Friday, December 28, 2012

...மற்றும் சில லிமெரிக்குகள்.



றந்த பறவையை விலகி ஒரு சிறகு
மிதந்த காற்றுடன் அதற்கோர் உறவு
நீரில் நிழல் போல நீந்தி
வெளியின் நுண் கரங்கள் ஏந்தி
நிலம் தொட்ட சில நாளில் ஆனது ஒரு சருகு.

***

நிழல் கரும் இருளின் தூதன்
நீங்காமல் வரும் உடலின் மீதன்
ஒளி தடவினால் தெரியும்
எதிர்த் திசையிலே சரியும்
அருகாமை விளக்கடியில் பூதன்.

***

மேகம் தொட்டு ஒளிர்ந்தது ஒரு மின்னல்
முட்டி மோதிச் சுழன்றது மின் பின்னல்
தெருவெல்லாம் நீராகும்
செம்பழுப்புச் சேறாகும்
முன்னம் அடைந்தன சில ஜன்னல்.

***

போகாத பாதை காணாத காட்சி
பார்த்தபின் எதற்கு மனை மாட்சி
கேள்விகள் பிறந்தன
கதவுகள் திறந்தன
புத்தனாய் ஆனபின் சொன்னது மீட்சி.

***

சமுத்திரப் பேரொலி சிறு சங்கில் கேட்கும்
சாம்ராஜ்ய சந்தோஷம் வங்கில் கேட்கும்
ஈராயிரப் பண்பாடு
ஈந்த ஈந்த நற்பாடு
குறளெனும் இருவரிச் சொல்லில் கேட்கும்.

வங்கு :: பெருச்சாளி பூமியில் பறித்து வசிக்குமிடம்.


ஒரு sevenling:

ஆகாயத்தில் மிதக்கின்றன
நிலா, வலசைப் பறவைகள்
ஒரு உள்நாட்டு விமானம்.

கைகளில் கவிதைக் காகிதம்,
வரவேற்புப் பூங்கொத்து,
கடன் விவரங்கள்.

எது முதலில் விழுமோ?