Wednesday, May 13, 2009

IEEE - 125.

Tracing its routes to its founding organizations, the AIEE (1884) and the IRE(1912), IEEE celebrates 125 years of Engineering the Future on 13 May 2009. IEEE Kerala Section, with support of the local chapters of sister professional associations, is proud to celebrate the occasion. The event will bring together technology leaders to reflect upon the fascinating growth of engineering during the past 125 years, and to provide perspectives on the future of technology. Talks would be followed by Buffet Dinner.

இந்த கடைசி வரி எனக்கு பிடித்திருந்தது.



15-வது நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தலின் கடைசி கட்டம் அனலாக நடந்து கொண்டிருந்த போது IEEE தனது 125-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியது. Institute of Electrical and Electronics Engineers என்பதன் சுருக் IEEE. தமிழில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் குழுமம் என்று சொல்லலாம்.

1884-ல் துவங்கப்பட்டு 13 மே 2009 உடன் 125 வயதை பூர்த்தி செய்த இந்த மிகப் பழமையான குழுமம் உலகமெங்கும் மின் தொழில்நுட்பத் துறைகளை நெறிப்படுத்துவதிலும், புதிய முறைகளை உருவாக்குவதிலும் ஒப்பில்லாத பணியாற்றுகின்றது. அதன் கேரள பிரிவினரால் பிறந்த நாள் விழா இன்று இன்ஸ்டிட்யூட் ஆஃப் இஞ்சினியர்ஸ், கேரளாவால் கொண்டாடப்பட்டது. அலுவலகத்தில் நோட்டிஸ் போர்டில் நோட்டிஸ் ஒட்டப்பட்டிருக்க, அதை நோட்டிஸ் செய்து இன்று கலந்து கொண்டேன்.

அலுவலகப் பேருந்தில் பி.எம்.ஜி. செல்லும் வரை பிரச்னையில்லை. பிறகு வெள்ளையம்பலம் செல்வதற்குள் ட்ராஃபிக் நெரிசலில் சிக்கிக் கொள்ள, ஊர்ந்து ஊர்ந்து நகர்வதற்குள் பேச்சுகள் முடிந்து விடுமோ என்ற அநாவசிய சந்தேகத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்து, ம்யூசிய கூட்டத்திற்குள் தொலையாமல் கட்டிடத்தை அடையும் போது, பஸ் எங்களை கடந்து சென்றது.

அட்டெண்டன்ஸில் கையெழுத்திட்டு விட்டு, முதலில் சூடாக சாயா மற்றும் இரண்டு மேரிகள் எடுத்துக் கொண்டு கூட்டத்திற்குள் சங்கமிக்க, சங்கத்தார் பேசிக் கொண்டிருந்தனர். நான் சாயா காலி செய்து, பிஸ்கெட்டை அப்படியே திணித்துக் கொள்வோமா இல்லை உடைத்து நாசூக்காய் சாப்பிடுவோமா, உடைத்தால் சத்தம் வருமே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது, விளக்குகள் அணைக்கப்பட்டன. டக்கென்று வாய்க்குள் போட்டுக் கொண்டேன்.

125-வது பிறந்த நாள் கொண்டாடும் ஐ.ட்ரிபிள் ஈக்கு வாழ்த்துக்கள் சொல்வதாக டயஸில் ஒருவர் சொன்னார். கூட வந்திருந்தவன் காதைக் கடித்தேன். 'பர்த் டேவா..? அப்ப கேக் எல்லாம் எங்க..?'

ஆச்சர்யம்! நிஜமாகவே ஒரு பெரிய கேக் கொண்டு வந்து சங்கத் தலைவர் வெட்டினார். எஞ்சினியர் கும்பல்னா இப்படி தான் திங்க் பண்ணுவாங்களோ..? 'ஹேப்பி பர்த் டே டு யூ..' பாடாதது தான் பாக்கி.

பிறகு பிசிறு பிசிறாக கொண்டு வந்து காட்டினார்கள். கொஞ்சம் சுரண்டி எடுத்துக் கொண்டோம்.

முதல் செஷன் துவங்கியது. கேரள மாநில மின் வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் டா.ஜி.பவித்ரன் பேசத் தொடங்கினார். பி.பி.டி. ஓபன் பண்ணும் போதே, எப்போதும் செய்வது போல் எத்தனை ஸ்லைடுகள் என்பதை பார்த்து வைத்துக் கொண்டேன். அப்போது தான் மெண்டலைத் தயார் செய்து கொள்ள முடியும். குமுதம் ஸ்பெஷல் போல் 16 பக்கங்கள் மட்டுமே! அவர் எடுத்துக் கொண்ட கருத்து எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்கின் நேற்று இன்று நாளை! ஆதியில் இருந்து டெஸ்லா, ஓமில் ஆரம்பித்து, இன்றைய க்ரிட் வழி பாயும் மின்சாரம், ஹைட்ரோ, காற்றாலை, நியூக்ளியர், நிலக்கரி என்றெல்லாம் நிறைய சொன்னார். முக்கால்வாசி விக்கியில் இருந்து அப்படியே காபி, பேஸ்ட். அட, சைட்டேஷன் கூட ரிமூவவில்லை. அவர் சொன்ன ஒன்று நன்றாக இருந்தது. In electrical we transfer the power,while in electronics we transfer the information.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் கல்லூரியள் போல் இருந்தாள். பொட்டு இல்லை. கேரளக் கூந்தல் விரிப்பு. மென் கறுப்பு புடவை சுற்றியிருந்தாள். மேட்சாய் ரவிக்கை. பார்டரில் மஞ்சள் கண்ணாடிப் பொட்டுகள். சின்ன நெக்லஸ். கண்ணாடி போட்டிருந்தாள். மெதுவாகப் பேச வேண்டுமே என்று கட்டுப்படுத்திக் கொண்டு பேசுவது போல் பேசினாள். சில இடங்களில் தடுமாறினாலும் அதுவும் அழகாகவே இருந்தது.

அடுத்ததாக திருவனந்தபுரம் CDACன் செயல் இயக்குநரான ராஜன்.T.ஜோசஃப் க்ளாஸ் எடுத்தார். இவர் பேசியது எலெக்ட்ரானிக்ஸின் நேற்று, இன்று, நாளை. நிறைய விஞ்ஞானிகள், அவர்களது கண்டுபிடிப்புகள், ட்ரான்சிஸ்டரில் இருந்து ஐ.ஸி. வரை வந்து மைக்ரோப்ராசஸர் தாண்டி மூர்ஸ் விதி என்று நிறைய பேசினார். ஸ்லைடுகளில் விஞ்ஞானிகளைப் பற்றி கூறும் போது வெறும் அவர்கள் கண்டுபிடித்த/உருவாக்கியதைப் பற்றி மட்டும் பேசாமல், அவர்களது சொந்த வாழ்க்கையையும் எழுதி இருந்தார். சுவாரஸ்யமாக இருந்தது. உதா : கிரகாம்பெல்லின் அம்மா, மனைவி இருவருக்கும் காது கேட்காது. இவர் பாதி கிணறு தாண்டியிருக்கும் போதே, ஹாலின் பின் பகுதியில் பாத்திரங்கள் இழுத்துச் செல்லும் சத்தங்கள், அடுக்கப்படும் ஒலிகள், கரண்டிகள் கலகலக்கும் 'டிலீங்...டிலீங்', ஸ்பூன்கள் கொட்டப்படும் 'கலங்..கலங்' எல்லாம் கேட்டு பாதி தூக்கத்தில் மிதந்து கொண்டிருந்தவர்களை எல்லாம் எழுப்பி விட்டு சுறுசுறுப்பாக்கியது.

முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, InAPP ப்ரெஸிடெண்ட்டான சதீஷ் பாபு கம்ப்யூட்டிங்கின் நே.இ.நா.,வை அவசர அவசரமாகத் தள்ள வேண்டியாயிற்று. ஆனாலும் நன்றாகவே இருந்தது. கி.மு.1500-ல் ஆர்யபட்டா காலத்தில் துவங்கி டைம்லைனில், போன வருஷம் கூகுள் ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேஷன் சவால் வைத்தது வரை இழுத்து வந்தார். பின் இன்று கம்ப்யூட்டிங் நிலைமை என்ன என்பதைப் பற்றியும், எதிர்காலத்தில் ரோபோ, நானோ, பயோடெக்கில் வரப்போகின்ற ஆச்சரியங்களைப் பற்றி சொன்னார்.

நன்றியுரை சொல்லப்பட்ட பின் எல்லோரும் வரிசை கட்டி நின்றோம்; தின்றோம்.

ஐந்தாறு சிக்கன் பீஸ்கள், நான்கு அப்பளங்கள், ரெண்டு முறை குஸ்கா, நான்கே நான்கு சப்பாத்திகள் மட்டும் தான் சாப்பிட்டேன். சூடாக ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, ரெண்டே ரெண்டு தடவை பழங்களில் போட்ட கட்டி ஐஸ் க்ரீம்கள் எடுத்துக் கொண்டதில், பற்களுக்கு எதுவும் டேமேஜ் இருக்காதே..?

சில செல் பளிச்கள் :













(இதற்குத் தானே ஆசைப்பட்டாய் வ.குமாரா..?)




***

மேலும் தெரிந்து கொள்ள :

http://en.wikipedia.org/wiki/IEEE

http://www.ieee.org/portal/site

http://www.ieee125.org/

http://ewh.ieee.org/r10/kerala/

Tuesday, May 12, 2009

கவிதை செய்யலாம் - தங்க வரி.

சென்ற பகுதியில் லிமெரிக் பற்றி எழுதும் போது, ஒன்று சொல்ல மறந்து விட்டேன். இன்று இரவு தமிழ்ப்பறவையிடம் பேசும் போது தான் நினைவுக்கு வந்தது.

மயிலை அண்ணன் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ அவர்களின் 'காதுல பூ' நாடகத்தில் ஒரு வசனம். மேலோகத்திற்கு சினிமாப் பாடலாசிரியரை இழுத்துச் சென்று விடுவார்கள். அங்கே அவர் எமனிடம் ஒரு பாடல் பாடுவார். பாருங்களேன்.

ரத்தத்தின் நிறமோ சிகப்பு.
பாலின் நிறமோ வெளுப்பு.
கடல் நீர் என்றும் கரிக்கும்.
சர்க்கரையோ என்றென்றும் இனிக்கும்.
இதுதான் ஆண்டவனின் படைப்பு.

கொஞ்சமாய்ச் சாயம் போன லிமெரிக் சாயல் தெரியவில்லை..?

தங்க வரி (Golden Line)

இன்று லத்தீன் இலக்கியத்தின் ஒரு வகையான 'தங்க வரி' முறையைக் காண்போம். இதற்கு அடிப்பொடிகளாக வெள்ளி வரி, வெண்கல வரி என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள். நாம் மாதிரிக்கு இந்த குடும்பத்தில் தங்க வரியை மட்டும் பார்த்து விட்டு ஜூட் சொல்லிடுவோம்.

ஒரு வரி. மொத்தம் ஐந்து வார்த்தைகள். 1, 2 வார்த்தைகள் பண்புகளாகவும் (adjectives), 4,5 பண்புகளுக்கு உரிய பொருட்களாகவும் (nouns), 3 வினைசொல்லாகவும் (verb) வர வேண்டும். 1வது வார்த்தைப் பண்பு 4வது பொருளுக்கு உரியதாகவும், 2வது வார்த்தைப் பண்பு 5வது பொருளுக்குரியதாகவும் வர வேண்டும். முக்கியமான கொக்கி ஒன்று இருக்கிறது. 1,3 வார்த்தைகள் ஒரு ரிதத்திலும், 2, 5 வார்த்தைகள் ஒரு ரிதத்திலும் இருக்க வேண்டுமாம்.

அவ்வளவு தான் சார்.

இந்த வரையறை 1652-ல் லத்தீன் இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது ரொம்ப பழைய ஒன்று. ஆங்கிலக் குழந்தைகள் லத்தீன் படிக்கும் போது, அவர்களுக்கு பள்ளியில் எப்படி சொல்லித் தரப்படுகிறதோ அப்படியே எழுதுகிறார்கள் என்கிறார்கள். காரணம் ஒரு தெளிவான வரையறை இல்லாமல், பண்புகள் மட்டும் அல்ல, வேறு சில இலக்கணத்தனங்களையும் உபயோகப்படுத்திச் செய்கிறார்கள்.

Lurida terribiles miscent aconita novercae. (Ovid, Metamorphoses 1.147)
Pendula flaventem pingebat bractea crinem.


இதில்,

Pendula bractea

flaventem crinem

என்று ஓர் ஒத்திசைவாய் ஒலிப்பதைக் கேளுங்கள்.

aurea purpuream subnectit fibula vestem,

இதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால், 'golden purple bound clasp cloak' என்று வருகிறது. புரிகின்ற மொழிபெயர்ப்பு, 'a golden clasp bound her purple cloak'.

சரி, அப்படியே 1652 இத்தாலியில் இருந்து ஒரு மெகா ஜம்ப் அடித்து, 15வது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கின்ற நாட்டிற்குள் குதிப்போம்.

இந்த வரையறையை வைத்துக் கொண்டு தமிழில் முயற்சித்தால்...?

சிக்கல் என்ன?

நம் வாக்கிய அமைப்பில் பெரும்பாலும் வினைச்சொல் வாக்கியத்தின் நடுவில் வராது. ஆனால் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம். புதுக்கவிதைகள் மாதிரி.

ஓர் உதாரணம் பார்ப்போம்.

ஏழுநிறங்களின் நீலநிறத்தில் விழுந்தன வானவில்லின் துளிகள்!

இதற்குத் தலைப்பு என்ன வைக்கலாம்..? வேறு என்ன..? கவிஞர்களின் நிரந்தர இரண்டாம் காதலியான மழை தான். (முதல் நிலா!)

ஏழுநிறங்களின் வானவில்லின் - முடிவில் ஒத்திசைவு

நீலநிறத்தில் துளிகள் - முடிவில் ஒத்திசைவு

நமக்கு தான் எதுகை மோனை என்றெல்லாம் வசதிகள் இருக்கின்றனவே! அவற்றையும் உபயோகப்படுத்தி ரிதமிக்கை இன்னும் எளிமையாக அழகாக கொண்டு வர முடியும் என்று படுகின்றது. தமிழுக்கு ஏற்றவாறு கொண்டு வரும் போது கொஞ்சம் வேட்டியை லூஸ் செய்து கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

மற்றொன்று,

பழுப்பான கசப்பாக ஊற்றினேன் மதுபானத்தின் ரசம்.

பழுப்பான மதுபான - முடிவில் ஒத்திசைவு

கசப்பாக ரசம் - எதுகை

இன்னும் கொஞ்சம் யோசித்து எழுதினால் ஏறக்குறைய குறள் வெண்பாவுக்கு பக்கத்தில் கொண்டு போய் விடலாம்.

நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.

நன்றி :

http://en.wikipedia.org/wiki/Golden_line

***

இத்தாலி என்றதும் காலத்தால் கரையாத ஒரு படத்தின் நினைவு வந்தது. அதன் தீம் இசை.

Monday, May 11, 2009

கவிதை செய்யலாம்.

ழுத்துத் துறையிலே பல வகையில் எழுதி வெளிப்படுத்தலாம். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை சில. அத்தனையிலும் கவிதைக்கு ஒரு தனி அழகு இருக்கின்றது. கவிதை படைப்பவரது அந்தரங்க நிழலைக் காட்டுகின்றது. அதைப் படிப்பரும் அவரவர் தளத்தில் புரிந்து கொள்ள முடிகின்றது.

சில விதம் விதமான கவிதை எழுதும் முறைகளைப் பற்றிப் படித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறேன். புதுக்கவிதை, சங்க இலக்கிய முறைகள், கட்டளைக் கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா, இயற்சீர் வெண்டளை என்பன போன்ற நந்தமிழ் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், எழுதிப்பழகவும் பல தளங்கள் உள்ளன.

வெளி மொழிகளில் புழங்கும் புதுமையான கவி வடிவங்களை நானும் கற்று, உங்களுக்கும் சொல்லலாமே என்று விரும்புவதால் இன்று இரண்டு நுட்பங்களைப் பார்ப்போம்.

லிமெரிக் (Limerick)

லிமெரிக் வகை கவி முறை எங்கு எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் இன்னும் குழப்பங்கள் இருக்கின்றன. லிமெரிக் என்ற பெயரிலேயே அயர்லாந்தில் ஒரு நகரம் இருக்கின்றது. 1700களில் ப்ரான்சில் இருந்து அங்கு திரும்பிய படைவீரர்கள் உற்சாகமிகுதியில் பாடிய வரிகள் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் பதினான்காம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குழந்தைகளுக்கான பாடல்களாகப் பாடப்பட்டிருக்கிறது என்று நோட்டை நீட்டுகிறார்கள். எழுதுவதற்கு சுலபமானதாகவும், மஜா வரிகள் போட்டும் எழுதக் கூடியதாகவும் இருப்பதால் இங்கிலாந்து பிச்சைக்காரர்களாலும், பார்களில் வேலை செய்பவர்களாலும் பாடப்பட்டிருக்கக் கூடும் என்று சிலர் அனுமானிக்கிறார்கள். பெரும்பாலும் குடிகாரர்கள்! 1898-ல் இங்கிலாந்திலும், 1902-ல் அமெரிக்காவிலும் முதலில் பதிவு செய்யப்பட்டது.

இதன் எழுதும் வடிவம் மிகச் சுலபமானது.

ஆங்கிலத்தில் ஐந்து வரிகள் கொண்டது. 1,2,5 வரிகள் ஏழு முதல் பத்து சிலபல்கள் (Syllable) கொண்டதாகவும் ஒரே வித ரைமிங்கில் முடிவதாகவும் இருக்க வேண்டும். சிலர் 8 அல்லது 9 சிலபல்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள். 4, 5 வரிகள் ஐந்து முதல் ஏழு சிலபல்கள் இருப்பதாகவும், ஒரே வித ரைமிங்கில் இருக்கவும் வேண்டும். இத்தனை கட்டுப்பாடுகளிலும் நகைச்சுவை வாசம் தெளித்திருக்க வேண்டும் என்பது ஒரு அடிநாதமாக இருக்கின்றது.

எளிது அல்லவா..? சவாலே வரிகளுக்கு இடையேயான தொடர்புச் சங்கிலியை அமைப்பதில் தான் இருக்கின்றது.

1,2 வரிகள் ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டும். 3,4 வரிகள் மற்றொன்றைப் பற்றி! கடைசி வரி இரண்டையும் இணைத்து பஞ்ச் லைனாகவோ, ஆகவோ இருக்க வேண்டும். அப்படி தொடர்பில்லாமல் இருக்க வேண்டியது அவசியமில்லை என்றும் சொல்கிறார்கள்.

நேராக சில உதாரணங்களைப் பார்த்தாலே, 'பளிச்' ஆகி விடும் என்று நினைக்கிறேன்.

Edward Lear என்பவர் இதில் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். அவரது Book of Nonsense 1845-ல் வந்திருக்கிறது. மற்றொரு புத்தகம் 1872-ல் வெளியிட்டிருக்கிறார்.

There was an Old Man with a nose,
Who said, 'If you choose to suppose,
That my nose is too long,
You are certainly wrong!'
That remarkable Man with a nose.

There was an Old Man in a tree,
Who was horribly bored by a Bee;
When they said, 'Does it buzz?'
He replied, 'Yes, it does!'
'It's a regular brute of a Bee!'

There was an Old Man with a beard,
Who said, 'It is just as I feared!
Two Owls and a Hen,
Four Larks and a Wren,
Have all built their nests in my beard!'

அந்த வட்டாரங்களில் கொஞ்சம் பிரபலமான லிமெரிக்,

There was an old man from Peru,
who dreamed he was eating his shoe.
He awoke in the night
with a terrible fright,
and found out that it was quite true.

There once was a fellow named Tim
whose dad never taught him to swim.
He fell off a dock
and sunk like a rock.
And that was the end of him.

அவரது லிமெரிக்குகள் பெரும்பாலும் 'There was a old man', 'There was a Young lady' போன்று அமைந்திருந்தாலும் அதையே நாம் இலக்கணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சிலர் இந்த முறையை மறுத்தும் எழுதியிருக்கிறார்கள்.

A flea and a fly in a flue
Were caught, so what could they do?
Said the fly, "Let us flee."
"Let us fly," said the flea.
So they flew through a flaw in the flue.

இந்த லிமெரிக்குகளைப் பார்த்தால் ஓர் ஒழுங்கு தெரிகின்றது. வரிகளின் கட்டமைப்பிலும், சொல் பிரயோகத்திலும் ஒரு ரிதம், ரைமிங் இருக்கின்றது.

சொல்கிறார்கள், 1,2,5 வரிகளில் da DUM da da DUM da da DUM எனவும் 3, 4 வரிகளில் da DUM da da DUM எனவும் ஒலிக் கட்டப்பட்டிருகின்றது. da வரும் வார்த்தைகள் அழுத்தம் குறைந்ததாகவும், DUM இடங்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் இருப்பதைச் சொல்லிப் பாருங்கள்!

தமிழில் இவற்றுக்கு ஈடாக எழுத முடியுமா?

முடியும். இந்த சிலபல Syllable விளையாட்டுகளுக்கு இணையாகத் தமிழில் அசைகள் இருக்கின்றன. சிலபல்களின் கண்டிப்புகளுக்கு நாம் நம் அசைகளைக் கொண்டு கட்டமைத்து லிமெரிக்குகள் எழுத முயலலாம்.

முதலில் அசை பற்றி ஒரு குட்டி விளக்கம் கொடுத்து விட்டால், தாவிப் போய் விடலாம்.

இரண்டு அசைகள் இருக்கின்றன. நேர் அசை, நிரை அசை. யாப்பு இலக்கணத்தில் வெண்பா எழுதும் போது அடிப்படைகள் ஆறு தெரிந்திருக்க வேண்டும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை. லிமெரிக்குகளுக்கு நாம் அசை மட்டும் தெரிந்து கொள்வோம்.

அ, இ, உ, எ, ஒ - குறில்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள - நெடில்.

இப்படி எடுத்துக் கொண்டாலும் ஐ ஒரு தனிப் பிறவி! வார்த்தையின் முதலில் வரும் போது நெடிலாகவும் (கைது!) இடையிலோ, கடைசியிலோ வரும் போது குறிலாகவும் கொள்ளப்படும் (திரைகடல், மதுரை). காரணம், சிம்பிள். நாம் சொல்லும் போது இடையில்/கடைசியில் சிக்கிக் கொண்ட 'ஐ', 'அ'வாகத் திரிந்து விடும்.

நேர் அசை = தனிக் குறில், தனிக் குறில் ஒற்று, தனி நெடில், தனி நெடில் ஒற்று.

தனிக் குறில் - குறில் எழுத்துக்கள். உதாரணம் : க, சு, பு.

தனிக்குறில் ஒற்று - குறில் எழுத்துக்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கல், புல், என்.

தனி நெடில் - நெடில் எழுத்துக்கள். உதா : தா, நா, ழூ.

தனி நெடில் ஒற்று - நெடில் எழுத்துக்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கால், போர், நூல்.


நிரை அசை = குறில் இணை, குறில் இணை ஒற்று, குறில் நெடில், குறில் நெடில் ஒற்று.

குறில் இணை - இரண்டு குறில்கள். உதா : பசு, வறு, பனி.

குறில் இணை ஒற்று - இரண்டு குறில்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கடல், பகல், நிழல்.

குறில் நெடில் - முதலில் குறில் எழுத்தும், பின் நெடில் எழுத்தும். உதா : உலா, பலே, நிலா.

குறில் நெடில் ஒற்று - முதலில் குறில் எழுத்தும், பின் நெடில் எழுத்தும் + மெய்யெழுத்து (க்கள்). உதா: தபால், கலாம், திடீர்.

நீங்களே இன்னும் சில வார்த்தைகளைப் போட்டுப் அசை பிரித்துப் பாருங்களேன்.

சரி, இப்போது மீண்டும் அயர்லாந்துக்கு வருவோம்.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி எழுதியுள்ள ஒரு தமிழ் லிமெரிக்கைப் பார்ப்போம். இதை குறும்பாக்கள் என்கிறார்கள். என்றால், ஹைக்கூவை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. திருக்குறள் இதை விட சிறியதாயிற்றே! அதற்கென்ன பெயரோ? நான் லிமெரிக் என்றே பயன்படுத்துகிறேன்.

வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியது குண்டு
நல்லபடி நம் மனிதர்
நச்சரிப்புத் தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது நண்டு.

சில இடங்களில் இந்தப் புது வடிவத்திற்கு, மரபுக் கவிதையைப் போலவே இயைபுத் தொடை வைத்து, காய்ச்சீர்கள் சேர்க்கிறார்கள். ஐரிஷ் கவிதையை முற்றிலும் தமிழ்ச் சேலைக்குள் அடைக்க முயலும் போது அந்த வெளிநாட்டு அழகு மறைந்து விடுமோ என்று கவலை வருகிறது. மேலும் லிமெரிக் வேண்டுகின்ற சிலபல்களைத் தமிழில் எத்தனை சீர்களுக்கு மாற்றுவது என்பது பற்றி மஹாகவி எழுதி இருக்கிறார் என்கிறார்கள். அந்த கட்டுரை எனக்கு கிடைக்கவில்லை. அவர் எழுதிய மேற்கண்ட கவிதையைப் பார்க்கும் போது, அவர் நேரடியாக சிலபல் = அசை என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரிகின்றது. இப்போதைக்கு நாமும் அந்த எளிமையான வடிவில் துவங்குவோம். கைவரப் பெற்ற பின், தமிழ் க்ளுகோஸ்களை ஏற்றிக் கொள்ளலாம்.

எதைப் பற்றி எழுதலாம்? எதைப் பற்றியும். கோயில் மயில், கோலம் போட்ட பெண், பேப்பர் செய்தி, விலைவாசி, செருப்படிகள், கலவரங்கள், காதல்கள், முத்தங்கள்..! எதையும் எழுதலாம், with கொஞ்சம் மேலே சொன்ன Conditions Apply!

எழுதிய சில லிமெரிக்குகள் :

இந்திரன் ஊரில் ஆளு படா ஷோக்கு.
சந்துக்குள் ஒருநாள் போய்ப் பார்த்தான் பராக்கு
பைசா இருந்தது பாக்கெட்டில்
கைவைத்தான் ஒரு ஜாக்கெட்டில்
பட்டென்று தெறித்தது முதல் ஹூக்கு.

வீட்டிற்குள் சும்மா படுத்திருந்த போது
உள்ளே வந்தாள் அழகிய ஒரு மாது.
வெண்ணிற ஆடை மினுமினுக்க,
பொன்னிறக் கூந்தல் பறபறக்க,
மிதந்தாள். அவளுக்கு கால்கள் லேது.

எல்லா சனியும் மூணு டு அஞ்சு கிடார்
எலிஸபெத் போகிறாளென விமலும் தயார்.
பெட்டிக் கடையில் தம்மடித்தான்.
தட்டிப் போட்டு பான் அடித்தான்.
'இளைய நிலா...', பாட மயங்கி விழுந்தான், தடார்.

ஹார்பர்ல வந்திருக்கு இரும்பு லோடு
பார்பரா வூட்டுல இருக்கான் அந்த பாடு
சைரன் தந்தாச்சு
லாரிங்களும் வந்தாச்சு
அவ மடியில கெடக்கான், கூட்டிவா ஓடு!

ராயப்பேட்ட மூணாம் தெரு தாத்தா,
ராங்கா பேசுவார் யாரையாச்சும் பாத்தா!
மீன்புடிக்க மோட்டார் போட்டு
வாங்க கொஞ்சம் கடன் கேட்டு
போனான் கபாலி. சொன்னார் "போடாங் ....!"

மேலே எழுதியவற்றை நான் லிமெரிக்குகள் என்றே நம்ப விரும்புகிறேன்.

இப்போது நீங்களும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

நன்றி ::

http://en.wikipedia.org/wiki/Limerick_(poetry)
http://volweb.utk.edu/school/bedford/harrisms/limerick.htm
http://www.poetry-online.org/limericks.htm
http://www.gigglepoetry.com/poetryclass/limerickcontesthelp.html
http://www.teachingideas.co.uk/english/limerick.htm
http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=3544
http://forumhub.com/tlit/901.16446.14.14.07.html
http://viruba.blogspot.com/

க்ளெரிஹ்யு (Clerihew)

லிமெரிக்குகள் போல் அத்தனை விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இல்லை. மிக எளிது.

நான்கே வரிகள். எந்த வித சிலபல் எல்லைகளும் இல்லை. விருப்பப்படி எழுதலாம். 1, 2 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும், 3,4 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும் முடிய வேண்டும்.நம்ம விஜய டி.ஆர். பேசுவது போன்றா என்று கேட்டால்... இல்லை!

காரணம் இந்த க்ளெரிஹ்யூவில் இருக்கும் சவாலான சமாச்சாரமே இது ஒரு வித பயோக்ராபிகல் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே! உங்கள் பள்ளி ஆசிரியரைப் பற்றி, அரசியல்வாதியைப் பற்றி, பஸ் ட்ரைவர், நண்பர்கள், எதிரிகள், ஒபாமா, ஒசாமா, செங்கல்பட்டு, வெஸ்ட் மாம்பலம், வடசேரி, தாராவி... யாரைப் பற்றியும், எதைப் பற்றியும், ஆனால் அவர்களின் ஒரு குணம் சொல்லப்பட வேண்டும். அதிலும் செம ஹ்யூமராக சொல்லப்படல் வேண்டும். ஆட்டோ வராத வகையில் கலாய்க்கவும் செய்திருக்கலாம். 1-ம் வரி பெரும்பாலும் எழுதப்படும் ஆசாமியின் பெயராக இருப்பது உத்தமம்.

சந்தோஷமான சவால்கள்!

Edmund Clerihew Bentley என்ற பின்னாள் எழுத்தாளர், 16 வயதில் லண்டன் செய்ண்ட் பால் பள்ளியில் ஓர் அறிவியல் வகுப்பை அட்டெண்ட் செய்திருக்கும் போது, பிரபஞ்சத்தின் முதல் க்ளெரிஹ்யூவை எழுதினார். வகுப்பு அத்தனை சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கவில்லை போல் தெரிகின்றது. தூங்கித் தொலையாமல் இருக்கவோ, என்னவோ ஒரு க்ளெரிஹ்யூவை எழுதி நண்பர்களிடம் பாஸ் செய்ய அது மெகா ஹிட் ஆகி இருக்கின்றது. பிரபலமாகி, மூன்று வால்யூம்கள் நிறைய நிறைய எல்லோரையும் எழுதி விற்றுத் தீர்த்திருக்கிறார் இந்த மகானுபவர். அறிவியல் வகுப்பெடுத்தவருக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.

அந்த பிரசித்தமான முதல் க்ளெரிஹ்யூ :

Sir Humphry Davy
Was not fond of gravy.
He lived in the odium
Of having discovered sodium.

இன்னும் சில க்ளெரிஹ்யூக்கள் :

Our art teacher, Mr. Shaw,
Really knows how to draw.
But his awful paintings
Have caused many faintings.

James Joyce
Had an unusually loud voice;
Knightly knock eternally wood he make
Finnegans Wake.

One of my fourth grade teachers, Miss Dunn,
Loved to teach, run, and simply have fun.
She taught us to live by the Golden Rule,
So no one at school was ever a fool.

மேலும் க்ளெரிஹ்யூவின் Biography for Beginners புத்தகத்திலிருந்து சில உதாரணங்கள் :

Sir Christopher Wren
Said, 'I am going to dine with some men.
If anyone calls
Say I am designing St. Paul's.'

The art of Biography
Is different from Geography.
Geography is about maps,
But Biography is about chaps.

John Stuart Mill,
By a mighty effort of will,
Overcame his natural bonhomie
And wrote 'Principles of Economy.'

தமிழில் சில முயற்சிகள் செய்து பார்த்தேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினி.
குருக்களைத் தேடி ஓடுவதில் கஜினி
அடிக்கடி போவார் இமயமலை நாடி,
ஆனாலும் சம்பளம் இருபது கோடி!

நீங்களும் இனி கலக்கி எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி ::

http://en.wikipedia.org/wiki/Clerihew
http://www.gigglepoetry.com/poetryclass/clerihew.htm
http://thinks.com/words/clerihew.htm
http://www.poetry4kids.com/modules.php?name=Content&pa=showpage&pid=8
http://www.readinga-z.com/poetry/lesson_plans/clerihew/clerihew_print.html
http://theotherpages.org/poems/bentley1.html