Saturday, June 20, 2009

IFFK - 2K8 :: மிச்சம் மீதி படங்கள்.2.

At five in the Afternoon (panj e asr)
Iran-France/105'

Samira MAKHMALBAF - Director
Samira MAKHMALBAF - Screenplay
Mohsen MAKHMALBAF - Screenplay
Ebrahim GHAFORI - Cinematography
Mohammed Reza DAR VISHI - Music
Mohsen MAKHMALBAF - Film Editor

Actors
Agheleh REZAÏE - Noqreh
Abdolgani YOUSEFRAZI - The Father
Razi MOHEBI - The poet
Marzieh AMIRI - The Sister-in-law



'வண்டிக்காரன் மகள்' என்ற தலைப்பு இந்தப்படத்திற்கு பொருத்தம். தாலிபான் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நேடோ படைகள் புகுந்த பின் காபூலில் எடுக்கப்பட்ட முதல் ஆப்கன் படம் இது என்கிறார்கள்.

கதை மிகச் சிறியது.

ஒரு கோச் வண்டிக்காரர். அவர் மகள். அவர் மகன். ஒரு குழந்தை. மருமகள். வண்டி. குதிரை.

மகளுக்கு ஒரு நாள் ஆப்கானிஸ்தான் அதிபராக வர வேண்டும் என்று ஆசை. மகனோ பாகிஸ்தானில் மாட்டிக் கொண்டிருக்கிறான். போர் இப்போது தான் முடிவுக்கு வந்திருப்பதால், எல்லைகள் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே அவன் உள்ளே வர முடியாது. மருமகள் கைக்குழந்தையோடு அவதிப்படுகிறாள். ஷெல்டர்களில் தங்குகிறார்கள். எத்தனையோ கஷ்டப்பட்டும், பாகிஸ்தானிலிருந்து ஒரு செய்தி வருகின்றது. மொத்தமாக உடைந்து போன குடும்பம் அகதியாக வாழ்வதற்கு நல்ல ஒரு இடம் தேடி நடக்கிறார்கள். கொடும் வெயில் பாலைவனத்தைக் கடக்கும் போது, குழந்தை தாங்காமல் விக்கி விக்கித் துடிக்கின்றது. கொண்டு வந்திருந்த தண்ணீர் எல்லாம் தீர்ந்து விட்டதால், அவர்கள் ஒரு முடிவெடுத்து...

படம் பாருங்கள்.

மேலே வர விரும்பும் ஒரு ஆப்கன் பெண்ணின் ஆசைகள், அவை பழமைவாதிகளால் முறித்துப் போடப்படும் வலி, ஒரு சமமற்ற போரின் பின் விளைவுகள், அனலடிக்கும் ஆப்கன் மணல் வெயில்...நம்மையும் அங்கேயே இழுத்துச் சென்றிருக்கின்றது.

முழு படமும் யுட்யூபில் கிடைக்கின்றது. படம் கிடைக்காவிட்டால் முழுக் கதையையும் சொல்லி விமர்சிக்கலாம். படமே இருப்பதால், இனி அனுபவமும், விமர்சனமும் உங்கள் கைகளில்!



Postales de Leningrado (Postcards from Leningrad)
Venezuela/90'/Spanish



'60களில் வெனிசூலாவில் நடந்த இடதுசாரி எழுச்சியை ஒட்டிய படம். கதையை விக்கியிலேயே படிக்கலாம்.

அதீத ரத்தம் தெளிக்கும் காட்சிகள் சில்லறை அனிமேஷன்களாக காட்டப்படுகின்றது. பன்றிக்கறி பிய்த்து பிய்த்து வெட்டப்படுவதும், 1966 புத்தாண்டு நடனங்களும் ஒரு வித கேமிர நுட்பங்களால் தெரிகின்றது. காட்டுக்குள் கொரில்லா குழு நகர்வதும், நகரத்திற்குள் சூப்பர் மார்க்கெட்டில் மகளிர் அணி கொள்ளையடிப்பதும், Teo சைக்கிளில் பறப்பதுமாக இது ஒரு வித்தியாச அனுபவத்தைக் கொடுத்த படம்.

டோரன்ட்டில் இறக்கி வைத்திருக்கிறேன். சனிக்கிழமை இரவுகளில், அடுத்த நாளைப் பற்றிய ஓர் அலட்சியத்துடன், கொட்டமடிக்கும் நண்பர்கள் கூட்டத்துடன் கொண்டாடி பார்ப்பதற்காக!

http://www.postalesdeleningrado.com/ (தளத்தின் பின் இசையைக் கேட்பதை தவற விடாதீர்கள்.)



Persepolis
France-USA/95'

டெஹ்ரான், '78. எட்டு வயது சிறுமி மர்ஜேன் எதிர்கால தேவதூதனாக கனவு கண்டு கொண்டிருக்கிறாள். அவளது முற்போக்கு தந்தையும், தாயும் அவளுக்கு ஊக்கமளிக்கிறார்கள். புரட்சி வருகின்றது. ஷா மன்னராட்சி முடிந்து இஸ்லாமியக் குடியரசாக ஈரான் மாறுகின்றது. பெண்களின் மீதான பழமைவாத அடக்குமுறை மர்ஜேனை வருத்துகிறது. அவளது உறவினர்கள் ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். பள்ளியில் கட்டுப்பெட்டித்தனம் தொடர்கிறது. ஈரான் - ஈராக் போர் தொடங்கி, குண்டுகள் எப்பொழுதும் விழுகின்றன. அவளது துணிச்சல், அவளுக்கு பிரச்னை ஏற்படுத்தி தந்து விடும் என பயந்த பெற்றொர், அவளை ஆஸ்த்ரியாவுக்குப் படிக்க அனுப்புகிறார்கள்.

டீனேஜ் மர்ஜேன் இந்த திடீர் சுதந்திரத்தில் திணறுகிறாள். க்ளப்புகளில் பாடுகிறாள்; ஆடுகிறாள்; நீச்சல் கற்கிறாள்; இரவுகளில் நெடு நேரம் ஊர் சுற்றுகிறாள்; அலட்சிய கல்லூரி மாணவர்களை எதிர்கொள்கிறாள்; பாய் ஃப்ரெண்ட் பிடிக்கிறாள்; அவனோடு கலக்கிறாள்; படிக்கிறாள். முடித்து ஈரான் திரும்புகிறாள்.

ஹோம்சிக்கில் ஈரான் திரும்பினாலும், அவளால் ஈரானில் மனமொத்து வாழ குடியவில்லை. 24 வயதில் அவள் மனதளவில் ஈரான் பெண்ணாக இருந்தாலும், தனது எதிர்கால நன்மையைக் கருதி மனதை கல்லாக்கிக் கொண்டு ப்ரான்ஸுக்கு விமானம் பிடிக்கிறாள்.

இனி அவள் ஈரான் திரும்பப் போவதில்லை.

படம் முழுக்க லைன் ட்ராயிங் வகை அனிமேஷன் மூவியாக உள்ளது. சில செலவு பிடிக்கும் காட்சிகள் அனிமேஷனில் இன்னும் உணர்ச்சிகரமாக சொல்வது வசதி. தியேட்டரில் நிறைய பேர் ரசிக்க முடியாமல் நெளிந்தார்கள். ஆரம்பிக்கும் போது முழுதும் நிரம்பியிருந்த அரங்கம், கொஞ்சம் கொஞ்சமாக நெரிசலிலிருந்து விடுபட்டு, முடிந்து கைதட்டும் போது சில்லறைக் குலுக்கல் போல் கேட்டது.

IFFK - 2K8 :: மிச்சம் மீதி படங்கள்.

நிறைய தொடர்களாக எழுத தொடங்கி அப்படி அப்படியே அந்தரத்தில் திக்கி நிற்கின்றன. ஒவ்வொன்றாக முடித்து விட வேண்டும் என்று ஒரு முடிவு செய்திருக்கிறேன். முதலில் IFFK - 2K8.

சென்ற வருடம் அந்திம மாதத்தில் அனந்தபுரத்தில் 12 சர்வதேச படங்கள் பார்த்தேன். மூன்று படங்கள் பற்றி மட்டும் விளக்கமாக எழுதி மனிதனின் அடிப்படை குணங்களில் ஒன்றான சோம்பேறித்தனத்தால் தாக்கப்பட்டு, நிறுத்தி விட்டேன். எல்லாப் படங்களைப் பற்றியும் ஒன்றாக சொல்லி இதை விரைவாக க்ளோஸ் செய்ய விழைகிறேன்.

சம்பவங்கள் நிறைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகும் எத்தனை காட்சிகள் நினைவில் இருக்கின்றன என்பதையும், அவற்றை மூளை ஆக்ஸியான்களில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதிலும் அப்படைப்புகளின் நிலைத்தன்மை எத்தகையது என்று பார்த்து விடலாம்.

Music Box :

Titles JA'BEYE MUSIGHI(MUSIC BOX)
Main Director FARZAD MOTAMEN
Year 2008
Length 113 Minutes
Countries Iran

Genre Drama Series

Actors RAMBOD JAVAN, ARSALAN GHASEMI, SHAHROKH FORUTANINA, DARIUSH ASADZADEH, NIKI KARIMI

Directors FARZAD MOTAMEN
Director Of Photography ALI LOGHMANI
Composer SAEED SHAHRAM



மலேகி என்பவன் முழுக்க கறுப்பு உடை அணிந்து ஒரு மலை உச்சியில் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனது கார் வாக்கி-டாக்கியில் ஒரு போன்கால் வருகின்றது. 'உடனே மெடிக்கல் ஷாப் முன் செல்'. செல்கிறான்.

அலி 12 வயது சிறுவன். அவன் அம்மா அவனது 2 வயதிலேயே இறந்து விட்டிருக்கிறார்கள். அவனது சர்ஜன் தந்தை மற்றும் வயதான தாத்தாவுடன் வசிக்கிறான். என்ன தான் அப்பா அன்பைப் பொழிந்தாலும், அலி மனம் அம்மாவைக் காண ஏங்குகின்றது. அலி அப்பாவின் மருத்துவமனை வாசலிலேயே மெடிக்கல் ஷாப்பில் பள்ளி விட்டதும் வேலை செய்கிறான்.

சூடாக பிஸ்னஸ் நடந்து கொண்டிருக்கும் போது, எதேச்சையாக வாசலைப் பார்க்க, கறுப்பு உடை கொண்ட ஒருவன் நடந்து வருகிறான். அவன் மேல் மற்றொருவன் மோதுகிறான். மலேகி மெல்ல விலகி மெடிக்கல் ஷாப் நோக்கி நடக்க, அந்த மற்றொருவன் 'தொப்'பென கீழே விழுந்து மயங்கி, இறக்கிறான். அலி அதிர்ச்சியாய்ப் பார்க்கிறான்.

மலேகி ஷாப்பில் ஏதோ விசாரித்து விட்டு, வெளியேறி அவன் காரில் ஏறி செல்லும் போது, அலியை அமைதியாகப் பார்த்து விட்டு விரைகிறான். மலேகியை யாரும் பிடிக்கவில்லை; யாரும் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை.

அலியின் தெருவோர குடை விற்கும் சிறுவ நண்பன், மருத்துவமனையில் இருந்து சரியாகிச் செல்லும் ஒரு சிறு பெண் ஆகியோரைப் பற்றி மலேகி அலியிடம் விசாரித்து விட்டுச் சென்ற சில நொடிகளில் அலி, அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று பார்க்க அவள் மரணம் அடைகின்றாள். அலிக்கு மெல்ல மெல்ல ஒன்று புரிகின்றது. 'மலேகி மரணத்தின் தூதுவன்.'

அலியின் தாத்தா அமைதியாக மலேகியைப் பார்த்து புரிந்து கொண்டு, 'கிளம்பலாம்' என்கிறார். வாசல் வரை சென்றவர் மீண்டும் அறைக்கு வந்து, அலியின் சிறு வயது குழந்தை படத்திற்கு ஒருமுறை முத்தம் கொடுத்து விட்டு, அவர் படித்து கொண்டிருந்த புத்தகத்தில் செருகி வைத்து, மலேகியுடன் வெளியேறுகிறார். மாலையில் அலியும், அவன் அப்பாவும் வீட்டுக்குத் திரும்பும் போது, தாத்தாவின் உடல் அந்த புத்தகத்தை இறுகப் பிடித்துக் கிடக்கின்றது.

அலி, மலேகியை வேண்டிக் கொண்டபடி, மலேகி அவனை ஒரு வித அரை மரணத்திற்கு உள்ளாக்குகிறான். பின் அவன் ஆத்மாவுடன் நகரைத் தாண்டி, வீடுகளைக் கடந்து, வெறும் மரம், செடி, கொடிகளை பின் தள்ளி, வெட்ட வெளிகளில் ஊடுறுவி, எங்கோ ஒரு செறிவான காட்டுப்பகுதிக்குச் சென்று காரை நிறுத்துகிறான்.

'செல். உள்ளே செல். நான் உள்ளே வரக் கூடாது. சீக்கிரம் வந்து விடு.'

அலி உள்ளே செல்கிறான். புகை புகையாய் மிதக்கின்றது. காட்டு ஒலிகள் மெல்ல கேட்கின்றன.

'அலி..!'

அவன் அம்மாவின் குரல். அந்த திசையை நோக்கி ஓடிச் சென்று பார்க்க அவன் அம்மா நின்று கொண்டு இரு கைகளை நீட்டி அழைக்கின்றாள். அலி அழுது கொண்டே அம்மாவைக் கட்டிப் பிடிக்கிறான். அவர்கள் பேசுகிறார்கள். ரொம்ப நேரம் பேசுகிறார்கள்.

கார் ஹார்ன் ஒலி கேட்கின்றது. அம்மா அவனைப் பிரிந்து, டாடா காட்டிக் கொண்டே திரும்பி நடந்து தொலைகிறாள். அலி அழுது கொண்டே வெளியேறி, காரில் அமர்ந்து கொள்ள மலேகி அதே இறுகிய முகத்தோடு கிளப்புகிறான்.

அலி மருத்துவமனையில் உயிர்த்துக் கொண்டு அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறான்.

'அப்பா... அம்மாவைப் பார்த்தேன்..'

மலேகி, மலை உச்சியில் கைகள் கட்டி நின்று கொண்டிருக்க, வாக்கி டாக்கி அழைக்கின்றது.

திரை இருள்கின்றது.

எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அர்சலான் நடிப்பு பிரமாதம். இசை ஒரு வித பயங்கர, அமானுஷ்யத்தன்மை கொண்டதாகவே படம் முழுக்க ஊடுறுவி வருகின்றது. எந்த க்ளிப்பும் கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு தான் ரிலீஸ் ஆகியிருப்பதால், நாளாகும் என்று தெரிகின்றது.

அர்சலான் ப்ளாக் இது : ARSALAN GHASEMI

யாராவது படித்து, புரிந்து சொன்னால் நலம்.

காஞ்சிவரம்

Directed by Priyadarshan
Produced by Shailendra Singh
Written by Priyadarshan
Starring Prakash Raj
Shriya Reddy
Shammu
Music by M. G. Sreekumar
Editing by Arun Kumar
Release date(s) September 12, 2008
Running time 112 min
Country India
Language Tamil

இதன் கதையை விக்கியிலேயே படித்துக் கொள்ளலாம். எனக்குப் பிடித்திருந்தது பழைய காலத்தைக் காட்ட எடுத்துக் கொண்ட முயற்சிகள். பழைய பஸ், கொட்டும் மழை, பஸ் ஜன்னல்களில் துணி விரிப்பு, டீக்கடை பாய்லர், தொப்பிச் சின்னம்... தறிகள்.

தறிகளோடு எனக்கு சம்பந்தம் இருக்கின்றது. காஞ்சிபுரத்தில், ஆரணியில் பட்டுப்புடவைகள் நெய்ய கைகளால் தறியோட்டுவார்கள். எங்கள் ஊரில் ஜமக்காளம் நெய்ய கால்களால் தறி ஓட்டப்படும். பாவு வரிசை மாற்ற கால்களால் 'தடக்..தடக்..' என கட்டை போட்டு மாற்ற மாற்ற, ஒவ்வொரு முறையும் இடையில் ஓடும் நூலை ஒரு கட்டையில் சுற்றி ஒரு முனையிலிருந்து மறு முனைக்குப் பாய்ச்சி, சேர்த்து இறுக்கி 'தடக்', மற்றொரு 'தடக்... தடக்...'.

சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். தறி நெய்பவர்களின் வாழ்க்கை முறையை உணர்ந்திருக்கிறேன். கால்கள் ரத்தம் கட்டிக் கொள்ளும். பஞ்சு மூச்செல்லாம் நிறைந்திருக்கும். ஒவ்வொரு முறை பாவு வரிசை மாறும் சத்தம் அவர்களின் இதயத் துடிப்போடு இசைந்திருக்கும்.

இந்தப்படமும், அதன் முடிவும் என்னையும் கண் கலங்கச் செய்தது என்பதற்கு இந்த மற்றுமொரு காரணமும் இருக்கின்றது. தமிழ்ப்படம் என்ற ஸ்பெஷல் நெருக்கமோ என்னவோ தியேட்டர் நிரம்பி, வாசல்களை எல்லாம் அடைத்துக் கொண்டு பார்த்தார்கள். ப்ரியதர்ஷன், எம்.ஜி.ஸ்ரீகுமார் பேர் வந்த போது பெரிய கைதட்டல்கள்.



Nostalgiya po Budushemu (Longing for the future)
Russia



விக்டரும், அனஸ்டாஸியாவும் கல்லூரிக் காதலர்கள். விக்டர் கொஞ்சம் அப்பாவி மாணவன். இருவரும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டு வரும் போது, முரட்டு சீனியர்கள் தகராறில் இறங்கி அவன் பல்லைப் பேர்க்கிறார்கள். காதலி காப்பாற்றுகிறாள். கல்லூரி கடைசி நாள் பார்ட்டி. அனைவரும் ஜோடி, ஜோடியாக நடனமாடுகிறார்கள். விக்டர் நடனமாடி விட்டு, அழகாக, மிக அழகாக ஒரு பாடல் பாடுகிறான். (என்ன அருமையான பாடல் அது..! வானில் தேடினேன்; பூமியில் தேடினேன்; வானவில்லைக் குடைந்து பார்த்தேன்; பெய்யும் மழையில் நனைந்து பார்த்தேன்; இன்னும் எத்தனை இடங்களில் தேடித் தேடி அலைந்தேன்; நீ இருக்கும் இடம் தேடி வருவேன்..!). அனைவரும் கைதட்ட முத்தமிட்டுக் கொள்கிறார்கள். கொஞ்ச நாட்களில் அவள் வீட்டுக்கு வந்து அவள் அம்மாவிடம் பெண் கேட்பதாகச் சொல்லிப் பிரிகிறான் விக்டர். அவன் தாயைச் சமாதானம் செய்து, அவள் சம்மதம் பெற்று, மகிழ்ச்சியுடன் அனஸ்டாஸியா வீட்டுக்குச் சென்று பார்த்தால்... வீடு காலியாக இருக்கின்றது. பக்கத்து வீட்டு பெண் ஒரு கடிதம் கொடுக்கிறாள். 'விடைபெறுகிறேன். என்னைத் தேடாதே..' என்று அனஸ்டாஸியா எழுதியிருக்கிறாள். அதிர்ச்சியுடன் அழுது கொண்டே போகிறான் விக்டர்.

பல வருடங்கள் கழிகின்றன.

இப்போது விக்டர் ருஷ்யாவின் ஒரு உலோகத் தொழிற்சாலையைத் துவக்கி ஒரு பிஸ்னஸ்மேனாக உயர்ந்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து ஒரு ஒப்பந்த விஷயமாக ஒருவர் வருகிறார். அவருடன் லூட்டி அடிக்கும் விக்டரின் நண்பர். காமெடியாக சில நிகழ்ச்சிகள் போகின்றன. விக்டர் எதிலும் அவ்வளவாக ஈடுபாடு காட்டாமல் ஒரு மேம்போக்காக நடந்து கொள்கிறார். இங்கே ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், நிறுவன பயணமாக விக்டர், அவர் நண்பர், அமெரிக்கர் மூவரும் நியூயார்க் செல்கிறார்கள். அமெரிக்க கம்பெனியில் விக்டருக்கு ஒத்தாசைக்காக ருஷ்ய மொழியும் தெரிந்த ஒரு பெண்ணை நியமிக்கிறார்கள். அவள் விக்டரைப் பார்க்க அவரது அறைக்கு வருகிறாள். விக்டர் நிமிர்ந்து பார்க்கிறார். அவள்... அனஸ்டாஸியா.

விக்டர் சுத்தமான அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். அவள் அனஸ்டாஸியா போலவே இருக்கிறாள். மேல் விவரம் விசாரிக்கும் போது, அவள் பெற்றோர் ருஷ்யர்கள் என்றும், இங்கே செட்டிலாகி விட்டதாகவும் சொல்கிறாள். அவள் அம்மா அனஸ்டாஸியா தான் என்பதை உணர்ந்து கொண்ட விக்டர் இப்பெண் மேல் ஒரு வித பாசத்துக்கு உள்ளாகிறார். வேலை முடிந்தவுடன், அவள் விக்டரை அழைத்துக் கொண்டு சுற்றிக் காட்டுகிறாள். விக்டர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர் நண்பருக்கு, விக்டரின் இந்த திடீர் சந்தோஷக் காரணம் புரியவில்லை.

இந்தப் பெண் அவள் குடும்பத்தில் விக்டரைப் பற்றிச் சொல்கிறாள். அனஸ்டாஸியாவுக்குப் புரிந்து விடுகின்றது, வந்திருப்பது யார் என்று. அவள் கண்ணாடி முன் நின்று நினைத்துப் பார்க்கிறாள்.

கல்லூரி முடிந்தவுடன், ஒரு வலிக்கு அவள் உள்ளாக, மருத்துவர் சோதித்து ஏதோ நோய் என்கிறார். செலவு செய்ய முடியாமல் திகைக்கும் போது, ஒரு பாதிரியார் வந்து தான் செலவு செய்வதாகச் சொல்லி, அவளை அமெரிக்காவிற்கு கூட்டி வந்து, அவளைக் காப்பாற்றி விட்டு, அவளையே மணந்து கொள்கிறார். இந்த நிபந்தனையைப் புரிந்து கொண்ட அனஸ்டாஸியா, விக்டருக்கு ஒரு கடிதம் எழுதி விட்டு பிரிகிறாள்.

இப்போது, விக்டர் ஒரு சப்வேயில் இந்தப்பெண்ணின் கைப்பையைப் பறித்துச் சென்ற ஒரு கும்பலை தன் கராத்தே காட்டி வீழ்த்துகிறார். இவள் ஆச்சரியமடைகிறாள். 'எப்படி கற்றீர்கள்..?' 'கல்லூரியில் என் காதலி முன் என்னை சிலர் அடித்துப் போட்டர்கள். பிறகு இதைக் கற்று கொண்டேன்.'. இந்தப் பெண் விக்டர் மேல் ஈர்ப்படைகிறாள்.

அனஸ்டாஸியா தன் குடும்பத்திடம் வருவது தன் முன்னாள் காதலன் என்று சொல்லி விடுகிறாள். ருஷ்யாவிற்குச் செல்லும் முன் விக்டரை தன் வீட்டுக்கு விருந்துக்கு வற்புறுத்தி அழைத்து வருகிறாள். விருந்தில் ஒருவரையொருவர் கண்டு கொள்கிறார்கள்.

அனஸ்டாஸியா அவள் கணவனோடு கை கோர்த்து நெருக்கமாக அமர்ந்து கொள்ள, அவள் மகள் அவளது பாய் நண்பனுடன் நடனமாட, விக்டர் தனியாக அமர்ந்து கொள்கிறார்.

'விக்டர் நன்றாக கிடார் வாசித்துக் கொண்டே பாடுவார்..' அனஸ்டாஸியா.

அவள் மகள் வற்புறுத்த... விக்டர் பாடத் தொடங்குகிறார்.

'வானில் தேடினேன்; பூமியில் தேடினேன்; வானவில்லைக் குடைந்து பார்த்தேன்; பெய்யும் மழையில் நனைந்து பார்த்தேன்; இன்னும் எத்தனை இடங்களில் தேடித் தேடி அலைந்தேன்; நீ இருக்கும் இடம் தேடி வருவேன்..!'

பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க, திரை இருண்டு, எழுத்துக்கள் மேலேறுகின்றன.

செம மெலோடியான பாடல். யுட்யூபிலும் கிடைக்கவில்லை. தேடிக் கொண்டே இருக்கிரேன். படம் இப்படி ஒரு சோகமான முடிவோடு முடியும் போது, தியேட்டரில் அத்தனை கைதட்டல்கள். எல்லோர் நெஞ்சிலும் இப்படி ஒரு முதல் பூ பூத்திருக்கின்றது. படத்தில் இருவரும் எவ்வளவு அழகு. வயதான விக்டரும் அழகாகவே இருக்கிறார். ஆனால், வயதான அனஸ்டாஸியா.... பார்க்கச் சகிக்கவில்லை. அனஸ்டாஸியா நடிகைக்கே கொஞ்சம் மேக்கப் போட்டிருக்கலாம் என்று தோன்றியது. மற்றபடி அமெரிக்க விருந்தாளியும், விக்டர் நண்பரும் அடிக்கும் காமெடிகள் பின்னால் வரப்போகும் சோகத்திற்குத் தயார்படுத்தும் முரண்கள்.



பிடித்திருந்தது. இள அனஸ்டாஸியாவும் பிடித்திருந்தாள்.

http://www.imdb.com/title/tt1289619/

மொக்ஸ் - 20.JUN.2K9



ருக்குச் செல்வதற்கு ஒவ்வொரு முறையும் வழிகள் மாற்றுவதில் எனக்கு விருப்பம் அதிகம். சில சமயங்களில் இங்கிருந்து கிளம்பி, இரண்டு மணிகளில் எல்லை கடந்து, நாகர்கோயில், நெல்லை, மதுரையில் உதிர்ந்து, பஸ்ஸில் ஈரோடு அடைந்து 5 அல்லது 3-ல் வீட்டை அடைவேன். பிற சமயங்களில் கேரளா உள்ளேயே ஊடுறுவி, கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்ப்ரஸில் சென்று, அங்கே இருக்கும் கனெக்ஷன் பாஸஞ்சரில் கோவையில் இறங்கி, இரண்டரை மணி நேரத்தில் வீட்டுக்கு மறு பஸ் பயணம் செய்வேன். இதில் இனிப்பாய் இருப்பது பாலக்கட்டுப் பயணம்.

அமிர்தா எக்ஸ்ப்ரஸ் நாளின் இறப்பிற்குச் சற்று முன் 23 மணிக்கு அனந்தபுரத்தில் இருந்து கிளம்பும். ஏழு, ஏழேகாலுக்கு பாலக்காட்டை அடையும். திருச்சூர் வரை கூட்டம் அப்பும். பிறகு ஏறக்குறைய வண்டி காலியாகிவிடும். அதிகாலை ஐந்து மணியில் இருந்து ஏழு மணிக்குள் அத்தனை குளிரில் கேரளத்தைத் தாண்டுவது ஓர் அனுபவம்.

கொஞ்சம் மேட்டிலேயே பயணிப்பதால், பனி அப்படி கொள்ளை கொள்ளையாய் வயல்களைத் தழுவியிருக்கும். பொதிப் பொதியாய் மிதக்கும் வெண்புகைகள் கால்களை வந்து நனைக்கும். சோம்பேறித்தனமாய் எழ யோசிக்கும் தொலைதூர கதிரொளிகள் சிலீர் என வானின் பெரும்பரப்புக்குள் நீண்ட விரல்களை நீட்டும். வயல்வெளியின் சிலுசிலு பரப்புக்குள் அத்தனை வெகுகாலையில் ஈரத்துணியை மேலே போட்டு நடப்பாள் ஒரு பெண். கைகாட்டி மரங்கள் இரவு முழுதும் பெய்த குளிரில் பொட்டுப் பொட்டாய் நனைந்திருக்கும். பள்ளி மாணவர்களின் பளிச் சீருடையில் நமது தூக்க வீக்க முகம் அசிங்கமாய்த் தெரிய, அவர்கள் தமக்குள் இளம் பாஷையில் சிரித்துக் கொண்டே வருவார்கள்.

மஞ்சு போர்த்திய வீடுகள், சிம்னிகளிலிருந்து மேல் நோக்கி கசியும் சமையல் புகை, கொத்துக் கொத்தாய் வாழைப் பச்சைகள், நெளிந்து நெளிந்து அலையலையாய் மிதந்து வரும் மலைத்தொடர் வடிவங்கள், கூடவே ஓடி வரும் ஆற்றின் மணற்துகள்கள்.. அழகு..!

சென்ற முறை பாலக்காடு - கோவை பாஸஞ்சரில் சென்ற போது வானம் எங்கிருந்தோ அவ்வளவு மேகங்களை அள்ளிக் கொண்டு வந்திருந்தது. பாலக்காடு, கஞ்சன் கோடு, வாளையார், மதுக்கரை, கோயம்புத்தூர் ஜங்ஷன் ஸ்டேஷன்களில் மட்டும் நின்று நின்று வரும். சரியாக காலையில் இவற்றைக் கடக்கும் போது தான், மூன்று எக்ஸ்ப்ரஸ்கள் எதிரே கடக்க வேண்டி வரும். பாஸஞ்சர் என்ற இந்த தாழ் ஜாதி வண்டி உடனே ஒதுங்கி நிற்கும். அது ஏதாவது ஸ்டேஷனோ இல்லை 'யானைகள் கடக்கும்' போர்ட் நிற்கும் காட்டுப்புறமோ, எங்காகிலும் நின்று, நம் பொறுமையைப் பலமாகச் சோதித்து விட்டு எக்ஸ்ப்ரஸ்கள் கடந்தவுடன் கிளம்பும்.

ஓர் அப்பா, இரண்டு பெண்களைப் பார்த்தேன். பெரியவள் ஜன்னலோரமாக அமர்ந்து அவ்வப்போது வானிலிருந்து தெறிக்கும் சாரல்களை கைகளால் ஏந்திக் கொண்டு ஊதினாள். அவள் உள்ளங்கைகள் அத்தனை வெண்மையாய் இருந்தன. சின்ன சந்தன பொட்டிட்டு இருந்தாள். அழகான சுடி, இடது தோளில் தொங்கிய கண்ணாடிப் பொட்டுக்கள் பதித்த டாப்ஸ், ஹோல்சேல் ரோஸ் நிற உதடுகள், லேசான அலைபாயும் தயக்கப் பார்வைகள் இருந்தாலும், அவள் தங்கை என்பதாலேயே பக்கத்திலிருந்த குட்டிப் பெண் இன்னும் அழகாய்த் தெரிந்தாள்.







ண்பர் செந்தழல் ரவி, உரையாடல் போட்டிக்கு வந்த கதைகள் ஒவ்வொன்றையும் படித்து விமர்சனங்கள் வைத்துள்ளார். கடின உழைப்பைக் கேட்கும் இந்த செயலை மேற்கொண்டதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். எனக்கும் சில விமர்சனங்கள் உள்ளன. போட்டி முடிந்ததும் எழுதுகிறேன்.

மீபத்தில் படித்துக் கொண்டிருக்கும் நூல்களில் 'ஹாத்திம் தாய்' என்ற புத்தகம் பிடித்திருக்கின்றது. இது ஒரு பாரஸீகப் பெருங்கதை. ஹஸன்பானு என்ற இளவரசி ஏழு கேள்விகள் வைக்கிறாள். ஹாத்திம் தாய் என்ற கட்டழகான இளவரசர் அந்த ஏழு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிக் கண்டுபிடித்து பானுவிடம் வந்து சொல்லும் பெருங்கதை. 1 * 8 க்ரவுன் அளவில், 11 புள்ளி எழுத்திலேயே 424 பக்கங்கள் வந்திருக்கின்றன. சுத்தமான சேப்டர் hierarchy கதை.

ஒரு கேள்விக்கு விடை தேடிப் போகிறார். அங்கே ஒருவரைச் சந்திக்கிறார். அவனுக்கு ஒரு கஷ்டம். தயாள தாய் அவன் கஷ்டத்தை நீக்கப் பார்க்கிறார். அதற்கான முயற்சிகளில் இறங்கும் போது ஒரு பாம்பு வந்து, நான்கு கேள்விகளை அள்ளிப் போடுகின்றது. அதில் முதல் கேள்விக்கு விடை காண ஒரு காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஒரு கிழவி அழுகிறாள். அவள் பேரனை ஒரு பூதம் தின்னப் போகிறது. தாய் விட்டு விடுவாரா என்ன? பூதத்தை வெல்ல வழி தேடும் போது வேதாள உலகத்தில் விழுந்து விடுகிறார். அங்கே வேதாள இளவரசி இவர் அழகைக் கண்டு மயங்கி விட, தாய் இளவரசியோடு ஜல்ஸா செய்கிறார். வேதாள அரசனுக்கு கோபம். அதிலிருந்து தப்பிக்க, ஒரு குளிகையைச் சாப்பிட ஒரு கிணற்றுக்குள் மயங்கி எழுகிறார். ஒரு பிசாசு அவர் எதிரில் நிற்கிறது.

இப்படியே போய்க் கொண்டே இருக்கின்றது கதை. ஒரு வாரமாகப் படித்து இப்போது தான் முதல் கேள்விக்கு விடை கண்டுபிடித்திருக்கிறார். இரண்டாவது கேள்விக்கு பயணம் துவங்கி இருக்கிறார். நமது சிம்பிள் கற்பனைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு 'நெக்ஸ்ட்?' என்று கேட்கிறார்கள்.

செம ஜாலியாக படிக்க வேண்டிய கதை இது. இவன் என்ன ஆனான்? அவளுக்கு நோய் சரியானதா? என்றெல்லாம் கவலையே படாமல் கதை செல்லும் போக்கிலேயே போக வேண்டியது தான். முந்தைய ஸீக்வென்ஸ்களை நினைவில் வைத்துக் கொள்ள முயன்றால் அவ்வளவு தான். கிறுகிறுத்து விடும்.

பிரேமா பிரசுரத்தில் (aruram@md2.vsnl.net.in) சேரன் என்பவர் தொகுத்து எழுதியிருக்கிறார். (இவர் எந்த சேரன்?).

65 ரூபாய்க்கு அளவிலா கற்பனைகள்.

பாஞ்சாலி சபதம் எழுதி முடித்தவுடன், மகாகவி பாரதியார் ஒரு சமர்ப்பணமும், முகவுரையும் எழுதியிருக்கிறார்.

சமர்ப்பணம்

தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கும், அவர்களுக்குத் தக்கவாறு காவியங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும் இந்நூலைப் பாத காணிக்கையாய்ச் செலுத்துகிறேன்.

- ஆசிரியன்

முகவுரை

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு - இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன், நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைபடாமலும் நடத்துதல் வேண்டும்.

காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆகையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன். பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக!

...

தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங்கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலிலே தூண்டினாளாதலின் இதன் நடை நம்மவர்க்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன். ஓம் வந்தே மாதரம்!

- சுப்பிரமணிய பாரதி.

ரு சலூன் வெண்பா.

வெட்டும் தலைமேல் வழித்த முகதாடை
தொட்டிட பட்டாய்ப் பளபளக்க - கட்டாயம்
கட்டிங்கோ ஷேவிங்கோ காலையில் வந்தாலோர்
சிட்டிங்கில் சீராகும் பார்.

Sunday, June 14, 2009

புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.



1. ப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். 'துருவனும் குகனும்' என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, 'போலீஸ் செய்தி'க்கு அனுப்பாதீர்கள்.

2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். 'பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்' என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி...

4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். 'உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.' என்று சொல்வதை விட 'துப்பினான்' என்பது மேல்.

6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். 'அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்... இத்தியாத்திக்குப் பதிலாக, 'அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட 'போனான்' என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக 'னான்' என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.

10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.

11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.

***

பக்கங்கள் 118 - 119. தோரணத்து மாவிலைகள். சுஜாதா. விசா பப்ளிகேஷன்ஸ், தி.நகர். 044 - 24342899, 24327696.