Tuesday, November 07, 2006

இணைத்த இலவசம்.

"சொல்கிறேன். ஆனால் நீ சிரிக்கக் கூடாது.." என்றாள் ப்ரியா.

"சொல்.சிரிக்க மாட்டேன்.." என்றேன் நான்.

"அப்ப நமக்கு ஏழு இல்ல எட்டு வயசு இருக்கும். தீபாவளிக்காக நான் உன் வீட்டுக்கு வந்திருந்தேன். தீபாவளி அன்னிக்கு நீ தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு இருந்த. நிறைய எண்ணெய் கையில ஊத்திக்கிட்டதனால கையில எல்லாம் எண்ணெய் வழிஞ்சு ஓடுது. அதை அப்படியே தலையில தேய்ச்சுக்கிட்ட. அது ரொம்ப அதிகமாகி, முகத்தில எல்லாம் வழிஞ்சுது. அப்ப உன்னைப் பாக்க அசல் குரங்கு மாதிரியே இருந்துச்சு. 'எண்ணெய் சட்டி குரங்கு','எண்ணெய் சட்டி குரங்கு'ன்னு உன்னை கேலி பண்ணி பாடினதை நினைச்சா இப்பவும் சிரிப்பு தான் வருது.." என்றபடி சிரித்தாள்.

நானும் மெல்ல சிரித்தேன்.

"அதுக்கு பழி வாங்க நான் என்ன பண்ணினேன், ஞாபகம் இருக்கா..?" என்று கேட்டேன்.

"அதை மறக்க முடியுமா..? நான் குளிக்கப் போகும் போது, பின்ல சரவெடியைக் கட்டி, அதை என் தலைமுடியில கட்டி, பத்த வெக்கப் போறேன்னு பயமுறுத்தினாயே.. அதை மறக்க முடியுமா..? அன்னிக்கி நான் அழுதிட்டேன்.. தெரியுமா.." என்று சிரித்தாள்.

"எப்படி அழுத, தெரியுமா..?" என்று விட்டு நான் குரங்கு போல் செய்து காட்ட, இருவரும் கலகலவெனச் சிரித்தோம்.

இது போல் இருவரும் சேர்ந்து சிரித்து, பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது.

ப்ரியா என் மாமா பொண்ணு தான். எங்களுக்கு பத்து வயது ஆகற வரைக்கும் ஒண்ணா தான் இருந்தோம். ரெண்டு குடும்பமும் சேர்ந்து சுற்றுலா போவோம். ஏதாவது கோயில் பண்டிகை, தீபாவளி, பொங்கல் என்றால் இரண்டு குடும்பமும் ஒன்றாகத் தான் கொண்டாடுவோம்.

அப்புறம் என்ன ஆனது என்றால், ரெண்டு குடும்பமும் சேர்ந்து ஊரில் கொஞ்சம் நிலம் வாங்கினோம். அதைப் பிரித்துக் கொள்வதில் துவங்கிய சண்டை, பின் பழைய மறைந்திருந்த கோபங்களையெல்லாம் கிளறி பெரிய பிரிவுக்கு வழி வகுத்து விட்டது. அன்று பார்த்தது தான், பேசிக் கொண்டது தான்.

பிறகு இரண்டு குடும்பமும் வெவ்வேறு ஊர்களுக்கு சிதற, புதுப்புது இடங்கள், புது நண்பர்கள் என்று மாறிப் போனதில் இருவரும் ஒருவரையொருவர் மறந்தே போனோம். அவ்வப்போது ஊரில் ஏதேனும் பண்டிகை, எவருடையவாவது நெருங்கிய இறப்பு என்று நிகழும் போது அப்பாவும், அம்மாவும் மட்டுமே போய் வருவார்கள். அவர்களிடம் மெதுவாகக் கேட்டுப் பார்ப்பேன், ப்ரியா வந்தாளா என்று. அவளும் படிப்பு தான் முக்கியம் என்று இதற்கெல்லாம் வருவதில்லையாம்.

எப்போதாவது அவள் பற்றி விசாரிப்பேன். அவளும் அப்படித்தான் விசாரித்தாள் என்பார்கள். கொஞ்சம் சந்தோஷமாகவே இருக்கும்.

இப்போது நானும், அவளும் சென்னையில் வசிக்கிறோம். ரெண்டு பேரும் கணிணியில் தட்டிக் கொண்டிருக்கிறோம். அவள் 'அன்புடன் வழியனுப்பும்' நிறுவனத்திலும், நான் ' உண்மை' நிறுவனத்திலும் பணியாற்றுகிறோம். அவ்வப்போது வார இறுதிகளில் சந்திப்பதை வழக்கமாகிக் கொண்டோம்.

முதலில் சந்தித்த போது ' நீங்க' என்று ஆரம்பித்து பிறகு ' நீ, வா, போ' என்றாகி', பின் 'போடி கழுதை' என்ற ரேஞ்சில் வந்து விட்டது.

"ப்ரியா.. இந்த வாரமாவது வீட்டுக்கு வரலாம்ல.. அம்மா உன்னைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.." என்றேன்.

"இல்ல மனோ.. அம்மா, அப்பாகிட்ட சொல்லாம வந்தா.. அது நல்லாயிருக்காது.." என்றாள்.

"ஓ.கே. இந்த தீபாவளிக்கு என்ன துணி எடுக்கப் போற? எங்க?"

"அம்மாவும், அப்பாவும் இங்க வந்து சென்னை சில்க்ஸோ, போத்தீஸோ போவோம். இல்லைனா வழக்கம் போல ஊர்லயே சாரதாஸ் தான். க்ரீன் கலர்ல ஒரு சில்க் ஸாரி வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுல தான் எடுக்கறதா இருக்கேன். நீ என்ன வாங்கப் போற..?"

" நீ ஏதாவது வாங்கிக் குடுத்தனா, ஓசியில வாங்கிக் போட்டுக்கலாம்னு இருக்கேன்.." முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு சொன்னேன்.

"தோடா..! ஆசையப் பாரு இதுக்கு.." என்று சிரித்தாள்.

பில் செலுத்தி விட்டு இருவரும் வெளியே வந்தோம்.

"சரி வா, ப்ரியா..! உன்னை உங்க கோட்டைக்கு கொண்டு போய் விட்டுடறேன்.. டைமுக்குப் போகாட்டி, உங்க எல்லைச்சாமி கண்ணாலயே மிரட்டிடுவார்.." என்றேன்.

அவள் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறாள். அந்த விடுதியின் வாட்ச்மேனைத் தான் நான் 'எல்லைச்சாமி' என்பேன்.

சிர்த்துக் கொண்டே, " வேற வண்டி இல்லையா..? இந்த 'பிங்க் பெப்' யாருது?" என்று கேட்டாள்.

"இது பக்கத்து வீட்டு ப்ரீத்தியோட வண்டி. எங்க வீட்டு இரும்புக் குதிரை, இன்னேரம் ஒர்க்ஷாப்ல கொள்ளு தின்னுக்கிட்டு இருக்கும்னு நினைக்கிறேன்.."

சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டே, என்னுடன் வண்டியில் ஏறிக் கொண்டாள். பெசன்ட் நகரிலிருந்து கிளம்பிய எங்கள் மீதே எல்லார் கண்களும் இருந்ததை என்னால் உணர முடிந்தது.

"னோ..! நிறுத்து..! நிறுத்து.." என்றாள் ப்ரியா.

ப்ரேக் போட்டு ஓரமாய் நிறுத்தினேன்.

"என்ன ப்ரியா..?" என்று கேட்டேன்.

"அந்த க்ளாத் ஷாப்புக்கு போ" என்றாள்.

இருவரும் நடந்து போனோம்.

"யெல்லோ சுடி ஒண்ணு எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இங்க இருக்கும்னு நினைக்கிறேன். நீ ரிசப்ஷன்கிட்டவே வெயிட் பண்ணு.." என்றாள்.

சரியென்று நானும் உட்கார்ந்து கொண்டேன். அவள் உள்ளே சென்று விட்டாள்.

ஒரு மணி நேரம் கழித்து கையில் இரண்டு துணி பார்சலோடு வந்தாள்.

"ப்ரியா..! என்னையவே இவ்ளோ நேரம் காக்க வைக்கிற. கல்யாணத்துக்கப்புறம் உன் கணவரை எவ்ளோ நேரம் காக்க வெப்பியோ..?" என்று கேட்டேன்.

" நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன். அவரையே வாங்கிட்டு வரச் சொல்லிடுவேன்.." என்றாள்.

"சரி.. என்ன ஒண்ணு மட்டும் எடுக்கறேன்ட்டு, ரெண்டு பேக் கையில வெச்சிருக்க..?"

"எனக்கு மட்டும் எடுக்க மனசில்ல. அதுதான் உனக்கும் சேர்த்து எடுத்திட்டு வந்தேன்.."

"ரொம்ப நடிக்காதடி. அங்க பாரு.." என்று கை காட்டினேன்.

அங்கே ஒரு போர்டில்
' இலவசம்.! இலவசம்..! ஒரு சுடிதார் எடுத்தால் மற்றொன்று இலவசம்..!'
என்றிருந்தது.

"பார்த்துட்டியா..?" என்று அசடு வழிந்தாள்.

"இந்தா, வயலட் கலர் சுடி நீ எடுத்துக்கோ..!" என்று கொடுத்தாள்.

"உன்னைப் பத்தி தெரியாதா என்ன..? என்னை யாருனு நினைச்சே..? எப்படி கண்டுபிடிச்சோம்லெ..!" என்று, போட்டிருந்த சுடிதாரில் காலர் இல்லாததால், துப்பட்டாவைத் தூக்கி விட்டுக் கொண்டேன், மனோன்மணியாகிய நான்.

எங்கிருந்தோ 'லூசுப் பெண்ணே.. லூசுப் பெண்ணே..' என்று பாட்டு கேட்டது.இருவரும் விழுந்து, விழுந்து சிரித்தோம்.

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)

Monday, November 06, 2006

பரவசம்.. இலவசம்...!

"ணியண்ணே... சேலம் பைபாஸ் தாண்டி, சங்ககிரி போற ரூட்டுல, நெறைய கிராக்கி நிப்பாங்கண்ணே.. இன்னிக்கு ஒண்ணு பாக்கலாம்ணே.." குமாரு மணியின் மனதில் ஆசையை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தான்.

ஆத்தூரிலிருந்து லாரி பாய்ந்து வந்து கொண்டிருந்தது.

ணி கோயமுத்தூரில் டெக்ஸ்டைல் மில்களுக்கு சரக்கு மற்றிச் செல்லும் ட்ரான்ஸ்போர்ட் ஆபிஸில் டிரைவராக வேலை செய்து கொண்டிருக்கிறான். குமாரு அவன் லாரியின் கிளீனர். மணிக்கு இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் நடக்க இருந்தது.. சொந்த அக்கா பெண் பவானியைத் தான் மணன்ப்பதாக திட்டம்.அதற்குள் அவசர சரக்கு மாற்றுவதற்காக சூரத் வரை செல்ல வேண்டியதாகி விட்டது. கூட குமாரும்.

கோவையிலிருந்து துணிகளை எடுத்துக் கொண்டு, சூரத் சென்று மாற்றி விட்டு, பாவு நூல்களையும், பஞ்சு மூட்டைகளையும் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

"ண்ணே.. சொல்றேனு தப்பா நெனச்சுக்காதீங்க.. இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கு கல்யாணம் ஆகப் போகுது. அங்க போய் ஒண்ணும் தெரியாம முழிக்கறதுக்கு, ஒரு சின்ன ரிகர்சல் மாதிரி இருக்கட்டுமே..இவ்வளவு நாள் நல்லவனாவே இருந்துட்டோம். இன்னிக்கு ஒரு தடவை போய்ப் பார்ப்போம்ணே.." கெஞ்சல் குரலில் தூபம் போட்டுக் கொண்டிருந்தான் குமாரு.

மணிக்கு லேசாக ஆசை கிளரத் தொடங்கியது. மூன்று நாட்களாய் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கும் கொஞ்சம் இளைப்பாறுதல் தேவைப்பட்டது.

"டேய்.. நோய் எல்லாம் வந்திடாதே..?"

குஷியான குமாரு " அதெல்லாம் அவங்களே தெளிவா பாத்துக்குவாங்க.. நீங்க சேலம் பைபாஸ் தாண்டினப்புறம் நான் சொல்ற எடத்துல நிறுத்துங்க. நான் உள்ள போய் பேசிட்டு வந்ததுக்கப்புறம் நீங்க போய்ட்டு வாங்க.." என்றான்.

லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. சேலம் - கோவை நெடுஞ்சாலை அந்த பின்னிரவு இரண்டு மணிக்கு வெறிச்சோடி இருந்தது. அவ்வப்போது தென்படுகின்ற தொலைதூரப் பேருந்துகளும், லாரிகளும் கடந்து சென்று கொண்டிருந்தன. புளிய மரங்கள் விசுவிசுவென்று அடித்துக் கொண்டிருந்த கற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

மணி பொறுமை இழந்தவனாய் லாரியில் காத்துக் கொண்டிருந்தான். குமாரு ஓரமாய் இறங்கிப் போயிருந்தான். பழைய பீடி ஒன்றைப் புகைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று 'க்ரீச்'சென்று சத்தம். லாரி ஒன்று ப்ரேக் அடித்தது போல். 'வள்..வள்' என்று நாய் ஒன்று குலைக்கும் சத்தம். மணி தடாரென்று கதவைத் திறந்து இறங்கினான். 'சடார்'என்று அவனை ஒரு லாரி எதிர்ப்புறத்தில் இருந்து கடந்து சென்றது. அதன் வலது முன் லைட்டில், சிவப்பு நிற ரத்தக் கறை.

மணி கிட்டத்தட்ட ஓடி நாயின் குரல் வந்த இடத்தை அடைந்தான்.

ஒரு ஆண் நாய் குடல் சரிந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. 'ஊ..ஊ' என்று ஊளையிட்டது. அதன் பக்கத்தில் ஒரு பெண் நாய் சுற்றிச் சுற்றி வந்தது. சில சமயம் அதுவும் ஊளையிடும். சில சமயம் அது, ஆண் நாயின் அருகில் போய் முகர்ந்து பார்க்கும். ரோட்டில் படுத்துப் புரளும். திடீரென்று இவனைப் பார்த்த்க் குரைக்கும். உடனே ஆண் நாயைக் கடிக்கும்.

இன்னும் சிறிது நேரத்தில் ஆண் நாய் இறந்து விடும் என்று என்று தெளிவாகத் தெரிந்து விட்டது போல் ஒரு நீளமான ஊளையிட்டது பெண் நாய்.

யாரோ சாட்டை எடுத்து அடித்தது போல் இருந்தது மணிக்கு. பெண் நாயின் ஊளை அவன் முதுகுத் தண்டின் வழியே பாய்ந்து, மூளையை சில்லிடச் செய்த்தது. அவனால் தாங்க முடியவில்லை. ஓடி வந்து லாரியில் ஏறிக் கொண்டான்.

என்ன காரியம் செய்ய இருந்தேன்? கேவலம் ஒரு நாய் கூட துணையின் மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறது. ஆண் நாய் இறக்கப் போகிறது என்பதை உணர்ந்தவுடன் , பெண் நாய் எவ்வளவு துயரப்பட்டிருந்தால், இப்படி அழும்?

மணிக்கு திடீரென்று, சூரத் கிளம்பும் முன் பவானியுடன் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

"புள்ள.. இங்க வா.."

"என்னுங்க மாமா..?"

"இதப் பாரு புள்ள. இதுவரைக்கும் மாமா வீடுனு வந்திட்டு இருந்த.சரி. இப்பொ நாளைக்கு வந்து வாழப் போற வீடு. அதனால கல்யாணம் ஆனதுக்கப்புறம் தான் நீ வரணும்.."

"எப்படியும் நான் வரத் தான போறேன். அதுக்கு இங்கயே இருந்தா என்ன தப்பு?"

"இருந்தாலும் ஊரு ஒண்ணுனா ஒம்போது பேசும்ல? எதுக்கு ஊர் வாய்க்கு நாமளே அவல் போடணும்..?"

"ஊர்னா யாரு மாமா? நீயும், நானும், நம்ம மக்களும் தான் எனக்கு ஊரு. அவங்க ஒண்ணும் தப்பா நெனைக்க மாட்டாங்க. என்னால உன்னைப் பிரிஞ்சு இருக்க முடியல மாமா.."

"அட.. இதுக்கு ஏன் அழுவுற.. உனக்கு இதை சொல்ல தான் கூப்பிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு நான் சூரத் வரைக்கும் போக வேண்டியிருக்கு. வர ஒரு வாரத்துக்கு மேல ஆகும்."

"சரி மாமா. பார்த்து போய்ட்டு வாங்க. இருந்தாலும் கல்யாணத்தை இவ்ளோ கிட்டக்க வெச்சிக்கிட்டு ஊருக்குப் போறது நல்லாஇல்ல மாமா.."

"ஒரு கேள்வி கேக்கறேன். லாரியில் போகும் போது, எங்கயாவது விபத்தாகி நான் இல்லைனா நீ என்ன பண்ணுவ.. ஏய்.. புள்ள.. நில்லு.. ஓடாத.. அழாத..."

ச்சே..! எம் மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தா, அதுக்கப்புறம் ரெண்டு நாளா என்னைப் பாக்க கூட வராம அழுதுட்டு இருந்திருப்பா..? அக்கா கூட கேட்டாளே.'என்னடா சொல்லி புள்ளயை மிரட்டினேனு'.

உடம்பில அடிபட்டா தான் விபத்தா? இந்த மாதிரி ஒரு கீழ்த்தரமான காரியத்தில இறங்கி, வாழ் நாள் முழுக்க இவளுக்குத் துரோகம் பண்ணிட்டமேனு உறுத்தல் இருக்குமே. அது எவ்வளவு பெரிய விபத்து.
இவ்ளோ நாள் பொறுமையா இருந்தோம். இன்னும் கொஞ்ச நாள் பொறுக்க முடியாதா?

நல்ல வேளை. இது மட்டும் கெட்டுப் போகாம, திரும்பிட்டோம். இந்த குமாரு பயலை வேற காணோம். வந்தவுடனே கிளம்பணும். பவானி எனக்காகக் காத்திருப்பா.

"ண்ணே.. உள்ள போய்ட்டு வாங்க. லாரியை நான் பார்த்துக்கறேன்."

மணி அமைதியாக குமாரைப் பார்த்தான்.

"குமாரு..! உன்னை ஒரு கேள்வி கேக்கறேன்?"

"கேள்வி கேக்கற நேரமாண்ணே இது. ரொம்ப நேரம் நின்னா, போலிஸ் பேட்ரல் வந்திரும்ணே.. சரி.. கேளுங்க"

"கல்யாணத்துக்கு அப்புறம் அனுபவம் வேணும்னு இங்க எல்லாம் போகச் சொல்றியே. இதே மாதிரி, உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவளும் அனுபவம் வேணும்னு கரும்புக் காட்டுக்குள்ளயோ, பம்பு செட்டுக்குள்ளயோ போனானா ஏத்துக்குவியா.. சொல்லு..?"

செருப்பால் அடிபட்டது போல் நிமிர்ந்தான் குமாரு. அவன் கண்களில் இருந்து கண்ணீர் வரப் பார்த்தது.

"என்னை மன்னிச்சிருங்கண்ணே.. இனிமேல இந்த மாதிரி எல்லாம் போக மாட்டேண்ணே.." அழுதான்.

"சரி.. கதவைச் சாத்து.போகலாம். விடியறதுக்குள்ள கோயமுத்தூர் போயாகணும். கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு.." என்றபடி லாரியைக் கிளப்பினான் மணி.

போகும் போது, இறந்து கிடந்த ஆண் நாயையும், அதனருகில் படுத்திருந்த பெண் நாயையும் பர்த்தான் மணி. லேசாக கண்ணீர் வந்தது. அதன் அருகில் இருந்த போர்டைப் பார்த்தான். எழுதியிருந்ததை வாய் விட்டுப் படித்தவாறு லாரியை ஓட்ட ஆரம்பித்தான்.

விலைமாதருடன் கொள்ளும் பரவசம்!
விலையில்லாமல் எய்ட்ஸ் இலவசம்!!

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)

எது இலவசம்?

"ன்னங்க.."

"ம்.." என்றேன் இட்லியைப் பிட்டுக் கொண்டே.

"ஒண்ணும் இல்ல. தி. நகர்ல புதுசா ஒரு துணிக்கடை திறந்திருக்காங்களாம். நாம ஒரு விசிட் அடிச்சா என்ன..?" புகை வர ஆரம்பித்தது.

'ஒருவனின் செலவு, மற்றொருவனின் வரவு' என்ற அடிப்படைத் தத்துவத்தை கொல்கத்தாவில் சென்று கற்று வந்து, சென்னையில் ஒரு பன்னாட்டு (இது நல்ல வார்த்தையா, இல்லையா?) நிறுவனத்தின் மேலாண்மைப் பிரிவ்ல் இருக்கிறேன். போட் கிளப்பில் பெரிய வீடு. அழகான (இந்த உவமை வலுவிழந்து கொண்டே வருகின்றது) மனைவி. டி.ஏ.வி.யில் ஐந்தாவது படிக்கின்ற செல்லக் குட்டி. ஊரில் பெற்றோர். இப்படி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கின்ற வாழ்வில், அவ்வப்போது அடிக்கின்ற குட்டிச் சூறாவளி இவளது ஷாப்பிங்.

நகரில் ஏதாவது புது துணிக்கடை, நகைக் கடை, பாத்திரக் கடல் திறந்து விடக் கூடாது. உடனே இவளுக்கு அங்கே விசிட் செய்தாக வேண்டும். விசிட் என்றால், போய் வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு வருவாளா என்றால் அது தான் இல்லை. கிரெடிட் கார்டு தீர்ந்து விடும். இவள் ஒரு கடைக்குப் போய் விட்டு வந்தால், எப்படியோ இந்த பேங்க்காரங்களுக்கு மூக்கு வேர்த்து விடும். உடனே ஒரு கால் அடித்து 'மேடம். புது கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்ளுங்கள்' என்று எனக்கு செக் வைத்து விடுவார்கள்.

"ஆமாப்பா..! அந்தக் கடைக்குப் பக்கத்திலேயே புதுசா டாய் ஷாப் ஒண்ணு ஓபன் பண்ணியிருக்காங்களாம்பா..! ப்ளீஸ்பா.. போலாம்பா.." அம்மாவுக்கேற்ற பெண். முகத்தைக் குழந்தை போல் வைத்துக் கொண்டு அம்மா கேட்கையிலேயே மறுக்க மனம் வராத போது, என் குட்டிப் பெண் கேட்கும் போதா மறுக்கத் தோன்றும்?

"ஓ.கே. நெக்ஸ்ட் சண்டே போகலாம்.." என்றேன்.

வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த அவள் ஓடி வந்து என் மேல் ஏறிக் கொண்டாள்."மை டாடி இஸ் குட் டாடி..." என்று இரண்டு கன்னத்திலும் மாறி, மாறி முத்தமிட்டாள்.

' நீ என்ன தரப் போகிறாய்' என்று கண்களால் கேட்டவாறு,மனைவியை நிமிர்ந்து பார்த்தேன்.

"சரி..சரி. பப்பி, நீ போய் மேத்ஸ் போடு. என்னங்க, நீங்க கொஞ்சம் கிச்சன் வரைக்கும் வாங்க.." என்றாள் கண்ணடித்தவாறு. கள்ளி.

ஞாயிற்றுக் கிழமை.தென் மேற்கு போக் ரோட்டில் காரை பார்க் செய்து விட்டு, மூவரும் இறங்கினோம். அப்போது தான் அந்தப் போர்டு என் கண்ணில் பட்டது.

"கண்ணம்மா. நீயும், பப்பியும் போய்ட்டு வாங்க. நான் இங்க ஒரு ப்ரெண்டைப் பார்த்துட்டு வரணும். இப்ப தான் ஞாபகம் வந்தது." என்றேன்.

எதிர்பார்த்தது போலவே " என்னங்க, எப்பவுமே ஆபிஸ், வேலைனு அலையுறீங்க. கொஞ்சம் நேரம் கிடைச்சு இப்படி வெளியே வந்தா, உடனே நண்பர்கள் பார்க்க போறேனு போயிடறிங்க. உங்க நண்பரை இன்னொரு நாள் பார்த்துக்கலாம். இன்னிக்கு எங்க கூட வந்தே ஆகணும்.." என்று அன்பு வழிய பேசினாள்.

இந்த மாதிரி பர்ஸுக்கு வேட்டு வைக்கும் நேரங்களில் மட்டும் பாசம் பொங்கும்.மற்ற நேரங்களில் பார்க்கணுமே..!

"இல்லம்மா..! இந்த நண்பனைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. நீங்க போய்ட்டு வாங்க. ஆனா கொஞ்சம் பார்த்து செலவு பண்ணுங்க." என்றவாறே என் கிரெடிட் கார்டை நீட்டினேன்.

அசடு வழிந்தவாறே அதை வாங்கிக் கொண்டு, இருவரும், ஸ்டாப் ப்ளாக்கில் மறைந்தார்கள்.அந்தப் போர்டு கை காட்டிய முதல் மாடியை நோக்கி நடந்தேன்.

"வாங்க சார்.! எப்படியிருக்கீங்க..?" என்று கேட்டபடி வந்தார் மருது.

" நல்லாயிருக்கேன் மருது சார்! நீங்க எப்படியிருக்கீங்க?" என்றேன்.

" நல்லாயிருக்கேன்.! வழக்கமான வேலை தான..?"

"ஆமா.! இன்னிக்கு யாரு இருக்கா?"

"இன்னிக்கு டேவிட் தான் இருக்கான்.டேவிட்! சார் வந்திர்க்கார் பாரு. உள்ள ரெடி பண்ணு" என்றார் உள் நோக்கி குரல் கொடுத்தவாறு.

டேவிட்டின் விஷ்ஷை ஏற்றுக் கொண்டு " சாரி மருது சார். வழக்கமான ரொட்டீன்ல கொஞ்சம் மிஸ்ஸாயிடுச்சு. கரெக்டான டைம்படி, போன சனிக்கிழமையே வந்திருக்கணும். கொஞ்சம் வேலை அதிகமாகிடுச்சு."என்றேன்.

"நெவர் மைண்ட் சார்! நீங்க வாலண்டியரா வந்து, மூணு மாசத்துக்கு ஒருதடவை இலவசமா இரத்தம் குடுக்கறீங்க. அதுவே பெரிய விஷயம்."

"ஓ.கே." என்றவாறு நான் அறையின் உள்ளே சென்றேன், சட்டையின் வலதுகையை மடித்து விட்டவாறே.

"ண்ணு..!"

"சொல்லுங்கப்பா..!"

"விடுதி யெல்லாம் நல்லாயிருக்காப்பா..?"

" நல்லாயிருக்குப்பா.என்னப்பா திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க..?"

"மனசை திடப்படுத்திக்கோ..! நம்ம கண்ணன் இப்ப நம்ம கூட இல்ல.."

"அப்பா.....! என்னப்பா சொல்றீங்க..?"

"ஆமாப்பா..! நேத்து கெணத்துல குளிச்சிட்டு இருந்தவன் கல்லுல அடிபட்டு, ரொம்ப ரத்தம் சேதாரம் ஆகிடிச்சு. எல்லாரும் அவனைத் தூக்கிட்டு, நம்ம ஜி.எச்.சுக்கு போனோம். ஆனா, அங்க அவனோட ரத்த வகை இல்லனுட்டாங்க. மறுபடியும் ஆட்டோ புடிச்சு, ஈரோடு கொண்டு போகறதுகுள்ள, நம்ம கண்ணன்..."

"அப்பா..! நான் உடனே கிளம்பி வர்றம்பா.."

"இல்ல..! நீ வர வேணாம். வந்து என்ன ஆகப் போறது? நீ செமஸ்டர் எல்லாம் முடிச்சிட்டு வாப்பா..!கண்ண்னை நெனச்சு பரிட்சையில கோட்டை விட்றாதப்பா. அது கண்ணனுக்கும் பிடிக்காதுனு உனக்குத் தெரியும். நீ நல்ல மார்க் எடுத்து, நல்ல வேலைக்குப் போகணுங்கறத் தான் உன் நண்பன் கண்ணனோட ஆசை. அதை எங்கிட்டயும் சொல்லியிருக்கான். அதை நீ காப்பாத்தணும். அப்பத் தான் அவன் ஆத்மா சாந்தியடையும். என்ன..?"

"சரிப்பா.."

"சரி.. உடம்பை கவனிச்சுக்கப்பா.. நான் வெச்சிடறேன்."

"ன்னங்க...! எவ்ளோ கூட்டம் தெரியுமாங்க, அந்தக் கடையில..? புதுசு,புதுசா புடைவை, மேட்சா ரவிக்கை. சில்க்ஸுக்குனே தனி டிவிஷன் வேற ஓபன் பண்ணியிருக்காங்க. ரெண்டாவது மாடியிலேயே கோல்டு ஷாப். அங்க புதுப்புது டிசைன்ல நகைங்க. நீங்க வந்திருக்கணும். மலைச்சுப் போயிருப்பீங்க. ரெண்டாயிரத்துக்கு மேல பர்ச்சேஸ் பண்ணினா கிச்சன் கிட் ஒண்ணு இலவசம்னு சொன்னாங்க. நம்ம வீட்டுல எல்லாம் பழசா இருக்குனு நான் ரெண்டு கிச்சன் கிட் கிடைக்கற மாதிரி பர்ச்சேஸ் பண்ணினேன். அவ்வளவு தான். அதுவும் இல்லாம, இன்னிக்கு முதல் நாள்ங்கறதுனால, லஞ்ச் வேற ப்ரீயா அவங்களே ப்ரொவைட் பண்ணினாங்க. யாரும் வெட்கப்படவேயில்ல. கேட்டு, வாங்கிச் சாப்பிட்டாங்க. நீங்க இல்லாததுனால நான் கொஞ்சம் தான் சாப்பிட்டேன். உங்களுக்கு கால் பண்ணினேனே, கவனிக்கலையா..?"

ரெண்டாவது கீருக்கு மாறியவாறு, செல்லை எடுத்துப் பார்த்தேன். நான்கு மிஸ்டு கால்கள். எல்லாம் இவள் பண்ணினது தான். ஏதாவது சொல்ல வேண்டுமேயென்று வாய் திறந்தேன்.

"போறும். ஒண்ணும் சொல்ல வேணாம். ப்ரெண்ட்ஸைப் பார்த்த குஷியில என்னையும் மறந்திடுவீங்கங்கிறது தெரிஞ்ச விஷயம் தான" என்று அவளே சமாதானம் கூறிக் கொண்டாள்.

பப்பி, புதிதாக வாங்கிய கார் பொம்மையின் மேல் டெடி-பியர் பொம்மையை வைத்தி பின்சீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

இவள் இன்னும் பேசிக் கொண்டு வந்தாள்." நாலு பட்டுப் புடவை எடுத்தா, வேறெண்ணவோ இலவசம்னு சொன்னாங்களே.. பப்பி, என்ன அது..?"

என் கவனம் மெல்ல திசை மாறியது.இவள் எதை இலவசம் என்கிறாள்? மதிய ஒரு வேளை உணவா? நகை, பாத்திரங்களா..? மருது சார், என் கண்ணன் நினைவாக நான் ரொட்டீனாக இரத்தம் கொடுப்பதை இலவசம் என்கிறார். உண்மையில் அது இலவசம் தானா? இல்லை. அது கண்ணனுக்கு என் சம்பாத்தியத்தில் ஒரு வாய் சாப்பாடு ஊட்ட முடியவில்லை என்கின்ற என் எண்ணத்திற்கு, நானே கொடுத்துக் கொள்கின்ற திருப்தி. அவ்வளவு தான்.

கார் வேகமாகச் சீறிப் பாய்ந்தது.

(தேன்கூடு - நவம்பர் 06 - போட்டிக்கான பதிவு.)