை பேர் காத்திட்டு இருக்காங்க..?"

"அப்படி பிக்ஸ் பண்ணி சொல்ல முடியாது. ரேண்டம்னஸ் தான். அந்த எதிர்பாராத் தன்மை ஒரு வித நிச்சயமின்மையைச் சொல்லுது. மாறாக நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் நாம் அதற்காக காத்திருந்து எண்ணிக் கொண்டிருப்போம். நெருப்பு வேதனையா இருக்கும். சொல்லப் போனால், அந்த திடீர்த் தகவல் - 'நீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாய்' - நம்மைத் தயார் செய்து கொள்ளக் கூட அவகாசம் தரப்படாத நிலை கொஞ்சம் நல்லது தான் என்றே எனக்குப் படுகின்றது. சட்டுனு எல்லாம் முடிஞ்சிடும்..."

"நான் பிறந்து எதுவும் சாதிச்ச மாதிரி தெரியல. நிறைய சகோதரர்களோட பிறந்தேன்; பாலுக்கு சண்டை போட்டேன்; ஒரு இடத்தில இல்லாம திரிஞ்சேன்; ஓடினேன்; வெயில அலைஞ்சேன்; கொட்டற மழைல ஒவ்வொரு முடியும் கம்பி மாதிரி சிலிர்த்துக்கிட்டு நிக்க, நனைஞ்சேன். தாடிகளை வளர்த்தேன்; ஜோடிகளைப் பிடிச்சேன்; ஒரே கொண்டாட்டம் தான்; இப்ப அத்தனையும் வெறும் நினைவுகளா, எனக்கு மட்டும் தெரிஞ்ச அனுபவங்களா என்னோடு மறைஞ்சு போகப் போகுது. நத்திங் ரிமைன்ஸ் ஃபார் எவர்...!"

"தட்ஸ் ட்ரூ..! ஆனா அந்த அனுபவங்கள்ல நீ திளைக்கும் போது, களைக்கும் போது உணர்வுகளின் உச்சத்தில இருந்த இல்ல...? எல்லா சந்தர்ப்பங்கள்லயும் நாம அந்த நேரத்து எலெக்ட்ரான்களின் பாய்ச்சல்கள்ல முழுமையா சிக்கிக் கொள்கிறோம். அப்புறமா நினைச்சுப்பார்த்தா சிரிப்பாக் கூட வரும்..."

"அப்ப, நான் அந்த கெமிக்கல் ஃப்ளூய்டுகளின் அடிமை தானா..?"

"அப்படி இல்ல. நான்னு தனியா எதுவும் இல்ல. நான், அப்படிங்கறதே அந்த கெமிக்கல்களும், அவற்றின் ந்யூரான் செய்திகளும் தான். நாம் தான் அவை; அவை தான் நாம்; இதுல அடிமைங்கறதெல்லாம் எங்க வந்திச்சு..?"

"அப்படின்னா இந்த வாழ்க்கையோட தாத்பரியம் தான் என்ன? நான் எதுக்காக இங்க வரணும்? ஏன் இப்படி வாழணும்? ஏன் என் விதி இப்படி ஒருவன் கைகள்ல முடியணும்..?"

"தேடறோம். எல்லோரும் இதைத் தான் தேடறோம். வி கேம் பேக் எகெய்ன் டு த கொஷன். ஏன் இதெல்லாம்..? தெரியாது."

"உயிர் போன பிறகு நான் எப்படி இருப்பேன். கொஞ்சம் சொல்லு.."

"வேணாம். ரொம்ப வருத்தப்படுவ.."

"பரவாயில்ல. ஐ வாண்ட் டு நோ தட். என்ன ஒரு வேடிக்கை பாரேன். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டோம் அப்டின்னு ஆணவமா இருக்கோம். ஆனா, சிம்பிள்... மரணத்திற்குப் பின் நம்ம உடல், நம்ம கூடவே இருந்த உடல், இன்ஃபாக்ட் அது தான் நாமன்னு நினைச்சுக்கற உடல், எப்படி இருக்கும்னு கூட தெரியாத அப்பிராணிகளா இருக்கோம். வாட் எ ஸ்ட்ரேஞ் ரூல்ஸ் ஆல் திஸ்..?"

"தட்ஸ் த ஸ்ப்ரிட். நீ இதை ஒரு வேடிக்கையா எடுத்துக்கும் போது வலி உடல்ல மட்டும் தான் இருக்கும். உன் மனசுக்கு வராது. இதையும் நீ ஒரு எறும்பு கடிக்கற மாதிரி, எங்கயோ இடிச்சுகிட்ட மாதிரி எடுத்துக்கிட்டயினா இதுவும் ஒரு சம்பவமா கடந்து போயிடும். எனி ஹவ், நீ விரும்பற. நான் சொல்றேன். முடிந்தவுடன் குரல் வளைல காத்து சிவப்பு மொட்டுகளாய் 'கொப்ளக்..கொப்ளக்..'னு வெடிக்கும். கால்கள் மட்டும் உயிர் இருக்கோன்னு ஒரு வித சந்தேகத்துல அப்பப்போ துடிக்கும். காதுகள் விறைச்சுக்கிட்டு நிக்கும். தொடைகளுக்கிடையில் நெரிபடறதால் விரைகள் ரொம்ப கலங்கிப் போய்டும். முக்கியமா உன் வால்...!"

"வால்...? அதையும் சொல்லிடு..!"

"நத்திங். வால் விடைச்சுப் போய் நிக்கும். மெல்ல மெல்ல உன் உடல் ஒரு இறந்த கால உடலா மாறும் போது, தோல்கள் உறிக்கப்பட்டு, குடல் சுத்திகரிக்கப்பட்டு, ரத்தங்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டாக நீ விற்பனையாகும் போது தனியான உன் தலையில் கண்கள் மட்டும் வெளிறிப் போய், எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கற மாதிரி திறந்திருக்கும். சின்னக் கொம்புகள் மேல் ஈக்கள் சுத்தும்."

"ஓ..! என்ன ஒரு கோரம். பட், நான் இப்ப தயாரா இருக்கேன்."

"அவன் வர்றான். எல்லார்கிட்டயும் நான் ஒரு கடைசி கேள்வி கேப்பேன். உன்கிட்டயும் கேட்டுடறேன். உன் உடல்ல உனக்கு ரொம்ப பிடிச்ச பாகம் எது? முன்னங்கால்கள்? பின்னங்கால்கள்? ஈரல்? குடல்? ரத்தம்? எலும்புகள்...? தொடைகள்..?"

"எதுக்கு கேக்கற?"

"ஜஸ்ட் ஃபார் மை சேக். சொல்லேன்.."

"ம்...! என் ரத்தம் எனக்குப் பிடிக்கும். என் இரவுகள்ல அத்தனை சூடா பாயும் அந்த சிவப்பு வெள்ளம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..!"

"வெல். எனக்கு எதுக்குத் தேவைன்னா, உன்னை வெட்டும் போது நிறைய சதைத் துணுக்குகள் சுத்தியும் சிதறும். அதுல உனக்கு எது பிடிச்சிருக்குன்னு சொல்றியோ அதை மட்டும் அவனுக்குத் தெரியாம கவ்விட்டுப் போய் மண்ணைக் கிளறிப் புதைச்சிடுவேன். இது ஒரு மாதிரி உங்களுக்கு நான் செய்ற மரியாதைன்னு நினைச்சுக்கறேன். மத்த பார்ட்ஸை எல்லாம் சாப்பிடுவேன். அதை மட்டும் சாப்பிட மாட்டேன்."

"...."

"ஓ.கே. தேங்க்ஸ் ஃபார் எ நைஸ் கன்வர்ஸேஷன். பை. ஸீ யூ லேட்டர், சம்வேர். என்னைத் துரத்த கல்லை எடுக்கறான்.."

"ஓ.கே. பை. என்னை வெட்ட கத்தியோட வர்றான்.."

Wednesday, September 02, 2009

பொன்னி.

ஃபேக்டரியில் ரெண்டாவது ஷிப்ட் முடிய ஒரு மணி நேரம் இருந்தது. அதிகாலை ஆறு மணிப் பனியில் பார்க்க கட்டம் கட்டமாய் மின் விளக்குகள் தெரிந்தன. சிமெண்ட் கூரைகளின் உச்சியில் போக்கிகளிலிருந்து அழுக்காய்ப் புகைகள் மொத்தமாய் மேலேறிக் கலைந்து கலைந்து மறைந்தன. க்வார்ட்டர்ஸின் மெய்ன் கேட் சாத்தப்பட்டு, குட்டிக் கதவு திறந்திருந்தது. தொட்டாற்சிணுங்கியும், தாத்தாப்பூச் செடிகளும் மறைத்திருந்த கம்பி வேலியைத் தாவி பத்ரி உள்ளே நுழைந்து விட்டது. வாசல் ஆரம்பத்திலேயே இருந்த பிள்ளையார் கோயில் சுவற்றில் மறைந்து நின்றது. பொன்னி சைக்கிள் மணி அடித்துக் கொண்டேயிருந்தாள். கூண்டுக்குள்ளிருந்து செக்யூரிட்டி எட்டிப் பார்த்தான்.

பொன்னி கறுப்பு ரிப்பன்களால் தலை பின்னியிருந்தாள். கருகமணி மாலை போட்டிருந்தாள். ப்ளாஸ்டிக் வளையல்கள் சுற்றியிருந்தாள். கண்ணாடி மூக்குத்தி பளிச்சென்றிருந்தது. சின்னதாகப் பொட்டு. தோடுகள் கறுத்திருந்தன. சட்டை, கழுத்தில் கொஞ்சம் கிழிந்திருந்தது. பூக்கள் பதித்த பாவாடை கால் வரை நீண்டிருந்தது. சைக்கிள் கேரியரில் ஒரு மெளத் ஆர்கான் செருகியிருந்தாள்.

"என்ன..?"

"இஞ்சினியர் சார் வீட்டுக்குப் போகணும்..!"

"உங்கம்மா வரலையா..?"

"பாட்டிக்கு உடம்பு சரியில்லை. புன்னம் போயிருக்காங்க.."

"சரி..சரி..! இதுக்குள்ளயே வா..! ஸார் வீடு தெரியும்ல..? நேராப் போய், ரெண்டாவது ரைட்ல..."

"...நாலாவது வீடு! தெரியும். அம்மா சொல்லிட்டாங்க..!" குட்டிக் கதவுக்குள் சைக்கிளை நுழைத்து, தாவித் தாவி பெடல் போட்டு, ஏறி ஓட்டினாள். பதுங்கியிருந்த பத்ரி உற்சாகமாய்க் குலைத்து சைக்கிள் பின்னாலேயே ஓடியது.

"ஹ! இது எப்ப வந்துச்சு...!!" செக்யூரிட்டி கத்தினான்.

ஃபேக்டரியையும் க்வார்ட்டர்ஸையும் இணைக்கும் முதன்மைச் சாலையில் சில மாருதிகள் பனிப்புள்ளிகளுடன் நின்றிருந்தன. மான்டிசோரி பள்ளி சாத்தியிருந்தது. மையப் பூங்காவில் ஸ்வெட்டர், துண்டுகள் சகிதம் வாக்கிங் போய்க் கொண்டிருந்தனர். மஞ்சள் சோடியம் விளக்குகள் காற்றைச் சோகையாய் நனைத்தன. டென்னிஸ் கோர்ட்டில் அங்கிள்கள் வேர்த்தனர். ஓரப் பசுமைகளில் பூச்சிகள் சுற்றின. ஒரு கீரி சரக்கென்று இங்கிருந்து அங்கு ஓடியது. பத்ரி குலைத்தது.

சீஃப் இஞ்சினியர் என்பதால் தனி வீடு கொடுத்திருந்தார்கள். ஜொலித்த ரெண்டு விளக்குகள் தவிர தெருவில் யாரும் இல்லை. மறு முனையில் கிணறும், பாய்லர் பைப்லைன்களும் தெரிந்தன. பொன்னி காம்பவுண்ட் சுவற்றிலேயே சைக்கிளைச் சாய்த்து நிறுத்தினாள். க்ரில் கேட்டில் கவரில் பால் பாக்கெட்டுகள் தொங்கின. மோட்டார் போடப்பட்டிருந்தது. ஒரு லேடிஸ் சைக்கிள் புறா போல் நின்றிருந்தது. அருகிலேயே ஸ்கார்ப்பியோ.

காலிங் பெல் அடித்தாள். உள்ளே சங்கீதம் ஒலித்தது. இரண்டாம் முறையின் பின், போர்டிகோ லைட் எரிந்தது. நிஷா நைட்டியில் வந்தாள். முடியில் க்ளிப் குத்திக் கொண்டே,

"யாரு வேணும்..?"

"அம்மாவால வர முடியல. பாட்டிக்கு ஒடம்பு சரியில்லன்னு புன்னத்துக்குப் போயிருக்காங்க. வீட்டு வேலைக்கு என்னைய அனுப்பியிருக்காங்க..!"

"பரிமளம் பொண்ணா நீ..?"

"ஆமாங்க..!"

"சரி..! பால் பாக்கெட் எடுத்திட்டு, இந்த வழியா பின்னாடி வா..!" பக்க வழியைக் காட்டி, மறுபடியும் உள்ளே புகுந்து, கதவடைத்துக் கொண்டாள். போர்டிகோ வெளிச்சம் அணைந்தது.

"ஷ்..! நீ இங்கயே இரு. சத்தம் போடாத, என்ன!"

பத்ரி மெல்லமாய் ஒலித்து விட்டு, வாலை விசிறியது. சைக்கிள் முன்பேயே கால்களை நீட்டி முகத்தைப் பதுக்கிப் படுத்துக் கொண்டது. ஓர் ஈ அதன் மூக்கைச் சுற்றியதை உற்றுப் பார்த்தது.

கேட்டைத் திறந்து, பால் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டாள். ஜில்லென்றிருந்தது. கன்னத்தில் வைத்து சிலிர்த்துக் கொண்டே, கம்பிக் கதவை இழுத்துச் சாத்தி, கொக்கியை மாட்டினாள். லேடிபேர்டைத் தடவினாள். பக்க வழியில் நிறையத் தொட்டிகளில் நிறைய செடிகள் இருந்தன. ஒரு ரோஜா அடர் ரோஸாகப் பூத்திருந்தது. சுவர்களில் பச்சையாய் இருந்தது. பின்கட்டுக்கு வந்து விட்டாள். அதற்குள் நிஷா பின் கதவைத் திறந்து வைத்திருந்தாள். நைட்டியை ஒழுங்குபடுத்தியிருந்தாள். கசமுசாவென கூந்தல் சுருட்டப்பட்டு செருகப்பட்டிருந்தது.

"உன் பேர் என்ன..?"

"பொன்னி..!"

"நல்ல பேர்..! பொன்னி! முதல்ல கிச்சன் ஸிங்க்ல இருக்கற பாத்திரம் எல்லாத்தையும் விளக்கி வெச்சிடு. அப்புறம் பால் காச்சி வெச்சு, நாலு டம்ளர் பூஸ்ட் போட்டு வெச்சிடு..! என்ன..!"

"சரிங்மா..!"

உள்ளே நுழைந்தவுடனே கிச்சன். ஸிங்க்கில் அத்தனை பாத்திரங்கள் இருந்தன. ஸ்டவ் அருகே ஊதுவர்த்தி ஒன்று சுத்தமாக காலியாகி, சாம்பல்களாய் ஆகி இருந்தது. பாவாடையை கொஞ்சமாக எடுத்து லேசாக செருகிக் கொண்டாள். குழாயைத் திருப்ப, இருமிக் கொண்டே தண்ணீர் பாய்ந்தது. நாரை நனைத்து, நடுவில் குழி விழுந்திருந்த சோப்பில் அழுத்தினாள்.

ழாவது பாத்திரம் விளக்கும் போது, ஸ்க்ரீனுக்குப் பின்னாலிருந்து டோரா கேள்வி கேட்டாள். பிறகு நிஷா கேள்வி கேட்டாள்.

"ஸ்ருதி..! காலைல எழுந்தவுடனே டி.வி.யா..? பாத்ரூம் போனியா..?"

"விடு..! இன்னிக்கு சாட்டர்டே தான. பாத்துட்டுப் போகட்டும்..!" ஒரு வயதான குரல் கேட்டது.

"அம்மா..! நீங்க செல்லம் குடுத்து தான் பொண்ணு ரொம்ப கெட்டுப் போறா. பாருங்க, எழுந்து இன்னும் ப்ரஷ் பண்ணல. ஃபேஸ் வாஷ் கூட பண்ணல. அதுக்குள்ள டோராவப் பாக்க உக்காந்திட்டா..! ஸ்ருதி..! கெட் அப்..! கோ டு பாத்ரூம்..!"

"மம்மி..! ப்ளீஸ் மம்மி!" ஒரு குட்டிப் பெண்.

"நோ! நான் டாடிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிடப் போறேன். ஐ காண்ட் இக்னோர் தி இர்ரெஸ்பான்ஸிப்ளிட்டிஸ். எங்க டாடி..?"

"இன்னும் தூங்கறான். ஆமா, பரிமளம் வந்துட்டாளா..?"

"இல்லம்மா. ஊருக்குப் போயிருக்காங்களாம். அவங்க பொண்ண அனுப்பியிருக்காங்க. அவ தான் பாத்திரம் விளக்கிட்டு இருக்கா..!"

"அப்படியா..? ஆயுர்வேத தைலம் வாங்கிட்டு வரச் சொல்லலாம்னு இருந்தேன். பாழாப் போன மூட்டு வலி இருக்கே..!"

மாடியிலிருந்து குரல் இறங்கி வந்தது.

"எங்க என் டார்லிங்..?"

"மம்மி இங்க தான் இருக்காங்க. பேட் மம்மி. சேட்டர்டே கூட ஃப்ரீயா இருக்க விடாம டென்ஷன் பண்ணுறாங்க.."

"என்ன நிஷா அப்படியா சொன்ன..? நீ பாருடா செல்லம்..! நானும் வர்றேன்..!"

"ஆமா உட்கார்ந்து டோரா பாருங்க. உங்களுக்கு பத்து மணிக்கு மீட்டிங் இருக்கு. மேடத்துக்கு எட்டு மணிக்கு ம்யூஸிக் க்ளாஸ் இருக்கு. அப்புறம்..."

"அடுத்த வாரம் அஸோஷியேஷன்ல ம்யூஸிக் காம்படீஷன் இருக்கு. போதும்மா..! த்வுஸண்ட் டைம்ஸ் நீ சொல்லிட்ட..!"

"அதெல்லாம் என் பொண்ணு அசத்திடுவா..! நீ பாருடா..!"

"எப்படியோ போங்க..!"

நிஷா கிச்சனுக்கு வந்தாள். பொன்னி ஸ்டவ் பக்கத்தில் கையில் துணியோடு நின்றாள். நீல விரிவில், பால் பொங்க யோசித்துக் கொண்டிருந்தது.

"பொன்னி..! படிக்கறயா..?"

"ஆமாம்மா! எட்டாவது..!"

"படிக்கற பொண்ணு இப்படி வேலை செய்ய வரலாமா..?"

"இல்லம்மா! எப்பவும் செய்ய மாட்டேன். அம்மாவுக்கு முடியலைன்னா தான் நான் வேலை செய்யப் போவேன். சிலசமயம் வேலை செய்யறது நல்லது தான். தெரிஞ்சுக்கோன்னு அம்மாவே அனுப்புவாங்க.."

"ஸ்ருதீ...! இங்க வந்து பாரு..!"

உள்ளிருந்து அரவிந்தும், ஸ்ருதியும் கிச்சனுக்குள் வந்தார்கள். டீ.வி. சத்தம் குறைக்கப்பட்டது.

"ஹாய்..! யார் இந்த குட்டிப் பொண்ணு..?"

"பரிமளம் பொண்ணு.பேரு பொன்னி. ஸ்ருதி..! பாத்தியா? உன் வயசு தான் ஆகறது. எவ்ளோ நல்லா வேலை செய்யறா தெரியுமா? நீ என்னிக்காவது செஞ்சிருக்கியா..? சாப்ட்ட தட்டைக் கூட கழுவ மாட்ட..!"

உடனே ஸ்ருதி ஒரு விரோதப் பார்வை பார்த்தாள்.

"டியர்..! எல்லாரும் அவங்கவங்க வீட்ல அப்படித் தான். ஏய் பொன்னிப் பொண்ணு, நீயும் சாப்ட்ட தட்ட கழுவ மாட்ட தான..?" நிஷாவுக்குத் தெரியாமல் கண்ணடித்தான்.

"ஆமாங்க. எங்கம்மா தான் கழுவி வெப்பாங்க. அப்ப இதே மாதிரி தான் திட்டுவாங்க..!" பொய் சொன்னாள்.

"தட்ஸ் இட்..! டேங்க் நிரம்பிடுச்சுனு நினைக்கிறேன்..!" அரவிந்த் பின் வெளியே போனான். நிஷா குக்கரில் அரிசியைக் கழுவிப் போட்டாள். "இந்த கேஸ்கட்டை மாத்த மாட்டீங்களா..? வழு வழுன்னு ஆயிடுச்சு..!"

"ஹாய்! என் பேர் ஸ்ருதி. நீ எந்த ஸ்கூல் படிக்கற..?" சட்டென சிநேகமானாள் ஸ்ருதி.

நெற்றியைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே, "ராமகிருஷ்ணால..! நீ..?"

"எஸ்.எம்.எஸ்.ல..! வேலையெல்லாம் முடிச்சிட்டு வர்றியா? டோரா பாக்கலாம். டெய்லி இந்த பாட்டிகூட பாத்து ஒரே போர்..!"

"ம்..! வர்றேன்..!"

நிஷா குளிப்பதற்குப் போய்விட்டாள். பொன்னி நாலு டம்ளர்களில் பூஸ்ட் கலக்கி வைத்து விட்டு, ஒன்றை மூடியால் மூடி வைத்தாள். மூன்றை தட்டில் எடுத்துக் கொண்டு ஸ்க்ரீனைத் திறந்தாள்.

ஜில்லென்றிருந்தது. ஏ.ஸி.போட்டிருந்தார்கள். கண்ணாடி ஷோகேஸ் பளிச்சென்றிருந்தது. அதில் குட்டிக் குட்டியாய் நிறைய கரடி பொம்மைகள் இருந்தன. ஒட்டியதாய் ஒரு டி.வி. அதில் டோரா, குரங்குடன் நடந்து கொண்டிருந்தாள். மேலே போட்டோவில் ஒரு குழந்தையை முத்தமிடும் இளம் அரவிந்த். ஸ்ருதி ஒரு குட்டி சோபாவில் உட்கார்ந்திருந்தாள். ஒரு பாட்டி சோபாவில் அமர்ந்து, கால்களைத் தடவிக் கொண்டிருந்தார். அரவிந்த் ஒரு மர நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொருவரிடமும் டம்ளரைக் கொடுத்தாள். அங்கேயே நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். மாடிக்குச் செல்லும் படிக்கட்டு வளைந்து வளைந்து சென்றது. அதன் எல்லையில் ஒரு ரோமானியப் போர் வீரன் சிலை கையில் வேலோடு நின்றது. அதன் நுனியில் ஒரு மஞ்சள் பை தொங்கியது. டீப்பாய் மேல் மூன்று செல்ஃபோன்கள் இருந்தன. மூலைகளில் தொட்டிச் செடிகள். ஒரு டிஜிட்டல் கடிகாரம். அவளது ஏழ்மைத் தோற்றம் அந்த ஸீனில் அவளுக்கு ஒருவித கான்ட்ராஸ்ட்டாகத் தோன்றியது.

"வா..! நாம டோரா பாக்கலாம்..!" ஸ்ருதி அவளைக் கைப்பிடித்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டாள். மெத்தென்றிருந்தது. ஸ்ருதி கை ஸாஃப்ட்டாக இருந்தது.

"ஸ்ருதிக்குட்டி! டைம் ஆச்சும்மா! ம்யூஸிக் க்ளாஸ் போகணும். எழுந்திரு. மாடிக்குப் போய்க் குளிச்சிட்டு வா..!" அரவிந்த் சொன்னவுடனே பொன்னி எழுந்து நின்று கொண்டாள். அவளுக்கு திடீரென ஏதோ ஒரு கூச்ச உணர்வு வந்து ஒட்டிக் கொண்டது. காலி டம்ளர்களை எடுத்துக் கொண்டு ஸ்க்ரீனை விலக்கி விட்டு வெளியேறினாள்.

விசிலடிக்கவா வேண்டாமா என்று யோசித்த குக்கரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிஷா குளித்து விட்டு புத்துணர்ச்சியுடன் வந்தாள். இட்லி குக்கரில் மாவு ஊற்றும் போது,

"அம்மா..! பாத்திரம் எல்லாம் விளக்கி வெச்சுட்டேன். வேறு ஏதாச்சும் வேல இருக்கா..?"

"துணி துவைக்கணும். வாஷிங் மெஷின் ரிப்பேர். நீ துவைச்சிருவியா..?"

"துவைச்சிருவேம்மா..!"

"சரி! வெளிய கல்லு இருக்கும். பக்கத்துலயே பக்கெட்ல ஊற வெச்சிருக்கு பாரு. துவைச்சிடு..! அரவிந்த், உங்க பொண்ணு ரெடியா..? ம்யூஸிக் க்ளாஸ் போகணும்..!"

பொன்னி ம்யூஸிக் க்ளாஸ் பற்றி விசாரிக்க விரும்பினாள். அங்க மெளத் ஆர்கான் நல்லா வாசிக்கச் சொல்லித் தருவாங்களா? அவளுக்கு சடாரென சைக்கிள், பத்ரி ஞாபகம் வந்தது. பக்க வழியாகவே சென்று பார்த்தாள். இளம் வெயில் வியாபித்திருந்தது. தெரு விளக்குகள் தூங்கப் போயிருந்தன. பத்ரி, செடிகளுக்குள் சுற்றிச் சுற்றி வந்தது. பொன்னியைப் பார்த்ததும் செல்லமாய்க் குலைத்து மேலே தாவியது.

"இங்கயே இரு..! சின்ன வேலை ஒண்ணு இருக்கு. முடிச்சிட்டு வந்திடறேன். அப்புறம் போலாம். என்ன..?" புரிந்து கொண்டது போல் பத்ரி வாலாட்டி விட்டு, மீண்டும் செடிகளுக்குள் விளையாடப் போய் விட்டது. விரலை ஆட்டிச் சொல்லும் போது தான் கவனித்தாள். அடர் பழுப்பாய்ச் சில கட்டிகள் ஒட்டியிருந்தன. நெருக்கமாக முகர்ந்து பார்த்து, சுரண்டி நாக்கில் நனைத்தாள். பூஸ்ட் கசப்பாக இருந்தது.

மெளத் ஆர்கானை எடுத்துக் கொண்டு பின்கட்டுக்கு வந்து துவைக்கும் கல்லுக்குப் பக்கத்தில் சென்று பார்த்தாள். நிறைய புடவைகள். கண்ணாடி வைத்தது. ஜிகினா பதித்தது. வாஷிங் பவுடர்களின் மாயாஜால புசுபுசு நுரைகளுக்கு நடுவே வெயில் ஒளியில் மின்னின. பொன்னி துணிகளை எடுப்பதற்கு முன், மெளத் ஆர்கானில் தூசி போக 'உஃப்..உஃப்..' என்று ஊதினாள். பின் உதடுகள் மேல் வைத்து மிக இனிமையாக ஊதத் தொடங்கும் போது, ஃபேக்டரியிலிருந்து, ஷிஃப்ட் மாறுவதற்கான சைரன் ஒலி பிரம்மாண்டமாய்க் கிளம்பி, அவளைக் கரைத்தது.

Thursday, August 27, 2009

கிளி முற்றம்.

ஸ் பாஸ் புதுப்பிக்க டிப்போவிற்குப் போவோம். எப்போதும் நான்கைந்து பஸ்கள் பாகங்கள் உரிக்கப்பட்டு ஸ்கெலடன்கள் தெரியும்படி நிற்கும். உருவி விட்ட பழுப்புச் சீருடையில் கறுப்புத் தெறித்த மெக்கானிக்குகளின் கால்கள் மட்டும் வெளியே நீட்டப்பட்டிருக்கும். தூரப்பேருந்துகள் தட்டுத்தடுமாறி நுழைந்து லிட்டர்களாய்க் குடிக்கும். எண்ணெய் கலந்த நீர் பல வர்ணங்களில் சுழித்தோடும். மாமா போன்ற டயர்கள் அடுக்கியிருக்கும் உள்ளறை ஒன்றில், அடுத்த ஒரு மாத ஆயுள் கொண்ட சீட்டு வாங்கிக் கொண்டு வெளியேறும் போது, ஷிப்ட் மாறும் ட்ரைவர்களைக் கடப்போம். காற்றில் டீஸல் வாசம் விரவியிருக்கும்.

பெய்ண்ட் உதிர்ந்த பல கட்சி போர்டுகளையும், முற்பகல் வெயிலில் சுரத்திழந்து சுருண்ட கொடிகளின் கம்பங்களையும் பின் தள்ளிச்சென்றால் ஓர் எஞ்சினியரிங் கல்லூரியும், ஓர் ஆர்ட்ஸ் கல்லூரியும் வரும். தாண்டி கிட்டத்தட்ட மூன்று கி.மீ தள்ளி தான் அடுத்த பஸ் ஸ்டாப் இருக்கும். இடைப் பிரதேசத்தில் காவலர்கள் போல் புளியமரங்களும், சரளைக் கற்களும், இளநீர்ச் சாக்குகளும், விசுக்கென விரையும் பாடி கட்ட வேண்டிய லாரிகளும், மொத்தமாய் ஒற்றை வெயிலும் மற்றும் நாங்களும் தான் இருப்போம்.

சங்கரின் வீடு கிழக்கில் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்தது. ஹைவேயிலிருந்து கிளை பிரிந்து மாரியின் பெட்டிக்கடையை ஒட்டிய மண் பாதையில் நடந்து போனால் முதல் வீடு. கிழக்குப் பார்த்திருக்கும். வாசலில் ஊதா நிறத்தில் 'S' என்று பெரிய எழுத்தில் எழுதிய மாருதி. வீடு ஒரு சாதாரண கிராமத்து நடுத்தர அளவில் இருக்கும். இரண்டு முன்னறைகள். ஒரு சமையலறை. ஒரு ஸ்டோர் ரூம். அதில் நிறைய மூட்டைகள் அடுக்கப்பட்டு எப்போதும் ஒரு வித மக்கிய வாசம் வரும். பின்னால் ஒரு அறை, அவன் படிப்பதற்காக ஒரே ஒரு ஜன்னல் மட்டும் வைக்கப்பட்டு பரண்களோடு இருக்கும். அதில் ஒரு கண்ணாடி முகம் பதித்த மர பீரோ. கிரிக்கெட் விளையாடக் கிளம்பும் போதும், அதில் முகம் பார்த்து மேக்கப் செய்து கொண்டு, இரண்டாவது ஓவரிலேயே கலைந்து விடுவான். அதற்கு நேர் எதிரிலேயே மற்றொரு சின்ன அறை. பின்னங்கதவைத் திறந்தால், ஒரு மகா வெளி.

நெடுஞ்சாலைக்கும் வீட்டுக்கும் இடையில் அந்த வெளி இருந்தது. அதில் ஒரு பகுதி வயலாக்கப்பட்டிருக்கும். சீஸனுக்கேற்றாற்போல் அதில் கரும்பு, மஞ்சள், சோளம் என்று வித்தை காட்டி விளைவிப்பார்கள். மறு பாதியில் நிறைய மரங்கள் இருந்தன. கொய்யா, மா, கொன்றை, ஒல்லியாய் ஓர் அரசு இன்னும் பெயர் தெரியாத மரங்கள். ஆடி மாதத்தில் அங்கே ஊஞ்சல் கட்டி அரை வட்டம் செல்வோம். சில சமயம் மைனாக்கள் வந்து கம்பி வேலி கட்டிய கற்களின் மேல் உட்கார்ந்து கூவிப் பறந்து விடும்.

கொய்யா மரங்கள் இருந்ததால் நிறைய கிளிகள் வரும். பச்சையாய், நுனியில் மட்டும் சிகப்பாய் அழகாய் இருக்கும். சின்னச் சின்னதாய்க் கூறு வோட்டு கைகளில் வைத்து 'கிக்கீ...கிக்கீ..' என்று கத்தினால், தோள் மேல் வந்து அமர்ந்து கொத்தி எடுத்துச் செல்லும் அளவிற்கு அந்தக் கிளிகள் எங்களுக்குப் பழக்கமாயிருந்தன. சில கிளிகள் வீடுக்குள்ளேயும் வரும். அந்த தோட்டத்திற்கே நாங்கள் 'கிளி முற்றம்' என்று தான் பெயர் வைத்திருந்தோம். அரச மரத்தில் ஒரு கரும் பொந்து இருக்கும். 'அதில் தான் வந்தனா எனக்கு தரப் போற லவ் லெட்டரை எல்லாம் வெச்சு மறைக்கப் போறேன்' என்ற சேகர் தான் இந்தப் பெயர் வைத்தான். அவனுக்கு லேசான இலக்கிய விபத்து கொஞ்சம் முன்பாகவே நேர்ந்து விட்டிருந்தது. நாங்கள் எல்லோரும் தியேட்டர்களுக்குப் படையெடுத்துக் கொண்டிருந்த போது, அவன் மட்டும் சர்க்கிள் லைப்ரரிக்குச் சென்று மெம்பரானான். அவன் சொன்ன ஐடியா 'சிவகாமியின் சபதத்திலிருந்து' சுடப்பட்டது என்பது வெகு காலங்களுக்கு அப்புறம் தான் எனக்குத் தெரிய வந்தது. சரி, இந்த வந்தனா யார்..? சொல்கிறேன்.

அவர்கள் மூன்று வீடுகள் தள்ளி இருந்தார்கள். கிட்டத்தட்ட சங்கர் வீடு அளவிற்கே செல்வந்தம். ஒரே ஓர் அண்ணன். புல்லட்டில் வருவான். எங்களை வழியில் கோஷ்டியாகப் பார்த்தால் 'என்னடா வீட்டில் சொல்லட்டுமா..?' என்பான். என்னவோ எங்களின் உத்தமத்தன்மைக்கு வீடுகளில் கேரண்டி செய்திருப்பவன் போல்! 'சொல்லிக்கோ போ..!' என்பான் சங்கர். எங்களுக்கு உதறல் எடுக்கும். கேட்டால், 'அவன் தங்கச்சி என்னை ரூட் விடறாடா..! இவன் என்ன செஞ்சிர முடியும்..!' என்பான்.

அவளும் கொஞ்சம் அப்படித் தான் நடந்து கொண்டதாகத் தெரிந்தது. ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் கொஞ்சம் மதுபாலா ஜாடை இருந்தது. அந்த வெக்கைக்கு ரோஸாய் கன்னம் சிவக்கும். நாங்கள் ஆறு மணி வரைக்கும் விளையாடி விட்டு, காய்ந்து போய், ஸ்ரீராம் நகர் தெருக் குழாயில் திருகித் தண்ணீர் குச்சியைக் குடிக்கும் போது, எதிரில் சைக்கிளில் ஜொலிப்பாய் போவாள். கூட சில துணை தேவதைகளும்! ஹிந்தி படிக்கிறாளாம்.

நாங்கள் கொய்யாக்களையும், நாகநந்திப் பூக்களையும் பறித்து, சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் அடைத்துக் கொண்டு அசிங்கமாய் நடக்கும் போது, கரெக்டாக வந்து சேர்ந்தாள். சின்னச் சின்னதாய் பூப்போட்ட பாவாடையும், அலையலையாய்த் திரண்ட பஃப் வைத்த சட்டையும் போட்டிருந்தாள். மஞ்சள் முடிகள் கைகளில் சுருண்டிருந்தது. பெரிய ப்ளாஸ்டிக் வளையல். ஒரு கையில் வாட்ச். டெய்ல் மாதிரி ஏதோ ஒரு சங்கதியில் தலையை முடிந்திருந்தாள். அதில் ஒரே ஒரு ரோஜா, இலையோடு ஈரமாய் இருந்தது. அந்த மாலை நேரத்தில் மஞ்சள் கதிர்கள் முகத்தில் விழுந்து புரண்ட போது, கிட்டத்தட்ட தேவதை போலிருந்தாள். எல்லோரும் அப்படியே ஸ்டன்னாகி நிற்கும் போது, உள்ளேயிருந்து சங்கர் அம்மா வந்து விட்டார்கள்.

"ஆண்ட்டி...! அம்மா இதை உங்ககிட்ட குடுத்திட்டு வரச் சொன்னாங்க.." பின்புறத் திண்ணையில் வைத்திருந்த ஒரு டிபன் பாக்ஸை எடுத்துக் கொடுத்தாள். "ஹரித்வார்ல இருந்து மாமா வந்திருந்தாங்க. ஏதோ ஸ்வீட். உங்களுக்குப் பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்.."

"ஸ்வீட்டா வந்து..? நான் சாப்பிட மாட்டேன். அவருக்கும் சுகர் ஆச்சே..!"

'வந்து வந்து... ஸ்வீட் தந்து தந்து..' சேகர் அதற்குள் கவிதை எழுதும் முஸ்தீபில் இறங்கியிருந்தான். அவன் வாரப் பத்திரிக்கைகளைத் தாண்டி, புதுக்கவிதைகளைத் தொடங்கி விட்டதை இது உறுதிப்படுத்தியது.

"உங்க வீட்ல இருக்கற வேற யாராவது சாப்பிடுவாங்கனா குடுங்க ஆண்ட்டி..!" சொல்லி விட்டு எங்கள் எல்லார் மேலும் ஒரு பார்வையை விசிறி விட்டு மின்னலாய் மறைந்தாள்.

"நிறைய இருக்கும் போல இருக்கு. நீங்க எல்லோரும் எடுத்துக்கோங்க..!" குந்தி தேவி போல் அவர் சொல்லி விட்டுப் போய் விட, இங்கே அடிதடி.

நான்கு பேரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்திழுக்கப் போராட, சங்கர் 'சைலன்ஸ்' சொல்லி விட்டான்.

"நல்லா கேட்டுக்குங்க. வந்து என்ன சொன்னா? எங்க வீட்ல இருக்கற வேற யாருக்காவது...! அப்டின்னா என்ன அர்த்தம்? என்னைத் தான சொல்லியிருக்கா. எல்லோரும் ஒதுங்கிக்கோங்க..."

"அதெப்படி? இப்ப உங்க வீட்ல நாம எல்லாரும் தான் இருக்கோம். அவ எங்கள்ல யாரையாச்சும் சொல்லியிருக்கலாம்ல..?" சேகர் அந்த வாக்கியத்தில் இருந்த இலக்கண சூட்சுமத்தைப் பிடித்து விட்டான். அவன் லைப்ரரியில் லைஃப் டைம் மெம்பரானது வீணாகவில்லை.

நானும், சுரேந்தரும் அமைதியாக நின்றோம். இது போன்ற உரிமைப் போர்களில் வீணாகத் தலையிட்டுப் பின்னர் கிடைக்கப் போகும் பங்கில் விரிசல் விழ விடக் கூடாது என்பதில் நாங்கள் இருவரும் நிறைய அனுபவங்களில் தெரிந்து கொண்டிருந்தோம். பின்னர் ஒரு வழியாகச் சமாதானமாகிப் பிரித்துப் பார்த்து, நிறைய நிறைய இருந்ததால், எல்லோரும் பங்கிட்டுத் தின்றோம். ஒருவனே தின்றால் வயிற்றுக்கு ஒத்துக்காது என்ற உயிரியல் உண்மை அதற்குள் அவர்களுக்குப் புலப்பட்டிருந்தது.

ந்தனா இது போல் குழப்பமாகத் தான் நடந்து கொண்டாள். சுரேந்தருக்கு ஒரு தங்கை. அமுதா. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, அவளிடம் இவனைப் பற்றி ஏதோ சொன்னாளாம். அது வந்து பேச்சு வாக்கில் சொல்லி விட, அண்ணனை இரண்டு வாரங்களுக்கு கையில் பிடிக்க முடியவில்லை. பின் அவளிடம் போட்டுப் பிராய்ந்து பார்த்ததில், இவள் வந்தனாவிடம் எக்ஸாம் ஹாலில் ரப்பர் கேட்டிருக்க, அவள் உன் அண்ணனிடம் வாங்கி வைத்திருக்க வேண்டியது தானே என்று சொல்லியிருக்கிறாள்.

எக்ஸாம் ரெஃபரன்ஸுக்காக லைப்ரரி பக்கம் போனவளிடம், விகடனை மறைத்து, எம்ப்ளாய்மெண்ட் நியூஸை எடுத்து வைத்து, ஐ.ஏ.எஸ். ஆகப் போவதாகவும், அதற்காக சைனிக் பள்ளியில் சேரப் போவதாகவும் பீலா விட்டிருக்கிறான் இன்னொருவன். அவள் 'நாக்பூரில் ஒரு பெரியப்பா இருக்கிறார்கள். ரெஸிடென்ஷியல் சைனிக் ஸ்கூல் நடத்துகிறார்களாம். போகிறாயா?' என்று கேட்டு விட, சைக்கிளை எடுத்து பறந்து விட்டான்.

என்னிடம் வந்து ஒருமுறை சயின்ஸ் படங்கள் வரையக் கஷ்டமாயிருக்கிறது. வரைந்து தருகிறாயா என்று கேட்டாள். அப்போது என் உயிரியல் படங்கள் பாய்ஸ் ஹை ஸ்கூல் தாண்டி இவர்கள் வட்டாரத்திலும் மங்காப் புகழ் பெற்றிருந்தது. என் அக்கா தான் ராத்திரி எல்லாம் உட்கார்ந்து வரைந்து தருகின்ற ரகசியத்தை நான் வெளியிட்டதேயில்லை. வந்தனா கேட்டதும் உள்ளுக்குள் ஜில்லிப்பாய் இருந்தாலும், அக்காவிடம் கெஞ்சிக் கூத்தாடி வரைந்து தரச் சொல்லி ('இரு இரு அம்மாட்ட சொல்லிடறேன்.!') கொடுக்கும் போது, சுரேந்தர் போட்டுக் கொடுத்து விட்டான்.

எங்களில் சங்கருக்கு மட்டுமே கூடுதலாய்ச் சில தகுதிகள் இருப்பதைக் காலக்கிரமத்தில் புரிந்து கொண்டோம். ஒரே தெரு. ஒரே பொருளாதார நிலை. கொஞ்சம் வனப்பு கலந்த நிறம். நாங்கள் பிறகு ஓசி கொய்யாக்கனிகளுக்கு பங்கம் வருவதைக் கருதி, ஒதுங்கிக் கொண்டோம்.

ஒரு நாள் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தான்.

"என்னடா..?"

"ஓ.கே. சொல்லிட்டாடா. அதுக்கு அடையாளமா நம்ம கிளி முற்றத்துல அரச மரம் இருக்குல்ல. அங்க வெச்சு ஒரு கிஸ் குடுத்தாடா. எங்க தெரியுமா...?"

"அதான் சொன்னியே..! அரச மரத்துல..!" சேகர் கம்மிய குரலில் சொன்னான்.

"ச்சீ! அது இல்லடா.! இங்க..!" உதட்டைக் காட்டினான். கொஞ்சம் லிப்ஸ்டிக் கலர் தெரிந்தது.

"இங்கயா..? உதட்டுலயா..? எப்டிடா இருந்துச்சு..?"

"டேய்..! அவ என் வைஃபா வரப் போறா..! இப்டி எல்லாம் கேக்காதீங்க..!"

"ஓ...! ஸாரிடா..!"

பிறகு அவள் எங்கள் கூட்டத்தில் ஒன்றானாள். கிளி முற்றத்தில் மேலும் ஒரு கிளி சேர்ந்தது. நாங்களும் விகல்பமில்லாமல் பழகினோம். புல்லட் அண்ணனும் நெருக்கமானான். மதீனா டீ ஸ்டாலில் அவன் சிகரெட் பிடித்ததைக் கூட நான் யாரிடமும் சொல்லவில்லை. அவன் எக் பஜ்ஜி வாங்கிக் கொடுத்தான்.

அவனுடைய கிரிக்கெட் குழுவில் எல்லாரும் தடித் தூண்களாக இருப்பார்கள். நாங்கள் ஆர்.கே.நகர் பிட்சில் விளையாடும் போது, லேட்டாகவே வந்து வேண்டுமென்றே எங்களுக்கு குறுக்காகவே பிட்ச் வைத்து இம்சைப்படுத்துவார்கள். இப்போது புல்லட் அண்ணனின் அன்பு வட்டத்துக்குள் நாங்கள் வந்து விட்டதால், 'முஸ்தபா... முஸ்தபா..' ஆனோம். சுரேந்தருக்கு சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, வளையம் விடும் வரை வளர்ந்தான்.

கிளிமுற்ற அரச மரப் பொந்தில் சிகரெட் துண்டுகள் தேங்கின. உழவுக்கு வருபவர்கள் பார்த்து விட்டு பற்ற வைக்க, க்ரூப் ஸ்டடி இன் கிளி முற்றத்திற்கு கட் விழுந்தது. பிறகு அவன் வீட்டுக்குப் போவதும் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டே வந்தது. மூன்றாண்டுகள் தொடர் மழையில்லாததால், உழவு நிறுத்தப்பட்டதாம். கிளி முற்றத்து பழ வருமானம் கை கொடுத்ததாம்.

ஸ்கூல் முடிந்ததும் நான் சென்னைக்குக் கிளம்பி விட, சுரேந்தர் திருப்பூரில் மில்லுக்குச் சென்று விட, சேகர் இலக்கியத்திற்கு கமா போட்டு எம்.எம்.ஸி.யில் ஊசி பிடித்தான். சங்கர் அடுத்த ஸ்டாப் ஆர்ட்ஸ் காலேஜிலேயே பி.காம் சேர்ந்தான். அவளும் அங்கேயே சேர்ந்ததாளாம்.

தேர்ட் இயர் செமஸ்டருக்குப் படித்துக் கொண்டிருந்த போது, சுரேந்தர் ஹாஸ்டலுக்குப் போன் செய்து சொன்னான். "ரெண்டு பேர் வீட்லயும் சம்மதிக்காததால சங்கரும் வந்தனாவும் ஓட்டிப் போகப் பார்த்து, புல்லட் அண்ணன் மூணாவது கிலோமீட்டர் பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போகும் போது புடிச்சுட்டான். வீட்ல செம அடி. அவளை நாக்பூருக்கு அனுப்பிட்டாங்க..."

யாரோ ஒரு சேலம் சேட்டு வீட்டை வாங்கியிருந்தான். "அவங்க அப்பா எல்லாத்தையும் வித்துட்டு தென்காசி பக்கமா போய்ட்டாங்களாம். இவன் படிப்பை நிறுத்திட்டங்க. அய்யம்பாளையத்துல இருந்த பண்ணையை கூட வித்துட்டாங்க.."

க்கா பையனுக்கு காது குத்துவதற்காக இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது பஸ்ஸில் இருந்து எட்டிப் பார்த்தேன். வயல் முழுக்க நிரவப்பட்டு, சமவெளிகள் சுத்தம் செய்யப்பட்டிருந்தன. மஞ்சள் பிள்ளையாராய் HD கல் அம்புக்குறியோடு உள்ளே தள்ளி இருந்தது. சர்வேயர்கள் தத்தம் கருவிகளுக்குள் தலை புதைத்திருந்தார்கள். கிளி முற்றத்தில் ஜல்லிகள் கொட்டப்பட்டிருந்தன. பக்கத்து சீட்டில் வெற்றிலை மடித்துக் கொண்டிருந்தவர் சொன்னார். பஸ் ஸ்டாப் வரப் போகிறதாம்.

Thursday, August 20, 2009

கோடானு கோடி!

லது பக்கம் வழிவிட்ட டிம்பரில், படுத்திருந்த மரங்களின் மேல் செங்கொடிக் கிழிசல்கள் மினுங்கின. தாபாக்களின் வாசல்களில் ஜிகினாக்கள் அணிந்த லாரிகளின் இண்டிகேட்டர்கள் சிணுங்கின. ஜூவல்லர்ஸ் மங்கை மஞ்சளாய்ச் சிரித்தாள். கோல்டை லாலேட்டன் சிபாரிசித்தார். சட்டென கடந்த அபார்ட்மெண்ட்டில் ஒரே ஒரு வீட்டில் வெளிச்சம் எரிந்தது. பெட்ரோல் பங்குகள் சொர்க்கமாய் ஒளிர்ந்தன. மெல்லமாய் நிலா மட்டும் அவ்வப்போது மேகக் கொத்திலிருந்து எட்டிப் பார்த்து உடனே மறைந்தது. பக்கத்திலேயே மழை பெய்து கொண்டிருப்பதை வாசம் சொல்லியது. திருச்சூரைத் தொட்டுத் தொடாமல், பைபாஸ் ஜங்ஷனில் வளைத்து, என்.ஹெச்.சிலேயே ஓட்டினான் சேது. காதுகளை அடைத்து துண்டால் இறுக்கியிருந்தான். ஸ்டியரிங் மேல் பீடிச் சாம்பல் விழுந்து கொண்டிருந்தது.

சாய்ந்திருந்த ரிவ்யூ மிரர் பக்கத்தில் பிள்ளையார், ஏசு, மெக்கா சுற்றிலும் கும்பலாய் ஒளித்துகள்கள் ஓடிக் கொண்டேயிருந்தன. காய்ந்த மல்லிகை முழம் சுருண்டிருந்தது. முல்லா பனியன், லுங்கியோடு 'S' ஆக கைகளை கால்களுக்குள் செருகிப் படுத்திருந்தான். தார்ப்பாய் காற்றில் படபடத்துக் கொண்டேயிருந்தது. பனிரெண்டரை மணி காற்று இருளாய்க் குளிராய் லாரிக்குள் செருகி வெளியேறியது.

1100 துள்ளியது. லேசாக இடது காதில் ஒதுக்கி விட்டு, ரெண்டாவது கியருக்கு குறைத்து விட்டுப் பேசினான்.

"ஐயா..!"

"நான் தான்..! எங்க இருக்க..?"

"திருச்சூர் தாண்டி பத்து நிமிஷம் ஆச்சுங்க.."

"எந்த ரூட்ல கொண்டு வர்ற..?"

"வழக்கமா வர்றது தாங்க..! வாளையார் வழி..!"

"வேணாம்..! இன்னிக்கு செக்கிங் ஜாஸ்தியா இருக்கு. உஷாரா இருக்கச் சொல்லி போன் வந்திச்சு. முன்னாடியே சொல்றதுக்குள்ள அமீர் மாட்டிக்கிட்டான். நீயும் மாட்டிக்க வேணாம். ரூட் மூணுல வா..!"

"ஐயா..! அந்த வழில பொய்க்கரட்டுப் பள்ளம் பாலம் இன்னும் சரி பண்ணலைங்க. நம்ம லோடு தாங்குமாங்கறது டவுட்டு தாங்க..!"

"இந்த நேரத்துக்கு எதுத்தாப்ல ஒண்ணும் வராது. அங்க மட்டும் மெதுவா ஓட்டி வந்திடு. தாண்டிரலாம். பார்டர்ல அங்க மட்டும் தான் இன்னிக்கு செக்கிங் இருக்காதுன்னு தகவல் வந்திருக்கு. சரக்க உள்ள கொண்டு வர அது தான் இப்ப சரியான வழி..! வந்திடு..!"

போனை வைத்து விட்டு, பீடியை எறிந்து விட்டு, துப்பினான். ஹெட் லைட்டை இன்னும் கொஞ்சம் டிம் செய்தான்.

முல்லாவைத் தட்டினான்.

"டேய்...! டேய்...!"

வாரிச் சுருட்டி எழுந்த முல்லா லுங்கியைச் சரி செய்து விட்டுக் கொஞ்ச நேரம் சுற்றுமுற்றும் பார்த்தான்.

"என்னண்ணே...?"

"முளிச்சுக்கோ..! தூங்கிடாத..! ரூட் மாத்தப் போறேன். பாணர்பாளையம் வழியா. ரோடு க்ளியர் பண்ணிச் சொல்லிட்டே வா. இன்னும் அரை மணி நேரத்துல சிட்டி செக் பாய்ண்ட் வந்திடும். பாலக்காடு தாண்டி லெப்ட் கட் பண்ணி ஊருக்குள்ள போகணும்..!"

கண்களைத் தேய்த்துக் கொண்டே தலையாட்டினான் முல்லா.

முருகன் சவுண்ட் அண்டு லைட் சர்வீஸ் என்று அந்தக் கருவியில் எழுதியிருந்தது. இட்லித் தட்டு போல வட்ட வட்டமாய்க் குழிகள் இருந்தன. அவற்றை அடைத்து பச்சை, சிகப்பு, மஞ்சள், வெள்ளை, ரோஸ் ஜிகினாக் கண்ணாடித் தாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை வேகமாகச் சுற்றிட, ஒளி பாய்ந்து, மேடையில் வர்ணங்களாய் மாறி மாறி விழுந்தன.

கன்னியப்பன் சீதையின் சீலையைப் பிடித்து இழுத்து அகங்காரமாய்ச் சிரித்தான். தேன்மொழி ராவணனின் கைகளிலிருந்து சீலையைக் காப்பாற்றப் போராடினாள். மண்தரையில் உட்கார்ந்திருந்தவர்கள் கொட்டாவி விட்டார்கள். பனி மொத்தமாய் விழுந்தது. துண்டால் தலையை முக்காடிட்டிருந்த பெருசுகள் ஆல மரத்தடியிலேயே ஒண்டியிருந்தார்கள். அம்மாக்கள் மடியிலேயே சிறுவர்கள் தூங்கி விட்டிருந்தனர். பக்கத்துக் கோயிலின் தூண்களில் பெண்கள் ஒட்டியிருந்தனர்.

"ஆ..! விடு என்னை..!! காவி அணிந்த துறவி என அன்னம் இட வந்தேன். பாவி நீ, என் கன்னம் தொட வந்தாய்..!" என்று ராகமாய்ப் பாடினாள் சீதேன்மொழி.

"சீதா..! வாவா..! என்னோடு லங்கைக்கே..! வந்தால் நீ என் அரசி..!! உன்னோடு உரசி...!" கன்னியராவணன் அபசுரமாய்க் கத்தினான்.

இழுபிடிப் போராட்டம் ஒருவழியாக ஓய்ந்து, அவளை முதுகில் தூக்கிக் கொண்டு சீனிலிருந்து விலகினார்கள். அடுத்ததாக மேடை பின்படுதா மாற்றப்பட்டு, ஒரு பஸ் ஸ்டாப் வருகின்றது. ஒரு பெண் தோளில் கயிறு கட்டி, இரு பானைகளை முன் தொங்க வைத்து வருகிறாள். ஒருவன் டீக்காய் பேண்ட் ஷர்ட் போட்டு, அவளிடம் பானைகளைச் சுட்டிக் காட்டி,

"இதுல என்ன இருக்கு...?" மைக் முன்னாடி வந்து சத்தமாய்க் கேட்டான்.

"ம்..! பாலு..! ஏன், உனக்கு வேணுமா...?" அவளும் மைக் தலையில் கத்தினாள். அங்கங்கே இருந்த இளவட்டங்கள் விசிலடித்தன. அரைத்தூக்க கிழவர்கள் சட்டென தெளிந்து, உன்னிப்பாகப் பார்த்தார்கள்.

கன்னியப்பன் கண்ணாடி முன் அலங்காரத்தைச் சரி பார்த்துக் கொண்டான். மீசை கூர்மையாக இருக்கின்றது. க்ரீடம் ஒடிகிறது. ரப்பர் பேண்டால் இழுத்துக் கட்ட வேண்டும். நெஞ்சு முடிகளை அந்த வளையங்கள் இறுக்குகின்றன. கொஞ்சம் லூசாக்க வேண்டும். இறுக்கிய தடங்களை மீனாச்சியிடம் சொல்லி எண்ணெய் தேய்க்கச் சொல்ல வேண்டும். எழுந்து, ஓலைகளைக் கொஞ்சம் விலக்கி வெளியே பார்த்தான்.

மீனாச்சி இல்லை.

விரல்களால் இன்னும் துளையை அகலமாக்கி, உற்றுப் பார்த்தான். அங்கங்கே கொத்துக் கொத்தாய் உட்கார்ந்திருந்தவர்களிடம் பார்த்தான்; கோயில் மண்டபத்தில் பார்த்தான்; அரசமேடையில், சுடுகாட்டுப் பாதையில், ஓடைக் கரையில்... மீனாச்சி இல்லை. அவன் கண்கள் சூடேறின.

மேடையின் மேக்கப் வாசலில் ராஜப்பா நின்றிருந்தான். அவனைத் தோள் தட்டி,

"ராசு..! கொஞ்சம் வீடு வரிக்கும் போய்ட்டு வந்திடட்டுமா..?"

"டேய்..! அடுத்த ஸீன் உனக்கு தான். சூர்ப்பனகைகிட்ட சீதாவ காட்டணும்.."

"இல்ல..! வயிறு ஒரு மாதிரி இருக்கு..! போய்ட்டு சுருக்க வந்திடறேன்..! நீ இந்த காமெடி சீனை இன்னும் கொஞ்ச நேரம் இழுத்தடிச்சிட்டிரு..! இல்லாட்டி ராமனும் லச்சுமணனும் பொலம்பற சீன் அடுத்து வருதுல்ல..? அத இங்கே இளுத்து வுட்டுரு. தோ, வந்திடறேன்..!"

டவுனிலிருந்து வந்திருந்த 'ஸ்ரீ அங்காளம்மன் நாடக ட்ரூப்'பின் தளதள பெண் இன்னும் பச்சை பச்சையாய் மைக்கில் பொழிந்து கொண்டிருக்க, அவர்கள் குடித்துக் காலியாக கிடந்த இளநீர்கள் ஒரு மூலையில் குழுமியிருந்தன. வெட்டி வெட்டி, ஏறிய வழுவழுப்பு காய்ந்திருந்த அரிவாள் ஓரமாய்க் கிடந்தது. எடுத்து, இடுப்பில் செருகிக் கொண்டு, மேல் அங்கியில் மறைத்துக் கொண்டான். வெளியே வந்து, கொட்டாயின் பின் நின்றிருந்த சைக்கிளில் ஏறி அழுத்தினான். க்ரீடம் காற்றில் நடுங்கியது.

சாலையோரப் புளியன்கள் மேல் தகர போர்டுகளில் அபார்ட்மெண்ட் விளம்பரங்கள் மடங்கியிருந்தன. ஏர் பஸ்கள் ஜிவ் ஜிவ்வென்று கடந்து பறந்தன. இரண்டு சுற்றுலா பேருந்துகள் எதிர்த்திசையில் ஓடின. ஜிப்ஸி ஒன்று தடத்திலிருந்து விலகி, உள் விளக்குப் போட்டு ஓய்வெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேடேறுவதை உணர்ந்து கியரை இரண்டிலேயே வைத்து ஓட்டினான் சேது. பாலக்காடு இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடும்.

ருப்பண்ணசாமி கோயிலில் மண் விளக்குகள் மிகக் கொஞ்சமாய்த் துளிர்த்து உயிர் பிடித்துக் கொண்டிருந்தன. அது தெருவின் ஆரம்ப எல்லையில் இருந்தது. கடைசியில் பூங்காவனத்தின் வீடு இருந்தது. அடுத்து, காடு ஆரம்பித்து விடும். கரும்பு போட்டிருந்தார்கள். ஒற்றையடிப் பாதைகள் வரப்புகளாய்ப் போகும். பிடித்து, சென்றால் அரை கி.மீ.யில் என்.ஹெச் சிக்கி விடும்.

தெரு கொஞ்சம் மேடான இடத்தில் அமைந்திருந்தது. கோயிலின் பக்கத்திலேயே பச்சைப் பூஞ்சை படர்ந்த படிக்கட்டுகள் பொய்க்கரட்டுப் பள்ளத்திற்கு கொண்டு சேர்க்கும். எப்போதும் அதில் வரும் தண்ணீர் பழுப்பாய்த் தான் இருக்கும். மலைநிலங்களில், அடிவாரங்களில் சடசடவென மழை பெய்தால், பள்ளத்தில் சலசலத்து, வாளையாற்று நீரோட்டத்தில் சென்று சங்கமித்து விடும். மற்ற நாட்களின் ஈரப்பிசுபிசுப்பில் கால் வைக்கப் பிதுங்கும்.

கோயிலிலிருந்து சரியும் பாதை கரட்டின் மேல் பாலத்தில் வந்து சேரும். சுதந்திரத்திற்கு முன் கட்டியது என்று பறை சாற்றும் ஒரு இங்கிலீஷ் கல்வெட்டு, காலத்தால் கொறிக்கப்பட்டு மூல, பெளத்ர போஸ்டர்களால் பாதி மறைபட்டிருக்கும். இழுத்துக் கொண்டிருக்கும் ஒரு கிழவனைப் போல் காற்றில் முனகும் பாலத்தின் அகலம் ஒரு பதினாறு வயது பெண் இடை போல் குறுகலாய் இருக்கும். போன குறுவைப்பட்டத்து மழையில் மண் பாலம் கரைந்தழிந்து விட, மாட்டு வண்டிகள் கூட துரைமார்கள் பாலத்தின் வழிதான் பயணிக்கின்றன. எச்சில் ஒழுக, மாடுகள் சாவகாசமாய் நடக்கையில், கடக்கையில், காத்திருக்கும் நான்கு சக்கர வாகனர்கள் ஹாரனை அழுத்தியே கதறுவார்கள். எதிர் முனையில் ஒரு முள் காடு இருக்கும். இடது புறமாய்த் திரும்ப, 'சரஸ்வதி' தியேட்டர் வரும். கடந்தால், பச்சைமாரியம்மன் கோயிலும், ஒட்டிய திடலும், அரச மரத்தடியும் வருகின்றன. திடலில் தான் பண்டிகைக் காலங்களில் நாடகங்கள் நடக்கும். 'தேடி வந்த இளவரசி' அல்லது 'மகத நாட்டு வியாபாரி' போன்ற செட்கள் தேவைப்படும் சரித்திர நாடகங்கள் அல்லது 'காதல் என்ன கத்திரிக்காயா?' என்ற சமூகக் கருத்து நாடகங்கள் மட்டுமே திரும்பத் திரும்ப நடத்தப்படும். அறுவடை சுமுகமாக நடந்து, கோ-ஆப்ரேட்டிவ் பேங்கிலும், சொசைட்டியிலும் தவணை கட்டி விட்ட பின்பும், எல்லோர் கையிலும் காசு புரண்டால், டவுனில் இருந்து ட்ரூப்பைக் கூட்டி வந்து வேஷம் பார்ப்பார்கள். அப்போது 'தாலியா? வேலியா?' 'சீதையின் கற்பு' போன்ற புதிய நாடகங்கள் அரங்கேறும். ராஜப்பா ஊரின் கலை இன்சார்ஜ். சீதையைக் கடத்திச் சென்றவுடன், மீனாச்சியைத் தேடி கிளம்பிய கன்னியப்பன், பாலத்தைக் கடந்து தெருவிற்குள் நுழைந்தான். பூங்காவனத்திற்கு முந்திய வீடு அவனுடையது. மீனாச்சி அவன் மனைவி.

ல்மண்டபம் தாண்டி சீரான வேகத்தில் லாரி ஓடத் தொடங்கியது. முல்லா முகம் கழுவி விட்டு பளிச்சென்றானான். அவனுக்கு இது புதிதாக இருந்தது. வழக்கமாக ஹைவேயிலேயே, பைபாஸிலேயே தான் போவார்கள். முதன் முறையாக ஊருக்குள் செல்ல வேண்டும். அவனுக்கு கொஞ்சம் பயம் வந்தது. ஒரு வாரத்திற்கு முன் சர்வீஸுக்கு விட்டிருந்த போது, சொல்லியிருந்தார்கள்.

"யாருப்பா..? நீ தான் க்ளீனர் பையனா..? ட்ரைவர் வரலையா..? எந்த கம்பெனி வண்டி இது..? கே.எஸ்.பி.யா..? நல்லா கேட்டுக்கோ. இஞ்சினுக்கு பக்கத்துல நாலஞ்சு பார்ட்ஸ் ரொம்ப ரஸ்டாகி இருக்கு. எப்ப வேணா களண்டு வுளலாம். இப்பத்திக்கு டைட் பண்ணி வெச்சிருக்கேன். மாத்திக்கறது நல்லது.."

சேதுவுடம் சொல்லி லாரி ஆபிஸில் மேனேஜரைப் பார்த்த போது,

"சார்..! எஞ்சின்ல ஏதோ சிக்கலாம்..."

"எந்த வண்டி சொல்ற சேது..?"

"வெங்கடேஸ்வரரு. ரியாஸ்ல க்ளீன் பண்ணும் போது முல்லாகிட்ட சொல்லியிருக்காங்க.."

"ரிப்பேர் பார்த்துரு. அடுத்த வாரம் கொச்சின் போக வேண்டியிருக்கும். பெரிய சரக்கு எடுத்திட்டு வரணும்..." சொல்லி ரெண்டாயிரம் கொடுத்தார்.

வெளியே வந்து, ஸ்ரீதுர்கா ஹோட்டலில் சாப்பிடும் போது, ரெண்டாவது பஜ்ஜியில்,

"எப்பண்ணே ரிப்பேருக்கு வுடப் போறோம்..?"

"த பாரு முல்லா. ரிப்பேரெல்லாம் கெடயாது..!"

"சரி பண்ணனும்னு சொன்னாங்களே..!"

"அவனுங்க கெடக்கறாங்க. இப்டி எதுனா துரு புடிச்சிருக்கு, தூசு அடச்சிருக்குன்னு சொல்லி காசு புடுங்குவானுங்க. அதெல்லாம் சமாளிச்சுக்கலாம். மேனேஜர்கிட்ட சொல்லாத. ரிப்பேர் பாத்தாச்சுனு சொல்லிரலாம். உனக்கு நூறு ரூபா. பயப்படாத, இதெல்லாம் சின்ன பிரச்னை. மெட்ராஸ்ல இருந்தப்ப, ப்ரேக்கே இல்லாம நாக்பூர் வரைக்கும் போய் பேல் எடுத்துட்டு வந்திருக்கேன்..!"

அர்த்த ராத்திரி தாண்டி ரெண்டு மணி நெருங்கிக் கொண்டிருந்தது. ஊதற்காற்று விசிறியடித்தது. அதெப்படி ப்ரேக்கே பிடிக்காமல் அவ்வளவு தூரம் போக முடியும் என்று யோசித்தான் முல்லா. வைப்பரைத் தேய்க்க விட்டான் சேது. தெறித்தாற் போல் விழுந்திருந்த கொஞ்சம் துளிகள் படர்ந்தன. தலைக்கு மேல் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரேடியோ கரகரத்துக் கொண்டே இருந்தது. முல்லாவுக்கு இனிமேல் தூக்கம் கிடையாது என்பது தெரிந்து போனது. தூங்க முயன்றாலும் சேது விட மாட்டான். சேது விட்டாலும் இந்த ரேடியோ விடாது. அதற்காகவே இப்போது அதைப் போட்டு விட்டிருக்கிறான். எப்படி தூங்காமல் இருப்பது..?

"லாரில்ல சரக்கு என்னண்ணே இருக்கு...?"

"தம்பி. இதெல்லாம் நீ கேட்கக் கூடாது. எனக்கும் தெரியாது. கொச்சின்ல இருந்து கொண்டு வர்றது மட்டும் தான் நம்ம வேலை. உக்கடம் தாண்டி குடோன்ல சேத்துரணும்..! அவ்வளவு தான்..!

"மதிப்பு எவ்ளோண்ணே இருக்கும்?"

"பல கோடி..!"

இதற்கு மேல் அவன் எதுவும் சொல்ல மாட்டான். முரட்டுக்கயிறுக்குள் இறுக்கமாய்க் கட்ட்ப்பட்டிருந்த மூட்டைகளுக்குள் என்ன இருக்கும்..? யோசித்துப் பார்த்தால், இன்னும் தூக்கம் வந்தது. கண் சொக்கும் போது, லாரிக்கடியில் எங்கோ லேசான இருமல் கேட்டது போல் இருந்தது.

"கெனா கண்டிருப்ப..!" என்றான் சேது.

த்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு ஜாக்கிரதைத் தன்மை இருந்தது. வீட்டுக்குள் யாரும் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது அதன் இலக்கு போல்...! ஆனாலும் அவன் வீட்டை அவனுக்குத் தெரியாதா..? படலையின் வேலியை மெ..ல்..ல.... விலக்கி, புழக்கடை வாசலில் நுழைந்து, சமையலறை ஜன்னலைத் திறந்து பார்த்தான்.

பட்டாசாலை தெரிந்தது. மூலையில் ஒரு லாந்தர் விளக்கு இருந்தது; எரிந்தது. பக்கத்தில் ஒரு புடவை கசங்கி சுருண்டிருந்தது. பூக்கள் போட்ட இளஞ்சிவப்பு புடவை. மேட்சாக ஒரு ரவிக்கை கலைந்து கிடந்தது. அதன் பொய்யான மேட்டில் விளக்கொளி நரம்பாய் ஊடுறுவியது. கட்டிலின் ஒரு காலில் ஒரு வெண் உள்ளாடை தொங்கிக் கொண்டிருந்தது. துணிக்கயிற்றில் ஒரு லுங்கி வீசப்பட்டிருந்தது. சத்தியமாய், அது அவனுடையது இல்லை.

ஏதோ ஒரு தெருவில் ஏதோ ஒரு நாய் ஏதோ ஒன்றுக்காக ஊளையிட்டது. திடலிலிருந்து அள்ளிக் கொண்டு வந்த ராமனின் புலம்பலைக் காற்று கன்னியப்பனிடம் சேர்த்தது.

"ஏனடா தம்பி..? ஈதென்ன நீ செய்தது...? அய்யோ சீதா..! உன்னை இழக்கவா இங்கு வந்தேன்..! சீதாஆஆஆ...!"

அடுத்த காட்சி வசனங்களை அனிச்சையாய் அவன் உதடுகள் உச்சரித்தன.

'தங்காய் சூர்ப்பனகை..! பார் இந்த சீதையை..!'

மீனாச்சி புரண்டு படுத்தாள். அவள் வெள்ளை முழங்கால்கள் தெரிந்தன.

'அயோத்தி ராமனின் மனைவி..! உன்னை மூக்கறுத்தானே, அவன் பொண்டாட்டி..! இன்று என் கையில்..! இவள் கற்புக்கரசி! ஹா..! ஹா..! ஹா..!'

அவள் மார்புகளை ஒரு வலுவான கை மறைத்து இயங்கியது. அதில் கொசகொசவென முடிகள் சுற்றியிருந்தன.

'இவள் எத்தனை அழகு..! இவளை நானே மணந்து கொள்ளப் போகிறேன்..! இவள் முகத்தைப் பார்..! அந்தக் கூந்தல்...'

கட்டிலிலிருந்து இறங்கித் தரையில் பரவியிருந்தது. மல்லிகைப் பூக்கள் குழப்பமாய்க் கலந்திருந்தன. அவள் விரல்கள் கட்டிலை இறுக்கிப் பிடித்திருந்தன.

'இவள் முகத்தைப் பார்...! தேன் தேடும் வண்டுகள் கண்டால் குழம்பி விடும் தாமரைக் கண்கள்..!'

கிறங்கியிருந்தன. ஒரு மயக்கத்தின் மதுரசம் முகம் முழுதும் கிளைத்து எழுகின்ற பரவசத்தில் அவள் உதடுகளை ஒருவன் தின்று கொண்டிருந்தான்.

'இப்போது அந்த ராமன் என்ன செய்வான்..? என் அருமைத் தங்கையை அழ வைத்த இவன் கொழுந்தன் ஏது செய்குவான்..? ஹா..! ஹா..! ஹா..!'

கன்னியப்பன் முடிவு செய்தான். இடுப்பில் செருகியிருந்த அரிவாள் வேர்வையில் நனைந்திருந்தது. ரொம்ப நாளாகச் சந்தேகப்பட்டிருந்தது இன்று உண்மையாக.. கண்ணெதிரிலேயே..! ராத்திரி முழுதும் நாடகம் நடக்கும் என்று தெரிந்து கொண்டு, நான் அங்கே இருக்க வேண்டிய கட்டாயத்தைப் பயன்படுத்தி, என்னோடு வந்து பாதி நாடகம் பார்த்து விட்டு, சத்தமில்லாமல் கிளம்பி... முதலில் இவனை! பிறகு அவளை...!!

படலையை மூடி விட்டு, நடந்தே வந்து கருப்பண்ணசாமி கோயிலின் திட்டில் மறைந்து கொண்டான்.

என்ன தவறு செய்தேன்..? அழகான மனைவிக்கு ஆசைப்பட்டது தவறா..? முத்தான ரெண்டு மகள்கள் இருக்க...! ச்சீ...! அரிவாளை எடுத்து ஒரு வீசு வீசினான். காற்று கிழிந்தது. காத்திருக்கத் தொடங்கினான்.

ரை மணி நேரம் கழிந்தது. நாடகம் ராவணன் இல்லாமலேயே நடக்கத் தொடங்கியது. இவனைத் தேடி வந்த குமரப்பன் கன்னியப்பனைக் கடந்து, வீட்டைப் பார்த்து, உடனே திரும்பி போய் 'காணோம்' என்று சொல்லி, ராவணனாகத் தொடங்கினான். கருப்பண்ணசாமி கோயில் விளக்குகள் இறந்து பட்டு, கருமை கனமாய் அப்பியிருந்தது. ஒரே ஒரு தெரு விளக்கு மட்டும் மங்கலாய் எரிந்தது. மிக லேசாய் காற்று வீசியது. கொஞ்சம் புழுக்கமாகவே இருந்தது. இந்த ராவண வேஷத்தைக் கழட்டி விடலாமா என்று யோசித்தான். வீட்டுக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு அமைதியானான்.

எங்கோ ஒரு தெரு நாய் வேகமாய் குரைத்து ஓடியது. ஏதோ ஒரு வாகனம் ஊருக்குள் நுழைவது போல் இரைச்சல் கேட்டது. லாரி.

அவன் களைப்பாய் நடந்து வந்தான். அதில் ஒரு துள்ளல் இருந்தது. கன்னியப்பன் அரிவாளை எடுத்துக் கொண்டான். கருப்பண்ணசாமி கோயிலிலிருந்து ஏழு வீடுகள் முன்னே வந்து கொண்டிருந்தான். சேது இடையில் புகுகின்ற முள் செடிகளை விலக்கி விலக்கி ஓட்டி வந்தான். அவன் ஐந்தாவது வீட்டுக்கு வந்து விட்டான். முல்லா ரோட்டின் முன் இருக்கும் குழிகளை எட்டிப் பார்த்தான். நான்கு வீடுகள். கன்னியப்பன் இடுப்பை இறுக்கினான். மூன்று வீடுகள். சேது பாலத்தை அடைவதற்குள் கியர் மாற்றி, க்ளெச்சை விடுவித்து, ஆக்ஸிலரேட்டரை அழுத்தினான். லாரி இன்னும் கொஞ்சம் சீறியது. இரண்டு வீடுகள். முல்லா கருப்பண்ணசாமி கோயிலைக் கண்டான். முதல் வீடு. கன்னியப்பன் பூனையாய் முன் கால்களால் நடந்தான். லாரி வேகமாய்ப் பாய்ந்தது. முன்னே வந்து விட்டான் அவன்.

"பரதேசி நாயேஏஏஏ....!" கத்திக் கொண்டே அரிவாளை ஓங்கிக் கொண்டே அவனை நோக்கி கன்னியப்பன் ஓடி வர, எதிர்பாராத அதிர்ச்சியால் விதிர்த்துப் போன அவன், சடுதியில் நோக்கம் புரிந்து, சுற்றுப்புறம் மறந்து, ரோட்டின் குறுக்கே பாய, சேது அதிர்ந்து ப்ரேக்குகளை அழுத்த, குழிகள் கொண்ட சாலையில் எகிறி எகிறி, இறுக்கம் கலைந்திருந்த எஞ்சினின் பாகங்கள் மறுத்து விட, முல்லா பார்த்துக் கொண்டிருக்கும் போதே....ச்ச்ச்ச்சட்...!!

அவன் உயரமாய்ப் பறந்தான். சுற்றினான். கீழே விழுந்த போது, சில சிவப்புத் துளிகள் வைப்பர் மேல் தெறித்தன. தடுமாறிய லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது. முல்லா "அய்யோ...!" என்று கத்தினான். கன்னியப்பன் பிரமிப்படைந்து, "கருப்பண்ணசாமி உன்ன தண்டிச்சுட்டாருடா.." என்று கத்திக் கொண்டே பாலத்தை நோக்கி ஓட, லாரி பெருத்த வேகத்தோடு சுற்றுச் சுவர்களை இடித்துத் தள்ளி, மேலிருந்து அப்படியே செங்குத்தாய் இறங்கியது.

"கண்டேன் சீதையை..! ராமா கலங்காதே..! லச்சுமணா அழாதே..! சுக்ரீவா சமாதானம் கொள்..! அங்கதா அமைதியாயிரு...!" ஸ்பீக்கரில் வடிந்து கொண்டிருந்த அனுமனை மீறி, நாடகத் திடல் முழுதும் அத்தனை பெரிய சத்தம் கேட்டது.

***

காலப்பயணியாய் வலையுலகில் எழுதத் தொடங்கி இன்றோடு (21.August.2009 ) மூன்றாண்டுகள் ஆகி விட்டதை முன்னிட்டு, இதை birthday special சிறுகதையாகக் கொள்ளலாம். :)

Tuesday, August 04, 2009

தலையெடு!

வுன் ஹால் ஏரியாவில் ஜில்லென்ற தயிர்வடைக்கு கங்கப்ரஸாத்திற்கு இரண்டாமிடம் தருகிறார்கள். ஜோனல் சந்திப்புகளுக்காக கோவை வரும் போதெல்லாம் நான் தங்கும் ஒரு டிங்ஜிங் ஹோட்டல் அது. போர்டிங் & லாட்ஜிங். அதன் காரை பெயர்ந்த கூரைகளும், மூட்டைப்பூச்சி மெத்தைகளும், பழுப்பு கரைந்த பாத்ரூம்களும் எனக்கு மனைவிமுகம் போல் பரிச்சயமாகியிருந்தன.

காலையிலேயே டயபடீஸ்காரன் போல் விட்டு விட்டு வானம் பெய்து கொண்டிருந்தது. ஒன்பது முப்பதுக்கு எனக்கு டிபார்ட்மெண்ட் மீட்டிங். முடித்து,'கணபதி'யில் ஒரு ஏஜெண்டைப் பார்த்து விட்டு, 15:50க்கு ஜங்ஷனில் மங்களூர் சென்னை எக்ஸ்ப்ரஸைப் பிடித்தால், ராத்திரி பத்து மணிக்கு திருச்சிக்குத் திரும்பி விட முடியும்.

வழக்கமான அலங்காரங்கள் அணிந்து கொண்டு, படிக்கட்டுகள் வழி இறங்கி ஹோட்டலுக்குள் செல்வதற்குள் லேசாக நனைந்து விட்டேன். சுழலும் எல்.ஈ.டி.க்களின் நடுவே ஃப்ரேமிட்ட பெருமாள். மல்லிகைக் கொத்து. சந்தனக் குப்பி. பில் சுமக்கும் சிரசாசன குத்தூசி. பாக்கெட்டுகளில் சில்லறைகளாக மைசூர்பாக், லட்டு, மிக்சர், பால்கோவா மற்றும் அருணாச்சலம்.

ஒற்றை வாரிசான மனைவியுடன் சீதனமாக வந்த ஹோட்டலுக்கு அவள் பெயரையும், பிறந்த மகன் பெயரையும் சேர்த்து வைத்து விட்டு, கல்லாவிலேயே உட்கார்ந்து விட்டான் என்பதாகப் பேச்சிருக்கிறது.

'என்ன இன்சூரன்ஸ்காரரே..! மதியானம் சாப்பாடு இங்க தான..?' கேட்டான்.

'ஆமாங்க...!' சொல்லிக் கொண்டே என் வழக்கமான சீட்டை அடைந்தேன். காலை நேரத்தில் கொஞ்சம் கூட்டம் அங்கே இங்கே சிதறி உட்கார்ந்திருந்தது. வெண்ணுருண்டை இட்லிகளும், தட்டை தோசைகளும், பூரி மசால்களும், சாம்பார் தளும்பத் தளும்ப பச்சை, செந்நிற சட்னிக் கூட்டணிகள், மெதுவடையுடன் தட்டுகள் டேபிளுக்கு டேபிள் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தன. சர்வர்கள் குறுக்கும் நெடுக்கும் கோடுகள் கிழித்து நடந்தார்கள்.

வழக்கமாக அமரும் டேபிளை அடைந்தேன். நான் வருவதை முன்பே பார்த்திருந்த பாபு, சப்பாத்தியும், கேரட் ஹல்வாவும் கொண்டு வந்து வைத்து சிரித்தான். இந்த கூட்டு எனக்குப் பிடிக்கும். சப்பாத்தியைக் கிழித்து, மாவை ஊதி விட்டு, ஹல்வாவைக் கொஞ்சமாய் விள்ளி, கிழிசலுக்குள் உதறி, பீடா போல் சுருட்டி, கன்னத்திற்கும், கீழ்ப்பற்களுக்கும் இடையில் அதக்கிக் கொண்டு அழுத்தினால், கசியும் ஹல்வ இனிப்பு முகம் முழுவதும் கிளைக்கும்.

'தட்...!'

கிறங்கியிருந்த நான் விழித்துப் பார்த்தேன். பாபு பின் தலையைத் தேய்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் கோபால் காலரை இழுத்து விட்டுக் கொண்டு நடந்தான். சீனியர் சர்வர். பாபுவைத் தலையில் தட்டியிருக்க வேண்டும்.

'ஏன்டா... ஆர்டர் கொண்டு வரும் போதே, தண்ணி எடுத்து வைக்க மாட்டியா..?' பாபு உள்ளே போனான். என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் கொஞ்சம் ஈரம்.

இதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். காரணம் இருக்கின்றதோ, இல்லையோ கோபால் இவனைத் தலையில் ஒரு தட்டு தட்டுவான். சில சமயங்களில் போகிற போக்கில் ஒரு தட்டு..! வயதில் பெரியவனாக இருக்கும், தனக்கு சம்பந்தமில்லாத ஒரு காரணத்திற்காக ஒரு சிறு பயலை அதிகாரம் செலுத்துவது எனக்கு வருத்தமாயிருந்தது.

டம்ளர் கொண்டு வைத்து விட்டு, பாபு என் முகம் பார்க்காமலேயே வேறொரு டேபிளுக்குப் போய் விட்டான். ஒரு நாள் இந்த கோபால் வசமாக மாட்டும் போது, பாபு அவனை இதற்கெல்லாம் பழி வாங்குவான் என்று மட்டும் தோன்றியது. டிஃபன் முடித்து விட்டு கிளம்பினேன்.

மீட்டிங் மசாலா டீயோடு நிறைந்தது. ஏஜெண்ட்டைப் பார்த்து விட்டு, கமிஷன் விஷயமாகப் பேசி விட்டு, லாட்ஜுக்குத் திரும்பி, அறையைக் காலி செய்து, சாவியைக் கொடுப்பதற்காக ஹோட்டலுக்குச் சென்ற போது அருணாச்சலம் கத்திக் கொண்டிருந்தான்.

'எங்கடா போனான் கோபாலு..?'

எனக்கு முன்னால் ஒரு குடும்பம் நின்றிருந்தது. தலைவர் ரோஸ் சீட்டுக்கும், இளம்பச்சை சீட்டுக்கும் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்க, தலைவி மார் மேல் கிடந்த குழந்தையை எழுப்பி விட முயற்சிக்க, பெண் குழந்தை சமர்த்தாய்ப் போய் குமிழ் அமுக்கி கை கழுவிக் கொண்டு, சுமாராய் ஃபேன் ஓடும் ஸ்தலத்தில் சென்று அமர்ந்து கொண்டு, டேபிள் மேல் தாளம் போட்டது. குடும்பஸ்தர் தயிரில்லாத இளம்பச்சை சீட்டுகள் இரண்டு வாங்கிக் கொண்டு, பெண்ணுக்காக மட்டும் ஒரு ரோஸ் சீட்.

'பால் இன்னும் வரலைங்க. சொசைட்டி வரைக்கும் போயிருக்காரு..! உங்ககிட்ட சொல்லலீங்களா..?' சமையற்காரர் பனியனில் செருகிய துண்டில் கைகளைத் துடைத்து வந்தார்.

'வரட்டும் அவன்...! ஒரு வார்த்தை சொல்லாம அவன் இஷ்டத்துக்கு போறான்..வர்றான்..! இன்னியோட கணக்க தீத்து முடிச்சர்றேன்..' என்னைப் பார்த்தும் அவனது வழக்கமான சிரிப்பு முகமூடியை மாட்டிக் கொள்ள முடியாமல் நெளிந்தான்.

'என்ன அதுக்குள்ள காலி பண்றீங்களா...? மறுபடியும் எப்ப வருவீங்க..?' என் வழக்கமான பிங்க் சீட்டைக் கிழித்துக் கொடுத்தான்.

'தெரியலீங்க. மீட்டிங் போட்டா வர வேண்டியது தான்..' நான் எப்போதும் அமரும் டேபிளை அந்தக் குடும்பம் ஆக்ரமித்திருந்தது. பாபு தட்டுக்களை எடுத்து வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு சிரிப்பு பரவியிருந்தது. குழாய்க் குமிழைத் திருகியபடி ஒரு டேபிளில் அமர்ந்தேன். பாபுவின் சிரிப்புக்கு என்ன காரணம் இருக்க முடியும்..? கோபால் இல்லாததாகத் தான் இருக்க முடியும். இப்போது என் முன்னால் அவனை அடிக்க ஆள் இல்லை அல்லவா..?

'சார் மீல்ஸா..?' ஒரு குட்டிப் பையன் என் கையில் இருந்த சீட்டை வாங்கிப் போனான். இன்று தான் சேர்ந்திருப்பான் போல. புதிதாய் இருந்தான். கொஞ்ச நேரம் கழித்து காலி தட்டைக் கொண்டு வந்து வைத்தான். சாதக் குண்டாவைக் கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து என் தட்டில் எடுத்து வைத்தான். கனம் தாங்காமல் 'பொத்'தென்று வைத்து விட, ஒரு கட்டி உருண்டு வெளியே போய் விழுந்தது.

பக்கத்து டேபிளில் இருந்து பாபு வந்தான். வலது கை விரல்களை ஒன்றாக்கி, குட்டிப் பையனின் தலை மேல் ஒரு வீசு வீசினான். பையன் கண்களில் பூச்சி பறந்தது. பாபு என்னைப் பார்த்தவாறே காலரை இழுத்து விட்டுக் கொண்டான்.

Monday, June 01, 2009

மனையியல்.

டெய்ஸி ராகவன் விடாமல் அழுதுகொண்டே வந்தாள்.

எர்ணாகுளம் எஸ்.எஃப் எக்ஸ்ப்ரஸ் ஓசூரின் மேடுகளில் இருந்து சமவெளிச் சரிவுகளில் பாய்ந்து கொண்டிருந்தது. ப்ரின்ஸி, குழந்தையை எடுத்து முதுகில் தட்டிக் கொடுத்தாள். தொலைவில் வட்டமாய்ச் சுழலும் மலைமுகடுகளை ஜன்னல் வழி விரல் நீட்டிக் காட்டி, "இல்லி நோடு.." என்றாள். "ஸீ! யூ ஷுட் நாட் க்ரை லைக் திஸ்!" என்று அச்சுறுத்தினாள். மொழிகள் புரியாத டெய்ஸி இன்னும் வீறிட்டாள். காய்ச்சலா என்று தொட்டுப் பார்த்தாள். நார்மல். வேறு என்ன காரணமாய் இருக்கும் என்று புரியவில்லை. முதல் குழந்தை. தாய் அனுபவ அறிமுகங்கள் இல்லை. திணறினாள்.

பிஸ்னஸ்லைன் எக்ஸ்க்ளூஸிவ் காலமில் ஆழ்ந்திருந்த என்னிடமிருந்து, க்ரூட் ஆயில் விலைச் சரிவு விவாதம் விலக்கப்பட்டு, குழந்தை திணிக்கப்பட்டது. "ராகவ்..! இட்ஸ் யுவர் சைல்ட் டூ. டேக் கேர்..!"

நானும் தட்டிக் கொடுத்தேன். பயன் இல்லை. "ஹனி! இப்படி எல்லாம் அழக் கூடாது. லுக்! எல்லாரும் பாக்கறாங்க பார்!" என்றேன். பேச்சுவார்த்தை படுதோல்வி. அவள் அழுகை தண்டவாளத் தடதடவுடன் ஒரு ரெசனன்ஸில் இல்லாமல், தனியாக ஒலித்தது.

சைட் பெர்த்தில் இருந்து கவனம் இடையூறப்பட்ட நவயுக இளைஞன், "ப்ச்..!" என்று ஓர் எரிச்சல் கலந்த முகச் சுளிப்பு செய்தான். பார் பையா..! நாளை உனக்கும் இந்நிலை வரும். அதிலும், காதல் மணம் செய்து கொண்டு, ஆரம்ப தேன் நிகழ்வுகள் கரைந்த பின் டயாஃபரும், செரலாக்ஸும் தூக்கிக் கொண்டு, பாப்பா பின் அலைந்து, முன்னிரவு, பின்னிரவு முறையில்லாமல் தூக்கங்கள் கலைந்து, களைத்து தந்தைமையில் திணறும் வரை, மெட்டாலிகா நனைக்க செவிகளில் ஐ-பாட் வால் செருகி, ஒற்றை ருத்ராட்ச சன்னக் கயிற்றுக் கழுத்தோடு, I am Stupid. Read Loud. அழுத்த வாசகங்கள் பதித்த சிவப்பு டி-ஷர்ட் கலைத்து, எம்.எம்.எஸ்ஸில் வரும் பதினைந்து செகண்ட் படங்களைப் பார்த்து...அனுபவி இளமையை!

"கொளந்தைய இப்படி கொஞ்சம் குடுங்க..!" என்று அந்த எதிர் பெர்த் அம்மா கைநீட்டினார். அப்போது தான் அவர்களை முழுமையாக கவனித்தேன். வயதானவர். பக்கத்தில் முழு சீருடையோடு ஓர் எக்ஸிக்யூடிவ் ஆசாமி. நடுவில் ஒரு சிறு பெண். அந்த அம்மா மடியில் தலை வைத்திருந்தாள். மேல் பெர்த்தில் ஒரு பருமனான ஆள் நெளிந்து கொண்டிருந்தார். அவை எவ்வளவு எடையை அதிகம் தாங்கும் என்ற எப்போதுமான சந்தேகம் இப்போதைக்குமானது.

"நீங்க இத்தன சின்னக் குழந்தையை பிடிக்கற முறையே தப்பு. சின்னப் புள்ளைங்க தானே. கத்துக்குவீங்க..!" என்றார். புது வெப்பம், புது ஸ்பரிசம் உணர்ந்த டெய்ஸி அவரை உற்றுப் பார்த்தாள். அவர் அவளைக் கொஞ்சம் உதறி, ஆடைகளை நீக்கிப் பார்க்க, ஒரு சிற்றெறும்பு தொடையில் கடித்து, செத்துப் போயிருந்தது. தள்ளி விட்டு தேய்த்து விட அழுகை குறைய ஆரம்பித்தது.

காலை ரயிலேறிக்
கல்கத்தா போயிறங்கி
கடைக்குக் கடைபார்த்து
கல்லிழைத்தச் சங்கெடுத்துச்
சுத்திச் சிகப்பிழைத்துத்
தூருக்கே பச்சைவைத்து
வாய்க்கு வயிரம் வைத்து
வாங்கி வந்தார் தாய்மாமன்!
கண்ணே உறங்கு!
கண்மணியே உறங்கு!

பூ போல் மடியில் அவளைக் கிடத்தி, மென் வயிற்றில் தட்டிக் கொண்டே பாடினார்.

"ட்லி..பூரி..!"

பின்னால் இருந்து குரல் வந்து ஒவ்வொரு வரிசையாகத் தாவியது. என்னால் வாங்க முடியாது. ப்ரின்ஸி திட்டுவாள். 'அதெல்லாம் சுத்தமாய் இருக்காது. உனக்கு ஒத்துக்காது. ஆசையாய்க் காரமாய்த் தின்று விட்டு, இரண்டு நாட்கள் லீவ் போட்டு, படுத்துக் கொள்வாய். கூட என்னையும் படுத்துக் கொள்ளச் சொல்வாய்..!' என்று பொய்யாய்ச் சலிப்பாள். இந்தப் பயணத்திற்காகவும், நேற்றே தயார் செய்து வைத்திருந்த தட்டை இட்லிகளும், வெல்ல வாசம் வீசும் இனிப்புச் சாம்பாரும், மினரல் பாட்டில்களில் தமிழ் பூசாத காவிரியும் எங்களுடன் வருகின்றன.

அவளைப் பார்த்தேன். எதிர்பார்த்தது போல் அவளும் பார்த்து, "வாங்கினாயோ, அப்புறம் பார்..!" என்று விரலால் செல்லமாய் மிரட்டினாள்.

நெற்றிச் சுருக்கங்களோடு வியர்வையில் கலைந்த திருநீற்றுப் பட்டைகள். முதலிரண்டு பட்டன்கள் களவாடப்பட்டிருந்த கட்டங்கள் பதிந்த அரைக்கை கசங்கிய சட்டை. 'விண்..விண்'ணென்று தெறிக்கும் அழுத்தமான நரம்புகள் கிளைத்திருக்கும் குச்சிக் கைகள். கூன் விழுந்த முதுகோடு, குனிந்து வந்தவரின் வயதை எஸ்டிமேட் செய்வது கடினம்.

எனக்குள் பரிதாப உணர்ச்சி எழுந்தது. அவசியம் எனப்படுவதாக இல்லாவிட்டாலும், ரெண்டு பாக்கெட்டுகள் வாங்கலாமா என்று யோசித்தேன். என் போன்ற மனைவிக் கட்டுப்பாடுகள் தற்போதைக்கு இல்லாத எதிர்சீட் எக்ஸிக்யூட்டிவ் ஒரு பாக்கெட் கேட்க, ப்ளாஸ்டிக் நார்ப்பையைப் பிரித்து, வெள்ளைப் பாவு ஒல்லி நூலால் கட்டியிருந்த பாக்கெட்டைக் கொடுத்து விட்டு, என்னைப் பார்த்தார். ஏதும் சொல்லாமல், உள் நகர்ந்தார்.

எக்ஸிக்யூட்டிவ் 'இன்று லாரி ஸ்ட்ரைக்' மேல் பாலிதீன் பேப்பர் பிரிக்க, ரப்பர் பேண்ட் இறுக்கிய கழுத்தின் கீழ் சாம்பார் வயிற்றுக் குப்பிப் பாக்கெட்டுடன், மேனி மேல் கலந்திருந்த சட்னிக் கட்டிகளோடு, சிவப்பாக இட்லிப் பொடி பரவி, ஒரு 'கப..கப..' வாசம் காற்றில் மிதந்தது.

Yogi B அண்ணன் போல் இருந்த ஒருவன், எங்களைக் கடந்து சென்று, அவரிடம் பாக்கெட்டுகள் வாங்கி வந்து, எங்களை எதிர்த் திசையில் தாண்டும் போது, "இன்னிக்கு இருந்தா எங்கப்பா இவர் மாதிரி தான் இருந்திருப்பார் சார்..!" என்று சொல்லிக் கடந்தான்.

திடுக்கென ஒரு நினப்பு வந்தது. இளமையின் இனிமைகளில் தோய்ந்திருக்கும் போது கால வாய்க்கால் பாத்தி கட்டிய நெற்றி விரிசல்கள் எச்சரிக்கும் முதுமை நினைப்பு பயமுறுத்தியது. அதையும் மீறி, ஒரு கேள்வி.

'இவருக்கு இந்த வயதில் ஏன் இந்த நிலை?'

டிக்கட்டுகளில் வந்து நின்று கொண்டு பேய்க் காற்றைச் சுவாசிக்க, அவர் குனிந்தபடியே வந்தார். வாசல் ஒட்டிய சுவரில் ஒட்டி உட்கார்ந்தார். அவர் கழுத்தோரங்கள் ஈரமாய்க் கசங்கியிருந்தன. கையில் பையில் இருந்து கதர்த்துண்டால் துடைத்துக் கொண்டார். நானும் அங்கேயே அமர்ந்தேன். ஏதாவது பேச வேண்டும், கேட்க வேண்டும் என்று தோன்றியும், 'விர்..விர்'ரென்று அடித்த காற்றைத் தவிரவும், ட்ராக் மாற்றும் 'தடக்' தவிரவும் எங்களுக்கிடையில் பூரண மெளனம் இருந்தது.

"சேலத்துக்கா போறீங்க..?" அவராகவே கேட்டார்.

"ம்..!" தலையாட்டினேன்.

"அங்க பழனிச்சாமின்னு என் பையன் இருப்பான். பாத்தீங்கனா நான் கேட்டதா சொல்றீங்களா..?"

எனக்கு குழப்பமாயிற்று. அவ்வளவு பெரிய நகரில்... எந்தப் பழனிச்சாமியை.. எப்படி...

"சரிங்க. சொல்றேங்க..! உங்க உறவா..?"

"ஆமா..! மூத்த பையன். அடுத்தது ஒரு பொண்ணு பொறந்திச்சு. தேமொளின்னு பேரு. வீரபாண்டில தான் கட்டிக் குடுத்திருக்கு..!"

"ஓ..! உங்க பையன் கூட நீங்க இல்லீங்களா..?" யார், எவரென்றே தெரியாத ஒருவரிடம் தன் தோள் பாரங்களைப் பரிமாறும் அவரைப் பிடித்திருந்தது.

"இல்லப்பா..! என்ன சேத்துக்க மாட்டேனுட்டான்..! அவனுக்கு நான் பண்ண ஒரு காரியம் புடிக்கல..! இனிமே என்ன பாக்க வராதன்னு சொல்லிப்போட்டான். பேரன் பேத்தியக் கூட ஊருக்கு அனுப்ப மாட்டேனுட்டான். என்ற ஊரு சீலநாய்க்கன்பட்டி. வந்திருக்கீங்களா..?"

"இல்லீங்க..!" எனக்கு அவர் என்ன காரியம் செய்தார் என்பதில் ஒரு சுவாரஸ்யம் வந்திருந்தது.

சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு போட்டோ எடுத்துக் காண்பித்தார். பழைய கறுப்பு-வெள்ளைப் படம். போலராய்டு ஜாதி. கால்களை மடித்துப் போட்டு பூ போட்ட ஸாரி, 'பஜ்' வைத்த ஜாக்கெட், ஒற்றைச் சங்கிலி, நிறைய மல்லிகைப்பூ, மை கண்கள், வலது கன்ன அடிவார மச்சம், கைகளில் ஒரு சூர்யகாந்தியைச் சுழற்றிச் கொண்டிருக்கும் போது ஒரு பார்க்கில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படம்.

"யாருங்க இவங்க..? உங்க சம்சாரமா..?"

"இல்லீங்க...காதலி..!" என்றார்.

ர்மபுரி தாண்டிக் கொண்டிருந்தது. மலைகளில் வெய்யில் சரசரவென இறங்கும் போது, கூடு திரும்பும் பறவைகள் சப்தம் ப்ராட் கேஜ் ரயிலை விட எக்கச்சக்கமாய் எழும்பியது. தூர தூர ஊர்களில் பல்புகள் புள்ளிகளாய்க் கடந்தன. காற்றில் கொஞ்சம் கொஞ்சமாய்க் குளிர் குறைந்து மெல்லிய ஒரு சோகம் போல் இறக்கும் நாளின் கடைசி சூடுகள் பரவுவதை உணர முடிந்தது.

"காதலியா..?" சுத்தமான அதிர்ச்சி.

"ஏங்க.. நம்ப முடியலீங்களா..? என்னோட காதலிகூட நான் இப்ப வாழ்றது புடிக்காம தான் பையன் பேசறதே இல்ல. ஊர்ல எல்லாம் சிரிக்கறாங்கப்பாம்பான். கட்டைல போற வயசுக்கு கெளவனுக்கு கட்டிக்க பொம்பள கேக்குது பாருன்னு ஊருக்குள்ள அவன் காதுபடவே பேசுறதக் கேட்டிருக்கான். வந்து கத்துனான் ஒரு நாளு! 'சரிப்பா, என்னால உன் வீட்டு கவுரதைக்கு கொறச்சல் வேணாம்னு' நான் இவ கூட தனியா வந்துட்டேன், ஓமலூர் பக்கத்துல! பொண்ணு மட்டும் அப்பப்ப வந்து இருக்கனா, போய்ட்டனான்னுட்டு பாத்துட்டுப் போவும்..."

"இருந்தாலும் பெரியவரே, நீங்க பண்ணினது எனக்கே கொஞ்சம் ஒருமாதிரியா தான் இருக்குங்க. தப்பா நெனச்சுக்காதீங்க. உங்க பையன் சத்தம் போட்டது சரிதான்னு எனக்கு படுதுங்க..!" எனக்கு இதற்குப் பின் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

"தம்பி..! என்னோட பையன் படிக்காதவங்க. நீங்க படிச்சவங்க. அவனுக்குப் புரியாது. உங்களுக்குப் புரியும். யாருகிட்டயும் சொன்னதில்லைங்க. உங்களுக்கு மட்டும் சொல்றேன்.

நீங்க போட்டோல பாத்தீங்கள்ல, அவ பேரு மாலதி. நான் பி.யூ.ஸி. படிச்சப்ப காதலிச்ச பொண்ணுங்க. அப்படியே தேவத மாதிரி இருப்பா. இந்த போட்டோ கூட மலம்புழா டேமுக்கு டூர் போனப்போ அவளுக்கே தெரியாம சிநேகிதன வுட்டு எடுத்தது. இத ராவெல்லாம் தலகாணி உறைக்குள்ள மறைச்சு வெச்சுக்கிட்டு என்னென்னவோ கற்பன பண்ணிக்கிட்டு இருப்பேன். அவ்ளோ ஆச வெச்சிருந்தும் அவகிட்ட சொல்றதுக்கு தெகிரியம் மட்டும் வரவேயில்ல. அப்புறம் அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சு, தனித்தனியா! நானும் தினசரி கவலைகள்லயும், ப்ரச்னைகள்லயும் அவளை மறந்து, வாழ்க்கையை ஓட்டினேன். அவளும் கோயமுத்தூர்ல பகுமானமா தான் வாள்றான்னு கேள்விப்பட்டேன்.

தம்பி..! காலம் இருக்கே, அத சும்மா சொல்லக் கூடாது. யாரை எங்க, எப்படி ஆக்கணும்னு அது ஒரு கணக்கு வெச்சிருக்கு. மனுசப் பயலுக்கு அது தெரியாம, அத தெரிஞ்சுக்க ஒவ்வொருத்தனும் பறக்கறோம். மறுக்கா அவள எங்க பாத்தேன் தெரியுமா..? திருப்பூர் டேசன்ல. புருசனும் இல்லாம, ரெண்டு பசங்களும் வந்தவ பேச்சக் கேட்டு இவள தொரத்திட்டாங்க.

நான் கூட்டிட்டு வந்தேன் தம்பி. என் பொண்டாட்டியும் ஆஸ்துமால இல்லாம போக... ஊர்ப்பய நாக்குக்கு தேன் தடவுன மாரி ஆச்சு. சொளட்டி சொளட்டி எங்கதையச் சப்பிச் சாப்டாங்க..!

நாம நேசிச்ச பொண்ணு இன்னிக்கு காப்பாத்த துணையில்லாம, ஒரு வேள சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கான்னு தெரிஞ்சப்புறமும் நாம இந்த ஊருக்கும், சமூகத்துக்கும் பயந்து ஒரு போலி மரியாதையோட வாழணுமான்னு யோசிச்சேன். அப்படி இருந்தா ஒரு காலத்துல அவ மேல வெச்சிருந்த அப்பழுக்கில்லாத காதலுக்கு என்ன அர்த்தமின்னு நெனச்சுப் பார்த்தேன். அவள, அவ விருப்பத்தோட கூட்டிட்டு வந்தேன். அதுனால என் சம்சாரம் மேல நான் வெச்ச பாசமோ, அவ சாகற முட்டும் வாழ்ந்த வாழ்க்கையோ பொய்யின்னு போகல.

பையன், உன்ன வெச்சுக் காப்பாத்தறதே பெருசு, இதுல இன்னொண்ணானு கேட்டான். அவன் நல்லவன் தான். ஆனா ஊர்ல எல்லாரும் இப்படி பேசறாங்களேன்னு உள்ளுக்குள்ள கோபம். 'போடா, உங்கப்பன் உசுரு இருக்கற வரைக்கும் ஒழச்சு வாழுவான்'ன்னு கெளம்பி வந்துட்டேன். இப்ப அவ இட்லி, பூரி சுட்டுத்தர நானும் இந்த மாதிரி ரயில்ல வித்துட்டு சம்பாதிச்சு பொழைக்கறோம். வயசாச்சு. கூன் போட்டிருச்சு. கஷ்டம் தான். ஆனா நாம கஷ்டப்படறது நாம அன்பு வெச்சிருக்கற, நம்ம மேல அன்பு வெச்சிருக்கற ஒரு ஜீவனுக்காகத் தான்னு நெனச்சுப் பண்ணும் போது, கஷ்டமெல்லாம் தெரியாதுப்பா..! நான் வர்றேன்..! அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி, ஒரு டாக்டர பாக்க வேண்டியிருக்கு..! அவளுக்காகத் தான்...!"

மறக்காமல் அவரது காதலி புகைப்படத்தை வாங்கி கொஞ்ச நேரம் பார்த்தார். அவர் கண்கள் மினுமினுத்தன. சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

நீண்ட ஹாரன் சத்தம் எல்லா கம்பார்ட்மெண்ட்டையும் தடவிச் சென்றது. எக்ஸ்ப்ரஸ் மெல்லத் தள்ளாடித் தடுமாறி நின்றது. துண்டை கழுத்தில் சுருட்டிக் கொண்டு, காலியான பையை கைக்குள் அடக்கிக் கொண்டு, ஒவ்வொரு படிக்கட்டாய் இறங்கிக் காணாமல் போனார்.

ன் சீட்டில் வந்து அமர்ந்தேன். டெய்ஸி எதிர் சீட் அம்மா மடியிலேயே தூங்கிப் போயிருக்க, அவர் எங்கோ தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தார். ப்ரின்ஸி ஒருமாதிரி ஜன்னலோடு ஒட்டிக் கொண்டு, 'சேஸிங் தி மான்சூனை' ஐந்தாவது சேப்டரில் சென்னையில் சந்தித்துக் கொண்டிருந்தாள்.

'ப்ரின்ஸி..!!'

'ம்...!' புத்தகத்தில் இருந்து கண் விலக்கவில்லை.

'கேன் ஐ டூ ஒன் திங்...?'

'வாட்..?'

சட்டென்று நெருங்கி, அப்படியே இறுக்கி அணைத்து, வலது கன்னத்தில் அழுத்தி உதடு பதித்து, காதில், 'ஐ லவ் யூ புஜ்ஜிக்குட்டி' என்று கிசுகிசுக்க, எதிர் சீட் அம்மா சிரிக்க, டை கட்டிய எக்ஸிக்யூடிவ் அவுட்லுக்கால் எங்களைத் தவிர்க்க, மேல் பெர்த் ஆசாமி குறட்டை கலைந்து திரும்பிப் படுக்க, ப்ரின்ஸி விநோதமாய் லேசான மருண்ட பார்வை பார்த்தாள்.

***

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சிறுகதைப் போட்டிக்காக எழுதியது.

Saturday, April 25, 2009

இராஜ விஷம் போலொரு முத்தம்.

க்ரில் கதவைத் தள்ளி திறக்கும் போது, கழுத்து சங்கிலியைத் தாண்ட முடியாத 'வள்' கேட்டது. ஆனந்த் கையை இறுக்கினேன். தோளில் தொங்கி கொண்டிருந்த பயணப் பையில் இருந்த துணிகள் அழுத்தின. வீடு கொஞ்சம் உள்ளே இருந்தது. இடைப்பட்ட பிரதேசத்தில் ஈஸி நாற்காலியில் கை வைத்த பனியன், நைட் பேண்ட்டில் சாய்ந்து படித்து கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார். மேலே, ரொம்ப மேலே இருந்து கொஞ்சம் நிலா வெளிச்சம் வந்தது. வீட்டு வாசலின் நெற்றிக்கு மேலே பாம்பு போல் வளைந்திருந்த குடைக்குள் குண்டு பல்பு ஒன்று மெல்ல கூவிக் கொண்டிருந்தது. காம்பவுண்ட் எல்லைகளை ஒட்டி கிளைத்திருந்த செடிகள் இருட்டாக இருந்தன. நேற்றைய மழையின் ஈரத்தில் உற்பத்தியான 'கொரக்..கொரக்..' சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அரை கி.மீ.யில் தள்ளி கிடக்கும் ரெயில்வே ட்ராக்குக்ள் நீளமாய் தேய்படும் ஒலிகள் கேட்டன.

"அங்கிள் நான் தான் ஆனந்த். ஸ்டீஃபன் ஃப்ரெண்ட். ஸ்டீஃபன் இருக்கானா..?" கேட்டுக் கொண்டே முன் செல்ல, தொடர்ந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லை. சத்தியமான வெறுப்பு முகத்தில் 'உங்களைப் பிடிக்கவில்லை' என்று அழுத்தமாகப் பதிந்து, பத்திரிக்கையில் புதைந்தார்.

கதவு திறந்தது. ஒரு பையன் வந்தான்.

"வாடா..! உள்ள வா. இது தான் உன் கஸினா..? வா.." என்றான்.

அவன் தான் ஸ்டீஃபனாக இருக்க வேண்டும். வெளியே ஓர் ஆள் இருந்ததையோ, அவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நினைப்போ இல்லாமல் எங்களை உள்ளிழுத்துக் கொண்டான்.

வீட்டு வாசலில் ஒரு காலடி மிதி இருந்தது. அதில் இருந்த 'welcome'ஐ மிதித்து, திரைச்சீலையை விலக்கி உள்ளே போனேன். நைட் லேம்ப் உமிழும் வெளிச்சக் கீறுகள் அறையெங்கும் வியாபித்திருந்தன. ஆங்காங்கே ஆணிகள் அடித்து இரத்தம் சொட்டும் தேவகுமாரன் படங்கள், ஆணியடித்து தொங்கின. கருணை வழியும் கண்கள் கொண்ட மேரி மாதா சிலை முன் ஒரு மெழுகு கரையலாமா, அணையலாமா என்ற யோசனையில் இருந்தது. ஒரு சோபா செட் இருந்தது. அதன் வயிற்றுக்குள்ளிருந்து தேங்காய் நார்கள் பிதுங்கி வந்து, உள் ஸ்ப்ரிங்குகளைக் காட்டின. ஜன்னல்களில் கட்டியிருந்த ஸ்க்ரீன்களில் பூக்கள் எம்ப்ராய்டரி. ஸ்டேண்ட் தலை மேல் உட்கார்ந்திருந்த டயனோரா முகத்தை ஒரு திரை மறைத்திருந்தது. அதன் மேல் ரெண்டு பக்கமும் சின்ன ப்ளாஸ்டிக் பூத் தொட்டிகள் இருக்க, நடுவில் இருந்த ஒரு ப்ரேம் செய்யப்பட்ட புகைப்படம் முதுகில் ஒரு வாலால் சாய்ந்திருந்தது. அதில் ஒரு பெண் இருந்தாள். இயல்பாய், வானம் பார்த்து சிரித்து, கண்கள் அகன்ற அற்புத கணத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கழுத்தில் ஒரு சுருள் முடி பரவியிருக்க, அதன் இடைவெளிகளுக்குள் ஒரு மச்சம்.

"இது தான் என் ரூம். இங்க வாங்க." என்று கதவைத் தள்ளி ஒற்றை அறைக்குள் அமர்த்தினான். ஒவ்வொருத்தருக்கும் ஓர் அறையா? ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

அவன் படுக்கை மேல் பிறழ்ந்திருந்த தலையணைகளோடு போட்டி போட்டுக் கொண்டு பருமனான புத்தகங்கள். ஒரு மூலையில் சுருண்டிருந்த போர்வை.

"சாப்பிட்டீங்களா..?"

"ஆச்சுடா. வீட்ல இருந்து கிளம்பும் போதே சாப்ட்டு வந்திட்டோம். நீயும் சாப்டயில்லடா..?" ஆனந்த் என்னைக் கேட்டான். தலையாட்டினேன்.

"எத்தன மணிக்கு ட்ரெய்ன் வருது..?"

"நைட் ரெண்டரைக்கு..!"

"நீ இங்க படுத்துக்கோ. நானும் ஸ்டீஃபனும் மாடில படுத்துக்கறோம். லேசா தூங்கு. நல்லா தூங்கிடாத. ரெண்டு மணிக்கு எழுந்துக்கணும். பாத்ரூம் போகணுமா?" ஆனந்த் கேட்டான். ஏதோ தயக்கத்தில் வேண்டாம் என்று தலையாட்டி விட்டேன். சொன்னவுடனே போகணும் போல் இருந்தது. எரிந்த குழல் பல்பை சட்டென நிறுத்தி விட்டு, நீல சிமிட்டியை ஏற்றி விட்டு, கதவை சாத்தி அகன்றார்கள்.

எழுந்து வெளியே நோக்கும் ஜன்னல் வழியாக பார்க்க, அவர்கள் இருவரும் வெளிக்கதவைத் திறந்து செல்வதைப் பார்க்க முடிந்தது. நிச்சயம் சிகரெட்.

படுக்கையில் படுத்துக் கொண்டு போர்வையால் கண்கள் தவிர்த்து மூடிக் கொண்டு அறையைப் பார்த்தேன். அலமாரியில் புத்தகங்கள். ஏராளம். ஏராளம். கண்ணாடிக் கூண்டுகளுக்குள் சிறைப்பட்டிருந்தன. டேபிள் லேம்ப் ஒன்று இருந்தது. டேபிள் மேல் தலைகீழாக கவிழ்ந்திருந்த புத்தகம். பென்சில்கள். பேனாக்கள். சுவரில் ஒரு பெண் அழுத்தமான முதுகு காட்டி இடுப்பு வரை ஓவியமாய் நின்றாள். அவள் கைகள் அவசியம் இல்லாமல் முன்பக்கம் மறைக்க முயன்றிருந்தன. அவள் மெல்லத் திரும்பி கண்ணசைத்தது போல் இருந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சட்டென போட்டோவில் பார்த்த பெண் யாராய் இருக்கும் என்று தோன்றியது. ஸ்டீஃபன் தங்கையாக இருக்கக் கூடும். மூக்குகள் கூர்மை, 'ஆம்' என்றது. எங்கே அவள்..?

இப்போது வீட்டில் நானும், அந்த வெட்டவெளிக் கிழவரும், ஒரு நாயும், கொஞ்சம் பொருட்களும், துடிக்கும் அஜந்தா வால் க்ளாக்கும், வெகுவாய் அமைதியும் மட்டும் இருக்கின்றோம் என நினைத்தேன்.

இல்லை.

மூன்று மணி நேரத்தில் சனிக்கிழமை திறக்கிறது. கிழக்கில் விடியல் கோடுகள் விழும் போது கோவை சென்றிருக்க வேண்டும். அங்கே தலை வால் மாற்றப்பட்டு, திசை மாறி ஓடும் நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ஸில் காலை மேட்டுப்பாளையம் சேர்ந்திருக்க வேண்டும். பின்னிரவு ரெண்டரைக்கு ஈரோடு ஜங்ஷன் வரும். ஊரிலிருந்து அப்போது கிளம்புவது பஸ்ஸின்மையால் அசாத்தியம். எனவே இரவு ரயில் நிலைய ஒதுக்குப்புறத்தில் சிதறியிருக்கும் பல வீடுகளில், ஒன்றில் இருக்கும் தன் நண்பன் வீட்டில் இராத்தங்கி விட்டு, நேரமாய்ப் பிடிக்கலாம் என்ற திட்டம், ஆனந்துடையது. நானும் ஒட்டிக் கொண்டேன்.

பாத்ரூம் போக வேண்டும் போலவே இருந்தது. கதவைத் தாழ்ப்போட்டு போனார்களா என்று தெரியவில்லை. இழுத்துப் பார்க்கலாமா? மெல்ல தூக்கம் வந்தது. தொலை தூரத்தில் இருந்து ஊளைகள் கேட்டன. தெரு நாய்களாக இருக்கும். இறங்கி ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க வெளிக்கிழவரைக் காணவில்லை. ஈஸி நாற்காலியில் அந்த பத்திரிக்கை காற்றில் அலையடித்தது. எங்கே போயிருப்பார் கிழவர்? வாசலின் குண்டு பல்பு தெளித்த வெளிச்ச வட்டம் குறைவான எல்லைக்குள் குறுகி விட, தெரு விளக்குகள் கொஞ்சம் கொஞ்சம் பொட்டு வைத்த பூஞ்சை ஒளித் துளிகள் தவிர்த்து, மிச்சம் முழுதும் இருள் இராஜ தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.

சட்டென மின் செத்துப் போக, கறுப்பு பாய்ந்து வந்து கவ்விக் கொண்டது. லேசாக காற்று விசிறியடித்துக் கொண்டிருந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு இழுத்துப் போர்த்திக் கொண்டேன். ஏதோ ஒரு பயம் உள்ளுக்குள் உருளத் தொடங்கியது. காதுகள் மேல் ரீங்கார கொசுக்கள். கழுத்தோரம் நசநசத்தது. தூங்கலாமா, வேண்டாமா? கொஞ்ச நேரத்தில் பழகிப் போன கருமைக்குள் கடிகாரம் காண, உச்ச இணைவுக்கு பெரிய நீளமான முள் அழகிய சின்ன முள்ளை நிமிடக்கணக்கில் நெருங்கிக் கொண்டிருந்தது.

அறைக்கதவு லேசாகத் திறக்கும் சத்தம் கேட்டது. திடுக்..திடுக்.. நெஞ்சோடு, கதவின் சின்ன இடைவெளியில் கசிந்த நிலவொளியைப் பார்த்தேன்.

ஒரு பெண். அடையாளங்கள் உறுதிப்படுத்தின. கட்டிலின் அருகில் வந்து நின்றாள். ஜரிகை நனைத்த தேன் போல் ஒரு சுகந்த வாசம் அவளைச் சுற்றி மிதந்தது. நுரையீரல்கள் பெருக்க பெருக்க உள்ளுறிஞ்சிக் கொண்டேன். உற்றுப் பார்த்தாள். அசையவேயில்லை நான். இறுக்கி பிடித்துக் கொண்ட பொம்மை போல். மூலையில் ஒண்டியிருந்த நெடும் பீரோ காதைப் பிடித்துத் திருகி, திறந்து என்னென்னவோ எடுத்து, கையோடு கொண்டு வந்த பெட்டியில் அடுக்கினாள். அவ்வப்போது சிணுங்கும் சத்தம் வந்தால், என்னை பார்ப்பாள். மூச்சு விடவில்லையே நான்!

பீரோவை மூடி, பெட்டியைப் பூட்டி எடுத்து விலகிச் சென்று... இல்லை, திரும்ப வந்தாள். கட்டில் நுனியில் மெல்ல அமர்ந்து, என் முகத்தை நெருங்கினாள். முகத்தில் குபுகுபுவென்று பொங்கிக் கொண்டே வந்தது வியர்வை. இதயத்துடிப்பு தடதடவென்றானது. ட்ராக்கில் கடந்த ரயில் சத்தம் போல்.

மெல்ல போர்வையை விலக்கி, என் முகத்தை நெ..ரு..ங்..கி...ஓர் ஆழ்ந்த முத்தமிட்டாள், உதடுகளில்...!!

when i was young
we did it again

when i was young
we did it again

when i was younger
you did it first

then,

i keep you in the hall
you keep me on the wall

you come near
i come near
we come out of fear

you catch my hips,
then
you smooch my lips

you smooch my lips
you smooch my lips

we search of what thro tongues
omg, i fly by waving wings

i hear your heartbeat
you feel my heart

you pour your words in mine
i swallow them as shivering wine

i fill in yours my heat
you burn as you are meat

i smooch your lips
i smooch your lips

the sugaratic smell and taste, hmmm...
gimme now gimme now, i sure have rum

why we close eyes like mouths, baby
returning from moon, its our hobby

heaven, heaven..where are you
here, here... i am in you

oh... for me the time stopped and i feel eternity
perhaps, einstein may tell, i travel in light velocity

you smooch my lips
i smooch your lips
you and i smooch our lips
like, we have none except lips

when depart, a 'cling' sound in my throat
the shyness returns and i land by my foot

still your hands on my hips like you dont want to miss
as i want, i need, i like, i love like this, a STRONG kiss.

திருப்பூர் தாண்டி பாய்ந்து கொண்டிருந்தது ப்ளூமவுண்டன். ரிசர்வ்ட் கோச்சுகள் இருட்டாய் இருக்க, எல்லைகளில் மட்டும் துவாரபாலகர்கள் போல் சிறைப்பட்ட வெளிச்சங்கள். திசைக்கொன்றாய் திரும்பியிருந்த காற்றாடிகள் யாருக்கோ காற்று தந்தன. ஒன்றின் மேல் செருப்புகள். ஜன்னல்கள் வழி காட்சிகள் வேகமாய் மாறிக் கொண்டிருந்தன. மிடில் பெர்த்தில் போர்வை இழுத்துப் போர்த்தியிருந்த பெண்ணின் கால்களின் கொலுசுகள் மட்டும் மறைய முடியாமல், மினுமினுத்தன. கீழே செருப்புகள் ரேண்டம் கோணங்களில் திரும்பியிருந்தன. லேசான குறட்டை 'கொர்' எங்கிருந்தோ கிளம்பி வந்தது. ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. 'கூஊஊஊ..........' நீளப் பிளிறல் ஒலித்த ரயிலின் சத்தம் தீண்டாத நினைப்பில் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்த எனக்குள் இரண்டு கேள்விகள் மிச்சம் இருந்தன.

யார்..? யாருக்கான முத்தம் அது..?

Monday, April 13, 2009

கடிதமெழுதி!

ரு கடிதம் வரும் வரையிலும் இளங்கோவனின் வாழ்க்கை இயல்பாகத் தான் இருந்தது.

மேன்ஷனின் சிலந்தி வலை படிந்த மூலைகள். சிதறிக் கிடக்கும், உலகின் மஞ்சள் எகனாமிக் நேரங்கள். எம்ப்ளாய்ண்மெண்ட் நியூஸில் அடிக்கோடிட்ட பக்கங்கள். சுருண்ட பாய்கள். ரேண்டம் கோணங்களில் தலையணைகள். அதோ அந்த போர்வைக்குள் செருகிக் கொண்டு சொப்பன லோகத்தில் மகிழ்ந்து கிடக்கும் இளன், இளங்கோவன்.

கம்மங்குடியில் ஒரு தமிழாசிரியருக்கு மகனாகப் பிறந்த இளங்கோ, சென்னையின் திருவல்லிக்கேணி மாடியில் புரண்டு கிடப்பதன் பின்னே உள்ளது ஒரு தெய்வீகக் காதல் கதையின் சோக முடிவு. மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் திருவளர்ச் செல்வி காயத்ரியின் பாற்கொண்ட பேரன்பிற்கும், பெருங்காதலுக்கும் கிடைத்த பரிசு, ஒரு நாள் ரைஸ் மில் சந்துக்குள் கிடைத்த அட்வைஸ்.

"இளங்கோ...! இந்த ஜென்மத்துல நம்ம காதல் ஒண்ணு சேராது. எங்கப்பா துறையூர்ல இருக்கற சோமு மாமாவுக்கே என்ன கல்யாணம் பண்ணி வெக்க முடிவு பண்ணிட்டாங்க. என்ன மறந்துடு. என் வாழ்க்கையில நீ இனிமே குறுக்க வர மாட்டேன்னு நம்ம செல்லாண்டி அம்மன் மேல சத்தியம் பண்ணு..!"

சத்யசீலனான இளங்கோ, காதல் இன்புற்று விளையாடிய இடங்களான கவுண்டர் வீட்டுக் கரும்புத் தோட்டங்களையும், அய்யனார் கோயில் பம்பு செட்டையும் மீண்டும் கண் கொண்டு பார்க்க முடியாமல், ஒரு சுபயோக சுபதினத்தில் சென்னைக்கு பஸ் ஏறினான்.

சுப்பாக்கா மகன் குமாரசாமி அம்பத்தூர் தொழிற்பேட்டையின் மூலமாக இந்தியப் பொருளாதாரத்திற்காக உழைப்பது, இவனுக்கு ஒரு ஒட்டுப்புள்ளியாகி, இப்போது இவனும் ஒரு சென்னைவாசி!

ஒரு டிசம்பர் மாத முற்பகல் நாளில் பீச் முதல் தாம்பரம் வரை ஊரும் மின் வண்டியில் பயணம் செய்த போது, கம்மங்குடி காயத்ரியை மறக்கச் செய்ய ஒரு ஹேமாவைக் காட்டியது, நகரம். பின்னும் ஒரு ஆர்த்தி, ஒரு தேவி, ஒரு நேஹா...!

ந்த கடிதம் அவனது போர்வையின் மேல் எறியப்பட்டது. எல்லோரும் அகன்ற ஒரு பத்திரத் தனிமையில், இளங்கோ அந்த இன்லாண்ட் கடிதத்தை அசிங்கமாக கிழித்துப் பிரித்தான்.

முதல் அதிர்ச்சியாக அதில் இருந்தது அவன் கையெழுத்து. கொஞ்சம் வலப்புறம் சாய்ந்தாற்போல், நீல மையில், அவன் கையெழுத்தே தான். கொஞ்சம் குழப்பத்துடனேயே படித்துப் பார்த்தான்.

சென்னை.
1.
அன்புள்ள ,

இன்று அவளைப் பார்த்தேன். அதே கொலுசொலி. மூன்று முகம் பதித்த வெள்ளிக் கொலுசு எழுப்பும் அதே ஒலி. மையிடத் தேவை அற்ற கண்கள். அதே கண்கள். காயத்ரி. கம்மங்குடி காயத்ரி. என் காதலி.

கடற்கரையின் அலைகள் ஓடோடி வந்து தழுவிச் சென்ற அதே மஞ்சள் கால்கள். கரும் மச்சம் பதித்த வலது கெண்டைக் கால். காயத்ரி. கூடவே ஒரு கருப்பன். மஞ்சள் பாலியெஸ்டர் சட்டையில், மேலிரண்டு பட்டன்கள் திறந்து, காட்டு முடிகள் கலைந்திருந்த, இந்த மார்பையா என் காயத்ரி தினம் தழுவுகிறாள்...?

இளங்கோவன்.

அவனது கடிதமே தான். அதாவது அவன் எழுதியது போலவே இருந்தது. தேதியும், அன்புள்ளதன் அடுத்த வார்த்தையும் கலைந்து ஃப்ராக்டல் அலங்காரமாக காட்சியளித்தன.

யாரேனும் விளையாடுகிறார்களா..? அவனது புனிதமான காதலின் மேல் புளிக் கரைசலை ஊற்றுகிறார்களா..? ஆனால் அவனது இரகசியங்கள் செல்லாண்டி அம்மன் சத்தியத்தோடு சரிந்து போயினவே!

முதல் பக்கத்தில் 'கவிதைக் கொத்து' என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி, கீழே அம்பு துளைத்த இதயம் வரையப்பட்டிருந்த எண்பது பக்க அன்ரூல்டு நோட்டில், ஏதோ ஒரு பக்கம் எடுத்து பத்திரமாக வைத்தான். அங்கிருந்து ஒரு கவிதை எட்டிப் பார்த்தது.

அவள்
சிரித்தது போல்
நேற்று
மழை!
'கொரக்..கொரக்..'
சாக்கடைத்
தவளையாய்
நான்..!

பின்னொரு நாள் இவன் தங்கியிருந்த 'கணேஷ் மேன்ஷனின்' முப்பத்தியேழாவது அறையிலிருந்து, சுமார் நூற்றைம்பது மைல் தொலைவில் நிலை கொண்டிருந்த புயலுக்கு என்ன பெயர் சூட்டுவது என்று பண்பலைகள் கேட்டுக் கொண்டிருந்த முற்பகல் வேளையில் மற்றுமொரு கடிதம் வந்தது.

சென்னை.
13. ஜூ...

ப்ரியமுள்ள கா...

இப்படி ஆரம்பிக்கலாமா..? அவளுக்கு கடிதம் எழுதுவது சாத்தியமான ஒன்று தானா? தமிழ்ப் பண்பாட்டின் படி நான் செய்வது சரிதானா? மணமான பெண்ணை மனதில் நினைத்துப் பார்க்கலாமா..? நேற்று கூடுவாஞ்சேரியில் அவனது ஒன்று விட்ட மாமா வீட்டில் தங்கியிருக்கிறார்கள் என்று அறிந்தவுடன் என் இரத்த நாளங்களில் ஓடிய எழுபது லிட்டர் செங்குருதியும் செந்தேன் ஆனது என்று அவளிடம் சொல்லலாமா?

சொல்.

இளங்கோவன்.

யாரிடம் கேட்கிறான்..? யார் கேட்கிறார்கள்..? நானா..? இளங்கோவனுக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.

இந்த கடிதங்களை வைத்துப் பார்த்தால், என் காயத்ரியை நான் பார்த்து எழுதுவது போல் இருக்கின்றது. ஆனால், நான் அவளைச் சென்னையில் பார்க்கவேயில்லை. சத்தியச் சம்பவத்தில் தான் கடைசி.

அறையின் அறிவாளி என்று சகல விதங்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட காளியண்ணனிடம் கேட்பதாக முடிவு செய்து கொண்டான்.

"இளங்கோ..! நீ பொய் சொல்ற. இது ரெண்டும் நீ எழுதின லெட்டர்ஸ் தானே..? இதுல உனக்கு என்ன குழப்பம்..?"

"இல்லண்ணே..! நான் எழுதல. என் கையெழுத்து மாதிரி இருக்கு. எனக்குத் தெரிஞ்ச ரகசியம் இருக்கு. ஆனா சத்தியமா சொல்றேன் நான் எழுதல..!"

"ம்ம்ம்..! சனிக்கிழம தண்ணி அடிச்சியா? அப்போ தான் அடிமனசுல இருக்கற கோபங்கள், கவலைகள், ஆதங்கங்கள் எல்லாம் வெளிய வரும். அந்த நேரத்துல எழுதி இருக்க நீ...! இப்போ சுத்தமா மறந்திருக்க..! போ..! போ..!"

இந்த சுவாரஸ்யத்தை தானே சந்திப்பது, தீர்ப்பது என்று அப்போது தான் முடிவு செய்தான். இப்போது இளங்கோவனுக்கு, கடிதமெழுதி கூடுவாஞ்சேரியில் காயத்ரியை சந்தித்தானா இல்லையா என்ற ஆர்வம் அப்பிக் கொண்டது. அடுத்த கடிதத்திற்காகக் காத்திருக்கத் துவங்கினான்.

டுத்த கடிதம் வர கொஞ்ச நாட்கள் ஆனது. ரிலேட்டிவிடி தியரிப்படி ரொம்ப நாட்கள் ஆனது போல் உணர்ந்தான்.

சென்னை,
17. ஜூலை.07.

அன்புள்ள இளங்கோவன்...

இன்று அவள் தங்கியிருக்கும் வீட்டைக் கண்டுபிடித்து விட்டேன். ஒரு முதல் மாடியில், ஒரு குட்டிக் குழந்தையைக் கையில் ஏந்தி, தூரத்தில் மலைப்பாம்பாய் விரைந்த மின்வண்டியைக் காட்டிக் கொண்டிருந்தாள். உடனே ஒரு கவிதை தோன்றியது.

மலைப்பாம்பு
மின் இரயில்.
உன் கூந்தல்.

எப்படி இருக்கின்றது?

அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென என்னைப் பார்த்தது போல் இருந்தது. டீக்கடை இருளுக்குள் பதுங்கிக் கொண்டேன். சடாரென அவள் வீட்டுக்குள் சென்று மறைந்தாள். கண்டிப்பாகப் பார்த்திருக்கிறாள். உடனே அங்கிருந்து அகன்று வந்து விட்டேன். ஒன்றே ஒன்று அவளைக் கேட்க வேண்டும்.

'எப்படி இருக்கிறாய் காயத்ரி..?'

இளங்கோவன்.

அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அனுப்புநர் இளங்கோவன். பெறுநர் இளங்கோவன். தேதி ஒரு மாதம் கழித்து வரப் போகும் ஜூலை மாதம். இப்போது ஜூன்.

நானே எனக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். முந்தைய கடிதங்களில் சரியாகத் தெரியாமல் போயிருந்த நாட்களும், எழுதும் வார்த்தைகளும் இந்த கடிதத்தில் தெளிவாகத் தெரிகின்றன. எனில் அத்தனையும் நான் எழுதியன தான். ஆனால் எப்போது..? மற்றும் முக்கியமாக ஏன் எனக்கே..?

இளங்கோவன் ஓர் அழுத்தமான தீர்மானத்திற்கு வந்தான்.

இன்னும் ஒரு மாதம் இருக்கின்றது. அடுத்த மாதத்தில் எழுதப்படும் கடிதங்கள் எனக்கு இந்த மாதமே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. கடிதங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களில் காணக் கிடைக்கும் தொடர்ச்சி ஏதோ சொல்வது போல் இருக்கின்றது.

அவனுக்கு இன்னும் முற்றுப் பெறவில்லை என்று தோன்றியது. இன்னும் ஒன்று முக்கியமாக நடக்க வேண்டிய ஒன்று பாக்கி இருக்கின்றது. அது என்ன..? அடுத்த கடிதத்தில் தெளிவாகி விடும்.

மிக்க ஆர்வத்துடன் காத்திருக்கத் தொடங்கினான். இன்னும் ஜூலை 7-க்கு பத்து நாட்களே இருக்கின்றன. என்னவோ அவன் மனதின் ஏதோ ஓர் அடியாழத்தில் கொஞ்சம் பயம் சுரந்து கொண்டிருந்தது.

ந்தே விட்டது ஜூன் இருபத்தேழில்!

சென்னை
21.ஜூலை.07.

இளங்கோவன்,

நீ ஒரு செமத்தியான தோல்வியாளி. உனது திருமுகத்திற்கு இன்று கிடைத்த அலங்காரங்கள் போதுமா..? இன்னும் வேண்டுமா..? அவளது கணவன், கூடுவாஞ்சேரி மாமா, மாடி வீட்டு மனிதர்கள்... அத்தனை பேரின் கைரேகைகளையும் கிழிந்து தொங்கும் உன் முகத்தில் இருந்து கண்டு கொள்ளலாம். அத்தனை குத்து பட்டிருக்கிறாய்..!

எங்கே போனது உன் கள்ளங்கபடமில்லாத காதல்? மாற்றான் மனைவியை நினைக்கக் கூடாது என்றிருந்த உன் பேராண்மை எங்கே..? மார்க்கெட்டிற்கு வந்த மங்கை நல்லாளின் பொன் இடுப்பைப் பார்த்தவுடன், கூடுவாஞ்சேரி சூப்பர் மார்க்கெட்டை மறந்தாய்..! சென்னையை மறந்தாய்..! கால தேச வர்த்தமானங்கள் கடந்து, இரண்டு வருடங்களுக்கு முன் ஆண்டுத்திருவிழாவின் போது, ஊரே கோயிலில் இருக்க, முள் கம்பி வேலியை விலக்கி, கீற்று வேய்ந்த எட்டாம் வகுப்பு 'சி' பிரிவில் பெஞ்சுகளை ஒதுக்கி, விரித்த கதர்த் துண்டின் மேல் படுக்க வைத்து பிடித்துப் பார்த்த அதே அவளின் மஞ்சள் இடுப்பு ஞாபகம் வந்ததா?

இந்த முகத்தோடு, இந்த அவமானத்தோடு வாழ விரும்புகிறாயா..? வேண்டாம். மற..! உயிர் துற..! இற...!

இளங்கோவன்.

தெளிவாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

மூன்று நாட்கள் தூக்கம் வராமல், புரண்டு கொண்டே இருந்தான். எல்லோரும் கேட்டார்கள்.

"ஒடம்பு சரியில்லண்ணே..!"

"ஊருக்குத் தான் போய்ட்டு வாயேம்பா..!"

தீர்மானித்தான். எல்லாத் துணிகளையும் திணித்து, விடைபெற்று, சென்ட்ரல் செல்வதற்குள்... ஏதோ ஓர் உள்ளுணர்வு கூப்பிட்டது போல் உணர்ந்தான்.

கடற்கரைக்குச் சென்றான்.

அலையாடிய ஆயிரம் கால்களில், ஒரு கால் அவனது கவனத்தைச் சட்டென்று இழுத்துக் கொண்டது. அந்த வலது காலில் ஒரு கரு மச்சம். அந்தப் பெண்ணின் அருகில் நின்றிருந்தவன் அணிந்திருந்த மஞ்சள் பாலியெஸ்டர் சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் திறந்து, கொசகொசவென நெஞ்சு முடிகள் காற்றில் அலைந்து கொண்டிருந்தன.

***

(அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைவு போட்டிக்காக எழுதியது.)