Monday, December 17, 2018

சுழலில் இறங்கும் சிற்றிலைகள்.

னிக்கூரைப் பாறை என்றெண்ணிப் பற்ற விழைந்தது போல் ஒரு காதலைப் பற்றிக் கொண்டு இப்பேராழியைக் கடந்து சென்று விட முயன்றேன். தொடத் தொட விலகி வேறொரு கிளையில் அமரும் பட்டுப்பூச்சியைப் போல் அது கிட்டும் என மாயம் காட்டி கிட்டாது எட்டிப் பறக்கிறது.
பொற்காசுகள் குவிந்து கைபடாமல் கிடக்கும் ஆழப்புதையல் போல் ஓர் பேரன்புக் குவியலை யார் கண்படாமலும் எங்கோ பதுக்கி வைத்திருக்கிறேன். வளை தோண்டும் எலி போலாவது வந்து கொறித்துச் சென்றாலென்ன நீ?

சேர்த்தணைத்துக் கொல்லும் இரு கரங்கள் போல் முளைத்து வளர்ந்து எழுந்த ஓரன்பு, ஒரு பிரியம், ஓர் ஆதுரம் உருவு கொண்டு பிறவிகள் தோறும் எனைப் பற்ற வருபவள் என்று ஒரு கணமேனும் நாம் அறிந்திருந்தால், அச்சொல் வந்து அன்று விழுந்திருக்குமா?

சுடறேற்றிய பின் தூர எறியும் கருகிய தீக்குச்சியைப் போல் ஒரு சொல் அணைந்து சென்று விட்டது. அச்சுடர் கல்லில் செதுக்கியது போல் புயல் காற்றுக்கும் பெருமழைக்கும் கடும் குளிருக்கும் அசையாது ஒலித்துக் கொண்டிருக்கின்றது, அச்சொல்லின் ஒலியை.

நீரில் மிதக்கும் நிழல்கள் வீசும் காற்றுக்கும் அலையும் அலைகளுக்கும் ஏற்ப அசைந்து கொண்டிருக்கின்றன. மேலெழும்பியும் கீழே தாழ்ந்தும் அக்கரு உருவங்கள் வான் ஒளிக்கு மண்ணுக்குக் காட்டும் நம் எதிர்வினைகளோ? பொலியும் அவ்வொற்றைக் கதிருக்கு முன் உருகிச் சென்று விடாமல் நம் அகத்தை ஆழக் கவ்வியிருக்கும் ஆணவத்தின் நீள் கூர் நகங்களை வெட்டித் தூரப் போடும் வாள் எங்கே? உன் விழிப்பார்வை தானோ?
சென்ற காலங்களின் நினைவுகள் என நிகழ்ந்தவை அனைத்தும் சென்று சேரும் அப்புள்ளியை அமர்ந்து காக்கும் பெரும்பூதமாய் இருப்பது தான் எது? காலக்குடுவையின் சிறுதுளையில் சொட்டிக் கொண்டிருக்கும் மணற்பருத்துகள்கள் போல் நம் சொற்களும் அங்கு சென்று சேர்ந்து கொண்டேயிருப்பனவோ? சொல் தேவி எங்கோ இருந்து நமட்டுச் சிரிப்புடன் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் வாய் மூடி மெளனமாய் நம்மால் இருப்பதும் தான் இயல்வது எங்ஙனம்?


***

இது போன்ற இருபது கவிதை கட்டுரைகளைத் தொகுத்து அமேஸான் தளத்தில் ’செம்பொற்சுடரொளிர் சிறகு’ என்ற பெயரில் நூலாகக் குறைந்த விலையில் வெளியிட்டுள்ளேன். இணைப்புகள் இடது பக்கமும் உள்ளது.

வாங்கிப் படித்துத் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.