Saturday, February 18, 2017

ராத்திரியின் பயணி.


தேங்கிய நீரோடையின் கரையில் ஒரு பாறை யுக யுகமாய்க் காத்திருக்கின்றது, ராத்திரியில் மட்டும் வரும் ஒரு பயணிக்காக.

தனிமையில் இருளில் நிழல் கூட அறியாது வருகின்ற அந்த ஒரு பயணிக்காக மட்டும், இறுகிய பாறையின் உள்ளிடுக்குகளுக்கு இடையிலே ஊறிக் கொண்டிருக்கும் வெந்நீர்த் துளிகளுக்காக, மேற்கே உலர்பாலைப் பெருநிலத்திலிருந்து கசங்கிய குடையை விரித்து, புழுதியில் அலைந்த சிக்கெடுத்த தாடியைச் சிதற விட்டுக் கொண்டு வருகின்ற அந்த ஒரு பயணிக்காக.

சூரியன் தினம் சிந்தும் துளி விந்துவைத் தேக்கிக் கொண்டு அழுகின்ற நிலவைத் தலையில் தாங்கிக் கொண்டு கால்களைத் தேய்த்துத் தேய்த்து இழுத்துக் கொண்டு வருகின்ற, உருளும் கண்களில் கரை கட்டியிருக்கும் நீர்த்தேக்கத்தில் பிம்பங்களைப் பதிக்கும் மணல் பாதையின் முடிவில் அமர்ந்து ஓய்வெடுக்கின்ற வயதான அந்த பயணிக்காக.

முட்புதர்களுக்குள் பதுங்கிய எலிகளுக்கும் ஏதேனும் கொண்டு வருகின்ற பயணியின் ராத்திரிக் கதைகளில் ஏதேனும் மிஞ்சியிருக்குமா முந்தைய ஊரின் நிழல்கள்?

(PIC: http://farm3.static.flickr.com/2017/2116909026_f90dba8d16.jpg)

Tuesday, February 14, 2017

நீலாம்பல் நெடுமலர்.16.


நீள்மணிக் கழுத்தில் மென் முத்தங்கள் பதித்திடும் இவ்வேளையில், உன் வெட்கத்தைக் கொஞ்சம் வெளியே போகச் சொன்னாலென்ன?

சிறு கற்றைகள் சரிந்திருக்கும் நெற்றியில் ஒதுக்கி மணம் நுகர்கையில், பின் நகர்ந்து நீ மறைப்பது தான் என்ன?

முகமெழும் கோபத்தைக் கொஞ்சிக் கொஞ்சி ஆற்றிவிட்டபின் ஆழிதழ்த் திறந்து நாசுவைக்கையில் நீ கொள்ளும் மகிழ் தான் என்ன?

பூவாகும் வாழ்வில் தேனாகும் பாவம் போல் தேவி நீ கொள்ளும் ஆறாக் கனவில் நானுமொரு தேனீ போல் வனமெங்கும் உலாவி, உன் பல்வர்ண மலர்களில் சொட்டுச் சொட்டாய் இனிப்பள்ளி சேகரித்து வைக்கும் கூட்டில் மெல்ல உள் நுழையும் பொன்விரல் உன் பார்வை என்கையில் நாணம் களைந்து நீ அணைத்திடுவாய் என்றால் என் சொல்வாய்?

நறுமலர் புனையும் நெடுங்கூந்தலில் விரல் விரவி அளைந்து பின்னிரவின் வான்சரடு போன்ற ஒற்றைக் கற்றையைக் கட்டிச்சுருட்டிப் பின்னிழுத்து மேனோக்கும் விழிகளில் மென்பற்கள் பதித்து ஈரமிழக்கையில், மனமெண்ணுவது எது என்று கேட்டால் என் சொல்வாய்?

வெம்மை அலையடிக்கும் செவிமடல்களை நாசியால் வருடி செம்மையாக்குகையில், துளியாய்த் துவங்கி பனிப்பாறையாய்ச் சரிந்து பாய்ந்து பின்னெழிலில் மறையும் வியர்வைத் துளியைச் செய்கையில், இமைப்பீலி நுனிகளில் விடிகாலை இலைநுனிப் பனித்துளிகள் போல் கண்ணீர் சுமந்திருக்கையில், மாங்கதுப்புக் கன்னங்களில் மாறிமாறி இதழுரசுகையில்... மோகினி, நீ சூரிய ஒளிக் கதிர்க்கிரணம் போல் பொலிகிறாய் என்றால், பின்னிரவில் மலைமேல் விண்ணொளி விரவுப் புலத்தில் அசையும் காட்டுமரங்கள் போன்ற மயிர்கள் மண்டிய என் மார்பில் முகம் புதைத்து இதயத்திற்கு செவிகேளாமல் ஏதோ சொல்கிறாய்...

என்ன..?