Showing posts with label செழுந்தமிழ்.. Show all posts
Showing posts with label செழுந்தமிழ்.. Show all posts

Sunday, February 18, 2018

திருமண வாழ்த்துப் பா.

ண்பர் தமிழ்ப்பறவையின் திருமண நாள் வாழ்த்தாக எழுதியது, வெகு ஆண்டுகளுக்கு  முன். பதிவுக்காக இங்கேயும்.


காலைக் கதிரவன் நாளைத் துவக்கிடும்
வேளை நதிக்கரை நீர்நுரை - காலை
நனைகுளிர் போலும் வரும்தினம் யாவும்
மனையுடன் வாழிய நீர்.

வானில் நகர்மதி நோக்கும் மலர்ந்திடும்
ஊனில் வளர்மதி ஊக்கிடும் - தேனில்
கரையாச் சுவையுறு காதலைக் கண்டு
உரையா அடைந்திடும் நாண்.

கீழ்வான் உதித்தொளி கீறிய செவ்வரி
மேல்வான் உதிரொளி தீட்டுதல் - போல்வான்
தருநிழல் தாங்கும் தவப்பெண் அவளின்
வருங்கழல் வாங்கினன் வாழ்வு.
 

(வேறு)

வாயில் இருபுறம் வாழைப் பசுமரம்
வாழ்த்த வரும்பல வாலிபர் நங்கையர்
தாயின் கரம்பிடி தம்பியர் தங்கையர்
தந்தையின் தோளது தாங்கும் மழலையர்
பாயில் சுருட்டிய பஞ்சணைப் போர்வைகள்
பால்நிறைப் பாத்திரம் பச்சைக் கறிகாய்
 வேயின் குழலொளி வேனில் நிழலென
வீதியில் எங்கும் விளங்கும் திருநாள்.

குங்குமம் பன்னீர் குழைத்திட சந்தனம்
மங்களம் பூச மணந்திடும் மஞ்சளும்
திங்களைப் பூட்டிய தேங்காய் இருகனி
தீராப் புகைசூழ் திகழ்மண பத்திகள்
அங்கம் முழுதும் அணிந்தது புன்னகை
அன்பின் அழகின் அரும்புகள் கைகளை
தங்கும் வணங்கும் தவறா தனைவரும்
தானும் இணங்கித் தலையை அசைப்பர்.

வேதமுரை ஞானியரும் வேள்வியிலே தீவளர்ப்பர்
வேண்டியவர் சூழநின்று வாழ்த்திநலம் கூறிடுவர்
நாதமுரை நாயனமும் நல்லிசையின் மேளவொலி
நாற்றிசையும் கேட்டிடவே நல்லவரும் வாழ்த்திடுவர்
பாதம்வரைத் தேடுவரின் பால்நிலவை நாடுவரின்
பாதியுடல் தேவிகொண்ட பைரவரின் ஆசியுடன்
ஏதுகுறை யாதுமின்றி எல்லாநல் செல்வங்கள்
ஏந்திநின்று லட்சுமியும் ராஜனும் வாழியவே!

ஆண்டவர் வெண்பாக்கள்.

ணிணியைச் சுத்தம் செய்து கொண்டிருக்கையில் கடவுள்களைப் பற்றி எழுதிய சில வெண்பாக்கள் கிடைத்தன. ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதியவை. தொலைந்து விடாமல் இருக்க, இங்கே பதிந்து விடுகிறேன்.

பிள்ளையார் பா:

தொந்தி பெருத்தவனே தின்றுகி டக்கமுச்
சந்தியில் சாய்ந்து சரிந்தென - குந்தியுடல்
உந்தியிலே பானை உளமுகமோ ஆனைநீ
எந்திரிக்க ஆகும் யுகம்.

முந்திவரும் மூத்தோனே! முன்னிற்கும் முற்றருளே!
தொந்திபெரும் தோழமையே! தொல்லெழிலே! - தந்திடுவாய்க்
கந்தனுக்குக் காதலிபோல் காவியமாய்ச் சொல்லாட
வந்தருளை வாரித்தா நீ.

கந்தன் பா:

வள்ளியோ பக்கத்தில் வெண்களிறு இந்திரன்
பிள்ளையோ வெட்கத்தில் பின்பிறந்த - கிள்ளையே,
கோலமயில் கொண்டுமா கோரிபூ சுற்றிய
பாலமுரு கன்பே ருனது.

அனுமன் பா:

வாலொடு வந்தனை வானப்பூ நாடினை
மாலொடு மங்கையும் மாரிலே - நாலொடு
ஒன்றினை நம்பியின் நாமமதை நாவிலே
என்றுமே சொல்லுவா ராம்.

சிவன் பா:

நீறணிந்த நெற்றியே நீரறிந்த உச்சியே
தாரணிந்த தோளினாய்த் தாங்காழிச் - சாரறுந்திக்
கண்டநிறம் கார்நீலம் கொண்டுயர் கோனேமுன்
தண்டமிடத் தாரும் அருள்.

Friday, January 13, 2017

பொங்கல் வெண்பா.

'கரம் வெண்பா அரங்கம்'  ஃபேஸ்புக்கில் முதன்முறையாகப் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெண்பா இயற்றும் போட்டியை அறிவித்தது.
அதற்கு எழுதிய வெண்பாக்கள் ::

முதல்வன் துதி!
**********
முந்திவரும் மூத்தோனே! முன்னிற்கும் முற்றருளே!
தொந்திபெரும் தோழமையே! தொல்லெழிலே! - தந்திடுவாய்க்
கந்தனுக்குக் காதலிபோல் காவியமாய்ச் சொல்லாட
வந்தருளை வாரித்தா நீ.

கலைமகள் காப்பு.
************
வெண்கமல வேதவல்லி! நல்வீணை நாதமல்லி!
பெண்ணுருவில் பேரறிவே! பெற்றுனைநான் - எண்ணியசொல்
இங்கிவனே சொல்வதன்முன் இன்றென்று மெப்பொழுதுந்
தங்கிடுவாய்த் தாயேயென் னுள்.

குரு வணக்கம்.
**********
எங்குமிருப் பேரொலியை எண்ணென்றும் சொல்லென்றும்
எங்களுக்குக் கற்பிக்கும் எல்லோர்க்கும் - எங்கெங்கும்
தாழ்பணிந்துக் கீழமர்ந்துத் தானிறங்கிக் கும்பிட்டால்
தாழ்வில்லை வாழ்வினிலே பார்.

கண்ணன் முத்தம்.
****************
மதுரநாத வேய்ங்குழல் மாலைநேரக் காற்றில்
மதுக்குடம் வீழ்ந்த எறும்பா - யதுவுமூறித்
தேனாடும் மாய்வது போலாகும் காதலி
நானாடும் கண்ணன் இதழ்.


பழம்பொருள் அகற்று நாள்.
******************
இல்லத்தின் உள்நிறைத் தூசடைத் தொல்பொருள்
உள்ளத்தின் உள்ளுறைத் துர்க்குணங்கள் - வெள்ளத்
தழுக்கென நீங்க புதுப்பொருள் தேங்க
செழுந்தீ துடிக்கின்ற நாள்.

தைத்திருநாள்.
*********
வானிலிருள் போகுமுன்னே வீசுபனி தீருமுன்னே
கேணிநீரைச் சேந்தியெடுத் தூற்றிமேலுன் - மேனிமுழு
நீராட்டிப் புத்தாடைத் தானணிந்துப் பெற்றோரைப்
பாராட்டிப் பாதத்தில் சேர்.

தெய்வந் தொழுது மலர்தூவிக் கும்பிட்டுப்
பெய்கப் பெறுக திருவாழ்த்து - செய்க
புதுப்பானை செங்கரும்பு பொன்னரிசி வெல்லம்
எதுவேண்டு மென்றறிந் தால்.

கதிருக்குத் தீகாட்டி வெம்பானை நீரில்
கதிரள்ளி இட்டுக் கலக்கி - அதிசுவை
எங்கும் பரவ இனிப்பிட்டுக் கூவுக
பொங்கலோ பொங்கல் என.

கீழ்வானில் செவ்வாடை மேலுறையும் வெண்ணிலவு
தாழ்வாரப் பூவாடை தாவணிப்பூ - வாழ்வூறும்
பொற்பானைப் பொங்கலிட செங்கரும்புச் சாறுடனே
நற்பாடல் கூவிக் களி.

நற்சொல் வளருதல் நண்பர்க்கும் சொல்வதால்
நற்பேர் வருதலோ உற்றாரால் - உற்றநற்
பொங்கலைப் புத்துணவை எல்லோர்க்கும் தந்திட
பொங்குமாம் இன்பமே நாள்.

அன்னைக்கைப் பொங்கலில் அக்காக்கைச் சட்னியில்
கன்னல்நீர்ச் செங்கரும்பில் சேற்றுக்கை - நன்றாய்ச்
சுவைத்து மகிழ்ந்து இனிப்பூறுஞ் சொல்லால்
அவையில் இயம்பு "நலம்!"

கரும்பைக் கடித்து வழிசாற்றை உண்டு
அரும்பும் அனைவரோடும் அன்னைப் - பெருமூத்தோர்
சேர்த்து உரையாடு! பேசு மகிழ்வோடு!
தீர்த்து கசப்பை மற.

வீதியெலாம் கொண்டாட்டம் ஊரிலெலாம் உற்சாகம்
ஆதிநாள் ஆர்ப்பாட்டம் ஆட்டத்தில் - மோதிநீ
சேர்ந்தாடு வென்றாடு தோற்றாடு வெள்ளமாய்
வேர்த்தாடு ஆண்டிலிந் நாள்.

ஏறு தழுவுதல்
**********
துடுக்கான பிள்ளையைத் தாமடக்கல் போலே
விடுக்கின்ற காளையரை வீழா - தடுத்திடும்
பாய்வீரம் கொண்டு தழுவி அணைத்துப்பின்
சேய்போலே கட்டியணை வோம்.

Thursday, December 22, 2016

நீலாம்பல் நெடுமலர்.8.



மேற்கண்ட படத்திற்குத் தொடர்பாக 'படத்திற்கு வெண்பா படை' என்று கேட்கப்பட்டிருக்க, எழுதியவை கீழே.

ஒருநதியில் ஓடிடும் ஓடத்தில் நாமே
ஒருபுறம் ஓட்டை எனினும் - வருந்தா
தெனக்கென்ன வென்றிருப்பின் மூழ்கி மரித்தல்
அனைவர்க்கும் ஆமே அறி.

இருவர் உழைக்க ஒருவர் சிரிக்க
இருநிலை ஏனோ இயம்பின் - வருத்தம்
வருமே வருநிலை யாவர்க்கு மன்றோ
வருமுன் உணர்தல் நலம்

நீரள்ளி நீரள்ளி நீரிறைக்கும் வாளியில்
நீரறியா நீர்வழி உண்டாயின் - நீரது
நீங்காது நீந்துவோர் நின்றிட நீந்தாதோர்
நீங்குவர் நீத்தார் என.

 படகில் புகுநீர் மெதுவாய்க் கவிழ்க்கும்
உடனே கவனித்தல் நன்றாம் - கடமையோ
என்றிருப்பின் கண்டோரும் காணோரும் ஆவாரே
இன்றிருப்பர் நாளையோ இல்.

மேலே அமர்தல் சுகமே என்றாலும்
கீழே உழைப்பவர் நீரிலே - வாழேன்
எனவமைதல் என்றும் புகழ்.

வடத்திற்குத் தேர்போலே வாழ்வுக்கு நீரே
தடத்திற்குத் தார்போலே தாழ்வுக்குச் சோம்பல்
குடத்திற்குள் சிற்றலையாய்த் தந்தேன் உமது
படத்திற்கு வெண்பாப் படை.

Tuesday, December 20, 2016

நீலாம்பல் நெடுமலர்.7.

'வியத்தகு வெண்பா விருந்து' என்ற ஈற்றடிக்கு எழுதியது.

ருவிழி துள்ளும் துவளும் துடிக்கும்
கருவிழி சொல்லும் குழற்றும் பிதற்றும்
இருகரம் தீண்டும் தழுவும் தடவும்
இருபுறம் கேட்கும் கொடுக்கும் பிடிக்கும்
இருமார்கள் வேண்டும் திமுறும் குமுறும்
இருகூர்மை கொல்லும் குழையும் குவியும்
இருகால்கள் தாங்கும் தடுக்கும் தவழும்
இருந்தாழ்கள் வாங்கும் வருடும் வணங்கும்
இருப்பாளே என்றும் குறளடி தேனாய்
இறுக்கும் சிவந்த இதழ்.

கண்வழி அன்பென என்மீது சிந்தடி
முன்வழி பெண்ணென மெய்மீது சிந்தடி
சொல்வழி செல்வதைச் சொல்லுமுன் சிந்தடி
வில்விழி கொல்வதை நீராலே சிந்தடி
கைவழிக் காதலைக் கண்டதும் சிந்தடி
தையலின் மோகமே தைத்தபின் சிந்தடி
கள்ளுள மாரினைக் கவ்வுமுன் சிந்தடி
உள்ளுளப் பிள்ளையை உண்மையாய்ச் சிந்தடி
மெல்லுணர் வாழ்விலே மெய்யெனச் சிந்தடி
மெல்லிடை ஆள்வதை மெத்தைமேல் சிந்தடி
கள்ளியே கள்வனைக் காத்தபின் சிந்தடி
கள்வனோ சென்றபின் நீர்.

நெய்யகல் தீமுகம் நீலாம்பல் தேன்மலர்
பொய்யகல் தீஞ்சொல் புகழுடை பொன்தளிர்
மெய்யுணர் மெல்லுடல் மேற்றிசை மென்னொளி
கையனல் கொல்மணம் கள்ளிதழ் முள்தனம்
வேல்விழி கூர்முடி நீள்விரல் நெற்கதிர்
பால்நிறம் பன்னீர்த் துளிகுரல் வான்குளிர்
ஆலிடை நெய்த்தொடை அல்குலை ஆள்பவன்
கோலின் அளவடி நீ.

இயங்கிடும் போதுகளில் இன்மைக் கணத்தில்
முயங்கிடும் முன்மாலைப் பின்னால் - தயங்கா
மயக்குறு மங்கைநீ மன்னன் படிக்கும்
வியத்தகு வெண்பா விருந்து.


டியும் முடியும் ஒரே சொல் கொண்டு அமையும் குறள் வெண்பாக்கள்.

முயலாமை முந்திய வித்தை அறிவீர்
தயங்கினால் நீயே முயல்.

கிழித்துக் களம்படா நீங்கல் மறவர்
பழிப்பினும் வீரர்க் கிழி.

கண்ணேநீ என்றால் இமைப்பின் மறைவனோ
என்றாள் அவளுமென் கண்.

தொடவாநான் என்றாய் தொடுவது போதா
படவாநீ கூர்வில் தொடு.

மதுரமே உன்சொல் உதிருமே உண்ணா
அதரமே தேக்கும் மது.

Saturday, December 10, 2016

நீலாம்பல் நெடுமலர்.6.

ன்பமாய் வெண்பா எழுது என்ற ஈற்றடிக்கு:

எரிகனல் எம்ப எழுந்தழல் உண்ணும்
கரியுடல் எங்கிலும் கூற்று - வரும்வரை
அன்பரே, அன்றிலை இன்றிலை அன்றிலின்
இன்பமாய் வெண்பா எழுது.

ழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு:

கூரை புதுக்கிக் குளிர்மண் குவித்திட்டு
காரைத் தரையில் களிமண் பரப்பிட்டு
ஊரை அழைத்து உவப்பின் விருந்திட்டு
மாரை நிமிர்த்தி மலர்ந்த மனையினைச்
சாரை அரவென சீறிடும் - கோரப்பல்
பாழலை பாய்ந்திறங்கிப் பாழாக்கல் போலான
ஊழலை ஒப்பலாமோ சொல்.

ன்னடம், கன்னடர் என்பதே வெறுப்பு என்றவருக்குப் பதில்:

வழியென்ன செய்யும் விடமுள் விளையின்
கழியென்ன செய்யும் களவோர் பிடிப்பின்
விழியென்ன செய்யும் விரலால் குடையின்
மொழியென்ன செய்யும் மொழிந்தார்ப் பிழைப்பின்.

கழியால் கலயத்தைத் தாக்கி உடைத்தால்
பழிப்பீரா பாலைப் பகர்.

தேன்நிறைக் கூட்டினைத் தேடியே போவோரும்
தேனீயைக் கண்டதும் தேங்கியே நிற்பரோ
ஊன்நிறை உண்டாட்டில் அல்லதை நீக்கியே
உள்ளதை உண்ணுவோர் நாம்.

தன்மொழி தின்போன் பிறமொழி தீண்டானா
என்மொழி மென்மொழி உன்மொழி - வன்மொழி
என்பானா எம்மொழி என்றாலும் எச்சுவை
என்றாலும் சொட்டிடும் கள்.

பிழைப்பிற்குக் கற்றதோ பின்வந்தோர் சொல்லை
உழைப்பிற்குக் கற்றல் கணிமென் மொழியை
களைப்பிற்கு உள்ளதோ அன்னை மொழியே
களிப்பிற்குக் கற்போம் பிற.

கற்கையில் தோன்றிடும் கன்னடம் கற்கண்டு
பொற்கரம் சூடிய பொன்வளை - பெற்றவள்
நந்தமிழ் பெற்றதனால் சிற்றன்னை ஆகிய
பந்தமோ பாகின் சுவை.

Wednesday, November 30, 2016

நீலாம்பல் நெடுமலர்.5.


செம்மண்ணைச் சேறாக்கி வண்டல்மண் சீராக்கி
தம்முடலில் தார்ப்பாய்ச்சித் தானுழைக்கும் - பெம்மானே,

உம்முடனே கூடவரும் உம்முயிரே போலான
வெம்புனலை ஊற்றெடுக்கும் வெள்ளெருது - அம்மானே,

ஏரோட்டி எத்தனையோ ஏற்றத்தில் நீராட்டி
வேரோட்ட வேர்வையில் வெந்தவும் - போராட்ட

வாழ்விதிலே கண்டதென்ன கொண்டதென்ன உண்டதென்ன
தாழ்நிலையில் நின்றதென்ன வென்றதென்ன சென்றதென்ன

குப்பைகள் கோனாகும் உப்புத்தாள் ஊராளும்
இப்பொழுதில் இட்டதெல்லாம் தொட்டதெல்லாம் காய

நிழலுண்டா நீரமரத் துன்பம்போய் இன்ப
விழவுண்டா வீணம்போய் வீரர்போல் உள்ளத்
தழலுண்டா தன்னையே தானறியா வாழும்
விழலான நெஞ்சுள் விழலாகா தாசொல்
உழவின்றி உய்யா துலகு.


ற்றிலே நீரிலை வானிலே காரிலை
சேற்றிலே பூவிலை ஈரமிலை - காற்றில்
கழலிணை வைத்து மழைதேவி வாராய்
உழவின்றி உய்யா துலகு.


ழமுறை நீக்கு; புதுமுறை நோக்கு;
கழனியைக் காத்துக் கதிரை முழுதெடு;
புண்ணாக்கு சேர்த்துப் புதுப்பால் மணநுகர்;
மண்ணாக்கும் பொன்னின் மதிப்பை உயர்த்து;

வெளிவாங்கல் குன்றிட உள்விளைச்சல் ஏற்று;
கழிச்சலை மீள்பயன்செய்;
வீணை சலிசெய்;
விழவன்று கூறு கதிரவனே நன்றி;
உழவின்றி உய்யா துலகு.


காஞ்சுபோச்சு எச்சயெல்லாம் தீஞ்சுபோச்சு பச்சயெல்லாம்
ஓஞ்சுபோயி மிச்சமுள்ள ஒத்தசொட்டும் - மூஞ்சுபோயி

வாடுதையா வந்தசெடி நோகுதையா வெச்சமனம்
மூடுபனி முந்துதையா - தேடும்
மழராசா வாரோணும் மத்தவனும் சொல்ற
உழவின்றி உய்யா துலகு.

பிழையாகச் செய்க; பிசிறின்றி நெய்க;
மழையாகப் பெய்க; மயங்கித் - தழைந்து
முழவொலி முற்ற முயங்கிப் புணரும்
உழவின்றி உய்யா துலகு.

Monday, November 28, 2016

நீலாம்பல் நெடுமலர்.4.

போதுமே என்கிறாய் போதுமா என்கிறேன்
வேண்டாமே என்கிறாய் வேண்டிய மட்டும்
பொறுமையாய் என்கிறாய் போதையே என்கிறேன்
போகட்டும் என்கிறாய் போகாதே என்றால்
இருக்கிறேன் என்கிறாய் போல்.

வருகிறாய் வந்தபின் வேனிலில் நீர்போல்
தருகிறாய் தண்மைக் கருணை - கருக்கலில்
பொற்கதிர் போலநீ தோன்றிடும் வேளையில்
சொற்களைத் தேடுவேன் நான்.

அழகே அமுதே அணியே அருளே
தழலே தனியே வருக - சுழலே
சுகமே தருமே முழுமை முகமே
அகமே அணைப்பின் இதம்.

வானமே கானமே நாணமேன் நேரிலே
பானமே பௌர்ணமி மேகமே - தானமே
தந்திடும் முத்தமே தங்கமே தாமரை
முந்திட முன்வரும் நாம்.

கடல்சூழ் கியூபா கடமைசூழ் கோவாய்
திடம்சூழ் திறத்தில் வலியை - இடத்தின்
இடம்நிறுத்தி எல்லார்க்கும் எல்லாமும் என்றார்
தடம்சூழ் நடப்பார் தவறாது வாழ்த்தும்
பிடல்காஸ் டிரோவைப் புகழ்.

மொட்டாகிப் பூவாகிப் பிஞ்சாகிக் காயாகி
எட்டாத செங்கனியாய் காயாகும் - கிட்டாத
தென்றான தேதுமில்லை நில்லாமல் எய்தாலே
வென்றாக வேண்டுங்கூர் வில்.

Thursday, November 24, 2016

நீலாம்பல் நெடுமலர்.3.


ன்னிசைச் சிந்தியல் வெண்பா::

மாதொரு பாகனும் மால்திரு மார்பனும்
தூதொரு கண்ணனைக் கேட்டது “எப்படி?”
“வேய்ங்குழல் வித்தை!” சிரிப்பு.

நேற்று முகில்கொண்டோம் இன்று மழைகொண்டோம்
ஊற்றுடல் தின்றோம் உதிரருசி ஓநாயைக்
கொண்ட விரல்கள் நமது.

மொட்டாய் மலராகி மெட்டாய் இசையாகி
தொட்டாய் விழைவாகிச் சிட்டாய் விரைதலில்
நட்டாய், அடைந்தேன் நலன்.

வாசமலர் வீசிடு வர்ணமஞ்சள் பூசிடு
நேசமொழி பேசிடு நெஞ்சில் முகிழ்த்த
நினைவெலாம் நின்றெழெட் டும்.

எடுக்கையில் கொண்டது எண்ணிய ஒன்றே
தொடுக்கையில் சென்றது ஒன்றே பலவாய்
விடுக்கையில் பல்லா யிரம்.


நேரிசைச் சிந்தியல் வெண்பா::

வாட்டுதல் உன்னிருப்பு வன்கனலோ உன்னின்மை
மூட்டுதல் உன்விழிகள் முட்சரம் பூட்டுவதோ
வேட்டுவனை வெல்லும் விலங்கு.

ஆழ்ந்த ஒருபார்வை வீசினாய் ஆண்டுபல
வாழ்ந்தது போன்ற நினைவினில் - போழ்ந்தாய்
மனதை உனதாக் கியே.

உலாவும் இடமெலாம் உன்முகம் எண்ணம்
துழாவும் பொழுதெலாம் உன்சொல் - விழாதே,
விழுந்தாய் மனமே விழி.

தொட்டணை தூறும் உடற்கேணி மேனியைப்
பட்டணை பெண்ணினை அஞ்சுதல் - விட்டணை
வில்லவன் தேரில் விரைந்து.

தந்தது புன்னகை கொண்டது காதலை
உந்தியது சொல்லென உன்னிடம்  - முந்தியது
”பஸ்பாஸ் புதுப்பிச்சாச் சா?”


Monday, February 02, 2015

வாழ்த்து.


ளியவர்கள் அவர்கள் எளியவர்கள் என்பதாலேயே எப்போதும் பெருங்கூட்டத்துடன் இணைந்து செயல்படுவார்கள். அவ்வாறு இணைதலுக்குப் பின் தங்களது சுயநலங்களைப் போர்த்தி வைத்துக் கூச்சலிடுவார்கள். அவர்களுடைய இணைவு, சூதாட்டத்துக் காய்களின் இணைவு ஒவ்வொரு நகர்த்தலுக்கும் மாறிக் கொண்டே இருப்பது போல் தெளிவாகத் தெரியும். கண்கள் வழியில் விரைந்து கணிக்கத் தெரிந்தவன், கணிக்கக் கற்றவன் அடுத்த நான்கு வெவ்வேறு அமைப்புகள் எவ்வாறு இருக்கும் என்று உருவாக்கிக் கொண்டே இருப்பான்.

வலுத்தவர்கள் எப்போதும் தனித்தவர்கள். அவர்களுக்குள்ளும் கூட்டங்களில் அவ்வப்போது கூடிக் களித்திருந்தாலும், அவர்களுடைய இணைவு திருவிழாக் கூட்டத்தில் நெரிசலிடும் மக்களைப் போல, ஒவ்வொரு நகர்வுக்கும் வேறுபாடே தெரியாது. ஆனாலும் அங்கும் ஒரு கணத்தில் இருந்த தொடர்பு, மறு கணத்தில் வேறொன்றாகி இருக்கும். அந்த வேறுபாட்டை அளக்கத் தெரிந்தவன், அளக்கக் கற்றவன் ஒவ்வொரு உடலும் எந்த கணத்தில் எங்கு இருந்தது, அடுத்த நான்கு கணங்களில் எங்கு இருக்கும் என்று உருவகித்துக் கொண்டே இருப்பான்.

வலுத்தவர்கள் எளியவர்களைத் தம் விருப்பங்களுக்கேற்பவும் வலிமைக்கேற்பவும் அணைத்தும் அகற்றியும் விளையாடிக் கொள்ளுதலே விழைவு. எளியவர்கள் வலுத்தவர்களைத் தம் தேவைக்கேற்பவும் எண்ணிக்கைக்கேற்பவும் நெருங்கியும் நெருக்கியும் விளையாடிக் கொள்ளுதலே சூழ்.

எளியவர்கள் வலுத்தவர்களாக ஆகுந்தோறும் தாங்கள் தனித்தவர்கள் என்று எண்ணத் தொடங்குவர். அதுவரை தாம் ஆடிவந்த பகடை ஆட்டத்தில் இப்போது தாம் எதிர்ப் பக்கத்தில் அமர்ந்திருப்பதை அவர்கள் அறியும் முன்னம், அவர்களை ஆட்டத்திலிருந்து விலக்கி விடுபவனே தொடர்ந்து அந்த ஆட்டத்தின் கள நிர்ணயிப்பாளனாகவும் முடிவிலாது நடக்கும் விதி மாறுதல்களில் மாறாதிருப்பவனாகவும் முடிவை நெருங்குந்தோறும் திசைகளைத் திருப்பி விடுபவனாகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறான்.

இந்த அலகிலா ஆடலின் நாயகன் முக்கண்ணனை வணங்குவோம்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”


”காற்றின் ருசி ஓசையில் இருக்கின்றது. ஓசையைக் கேட்கும் மனமில்லாதவர்க்கு அந்த ருசி கிடைப்பதில்லை. ஓரிடத்திலிருந்து அள்ளி வரும் ஓசையை ருசிப்பவர் நெஞ்சிலே இறக்கி வைத்து விட்டு காற்று விடுபடுகின்றது. பின் அந்த ஓசை அங்கே வித்தாகி முளைத்துக் கிளைத்துப் பேருரு கொண்டு விருட்சமாகின்றது.

ஓசையின் சுவை கேட்பவரின் சொல்லிலே இருக்கின்றது. விதைந்த ஓசை வெளி வரும் சொல்லில் சுவைத்தவரின் இச்சை வெளியாகின்றது. அவ்விச்சை தன்னைக் காட்டிக் கொள்வதன் அகங்காரம் வழியாக மேலும் ஓருரு கொண்டு காற்றில் மிதந்து மற்றொருவரை அடைகின்றது.

ஓசையற்ற பெரும்பாழில் அமைதியின் கூடு உள்ளது. அங்கே தன்னைச் சுருட்டித் தானும் துயில்கின்ற நீலநீர்வண்ணனை வாழ்த்துவோம்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”


“யாதுமற்ற சூன்யவெளி தன்னைத் தான் அறிதல் பொருட்டுத் தான் என்பதை உணர்ந்தது. உடனே தான் அல்லாத பிறன் என்பதைப் பிரித்தது. தானே தானும் தானே பிறனும் என்பதை உணர்தலுக்குள் இருந்த இடைவெளி காலம் என்று உண்டானது. காலம் தொடர்ந்து வளரத் தொடங்கியது. இரண்டு நிலைகளுக்குமான இடைவெளி அப்படியே விரிந்தது. அங்கே உருவான பிறனின் தான் தன் முதல் உதிர்ச் சொல்லாக ‘அம்மா’ என்று அழைத்தது. தான் தான் தன் தாய் என்பதை நினைவில் நிறுத்தியது. இரண்டுக்கும் இடையேயான விரிதல் மேலும் மேலும் நிகழ்ந்தது.

பிறன் மீண்டும் தன்னை அடைதல் பொருட்டு தான், தீரா மார்புகளாலும், குன்றா விழிகளாலும், திரும்பா விரல்களாலும், சுழிக்கா பாதங்களாலும் தன்னை ஆக்கிக் கொண்டது. காலத்தின் இடையே நின்ற ’காளி’ என்றானது. தாமரை ஒரு கரம் தாங்க, சூலம் மறு கரம் கொள்ள, அபயதரிசனம் ஒரு கரம் காட்ட, அருள் பொழிதலை ஒரு கரம் செய்ய அவள் மாவுரு கொண்டாள். அவள் நின்ற கோலம் விண்ணை நிறைத்தது. அவள அமர்ந்த கோலம் மண்ணை நிறைத்தது.

அவள் காமரூபிணி; செளந்தர்யசுந்தரி; அவள் காலவாஹினி; தூயஸ்வரமோஹினி; நிர்வாணபயங்கரி. அந்த அன்னையைத் துதிப்போம்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”


”மண்ணில் நெருப்பு ஒன்று தன்னை நிறுவிக் கொள்ள கரணியொன்று தேவைப்படுகின்றது. அது விழுந்த பிணமோ, வீழ்ந்த மனமோ, சரிந்த நாடோ, உளுத்த மரமோ. ஆனால் தன்னைத் தானே அறிந்து தானே சுழன்று தன்னில் மூழ்கி தன்னில் நிறைந்து பிறிதொன்றின் துணையொன்றும் கொள்ளாமல் எரிந்து கொண்டிருப்பவன் கதிரவன்.

மண்ணில் நீர் ஒன்று தன்னை நிறைத்துக் கொள்ள வழியொன்று தேவைப்படுகின்றது. அது படர்ந்த நதிப்பெருக்கோ, சுழித்த அருவிச்சாரலோ, திரண்ட குளமோ, உவர்ந்த பேராழியோ. ஆனால் தன்னைக் குறுக்கித் தன்னில் குளிர்ந்து தன்னைச் சுவைத்து பாதையொன்றின் தடமில்லாமல் நகர்ந்து கொண்டிருப்பவன் முகிலன்.

தன்மயக் குளிரும் தன் மையத் தகிப்பும் ஒன்றையொன்று சூழ்ந்து ஒன்றில் ஒன்றை நிரப்பி கொதிப்பும் தணப்பும் இணைந்து புணர்ந்த புகைமண்டலமே தனக்கென்று உருவற்ற உருவின் உயிர்களாய்த் தன்னைப் பங்கிட்டு தானும் தீராமல் மிதந்து கொண்டிருப்பவன் வாயு.

இம்மூன்றையும் சுமந்து அனைத்து களியாட்டங்களையும் அனுமதித்துத் தன்னில் நிகழ்த் தொடர்களைக் கண்ணுற்று நிகழ்பவன் பூமி.

பல்லாயிரம் கோடி கதிரவன்கள், பலநூறு கோடி முகிலன்களைப் புசித்துப் பிரித்துச் சேர்த்து வர்ணங்களால் இருளை நிரப்பி, ஆக்கியும் அழித்தும் அழித்தவற்றை ஆக்கியும் ஆக்கியவற்றை நிர்மூலமாக்கியும் நில்லா வெளியில் இல்லாதிருப்பவன் விண்.

பிசைந்து வைத்த கல் மேலே தெய்வங்கள் குடியேறுகின்றன. இவ்வைந்து பேராற்றல்களும் கலந்த தம் பல்கோடி வகைமுறைகளில் மீச்சில துளிகளான நம்மில் இவ்வைவரும் தத்தம் போக்கில் தம்மை நிகழ்த்திக் கொள்ளட்டும்.”

“ஓம்..! ஓம்...! ஓம்...!”

Thursday, June 03, 2010

கவி வரி கள்.



1.தணப்பு போதலும் தாயிடம் நோதலும்
கணப்பு சேர்தலும் காரிருள் காய்தலும்
வனப்பு தீர்தலும் வாலிபக் காதலி
நினைப்பில் நேருதடி மேனியும் வாடுதடி!

அணைத்து ஆதுரம் ஆவலாய்ப் பேசிட
கனைத்துக் காலொலித்துக் காதுகள் கூசிடச்
சினைத்த வார்த்தைகள் சீண்டலாய் வாரிட
நனைத்த நாணத்தை நெஞ்சில்சேர் ஊறிட!

முத்தம் மோதகம்; மோதிய போதெலாம்
யுத்தம் தீராது. யாவுமே நீகொடு.
சித்தம் நீயுள சீர்மிகு சீதனம்
பித்தம் பீறிடும் பீடுடைத் தேவியால்.

2.குளிர்நிலா கருமுகில் குருவிக் கூக்குரல்
தளிரிலை விழுமழை தழுவும் வானெழில்
களிப்புடை கவிவரி கனிந்த வானவர்
பொழிலுறத் தமிழ்மொழி போதும் வாழ்விலே.

முன்னொரு நாளினில் முகத்தை நோக்கிட
பின்னொரு போதினில் படுக்கை ஆர்த்திட
தன்னையே தந்தனை; துயரில் மேலுமோர்
அன்னையாய் ஆகினை அன்பால் காதலி.

3.நின்றாய்; இருந்தாய்; கிடந்தாய்; இலங்கை
சென்றாய்; அரக்கர் செருக்கை, அகந்தை
வென்றாய். நுரையுள் கரையில் தமிழைக்
கொன்றார். இராமா, உறங்கு தியோநீ?

4.என்னை ஈர்த்தது இழுத்தது தமிழ்
எழுதும் போதெலாம் சேர்த்தது செழும்
தன்னைத் தேனடைத் தன்னுடைப் பாவைத்
தங்கம் மேலுறைச் சொற்களை; தோழி
உன்னை ஆர்வமாய்க் கொண்சிறு கதைகள்
உள்ளுள் வாழ்ந்தது உருபல கொடுத்து
சென்னை மாநகர் வெள்ளிநாள் பொழுதில்
செம்மை நூலென வெளிவரும், வாரீர்...!!!!

(நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்த பா.)

5.சிறுசிறு துளிகள். சில்லென காற்று.
சின்னதாய் ஒருகுளம். மங்கை.
குறுகுறுப் பூட்டும் குதூகலப் புற்கள்.
குடையடிக் கீழமர்ந் தேநான்,
துறுதுறு கைகள் தடவிட, நரம்புத்
துடித்திடும் கிடாருடை மேனி
"பொறுபொறு" என்றாய். பூக்களை உதறிப்
பொழிந்திட, நனைத்தது மழைநீர்.

தமிழ்::

6.தோழி எனக்கு வளைநகருந்
தோளி னிலெனைச் சாய்த்துக்கொள்.
ஆழி அளவில் மகிழ்வோதீ
அதுவுங் குளிரும் துயரோவுந்
தாழி நிறைத்த கவிகொஞ்சம்
தாவி எடுத்து அமைதியுற,
வாழி என்றும் வான்புகழ
வசந்தப் பெண்ணாய்த் தமிழ்நண்பி!

இயற்கையின் இனிமை::

7.தடவிடக் குளிரும் தென்றல்
தழுவிடச் சிலிர்க்கும் மங்கை
படர்ந்திட மணக்கும் பாகல்
பழுத்திடச் சிவக்கும் கொய்யா
தடங்களில் பதியும் தாரை
தணிந்திட புகையும் சாம்பல்
கடந்திடக் கனக்கும் காட்சி
கனிந்திடக் கழலும் ஞானம்

மலர்ந்திடச் சிரிக்கும் பூக்கள்
மறைந்திடச் சிவக்கும் மாலை
உலர்ந்திட இனிக்கும் இச்சை
உகுத்திட மயக்கும் ஓசை
தளர்த்திடத் தடுக்கும் கைகள்
தயங்கிட நடுங்கும் மேனி
வளர்ந்திட குறுகும் தூரம்
வழங்கிடக் குறையும் பாரம்

வெண்ணொலித்த மின்னல் கோடு
வேகவைத்த கன்னல் சாறு
மண்ணொளித்த கடலை வாசம்
மழையிறக்கும் வானின் அம்பு
தண்ணென்று தாவும் ஆறு
தமிழிலொரு குயிலாய்க் கூறு
விண்கீழ்மேல் தனிமை இல்லை
வியப்பேன்நான் இனிமை கொள்ளை.

இறை வழிபாடு::

8.நீலமேகம் நின்தேகம்; நில்லாத்தேன் நாதமொலி
நனைந்த மஞ்சு;
ஏலமணம் நின்சொல்லில்; ஏந்தியநல் மதுச்சரமுன்
ஏங்கும் கோபி;
மீளவழி இல்லைநீயென் மென்மனத்தைக் குழலிசைத்து
மீட்டி விட்டாய்;
மாலன்நீ மதுசூதன் மலர்ப்பாதம் பணிந்தேன்பார்
மங்கை ஏற்பாய்.

9.பார்த்துக்கொல். கண்ணில் கருவேல்கூர்த் தீட்டிப்
பறித்துக்கொள் பச்சை இதயம்.
வார்த்துச்சில் செவ்வி தழில்தேன்பூண். சாய்த்து
வளைத்தள்ளும் திண்மை இளமை.
ஈர்த்துத்தின். மென்மை விரலாலென் தோளை
இழுத்தால்பின் செல்லும் விழிகள்.
வேர்க்கும்முன் செம்மை எழிலூறும் மேனி
வெல்லாட்டம் நில்லா துவங்கு.

10.பறையடி! எதையும் பகுத்தறி! எவர்க்கும்
பயனிலாக் காரியம் சாய்த்து!
உறைகிழி! வாளை உருவிடு! தீதை
உகுத்துபின் செங்குளம் போர்த்து!
கறைதுடை! காலம் கவிழ்த்திடு! கணக்கைக்
கலைத்திடத் திறனுடல் வாய்த்து!
கரைஉடை! கழுவைத் தகர்த்திடு! திமிறும்
கரம்புஜம் இரும்பெனக் கோர்த்து!

பதறிடு! ஒருசொல் பழியென ஒருவன்
பகர்ந்திடக் கடலென வேர்த்து!
கதறிடு! கவிதைப் பிழையெனக் கவிஞர்
கருத்திடத் தமிழினைச் சேர்த்து!
உதறிடு! உள்ளம் பகையெனப் பரிசை
உலகினர் கொடுப்பினும் மறுத்து!
சிதறிடு! சிற்றில் நிரப்பிடும் மழலைச்
சிரிப்பினில் துயர்களை மறந்து!

அணிந்திடு! அவரைக் கிழிசலாய்த் தீயர்
அடங்கிடப் போரினில் வீழ்த்து!
துணிந்திடு! வெட்டித் துடைபிள! வீறித்
திசைநனைக் குருதியில் குளித்து!
தணிந்திடு! அசுரம் வெடித்திடும் அதன்பின்
தவறுயிர்ப் பறிப்பென உணர்ந்து!
கனிந்திடு! காணும் யாவுமே காட்சி
காண்பவர் நடிப்பவர், நிறைவு!

***

Image Courtesy :: http://www.travel-images.com/india77.jpg

Monday, March 01, 2010

Erotic ஆசிரியப்பாக்கள்.



மென்மையும் பெண்மையும் மிளிரும் தமிழ் வரிகளில் எழுதிச் செல்லும் ஆசிரியப்பாக்களில் இளமை பறக்கின்றது. வெண்பாத் தளத்தில் எழுதிய சில ::

ரோமாபேர். பதின்வயது. செவ்விளமை. கிடார்மேனி.
ரோமம் பஞ்சு.
ஆமாமாம் எனதுபதில் அழகியாவள்? எனக்கேட்டால்.
அணைத்துப் பார்க்கத்
தாம்மாவென் றாற்றளிர்ப்பூ வுடைநீக்கிப் பஞ்சணையில்
தள்ளிச் சாய்த்துத்
தேமாயென் பதாய்முடிக்கச் சொன்னாளோர் முத்தம்பின்
தேனாய் "மாமா".

மற்றோர் இலக்கணத்தின் படி ::

பார்த்துத் தடவு; பளிங்கு மேனிப்
பாவை நெருப்புக்கள்;
சேர்த்துக் கொல்; செதில் உரித்த
செம்மீன் நிலத்தில்காண்;
வேர்த்த கைகள் சொட்டும் விரலால்
வெயிலைக் குளிராக்கு;
போர்த்தும் போர்வை நழுவ வெட்கப்
பொழிலில் திளைத்துப்பார்.

கூந்தல் கலைத்துக் கண்கள் நோக்கு;
குத்தும் மார்நுனிகள்;
காந்தள் பூவை வண்டாய்க் கவ்வு;
கருமைப் புருவமிடைச்
சாந்துப் பொட்டைக் கவர்ந்துக் கம்பிச்
சன்னல் மேலொட்டி,
ஏந்தும் தளிரில் ஏஞ்சல் மலர்மேல்
எங்கும் முத்தம்தா!

இறுக்கம் தளர்த்து; இடையில் கைவை;
இதழ்மேல் வரிகளைக்கல்;
நெருக்கம் வளர்த்து ஈர முதுகில்
நகக்கோ டிழைத்துக்கொள்;
சுருக்கம் மலர்த்து; சூடாய்க் குளித்துச்
சுழலில் இறங்கிப்பெய்;
தருக்கம் தவிர்த்துக் கிறுக்காய் நடந்து
தவறைச் சரியாய்ச்செய்;

மற்றும் வேறு வகை ::

இருள்பொறிந்த தனியறைக்குள் இமைகரைத்தப் பொழுதொன்றில்
இயங்கா நின்றுள்
திருநிறைந்த வானவில்லைத் திசைகாட்டும் முள்ளொன்றின்
திணையில் பாடல்
பொருள்வயிந்த வார்த்தைகளுள் புலப்படாத மர்மத்துப்
பொருண்மை ரூபம்
உருவமைந்து வந்தாற்போல் உள்முகிழ்த்து எழுதாநின்
றுரைத்த திப்பா.

பொடக்காலி மூலயில செவப்புநிறத் தூணிருக்கு.
பாட்டி போயி
மடக்கிவெச்ச நாக்காலில மம்முதரு கணக்கா
மரிச்ச தாத்தா
கடன்வாங்கப் போனவரு காத்தாயி வர்றாருனு
கத்திச் செத்தா.
கெடந்துகனா நெனப்புலயும் நெழல்போலத் தளும்புதுசெங்
கெளவித் தூண்.